Showing posts with label கன்னடம். Show all posts
Showing posts with label கன்னடம். Show all posts

Sunday, July 21, 2019

கிரீஷ் கர்னாட் - குலப்பெருமையை அசைத்தல்


கிரீஷ் கர்னாட் நடித்து, திரைக்கதை வசனம் எழுதிய சம்ஸ்காரா திரைப்படம் இந்திய சமூகம் என்றும் நினைவில் வைத்திருக்க  வேண்டிய படம். பார்ப்பனியம் கோலோச்சியிருந்த, சாதி வெறியும் தீண்டாமையும் உக்கிரமாய் இருந்த காலகட்டங்களில் மாத்வ பிராமணர்கள் வசிக்கும் ஓர் அக்கிரஹாரத்தில் நடைபெறும் கதையாக சம்ஸ்காராவை யு,ஆர் அனந்தமூர்த்தி எழுதியிருப்பார்.

கிரீஷ் கர்னாட் ஒழுக்கமும், பக்தியும், நிறைந்த கல்வி ஞானமும் கொண்ட ஆச்சாரியார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  சில பிராமணக் குடும்பங்கள் வசிக்கும்  அந்த அக்கிரஹாரத்தின் முதன்மைப் பண்டிதராகவும்  ஆச்சாரியார் இருப்பார். இன்னொரு கதாபாத்திரமான நாராயணப்பாவாக புகழ் பெற்ற எழுத்தாளரும் கெளரி லங்கேஷின் தந்தையுமான பி. லங்கேஷ் நடித்திருப்பார். நாராயணப்பா அந்த பிராமணக் குடியிருப்பின் எல்லா மரபுகளுக்கும் எதிரானவர். குடியும் கொண்டாட்டமும் பாட்டும் கூத்தும் நட்பும் காதலுமாய் வாழ்பவர்.

 ஒரு நாள் நாராயணப்பா இறந்து போகிறார்.  அவர் பிறப்பால் பிராமணன் என்பதாலும் அவரை அக்கிரஹாரத்தை விட்டு விலக்கி வைக்காததினாலும் இன்னொரு பிரமணனே இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதை யார் செய்வது என்பதில் குழப்பம் வரும். சண்டியராகத் திரிந்ததால் பிற பிராமணர்கள் யாரும் இறுதி காரியத்தைச் செய்ய முன் வர மாட்டார்கள். அப்போது அவரின் மனைவியான சந்திரி தான் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்றி ஆச்சாரியாரிடம் கொடுப்பாள். இறுதி காரியங்களைச் செய்பவர்களுக்கு இந்நகைகள் போகட்டும் எனச் சொல்லிவிடுவாள். இதைக் கேள்விப்பட்டதும் ஊரில் இருக்கும் அத்தனை பிராமணர்களும் நாராயணப்பாவிற்கு இறுதி காரியத்தைச் செய்ய முன்வருவார்கள். ஆனால் ஆச்சாரியார் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்.

 இறுதிக் காரியம் யார் செய்ய வேண்டும் என்பதற்கான பதில் வேண்டி ஆஞ்சநேயருக்கு இரவு பகலாக பூஜை செய்து கொண்டிருப்பார். அவரின் மனைவி பல வருடங்களாக படுத்தப் படுக்கையாகக் கிடப்பவள். மனைவிக்கான பணிவிடைகளையும் ஆச்சாரியாரே செய்து வருவார். பதில் எதுவும் கிடைக்காததால் ஆச்சாரியார் மிகுந்த ஏமாற்றத்துடன் கோவிலை விட்டு வெளியே வரும்போது  எதிரே நாராயணப்பாவின் மனைவி சந்திரி அமர்ந்திருப்பாள். உடலும் பொழுதும் உந்தவே அவளுடன் ஆச்சாரியார் உறவு கொண்டுவிடுவார்.

அதனால் குற்ற உணர்வு அடையும் ஆச்சாரியார் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது மனைவி இறந்திருப்பாள். அவள் உடலைத் தனி ஒருவராகத்  தகனம் செய்துவிட்டு அந்த ஊரை விட்டு ஓடிப்போவார். வெளியூரில் தன்  அடையாளத்தை மறைந்துக் கொண்டு அலையும்போது உடன் வருபவனின் நிர்பந்தத்தின் பேரில் திருவிழா நடைபெறும் கோவில் ஒன்றில் அமர்ந்து உணவருந்துவார். அங்கு ஒருவரால் இன்னார் என அடையாளம் காணப்படவே அங்கிருந்து தலை தெறிக்க ஓடுவார். பின்னாலேயே வரும் வெள்ளந்தியான சக பயணியிடம் தான் யார் என்பதையும் எதனால் இங்கு அலைகிறேன் என்பதையும் சொல்வார். அதைக் கேட்டுத் திகைப்படையும் பயணி அவரை விட்டு விலகிப் போவான். மீண்டும் தன் சொந்த கிராமத்திற்கு வரும் ஆச்சாரியார், இறந்து போன நாராயணப்பா தன்னை விட மேலானவர் என சுயத் தெளிவு அடைவதோடு படம் நிறைவடையும்.

இன்று வரைக்குமே இந்த நாவலும், திரைப்படமும் அடிப்படைவாதத்தில் ஊறிப்போன மனங்களை அடித்து நொறுக்குவதாகத்தான் இருக்கிறது. சம்ஸ்காரா நாவலுக்குத் திரையிலும் நியாயத்தைச் செய்த வகையில் கிரீஷ் கர்னாட் ஒரு முக்கியமான கலைஞனாகிறார்.

இதைத் தொடர்ந்து எஸ்.எல் பைரப்பாவின் வம்ச விருக்‌ஷா நாவலை பி.வி. காரந்தோடு சேர்ந்து இயக்கி திரைப்படத்தில் ராஜா ராவ் என்கிற முக்கியக் கதாபாத்திரம் ஏற்றும் நடிக்கிறார். வம்ச விருக்‌ஷா நாவல் பரம்பரை கண்ணியத்தை உடைத்து நொறுக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும். பிராமணர்களின் குலப்பெருமையை அசைத்துப் பார்க்கும் புத்துலக நாவல். திரையிலும் இந்த உணர்ச்சி சரியாகவே வெளிப்பட்டது. யு. ஆர்.அனந்த மூர்த்தி, பைரப்பா, குவெம்பு, சிவராம காரந்த், மாஸ்தி, பி.லங்கேஷ், கிரீஷ் கர்னாட் என கன்னடத்தின் அத்தனை எழுத்தாளர்களும் சுய சாதி மற்றும் சுய மதத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும், அதிகாரத்தை தங்களின் எழுத்துக்களின் வழியாய் எதிர்த்தும் வந்தனர். எனவேதான் கன்னட இலக்கியத்தை இந்தியாவின் மிக முன்னோடி இலக்கியம் என நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.

கன்னூரு ஹெக்கடத்தி, காடு ஆகிய இரண்டு படங்களும் கிரீஷ் கர்னாட் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள். சம்ஸ்காரா, வம்ச விருக்‌ஷா, கன்னூரு ஹெக்கடத்தி, காடு இந்நான்கு படங்களையும் கிரிஷ் கர்னாட் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து பார்த்தேன். எழுத்து, நாடகம், நடிப்பு, இயக்கம் இப்படி கலையின் எல்லா வடிவங்களிலும் தன் தனி முத்திரையைப் பதித்தவர். சாகும் வரையிலும் மூக்கில் ஒரு குழாயை சொருகிக் கொண்டாவது அதிகாரத்திற்கு எதிராகப் போராடியவர். சம காலத்தின் மிக முக்கியமான அர்பன் நக்சலான கிரீஷ் கர்னாடிற்கு அஞ்சலி


Thursday, January 24, 2019

சலனமற்று முன் நகரும் புராதனப் படகு- த்வீபா




கிரிஷ் காசரவள்ளி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான த்வீபா  ( தீவு) கன்னடப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்துவிட்டு இன்னும் அத் திரைப்படத்தின் நினைவுகளோடே சுற்றிக் கொண்டிருக்கிறேன். வாழ்நிலம் மீதான மனிதனின் உரிமை,  தொன்மத்துடனான மனித இருப்பு, இயற்கையுடனான வாழ்வியல் பிணைப்பு, அதிகாரங்களும் அரச யந்திரங்களும் உருவாக்கும் சூழலியல் சீர்கேடு, இறுதியாய் பெண் குறித்தான தெய்வ ஒப்பீடுகள் என இந்தத் திரைப்படம் எல்லாக் காலத்திற்கும் பேசப்பட வேண்டிய நுட்பமான விஷயங்களை மிகச் சரியாய் பேசியிருக்கிறது.

ஒன்றன் பின் ஒன்றாய் இந்தத் திரைப்படம் தொடும் உணர்வுகளும் அரசியலும் நிலைப்பாடும் நிலைகுலைய வைக்கின்றன. ஆழமான நதியின் மீது சலனமற்று முன் நகரும் புராதனப் படகைப் போல இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. திரைப்படத்தின் எந்தக் காட்சியையுமே கிரீஷ் காசரவள்ளி உருவாக்கவில்லை. கதைப் பேசும் இடத்திற்கே சென்று மொத்த சம்பவங்களையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இயற்கையோடு இணைந்து ஒரு திரைப்படம் உருவாவது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால் த்வீபா அப்படியே வந்திருக்கிறது. மிகப்பெரிய மாஸ்டரால் மட்டுமே இயலக் கூடிய விஷயங்கள் இவை. அந்த வகையில் கிரீஷ் காசரவள்ளியை உலகத்தின் மிகச் சிறந்த மாஸ்டர் இயக்குனர்களின் வரிசையில் வைத்துப் பேசிவிட முடியும்.

த்வீபா - சாகித்ய அகடாமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் நா டிசெளசாவின் நாவல் - கன்னடத்தில் சாகித்ய அகடாமி விருது பெற்ற என்கிற அடைமொழியை எந்தத் தயக்கமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கு தகுதியானப் படைப்புகளுக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது. தமிழில் எழுதத்தான் கூச்சப்பட வேண்டும்.  இந்த நாவலைத்தான் கிரீஷ் திரையில் கொண்டு வந்திருக்கிறார். நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியம் கன்னடத்தில்தான் எழுதப்படுகிறது. இந்தக் கூற்றை நிரூபிக்க இதோ இன்னொரு உதாரணம் இந்த நாவல். 

கன்னட மொழிபெயர்ப்புகள் தமிழில் அதிகம் நிகழ வேண்டும். எழுத்தாளர் விவேக் ஷன்பேக் தவிர வேறு யாரும் சமீபமாய் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. வங்கம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகும் மிகச் சிறந்த படைப்புகளும் தமிழிற்கு வருவதில்லை. சினிமாப் பின்புலம் கொண்ட அல்லது தன்முனைப்பும், பிரபல வெறியும் கொண்ட பிற மொழி எழுத்தாளர்களின் படைப்புகள் அதேத் தன்மைகளைக் கொண்டிருக்கும் தமிழர்களால் மொழிபெயர்க்கப்படுகிறது. இது இந்திய இலக்கியத்தையே குழி தோண்டிப் புதைக்கும் செயலாகவே பார்க்கிறேன். தமிழில் மொழிபெயர்ப்போர் குறைந்தபட்ச நேர்மையுடனாவது இயங்க வேண்டிய தேவை இப்போது அதிகம் உருவாகியிருக்கிறது. மொழிபெயர்ப்புகளில் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருந்த நேஷ்னல் புக் ட்ரஸ்ட் இப்போது இயங்குகிறதா என்பதும் தெரியவில்லை.

இந்தப் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான நாகியை செளந்தர்யா ஏற்று நடித்திருக்கிறார். உயிரைக் கொடுத்து நடிப்பது எனச் சொல்வார்களே அதற்கு உதாரணமாக செளந்தர்யாவின் இந்தக் கதாபாத்திரத்தைச் சொல்லிவிடலாம்.  தவிர செளந்தர்யாவே இப்படத்தின் தயாரிப்பாளர். நிஜமாகவே செளந்தர்யாவின் இழப்பு இப்போதுதான் என்னை பாதித்திருக்கிறது. இவ்வளவு மகத்தான நடிகையை தமிழ் சினிமா எவ்வளவு மோசமாகப் பயன்படுத்தியிருக்கிறது என்பதை நினைத்தால் இன்னும் எரிச்சல் மண்டுகிறது. கூரியப் போர் வாட்களை  வெங்காயம் நறுக்க மட்டுமே பயன்படுத்தும் அகங்காரம் கொண்டது நம் தமிழ் சினிமா. அதோடு ஒரு தசாம்தத்திற்கு ஓரிருவர் என உருவாகி வரும் கலைஞர்களையும் பணத்தாலே அடித்து  மிக மோசமான மசாலாப்பட இயக்குனர்களாக மாற்றிவிடும் வல்லமையும் கொண்டது. போகட்டும். 

இந்தப் படம் குறித்துச் சொல்ல இன்னும் இருக்கிறது. இது வெற்றுப் புலம்பலாகப் போய்விடவிடவே அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


Wednesday, May 17, 2017

பவா - அனந்தமூர்த்தி


கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலான பவ - வை தமிழில் வாசித்தேன். பிறப்பு என்கிறத் தலைப்பில் நஞ்சுண்டன் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. அளவில் மிகச் சிறிய நாவல்தான். இதற்குள்ளும் மூன்று பாகங்கள் உண்டு. எழுத்தாளரின் வசதிக்கேற்ப ஒரு நாவலை அத்தியாயங்களாகப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்தான். பிறப்பு நாவல்  மூன்று தலைமுறை ஆண்களின்  உறவுச் சிக்கல்களைப் பேசுவதால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கலாம்.

சிவராம் கரெந்த வின் அழிந்த பிறகு நாவலைப் போல பிறப்பும் ரயில் பயணத்தின் வழியாய் நம்மைக் கதைக்குள் கூட்டிப் போகிறது. முதல் நான்கைந்து அத்தியாயங்கள் அசுவராசியமாய் நகர்ந்து போக, சாஸ்திரிகளின் முன்கதை முதுகுத் தண்டில் அதிர்வை ஏற்படுத்தி கதைக்குள் ஒன்ற வைத்து விடுகிறது.

சாஸ்திரமும் வேதமும் ஓதுபவர், ஹரிக் கதைகளை சொல்லும் ஒரு மடியான முதியவர் அவ்வளவு குரூரமானவராய் இருந்திருப்பார் என நம்பவே எனக்கு நேரம் பிடித்தது. மரபான பல விஷயங்களை தமிழ் நாவல்களும் வாசகரும் கடக்காமல்தான் இருக்கிறோம். பார்ப்பனர்களைக் குறித்தப்  பகடிகள்  நம்மிடையே உண்டு என்றாலும் அவர்களைக் குரூர வில்லன்களாக சித்தரித்தக் கதைகளை நான் வாசித்த நினைவே இல்லை. அதுவும் மிக ஆசாரமான ஒரு பிராமணருக்கு இவ்வளவு குரூரப் பின்புலம் உள்ளது போன்ற ஒரு படைப்பு நம் சூழலில் வெளிவந்திருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

பிறப்பு நாவல் - தினகர் மற்றும் பிரசாத் ஆகிய இருவரின் பிறப்புகளைக் குறித்த மர்மங்களைத் தகவல்களாய் தருகிறது. பின்பு திட்டவட்டமாய் எதுவும் சொல்லாமல் இந்தக் கற்பு நிலை என்பதை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கதாபாத்திரங்களின் நகர்வைக் குறித்த ஒரு சித்திரத்தோடு முடிந்து போகிறது.

தொலைக்காட்சிப் பிரபலமான தினகர் தன் மண வாழ்வில் தோல்வியுற்று - இவருக்கு ஏராளமான காதலிகள், மனைவிக்கு ஒரே ஒரு காதலன். ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். வழியில் ரயிலில் சாஸ்திரிகளை சந்திக்கிறார். தினகர் அணிந்திருக்கும் ஸ்ரீசக்ரத்தைப் பார்த்து அவருக்கு இவன் தன் மகனாக இருப்பானோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே ஒரு பெண்ணை சேர்த்துக் கொண்ட சாஸ்திரி வைப்பின் ஆசைப்படி இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு குழந்தை இல்லாததைக் காரணம் காட்டி அவளைச் சித்திரவதை செய்கிறார். அவளோ புதிரும் வைராக்கியமும் நிரம்பியவள். இவரை ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. இடையில் அவர்கள் வீட்டில் கெட்ட ஆவிகளை ஓட்ட வரும் மாந்த்ரீகனுடன் அவளுக்குப் பரிச்சயம் ஏற்படுகிறது. மாந்த்ரீகன் அவளுக்கு தம்புராவை மீட்ட சொல்லித் தருகிறான். இதனால் வெறியேறும் சாஸ்திரி மனைவியான சரோஜாவை அடித்து நொறுக்கி வீட்டின் பின்னால் புதைத்துவிட்டு வெளியேறுகிறார். அவளைக் கொன்றுவிட்டதாகவும் நினைத்துக் கொள்கிறார். பிறகு காதலி ராதாவின் ஆசைப்படி இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்ந்து பிராமணர் அல்லாத இன்னொருவனுடன் ஓடிப்போகிறது..

தலை சுற்றுகிறது அல்லவா.. இப்படித்தான் போகிறது கதை.

பழமையில் ஊறி அது தரும் ஆண் சுதந்திரத்தில் திளைத்து, சாதியும் பணமும் தரும் திமிரை பெண் மீது ஏவித் திரியும் ஆண்களின் கதை இது.  கூடவே அவர்களின் திமிரை அனுமதித்தபடி தங்களின் வெளியேறல்களை மீறல்களை கட்டமைத்துக் கொள்ளும் பெண்களும் இதே கதையில் வருகிறார்கள்.  தாம் புணர்ந்த பெண்களின் கற்பு குறித்த அச்சம் கொண்ட ஆண்களான சாஸ்திரியும் நாராயணனும் மெல்ல தங்களின் நிலைப்பாட்டிலிருந்து நகர்கிறார்கள். பல பெண்களைப் புணரும் தினகர் தன் மனைவியை இன்னொருவனோடு படுக்கையில் பார்த்தவுடன் அதிர்ந்து ஓடிப்போகிறான்.

தினகர் சாஸ்திரிகளுக்குப் பிறந்தவனா அல்லது மாந்திரீகனுக்குப் பிறந்தவனா என்கிற சந்தேகத்தைப் போலவே -  பிரசாத் தினகருக்குப் பிறந்தவனா அல்லது நாராயணனுக்குப் பிறந்தவனா என்கிற சந்தேகம் சாஸ்திரியையும் நாராயணனையும் வாட்டி எடுக்கிறது. தினகரும் பிரசாத்தும் இதிலிருந்து தப்பிக்கிறார்கள். ரகசியம் அறியப்பட வேண்டாததாய் கரைந்து போகிறது.

மூன்று தலைமுறைக் கதையை வெறும் கதைச் சுருக்கமாய் தந்துவிட்ட போதாமை இந்நாவலில் உண்டு. ஆனால் இக்கதைகள் உலவும் தளம் யாரும் தொடாததாய், தொடப் பயப்படும் தளமாய் இருக்கிறது. அனந்தமூர்த்தி அநாயசமாய் மரபுகளை உடைக்கிறார். உடன் ஆன்மீக மசாலாப் பொடிகளைத் தூவி விடுகிறார். இவரை இந்தியச் சூழல் மிகைப்படுத்துகிறதா என்கிற எண்ணமும் எனக்கு வந்து போகத் தவறவில்லை.


Tuesday, April 25, 2017

எஸ்.எல்.பைரப்பா

இன்று கன்னட எழுத்தாளர் பைரப்பாவைக் குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கும் குறிப்புகளை வாசித்தேன். அவர் இணைப்புக் கொடுத்திருந்த வலம் கட்டுரையையும் வாசித்தேன்.  ஒரு வித இறுக்கமும் அமைதியின்மையும் தோன்றவே பைரப்பாவின் விக்கிப் பக்கத்தை நிதானமாய் வாசித்து முடித்தேன். குடும்பம் சிதைகிறது நாவலை வாசித்த  உடன் நான் எழுதிய சில குறிப்புகள் நினைவிற்கு வரவே அதையும் வாசித்தேன். மனம் அமைதியடைந்தது. ஒரு எழுத்தாளரைப் பற்றி, அவர் வாழ்வு மற்றும் படைப்புகளைப் பற்றி அடுத்தவர் உருவாக்கிக் கொள்ளும் வெவ்வேறு சித்திரங்கள் இவை. மற்றவர் நிலைப்பாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு என்னுடையது என்ன என்பதை இப்படி எழுதிப் பார்த்துக் கொள்கிறேன்,

நான் ஒரு எளிய வாசகன். படைப்புகளின் வழியாய் எழுத்தாளரை அறிந்து கொள்ள முற்படுபவன். படைப்புகள் மட்டுமே அறியப்பட்டால் கூடப் போதும் என நினைப்பவன். அதே சமயம் தகுதியுள்ள எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை அங்கீகாரங்களும் கிடைக்க வேண்டும் என விரும்புபவன். 

அங்கீகாரம் என்பது பரவலாய் வாசிக்கப்படுவதா, நிறுவனங்களால் தரப்படும் விருதுகளைப் பெறுவதா அல்லது  இவரைத்  தவிர்த்துவிட்டு இம்மொழியின் இலக்கியத்தை அளவிட்டு விட முடியாது எனும் மதிப்பீடா என்றால் நான் மூன்றாவதையே தேர்ந்தெடுப்பேன். மற்ற இரண்டையும் விட மதிப்பீடே ஒரு எழுத்தாளரின் பங்களிப்பை முக்கியமானதாக்குகிறது. அந்த மட்டில் பைரப்பா ஏற்கனவே கன்னட இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சம். இந்திய இலக்கிய மேதைகளில் ஒருவர்.  மேலதிகமாய் பத்மஸ்ரீ, சாகித்ய அகடாமி உள்ளிட்டப் பலவிருதுகளைப் பெற்றிருக்கிறார். அவருடைய சமீபத்திய நாவலான ஆவரணா வெளியாவதற்கு முன்பே விற்றுத் தீர்ந்திருக்கிறது. என்னளவில் பைரப்பா ஒரு முழுமையான மற்றும் முழுமையடைந்த எழுத்தாளர். 

பைரப்பாவின் சுயசரிதை நூலான பித்தி யில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவர் இளமைக்கால நிகழ்வுகளும் -  குடும்பம் சிதைகிறது நாவலும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். எனக்கு ஏற்பட்ட  அமைதியின்மைக்கும் இதுவே காரணம்.  

குடும்பம் சிதைகிறது, வாசிப்பவரை மிகவும் துயரத்திலாழ்த்தும் நாவல். இவ்வளவு துயரங்களா என்கிற தவிப்பும் பரிதாபமும் வாசிக்கையில் நம்மைத் தொந்தரவு செய்யும். அத்தனை குரூரங்களும் பைரப்பாவிற்கு நேர்ந்தவை எனும்போது உண்மையிலேயே மனம் பதறித்தான் போகிறது. 

தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்லாது எழுத்து வாழ்விலும் பைரப்பா குழு அரசியல் வாதங்களால் பழி வாங்கப்பட்டிருக்கிறார். ஒரு எழுத்தாளரின் எழுத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது என்பது அவர் வாசிக்கப்படாமல் போவதை விடத் துயரமானது. 

தமிழில் பிரதானமாக இருக்கும் பிராமண மோகம் பைரப்பாவின் எழுத்துகளில் கிடையாது. நம் சூழலில் குறிப்பாக பிராமணர் படைப்புகளை எடுத்துக் கொண்டால் அவற்றை யதார்த்தம், அழகியல் எனும் இரு பெரு பிரிவுகளிலும், காமம், அகச்சிக்கல், உள்ளொளி தரிசனம், பொருந்தாக்காமம், நிறைவேறாக் காமம், இப்படி சில பல உள் வகைமைக்குள்ளும் பொருத்தி விட முடியும். இதைத் தாண்டி அவர்களின் சுயசாதி விமர்சனம் படைப்புகளில் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களாக பைரப்பா சித்தரித்திருப்பார். நாவலின் முதல் அத்தியாயமே ஒரு பிராமணக் குடும்பத்தின் அதிகாலை, தாய் மற்றும் மகன்களின் ஏராளமான வசைச் சொற்களோடுதான் விடியும். மகன்கள் தாயை ”மொட்டை முண்டை”, ”கழுத முண்டை” என வசைவதும் பதிலுக்குத் தாய் மகன்களை ”தேவடியாப் பிள்ளைகளா” என வசைவதுமாய் நாவல் ஆரம்பிக்கும். பிராமணக் குடும்பத்தின் கதை என்றாலும் கூட மிக நேரடியான மக்கள் மொழி அதாவது மிக அசலான கிராம மொழியில்தான் மொத்த நாவலும் எழுதப்பட்டிருக்கிறது. பிறகு எப்படி பைரப்பா தவறாக அடையாளப்படுத்தப்படுகிறார் என்பது தெரியவில்லை.

தற்சமயம் பைரப்பாவை இந்துத்வ சக்திகள் தாங்கிப் பிடிப்பதும் நிச்சயம் இன்னொரு தவறான அடையாளப்படுத்தலாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

கன்னடத்தில் நிகழும் இலக்கிய குழு அரசியல் விஷயங்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மேலும் பைரப்பாவின் இரண்டு நாவல்களைத் தவிர்த்து வேறெதையும் வாசித்ததும் இல்லை. எனவே திட்டவட்டமாக எதையும் கூற விரும்பவில்லை. இப்போதைக்கு பைரப்பாவின் மற்ற படைப்புகளைத் தேடி வாசிக்க வேண்டும். மற்றவைப் பிறகு.




Thursday, March 23, 2017

நாய் அடிக்கிற கோல்


நேஷ்னல் புக் ட்ரஸ்ட் 1995 இல் வெளியிட்டிருந்த கன்னடச் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு இதே தொகுப்பில் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் ’க்ளிப் ஜாயிண்ட்’ என்கிற கதையை மட்டும் வாசித்து விட்டு தொகுப்பை மூடியது நினைவிற்கு வந்தது. இத் தொகுப்பின் பிற கதைகளோடு ஒப்பிடுகையில் ’க்ளிப் ஜாயிண்ட்’ சுமாரான கதைதான். பெயர் பிரபலமடைவதின் நன்மை இதுதான் போலும். பிரபலத் தன்மையில் விழாதவன் என்கிற நம்பிக்கைகள் என்னைப் பற்றி இருந்தாலும் சில விஷயங்களில் விழுந்துதான் விடுகிறேன்.

சொல்ல வந்தது பி.லங்கேஷ் என்பவர் எழுதிய ’ஓய்வு பெற்றவர்கள்’ என்கிற சிறுகதை குறித்து. ஒரே துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இரண்டு முதியவர்களின் மன விகாரங்களை ஒரு எழுத்தாளன் எதிர் கொள்ள நேரிடும் சந்தர்ப்பம்தான் இச்சிறுகதை. கொஞ்சம் காட்டமாக, படாரென முகத்தில் அடிக்கும் உவமைகளோடு இக்கதை எழுதப்பட்டிருப்பதுதான் என்னை உட்கார்ந்து இதை எழுத வைக்கிறது. இரண்டு முதியவர்களை எழுத்தாளர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
ஞாயிற்றுக் கிழமை நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகில் வந்தார்கள். அதில் ஒருவன் கொஞ்சம் தடிப்பாக உயரமாக இருந்தான்.(....) இன்னொருவனுக்கு அதே வயது. ஒல்லியாக நாய் அடிக்கிற கோலைப் போல இருந்தான்
. இந்த உவமையில் திடுக்கிட்டு வாசிப்பதை நிறுத்தி சிரித்துவிட்டேன். நாய் அடிக்கிற கோல் எவ்வளவு பிரமாதமான உவமை!. ஒரு மனிதனை இப்படி விவரிக்க இயலுமா என ஆச்சரியமாக இருந்தது. கதை சமகால சூழலுக்கும் சரியாகப் பொருந்திப் போகும் அரசுப் பணி ஊழல்களை தோலுறிக்கிறது. லஞ்சத்தில் ஊறித் தடித்த தோல்களைக் கொண்ட மனிதர்களை இழிகிறது. கூடவே வெற்றியடைய முடியாத எழுத்தாளனின் தோல்விப் புலம்பல்களையும் சேர்த்துக் கொள்கிறது. இக்கதை பிடித்துப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
எழுதுகிறவன் ஒரு வகையான விசித்திரப் பிராணி; அதனாலேயே பல சமயங்களில் தன் வாலின் நிழலைப் பிடிக்க முயன்று தளர்ந்து போகும். அடர்த்தியான காட்டு வழியே குறிக்கோள் என்பதே இல்லாமல் சும்மா நடந்து கொண்டே போகும். உடம்பில் கொழுப்பை வளர்த்துக் கொண்டு இந்த மிருகம் தாவரம், மாமிசம், பாவம், புண்ணியம் எல்லாவற்றையும் செரித்துக் கொண்டு, பால் சொரிந்து சுமை குறைந்த எருமையைப் போல கலங்கிய நீரில் விழுந்து பத்து வட்டமடிக்கும்.
சாகித்ய அகடாமி விருது பெற்ற P.Lankesh ஒரு இயக்குனரும் கூட. நான்கு திரைப்படங்களை இயக்கியிருப்பதாய் விக்கி சொல்கிறது - தவறாக ஒரு மலையாளப் படத்தின் இணைப்பைக் கொடுத்திருக்கிறது. இவரின் பிற படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதா? எனத் தேட வேண்டும். இதுவரைக்குமாய் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கன்னடப் படைப்புகளையும் தேடிப் பிடிக்க வேண்டும்.

 மிகை என எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியம் கன்னடத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது.

Monday, December 15, 2014

ப்ராமின் டாமினேஷன்


மலையாள மற்றும் வங்காளப் படைப்புகளின் அறிமுகத்தோடு ஒப்பிடுகையில் கன்னட இலக்கியமும் சினிமாவும் எனக்கு அத்தனை பரிச்சயம் கிடையாது. பைரப்பா, அனந்தமூர்த்தி, கிரீஷ்காசரவள்ளி, கிரீஷ்கர்னாட் மற்றும் விவேக் ஷன்பேக், போன்ற சொற்ப ஆளுமைகளின் படைப்புகளை அறிந்திருந்ததோடு சரி. சமீபத்தில் வாசித்த சிக்கவீர ராஜேந்திரன் நாவல் கன்னட இலக்கியத்தின் மீது பெரும் விருப்பம் ஏற்படக் காரணமாயிருந்தது. மனதளவில் என்னைக் கன்னடனாக உணரத் தொடங்கும் அளவிற்கு படைப்புகளின் வழியாய் அந்நிலங்களில் காலபேதமின்றி உலவிக்கொண்டிருக்கிறேன். கர்நாடகத்தின் நிலக்காட்சியும் மக்களும் பண்பாடும் என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன. பைரப்பா எழுதிய ஒரு குடும்பம் சிதைகிறது நாவலையும் இன்று காலை வாசித்து முடித்தேன். இந்திய சுதந்திரத்திற்கு முன்னரான கிராம வாழ்வை குறிப்பாக தும்கூர் பகுதி மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நாவல் வழியாய் மிகக் கச்சிதமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. பெண்ணடிமைத்தனம், அறியாமை, கல்வியறிவின்மை, வறுமை, ப்ளேக் போன்ற கொள்ளை நோய்கள், பஞ்சம், என மக்கள் மிகக் கடுமையான காலகட்டத்தை எதிர்கொள்ள நேரிட்ட கதையை ஒரு பிராமணக் குடும்பத்தை மையமாக வைத்து பைரப்பா மிக அசலாகச் சித்தரித்திருக்கிறார்.

சமூக வலைத் தளங்களை பிராமண நோய் பீடித்திருப்பதாலோ அல்லது தற்செயலாகவோ ”கன்னட இலக்கியத்தில் ப்ராமின் டாமினேஷன் அதிகம்” என்றொரு தகவலை தோழி வழியாய் அறிய நேர்ந்தது. அவசரமாய் விக்கியில் தேடிப் பார்த்தால் பைரப்பா பிராமணர்தான். எங்குதான் ப்ராமின் டாமினேஷன் இல்லை என சமாதானமாகிக் கொண்டேன். கல்வி அவர்களிடம் இருந்ததால், முதலில் கல்வி கற்றவர்கள் அவர்கள்தாம் என்பதால் அறிவுச் சூழலில் அவர்களின் இருப்பு மிகுந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் இருக்கும் சொற்ப ஆளுமைகளில் சொற்பமே சொற்ப ஆட்களைத் தவிர்த்து அனைவருமே பிராமணர்கள்தாம். ஏன் இந்திய அளவில் கூட எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவுப்புல ஆளுமைகளில் தொண்ணூறு சதவிகிதம் உயர்சாதியினர்தாம். இதில் புதிய ஆட்கள் உள்ளே வருவது, புதுச் சிந்தனைகள் உள்ளே வருவது போன்றவை மிக மெதுவாகத்தான் நிகழும். அனேகமாய் இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆகலாம். அந்த ஐம்பது ஆண்டுகளை நூறு ஆண்டுகளாக நீட்டிக்கச் செய்ய பத்ரிக்களும் ஜெயமோகன்களும் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பார்கள் என்றாலும் உயர் சாதியினரின் ஆயுளும் மற்ற சாதியினரின் ஆயுட் காலமும் ஒன்றாகவே இருப்பதால் மாற்றங்கள் அடுத்த நூற்றாண்டிலாவது நிகழ்ந்து விடும் என நாம் மூச்சு விட்டுக் கொள்ளலாம்.

தமிழில் குறிப்பாக பிராமணர் படைப்புகளை எடுத்துக் கொண்டால் அவற்றை  யதார்த்தம், அழகியல் எனும் இரு பெரு பிரிவுகளிலும், காமம், அகச்சிக்கல், உள்ளொளி தரிசனம், பொருந்தாக்காமம், நிறைவேறாக் காமம், இப்படி சில பல உள் வகைமைக்குள்ளும் பொருத்தி விட முடியும். இதைத் தாண்டி அவர்களின் சுயசாதி விமர்சனம் படைப்புகளில் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. கன்னடத்திலும் மலையாளத்திலும் இந்தப் போக்கு இல்லை. பெரும்பாலான உயர்சாதியினர் படைப்புகளில் சுயசாதி விமர்சனம் அடிப்படையான ஒன்றாக இருந்தது. ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களாக பைரப்பா சித்தரித்திருப்பார். நாவலின் முதல் அத்தியாயமே ஒரு பிராமணக் குடும்பத்தின் அதிகாலை, தாய் மற்றும் மகன்களின் ஏராளமான வசைச் சொற்களோடுதான் விடிகிறது. மகன்கள் தாயை ”மொட்டை முண்டை”, ”கழுத முண்டை” என வசைவதும் பதிலுக்குத் தாய் மகன்களை ”தேவடியாப் பிள்ளைகளா” என வசைவதுமாய் நாவல் ஆரம்பிக்கும். பிராமணக் குடும்பத்தின் கதை என்றாலும் கூட மிக நேரடியான மக்கள் மொழி அதாவது மிக அசலான கிராம மொழியில்தான் மொத்த நாவலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் பிராமணர் அல்லத ஜெயகாந்தன் போன்றோர் கூட தங்களின் பெரும்பாலான படைப்புகளை பிராமண மொழியில்தான் எழுதினர். நம் சூழலைப் பொருத்த வரை பிராமண மோகம் என்பது எந்த விதத்திலும் பாதிக்கப்படாது தலைமுறை தலைமுறையாய் நம்மிடையே கடத்தப்பட்டிருக்கிறது. அறிவு, கலை எனும் பாவணையில் விமர்சனமே இல்லாத அழகியல் படைப்புகள்தாம் நம் மூளைகளில் மேன்மையானவையாய் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. இதை ஒரு கும்பல் மிகத் தெளிவாகவே இன்றும் செய்து வருகிறது. அவர்களின் பெயர்கள்தாம் மாறியிருக்கின்றனவே தவிர மனநிலை என்னவோ ஒன்றுதாம்.

தமிழ் மனசாட்சியின் குரல் என தன்னை வர்ணித்துக் கொள்ளும் ஜெயமோகனுக்கு பார்ப்பான் என வசைவதும் பறையன் என வசைவதும் ஒன்றல்ல என்கிற அடிப்படை கூட  எப்படி புரியாமல் போனது என்பதுதான் திகைப்பாக இருக்கிறது. சமூக அவலம் அல்லது சமூக அறம் குறித்த விஷயங்களை ஜெயமோகன் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தே பெறுவதால் சுய சாதி விமர்னம் கொண்ட, முற்போக்குப் பேசும் பிராமணர்கள் யாராவது அவரின் பக்கத்து வீட்டிற்கு குடி போய் பிராமணர்களின் சமகால நிலையைப் புரிய வைக்க வேண்டுகிறேன். துரதிர்ஷ்டவசமாக ஆதரவு அணியிலும் எதிர் அணியிலும் ஒரே சாதியினரைக் கொண்ட சூழலாக நமது தமிழ்சூழல் இருக்கிறது. ஜெ குறிப்பிடும் இடைசாதி வெறியர்களின் குரல் கருத்துத் தளத்திற்கு இன்னும் எட்டவில்லை அல்லது அவர்களின் குரல் முற்போக்கு பிராமணர் குரல் அளவிற்குத் தெளிவாக இல்லை. தலித்களின் குரலைக் கேட்கவோ காதுகளே இல்லை.


Wednesday, December 10, 2014

சிக்கவீர ராஜேந்திரன் - 2

வீரராஜன் கோழையோ சோம்பேறியோ அல்ல. விளையாட்டிலும் துப்பாக்கி சுடுவதிலும் தேர்ச்சி பெற்றவன். சிறுவயதில் வீரராஜனுக்கு கிடைத்த அளவுகடந்த சுதந்திரம், தாயின் அரவணப்பின்மை, தந்தையின் சரியான வழிகாட்டலின்மை போன்றவைகள் அவனை முரட்டு இளைஞனாக வளர வழிவகுக்கிறது. வீரராஜனுக்காக எதையும் செய்யத் துணியும் சக விளையாட்டுத் தோழனான நொண்டிப் பசவனின் அளவு கடந்த மரியாதையும் பக்தியும் விசுவாசமும் வீரராஜனை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றன. பெண்பித்து, மதுமயக்கம் என சகல போகங்களிலும் மிக இளம் வயதிலேயே வீரராஜன் எல்லையற்றுத் திளைக்கிறான். மகனின் போக்கைக் கண்டு திகைக்கும் தந்தை குடகு வம்சத்தை சேர்ந்த துணிச்சலும் கம்பீரமும் நற்குணங்களும் கொண்ட பெண்ணான கெளரம்மாவை வீரராஜனுக்கு மணம் முடித்து வைக்கிறான். தந்தைக்குப் பிறகு அரியணை ஏறியதும் அவனின் தீய குணங்களும் இரட்டிப்பாகின்றன.

கெளரம்மா வீரராஜனின் அத்தனை மூடத்தனங்களையும் தாங்கிக் கொள்கிறாள். வீரராஜன் மீது மக்களுக்கும் மந்திரிகளுக்கும் ஏற்படும் அசெளகர்யங்களை முடிந்தமட்டில் கெளரம்மா தீர்த்து வைக்க மெனக்கெடுகிறாள். வீரராஜனுக்கு இருக்கும் ஒரே பலகீனமான மகள் பாசத்தை வைத்து ஓரிரு நற்காரியங்களை அவளால் சாதித்துக் கொள்ள முடிந்தாலும் அவனின் தீமைக் குணங்கள் ஒரு எல்லைக்கு மேல் அவளை நகரவிடாமல் செய்து விடுகிறது.

முப்பத்தைந்து வயதிலேயே வீரராஜன் மூப்படைந்து விடுகிறான். அளவு கடந்த பெண் இன்பத்தால் ஆண்மையையும் இழக்கிறான். சதா பசவனுடன் இழந்த ஆண்மையை மீட்டெடுக்க மருத்துவ வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறான். இருந்த போதிலும் கண்ணில் படும் பெண்டிரை கவர்ந்து வரச் சொல்லி அரண்மனையில் வைத்துக் கொள்கிறான். இந்த மீறல் எல்லை தாண்டி அசலூர் உயர்குடிப் பெண்கள் மீதும் பாய்கிறது. இத்தகவல் ஆங்கிலேயர் அரசிற்குப் போக வீரராஜனுக்கு சிக்கல் ஆரம்பிக்கிறது. அரண்மனை வரவு செலவை கவனித்துக் கொள்ளும் செட்டியார் குடும்பத்துப் பெண்கள் மீதும் சிக்கவீர ராஜன் தன் கவனத்தைத் திருப்ப குடகின் மிக முக்கியஸ்தர்களும் மந்திரிகளும் மன்னன் மீது அதிருப்தியும் கோபமும் அடைகின்றனர்.

தங்கை தேவம்மாவும் மைத்துனன் சென்ன பசவனும் தனக்கு எதிராக கலகம் செய்யத் துணிவதாகக் கருதி வீரராஜன் தங்கையை அரன்மணைக்குள் சிறை வைக்கிறான். மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கும் சென்ன பசவன் தகுந்த நேரம் பார்த்து வீரராஜனை பதவியிலிருந்து இறக்கிவிட்டு தன் மனைவியை ராணியாக்க முயற்சிகளை எடுக்கிறான். அதற்காக தொடர்ச்சியாக பெங்களூரை ஆளும் ஆங்கில அரசிற்கு கடிதங்களை எழுதுகிறான்.

சிக்கவீர ராஜனின் பெரியப்பாவும் அவர் மகனும் குடகின் நிலை சரியில்லை எனவும் மக்கள் துயரடைகின்றனர் எனவும் சென்ன வீரன் மூலம் கேள்விப்பட்டு குடகிற்கு  வருகின்றனர். அங்கிருக்கும் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசி மன்னனை பதவியிலிருந்து இறக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

மன்னனின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உள்ளூர் இளைஞர்கள் காவிரி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் கீழ் அணி திரள்கின்றனர்.

வீரராஜனின் தகப்பன் லிங்கராஜன் தாசி குலப் பெண்ணான பாப்பாவை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்துவிட்டு குழந்தை பிறந்ததும் அரண்மனையை விட்டு விரட்டிவிடுகிறான். அந்தக் குழந்தையின் பிஞ்சுக் காலை வளைத்து அரண்மனை சேவகர்களிடம் வளரவிடுகிறான். பல வருடங்கள் கழித்து பாப்பா பகவதியாகத் திரும்பி வருகிறாள். அரசனை வீழ்த்தி அவளின் குழந்தையை அரசனாக்க முயற்சிகளை எடுக்கிறாள்.

வீரராஜனின் தன் உண்மை ஊழியனான நொண்டி பசவனை மந்தியாக்குகிறார். இது மற்ற முக்கிய மந்திரிகளான போபண்ணாவிற்கும் லக்‌ஷ்மி நாரயணய்யாவிற்கும் பிடிக்காமல் போகிறது. அரசன் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மிக மோசமான நிலையை அடைகின்றன.

இப்படியாக எல்லாத் திசைகளில் இருந்தும் சிக்கவீர ராஜனுக்கு எதிரிகள் முளைக்கின்றனர். இதுபோன்ற சூழல்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவையும் வீழ்த்திய வெள்ளை அரசு குடகையும் மிக எளிதாக தன்னுடையதாக்கிக் கொள்கிறது. மைசூரைப் போல குடகும் வெள்ளையரிடம் போய்விடக்கூடாதென குடகின் மந்திரிகள் ராணி கெளரம்மாவை அரியணையில் ஏற்றும் முயற்சிகளும் பலிக்காமல் குடகு ஆங்கிலேயர் வசமே போகிறது.

சிக்கவீர ராஜன் தன் தங்கையின் பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற பிறகு புத்தி பேதலித்து படுக்கையில் வீழ்கிறான். அப்போதிலிருந்து கடைசியாகப் பசவன் அவன் கையாலே கொல்லப்படுவது வரை நடைபெறும் சம்பவங்கள் யாவும் பரபரப்பும் வேகமும் மிகுந்தவை. இந்தப் பகுதியை வாசித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு Downfall திரைப்படம் நினைவிற்கு வந்தது. ஹிட்லரின் கடைசிப் பத்து நாட்களை பேசும் மிகக் கச்சிதமான ஜெர்மானியப் படமது. ஹிட்லர் மெல்ல மெல்ல சுற்றி வளைக்கப்படும் சம்பவங்களும் நிகழ்வுகளும் எத்தனை சுவாரசியமும் திருப்பமும் வாய்ந்ததோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் சிக்க வீர ராஜேந்திரன் நாவலின் கடைசிப் பக்கங்கள் இருந்தன.

ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் சிக்க வீர ராஜேந்திரனுக்கும் இடைய நிகழும் கடிதப் போர் நாவலில் மிக முக்கியமான பகுதி. நாசூக்காகவும் மிக விவரமாகவும் வெள்ளையர்கள் குறு நில மன்னர்களுக்கு கொடுத்த அழுத்தம் கடிதங்களில் மிகத் துல்லியமாய் வெளிப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் தங்கள் விரோதத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் ஒரு குழுவினர் மடிகேரிக்கு வந்து விருந்தினர்களாகத் தங்கி விட்டுப் போவார்கள். ஆங்கிலப் பெண்களுக்கு இந்திய அணிகலன்கள் மீது பெரும் விருப்பம் இருந்தது. ராஜ பரம்பரை நகைகளை சன்மானம் பெறுவதற்காக மன்னர்களுக்கு முன் நடனமாடவும் உறவு கொள்ளவும் தயாராக இருந்தனர். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் நிகழ்வுகளும் நடந்தேறியிருப்பதை சம்பவங்களாக ஆசிரியர் விவரித்திருப்பார்.
0

நாவலில் நொண்டிப் பசவன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறுவயதில் சக விளையாட்டுத் தோழர்கள் அவனை வெறுத்து ஒதுக்க வீரராஜன் மட்டும் பசவனைத் தன்னோடு சேர்த்துக் கொள்வான். அந்த நன்றியும் விசுவாசமும் பசவனுக்கு சாகும் வரை தொடரும். வீரராஜன் சிறைபிடிக்கப்படும்போது தன்னுடைய அவசர மூடத்தனத்தால் பசவன்  தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக தவறாகப் புரிந்து கொண்டு அவனை சுட்டு வீழ்த்தி விடுவான். ஆனாலும் அரசனுக்கு ஏதும் நேரக்கூடாது என்ற எண்ணத்தோடே பசவன் மடிந்து போவான். பசவனுக்கு  அவன் பிறப்புப் பின்னணி தெரியாமலே போய்விடும். நாய்களையும் மிருகங்களையும் வளர்ப்பவன். பிறப்பால் நாவிதன் என்றெல்லாம் மற்ற மந்திரிமார்களால் இகழப்பட்டவன், அரசன் லிங்கராஜனின் மகன் தான் என்பது அவன் இறப்பிற்குப் பிறகே தெரியவரும். 

வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு புறமும் தியாகமும் நன்றிவிசுவாசமும் ஒருபுறமுமாய் ஏராளமான கதாபாத்திரங்கள் நாவல் நெடுகப் பயணித்திருக்கின்றன. தொட்டவீர ராஜனின் நண்பரான கிழவர் உத்தய்ய தக்கன், சென்ன பசவனுக்காக உயிரை விடும் சோமன், ராணி கெளரம்மாஜி, தீட்சிதர், மந்திரிகள் போபண்ணா, லக்‌ஷ்மி நாரயணய்யா, உத்தய்யன், தொட்டவ்வா என விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் உதாரணமாய் பல கதாபாத்திரங்கள் மேன்மையாய் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ராணி கெளரம்மாஜிக்கு அரசாள எல்லாத் தகுதியுமிருந்தும் கணவனை பதவியிலிருந்து இறக்கிவிட்டு அந்த இடத்தில் அமர மாட்டேன் என தீர்க்கமாய் மறுத்துவிடுகிறாள். ராஜ வாழ்க்கை போனபின்பும் காசியில் தொடர்ச்சியாய் நோன்பிருந்து பூஜைகள் செய்து உயிரை விடுகிறாள். கெளரம்மாஜி குடகின் மனசாட்சியாக குடகர்களின் மேன்மை குணங்களின் ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

ஆங்கிலேயர் குடகை கைப்பற்றிய பிறகு பனாரஸில் சில காலம் வசிக்கும் வீரராஜன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதன் மூலம் வெள்ளையரின் நன்மதிப்பை சம்பாதித்து மகளை ராணியாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். அதுவும் தோல்வியடையவே இங்கிலாந்திற்கு செல்கிறான். அங்கு ராஜனின் மகள் ஒரு ஆங்கில அதிகாரியை திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்குப் பிறந்த பெண் இந்தியா வந்து இந்த நாவலை எழுதும் ஆசிரியரிடம் பின் கதைகளைக் கூறுவதாக நாவல் நிறைவடைகிறது.


0




Tuesday, December 9, 2014

சிக்கவீர ராஜேந்திரன் - 1

சிக்கவீர ராஜேந்திரனை இவ்வளவு தாமதமாக வாசித்ததை எண்ணி வருந்தினேன். குடகுப் பகுதிக்கு செல்வதற்கு முன்னால் இந்நாவலை வாசித்திருந்தால் அந்தப் பிரதேசங்களை இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும். மடிகேரியில் எஞ்சியிருக்கும் நினைவுச் சின்னங்களையும் தேடிப் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். போகட்டும். அடுத்த பயணத்திலாவது குடகுப் பகுதியை முழுமையாய் பார்க்க வேண்டும். நாவலில் குறிப்பிட்டிருக்கும் இடங்களை குறிப்பாய் மடிகேரி, நால்கு நாடு மற்றும் அப்பங்குள அரண்மனைகளை பார்த்து வர வேண்டும். 

சிக்கவீர ராஜேந்திரன் நாவல் ஸ்ரீநிவாச என்கிற மாஸ்தி வெங்கடேச அய்யங்காரால் 1956 இல் கன்னடத்தில் எழுதப்பட்டது. வரலாற்றுப் புனைவு என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இந்நாவலைச் சொல்லலாம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் நான்லீனியர், மெட்டா போன்ற உத்திகளை மிக அசாதரணமாக நாவலில் கையாண்டிருக்கிறார். நாவலின் வடிவமும், எழுதப்பட்ட விதமும், மிகச் சாதாரணமான பேச்சு மொழியும், வாசிப்பின்பத்தின் உச்சிக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன. நாவலின் சரளமான தமிழாக்கம் ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கிறோம் என்கிற கவனமே ஏற்படாதவாறு அத்தனை நேர்த்தியாக இருந்தது. 
ஹேமா ஆனந்ததீர்த்தன் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 

ஹேமா ஆனந்ததீர்த்தன் பலவருடங்களுக்கு முன்பு மாத நாவல்களை மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு சில நாவல்களை வாசித்த நினைவும் இருக்கிறது. சிக்கவீர ராஜேந்திரனை மொழிபெயர்த்ததின் மூலம் அவரின் தமிழிலக்கியப் பங்களிப்பு மிக முக்கியமானதாகிறது.

சிக்கவீர ராஜேந்திரன் நாவலுக்காக மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் ஞானபீட விருதைப் பெற்றார். கன்னடத்தின் ஆஸ்தியாகக் கருதப்படும் மாஸ்தி குறித்து விக்கியில் சில சுவாரசியமான தகவல்களைப் பார்த்தேன். மொத்தம் 123 நூல்களை கன்னடத்திலும் 17 நூல்களை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். தன்னுடைய 95 ஆவது வயதில் பிறந்த தினத்தன்றே இயற்கை எய்தியிருக்கிறார் (ஜூன் 06,1891 – ஜூன் 06 1986) புதுக்கன்னடச் சிறுகதை வடிவம் மாஸ்தி வெங்கடேச அய்யங்காருக்காகவே காத்துக் கொண்டிருந்ததாக விமர்சகர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.

குடகின் கடைசிக் குறுநில மன்னனான சிக்கவீர ராஜேந்திரனின் வாழ்வைத் (பெரும்பாலும் உண்மைச் சம்பவங்கள்) தொகுத்து எழுதப்பட்ட நாவல்தான் இது. இந்நாவலில் ஆசிரியரும் கதாபாத்திரமாக வருகிறார். சிக்கவீர ராஜேந்திரனின் மகளைச் சந்தித்தது, அவள் மூலமாய் ஆவணங்களைப் பெற்றது, மொத்தமாய் திரட்டிய தகவல்களைக் கொண்டு இதை ஒரு நாவலாய் எழுத ஆரம்பிப்பது என நாவல் எழுதப்பட்ட கதையை நாவலுக்கு உள்ளேயே கொண்டுவந்திருக்கிறார். மேலும் கதை சொல்லப்படும் முறை மரபான ஆரம்பம் முதல் இறுதி வரையாய் இல்லாது, பிரச்சினைகள் துவங்கும் காலகட்டத்தில் இருந்து ஆரம்பித்து இடை இடையே மூன்று தலைமுறை கதையைச் சொல்லி, பல புதிர் சுவாரசியங்களை உள்நுழைத்து, பின்பு அவை ஒவ்வொன்றாய் அவிழ்வதாய் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வடிவம் சம காலத்திலும் புத்தம் புது வடிவமாகப் போற்றப்படுவது. இதை அறுபது வருடங்களுக்கு முன்பு மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் பயன்படுத்தியிருப்பது என்னை வியப்பிலாழ்த்தியது.

தென் கர்நாடகத்தின் மிகச் செழிப்பான பகுதியான குடகு காவிரியின் பிறப்பிடம். காவிரி மட்டுமில்லாது பத்திற்கும் மேற்பட்ட ஏராளமான சிற்றாறுகள் பாயும் மலைப் பகுதி. இங்கு வசிப்பவர்கள் குடகர்கள் எனப்பட்டனர். ஆனாலும் எந்த ஒரு காலத்திலும் இப்பகுதியை குடகர்கள் அரசாண்டதாக வரலாறு கிடையாது. குடகர்கள் அரச பதவியை வலிந்தே ஏற்காமல் இருந்ததாக நாவலில் வரும் மந்திரியான போபண்ணா கதாபாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மிக செழிப்பான பகுதியான குடகு, பக்கத்து அரசுகளான மலையாளம், மைசூர், மங்களூர் போன்றவற்றின் பொறாமையைப் பெற்றிருந்ததாலும் மலைக் காடென்பதால் குடகை வெற்றிக் கொள்வது சிரமமாக இருந்தது. கதம்ப, கங்க, சோழ, சாளுக்கிய, ஹேய்சால வம்சங்கள் ஆண்டபிறகு கேரி அரச வம்சம் இருநூறு வருடங்கள் குடகை ஆட்சி புரிந்தது. கடைசியாக உடையார்களின் அரசாட்சி இருந்தது. அதன் கடைசி மன்னன் சிக்கவீர ராஜேந்திரன் குடகுப் பகுதி ஆங்கிலேயர் வசம் போக காரணமாக இருந்தான். அந்த சம்பவங்களைத்தான் இந்நாவல் பேசுகிறது. 

வரலாற்று நாவல்கள் இதுவரை நம் மீது படிய வைத்திருக்கும் அத்தனை மரபு மிகைகளையும் இந்நாவல் அடித்து நொறுக்கியிருக்கிறது. சதா போகத்தில் திளைக்கும் முரட்டுக் குடிகார அரசனை பார்க்க மிக நெருக்கமாக இருந்தது. நம்முடைய பெரும்பாலான வரலாற்று நாவல்கள் மிகையான ஜோடனைகள் நிறைந்தவை. அதிகாரச் சார்பு கொண்டவை. மன்னனை வீரதீரபராக்கிரம் பொருந்திய சாகச நாயகனாக மட்டுமே நமக்குச் சொல்லிக் கொண்டிருந்தவை. தமிழில் இந்தப் போக்கு அலுப்பூட்டும் அளவிற்கு எழுதப்பட்டு சமகாலத்தில் மட்டுமல்லாது என்றென்றைக்கும் போற்றப்படும் தமிழ் அடையாளங்களாக உருவாக்கப்பட்டன.  

பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும் நாவல்கள் மட்டுமே இந்த அயற்சியூட்டும் வரலாற்று நாவல் பொய்மைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றின. ஆனாலும் இவ்விரண்டு நாவல்களும் சிக்கவீர ராஜேந்திரன் நாவல் தந்த களிப்பைத் தரவில்லை. வரலாற்றுப் புனைவை இப்படி நேரடியான மக்கள் மொழியில் எழுத முடியும் அதிலேயும் மன்னன் என்பவன் மக்களில் ஒருவன் தான். அவனும் இன்னொரு மனிதனைப் போலவேதான் இருப்பான் - பேசுவான் - நடந்து கொள்வான். சதா கெட்டவார்த்தைகளை அள்ளி வீசுவான் என்பதெல்லாம் நமக்குப்/ எனக்குப் புதிதுதான். 

தொட்ட வீர ராஜேந்திரன் இந்த வம்சத்தின் மிகச் சிறந்த அரசனாகப் போற்றப்பட்டான். குடகு மக்களின் விருப்பத்தையும் அன்பையும் பெற்ற ஒரே அரசனாக தொட்டவீர ராஜேந்திரனே கருதப்பட்டான். சூழ்ச்சியால் அவனிற்குப் பிறகு ஆட்சிக்கு வரும் தம்பி லிங்கராஜன் மற்றும் லிங்கராஜனின் மகனாகிய சிக்கவீர ராஜேந்திரன் ஆகிய இம்மூன்று தலைமுறைக் காலத்தின் வரலாறு சுருக்கமாகவும் சிக்கவீர ராஜேந்திரனின் வீழ்ச்சி குறித்து விலாவரியாகவும் நாவலில் பேசப்படுகிறது.

வீழும் காலம் என்பது அதிகார வாழ்வில் மிக முக்கியமான பகுதி. ஒரு வம்சம் வீழ்ச்சியடையும்போது மக்கள் உடனடியாய் அந்த வீழ்ச்சியின் பின்புலத்தை அறிந்து கொள்ள ஆர்வமடைவார்கள். அதிகாரம் தன் தரைத்தளத்திற்குக் கீழே சாமான்யர்களால் நெருங்க முடியாத ஏராளமான ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. இரகசியங்களின் மீதான விருப்பம் நம்மை கதைகளை எழுதவும் வாசிக்கவும் தூண்டுகிறது. அப்படித்தான் பலப்பல வரலாற்றுப் புனைவுகள் கதைகளாக எழுதப்பட்டன. மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் இன்னொரு நாவலான ”சென்னப்பசவ நாயக” நாவலும் ஷிமோகா பகுதியின் கடைசி நாயக்க மன்னின் வீழ்ச்சியைத்தான் பேசுகிறது. இந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.கண்டிப்பாக சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். மாஸ்தி தன் சிறுகதைகளுக்காகத்தான் அதிகம் பேசப்பட்டார்.

-    
-  மேலும்


Featured Post

test

 test