Thursday, April 15, 2021

Casa Grande (2014)

 


Mubi தளத்தில் கீஸ்லோவெஸ்கி, ஹெடரோவ்ஸ்கி, ஆக்னஸ் வர்தா, சாப்ளின், டிண்டோ ப்ராஸ், எரிக் ஹோமர் போன்ற பிரபலமான இயக்குநர்களின் படங்களைத் தவிர்த்து அதிகம் அறிமுகம் இல்லாத படங்களும் காணக் கிடைக்கின்றன. ஒரு வகையில் அபூர்வமான படங்கள் என்றும் சொல்லிவிடலாம். அவற்றை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொலம்பியா மற்றும் ப்ரஸீல் நிலம் சார்ந்த படங்களே இப்போதைய தேர்வாக இருக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த ப்ரஸீல் சினிமாவான Casa Grande (2014) ஓர் அற்புதமான அனுபவத்தைத் தந்தது. ரியோ டி ஜெனீரோ நகரமும் அதன்  இரு வேறு சமூக அமைப்பும் படத்தில் துல்லியமாகப் பதிவாகி இருந்தது. மேல் தட்டு வர்க்க வாழ்வும் விளிம்பு நிலை வாழ்வும் ஒரு பதின்மனின் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. பள்ளி இறுதியாண்டு பயிலும் பணக்கார வர்க்கத்தைச் சார்ந்த பதினேழு வயது மாணவன் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன நெருக்கடிகளை அவன் வாழும் சமூகம், அங்கு நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல்களோடு சேர்த்துப் பேசியிருப்பது மிக ஆரோக்கியமான சினிமாவுக்கான திறப்பைத் தந்தது.

ரியோ டி ஜெனீரோ நகரத்தின் மலையையும், கடற்கரையையும், பொது இடங்களில் எவ்விதத் தயக்கமுமின்றி முத்தமிட்டுக் கொள்ளும் பதின்மர்களின் உலகையும், அவர்கள் ஆடும் ஃபோரோ நடனத்தையும் பார்த்துவிட்டு ப்ரஸீல் செல்வதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தும் போகாமல் விட்டுவிட்டோமே என வருந்தினேன். போலவே இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதின்மர்களின் ஆண் பெண் பாகுபாடுகள் கடந்த சுதந்திரமான அனுகுமுறை என்னை வியப்பிலாழ்த்தியது. பாலியல் பாகுபாடுகளைக் கடந்த சமூகம்தான் எல்லா வகையிலும் மேம்பட்ட சமூகமாக இருக்க முடியும். படத்தின் நாயகனான Jean அப்படி ஒரு முடிவைத்தான் இறுதியில் எடுக்கிறான்.

 

Tuesday, January 26, 2021

The Great Indian Kitchen




றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத்தை தக்கவைத்திருக்கிற, பெண்களை குடும்ப அமைப்பின் வெற்றுச் சின்னமாக மட்டும் கருதுகின்ற பழமைவாதிகளும் இவர்களாகத்தான் இருக்கிறார்கள். கேரள ஆண்கள், ஆணாதிக்க தடியர்கள் எனப் புலம்பாத மதுவிடுதி சேச்சிகள் இங்கு குறைவு. The Great Indian Kitchen திரைப்படம் இதைத்தான் வழிமொழிந்திருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் ,காமிரா கோணங்கள், கதைத் திருப்பங்கள் என எதையுமே பொருட்படுத்தாமல் தினசரியை மட்டும் நுணுக்கமாகக் காட்டி பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியும், சொல்ல வந்ததை சரியாகக் கடத்திவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு சாட்சி. ’தொண்டி முதலும்’ பார்த்த நாளில் இருந்தே நிமிஷாவின் தீவிர ஆராதகன் தான் என்றாலும் இந்தப் படத்தில் இன்னும் முழுமையான நடிகையாக மிளிர்ந்திருக்கிறார்.
ஆண்கள்- குற்ற உணர்வு அடைதல், பெண்களின் மீது பழி சுமத்துதல், ‘ஏண்டா இப்படி ஊதிப் பெருக்குறீங்க’ எனப் பொருமுதல் போன்ற கலவையான வெளிப்பாடுகளை இந்தப் படத்தின் விமர்சனங்களாக முன் வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ் இலக்கிய சூழலைப் பொருத்த மட்டில் பெண்களின் சமையலறை பாடுகளை ஏற்கனவே நிறைய வாசித்திருக்கிறோம். அம்பை முதற்கொண்டு சமீபமாக எழுத வந்தவர்கள் வரை சமையலறை குறித்தான சித்திரங்களை நமக்குத் தந்திருக்கிறார்கள். ஒரு பார்வையாளனாக இந்தத் திரைப்படம் பேசும் உழைப்புச் சுரண்டலைத் தாண்டிய இன்னும் சில விஷயங்கள் எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகின்றன.
முதலாவதாக ஐயப்பன் வழிபாடு- சமீபத்தில் கேரளத்தின் பற்றி எரியும் பிரச்சினையாக இருந்த இந்தச் சிக்கலை இந்தப் படம் மிகக் கூர்மையாக பெண்ணின் வழியாகப் பார்த்திருக்கிறது. வழக்கத்திலேயே இல்லாத அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இந்த மாதவிலக்கு சமயத்தில் தள்ளி வைத்தல் என்கிற விஷயம் ஆச்சரியத்தையும் எரிச்சலையும் ஒரு சேரத் தந்தது. இவை அனைத்தும் கடவுள் மற்றும் வழிபாடுகளை துணைக்கு அழைத்துக் கொள்கின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மதமும், கடவுளும், வழிபாடுகளும் பெரும்பாலும் ஆண்களால் கட்டமைக்கப்பட்டவை. அங்கே பெண்கள் வெறும் பயன்பாட்டின் எச்சமாகத்தான் இருப்பார்கள்.
இன்னொரு மிக முக்கியமான பிரச்சினை ‘ஃபோர் ப்ளே’ என்கிற விஷயமே இந்த ‘ஸோ கால்டு’ ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட / வளர்ந்த ஆண்களுக்கு தெரிவதில்லை. மனைவியுடன் உறவு கொள்வதை வெற்றுச் சடங்காக, இயந்திரத்தனமான முயக்கமாக நினைத்துக் கொண்டு அதையும் கடைபிடிக்கிறார்கள் என்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இதே சிக்கலை சில மாதங்களுக்கு முன்பு வந்த ‘கெட்டியவனாளு எண்டே மாலகா’ திரைப்படமும் பேசியிருக்கிறது. ஃபோர் ப்ளே யை விடுங்கள் ‘மாலகா’ படத்தில் நாயகனுக்கு மனைவியுடன் உறவு கொள்வது எப்படி என்பதே தெரியாது. முதலிரவில் மனைவியை வன்புணர்ந்து கிட்டத்தட்ட சாகும் நிலைக்கு தள்ளிவிடுவான். கையடக்கத் தொலைபேசியில் ஃபோர்னோ மலிந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் இப்படியும் ஆண்கள் இருக்கிறார்களா என்பது திகைப்பாகத்தான் இருக்கிறது.
தமிழில் ஆண்களை இப்படியெல்லாம் சித்தரிக்கமாட்டார்கள். அவர்கள் 96 ராம் போல ஒரு ஆணை தியாகச் செம்மலாக நமக்குக் காண்பிப்பார்கள், ஒட்டுமொத்த மிடில்க்ளாஸ் ஆண்களும் ராமை விழுந்து விழுந்து கொண்டாடி பாயைப் பிறாண்டுவார்கள். மிக எளிமையாக யோசித்துப் பார்த்தால் ராமும் அடிப்படையில் இவர்களைப் போன்ற ஃபோர்ப்ளேயும் உறவு கொள்ளவும் தெரியாத ஒரு ஆண்தான், நம்மவர்களுக்கு அப்படிக் காண்பிக்க தைரியம் கிடையாததால் ஒரு மென்சோகத்தை நாயகனுக்கு வழங்கி அழகு பார்த்துக் கொள்கிறார்கள். போகட்டும்.
ஹெடோனிஸ்டான நாம் மிக முக்கியமான கட்டத்துக்கு வருவோம். நம்மைச் சுற்றி யாராவது சில பயல்கள் நாங்கள் 90’ஸ் கிட்ஸ், முரட்டுச் சிங்கிள் என்றெல்லாம் பினாத்திக் கொண்டிருந்தால் அவர்களின் தலையில் தட்டி பெண்களை காதலிப்பது எப்படி என சொல்லித் தருவோம். முத்தமே காதலின் திறவுகோல், தீவிரக் காதலும் தீராக் காமமுமே இந்த அற்ப வாழ்வின் ஆதாரம் என்பதை சொல்லிக் கொடுத்து, நூற்றாண்டுகளாக ஆண் மனம் கட்டுண்டு கிடக்கும் பெண்வெறுப்பு ஒழுக்கச் சிக்கல்களிலிருந்து வெளிக் கொண்டு வரப் பாடுபடுவோம். ஜெய் மகிழ்மதி!

நூரி பில்கே சிலான்


 ’லாக்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ஓரளவுக்குப் பின்னுக்குத் தள்ளியது மேலும் பதுக்கி வைத்திருந்த பியர் போத்தல்கள் அந்த அடைவுக் காலத்தின் ரகசிய மகிழ்விற்கு இன்னும் வலுசேர்த்தன. இஸ்தான்புல் பயணத்தின் மீதங்கள் அப்படியே இருந்ததால் துருக்கியப் படைப்புகள், படைப்பாளர்கள் வழியாக அந்த நகரத்தை மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்து கொண்டிருந்தேன். மதியம் மற்றும் முன்னிரவென  ஒரு நாளில் இரண்டு துருக்கியப் படங்களைப் பார்த்தேன். குறிப்பாக சிலானின் படங்கள். ஏற்கனவே பார்த்திருந்த அவரின் ஆறு படங்களையும் மீண்டும் பார்த்தேன். இம்முறை இஸ்தான்புல் நகரத்தின் வீதிகள்,  கடைகள் மற்றும் புராதன அடையாளங்களை நெருக்கமாக உணர முடிந்தது. 

ஒரு தேசத்தின் நிலப்பரப்பும் உணவும் பழகிவிட்டால் மனிதர்களையும் அவர்தம் உணர்வுகளையும் இன்னும் அணுக்கமாகப் புரிந்து கொள்ள முடியும் என்பது என்னளவில் நிஜமாகிற்று. ஒவ்வொரு படத்தையும் பார்த்து முடித்த பின்னர் அதே மனநிலை கொண்ட நண்பர் சுதாகருடன் மணிக்கணக்கில் உரையாடி மேலும் சில நுண்மையான விஷயங்களை மீட்டெடுத்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாக Winter Sleep திரைப்படம். இதன் பல காட்சிகளை இணுக்கி இணுக்கிப் பேசி மீண்டும் மீண்டும் பார்த்து சிலானின் மேதமையைப் புரிந்து கொண்டோம். 

சிலானின் படங்களில் Three Monkeys படமும்  The Wild Pear Tree படமும் உறவுகளுக்குள் இருக்கும் ஆழமான அன்பையும் முரணையும் மிக உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகின்றன. மற்ற படங்களில் இருக்கும் கூறமைதி அல்லது நுட்பம் இந்த இரண்டு படங்களிலும் வெளிப்படையாக இருக்கும். 

அவரது ஆரம்பகாலப் படங்களான The Small Town மற்றும் Clouds of May ஆகிய இரண்டும் அவரது சொந்த வாழ்வை அல்லது சூழலை பிரதியெடுத்த படங்களாக அமைந்தன. இரண்டுமே ஒரு பெரிய பயணத்தின் துவக்கங்களாக மட்டும் முடிந்த படங்கள். 2002 இல் வெளிவந்த Uzak திரைப்படம்தான் முழுமையான ஒன்றாக இருந்தது. ஒரு புகைப்படக் கலைஞனின் மனச் சிடுக்குகளைப் பேசும் படமாக வெளிப்புறம் தோற்றமளித்தாலும் உள்ளே மனிதர்கள் தங்களுக்கான இடங்களை பகிர்ந்து கொள்வதில் எவ்வளவு வன்முறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதைப் படம் மிக நுணுக்கமாகப் பேசியிருந்தது. வன்முறையின் பல்வேறு வடிவங்களை திரையில் பார்த்திருக்கிறேன். ஆனால் சிலான் காட்சிப்படுத்தும் வன்முறை மிக ஆழமானது.

சிலானும் அவரது மனைவி Ebru Ceylan ம் இணைந்து நடித்த படமான Climates இதுவரை நான் பார்த்திருக்கும் காதல் படங்களில் தனித்துவமானது. தன்முனைப்பு, அகங்காரம், காதல், பிரிவு, காமம், சுயநலம் என கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் அத்தனை விஷயங்களையும் மூன்றாம் கோணத்தில் பதிவு செய்த படம். சிலான் தன்னையே அந்தப் படைப்பின் அடையாளமாக்கி துருக்கிய சினிமாவின் இன்னொரு நகர்வை சாத்தியப்படுத்தி இருப்பார். 

இதற்குப் பிறகு வெளிவந்த நான்கு படங்களான Three Monkeys, Once Upon a Time in Anatolia, Winter Sleep மற்றும் The Wild Pear Tree உலக அளவில் பெரிய கவனத்தை ஏற்படுத்தின. ’கான்’ சிலான் படங்களுக்கான அங்கீகாரத்தை மிகப் பெருமையாய் வழங்கியது. Once Upon a Time படத்தின் காட்சியமைப்புகளில் மயங்காதவர்களே கிடையாது. காட்சிகளுக்காக மட்டுமே இந்தப் படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் நபர்களில் நானும் ஒருவன்.

சிலானை சந்திக்க வேண்டும் என்கிற ஆசையை விட அவர் பதிவு செய்த நிலக்காட்சிகளை காண வேண்டும் என்கிற விருப்பம் நிறைய உண்டு. ஒட்டுமொத்த துருக்கியையும் சிலானின் கண்கள் வழியாய் காணும் காலம் விரைந்து வரட்டும். நூரி பில்கே சிலானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

பூரணம்

விடுமுறைக் காலம் என்கிற ஒன்றை கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம். சிறிய சாகசங்களை மேற்கொண்டால் அடைந்துவிடலாம்தான் என்றாலும் செயற்கையாக உருவாக்கப்பட்டப் பாதுகாப்புணர்வு - வேலை,வீடு எனும் இந்தச் சின்னஞ்சிறு வட்டத்திற்குள்ளேயே உழல வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேசத்தின் அளவே ஒரு பெரிய தீப்பெட்டி அளவிற்குத்தான் என்பதால் சற்றுப் பெரிய செவ்வகத்திற்குள் இருக்கும் சின்னஞ்சிறு சதுரத்தில் மொத்த வாழ்வுமே அடங்கிவிடுகிறது - இந்த அலுப்பூட்டும் தினசரியை எப்படி வாழ்வெனச் சொல்வது என்பது வேறு விஷயம்.

புராதன நகரின் வீதிகளில் மனம் தொலைத்த நாடோடியாய் அலைந்தும், அடர்வனங்களில் சுற்றித் திரிந்தும், காட்டருவிகளில் துள்ளிக் குதித்தும், விரிந்த ஆழியின் பாதங்களில் சரணடைந்துமாய் - ஒழுங்கான நாட்கள் உடலிலும் மனதிலும் சேர்த்த செதில்களை உரித்துக் கொண்ட நாட்களை நினைத்துக் கொள்கிறேன். நினைவு,  நிகழின் முதுகில் இன்னும் அழுத்துகின்றது. 

நாளின் ஒவ்வொரு மணித்துளியையும் பயனாக, உற்பத்தி வெளியீடாக மாற்றிவிட்டால் குறைந்தபட்சம், வீணடித்தல் உருவாக்கும் குற்ற உணர்விலிருந்தாவது வெளியேறிவிடலாம். அதையும் செய்துவிட மனம் ஏன் முனைவதில்லை என்பதும் தெரியவில்லை. நான் எதையும் செய்வதில்லை நிகழ மட்டுமே அனுமதிக்கிறேன் என்பது போன்ற தூய கலையின் அடிப்படைகள் கற்றுக் கொடுத்த விழுமியங்களை நான் கடைபிடிக்கிறேனா அல்லது என் சோம்பல் மனம் அதை தனக்குக் கிடைத்த ஆதாரமாக வைத்திருக்கிறதா என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்போதைக்கு, இருப்புக்கும் இன்மைக்கும் பாலமாக இருக்கும் புனைவுகள் வழியாகத்தான் நாட்கள் நகர்கின்றன. ஏராளமான திரைப்படங்கள், குறைவான நூல்கள் என இந்தக் கதவடைந்த காலத்தைத் துரத்துகிறேன். இந்த வாழ்வுமுறையில் இருக்கும் ஆறுதலான ஒன்று என்னவென்றால், இங்கு ஒரு நாள் என்பது பேரழகியின் அளவான புன்னகையைப் போன்றது. சடுதியில் மின்னி மறைந்துவிடும். நாட்கள் எப்படி வாரங்களாகின்றன என்பதை யோசிப்பதற்குள் மாதம் முடிந்துவிடும். உலகம் இலகுத் தன்மை அடையும் காலம் வரும்வரை எதையும் செய்யாமல் சும்மா இருப்போம் என்கிற குரலைத்தான் ஒன்றும் செய்ய இயலவில்லை. கூடவே  நீ யாரிடம் எதை நிருபிக்க வேண்டும், அடைந்த இலக்குகள் போதுமானவை என அந்தக் குரல் இன்னும் வலுவாகும்போது ஆபத்து இரட்டிப்பாகின்றது.

அடைந்தது அல்லது அடைய வேண்டியது என எதுவுமில்லை என்பதுதான் உண்மை. என் வாழ்வின் மொத்த விழைவே இருப்பது என்பதாகத்தான் இருக்கிறது. அந்த இருப்பு பரிபூரணமான, முழுமையான திளைப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். பூரணம் என்கிற சொல் இயற்கையின் அண்மையிலிருந்துதான் உருவாகி வந்திருக்க வேண்டும். ஆகவே அதன் கிளைகளில் இளைப்பாற விரும்புகிறேன். ”காலமே அனுமதி!”

Monday, January 11, 2021

Scam 1992

 Scam 1992 தொடரைப் பார்த்து முடித்தேன். பார்த்துக் கொண்டிருக்கும்போதும், முடித்த பின்னரும் சில தகவல்களை இணையத்தில் துழாவி உறுதிபடுத்திக் கொண்டேன். இன்னும் ஆழமாக வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய விடுபடல்களும் தொடரில் உள்ளன என்றாலும் Scam 1992 மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு வலுவான, நேரடி ஆதாரங்களை முன் வைக்கின்ற ஒரு இணையத் தொடர் இதற்கு முன்பு இந்தியத் திரையில் வந்தது கிடையாது. இந்தத் தொடரின் பலகீனமாக நான் நினைப்பது ஹர்ஷத் மேத்தா -வை கதாநாயக பிம்பமாக்கும் ’ஊதிப் பெருக்கல்’ வேலைகளை இயக்குநர்களும் திரைக்கதையாளர்களும் செய்திருக்கிறார்கள். இயக்குநர்களின் பின்னொட்டாக மேத்தா வருவதால் இதைத் தற்செயல் என எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை. இந்த நெருடலைத் தவிர்த்துப் பார்தால் Scam 1992 ஓர் அபாரமான அனுபவம்.

குஜராத்தி நாடகக் கலைஞரான பிரதிக் காந்தி, ஹர்ஷத் மேத்தா கதாபாத்திரத்துக்கு மிகச் சரியான நியாயத்தைச் செய்திருக்கிறார். இவரின் பேச்சு, நடை, உடல்மொழி எல்லாவற்றிலும் பழைய ரஜினிகாந்தின் சாயல்களைப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே அற்புதமான நடிகர். தமிழ் அல்லது மலையாளத் திரையுலகம்  இவரைப் பயன்படுத்தலாம். முகத்தில் தென்னிந்தியத் தன்மை தெரிகிறது. சிபிஐ விசாரணை அதிகாரியான மாதவன் கதாபாத்திரத்தில் ரஜத் கபூர் மிரட்டியிருக்கிறார். ’ஆன்கோன் தேகி’ என்றொரு அற்புதமான படம் வந்தது நினைவிருக்கிறதா? அதைப் போன்ற இன்னும் சில நல்ல படங்களின் இயக்குநர் அவர். படத்தில் சஞ்சய் மிஸ்ரா தம்பியாகவும் நடித்திருப்பார்.

இந்திய அதிகார அமைப்பின் பலகீனங்களையும், பொருளாதார கட்டமைப்பிலிருக்கும் ஏராளமான ஓட்டைகளையும் Scam 1992 மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறது.  இந்திய ஆட்சி-அதிகாரத்தின் ஊழல் கணக்குகள் அனைத்தும் தனியொருவனின் தலையில் எழுதி முடித்து வைக்கப்பட்ட ஒரு பழைய கதை இது. இதற்குப் பின்னர் இந்தியாவில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தினால் அதுவும் இதே போன்றதொரு சட்டகத்தில் தான் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை. இனிமேலும் இப்படித்தான் நடக்கும். 

இதைத்தான் நம் ’சூப்பர்ஸ்டார்’ ’சிஸ்டம்’ சரியில்லை என ’சிம்பிளாக’ சொன்னார். பாவம், இந்தக் ‘கொரோனா’ அவரையும் சரிசெய்ய வரவிடாமல் செய்துவிட்டது.

மொழியும் சொல்லும்





சென்ற வருடக் கடைசியில் சென்று வந்த இஸ்தான்புல் பயணம், வாழ்வின் மீதான என் ஒட்டுமொத்த அணுகுமுறையையும் மாற்றி அமைத்தது. என்னை நானே புதுப்பித்துக் கொண்டேன். மனிதர்கள் மீதான கவனம் துலங்கியது. என் பேச்சு, நடவடிக்கை, இயல்பு எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் வந்தது. வந்த கையோடு ஊருக்கும் போய் அப்பாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்தேன். அதே திருப்தியோடு சென்னை புத்தகத் திருவிழா. எவ்வளவு வாசகர்கள், எத்தனை விதமான அக்கறை எனத் திகைப்பாக இருந்தது. எழுத்து இவ்வளவு செய்யுமா என திக்குமுக்காடியும் போனேன். ஐஐடி வளாகத்தில் தங்கியது, சில அற்புதமான மனிதர்க
ளை சந்தித்தது என 2020 எனக்கு அமோகமாக விடிந்தது. வேறெந்த வருடத்தையும் விட இந்த ஆண்டின் துவக்கம்தான் அத்தனை உற்சாகத்தையும், நம்பிக்கைகளையும் அளித்தது. நல்ல மனிதர்களை அடையாளம் கண்டேன். ஏராளமான திட்டமிடல்கள், கனவுகள், செய்யவேண்டியவை குறித்தான பட்டியல் என ஜனவரி மாதம் அவ்வளவு உயிர்ப்போடு இருந்தது. அதற்குப் பிறகு நிகழ்ந்தவைகளை நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை. போகட்டும். இது எனக்கு மட்டுமானது கிடையாது. உலகத் துக்கத்தில் என்னுடையதும் ஒரு துளி என்பதாக கடந்து வந்துவிட்டேன். இனி எதையும் எதிர்கொள்ளும் திடத்தை இந்தப் பூச்சி நமக்களித்திருப்பதாக நம்புகிறேன். முன்னெப்போதையும் விட இந்த வாழ்வை அவ்வளவு ஆதூரமாகத் தழுவிக் கொள்ள விரும்புகிறேன். பழைய நமுத்த வழமைகளை உதறித் தள்ளிவிட்டு புதிய சவால்களை புத்தம் புது வாழ்வை எதிர் கொள்ளவும் தயாராகிறேன். Ji

சில மணி நேரங்களுக்கு முன்பு வாசித்த பா.ராவின் நிலைத்தகவல் ஒன்று என்னை அவ்வளவு வெட்கமடையச் செய்தது. “ மொழியை ஒரு செல்லப் பிராணி போல வளர்த்தாலொழிய அது கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்காது.” எவ்வளவு கரிசனமான வாக்கியம் இது. எழுதுபவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை குணாதிசயம் இதுவாகத்தான் இருக்கமுடியும். நான் மொழிக்கும் சொல்லுக்கும் நெருக்கமாக இல்லை. இருப்பினும் அது வாலைக் குழைத்துக் கொண்டு பின்னால் வருகிறது. நான் மொழியிடமிருந்து விலகி ஓடி வெறுத்து துரத்தியடித்து ஒளிந்து கொள்ள முயன்று தோற்று - பின்பு அதனிடமே வருகிறேன். மொழியும் சொல்லும்தான் என் இருப்பின் அடியாழத்தை நிறைவடைய வைக்கின்றது என்பதை இன்னும் ஆழமாக உணர்கிறேன். ஆதாலால் அதன் பாதங்களில் சரணடைகிறேன்.


எழுத்தச்சன் - எம்.டி.வாசுதேவன் நாயர்

 


சென்ற மாதம் எம்.டி.வாசுதேவன் நாயரின் ’மஞ்ஞு’ நாவலை வாசித்தேன். அளவில் மிகச் சிறிய நாவல். நாவல் இயங்கும் களமும் குறுகியது. ஆனால் இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் விமலா டீச்சரை 70களில் ஆரம்பித்து 90களின் இறுதி வரைக்குமான காலகட்டங்களில் வெளிவந்த மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் பார்த்திருக்க முடியும்.  பூப்போட்ட புடவை அணிந்த பாந்தமான உடல் மொழியும் கொந்தளிப்பான மன உணர்வுகளையும் கொண்ட முப்பதுகளில் இருக்கும் பெண்களை டீச்சர்களாக அல்லது அலுவலக ஊழியர்களாகப் பார்த்திருப்போம். மேலும் அவர்கள், சுயநலம் கொண்ட உறவுகளுக்காக தங்களுடைய வாழ்வை அர்ப்பணிப்பவர்களாகவும் அதை உள்ளூர விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். இந்தப் பொது வரையறையை தந்தது எம்.டியா க இருக்கலாம் என்பது என் கணிப்பு. கூடுதலாக ”யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது”, ”மேகமே மேகமே” போன்ற பாடல்களை  பின்னணியில் வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பை தோள்மீது போர்த்தியபடி குளிர் அடர்ந்த மலைப் பிரதேசத்தில் நடந்து போகும் மெல்லிய பெண்களுக்கான காவியத் தன்மையை தந்தது எம்.டியின் எழுத்தாக இருக்கலாம். 

‘மஞ்ஞு’ வின் சித்தரிப்பு இத்தகைய தன்மைகளைக் கொண்டிருந்தது. இந்த நாவலை எம்.டியே 83 இல் திரைப்படமாக எடுத்தார். சரியாக வரவில்லை. ஒரு இயக்குநராக எம்.டி என்னை ஈர்த்ததில்லை. நல்ல மன நிலையை உருவாக்கிய படமாக ’ஒரு சேரு புஞ்சிரி’இருந்தது. ’நிர்மால்யம்’ சிறப்பான படம்தான் என்றாலும் கதையை அப்படியே படமாக்குவதில் என்ன இருக்கிறது. இயக்குநரின் தனித்துவம் என்பது கதையைக் காட்சியாக மாற்றுவதில் கிடையாதே. மேலும் எம்.டி அதிகத் திரைப்படங்களை இயக்கவும் இல்லை. அவருடைய இடம் திரைக்கதை தான் அதில் எப்போதுமே சிறந்து விளங்கினார். பல வெற்றிகளைக் குவித்தார்.

’மஞ்ஞு’ வைத் தொடர்ந்து ’நாலுகெட்டு’ நாவலையும் சென்ற வாரம் வாசித்து முடித்தேன். 1958 இல் வெளிவந்த நாவல் 2021 இல் வாசிக்கும்போதும் புத்துணர்வைத் தந்தது. ஆம் இந்நாவலின் களமும், மொழியும் பேசப்பட்டிருக்கும் விஷயங்களும் பழைய கரு வாக இருக்கலாம். யதார்த்தம் எப்போதோ அலுத்துப் போய், நவீனமும், பிறகான நவீனமும் சோபையிழந்த இந்நாட்களிலும் இந்த நாவலை வாசிக்கும்போது அத்தனைப் பொங்குதல்கள் மனதிற்குள் நிகழ்ந்தன. நான் தள்ளிவைத்திருக்கும் பல விஷயங்களை, இலக்கியம் குறித்தான என் கட்டுப்பெட்டி நம்பிக்கைகளை, அசாதரணங்களே தேவை எனும் கருத்தியலை இந்த நாவல் சற்று அசைத்துப் பார்த்தது. 

இந்தியச் செவ்வியல் படைப்புகளில் இருக்கும் பொதுத் தன்மைகள் குறித்து முன்பு எழுதியிருக்கிறேன். வங்காள மற்றும் கன்னட இலக்கியப் படைப்புகளில் இருக்கும் பொதுத் தன்மை மலையாளச் சூழலுக்கும் பொருந்துகிறது. மீறல்கள் மட்டும் இலக்கியமாவதில்லை, சாதாரணங்களும் இலக்கியம்தான். என்ன ஒன்று, சாதாரணங்களை எழுதும்போது இன்னும் கொஞ்சம் கவனமாக, கூர்மையாக எழுதவேண்டும் இல்லையெனில் பாதாளத்தில் விழுந்துவிடும். எம்.டி தன்னுடைய முதல் நாவலிலேயே இதைத் திறம்படச் செய்திருக்கிறார். நாலுகெட்டு நாவலுக்கு கேரள சாகித்ய அகடாமியும் கிடைத்தது.  23 வயது இளைஞனின் முதல் நாவலுக்கு இத்தகைய விருதுகள் கிடைப்பது கேரளத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று.

திடீரென எம்.டியின் மீது கவனம் குவிந்ததும் பார்க்காமல் இருந்த அவரின் பழைய திரைப்படங்கள் ஒன்றிரண்டைப் பார்த்தேன். ’சதயம்’, ’பரிணயம்’,’பெரும்தச்சன்’ எனத் தள்ளி தள்ளி வந்து ’ஒரு வடக்கன் வீரகதா’வில் நின்றேன். அடுத்த மூன்று மணி நேரம் என்னிடம் இல்லை. வடக்கன் வீரகதாவின் திரைக்கதைக் கட்டமைப்பு அசாத்தியமானது. கீதாவின் தற்கொலை காட்சிக்குப் பிறகு சந்துவின் மீது கோபமும் பரிதாபமும் எரிச்சலும் ஒரு சேர எழுந்தது.

“என்ன மாதிரியான கதாபாத்திரம் இது?, இவன் யாருக்கு நேர்மையாக இருக்கிறான்? என்ன பைத்தியக்காரத்தனம் இது?”  என்றெல்லாம் மனம் பொருமிக் கொண்டது. ஆனால் இறுதியாக, ஒரு மனிதன் தனக்கு நேர்மையானவனாக இருப்பதுதான் முக்கியம் எனத் தோன்றியது, அதற்காக அவன் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். இதைத்தான் அற உணர்வு என்கிறோம். அறத்தின் பால் நிற்பதும் அதையே வாழ்வாகக் கொள்வதும் கடும் சவால்கள் நிறைந்தது. சந்து கதாபாத்திரம் அதையெல்லாம் எதிர்கொள்கிறது. 

மம்மூட்டி, மாதவி, கீதா, பாலன். கே.நாயர், சுரேஷ்கோபி, சமீபத்தில் மறைந்த கலை இயக்குனர் பி.கிருஷணமூர்த்தி போன்றோரின் மிகச் சிறப்பான பங்களிப்பைக் காட்டிலும் இந்தக் கதையின் பிரம்மாண்டம் தனித்துத்தான் தெரிகிறது. 

மலையாளச் சினிமாவின் ஜாம்பவன்களான அரவிந்தன், கேஜி.ஜார்ஜ், அடூர்,பரதன்,பத்மராஜன், லோஹி வரிசையில் எம்.டிக்கு இருக்கும் இடம் இன்னும் விசேஷமானது. ஒரு இலக்கியவாதியாகவும், சினிமாக்காரராகவும் ஜெயித்தவர். எழுத்தச்சன் எனும் சொல்லுக்குப் பொருத்தமானவர்


Featured Post

test

 test