Sunday, July 21, 2019

கிரீஷ் கர்னாட் - குலப்பெருமையை அசைத்தல்


கிரீஷ் கர்னாட் நடித்து, திரைக்கதை வசனம் எழுதிய சம்ஸ்காரா திரைப்படம் இந்திய சமூகம் என்றும் நினைவில் வைத்திருக்க  வேண்டிய படம். பார்ப்பனியம் கோலோச்சியிருந்த, சாதி வெறியும் தீண்டாமையும் உக்கிரமாய் இருந்த காலகட்டங்களில் மாத்வ பிராமணர்கள் வசிக்கும் ஓர் அக்கிரஹாரத்தில் நடைபெறும் கதையாக சம்ஸ்காராவை யு,ஆர் அனந்தமூர்த்தி எழுதியிருப்பார்.

கிரீஷ் கர்னாட் ஒழுக்கமும், பக்தியும், நிறைந்த கல்வி ஞானமும் கொண்ட ஆச்சாரியார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  சில பிராமணக் குடும்பங்கள் வசிக்கும்  அந்த அக்கிரஹாரத்தின் முதன்மைப் பண்டிதராகவும்  ஆச்சாரியார் இருப்பார். இன்னொரு கதாபாத்திரமான நாராயணப்பாவாக புகழ் பெற்ற எழுத்தாளரும் கெளரி லங்கேஷின் தந்தையுமான பி. லங்கேஷ் நடித்திருப்பார். நாராயணப்பா அந்த பிராமணக் குடியிருப்பின் எல்லா மரபுகளுக்கும் எதிரானவர். குடியும் கொண்டாட்டமும் பாட்டும் கூத்தும் நட்பும் காதலுமாய் வாழ்பவர்.

 ஒரு நாள் நாராயணப்பா இறந்து போகிறார்.  அவர் பிறப்பால் பிராமணன் என்பதாலும் அவரை அக்கிரஹாரத்தை விட்டு விலக்கி வைக்காததினாலும் இன்னொரு பிரமணனே இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதை யார் செய்வது என்பதில் குழப்பம் வரும். சண்டியராகத் திரிந்ததால் பிற பிராமணர்கள் யாரும் இறுதி காரியத்தைச் செய்ய முன் வர மாட்டார்கள். அப்போது அவரின் மனைவியான சந்திரி தான் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்றி ஆச்சாரியாரிடம் கொடுப்பாள். இறுதி காரியங்களைச் செய்பவர்களுக்கு இந்நகைகள் போகட்டும் எனச் சொல்லிவிடுவாள். இதைக் கேள்விப்பட்டதும் ஊரில் இருக்கும் அத்தனை பிராமணர்களும் நாராயணப்பாவிற்கு இறுதி காரியத்தைச் செய்ய முன்வருவார்கள். ஆனால் ஆச்சாரியார் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்.

 இறுதிக் காரியம் யார் செய்ய வேண்டும் என்பதற்கான பதில் வேண்டி ஆஞ்சநேயருக்கு இரவு பகலாக பூஜை செய்து கொண்டிருப்பார். அவரின் மனைவி பல வருடங்களாக படுத்தப் படுக்கையாகக் கிடப்பவள். மனைவிக்கான பணிவிடைகளையும் ஆச்சாரியாரே செய்து வருவார். பதில் எதுவும் கிடைக்காததால் ஆச்சாரியார் மிகுந்த ஏமாற்றத்துடன் கோவிலை விட்டு வெளியே வரும்போது  எதிரே நாராயணப்பாவின் மனைவி சந்திரி அமர்ந்திருப்பாள். உடலும் பொழுதும் உந்தவே அவளுடன் ஆச்சாரியார் உறவு கொண்டுவிடுவார்.

அதனால் குற்ற உணர்வு அடையும் ஆச்சாரியார் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது மனைவி இறந்திருப்பாள். அவள் உடலைத் தனி ஒருவராகத்  தகனம் செய்துவிட்டு அந்த ஊரை விட்டு ஓடிப்போவார். வெளியூரில் தன்  அடையாளத்தை மறைந்துக் கொண்டு அலையும்போது உடன் வருபவனின் நிர்பந்தத்தின் பேரில் திருவிழா நடைபெறும் கோவில் ஒன்றில் அமர்ந்து உணவருந்துவார். அங்கு ஒருவரால் இன்னார் என அடையாளம் காணப்படவே அங்கிருந்து தலை தெறிக்க ஓடுவார். பின்னாலேயே வரும் வெள்ளந்தியான சக பயணியிடம் தான் யார் என்பதையும் எதனால் இங்கு அலைகிறேன் என்பதையும் சொல்வார். அதைக் கேட்டுத் திகைப்படையும் பயணி அவரை விட்டு விலகிப் போவான். மீண்டும் தன் சொந்த கிராமத்திற்கு வரும் ஆச்சாரியார், இறந்து போன நாராயணப்பா தன்னை விட மேலானவர் என சுயத் தெளிவு அடைவதோடு படம் நிறைவடையும்.

இன்று வரைக்குமே இந்த நாவலும், திரைப்படமும் அடிப்படைவாதத்தில் ஊறிப்போன மனங்களை அடித்து நொறுக்குவதாகத்தான் இருக்கிறது. சம்ஸ்காரா நாவலுக்குத் திரையிலும் நியாயத்தைச் செய்த வகையில் கிரீஷ் கர்னாட் ஒரு முக்கியமான கலைஞனாகிறார்.

இதைத் தொடர்ந்து எஸ்.எல் பைரப்பாவின் வம்ச விருக்‌ஷா நாவலை பி.வி. காரந்தோடு சேர்ந்து இயக்கி திரைப்படத்தில் ராஜா ராவ் என்கிற முக்கியக் கதாபாத்திரம் ஏற்றும் நடிக்கிறார். வம்ச விருக்‌ஷா நாவல் பரம்பரை கண்ணியத்தை உடைத்து நொறுக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும். பிராமணர்களின் குலப்பெருமையை அசைத்துப் பார்க்கும் புத்துலக நாவல். திரையிலும் இந்த உணர்ச்சி சரியாகவே வெளிப்பட்டது. யு. ஆர்.அனந்த மூர்த்தி, பைரப்பா, குவெம்பு, சிவராம காரந்த், மாஸ்தி, பி.லங்கேஷ், கிரீஷ் கர்னாட் என கன்னடத்தின் அத்தனை எழுத்தாளர்களும் சுய சாதி மற்றும் சுய மதத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும், அதிகாரத்தை தங்களின் எழுத்துக்களின் வழியாய் எதிர்த்தும் வந்தனர். எனவேதான் கன்னட இலக்கியத்தை இந்தியாவின் மிக முன்னோடி இலக்கியம் என நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.

கன்னூரு ஹெக்கடத்தி, காடு ஆகிய இரண்டு படங்களும் கிரீஷ் கர்னாட் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள். சம்ஸ்காரா, வம்ச விருக்‌ஷா, கன்னூரு ஹெக்கடத்தி, காடு இந்நான்கு படங்களையும் கிரிஷ் கர்னாட் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து பார்த்தேன். எழுத்து, நாடகம், நடிப்பு, இயக்கம் இப்படி கலையின் எல்லா வடிவங்களிலும் தன் தனி முத்திரையைப் பதித்தவர். சாகும் வரையிலும் மூக்கில் ஒரு குழாயை சொருகிக் கொண்டாவது அதிகாரத்திற்கு எதிராகப் போராடியவர். சம காலத்தின் மிக முக்கியமான அர்பன் நக்சலான கிரீஷ் கர்னாடிற்கு அஞ்சலி


Thursday, July 4, 2019

பெண்களின் மன நல விடுதி கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது





Girl, Interrupted படம் மன நல விடுதியில் தங்க நேரிலும் பெண்களின் வாழ்வை மிகத் துல்லியமாகப் பேசுகிறது. 1999 இல் வெளிவந்த திரைப்படம். நான் நேற்றுதான் பார்த்தேன். தொடர்களைப் பார்க்கும் மனநிலையிலிருந்து தற்காலிகமாக வெளியேறியிருப்பதால் நெட்ஃபிலிக்ஸைத் துழாவி இந்தப் படத்தைக் கண்டுபிடித்தேன். One Flew Over the Cuckoo's Nest – ஐ கொண்டாடிய உலகம் Girl, Interrupted ஐ ஏன் கைவிட்டது எனத் தெரியவில்லை. அதிகம் கவனம் பெறாத மிக ஆழமான படம். பெண்களின் மன உணர்வுகளையும் சிக்கல்களையும் இவ்வளவு ஆழமாகப் பேசிய படம் எதுவும் சமீபமாய் பார்த்த நினைவில்லை.

Susanna Kaysen என்கிற அமெரிக்க எழுத்தாளர் தன்னுடைய மனநல விடுதி நாட்களை Girl, Interrupted எனும் பெயரில் நினைவுக் குறிப்புகளாக எழுதினார். அதுவே திரைப்படமானது. சுசன்னா பாத்திரமேற்று நடித்த Winona Ryder இந்தத் திரைப்படத்தை தயாரித்துமிருந்தார். அற்புதமாக நடித்திருந்தார் என்றாலும் லிசா என்கிற துணைக் கதாபாத்திரமேற்று நடித்த ஏஞ்சலினா ஜூலி நடிப்பில் இவரைப் பின்னுக்குத் தள்ளி மொத்த விருதுகளையும் வாங்கி விட்டிருக்கிறார்.

படத்தின் உரையாடல்கள் அபாரமானவை. மீண்டும் மீண்டும் வாசிக்கப் பட வேண்டியவை. மன நலம் சார்ந்த பேச்சை மிகச் சரியாக கையாண்டிருக்கிறார்கள். சில காட்சிகளை யூகிக்க முடிந்தது. டெய்சிக்கு என்ன நேரும் என்பது முன்னரே அறிந்ததுதான். கனமான திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் நாடகீயத் தருணங்கள் படத்தில் கிடையாது என்பதுதான் One Flew Over the Cuckoo's Nest படத்திற்கும் Girl, Interrupted படத்திற்கும் உள்ள வேறுபாடு. மேலும் ஜாக் நிக்கல்சன் என்கிற அரக்கனால் முன்னது பிரபலமானது. பின்னதில் எழுத்து வலுவானது. எழுதுபவனாய் இதுவே முதன்மையானதாய் தோன்றுகிறது.

Girl, Interrupted  படம் பார்த்து முடித்ததும் உடனடியாக ’பிக் பாஸ்’ வீட்டின் பெண்கள்தாம் நினைவிற்கு வந்தனர். 

மனம் பிறழ்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் பெண்கள் சேர்ந்து இருக்க நேரிடும் உலகம் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சிகளில் களேபரம் செய்யும் பெண்களின் உலகை விடத் தரமானதாக இருக்கிறது. 

’பிக் பாஸ்’ பெண்கள் சரியான மன நலம் கொண்டவர்கள் என சமூகத்தால் நம்பப்படுகிறவர்கள். இந்தச் சரியானப் பெண்களின் மன விகாரங்களைச் சகித்துக் கொள்ள முடிகிறதா என்ன?ஆனால் சிகிச்சைக்காக ஒரே கூரையின் கீழ் தங்க நேரிடும் பெண்களின் உலகில் இவ்வளவு வன்மங்கள் கிடையாது.  மன நல விடுதியில் பெண்களின் சக இருப்பு கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது. 

காழ்ப்புகளாலும் பொறாமைகளாலும் பிரபல வெறியாலும் நிரம்பி வழியும் இந்த ’சோ கால்ட்’ மன நிலை சரியான பெண்களின் உலகைப் போல, மன நல விடுதியில் இருக்க நேரிடும் பெண்களின் உலகு இல்லை. இவர்கள் தங்கள் இதயங்களை இறக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். 

லிசா வின் குரூரமானப் பேச்சைத் தாங்க முடியாமல் சுசன்னா சொல்வாள். ”உன் இதயத்தில் அன்பில்லை, உண்மை என்கிற சாக்கை வைத்துக் கொண்டு இதயத்தைச் சாகடித்துவிட்டாய். நீ ஏற்கனவே இறந்து போனவள்” என்பாள். 

இதயம் மரத்துப் போன அத்தனைப் பேரும் நடைப் பிணங்கள்தாம். நடைப் பிணங்களின் நட்சத்திர வாழ்வில்தாம் எத்தனைப் பூச்சுகள்? 

Featured Post

test

 test