Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, May 15, 2013

இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம் : நீலகண்டப் பறவையைத் தேடி நாவலை முன் வைத்து..







இந்நாவலை வாசித்திருக்கக் கூடாதுதான். வாசித்துதான் முடித்துவிட்டோமே எனக் கடந்து போயிருக்கவேண்டும். இரண்டுமே நடந்திருந்தால் நான் எழுத ஆரம்பித்திருந்த மூன்று குறுநாவல்களை முடித்திருப்பேன்.  ஆனால் இம்மூன்றுமே நிகழவில்லை. இந்நாவல் முழுமையாக என்னுடைய ஆறு மாதத்தைத் தின்றது. ஏன், இதை எழுதிவிட வேண்டும் என்ற எண்ணம் உதித்த பிறகு கூட மேலோட்டமாக வாசிக்க ஆரம்பித்ததுதான்..  ஒரு வார்த்தை கூட எழுதாமல் மீண்டும் நாவலில் மூழ்கிப் போனேன். வேறெதிலேயும் கவனத்தைக் குவிக்காது திரும்பத் திரும்ப இந்த நாவலின் வெவ்வேறு பக்கங்களில் ஆரம்பித்து, அந்நாளின் என் கைக்குள் இருக்கும் நேரத்தின் கடைசி நிமிடம் வரை கதை நிகழும் காலத்திற்குள்ளும் பிரதேசத்திற்குள்ளும் தொலைந்து போகிறேன்.

இக்கதைப் பரப்பிற்குள் அலைவதை நிறுத்தவே முடியவில்லை. சமீபமாய் என்னை சந்தித்த நெருக்கமானவர்களிடம் இந்நாவல் குறித்து சதா பேசிக்கொண்டேயிருந்தேன். எது என்னை இப்படி பைத்தியமாக்கியது? இந்த நாவலின் எந்த தன்மையில் நான் கிறங்கிப் போனேன்? என்பதை மிகச்சரியாக என்னால் சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த நாவல் தந்திருக்கும் பிரம்மிப்பிலிருந்து ஓரளவிற்கு நிதானமாகி இதன் பிரம்மாண்டங்களைக் குறித்து பேசிவிடவேண்டுமென்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

அதீன் பந்த்யோபாத்யாய வினால் 1971 இல் எழுதப்பட்ட நாவலிது. அதீன் கிழக்கு வங்காளம் டாக்கா மாவட்டத்திலிருக்கும் ராயினாதீக் என்ற சிற்றூரில் பிறந்தவர். நாவல் நிகழும் களமும் கிழக்கு வங்கம்தான் என்பதால் அதீனின் இளமைக்கால நினைவுகள் இந்நாவல் செழுமையாகவும் துல்லியமாகவும் வடிவம் பெற உதவியிருக்கலாம். எந்த ஒரு படைப்பாளிக்கும் தான் பிறந்துவளர்ந்த சூழலும் இளம்பிராயத்து நினைவுகளை பொதிந்து கொண்டுள்ள பின்னணியும் படைப்புருவாக்கத்திற்கு மிகவும் இலகுவானதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் டாக்கா மாவட்டத்திலிருக்கும் ஸோனாலி பாலி ஆற்றின் கரையோரத்திலிருக்கும் கிராமங்களில் நிகழும் கதை. பிரிவினைக்கான துவக்கப்புள்ளிகள் தென்பட ஆரம்பிக்கும் காலகட்டத்தில் இந்நாவல் மகிழ்ச்சியாய் தளும்பி, மெல்ல  லீக் மற்றும் இந்துத்வ அமைப்புகள் முள் விட்டுச் செழித்து கலவரங்கள் வெடிக்கும் காலகட்டத்தில் பதபதைப்புடன் முடிந்து போகிறது.
சாமான்யர்களின் வாழ்வைத் தலைகீழாக்கும் அரசியல் மற்றும் மத நிலைப்பாடுகளின் சிறுமைகளோடு, மனிதத்தின் உச்சத்திற்கும் வீழ்ச்சிக்குமிடையில் ஊசலாய் இந்நாவல் பயணிக்கிறது. ஸோனாலிபாலி ஆற்றின் ஒரு பக்கம் இந்துக்களும் இன்னொரு பக்கம் முஸ்லீம்களும் வாழ்கிறார்கள். இந்துக்களான டாகுர்கள் செல்வ செழிப்பு மிகுந்தவர்கள். நில உரிமையாளர்கள். ஆசாரம் மிக்கவர்கள். முஸ்லீம்களோ ஏழைகள். நிலமற்றோர். செழிப்பு மிகுந்த பகுதியில் வறுமையில் வாடுவோர். தீண்டாமை மிக உக்கிரமாக இருந்தது. முஸ்லீம்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர். இவ்விரு குடியிருப்பில் வாழும் மனிதர்களின் யதார்த்த வாழ்வு, மனச்சிக்கல்கள், நிலவும் அரசியல், மதம் உருவாக்கும் நெருக்கடி, தனி மனிதக் கொண்டாட்டம், மனங்களின் சிதைவு, அதைத் தொடர்ந்து நிகழும் அவலம் என மனித வாழ்வின் எந்த ஒரு உணர்வையும் / நிகழ்வையும் விட்டுவிடாமல், துளி கூட பிசகாமல் ஒட்டு மொத்த தோற்றத்தையும் இந்நாவல் நம் கண் முன் கொண்டு வருகிறது.

வரலாறும், மதமும் எழுத்தாளருக்கு மிக நெருக்கடியான மனநிலையை உருவாக்கும் தளங்கள். எழுத்தாளரின் சார்பு அல்லது  நிழல் படைப்பின் மீது விழுந்துவிடுவதற்கு எல்லா சாத்தியங்களுமுள்ள களங்கள். என்னதான் படைப்பாளியாக இருந்தாலுமே கூட எல்லாவற்றையும் முழுமையாக அனுகிப் பார்க்கும் மனப்பான்மையைப் பெறுவது கடினம். அதீன் இதை முழுமையாகக் கடந்திருக்கிறார். முழுக்க முழுக்க படைப்பவனின் மனநிலையில் இயங்கியிருக்கிறார். நாவல் வாசிப்பின் இன்னொரு வகையான அரசியல் வாசிப்பு கொண்டிருப்போருக்கும் இந்நாவல் பெரும் ஆச்சரியத்தையோ அல்லது ஏமாற்றத்தையோ தரலாம். என்னுடைய முதல் வியப்பு இந்நாவல் எவ்வித சார்புத் தன்மையுமில்லாமல் முழுப்படைப்பாக பரிணமித்திருப்பிலிருந்து துவங்குகிறது.

இரண்டாவதும் மிகப் பிரம்மாண்டமானதாகவும் நான் நினைக்கும் அம்சம் இந்நாவலில் பின்னிப் பினைந்திருக்கும்  இயற்கையின் இருப்பு. முன்னுரையில் நிகிலேஷ் குஹா குறிப்பிட்டிருப்பது போல இந்தியக் கலையின் சிறப்பு அது இயற்கையுடன் கொண்டுள்ள உறவாகத்தான் இருக்கிறது. நீலகண்டப்பறவையைத் தேடி இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரமாகத்தான் வடிவம் பெற்றிருக்கிறது. இந் நாவலில் இடம்பெறும் பூக்கள், மரங்கள், பறவைகள், பெயர்களை தனியே எழுதி வைத்துக் கொண்டு அவற்றை புகைப்படங்களாய், இயன்றால் நேரில் பார்த்துவிட விருப்பம் கொண்டேன். முதலில் நீலகண்டப் பறவையையே நான் பார்த்ததில்லை. நண்பர்களின் உதவியுடன் இணையப்பக்கங்களில் தேடி அச்சிறுபறவையின் கம்பீர அழகை புகைப்படமாகக் கண்டேன்.


இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் ஹாட்கிலாப் பறவை, செங்கடம்பு மரம், கட்டாரி மரம்/பழம், பிரம்புக் கொழுந்து, கிரெளஞ்சப் பட்சி, மட்கிலாக் காடு, தர்மூஜ் பழம்/ வயல், எண்ணற்ற மீன் வகைகள் (சேலா,டார்க்கீனா,பூண்ட்டி), ஆமைகள், அரசமரம், ஆலமரம்,கல்யாண முருங்கை, வெள்ளைக் கொக்கு, மைனா, இலவமரம், அல்லி/அல்லிக்கிழங்கு, மின்மினிக் கூட்டம், மஞ்சத்தி மரம், பலிசப்பழம், மகிழ்மரம், பாக்குத் தோப்பு, சடுயிமரக்காடு, மரங்கொத்தி, பூனையவரைக்க்கொடி, வெற்றிலைக்கொடி, கள்ளிச்செடி, போன்னா மரங்கள், பிறப்பம்பழம், சாத்பாயி-சம்ப பறவைகள், காகம், மைனா, முதலை, உடும்பு, பருந்து, கோரைப்புல்காடு, சீதாப்பழமரம், தாமரை, பவழமல்லிமரம் என இன்னும் இன்னும் பட்டியலிட பட்டியலிட வந்துகொண்டேயிருக்கின்றன. அதீன் இந்தப் பூமியில் வசிக்கும் அத்தனை இயற்கை அழகையையும் மொத்தமாய் வாரி சுருட்டி இந்நாவலில் பொதிந்து வைத்திருக்கிறார். பக்கங்கள் பிரிக்கப் பிரிக்க ஒவ்வொரு அழகும் தனக்கே தனக்கான அடையாளங்களோடு மிகத் துல்லியமாய் வெளிப்படுகின்றன.

பருவ காலங்கள், அக்காலங்களுக்கேற்ற இயற்கையின் காட்சி மாற்றம், மனிதர்களின் மனநிலை என இந்நாவல் இயற்கையின் ஆதாரத்திலிருந்து வேர் விட்டிருக்கிறது. சுற்றிலும் ஏரிகள், ஆறுகள், குளங்கள், மரங்கள், பட்சிகள், வயல்கள் என செழித்த பிரதேசமாக இருந்தாலும் ஒரு பகுதி மக்கள் பசியால் வாடினர். மதமும் தீண்டாமையும் அத்தனைப் பசுமையிலும் மனிதர்களை வறிய நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. அதுவே கலகங்கள் ஏற்பட ஆதாரமாய் இருந்தது.

பைத்தியக்கார டாகுர் என்றும் பெரிய பாபு என்றும் அழைக்கப்படும் மணீந்திரநாத் நாவலின் தலைப்பிற்கான காரணமாய் அமைகிறார். பண்பாட்டைக் காரணம் காட்டி அவரது காதல் மறுக்கப்படுகிறது. அந்த ஏக்கம் அவரைப் பைத்தியமாக்குகிறது. காலம், அகாலம் என்றில்லாமல் அவர் சதா தன் காதலியைத் தேடி அந்நீர்சூழ் வெளியெங்கும் அலைகிறார். அவரது சகோதரர்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார்கள். அந்த ஊரின் மதிப்பும் செல்வாக்கும் வாய்ந்த குடும்பம். அக்குடும்ப மனிதர்கள் மீது சுற்று வட்டாரத்திலிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் தனி வாஞ்சையும் அன்பும் மிகுந்திருக்கிறது. குறிப்பாக மணீந்திரநாத் மீது அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் தனி அன்பும் அக்கறையும் உள்ளது.

மணீந்திரநாத்தின் சகோதரனான தனபாபு விற்கு ஸோனா பிறக்கிறான். அத்தகவலை வெளியூரில் வேலை பார்க்கும் தனபாபுவிற்கு சொல்ல ஈசம் செல்வதிலிருந்து நாவல் துவங்குகிறது. நாடோடிக் கதைகள், பேய்பிசாசு பயங்கள்,அழகியல் வர்ணிப்புகளோடு துவங்கும் ஆரம்ப அத்தியாயத்தில் விழுந்து விட்டால் திரும்ப மீள்வது கடினம்.

இன்னொரு பிரதான பாத்திரம் மாலதி. இளம் விதவை. டாக்காவில் நடந்த மதக்கலவரத்தில் அவளது புதுக்கணவன் கொல்லப்படுகிறான். வனப்பின் ஒப்பணை கலையாது கிராமம் திரும்பம் மாலதி எதிர்கொள்ளும் உடல்/மன சவால்கள் முழுக்கப் பெண் பார்வையில் சொல்லப்படுகின்றன (சுய இன்பம் உட்பட)

குழந்தை சோனா நாவலின் நாஸ்டால்ஜிக் பிம்பம். பால்யத்தின் அத்தனை அற்புதங்களும் சோனாவின் வழியாய் பதிவாகி இருக்கிறது. இந்நாவல் நான்கு தலைமுறை காலகட்டங்களை பதிவு செய்திருக்கிறது முறையே பெரியவர் மகேந்திரநாத், மணீந்திரநாத், மாலதி, சோனா ஆகியோர் வழியே காலத்தின் மாற்றங்களும் மக்களின் மன இயல்புகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பண்பாடு, தத்துவம், தரிசனம், காதல், காமம், குழந்தமை,இளமை யாவும் இப்பாத்திரங்களின் வழியே – இந்துக் குடியிருப்பின் வழியே- இயற்கையின் பெரும் கருணையுடன் பதிவாகிவிட்டது. இதற்கு அப்படியே எதிரான வறுமை, பசி, துயரம், விளிம்பு வாழ்வின் கொண்டாட்டம், கலகம், மீறல், களிப்பு யாவும் முஸ்லீம் குடியிருப்பின் வழியாய் சாத்தியமாகி இருக்கிறது. டாகுர் குடும்ப வேலைக்காரன் ஈசம், சடுகுடு வீரன் பேலு, ஆன்னு, ஆபேத் அலி, ஜலாலி, ஜோட்டன், பக்கிரி சாயபு, ஹாஜி சாயபு அவர் மூன்று பீவிக்கள், இளைஞர்களான ஜப்பர், சம்சுதீன் போன்றோரின் வாழ்வு விலாவரியாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆக இதில் சொல்லப்படாத தன்மை எதுவுமே இல்லை. ஒரு முழுமையான நாவல் என்பதற்கான மிகச் சரியான உதாரணமாக நீலகண்டப்பறவையைத் தேடியை சொல்லலாம்

என்னை ஈர்த்த அடுத்த அடுத்த விஷயம் இந்த நாவலின் கட்டமைப்பு. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஒரு சமூகத்திற்கான/பிரச்சினைக்கான அடையாளமாக ஒரு கதாபாத்திரத்தை முன் நிறுத்துவது. இப்படியாய் அனைத்து தரப்பையும் பிம்பங்களாக உருவாக்கிவிட்டபின் சம்பவங்களை நிகழ்த்துவது. பின்பு அதன் விளைவுகளை சொல்வது. இப்படியாய் காரணம் விளைவு மற்றும் இவ்விரண்டிற்குமான நியாயங்களை எந்த பிசகுமில்லாமல் பதிவு செய்வது. மிக முக்கியமாய் காலகட்டத்தை உருவாக்குவது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றை வரலாற்றுப் பிசகில்லாமல் முடிந்தவரை நேர்மையாக சொல்வது இந்த மொத்த விஷயங்களும் சொல்லப்படும் சூழலை உருவாக்குவது. சூழலின் கண்ணாய் மாறி தென்படும் அத்தனையும் முழுமையாய் பதிவு செய்வது. இவை எல்லாமும் அடுக்கடுக்காய் நீலகண்டப்பறவையைத் தேடியில் சாத்தியமாகி இருக்கிறது

நாவலில் பல உணர்ச்சிகரமான நிகழ்வுகள்/ காட்சிகள் வருகின்றன. அவை அழகியலின் உச்சம் எனக் கொண்டாடத்தக்க மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஆபேத் அலி யின் மனைவி ஜலாலி ஒரு குளிர்காலத்தில் அல்லிக் கிழங்கு பறிக்க ஏரிக்குப் போகிறாள். உணவுக்கு மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதால் அல்லிக் கிழங்கும் கிடைக்காமல் போகிறது. பசியின் உந்துதலில் மிகவும் ஆழமான பகுதிக்கு நீந்திச் செல்பவள் ராட்சசக் காஜர் மீனால் கொல்லப்படுகிறாள். அந்தி சாய்ந்துவிட்ட பிறகு தனியே மிதக்கும் அவள் கூடையை வைத்துதான் அவளை ஏரி விழுங்கிவிட்டதை கிராமம் அறிகிறது. ஆபேத் அலியும் அவர்களின் மகன் ஜப்பாரும் ஊரில் இல்லை. அந்தக் காட்சி இப்படித் துவங்குகிறது

ஏரியில் மிதக்கும் கூடை அசையாமல் நின்றது. காற்று அடங்கிவிட்டது.தாமரை இலைகள் அந்தக் கூடையைத் தடுத்து நிறுத்திவிட்டன. அஸ்தமிக்கும் சூரியனின் ஒளியால் தண்ணீர் ரத்தம் போல, பிறகு வெளிர் சிவப்பாக, பிறகு கொஞ்சங் கொஞ்சமாக சிவப்பு நிறம் மங்கி நீலமாகிவிட்டது. பிறகு பசுமை நிறம்,பிறகு கறுப்பாகிவிட்டது. தண்ணீர் சலனமற்று இருந்தது. அதில் குமிழி கூட எழவில்லை. குளிர் காரணமாக மீன்களுக்குக் கூட அசைய துணிவு பிறக்கவில்லை.

பைத்தியக்கார டாகுர் சொன்னார். “கேத்சோரத்சாலா

ஜலாலியைத் தேடி தோடர்பாக் இளைஞர்கள் நீரில் அங்கும் இங்குமாக ஆனால் பத்திரமாக மூழ்கி எழுகின்றனர். இரவு,சடலம் குறித்தான பயம் அவர்களிடையே இருக்கிறது. பைத்தியக்கார டாகுர் துர்கா பூஜைக்கு காவு கொடுக்கப்பட்ட எருமை மாட்டின் தலையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். எருமை மாட்டின் தலை கடவுள், மதங்கள், சம்பிரதாயங்கள் பெயரால் பலி மாதிரியான அக்கிரமங்கள் நிகழ்வதை உக்கிரமாய் அவருடன் விவாதிக்கிறது. அத்தலை ஒரு வெளவாலாய் மாறி ஏரியின் மீது பறக்கிறது. அத்தலைக்கு சிறகுகள் முளைக்கின்றன. டாகுர் அதனுடன் பேசுவதை நிறுத்திவிட்டு  ஏரியில் ஒரு மனிதர் மூழ்கிவிட்டதை உணர்ந்துகொண்டு ஏரியில் பாய்கிறார். ஜலாலியின் சடலத்தோடு மேலேழுபவருக்கு காட்சிகள் மாறிப்போகின்றன. தோளில் இருக்கும் சடலத்தை தன்னுடைய காதலி பாலின் என நினைத்துக் கொள்கிறார். எதிரே விரிந்திருக்கும் சூனிய வெளியை போர்ட் வில்லியசம்சாகவும் ஆங்கிலேய சிப்பாய் கூட்டம் பாலினை அவரிடமிருந்து பிரித்துக் கூட்டிக் கொண்டு போக வருவதாகவும் நினைத்துக் கொண்டு ஓடத் துவங்குகிறார். அவர்கள் மதப்படி ஜலாலியின் உடலை இந்நிலையில் அவளது கணவன் கூட பார்க்கக் கூடாது. ஆனால் இவர் தோளில் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். மொத்த கூட்டமும் திகைத்து அவரை வளைத்து நெருங்குகிறது. சாமு அவரிடம் போய் சின்னம்மாவை கொடுங்க எனக் கேட்கிறான். டாகுர் மிக சாதுவாய் சடலத்தை ஒப்படைக்கிறார்.

நாவலில் வரும் மிக உணர்ச்சிகரமான காட்சிகளில் இந்தப் பகுதி முதலாவது.

அடுக்கடுக்காய் ஏராளமான சம்பவங்கள். திருவிழாக் கலகம் விவரிக்கப்படும் முறை இன்னொரு உச்சம். சிறுவன் சோனாவைத் தவறவிட்ட ஈசமின் பதபதைப்பும் பயமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். கலகங்களுக்கு முன்பு - லீக் மற்றும் ஆர் எஸ் எஸ் தேவைகளுக்கு முன்பு- மக்களிடையே ஒரு இணக்கம் இருந்தது. பைத்தியக்கார டாகுரை பத்திரமாய் பார்த்துக் கொள்வதை தங்களது கடமையாகவே மொத்த முஸ்லீம் குடியிருப்பும் உணர்கிறது. மாலதி யின் இளம் பிராயத்து தோழர்களான சாமுவும் ரஞ்சித்தும் முறையே லீக் மற்றும் இந்துத்வ பிடிகளில் விழுகின்றனர். சாமு கிராமம் முழுக்க போஸ்டர் ஒட்டுகிறான். மக்களைத் திரட்டி கூட்டம் போட்டு அவர்களின் வறிய நிலைக்கான காரணம் இந்துக்களே என கற்பிக்கிறான். அதன் வழியாய் இந்துக்கள் மீது வன்மம் எல்லோருக்கும் முளைவிட காரணமாகிறான். ரஞ்சித் ஏற்கனவே தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். அதன் நீட்சியாய் சில காலம் கிராமத்தில் வந்து தங்கியிருக்கிறான். முஸ்லீம்களிடமிருந்து காத்துக் கொள்ள பெண்கள் சிறுவர் உட்பட அனைவருக்கும் இரவில் ரகசியமாய் கத்திப் பயிற்சி மற்றும் சண்டைகளை கற்றுத் தருகிறான். இந்தத் தீவிரங்களை நீக்க சோனாவின் பால்யம் இடையிடையே மிக விஸ்தாரமாய் சொல்லப்படுகிறது. இந்துச் சிறுவர்கள் மனதில் ஆழமாய் தீண்டாமையை நுழைப்பதை சோனாவின் வழியாய் டாகுர் குடும்பப் பெண்கள் வழியாய் சொல்லப்படுகிறது

நாவலின் இன்னொரு சுவாரசியப் பாத்திரம் ஜோட்டன். மூன்று கல்யாணம். பதினாறு குழந்தைகள் ஆனாலும் உடம்பிற்கு வரி கொடுக்க ஏங்கும் நாற்பது வயதுப் பெண். நான்காவதாய் பக்கிரி சாயபு வந்து அழைத்துப் போவார் எனக் காத்திருக்கிறாள். ஓர் இரவில் டாகுர் வீட்டில் வெகுநாட்களுக்குப் பிறகு நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நீரில் நீந்தித் திரும்ப வருபவள் வழியில் அவளின் சம வயது மன்சூரைப் படகில் வைத்து சந்திக்கிறாள். கேலியும் கிண்டலுமான பேச்சு கலவியில் முடிகிறது. ஒருநாள் பக்கிரி சாயபு வந்தே விடுகிறார். அவருடன் ஜோட்டன் கிளம்பிப் போய் தொலை தூரம் நடந்து ஒரு இடுகாட்டில் வசிக்கிறாள். மனம் முழுக்க காதலுக்காகவும் நல் உணவிற்காகவும் ஏங்கும் தூய ஆத்மா ஜோட்டன். கதையில் நிகழும் பயங்கரங்களில் ஒன்றான மாலதி சிதைக்கப்படும் தருவாயில் அவளை ஜோட்டன் தான் மீட்கிறாள். இறுதியாய் ரஞ்சித்தோடு வெளியேறும் மாலதி அவனோடு தொடர்ந்து போக முடியாத நிலை வரும்போது ஜோட்டனிடம் கொண்டு போய் தன்னை விடச் சொல்வதோடு நாவல் முடிந்துபோகிறது.

மாலதியைக் காப்பாற்றி அவளது வீட்டாரிடம் பக்கிரி சாயபு ஒப்படைக்கும் காட்சியும் ஜலாலியை டாகுர் மீட்டெடுக்கும் காட்சியும் மனித நேயத்தின் ஆழமான தரிசனங்கள். இந்த நேயம் ஆதாரமாக, நாவலின் மைய்யமாக எல்லாப் பக்கங்களிலும் படர்ந்திருக்கிறது. சம்பவங்களின் விநோதக் குழம்பலே பல திரிபுகளுக்கான காரணங்களாக அமைந்துவிடுகின்றன. டாகுர் குடும்ப உறவுகள், திருவிழாக்கள், படோபகங்கள், சோனாவின் உறவுக்கார சிறார்கள் அவர்களிடையே நிலவும் சம்பாஷனைகள், போன்றவை மிக விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கும் பகுதி மட்டுமே சற்று அலுப்பாக இருக்கிறது. ஆனால் பைத்தியக்கார டாகுர் பாத்திரம் இந்த அலுப்பை சமன் செய்துவிடுகிறது.

ஒரு மழை கொட்டும் மாலையில் இரண்டு நாட்களாக வயிற்றில் உணவு விழாத ஜலாலி, மாலதி வளர்க்கும் வாத்துகளில் ஒன்றைத் திருடி வறுக்க வழியில்லாமல் சுட்டுத் தின்னும் பகுதி, முஸ்லீம் குடியிருப்பிற்கு பைத்தியக்கார டாகுர் வந்து எல்லாரையும் பார்த்துவிட்டு போவதும் அவருக்கு ஊரே தங்களிடமிருப்பதைக் கொடுத்து அனுப்பும் பகுதி, சோனாவும் பாத்திமாவும் தொலைந்து போகும் பகுதி, யானை மீதேறி டாகுர் தொலைந்து போகும் பகுதி, என எழுத் எழுத நினைவிலிருந்து அற்புதமான காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்நாவலின் முதல் பதினெட்டு அத்தியாயங்கள் பதினெட்டு தனித் தனி சிறுகதைகளாக எழுதப்பட்டனவாம். பின்பு முழு நாவல் வடிவமாக வந்திருக்கிறது. அதீன் இந்த நாவலை எழுத பத்துவருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். 1961 லிருந்து 1971 வரைக்குமான காலகட்டத்தை இந்நாவலுக்காக செலவிட்டிருக்கிறார்.
இந்நாவல் வாசித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென முடிந்து போனது. எல்லாமே அந்தரத்தில் நின்றுவிட்டதைப் போன்ற தோற்றம் நாவலை வாசித்து முடித்த இரண்டு நாட்களுக்கு இருந்து கொண்டிருந்தது. பின்பு இணையத்தில் தேடிப்பார்த்ததில் நீலகண்டப் பறவையைத் தேடி இவர் எழுதிய Trilogy யான Nilkantha Pakhir Khonje, Aloukik Jalajan and Ishwarer Bagan யின் முதல் பாகம் மட்டுமேதான் எனத் தெரியவந்தது. மற்ற இரண்டு நாவல்களும் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்படவில்லை. இவரைப் பற்றிய விக்கி பக்கமும் ஏனோ தானோ வென்று இருக்கிறது Panchashati Galpo என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக 2001 இல் சாகித்ய அகடாமி விருதைப் பெற்றிருக்கிறார். இந்நாவலை மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி. வாசிப்பிற்குத் தடையில்லாத சிறப்பான மொழிபெயர்ப்பு.

இரவுக் காட்சியை விவரிக்கும் பகுதியில் இந்த வரி வரும் “உலகம் முழுதும் நிலவில் முழுகிக் குளிக்கும்போது ஆழமான நீரில் முழுகிச் சாக ஆசை யாருக்குத்தான் ஏற்படாது?” இதை வாசிக்கும்போது உதட்டில் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது. நீரில் மூழ்கிச் சாவதைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். காலம், பிரதேசம், பேதங்கள் எல்லாம் தாண்டிய பொது பைத்தியம்மட்டும்தான். இந்தப் பைத்தியத்தன்மையின் சாரம் ஒன்றே ஒன்றுதான் அது சகலத்திலும் ஆழத்தைத் தேடும், இதில்லை இதில்லை எனக் கதறியபடி உச்சம் நோக்கி ஓடும். இந்நாவலை எழுதியவரின் பெயரைக்கூட என்னால் சரியாக உச்சரித்துவிட முடியாது. இவர் காட்சிப்படுத்தியிருக்கும் உலகத்தை கற்பனையில் கூட கண்டதில்லை. ஆனால் நானும் இவரும் ஒரே பைத்தியக் குழாமாகத்தான் இருக்க முடியும். இந்த எண்ணம் உதித்த நிமிடம் பயங்கர இறுமாப்பாக இருந்தது. நாவலின் தலைப்பாக இடம்பெற்றிருக்கும் நீலகண்டப்பறவை நாவலில் ஒரு இடத்தில் கூட வரவில்லை. நாவலிலேயே இடம்பெறாத பறவை ஏன் தலைப்பில் வந்தது? என யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு மெதுவாய் பைத்தியங்கள் என அறியப்படுவோர் தேடுவது, எப்போதும் எளிதில் தட்டுப்படாதவற்றைத்தானே என மன சமாதானம் செய்து கொண்டேன்.

Thursday, March 7, 2013

நான் கடவுள்

என் அப்பாவிற்கு கடவுளர்கள் குறித்துப் பெரிதாய் புகார் கிடையாது ஆகவே வீட்டில் பக்தியின் தாக்கங்களான பூஜை, வழிபாடு,விசேஷங்கள் என எதுவும் இருந்தது கிடையாது. ஆனால் நான் பதினைந்து வயது வரை பக்திப் பழமாகத்தான் வளர்ந்தேன். பதின்மத்திற்குப் பிறகு சாமியார் பித்தும் சேர்ந்துகொண்டது. போன மாதம் கூட ஒரு வளரும் சித்தரைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வந்தேன். இப்பித்திற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது என் ஊரைத்தான். இரமணர் ஆசிரமத்திற்கு சமீபமான வீடென்பதால் என் பள்ளி விடுமுறைப் பகல்கள் முழுக்க ஆசிரமமும் அதையொட்டிய மலையடிவாரத்திலேயும் விளையாட்டாய் கழிந்தன. படிப்பு,விளையாட்டு,புகை,காதல் என எல்லாமும் பருவங்களுக்கேற்ப மாறினாலும் இடங்கள் மட்டும் மாறவேயில்லை. கூரையை முட்டும் உய:ரத்திற்குப் புற்றுகொண்ட கருமாரியம்மன் கோவிலைத் தாண்டினால் வரும் பலாக் குளம், தலைப்பிரட்டைகளை மீனெனப் பிடித்த காலத்திலிருந்து ஓர் அந்திக் கருக்கலில் கவிதாவை முத்தமிட்ட தருணம் வரை என்னை அறிந்திருந்தது. எங்கள் குழாமின் அனைத்து சதியாலோசனைகளும் குளம் சாட்சியாகத்தான் நிகழ்ந்தன. யார்ரா இந்த லூசு என ராஜசேகரை இக்குளத்திற்கு சமீபமாய் நிற்கவைத்துக் கிண்டலடித்ததும் உண்டு. ஓரிரு முறை பியர் குடித்தோம். முதல் குடி நிகழ்வில் இரண்டு மிடறு குடித்து விட்டு நாச்சி உளறினான். மூன்று நாட்களுக்கு முன்பு பாருவின் முலைகளை இங்கு வைத்துதான்…. இருங்கள் நான் சொல்ல வந்தது சாமியார்கள் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் இந்த பலாக்குள சம்பவங்களை சொல்கிறேன்.

 சிறு வயதிலிருந்து ஆசிரமத்திற்குப் போய்கொண்டிருப்பதாலோ என்னவோ இரமணரின் மீது பயங்கலந்த பக்தி இருந்தது. எட்டாம் வகுப்பில் இரமணாசிரம நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தியது. மாணவர்களுக்கான சிறப்பு வெளியீடுகளாய் இரமணரின் வாழ்க்கை வரலாறு, உரைகள், தத்துவங்கள், பாடல்கள் போன்றவை எங்களுக்கு இலவசமாய் தரப்பட்டன. அவற்றிலிருந்து போட்டிகள் வகுக்கப்பட்டன. எல்லாவற்றையும் வாசித்து முடித்ததும் இரமணரை முழுமையாய் அறிந்து கொள்ள முடிந்தது. ‘நான்’ தத்துவம் புகைமூட்டமாய் புரிவது போலிருந்தது ஆனால் புரியவில்லை. நான் யார்? ஆன்மாவுக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம்? ரெண்டும் வேற வேறன்னா உறவுகள் ஏன்? வாழ்க்கை முறை என்ன? வெற்றி தோல்வி ன்னா என்ன? ஏன் படிக்கனும் வேலைக்கு போகனும்?என பயங்கர குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பதிமூன்று வயதில் அய்யங்குளத்தில் மொட்டையடித்துக்கொண்டு கோவணத்தோடு ஒரு ஒல்லிப் பதின்மன், அண்ணாமலையார் கோவிலை நோக்கி கொட்டும் மழையில் ஓடும் சித்திரம் எனக்குள் பதிந்து போனது. பெரிய கோவிலில் இரமணர் அமர்ந்திருந்த இடமான பாதாள லிங்கம் இன்று வரை எனக்குப் பிடித்த இடமாக இருக்க காரணம் இந்தச் சித்திரமாகத்தான் இருக்க வேண்டும். 

 இந்த ‘நான்’ குழப்பங்கள் எல்லாம் சில மாதங்கள்தாம் நீடித்தன. எங்கள் பகுதியில் மிகப் பரந்த அளவில் வயல்களை அழித்துவிட்டு தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியம், ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தது. சில HIG வீடுகள் தயாராகி புதிதாய் குடும்பங்களும் வர ஆரம்பித்திருந்தன. சம வயதை ஒட்டிய பெண்களை அங்கும் இங்குமாய் பார்த்ததும் எல்லாம் மறந்து போனது. பத்தாம் வகுப்பில் ஞானப் பிரசன்னா என்கிற பேரழகியைத் தொடர்ந்து போய் பிரம்மகுமாரிகள் அமைப்பைத் தெரிந்து கொள்ள நேரிட்டது. தியானம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் குபீரென முலைத்து தினம் மாலை இராஜயோக தியான நிலையத்திற்குப் போக ஆரம்பித்தேன். ஆரம்பம் வேறாக இருந்தாலும் நல்ல பயன் இருந்தது. நான் பற்றிய கேள்விகளுக்கு அங்கு வெள்ளையுடை அணிந்தவர்களிடம் பதில் இருந்தது. ஒரு காரின் படத்தைக் காட்டி இந்த என்ஜின் தான் ஆன்மா என்றார்கள். சுலபமாகப் புரிந்தது. தியானம் பற்றிய அடிப்படைகளை கற்றுக் கொண்டதும் அங்கு போவதை நிறுத்திக் கொண்டேன். இல்லையென்றால் ராஜஸ்தான் அனுப்பியிருப்பார்கள். 

அடுத்த ஆறுவருடம் சாமி, பக்தி, கோவில், ஆன்மீகம், சிந்தனை, குழப்பம், என எதுவும் என்னைத் தாக்காதவாறு கல்வியும் நண்பர்களும் தோழிகளும் காதலியும் பியரும் பார்த்துக் கொண்டார்கள். 

இருபத்தோரு வயதில் Prodigal son ஐப் போலத்தான் என் சகோதரனிடம் திரும்பி வந்தேன். ஓசூர் நகரம் அக்காலகட்டத்தில் எனக்கான எல்லாவற்றையும் கொண்டிருந்தது. தனிமை வீடும், ஏராளமான புத்தகங்களும், பிடித்த வேலையுமாய் அந்நாட்கள் நகர்ந்தன. இலக்கியத்தோடு ஓஷோவும் புத்தகங்கள், கேசட்டுகள் வழியாய் அறிமுகமானார். தமிழில் வந்த என் இளைமைக்கால நினைவுகள், புல் தாமாகவே வளர்கிறது, வெற்றுப்படகு போன்ற புத்தகங்கள் ஓஷோவின் மீது பிடித்தத்தை ஏற்படுத்தின. The new man கேசட்டை திரும்பத் திரும்பக் கேட்டுத் தேய்த்தேன். Individuality, Responsibility, Freedom குறித்தெல்லாம் மிகப் பெரிய திறப்பு ஒன்று எனக்குள் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக திருச்சி, கோவை, போபால், குச்வாடா என பயணித்ததும் Swami Prem aika எனப் பெயர் வந்ததும் போதியமட்டில் இதே பக்கங்களில் புனைவாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தீர்த்திருக்கிறேன். இதனோடே வேதாத்திரி மகரிஷி கும்பலோடும் நெருக்கமான தொடர்பிருந்தது. ஓசூரில் மனவளக் கலை மைய நண்பர்களோடு தினம் உடற்பயிற்சி, தியானம், அவ்வப்போது கோவில்களுக்குப் பயணம் என வேறொரு பாதையில் உற்சாகமாய் பயணித்துக் கொண்டிருந்தேன். உலக சமாதானத்திற்கு தியானம் செய்வது, மழை வேண்டி தியானம் செய்வது போன்றவற்றையெல்லாம் மிகுந்த ஆத்மார்த்தமாக செய்து கொண்டிருந்தேன். எப்படி ஓஷோ,வேதாத்திரி என்ற இரு வேறு துருவங்களையும் அப்போது ஒன்றாகப் பார்க்கமுடிந்தது என்ற ஆச்சரியம் எனக்கு இப்போதும் உண்டு. சில நேரங்களில் அப்போது மிகத் தூய்மையான மனதோடு இருந்ததாக நினைத்துக் கொள்வேன்.                               

ஒரு நாள் என் நண்பன் ஒரு ஜோசியரைப் பார்க்க அழைத்துச் சென்றிருந்தான். ஒரு தாளில் என் பெயர், பிறந்த நாள், நேரம் எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்தேன். சில மணி நேரங்கள் கழித்து என்னை உள்ளே கூப்பிட்டார். எனக்கு அப்போது நீளத் தாடி வைத்த யாரைப் பார்த்தாலும் ஓஷோ போல இருக்கும். அவரும் நீளத்தாடி வைத்திருந்தார். அவர் சொன்னது 

1. உனக்கு உன் குலதெய்வமே தெரியாது. தேடி கண்டுபிடி. குடும்பத்தோடு போய் கும்பிடு 

2. ஈரோடு தாண்டி கொடுமுடிக்கு போ. பவானி ஆற்றில் வேட்டியோடு இறங்கி குளித்துவிட்டு வேட்டியை ஆற்றோடு விட்டுவிட்டு அரசமரத்தடி பிள்ளையாரை கும்பிடு 

3. நங்கநல்லூர் ஆஞ்சநேயரைப் போய் கும்பிடு 

அடுத்த வாரமே ஊருக்குக் கிளம்பிப்போய் நம் குலசாமி எதென வீட்டில் கேட்டேன். அய்யனார் என்றார்கள். "எங்கிருக்கிறது கோவில்?"  "பெண்ணாத்தூர்ல எங்கயோ.." என விட்டேத்தியாய் பதில் வந்தது. அப்பாவை கழுவி ஊற்றிவிட்டு பெண்ணாத்தூர் போய் என் தாத்தாவின் சகோதரரைக் கண்டுபிடித்து அவர் மூலமாய் அந்த கோவிலையும் கண்டுபிடித்தேன். அது கோவில் அல்ல நுணாமரத்தடியில் மண்ணில் ஊன்றப்பட்ட ஒரு மைல்கல். அவ்வளவுதான். பிறகு எல்லோரையும் கூட்டிக் கொண்டு போனேன். அடுத்த வாரமே கொடுமுடி. நல்லவேளையாக பவானியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இடுப்பளவு ஆழத்தில் அந்த அதிகாலையில் இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்? என்ற அவ நம்பிக்கையோட வேட்டியை ஆற்றில் விட்டு வந்தேன். அதற்கடுத்த வாரம் சென்னை. சென்னை பால்ய நண்பர்கள் குழாம் போதையோடு வரவேற்று மிகுபோதையோடே வழியணுப்பியது. ஒரு மாதத்தில் பொட்டியை கட்டிக் கொண்டு சென்னை வந்துவிட்டேன். வேறுவேலை. இப்போது நான் இங்கிருக்க காரணமான வேலை. அபாரமான தற்செயலாகக் கூட இருக்கலாம். ஆனால்.. ஆனால்.. 

சென்னை வாழ்க்கை ஓசூர் வாழ்க்கையைப் போல தூய்மையானதாக இல்லை. மீண்டும் பெண்கள், குடி, நண்பர்கள் குழாம் என அல்லோகலப்பட்டது. ஒரு திடீர் வெறுமையில் பத்து நாட்கள் தொடர்ச்சியாய் விடுமுறை எடுத்துக் கொண்டு திருமுடிவாக்கம் விபாசனா மையத்திற்குப் போய்விட்டேன். வழக்கம்போல உபயம் என் சகோதரர்தான். மொழியை எல்லா வகையிலும் துறந்துவிட்டு மெளனத்திற்குள் செல்வது எனக்கொரு பிரச்சினையாக இல்லை. சொல்லப்போனால் மிகுந்த மகிழ்ச்சியோடே மெளனத்திற்குள் புக முடிந்தது. முதல் மூன்று நாட்கள் கடும் பசியில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தாலும் நான்காம் நாள் பழகிவிட்டது. நாள் முழுக்க சுவாசத்தையும், புலன்களையும் வேறொரு ஆளாய் பார்த்துக்கொண்டிருந்தது தனி அனுபவம். ஆறாம் நாளோ ஏழாம் நாளோ எனக்கு Exhibitionist என்கிற புதிய சொல்லும், ஒரு மனிதனும் அறிமுகமானார்கள். 

மாலை ஆசிரமத்தை சுற்றி ஒரு நடை போவது எல்லோருடைய வழக்கமாகவும் இருந்தது. சூரியன் மறைந்துபோன அந்தி. அப்போது அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. எங்களோடு பயிற்சிக்கு வந்த ஒரு கண்ணாடி அணிந்த குண்டு இளைஞன் கட்டிடத்தின் மீதேறி நின்றுகொண்டிருந்தான். இவன் ஏன் மேலே ஏறி நிற்கிறான்? என குழப்பத்தோடே அவனைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தோம். எங்களோடு சில வெளிநாட்டுப் பெண்களும் பயிற்சிக்கு வந்திருந்தனர். இரண்டு அழகான பெண்கள். அந்தப் பயல் மேலே நின்றுகொண்டு அவ்விரு பெண்களையும் பார்த்தபடியே தன் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து… அதிர்ச்சியில் உறைந்தேன். எல்லோருமே பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டோம். விஷயம் நிர்வாகிகளுக்குப் பரவி அவனை வெளியேற்றிவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் என்னை இந்நிகழ்வு பாதித்தது. இரான் சினிமா, ரஷ்ய இலக்கியம், ஆங்கிலத் துப்பறியும் நாவல்கள் தாண்டி பெரியதாய் என் உலகம் விரிவடைந்திராத காலகட்டம் அது. காமமும் மனப்பிறழ்வும் அத்தனை நெருக்கமாக இருக்கமுடியுமா? என்கிற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.


அடுத்த நாள் மன ஒருமை கைவிட்டுப் போனது. போலவே சிலருக்கும். எல்லோருமாய் கிசுகிசுப்பாய் பேச ஆரம்பித்துக் கொண்டோம். மாலையில் மதிலேறி குதித்து வெகுதூரம் நடந்து போய் சிகரெட் பிடித்தோம். ஒன்பதாவது நாளைக் கடக்க பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. பத்தாம் நாள் அடித்துப் பிடித்து ஆசிரமத்தை விட்டு வெளியேறிஒரு வழியாய் பஸ்ஸை பிடித்து அலைபேசியில் நண்பர்களை பிடித்து நேரா பாருக்கு வந்துருங்கடா” எனச் சொல்லிவிட்டு வழக்கமாய் செல்லும் பாரில் போய் விழுந்தேன்.

ஆன்மீகத்தின் வழியாய் தன்னை அறிவது ஒரு குழப்பமான சித்திரமாகவே எனக்குள் இன்னும் இருந்துவருகிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இந்தக் கட்டுரையில் இழையோடியிருக்கும் விடலைத் தனம்தான் தன்னையறிதலில் என் நிலை. திருவண்ணாமலையில் சில இளம் சாமியார்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். எல்லாம் உதறி தனியாய் வந்து அண்ணாமலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தத்துவார்த்தமாகப் பேசினாலும் அவர்களும் சராசரி லெளகீக வாழ்க்கையை இரகசியமா வாழ்கிறார்கள். சரியாய் சொல்லப்போனால் இன்னும் வசதியான லவ்கீகம். வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே என்கிற மனப்பான்மைதான் என்னிடம் எப்போதுமிருக்கிறது. அந்த லெளகீக வாழ்வு நூறு ஏக்கர் நிலம்கோடிகள்ரஞ்சிதாபோலீஸ்ஜீப்பில் புளகாங்கிதமாய் ஏறுவதென விரிவடையும் போதுதான் பொறாமை எட்டிப் பார்க்கிறது. ஸ்ரீதர் கிண்டலடித்திருக்கும் இக்கட்டுரைதான் இந்நினைவுகளைக் கிளறிப்போட்டது. நித்தியை விஞ்சும் சாமியாராகும் எல்லாத் தகுதிகளும் என்னிடம் உண்டு. ஆன்மீகம்இலக்கியம்,அரசியல்வரலாறுபுவியியல்,சினிமா என எல்லாவற்றைக் குறித்தும் ஆழமாய் பேசுவது போன்ற பாவணையை எளிதில் உருவாக்கிவிடுவேன். திருவண்ணமலையின் அடுத்த நித்தியாய் நான் வரவேண்டும் என நீங்கள் அனைவரும் உளமாற வேண்டிக்கொள்ளுங்கள். அதுவே இப்போதைக்குச் செய்ய வேண்டியது.



Wednesday, January 11, 2012

தமிழ் நாவல்கள்- ஒரு அழகியல் பார்வை பாகம் 2

நகுலன் கவிதைகளை முன்பே வாசித்திருந்தாலும் இரண்டாயிரத்து ஏழாம் வருட வாக்கில்தான் நகுலன் நாவல்களின் தொகுப்பு - ஐ வாசிக்க முடிந்தது. 1965 லிருந்து 2002 வரை அவரால் எழுதப்பட்ட நிழல்கள், நினைவுப்பாதை, நாய்கள்,நவீனன் டைரி,சில அத்தியாயங்கள்,இவர்கள்,வாக்குமூலம்,அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி என்கிற வெவ்வேறு பெயரில் எழுதப்பட்ட ஒரே தளத்தில் இயங்குகிற நாவல்களின் தொகுப்பை மொத்தமாய் படிக்க முடிந்தது. வாசித்தவரை நகுலன் கதை என்ற ஒன்றை சொல்ல மெனக்கெடவே இல்லை. நனவோடையில் தன் எண்ணங்களை,கொந்தளிப்புகளை, உதிர்த்துக் கொண்டே செல்கிறார். அது வாசகரிடத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தோ அவை கதையாக, படைப்பாக உருமாறுகிறதா என்பதைக் குறித்தோ நகுலனும் சரி அவர் படைப்புகளும் சரி பெரிதாய் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை.

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடுதான் நகுலனின் எழுத்து. நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள். எழுத்தின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார். பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் இவரது பிரதான பாத்திரத்தின் இயல்பாய் நாவல்களில் வெளிப்படுகிறது. வளர்ச்சிக்காய் புகழுக்காய் தத்தமது சுயங்களை தொலைக்கும் மனிதர்களின் மீதான எள்ளலும், கோபமும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.

பெரும்பாலான வாசகர்கள் நகுலனை அவர் படைத்த சுசீலாவின் மூலம்தான்
அடையாளப்படுத்துகிறார்கள். நினைவுப்பாதையில் சிவன் பாத்திரம் யார் சுசீலா? எனும் கேள்விக்கு என் மனதின் பைத்திய நிழல்தான் சுசீலா என்கிறார் மேலும் அவள் திருமணமாகிப் போய்விட்டாள் என்கிற தகவலையும் சொல்லுகிறார்.இல்லாத ஒன்றினை உருவாக்கி கொண்டு உருகும் மனதை பிரம்மிப்பாய் பார்க்க வேண்டியிருக்கிறது. தன்னை ஒரு தோல்விக்கலைஞன் என சொல்லிக்கொண்ட நகுலன் தோற்பதின் சுவையறிந்திருக்க வேண்டும்.உள்விழிப்புபெற்ற மனிதனால் மட்டுமே தோல்வியை கொண்டாட முடியும். ஒஷோ வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது தோற்பவர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும் என்கிறார். நகுலனுக்கும் அதே போன்றதொரு மனோநிலை வாய்த்திருக்க வேண்டும்.

தன் எழுத்துக்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு கூடவே அஞ்சலட்டையும் இணைத்து கொடுக்கும் வழக்கமும், கடிதத்திற்கான எதிர்பார்ப்புகளும், தாமதமானால் எழும் கோபங்களும் எந்த பாசாங்குமில்லாமல் புனைவாகவும் பதியப்பட்டிருக்கிறது. எழுத்து வணிகர்களை அவர்களின் சொந்த பெயர்களிலேயே தன் படைப்புகளில் கிண்டலடித்திருக்கிரார். நகுலனின் எழுத்தை நனவோடை உத்தி என விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள். இன்னும் சிலர் நகுலன் பெரிதாய் எதையும் சாதித்து விடவில்லை எனவும், நோயின் தாக்கத்தால் எழுத்தாய் கொட்டியவற்றை வாசகர்கள் புரிந்து கொள்ளாமல் பிரம்மிப்பாய் அனுகுகிறார்கள் என்றுமாய் எழுதி வருகிறார்கள். அவை குறித்து தேர்ந்த வாசகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உண்மை என்கிற ஒன்று கூரிய வாளினைப் போல இவர் படைப்புகளின் பளபளத்துக் கொண்டிருப்பதை நெருங்கினால் அறிய முடியும். வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.

பின்நவீனம் குறித்தான ப்ரக்ஞை தமிழில் ஏற்பட்ட பின்பு பெண்ணியம், தலித் இலக்கியம், விளிம்பு நிலை மொழி போன்ற பல்வேறு திறப்புகள் தமிழில் நிகழ்ந்தன. பல புதிய கவிதைகள் பெண் மொழியில் எழுதப்பட்டன. ஆண் பெண் பேதமில்லாமல் கவிதைகளில் உடல் மொழி பேசப்பட்டது. போலவே தலித் எழுத்துக்களும் வட்டார வழக்குகளும் செல்வாக்கு பெறத் துவங்கின. தமிழில் பின் நவீனத்துவ நாவல் எழுதுவதற்கான முயற்சிகள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. சிலரால் அதில் வெற்றியும் பெற முடிந்தது. அந்த வகையில் ரமேஷ்-ப்ரேம்களின் சொல் என்றொரு சொல் நாவலை பின்நவீனத்துவ நாவல் வகைமையில் சேர்த்து விட முடியும்.

இந்நாவல் தமிழின் அகமரபுக்கும் புறமரபுக்கும் இடையூடாக ஓடும் ஒரு குறியியல் நாவலாகவும் கதையாடல்கள் பற்றிய கதையாடல்களின் நாவலாகவும் அமைந்திருக்கிறது.சில கதைகளால் கட்டப்படும் தமிழ் மனம்தான் வேறு கதைகளால் கட்டவிழ்க்கவும் படுகிறது என்கிறது. வார்த்தையாடல்களின் கவர்ச்சியும் மொழியின் வசீகரமும் நம்மை வேறு ஏதோ ஒரு உலகத்தில் புரியாத ஒரு வெளியில் தொலைக்கச் செய்து விடுகிறது. காமமும்,புணர்வும், விலங்குகளின் நடமாட்டங்களும், மனித மனங்களின் உள்ளூடாக பயணித்திருப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. புரட்சிகளின் வடிவமாக, அடக்குமுறைகளின் மீறலாக, புனிதங்களின் கட்டுடைப்பாக அதீதன் வரையறுக்கப்படுகிறான். காலத்தை மந்தமாக்கி சொற்கள் எங்கெங்கோ அலைகின்றன. இதன் உள்ளடக்கம் 24 தலைப்புகளில் வெவ்வேறு கதையாடலை முன் வைக்கிறது.வாசிப்பின்பம் என்பதை பிரதியோடே உணர முடிவதும். சிதறலாய் கதையல்லாத கதை ஒன்றை சொல்வதும், மய்யமான கதை சொல்லும் பாணியை தகர்த்திருப்பதும் இந்நாவலின் பின்நவீனத்துவ வடிவத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

தொடர்ந்து இறுக்கமான எழுத்துக்களை பற்றியே பேசுவது போன்ற உணர்வை எழுதும் போதே பெற முடிகிறது. இறுக்கத்தைத் தளர்த்த நாஞ்சிலாரைப் பற்றிப் பேசலாம். வெகுசனக் கதைப் பரப்பில் இருந்தபடியே இலக்கியத் தரத்தை தொடும் எழுத்துதான் இவருடையது. ஒரு தேர்ந்த திரைக்கதைக்கான முழு உத்திரவாதமும் இவரது நாவல்களில் காண முடியும். வழக்கமான கதைகளாக இருந்தாலும் அவற்றை தன் கூர்மையான அவதானிப்பால், நுட்பமான விவரணைகளால் நாஞ்சில் தேர்ந்த இலக்கியப் பிரதியாக மாற்றிவிடுகிறார். நாஞ்சிலின் தலைகீழ் விகிதங்கள் அதிகம் பேசப்பட்ட நாவல். தங்கர் பச்சான் இயக்கத்தில் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்தது. கதையின் சிவதாணுவை சேரன் கச்சிதமாகவே காட்சிப்படுத்தியிருப்பார். நாவலை சிதைக்காத நல்லதொரு சினிமாவில் சொல்ல மறந்த கதையும் அடக்கம். அடுத்ததாய் எல்லோருக்கும் பிடித்த இவரின் நாவல் சதுரங்க குதிரைகள் .

என்னளவில் மிகவும் ஒன்றிப்போய் வாசித்த இவரின் படைப்பு எட்டுத் திக்கும் மதயானை ஒரு வகையில் இந்நாவல் என் நாடோடி மனநிலைக்கு தீனி போடுவதாய் அமைந்திருந்தது. பி.காம் கடைசி வருடம் படிக்கும் பூலிங்கம் தன் வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் வெகு சாதாரணமாய் பேசிய காரணத்திற்காக தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு அபபெண்ணின் தகப்பனாரால் அவமானப்படுத்தப்படுகிறான். வன்மம் கொண்ட பூலிங்கம் அவரின் வைக்கோல் போருக்கு தீவைக்கிறான். உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆந்திரா,கர்நாடகா,கோவா என அலைந்து திரிகிறான். பெரும்பாலும் ரயில் நிலையங்கள், ப்ளாட்பாரங்கள் என நாட்கள் நகர்கின்றன. ரயிலில் ஐஸ்கிரீம் விற்பது,கோவாவிலிருந்து மது புட்டிகள் கடத்துவது. போதை மருந்து கடத்தல், லாரியில் ஓடுவது என வாழ்வு மாறிக்கொண்டே இருக்கிறது. எங்காவது யாராவது எதிரியாக முளைத்து விடுத்துவிடுகிறார்கள். பல சமயங்களில் இவனே இவனுக்கு எதிரியாகிறான். ஒருவழியாய் பாம்பாயில் ஒரு பெரிய சாராய வியாபாரியிடம் தஞ்சமடைகிறன். மிகுந்த பாதுகாப்புகளோடு சாராயம் கடத்துகிறான். நண்பர்கள் வட்டம், புதிதாய் தொழில் ஆரம்பித்தல் என நிலைபெறுகிறது. இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான செண்பகம் பம்பாய்கு திருமணமாகி வருகிறாள். அவளின் கணவரிடம் அல்லல்படுகிறாள். பூலிங்கம் அவளை அவனிடமிருந்து மீட்டு புதிதாய் வாழ்வை தொடங்குகிறான். மிகவும் சாதாரண கதை மாதிரித் தோன்றினாலும் கதையோடு முழுவதுமாய் ஒன்றிப் போக வைக்கும் எழுத்து. நாஞ்சிலின் தனித் தன்மையும் அதுதான்.

என் பாட்டி எங்கள் பகுதியிலேயே நல்ல கதை சொல்லி. ஏராளமான நாட்டுப் புறக் கதைகளையும் இதிகாசக் கிளைக் கதைகளையும் தெரிந்து வைத்திருந்தாள். வெற்றிலை எச்சில் தெறிக்க எல்லா மாலைகளிலும் வீட்டு வாசலில் உட்கார்ந்து தெருக் குழந்தைகள் அனைவரும் படையெனச் சூழ்ந்திருக்க உரத்த குரலில் கதை சொல்லுவாள். அவளின் மகன் வயிற்றுக் கடைசிப் பேரன் என்பதால் மிகுந்த உரிமைகளோடும் பெருமிதங்களோடும் அவள் மடியில் புதைந்து கொண்டு கதை கேட்பேன். தமிழ் இலக்கியத்தில் இத்தகையதொரு பாட்டி- பேரன் மடிப்புதைவு உறவு கி.ராஜநாராயணனுக்கும் அவருடைய வாசகர்களுக்கும் நிச்சயம் இருக்கும். தமிழின் ஆகச் சிறந்த கதை சொல்லி கி.ராஜநாயணன்தான். இதை தமிழ் இலக்கிய அறிமுகமுள்ள அனைவரும் வழிமொழிவார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. கோபல்ல கிராமம்- கோபல்ல கிராமத்து மக்கள் –அந்தமான் நாயக்கர் இந்த மூன்று நாவலையும் ஒரே மூச்சில் வாசித்து பாட்டியின் அருகாமையை மீண்டும் உணர்ந்தேன்.

கோபல்ல கிராமத்தின் விடியல் - கோட்டையார் வீட்டின் சகோதரர்களின் அறிமுகம்-வழிப்பறி- கொள்ளையர்களை கோபல்ல கிராம மக்கள் எதிர் கொள்ளும் சாகசம்- இடை இடையே அக்கிரமத்தின் நீண்ட நெடிய வரலாறு என ஒரு தேர்ந்த கதை சொல்லி அடுக்கடுக்காய் கதைகளை உயிர்ப்பித்துக் கொண்டே போகும் மாயம் நாவலில் தொடர்ந்து நிகழும். கிராமங்களில் இயல்பாகவே உலவும் மிகைக் கதைகள், முனிக் கதைகள் படிக்கும்போதே பரவசத்தையும் புன் முறுவலையும் ஏற்படுத்தும். பெண் பிம்பங்கள் குறித்தான மிகு புனைவுகள், இயல்பாய் நடக்கும் காமம், உறவு மீறல், கள்ளம் எல்லாமும் அடுக்கடுக்காய் இக் கதைகளில் சொல்லப்படும்.

நாயக்கர் சமூகம் ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்த கதையை விலாவரியாகச் சொல்லி இருப்பார். காடுகளை அழித்து விளை நிலங்களை உருவாக்கியது, பசுக்களை கொண்டு விவசாயத்தைத் தழைக்கச் செய்தது, சமூக அடுக்குகளை உருவாக்குவதென நம் முன்னோர்களின் வாழ்வு கதைகளாய் விரியும். கோபல்ல கிராமத்து மக்களில் இந்தியச் சுதந்திரம், மக்களின் வாழ்வில் அரசாங்கத்தின் தாக்கம் எனவாய் வளர்ச்சியடையும். முழுக்க கரிசல் மண்ணின் வாசனையை இக்கதைகளின் வழியாய் நுகர முடியும். யதார்த்த வாதம், வட்டார வழக்கு போன்ற எழுத்து வகைமைகள் தமிழில் செழிக்க விதையாக இருப்பவர் கி.ரா. இவரை அடியொற்றியே ஏராளமான கரிசல் மண் சார்ந்த படைப்பாளிகள் உருவாகினர். கோவில் பட்டியிலிருந்து தமிழிலக்கியத்திற்கு செரிவான படைப்பாளிகள் கிடைத்தனர். கி.ரா ஒரு வாழும் வரலாறு.

பதின்மத்தின் இறுதியில் என்னை மிகவும் சுழற்றியடித்த நாவலாக தி.ஜானகிராமனின் மோகமுள் ஐ சொல்லலாம். பாலகுமாரன் பெண் பிம்பங்களிலிருந்து மெல்ல விடுபட்டு தி.ஜா வின் பெண் பிம்பங்களில் மாட்டிக் கொண்ட தருணம் அது. யமுனாவையும் பாபுவையும் மோகத்தீயில் எரிந்து போகும் மாமியையும் எனக்குள் வாங்கிக் கொண்ட தருணம் அது. யமுனா என்ற பெயர் கொண்ட பெண்ணையாவது பார்த்துவிட மாட்டோமா? எனப் பைத்தியமாய் திரிந்த காலம் அது. எழுத்து வாசிப்பவர்களை என்னவெல்லாம் செய்யும் என்பதை முழுக்க உணர்ந்தே வந்திருக்கிறேன். மோகமுள்ளின் கனவுத் தன்மை தந்த எழுச்சி தி.ஜா வின் புத்தகங்களை தொடர்ந்து தேட வைத்தது. பாலகுமாரனின் காயத்ரிகளை, ஸ்வப்னாக்களை, மரப்பசு அம்மிணி நிர்மூலமாக்கினாள். மரப்பசு அம்மிணிக்குப் பிறகு நிறமிழந்து போன பெண் பிம்பங்களை நினைத்துத் துக்கமாக இருந்தாலும் பதின்மம் முழுக்க பரவசத்தைத் தந்தவர்கள் என்கிற நன்றியும் எனக்கு எப்போதும் உண்டு. அம்மா வந்தாள், செம்பருத்தி, அன்பே ஆரமுதே, மலர் மஞ்சம் என தி.ஜா வின் நாவல்கள் அனைத்துமே நாவல்களின் ஒழுங்கமைவிற்கான உதாரணங்கள். தமிழ் நாவலின் வடிவத்தையே தி.ஜா ஒரு கட்டுக் கோப்பிற்குள் கொண்டு வந்தார்.

தி.ஜாவை வாசித்து முடித்த பின்பு லா.ச.ரா விற்குத் தாவினேன். இன்றைய மனம் பிறழ்ந்த எழுத்துகளுக்கு முன்னோடியாக லா.ச.ராவைச் சொல்லலாம். நிறைவேறாக் காமம், பால்யத்தின் மீதான ஏக்கம், முழுக்க கனவுப் பிரதேசமென லா.ச.ராவின் கதைக் களன் மாயத் தன்மைக்கு அருகாமையில் வருவது. லா.ச.ராவின் எனக்குப் பிடித்த சிறு நாவல் பச்சைக் கனவு மற்றும் கழுகு. அவரின் புகழ் பெற்ற படைப்பான அபிதா வின் மீது எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டெனினும் எழுதப்பட்ட வகையில் அபிதா ஒரு சவாலான படைப்புதான். கழுகு நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலேயும் ஒரு கவிதை வரும். நான் பற்றிய விசாரணைகள், தத்துவத்திற்கும் இருப்பிற்குமான போராட்டம், பெண், உடல், காமம் குறித்தான மிகைகள் என எல்லாமும் கலந்து கட்டிய தெறித்த எழுத்து லா.ச.ரா வினுடையது. சொற்களில் ஒரு வித லயமும் இசைத் தன்மையும் மிகுந்திருக்கும்.

அசோகமித்திரனை வந்தடைந்த போது சற்று நிதானத்திற்கு வந்திருந்தேன். அல்லது அசோக மித்திரன் இந்த நிதானத்தை வர வழைத்தாரா? என்பதும் தெரியவில்லை. உரத்து சொல்லுதலை, நெகிழ்வை, கரைதலை அசோக மித்திரன் சற்று நிதானப்படுத்துகிறார். எந்த வித மிகையுணர்ச்சியும் இல்லாத எழுத்து. மிகு கற்பனைகள், உவமை, உதாரணம், கனவு என எதுவுமே இல்லாத நேரடி முகத்திலறையும் எழுத்து. ஒரு வித மிகை மனதோடு இவரை வாசிக்க ஆரம்பித்த புதிதில் இவர் தந்த அப்பட்டம் சற்று எரிச்சலைக் கூட வரவழைத்தது. அமி யின் தண்ணீர் என்னை அசைத்துப் பார்த்த நாவல். கீழ் மத்திய தர வர்கத்தின் கிட்டத்தட்ட விளிம்பு நிலை வாழ்வின் அவலத்தை சன்னமான குரலில் சொல்லும் நாவல். சென்னையின் பொந்து குடித்தன வாழ்வை, தண்ணீர் பற்றாக்குறை அவலத்தை, மிகையே இல்லாது புகாரே இல்லாது போகிர போக்கில் சொல்லிப் போன நாவல். யமுனா, தாட்சாயணி போன்ற மிகை பிம்பங்களை கற்பனையில் சுகித்த மனது ஜமுனாவை வியர்வையும் சதையுமாய் எழுத்தில் கண்டபோது வெலவெலத்துப் போனது. என்னை நெடுநாட்கள் அலைக்கழித்த பிம்பம் தண்ணீர் ஜமுனாதான்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் வண்ண நிலவனை வாசித்தேன். வண்ண நிலவனுடைய கடல் புரத்தில் எப்போதைக்குமான பிடித்த நாவல். கம்பா நதி,ரெய்நீஸ் அய்யர் தெரு, எஸ்தர் என எல்லா வ.நி யின் படைப்புகளும் எனக்கு பிடித்தமானவைதாம் என்றாலும் கடல் புரத்தில் தனிதான். சில நாவல்களின் ஆரம்ப வரிகள் மனதில் அத்தனை அழுத்தமாய் பதிந்து போகும். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள் நாவலின் முதல் வரி, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் முதல் வரி, போலவே கடல் புரத்தில் ‘குருஸ் மிக்கேலுக்கு யாரையும் பிடிக்காது ‘என்கிற முதல் வரி. வண்ண நிலவன் குலசேகரப் பட்டிணத்தில் வாழ்வுச் சுழலின் நிமித்தம் சில மாதங்கள் சைக்கிள் கடை ஒன்றில் பணி புரிய நேர்ந்தது. அக்காலகட்டத்தில் மீனவர்களின் வாழ்வை மிக நெருக்கமாகக் காணும் வாய்ப்பும் கிட்டியது. அப்பாதிப்பில் உருவானதுதான் கடல் புரத்தில். மீனவர்களின் வாழ்வு குறித்தான மிக முக்கியமான பதிவாகவும் இந்நாவலைப் பார்க்கலாம். பிலோமி கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் துரதிர்ஷட முடிவும் மிகப்பெரும் சங்கடத்தைத் தந்தது. நாவல்கள் மூலமாக என்றும் வாழும் கதை மாந்தர்களில் இந்தப் பிலோமி முக்கியமானவள்.

தமிழில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை, அப்பட்டமான மொழியில் பேசிய முக்கியமான நாவல் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே. ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் இந்நாவல், மொழி அடிப்படையிலும், வடிவ அடிப்படையிலும் நம் சூழலின் புதிய திறப்பு. கந்தன் கதாபாத்திரத்தின் மூலமாக மரபான தமிழ் நாவலை சற்றே கலைத்துப் போட்டிருப்பார். இலக்கிய உலகம் பதிவு செய்யத் தவறிய, தினசரி வாழ்வில் நாம் காண மறுக்கும் மக்களின் வாழ்வை ஜி.நாகராஜன் ஆழமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருப்பார்.

இதையொட்டி பேசவேண்டிய இன்னொரு முக்கியமான நாவல் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி. மற்றும் இதன் இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால். சற்று வியப்பாக சொல்ல வேண்டுமெனில் தமிழில் இதைப் போன்ற ஒரு படைப்பு இன்னும் எழுதப்படவில்லை. காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஒரு படைப்பை எழுதிவிட்டு எந்தச் சத்தமும் சலம்பலும் இல்லாமல் ஒற்றைத் தனியறையில் வாழ்ந்து கொண்டு, மதுரை தினந்தந்தி அலுவலகத்தில் ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்த சிங்காரத்தை நினைத்தால் மேதமைத் தனத்தின் மீது மதிப்பு பன்மடங்காகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து உண்மையான கலைஞர்களை நசுக்கும் வாழ்வின் குரூரத்தின் மீதும் வெறுப்பு படராமல் இல்லை.

மலேசியாவின் பினாங்கு நகரத்தின் செட்டித் தெருவை, சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய INA படைகளின் சாகசத்தை தமிழில் சங்க இலக்கிய உரையாடல் சகிதமாய் படிக்க முடியும் என்பதே தமிழ் வாசகருக்கு மிகப்பெரிய உவகைதான். அப்படி ஒரு பெரும் வியப்பும் திகைப்பும்தான் புயலிலே ஒரு தோணி. இலட்சியவாத இளைஞனான பாண்டியன் மற்றும் அவன் சகாக்கள் லேவாதேவி வாழ்விலிருந்தபடியே ஐஎன் ஏ விற்கு ரகசியமாய் உதவுவது. ஜப்பான் மற்றும் சீனப் படைகளை எதிர்கொள்வது என முற்றிலும் புதிய களத்தை, புதுமாதிரியான எழுத்து நடையை புயலிலே ஒரு தோணி நமக்குப் பரிசளிக்கிறது. பினாங்கில் கொடிகட்டிப் பறந்த மதுரைச் செட்டியார்கள் வாழ்வும். பாண்டியனுக்கு ஏற்படும் மெல்லிய காதலும் நாவலிடையே உண்டு. இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால் இலட்சிய வாத மிகைகளும் சாகசங்களும் தீர்ந்து தத்துவத்தில் அடங்குவதை பதிவு செய்திருக்கும். தமிழின் பெரும்படைப்புகளைப் பட்டியலிட்டால் அதில் முதலிடம் புயலிலே ஒரு தோணிக்குத்தான்.

கொங்கு வட்டாரத்தின் வாழ்வினை களமாகக் கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.திருச்செங்கோடு பகுதியின் மொழியை, மக்களின் வாழ்வை, குறிப்பாய் சக்கிலிய இன மக்களின் பதிவுகளை தமிழில் நாவல் வடிவில் மிகச் சிறப்பாக பதிவு செய்தவர் பெருமாள் முருகன். இவருடைய ஏறு வெயிலும் கூளமாதாரியும் என் மனதிற்கு வெகு நெருக்கமான படைப்புகள்.

எண்பதுகளில் வீட்டு வசதி வாரியம் தமிழ் நாடு முழுவதும் விளை நிலங்களை அழித்து விட்டு வீடுகளைக் கட்டியது. எண்பத்தெட்டில் இவ்வாரியம் திருவண்ணாமலையில் என் வீட்டிற்கு சமீபமாகவிருந்த வயல்கள், கிணறுகள், தோப்புகள், சிறு சிறு குட்டைகள் எல்லாவற்றையும் அழித்து விட்டு மிகுந்த பரப்பளவில் வீடுகளைக் கட்டின. பறவைகளும், சிறுசிறு விலங்குகளும், என் போன்ற சிறாரும் இனி எங்கு போவது என திகைத்துப் போனோம். விவசாயிகள் அனைவரும் காடுகரைகளை விற்றுவிட்டு கிடைத்த பணத்தை குடித்தே அழித்து விட்டு, அதே வீட்டு வசதி வாரியம் கட்டும் கட்டிடங்களுக்கு சித்தாளாகப் போக ஆரம்பித்தனர். இந்த மாபெரும் அவலத்தை கண்கூடாகப் பார்த்திருந்ததால் பெருமாள் முருகனின் ஏறுவெயில் நாவல் என்னால் எப்போதுமே மறக்க முடியாத ஒரு நாவலாக மாறிப்போனது. விளை நிலங்களை விற்ற விவசாயின் சீரழிந்த வாழ்வுதான் ஏறுவெயிலின் கதை. வன்மம் தகிக்கும் வாழ்வின் உக்கிரத்தை நாவல் முழுக்கப் பதிவு செய்திருப்பார். இவருடைய மற்றொரு படைப்பான கூளமாதாரி சக்கிலிய குடி சிறார்களை முன் வைத்து எழுதப்பட்ட சிறப்பான நாவல்.

இதே வட்டார வழக்கில் எழுதப்பட்ட வா.மு.கோமுவின் கள்ளி யும் என்னளவில் முக்கியமான நாவலே. இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றத. இலக்கிய வடிவில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி. கற்பு, ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தை இவரின் கதை மாந்தர்கள் ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள். நள்ளிரவு, விடியல், முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி, பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது.

இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது. விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது. எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது. கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது.

புனைவுத் தளத்தில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். இவரின் கானல் நதி எனக்குப் பிடித்தமான நாவல். குள்ளச் சித்தன் சரித்திரமும் முக்கியமான நாவலே. கானல் நதி இசையை பின்புலமாக கொண்ட நாவல். தனஞ்செய் முகர்ஜி என்றொரு இசைக்கலைஞனின் இசை ஞானம், கல்கத்தா நகர வாழ்க்கை, சரயூ என்கிற பெண்ணின் மீது தோன்றும் நிறைவேறாக் காதல். மேதமைத் தனத்திற்கு பரிசாய் வந்து சேரும் பித்து என வழக்கமாய் யூகிக்க கூடிய தளம்தான் என்றாலும் யுவனின் புனைவு மொழி இந்நாவலின் தரத்தை உயர்த்துகிறது. பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு என நான்கு பாகங்களாக நாவல் பிரிக்கப்பட்டிருக்கிறது. மனதின் ஆழ்நிலைகளை, நுட்பமான சலனங்களை, அசைவுகளை, துல்லியமாய் இந்நாவல் பதிவு செய்திருக்கிறது.

எழுத எழுத போதாமை இருந்து கொண்டே இருக்கிறது. இன்னும் குறிப்பிட ஏராளமான படைப்புகள் உள்ளன. ஆனால் பதினைந்து பக்கத்திற்கும் மேலாக ஒரு இதழில் அடைந்து கொள்ள என்னவோ போல் இருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னும் சில முக்கியமான நாவல்களை பட்டியலாக மட்டும் குறிப்பிடுகிறேன். இது என்னுடைய சொந்த அரசியலுக்கு உட்பட்டதுதான்.

1. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
2. காதுகள் - எம்.வி. வெங்கட்ராம்
3. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா
5. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
7. சாயாவனம் - சா. கந்தசாமி
8. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
9. சோளகர் தொட்டி – ச.பாலமுருகன்
10. கருக்கு -பாமா
11. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
12. வெக்கை - பூமணி
13. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
14. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
15. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
16. பாய்மரக்கப்பல் – பாவண்ணன்
17. பாழி – கோணங்கி
18. செடல்- இமையம்
19. தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.
20. கொரில்லா – ஷோபா சக்தி
21. ரத்தஉறவு - யூமாவாசுகி
22. அளம் - தமிழ்செல்வி
23. அஞ்சலை - கண்மணி குணசேகரன்
24. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
25. கள்ளம் – தஞ்சை பிரகாஷ்.
26. பிளம் மரங்கள் பூத்துவிட்டன, ஒப்பந்தம் - வாசந்தி.
27. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி.
28. ஒரு மனிதனின் கதை - சிவசங்கரி.
29. மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பந்தயப்புறா - பாலகுமாரன்
30. நெடுங்குருதி,யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
31. பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம் – ஜெயமோகன்
32. ராசலீலா, ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா

தமிழ் நாவல் மரபு அதற்கே உண்டான கட்டமைவுகளோடும் அவ்வப்போது மீறல்களோடும் மிகச் சரியாகவே பயணிப்பதாக உணர்கிறேன். முன்னோடிப் படைப்பாளிகள் தொட்டுச் சென்றிருக்கும் உயரத்தை தாண்டுவதென்பது சம கால படைப்பாளிகளுக்கு மிகப் பெரும் சவால்தான்.

Featured Post

test

 test