Wednesday, September 20, 2017

துப்பறிவாளனும் தமிழ் சினிமாவும்


துப்பறிவாளனில் இல்லாமல் போன தமிழ் சினிமா கூறுகளை பட்டியலிட முயற்சி செய்தேன். எதனால் இந்தப் படம் தமிழ்ப்படம் கிடையாது அல்லது என்னவெல்லாம் செய்திருந்தால் இது ஒரு  தமிழ்ப்படமாகி இருக்கும் என உட்கார்ந்து யோசித்ததில் கீழ்கண்ட ஞானத் தெறிப்புகள் கிடைத்தன.

1. விஷால் காஸ்ட்யூம் சரியில்லை. யுத்தம் செய் சேரனைப் போல துப்பறிவாளன் விஷாலையும் சாதாரண பேண்ட் சட்டை செருப்பில் காண்பித்திருக்கலாம். டைரடக்கருக்கு கருப்பு கண்ணாடி பிடித்தால் ஹீரோவும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன? ஸ்கார்ஃபும் கருப்பு கண்ணாடியும் தமிழ் சினிமாவுக்கு அந்நியமானது. முதல் காட்சியிலேயே இது நமது சினிமா இல்லை என்பது தெளிவாகிறது.

2. விஷால் வீட்டு ஹால் முழுக்க இங்கீலீஷ் புத்தகங்கள். பெயிண்டர்கள் பயன்படுத்தும் குதிரை மாதிரி ஒரு உயரமான ஸ்டூல், இதெல்லாம் யார் வீட்டில் இருக்கிறது. மேலும் தமிழில் படமெடுக்கும் மிஷ்கினுக்கு ஒரே ஒரு தமிழ் புத்தகத்தைக் கூட அந்த ஷெல்பில் வைக்க வேண்டும் எனத் தோணவில்லையே, இது நம்மை அவமானப்படுத்தும் செயல். தமிழ்ப்பட துப்பறிவாளன் வீட்டு ஹாலில் கண்ணாடி ஷோ கேஸ் இருக்க வேண்டும். அதில் சில பல விருதுகள், கோப்பைகள், விளையாட்டுகளில் ஜெயித்த பதக்கங்கள் மினுங்க வேண்டும். மேலும்  சுவரில் ரஜினி அஜித் போன்ற பிரபலங்களுடன் விஷால் நின்று கொண்டிருப்பதைப்போல புகைப்படம் எடுத்து  மாட்டி இருக்க வேண்டும். இதுவே தமிழ் சினிமா தோற்றத்தைக் கொண்டு வர உதவும்.

3. கதாநாயகியிடம் துடைப்பத்தைக் கொடுப்பது ஆணாதிக்க தடித்தனம். ஏன் வீட்டு சாவியை அவள் கையில் கொடுத்து சிம்பாலிக்காக லவ்வை சொல்லி இருக்கலாமே?

4. ஒவ்வொரு கொலையும் விபத்தைப் போல இருக்க வேண்டும் அவ்வளவுதானே, மிக எளிது மண்பாடி லாரியை விட்டு அவர்களை மோதிவிட வேண்டியதுதான். தமிழில் இதுவே மரபு.  இதற்குப்போய் செயற்கை மின்னல், விஷ ரெசின், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என அடித்து விடுகிறார்கள். முடியல. வெளிநாட்டுப்படங்களைப் பாருங்கள் தப்பில்லை. ஆனால் அதை தமிழுக்கு ஏற்றார்ப்போல் மாற்றுங்கள் அப்போதுதான் நீங்கள் இயக்குனர்.

5. ஒரு வில்லன் மொட்டையை போலிசார் சூழ்ந்து கொள்கிறார்கள். மொத்த போலிஸார் முன்னிலையில் அந்த மொட்டை நடு ரோட்டில் மண்டி போட்டு உட்கார்ந்து கத்தியால் வயிறை அறுத்துக் கொள்கிறான். அடப்பாவிகளா இது ஹரகிரி. ஜப்பானிய மறவர்கள் தங்களை மாய்த்துக் கொள்ளும் முறை. இதைப் போய் திருடனுக்கு கொடுத்து அந்தக் கலாசாரத்தை இழிந்ததோடு மட்டுமில்லாமல் அட்டைக் காப்பியையும் அடித்திருக்கிறார்கள். அநியாயம். வெட்கம். வில்லன் கழுத்தில் சயனைட் குப்பி இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் பாலபாடம். பிடிபட்டால் எடுத்துக் கடித்து விட வேண்டும். இதுகூடவா இயக்குனருக்குத் தெரியாது. அட ஜெராக்ஸ் மிஷ்கினே.

6. பிரிட்ஜில் பீர்தான் இருக்க வேண்டும் ஆனால் இங்கு பிணம் இருக்கிறது. பாத்ரூமில் நடிகையின் குளிசீன் வைக்கலாம் இவர்களோ பிணத்தை துண்டு துண்டாக அறுக்கிறார்கள். வில்லன் அத்தனை முட்டையையும் உடைத்து ஆஃப்பாயில் போட்டு எடுத்து வீசுகிறான். கோபம் வந்தால் முட்டையை எடுத்து நேரடியாக வீசலாமே ஏன் ஆஃப் பாயில் போட்டு வீசுகிறான்? அட ஆஃப் பாயில்களா. வெளிநாட்டுப் படங்களில் வன்முறையைக் காண்பிக்கிறார்கள் என்றால் அவர்கள் நாஜிக்களால் துன்பபட்டு மனதளவில் வன்முறையாய் இறுகி இருக்கிறார்கள். எனவே வன்முறையை அப்பட்டமாய் காண்பிக்கிறார்கள். தமிழர்களாகிய நீங்கள் தமிழ்நாடு எனும் சொர்கத்தில் வாழ்கிறீர்கள். உங்களுக்கு என்ன போய் வன்முறை? நீங்கள் கூடி கும்மிதான் அடிக்க வேண்டும். கொலை பண்ணக் கூடாது.

7. விஷால் பெட்டிக் கடையில் போய் மார்ல்ப்ரோ கேட்கிறார். மிஷ்கின் ப்ரோ, வெளிநாட்டு பொட்டிக் கடைகளில்தான் மார்ல்ப்ரோ. நம்ம ஊர் பெட்டிக் கடைகளில் ஒரு கிங்க்ஸ் கொடுங்க என்றுதான் கேட்கவேண்டும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் தட்டச்ச கை வலிக்கிறது. இறுதியாக சுரேஷ் கண்ணன் பாணியில் ஒரு பஞ்ச்

”பிட்சாவுக்கு தொட்டுக்க சாஸ் கொடுங்க மிஷ்கின், சாம்பார் கொடுக்காதீங்க ப்ளீஸ்”


Saturday, September 9, 2017

பப்பாளிக்காயின் மணம்


வியட்நாமின் நிலப்பகுதி எனக்குப் பிடித்தமானது. திரைப்படங்களில் ஆவணப்படங்களில் பார்த்ததுதான். நேரில் சென்றதில்லை. ஆனால் வியட்நாமின் மீதான உள்ளார்ந்த விருப்பம் என்னை விரைவில் அங்கு கொண்டு செல்லுமென்றே நம்புகிறேன். சேற்றுப் புதைவுகளில் ஆசுவாசமாக அசைபோடும் எருமைகளை காணும்போதெல்லாம் ஒரு சிறு புன்னகை தொற்றிக் கொள்கிறது. வருகிறேன் செல்லங்களே என அவைகளிடம் மிக ரகசியமாய் சொல்லிக் கொள்கிறேன். தலைக்கு சிறு குடையை கட்டிக் கொண்டு விடாத மழையைப் பொருட்படுத்தாது வயல்களில் வேலை பார்க்கும் மினுங்கும் கண்களைக் கொண்ட மனிதர்களை நேரில் பார்க்க வேண்டும்.

 THE SCENT OF GREEN PAPAYA என்கிற இந்தப் படம் வியட்நாமின் நிலக்காட்சிகளைப் பதிவு செய்யவில்லை. மாறாய் எளிய மனிதர்களின்  வாழ்வை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது.
வீட்டு வேலைக்குப் போகும் சிறுமியின் பதினைந்து வருட வாழ்வுதான் இந்தப்படம். அவளின் சின்னஞ்சிறு உலகம் அவள் கண்களின் வழியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. கவித்துவம் என்கிற சொல்லிற்கு இந்தப் படம் நியாயம் செய்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியம், அவ்வளவு நுணுக்கம், அவ்வளவு நெகிழ்வு. மைய சரடாக அன்பு இருக்கிறது. பதிலுக்கு எதையும் எதிர்பாராத, அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத ஆழமான அன்புமிக்க மனிதர்களை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடும் வாழ்க்கை முறையும் மனிதர்களும் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்கள்தாம். தைவானிய இயக்குனரான HSIAO-HSIEN HOU  வின் படங்களில் நான் விழுந்து கிடந்த காலத்தை இந்தப் படம் மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்தது. தைவான் படங்களில் வரும் வீடும் மனிதர்களும் இப்படித்தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட  ஹோ வின் அதே திரைப்பட மொழியை Anh Hung Tran ம் கையாண்டிருக்கிறார்.


ட்ரான் இயக்கத்தில் வெளிவந்த நார்வேஜியன் வுட் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தேன். முரகாமியின் அதே புகழ்பெற்ற நாவல்தான். நாவல் தந்த உணர்வை திரைப்படத்தில் பெற முடியவில்லை என்றாலும் இறுதிக் காட்சிகள் பிரமாதமாக வந்திருந்தன. குறிப்பாக காற்று படத்தில் இன்னொரு கதாபாத்திரமாக மாறியிருக்கும். முழுமையானப் படமாக இல்லாததால் இயக்குனர் யார் என்பதைக் கூடப் பார்க்கவில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு தேடிப்பார்த்ததில்தான் நார்வேஜியன் வுட் இயக்குனர் என்பது தெரியவந்தது. இவரின் மற்ற படங்களை தேடிப்பார்த்தேன். Cyclo வும் THE VERTICAL RAY OF THE SUN  திரைப்படமும் கிடைத்தது. மூன்றிலும் ட்ரான் மனைவியே பிரதான கதாபாத்திரம். க்ரீன் பப்பாயா படத்தைத் தொடர்ந்து சைக்லோவைப் பார்த்தேன். வியட்நாம் விளிம்பு நிலை மனிதர்களை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார். கீரீன் பப்பாயா தந்த உணர்வை நீட்டிக்கச் செய்ய மனம் விரும்பியதால் பாதியில் நிறுத்திவிட்டேன்.

என் திருவண்ணாமலை வீட்டில் நிறைய பப்பாளி மரங்கள் இருந்தன.  இம்மரமும் அதன் அகல இலைகளும் பால்சொட்டும் பப்பாளிக் காயும் என் பால்யத்தோடு தொடர்புடையதால் திரைப்படத்தோடு ஒன்றிப் போக முடிந்தது. கிட்டத்தட்ட அந்தப் பச்சை வாசனையை திரையின் வழியாகவே முகர்ந்து விட முடிந்தது. 

Monday, September 4, 2017

அரச பயங்கரவாதம்

அனிதாவின் தற்கொலை மொண்ணை தமிழ் சமூகத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது.  எல்லா அதிகார மட்டத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பார்ப்பனர்களைப் பதற்றப்பட வைத்திருக்கிறது. சமூக வலைத் தளங்களில் ஒரு பக்கம் இந்தப் பயங்கரவாதத்திற்கெதிரான கூக்குரல்கள், ஓலங்கள், எதிர்ப்புகள் நிரம்பினாலும் அதற்குச் சமமாய் இதை நீர்த்துப் போக வைக்கும் விஷம் தோய்ந்த பரப்புரைகளும் சம பங்கிற்கு உள்ளன. இரண்டு நாட்களாய் எல்லாவற்றையும் தவறவிடாமல் படித்து ஆட்களை அடையாளம் கண்டு கொள்கிறேன். பனிரெண்டு வருடங்களாய் இங்கு புழங்குவதால் மனிதர்களை ஓரளவிற்கு சரியாகவே யூகிக்க முடிகிறது.

அனிதா சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் ஆளும் பார்ப்பனிய அரசோடு போராடித் தோற்றுப் போய்த்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். அவளுக்கு தற்காலிக நம்பிக்கைகளை ஊட்டிய, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஒவ்வொரு அரசியல் வாதியும் இதற்குப் பொறுப்பு. இதுவரை மூடர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்த நம் தேசம், இப்போது மதவெறி பிடித்த மூடர்கள் வசம் இருப்பதால் இங்கே நீதி என்பது வெறும் கனவு மட்டுமேதான்.

எடப்பாடி, பன்னீர், ஸ்டாலின் ஆகிய மூவரும் இந்தச் சின்னஞ்சிறு தளிரின் மரணத்திற்கு நேரடிப் பொறுப்பு. இந்தக் கையாலாகத கொலைகாரர்களை ஆளத் தேர்ந்தெடுத்த நாமும் இந்தப் பிஞ்சை மறைமுகமாய் கொலை செய்தோம்.


Featured Post

test

 test