Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Thursday, January 1, 2015

துபாய் சர்வதேசத் திரைப்பட விழா 2014 - 1

பதினோராவது துபாய் சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் பத்தாம் தேதி துவங்கி பதினேழாம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் நூற்றுப் பதினெட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வழக்கமாய் Arabian Nights, Gulf Voices, Celebration of Indian Cinema, Cinema of Asia Africa, Cinema for Children & Cinema of the World எனும் உப பிரிவுகளில் திரைப்படங்கள் தொகுக்கப்படும். இந்த வருடம் Celebration of Indian Cinema – Cinema of Asia Africa ஆகிய இரண்டு பிரிவுகளும் இல்லை. மொத்தமாய் இந்திய ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படங்களை Cinema of the World எனும் ஒரே பிரிவில் கொண்டுவந்து விட்டனர். இதைத் தவிர்த்து உள்ளூர் படைப்புகளுக்கென முஹர் பிரிவும் உண்டு. இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூர் படைப்புகளுக்கு மொத்த பரிசுத் தொகையான 575,000 யு.எஸ் டாலர்கள் பிரித்து அளிக்கப்படும். துபாய் திரைப்பட விழாவில் மத்திய கிழக்கின் திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்படும். மற்ற திரைப்பட விழாக்களில் இல்லாத அளவிற்கு பிராந்தியம் சார்ந்த படைப்புகள் அதிகம் இடம்பெறும்.

இவ்வருடப் பட்டியலில் நான் பெரிதும் எதிர்பார்த்த துருக்கி இயக்குனர் நூரி பில்ஜெ ஜிலானின் Winter Sleep திரைப்படம் இடம்பெறவில்லை. Winter sleep கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதைப் பெற்றிருந்ததாலும் சமீபமாய் பார்த்திருந்த Three monkeys, distant மற்றும் once upon a time in Anatolia ஆகிய நூரியின் திரைப்படங்கள் தந்த புத்துணர்வாலும் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க ஆர்வமாக இருந்தேன். இதை சரிகட்டும் வகையில் எனக்கு மிகப்பிடித்த இயக்குனரான அலெஹாந்த்ரோ யொன்ஸேல்ஸ் இனாரித்து வின் BIRDMAN திரைப்படம் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. கூடுதலாக தமிழ் திரைப்படமான காக்கா முட்டையும் பார்க்க முடிந்தது. இவை தவிர இடம்பெற்றிருந்த மற்ற படங்களின் மீது ஈர்ப்பு வரவில்லை. ஏனோ இந்த வருடம் மத்தியக் கிழக்கின் திரைப்படங்களை காணும் ஆர்வமும் வரவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு குர்து படவிழா என்கிற உபதலைப்பில் குர்திஸ்தானைக் களமாகக் கொண்ட திரைப்படங்களை திரையிட்டார்கள். அதில் சில படங்களைப் பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். மேலும் இரானிய யதார்த்த சினிமாக்களின் மீதும் சமீபமாய் அலுப்பு படர்ந்திருக்கிறது. ஓரிரண்டு எகிப்து மற்றும் லெபனான் படங்களையும் சென்ற வருடங்களில் கடனே என்று பார்த்த அனுபவமும் இருப்பதால். இவ்விழாவில் என்னுடைய தேர்வு மிகக் குறைவானதாக இருந்தது. தேர்ந்தெடுத்த இரண்டு படங்களின் தலைப்புகளும் பறவை சம்பந்தமாய் அமைந்தது மிக யதேச்சையான ஒன்றுதான்.
மேலும்

Sunday, April 1, 2012

அ.முத்து கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

நண்பர்களுக்கு,

எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான அ.முத்து கிருஷ்ணன் துபாய் வருகிறார். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயமாக்கல் என பல்வேறு தளங்களில் எழுதியும், பேசியும் வரும் அ.முத்துகிருஷ்ணன் ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து இந்தியாவெங்கும் சுற்றிவருபவர். கடந்த ஆண்டு இவர் புதுதில்லியில் இருந்து தரை வழியாக 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பாலஸ்தீனத்தின் நிலையை நேரில் கண்டு பதிவு செய்திருக்கிறார். அவருடனான கலந்துரையாடல் ஒன்றை துபாயில் ஏற்பாடு செய்திருக்கிறோம். நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அழைக்கிறேன்.

இடம் : சிவ் ஸ்டார் பவன் உணவம், கராமா, துபாய்

நேரம் : ஏப்ரல் 03 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 7 மணி


தங்களுடைய வருகையை கீழ்காணும் அலைபேசி எண்ணுக்கு உறுதிபடுத்தினால் இரவு உணவு ஏற்பாடு செய்ய உதவியாக இருக்கும்.

அசோக் 050 9142203
அய்யனார் 055 4216250





Wednesday, February 23, 2011

ஐந்தாவது வருடமும் வெட்டுப் புலியும்

இன்று இரயிலில் வரும்போதுதான் நினைத்துக் கொண்டேன். இந்தப் பக்கத்தில் எழுத ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. வருடக் கணக்குகளில் பெரிதாய் ஒன்றும் ஆர்வமில்லையெனினும் ஒரு சின்ன உற்சாகம் தொற்றிக் கொண்டதென்னவோ உண்மை. கூடவே தொடர்ச்சியாக வலைப் பக்கத்தில் எழுதினால்தான் என்ன? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த உற்சாகத்தை இப்படியே விடப்போவதில்லை. ’இன்று காலையில் ஒரு பிகரைப் பார்த்தேன்’ என்றாவது இனிமேல் எழுதித் தொலைக்க வேண்டுமெனத் தீர்மானம் எடுத்திருக்கிறேன். சமீபமாய் ஒரு வெற்றிடம் உண்டாவதையும் என்னால் உணரமுடிகிறது. வாழ்வின் மீதான சலிப்புகள், எப்போதும் தொடந்து கொண்டிருப்பவைதாம் என்றாலும் சமீபமாய் அதிக வெற்றிடத்தை உள்ளுக்குள் உணர்கிறேன். தொடர்ச்சியாய் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. வாசிப்பதும், திரைப்படங்கள் பார்ப்பதும் தொடர்ந்து கொண்டுதாம் இருக்கின்றனவென்றாலும் இவை யாவும் எனக்குப் போதுமானதாய் இல்லை. எதையாவது கொண்டு நிரப்புவதற்கு பதிலாய் சொற்களைக் கொண்டு நிரப்பினால்தான் என்ன? என்கிற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறேன்.

இங்குத் தொடர்ந்து எழுத முடியாமல் போவதற்கு கூகுல் பஸ்ஸும் ஒரு காரணம். அலுவலகத்தில் இணைய வசதி இல்லாதது இந்தச் சோம்பலுக்கு இன்னொரு கவசம். கூகுலை மட்டும் தில்லாலங்கடி வேலைகள் செய்து அலுவலகத்தில் வரவழைத்து விட்டதால் ரீடரில் படித்தும், பஸ்ஸில் மொக்கை போட்டுமாய் தற்காலிகத் தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறேன். வலைப் பக்கத்தை விட பஸ்ஸில் உரையாடுவது வசதியானது. உடனுக்குடன் பிறரிடம் பேசிக்கொள்ள முடியுமென்பதால் அந்த வெளியிலேயே சில வருடங்கள் தேங்கிப் போனது. அங்கு நேரம் மின்னலைப் போல மறைகிறதென்பதும், ஜெயமோகனைத் தவிர்த்துப் பேச்சு வேறெங்கும் நகர்வதில்லை என்பதும் என் சமீபத்திய சலிப்பிற்கு காரணங்களாக இருக்கின்றன. இனி, காலையில் எழுந்து கக்கூஸ் போவது நீங்கலாக எல்லாவற்றையும் இங்கு எழுதித் தொலைக்கலாம் என்றிருக்கிறேன். படைப்பிற்கு மட்டுமே தளம் என்பதின் மீது நம்பிக்கை சற்றுத் தேய்வடைந்திருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாய் ஓட்டுனர் பயிற்சி வகுப்பிற்குச் சென்று கொண்டிருக்கிறேன். இங்கு வந்து ஐந்தாண்டுகள் முடியப்போகிறதென்றாலும் வாகனம் ஓட்டுவதின் மீது பெரிதாய் விருப்பம் எதுவும் இல்லாமல்தான் இருந்தது. ஐந்தாண்டுகளில் மூட்டை முடிச்சைக் கட்டிவிடவேண்டும் என்கிற திட்டங்களோடுதான் இந்த வளைகுடா அலிபாபாக் குகைக்குள் நுழைந்தேன். பழகிவிட்ட சோம்பல் வாழ்வு, இந்திய வாழ்வைச் சற்று அச்சத்தோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இடையில் மிகுந்த பொறுப்புகள், அடுத்த ஐந்தாண்டுகளை நீட்டிக்கச் செய்திருப்பதால் வாகனத் தேவை நிர்பந்தமாகி இருக்கிறது. துபாயில் ஓட்டுனர் உரிமம் வாங்குவது குதிரைக் கொம்புதான். கேள்விப்பட்ட, நேரடியாய் பார்த்த நண்பர்களின் கண்ணீர் கதைகள் என்னை அந்த முடிவிற்குத் தள்ளாமல் காப்பாற்றிக் கொண்டு வந்தது. இனி பொறுப்பதில்லை என்கிற முடிவுகளோடு புத்தாண்டின் முதல் வாரத்திலிருந்து கஜினி முகமதுவாய் உருமாற்றம் கொண்டிருக்கிறேன். இந்த வாரத்தோடு வகுப்புகள் நிறைவடைகின்றன. அடுத்த வாரத்திலிருந்து படையெடுப்பு ஆரம்பம். சொல்ல வந்தது, வகுப்பின் நிமித்தமாக தினம் இரண்டு மணி நேரம் பயணிக்கிறேன். சற்றும் அலுங்காத, குலுங்காத, நெரிசலில்லாத பயணமாய் இருப்பதால் நிறைய வாசிக்கவும், பாடல்களைக் கேட்கவும் முடிகிறது. கூடவே நிறைய முகங்களைத் தொடர்ந்து ஒரே இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், தினம் பார்க்க முடிவது சின்னதொரு சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறது. இரயில் பயணம் முடித்து, அடுத்த அரை மணி நேரம் பேருந்துப் பயணம். சொல்லி வைத்தாற்போல் ஒரே பேருந்தில், ஒரே இருக்கையில் தினம் அமர்கிறேன். இந்த ஒத்திசைவு சில நாட்களில் என்னை ஆச்சர்யப்படுத்தும். ஓரிரு நாட்கள் தவறுமென்றாலும் பெரும்பாலும் இந்த இசைவு பொருந்தித்தான் போகிறது. சரியாய் ஐந்து நாற்பதிலிருந்து, ஐந்து அம்பது வரை சூரியன் மறைவதைப் பார்ப்பதும் வழக்கமாகி இருக்கிறது. அலுவலகத்திற்குச் சமீபமான இரயில் நிலையத்திலிருந்து சூரியன் அமிழ்வதை அந்த நாளின் முதல் சிகரெட்டோடு பார்த்து விடுகிறேன்.
0
சமீபத்தில் படித்த சுவாரசியமான தமிழ் நாவல் தமிழ்மகனின் வெட்டுப் புலி. இரண்டே நாளில் படித்து முடித்த வேகம், நாவலில் இருக்கிறது. திராவிடத்தின் மீதிருக்கும் என் விருப்பமும், பெரியார் சார்புத் தன்மையும் இந்த நாவலை விருப்பத்தோடு படிக்க உதவியிருக்கலாம். தீப்பெட்டி அட்டையிலிருக்கும் சித்திரத்தின் பின்புலம் தேடிப் பயணிப்பது என்பது எத்தனை சுவாரசியமான ஒன் லைனர்! ஒரு நாவல் இம்மாதிரிப் புள்ளியில் துவங்குவது பெரும்பாலான வாசகர்களை ஈர்க்கும். நாவல் உத்தியளவில் இது பிரமாதமான அனுகுமுறை. சரியானத் தகவல்களை, தமிழகத்தின் வரலாறை, புனைவோடு இணைத்துச் சொல்லியிருப்பது இந்த நாவலின் இன்னுமொரு சிறப்பு. புனைவும் வரலாறும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருப்பதாகத்தான் உணர்ந்தேன். எண்பதுகளில் நாவல் தடதடவென முடியும் எல்லையை நோக்கி நகர்ந்தாலும் இதற்கு மேல் விலாவரியாக எழுதத் தேவையில்லை என்பதே என் எண்ணமாகவும் இருக்கிறது.




இலட்சுமண ரெட்டி -குணவதி, தியாகராசன் - ஹேமலதா இவர்களின் பகுதி என்னை வெகுவாகத் தொந்தரவு செய்தது. குறிப்பாய் ஹேமலதா கதாபாத்திரத்தின் கடைசி கால மாற்றங்களும் அதை தியாகராசன் எதிர்கொள்வதும் மீண்டெழுதலின் யதார்த்தம். மேலதிகமாய் இந்த நாவல் முன் வைக்கும் கொள்கைகளின் தேய்வு என்னை அதிர்ச்சியடைவே வைத்தது. ஒரு மாற்று இயக்கமும் அதன் தலைவர்களும் நாளையடைவில் எவ்வாறு பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளத் தேய்வடைகிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் சுயலாபம், குடும்ப நலன் என எல்லாப் புள்ளிகளையும் நேரடியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. அண்ணாவிலிருந்து அழகிரி வரைக்குமாய் ஒருவரையும் விடாமல் விமர்சித்திருக்கிறது. தலைவர்களின் வாழ்வைத் தவிர்த்து சாமான்யர்களின் நம்பிக்கைகள், கொள்கைப் பிடிப்புகள் நிறமிழந்து போவதையும் இந்த நாவல் சரியாகவே பதிவித்திருக்கிறது. தீவிரக் கடவுள் மறுப்பாளனான தியாகராசன் ஒரு கட்டத்தில் அன்னையைத் தஞ்சமடைவது எத்தனை பெரிய அவலம்! தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் இரண்டறக் கலந்தது. அதையும் நாவல் ஒரு பிடிபிடித்திருக்கிறது. பாலச்சந்தரிலிருந்து ரஜினிகாந்த், மணிரத்னம் என எவரையும் விட்டுவிடாத சரித்தன்மையும் நாவலில் இருக்கிறது. திராவிடப் பின்புலத்திலிருந்து வந்த பத்திரிக்கையாளன் நடிகையின் பேட்டிக்கு பணம் பெறும் நிலைக்குத் தள்ளப்படும் காலத் தேய்வையும், இயக்கத்தை உருவாக்கியத் தலைவர்களின் சம காலத் தோற்றத்தையும் சரியாய் பதிவித்திருக்கிறார். புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு சமகால அரசியலைக் கடுமையாய் விமர்சிப்பதும் இந்த நாவல் முழுக்க நிகழ்ந்திருக்கிறது. இந்திரா,அண்ணா,எம்ஜிஆ​ர், கருணாநிதி என எல்லோர் மீதும் கதையில் வரும் பாத்திரங்கள் கடுமையான விமர்சனங்களை உரையாடலாகச் சொல்லிவிட்டுப் போகின்றன.நெருக்கடிகால மிசாக் கடுமைகளுக்கு காரணமாக இருந்த இந்திராவுடன் அரசியல் கூட்டு வைப்பதை வேதனையாய் பகிர்ந்திருக்கும் ஒரு பத்தி, அரசியல் சதுரங்கத்தின் சாணக்ய புத்தியைச் சரியாய் துகிலுரித்திருந்தது. போகிற போக்கில் கதாபாத்திரங்களின் உரையாடலைத் துணைகொண்டு, ஸ்டாலினின் நடத்தைக் கிசுகிசுக்களைக் குறித்தும் இவர் சொல்லிச் சென்றிருப்பது துணிச்சலானதுதான்.

”அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது உண்மையா எந்று ஒரு முறைக் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை எவண்டீ சொன்னான் உனுக்கு கண்டவன் சொல்றதயெல்லாம் நம்பிக்கிட்டு? அழகான பொண்ணு ரோட்டுல போனா கார்ல தூக்கிப் போட்டுகினு போய்டுவாராமே? ( பக்கம் 326)

எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு. நன்றி தமிழ்மகன்.
0

வெகுநாட்களாகப் பாதிப் படித்துக் கிடப்பிலிருந்த J.M.Coetzee யின் Disgrace ஐப் படித்து முடித்தேன். அடிக்கசப்பு என்பார்களே அந்த மனநிலைதான் வெகுநேரம் இருந்தது. புதிதாய் படிக்க ஆரம்பித்திருக்கும் Haruki Murakami ஆச்சர்யப்படுத்துகிறார். Kafka on the Shore நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் இப்போது சொல்ல விரும்புவது ஒன்றுதான். விவரணை விவரணை என்கிறீர்களே இதுவல்லவா விவரணை? அபாரமான விவரணைகளாலும், ஆழமான அலைக்கழிப்புகளாலும், மனிதர், மிருகம் என எந்தப் பாராபட்சமுமில்லாமல் எல்லா உயிர்களுக்குள்ளும் ஆசிரியர் ஊடுபாய்ந்திருக்கிறார். பூனைகளின் உரையாடல் பகுதிகளைப் படிக்கும்போது வியப்பு மேலிட்டது. முழுவதுமாய் படித்துவிட்டு பகிர்கிறேன்.

Thursday, December 16, 2010

கரிசனமும் யதார்த்த இம்சையும் - துபாய் திரைப்பட விழா


ஏழாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில்கடந்த பனிரெண்டாம் தேதி துவங்கி வரும் பத்தொன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. 57 நாடுகளிலிருந்து 153 படங்கள் திரையிடப்படுகின்றன. 127 hours, the kings speech போன்ற புதிய படங்கள் நேரடியாய் திரையிடப்படுகின்றன. இந்தியப் படங்களாக நம் ஊரிலிருந்து மைனா திரையிடப்படுகிறது. மலையாளத்தில் நயன் தாரா நடிப்பில், ஒரே கடல் இயக்குனர் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் எலெக்ட்ரா, இந்தியில் அபர்ணா சென்னின் இயக்கத்தில் An Unfinished Letter போன்றவை திரையிடப்படுகின்றன.

திரைப்பட விழாக்களில் நான் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களையும் எளிதில் பார்க்க முடிகிற படங்களையும் தவிர்த்து விடுவேன். புதிய பிரதேசங்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள உதவும் படங்களை பார்ப்பதற்கே விருப்பமாக இருக்கும். அரேபிய குறும்படங்கள், அரேபிய – பிரான்சு, அரேபிய - ஆப்பிரிக்க கலாச்சார தழுவல்களில் உருவாக்கப்படும் படங்களின் மூலம் மிகவும் புதிய நிலப் பிரதேசங்களின் வாழ்வைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நேற்று மாலை MIN YE ( Tell me Who you are) என்கிற ஆப்பிரிக்கத் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஆப்பிரிக்காவின் மாலி பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் படமிது. இப்படத்தின் இயக்குனர் Souleymane Cisse ஏற்கனவே சர்வதேச அளவில் கவனம் பெற்றவர். கான் திரைப்பட விழாவில் சிறந்த வெளி நாட்டுப் படங்களுக்கான பிரிவில் இவரது முந்தைய இரண்டு படங்கள் தேர்வாகி இருக்கின்றன. MIN YE ( Who you are) எனும் இந்தப் படம் ஆப்பிரிக்க இஸ்லாம் சூழலில் இயங்கும் மத்தியதர வர்க்க குடும்பங்களின் கதையைப் பேசுகிறது. மதம், கலாச்சாரம் இவைகள் பெண்களுக்கு தரும் மன ரீதியிலான அழுத்தங்களையும் அதிலிருந்து மீள விரும்பும் பெண்களின் விருப்பத்தையும் இப்படம் களமாகக் கொண்டிருக்கிறது, அவ்விருப்பங்களின் தோல்வி எவ்வாறு பொய்களாகவும் துரோகங்களாகவும் வடிவம் கொள்கின்றன என்பதையும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.
இந்தப் பகுதிகளில் ஆண்கள் வசதிக் கேற்ப நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சட்டமும் மதமும் அதற்குப் பூரணமாய் சுதந்திரம் அளிக்கிறது. கணவனை வேறொரு பெண்ணிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத பெண்களின் அகப் போராட்டங்களையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. உயர் கல்வி பயின்று நல்ல பதவியில் இருக்கும் பெண்களும் இந்த இரண்டாம் /மூன்றாம் தார சிக்கலிலிருந்து தப்ப முடியாது. மருத்துவம் பயின்று நல்லதொரு பணியில் இருக்கும் மிமி என்கிற கதாபாத்திரத்தின் மூலமாய் பெண்களின் ஆசைகள், இயலாமைகள், துரோகங்கள் என எல்லா நிலைகளும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள் இவைகளுக்கான பின்புலமாய் இருக்கின்றன என்பதுதாம் மறைபொருளாக படத்தில் பேசப்படுகிறது.

படத்தில் மனதைத் தொடும் எந்த ஒரு விஷயமும் கிடையாது. அடூர் கோபால கிருஷ்ணன்களை விட படு மோசமான திரையாக்கம். படம் முழுக்க தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பாணியில்தான் இயக்கப்பட்டிருந்தது. சினிமா மொழி, திரைக்கதை யுக்தி, பார்வையாளனை கட்டிப் போடுதல் போன்ற எந்த மெனக்கெடலும் திரைப்படத்தில் இல்லை. மேலதிகமாய் படத்தில் எந்த விதமான அரசியல் தன்மையும் இல்லை. ஆனாலும் இந்தப் படம் நேரடியாய் மக்களின் வாழ்வைப் பேசுகிறது. ஒரு சாதாரண குடும்பக் கதை. அதை யதார்த்தமாகவும் சிக்கனமாகவும் படமாக்கி இருக்கிறார்கள். நடிகர்களின் முழு நடிப்புத் திறமைதான் படத்தின் சிலாகிக்கும் அம்சமாக இருக்கிறது. மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் இருந்து திரைப்படங்கள் இப்படித்தான் படமாக்கப்படுகின்றன. அவர்கள் எந்த ஜோடனைகளையும் நம்புவதில்லை. மாறாய் தங்களின் கலாச்சார சிக்கல்களை, வாழ்வின் இயலாமைகளை, கொண்டாட்டங்களை ஓரளவு நேர்மையுடன் பதிவு செய்து விட முனைகிறார்கள்.

இந்திய சூழலில் பத்து, இருபது வருடங்களுக்கு முன்னால் கலைப்படங்கள் இப்படித்தான் வந்தன. கேமராவை கொண்டு போய் ஒரு இடத்தில் வைத்துவிட்டு இயக்குனரும் கேமிராமேனும் டீ குடிக்கப் போய்விட்டார்களா? என அஞ்சும் காட்சியமைப்புகள்தாம் இந்திய சினிமாக்களில் நிறைந்திருக்கின்றன. இம்மாதிரியான அயர வைக்கும் காட்சிகளுக்குப் பெயர் போனவர் அடூர் கோபாலகிருஷ்ணன். சமீபமாய் அவரது நிழல் குத்து படம் பார்த்து, அயர்ந்தேன். கதை மிகவும் முக்கியமானதுதான். எவரும் தொடத் தயங்கும் தளம்தான். இருப்பினும் அதை யதார்த்தமாய் பதிவு செய்வதாய் சொல்லி அயர வைப்பதுதான் யதார்த்த சினிமாக்களின் தோல்வியாக இருக்கிறது. உதாரணத்திற்கு நிழல் குத்து படத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்ப்போம். தூரத்திலிருந்து புள்ளியாய் ஒரு மாட்டு வண்டி தெரியும். மெல்ல அவ்வண்டி கேமரா வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி வரும் வரும் வரும் வரும்.. கேமிரா அசையாது ஒரே கோணத்தில் இருக்கும். பொழுதும் போகும்.. போகும்... அதிலிருந்து மூவர் இறங்குவர். இருள் மெல்லக் கவிய ஆரம்பிக்கும். ராந்தல் விளக்கைப் பொருத்துவர். பின்பு மெல்ல இருளுக்காய் நடக்க ஆரம்பிப்பர். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கேமிரா ஒரே இடத்தில் அசையாது இருக்கும். சில நேரங்களில் கொட்டாவியோடு கொலை வெறியும் சேர்ந்து கொள்ளும் அளவிற்கு இந்த யதார்த்தத்தை நம்மவர்கள் சாறு பிழிந்திருக்கிறார்கள். தூய சினிமா என்பது இதுவல்ல. சினிமாத் தொழில் நுட்பம் வளர்ந்திராத கருப்பு வெள்ளை காலகட்டங்களிலேயே பிரெஞ்சு புதிய அலை சினிமாக்கள் காட்சி மொழியின் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. சொல்லப்போனால் ஃபெலினி இயக்கிய 8 ½ திரைப்படத்தைப் போலவெல்லாம் இன்னொரு திரைப்படத்தை உருவாக்கிவிட முடியுமா? என்பது சந்தேகம்தான்.

திரையிடலுக்குப் பின்பு இயக்குனருடன் அரங்கத்திலேயே குழுவாக உரையாட முடிந்தது. திரைப்பட விழாக்களில் இருக்கும் சிறப்பு அம்சமாக இந்த ஒரு நிகழ்வைச் சொல்லலாம். படத்தின் இயக்குனர் அல்லது நடிகர்களுடன் படம் பார்த்து முடித்த பின்பு அத்திரைப்படம் எழுப்பும் கேள்விகளை பகிர்ந்து கொள்வது நல்லதொரு அனுபவமாக இருக்கும். சில நேரங்களில் இந்த உரையாடல்கள் படத்தையே வேறு மாதிரி புரிந்து கொள்ள உதவும். இன்னொரு வகையில் இந்த உரையாடல்கள் நம்முடைய சொந்த அனுபவத்தை பாதித்து விடவும் கூடும். சமீபத்தில் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அபுதாபியில் நடந்த திரைப்பட விழாவில் சில படங்களைப் பார்த்தேன்.


ப்ரேசிலிலிருந்து I travel because I have to, I come back because I love you என்றொரு படம் பார்த்தேன். படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. படத்தின் பிரதான கதாபாத்திரம் கேமராதான். படம் முழுக்க ஒருவனின் கண்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். வெறுமனே குரல் ஒன்று, விடாமல் பேசிக் கொண்டிருக்கும். மனைவியை விட்டுப் பிரிந்து ப்ரேசிலின் வறண்ட பிரதேங்களில் மண் ஆய்வு செல்லும் ஒருவன் ஒவ்வொரு நாளையும் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. மிகக் கவித்துவமான உரையாடல்கள், கவிதைகள், காட்சி மொழிகள் என படம் மிக நல்லதொரு அனுபவமாக இருந்ததது. கிட்டத்தட்ட ஒரு நல்ல நாவலை வாசித்து முடித்த திருப்தியை படத்தின் பின்னணியில் ஒலிக்கும் குரல் தந்திருந்தது. படம் முடிந்த பின்பு இயக்குனர் இப்படத்தைப் பற்றித் தந்த தகவல்கள் கிட்டத்தட்ட படத்தையே வெறுக்க வைத்து விட்டது. முதலில் இது ஒரு திரைப்படமே அல்ல. பத்து வருடங்களுக்கு முன்னால் இயக்குனர் ப்ரேசிலின் வறண்ட பகுதிகளை ஒரு டாக்குமெண்டரியாக எடுக்க வேண்டுமென விரும்பியிருக்கிறார். அப்பிரதேசங்களுக்கு பயணித்து மனிதர்கள் குடிபெயர்ந்து போன வெற்றிடப் பகுதிகளை கேமிராவில் பதிவு செய்திருக்கிறார். இடையில் அந்த டாக்குமெண்டரி முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. சமீபமாய் எங்கிருந்தோ இதை மீண்டும் தோண்டியெடுத்து காட்சிகளுக்கு பின்னணியாய் கதை ஒன்றை எழுதி கதைக்குச் சம்பந்தமாய் ஓரிரு காட்சிகளை மட்டும் எடுத்திருக்கிறார்கள். எடிட்டிங்கை கவனமாய் செய்து முடித்ததும் இதோ ஒரு திரைப்படம் தயாராகிவிட்டிருக்கிறது. இது ஒரு well made movie அவ்வளவுதான் என அவர் சிரித்துக் கொண்டே சொன்னபோது எனக்கு அதுவரைக்கும் இருந்த உற்சாக மனநிலை காணாமல் போனது.

ஆனால் இந்த Tell me Who you are படம் பார்த்து விட்டு உரையாடியது மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆப்பிரிக்காவின் மாலி போன்ற பிரதேசங்களில் பெண்களின் வாழ்வு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குனர் தந்த பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் அதிகம் படித்திருந்தாலோ நல்ல வேலையில் இருந்தாலோ அவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினமானது. ஏதாவது ஒரு ஆணுக்கு மூன்றாம் தாராமாகவோ நான்காம் தாரமாகவோகத்தான் வாழ்க்கைப்பட வேண்டி இருக்கும். இந்த நிலை மாறுவதற்கு எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுமில்லை என்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு ஆப்பிரிக்கர் மிகவும் கோபமாக ஒரு கேள்வியை முன் வைத்தார். மிமி கதாபாத்திரம் சோரம் போவதாய் காண்பிப்பதன் மூலம் வெளியில் போய் படித்து விட்டு வரும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் போன்றோர் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்பதாய் ஆகாதா? என்றார். இதற்கும் மிக நிதானமாகவே, எந்த சமூகத்தில்தான் சோரம் போவது நடக்கவில்லை? என்றொரு எதிர்கேள்வியும் இயக்குனர் வைத்தார். கலாச்சார நெருக்கடிகள் நிறைந்த சூழலில் பொய்களும் மீறலும் இருக்கும்தான் என்றார்.

இந்த விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி பின் தங்கிய பிரதேசங்களின் சினிமாவிற்கான கரிசனத்தையும் நாம் தந்தாக வேண்டும். ஏராளமான பணமும், தொழில் நுட்பமும், திறமையும் நிறைந்து கிடக்கும் தழிழ் சூழலில் பெரும்பாலும் வணிகக் கொடுங் குறிகள்தாம் விறைத்துக் கிடக்கின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பிரதேசத்திலிருந்து நேர்மையான படங்கள் வருவதை சினிமா மொழி அறிந்த தமிழ் மனமாக விருந்தாலும் கொண்டாடத்தான் வேண்டும் என்றபடியே அரங்கை விட்டு வெளியே வந்தேன். கிடானோவின் outrage, அலெஜாண்ட்ரோவின் Buitiful, துருக்கிப் படமான Poetry போன்றவைகளைப் பார்க்க திட்டமிட்டிருக்கிறேன். பார்த்து விட்டுப் பகிர்கிறேன்.

Friday, March 19, 2010

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா



ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.

மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco

நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.

ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும் திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.

ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.

மொராக்கோ திரைப்படமான The man who sold the world புதுமையான காட்சி அனுபவத்தைத் தந்தது. திரைப்படவிழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டு இரண்டு முறையும் அரங்கு நிறைந்தது. இவ்விழாவில் பார்த்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான படமாக இதைச் சொல்லலாம். இமாத் நூரி(Imad Noury), சுவெல் நூரி (Swel Noury) என்கிற மொராக்கோ சகோதரர்கள் இயக்கிய படமிது. இவர்களின் தந்தை ஹக்கிம் நூரி மொராக்கோவில் நன்கு அறியப்பட்ட இயக்குனர். தாய் மரியா (Maria Pilar Cazorla) ஸ்பானியத் திரைப்பட தயாரிப்பாளர். இத் திரைப்படத்தை தயாரித்திருப்பதும் இவர்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் 'A Weak Heart' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. பெரும்பாலான காட்சிகளில் இரஷ்ய இயக்குனர் அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் பாதிப்பை உணர முடிந்தது. திரையில் மிகச் சிறந்த கவித்துவப் படிமங்களை உண்டாக்குவதில் வல்லவரான தர்க்கோயெவ்ஸ்கியால் பயன்படுத்தப்பட்ட பல திரைப்படிமங்கள் இவர்களை பாதித்திருக்கின்றன. கவித்துவ உச்சங்களை திரையில் கொண்டுவர தர்க்கோயெவ்ஸ்கியால் மட்டும்தான் முடியுமென்கிற என் இறுக்கமான நம்பிக்கைகளை இவர்கள் சற்றுத் தளர்த்தியிருக்கிறார்கள். மத்திய கிழக்கின் intellectual cinema என இத்திரைப்படத்தை தாராளமாக கொண்டாடும் அளவிற்கு மிக நேர்த்தியான முறையில் படமாக்கப் பட்டிருக்கிறது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்ப சுவெல் நூரி.

ரெட் காமிராவினைக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள். லில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Audrey Marnay யின் வெண்ணிற உடலில் தனியாய் தெரியும் அடர் சிவப்பு உதடுகளும் சிவப்புச் சாயம் பூசின நகங்களும் ரெட் காமிராவின் அசாத்தியங்கள். படம் முழுவதுமே சிவப்பு நிறம் காதலின் நிறமாகவும் கொண்டாட்டத்தின் நிறமாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

காட்சிகளுக்குப் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்கள் படத்திற்கு அசாதாரணத் தன்மையை தந்திருக்கின்றன. மனதின் மிக ஆழமான, கொந்தளிப்பான, உணர்வுகளின் / உணர்ச்சிகளின் தெறிப்பை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிந்தது. பதினைந்து தலைப்புகளில் இத்திரைப்படம் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு அடையாளமில்லா தேசத்தில் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. வளைந்த கால் ஒன்றையும் மிக இலேசான இதயத்தையும் கொண்டவனுமான எக்ஸ்(Said Bey) அரசாங்கத்தின் கோப்புகளை மறு பிரதியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். எக்ஸின் கையெழுத்து அந்த ஊரிலேயே மிகச் சிறந்த கையெழுத்தாய் இருப்பதனாலும் அவன் உடல் சிக்கலை முன் வைத்தும் அவனை அரசாங்கம் போர் முனைக்கு அனுப்பி வைக்க வில்லை. எக்ஸின் அறைத்தோழனும் சக பணியாளனுமான நே (Fahd Benchamsi) எக்ஸின் மீது மிக ஆழமான அன்பை வைத்திருக்கிறான். இருவரும் மிக நெருக்கமான அடர்த்தியான அன்பில் திளைக்கிறார்கள். மேலதிகமாய் எக்ஸிற்கு லில்லி என்கிற மிக அழகான பாடகியின் காதலும் கிட்டுகிறது. அவள் எக்ஸை இந்த உலகத்தின் எல்லாவற்றையும் விட அதிகமாய் நேசிக்கிறாள்.

தன் மீது நம்பிக்கை வைக்கும் உயரதிகாரி, அன்பையும் அக்கறையும் கொட்டும் உயிர்த்தோழன், தன்னை வாரிக் கொடுக்கும் அழகான காதலி என எல்லாமிருந்தும் எக்ஸ் துயரமடைகிறான். பதட்டமடைகிறான். இந்த உலகத்தில் தனக்கு மட்டும் எல்லாம் கிடைத்துவிட்டதே என குற்ற உணர்வு கொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையை குலைத்து விடுவோமோ என பயப்படுகிறான். தன்னை உலகத்துடன் பொருத்திப் பார்த்து உலகம் எப்போது மகிழ்வடைகிறதோ அப்போதுதான் தன்னால் மகிழ்வாய் இருக்க முடியும் என நம்புகிறான். இறுதியில் மனநிலை பிறழ்கிறான்.

இப்படத்தின் திரையாக்கம் மகிழ்வையும், உற்சாகத்தையும், அன்பில் திளைத்தலையும், நட்பையும், காதலையும், காமத்தையும், உடலையும், போதையையும், பைத்தியத்தன்மையையும் மிகச் கச்சிதமாக பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. போர்ச்சூழலை காண்பிக்க இரண்டு சிதிலமடைந்த வீடுகளும் எக்ஸ் மற்றும் நே வின் பதட்டங்களும் போதுமானதாய் இருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் கதையும் புறம் சாராது அகத்திலேயே பயணிப்பதால் இடம்/தேசம் குறித்தான அடையாளமற்றத் தன்மையை உண்டாக்க இயக்குனர்கள் பெரிதாய் மெனக்கெட வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது.

திரையிடலுக்குப் பின்பான கலந்துரையாடலில் நூரி சகோதரர்களில் ஒருவரும் தயாரிப்பாளரான தாயும் மற்றும் எக்ஸாக நடித்திருந்த சையத்பேவும் பங்குபெற்றனர். இரஷ்ய நாவலை அராபிய போர் சூழலுக்குப் பொருத்த எவ்வாறு முடிந்தது என்கிற வினாவிற்கு நூரி பதிலளித்தார். தஸ்தாயெவ்ஸ்கி, காஃப்கா போன்றவர்களின் படைப்புகளில் சூழல்கள் பின்னணிகள் குறித்த பெரும் விவரணைகள் இல்லாதது எல்லா சூழல்களுக்கும் பொருந்திப் போக இலகுவாய் இருக்கிறதென்றார். தாய் தயாரிப்பாளராக இருந்ததால் தங்களால் சுதந்திரமாய் இயங்க முடிந்ததென்றும் பட நேர்த்தியை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட முடிந்ததாயும் பகிர்ந்தனர். அரை மில்லியன் யூரோக்களை இப்படத்திற்கு செலவு செய்ததாய் மரியா பகிர்ந்தார். முப்பது வயதையும் எட்டியிராத இவ்விளம் இயக்குனர்கள் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியமானதுதான். மேலதிகமாய் இத்திரைப்படம் மூலமாய் உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன போன்ற மொன்னை கேள்விகளுக்கும் மிக நிதானமாய் பதில் சொல்லும் பொறுமையும் இவர்களுக்கு இருக்கிறது.படம் முடிந்த பின்பு நூரியின் கைகளை அழுத்தமாய் பற்றிக் குலுக்கினேன். இவ்விரு சகோதரர்களும் வருங்கல மத்தியக் கிழக்கின் தவிர்க்க முடியாத சினிமா அடையாளமாகவிருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

துபாய் திரைப்பட விழாவின் வண்ணம் வருடத்திற்கு வருடம் மெருகேறிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக இந்நிகழ்வை அவதானித்து வருபவன் என்கிற முறையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் மிக தைரியமான படங்களை விழாக் குழுவினர் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். உள்ளூர் படங்களுக்கு கணிசமான பரிசை வழங்குவதின் மூலம் அராபிய இளைஞர்களிடையே திரைப்படம் குறித்தான சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறார்கள். அய்ரோப்பிய திரைப்பட விழாக்களைப் போல கவர்ச்சியும் வசீகரமும் புகழின் வெளிச்சமும் அங்கீகாரங்களும் இன்னமும் இவர்களுக்கு கிடைக்கவில்லைதான் எனினும் மத்தியக் கிழக்கின் பெருமளவில் அறியப்படாத சினிமாக்களுக்கு இவ்விழா ஒரு பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

அகநாழிகை மார்ச் 2010 இதழிலும் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. நன்றி வாசு.

Tuesday, January 12, 2010

The Human Race - An Exhibition by Binu Bhaskar

The Human Race


An Exhibition by Binu Bhaskar

January 14th - February 25th 2010

Australian photographer Binu Bhaskar explores the perpetual motion of humans living in cities around the world. The never-ending universal race to get somewhere or achieve something is captured in a series of highly evocative studies that illustrate the restless human psyche.

Venue

The Mojo Gallery

No : 33, Al Serkal Avenue, Al Quoze, Dubai

www.themojogallery.com

Thursday, December 17, 2009

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா

அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகள்:

ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.

மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco

நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.

ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும் திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.

ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.

Monday, December 7, 2009

ஒரு புகைப்படக் கலைஞனும் பூனைகளால் நிறைந்த வீடும்

திருவண்ணாமலையில் பவா வுடன் ஓவியர் காயத்ரியின் ஸ்டூடியோவில் ஒரு புகைப்பட ஆல்பத்தைப் பார்க்க நேர்ந்தது. ஓவியமா ஒளிப்படமா என குழம்ப வைக்கும் அளவிற்கு ஒளியுடன் விளையாடியிருந்த அப் புகைப்படங்களை எடுத்தவர் யார் எனக் கேட்கையில் பவா பினு பாஸ்கரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். பினு பாஸ்கர் மிக நேர்த்தியான புகைப்படக் கலைஞன். சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல் வாழப் பழகியவன். தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவன். என்றெல்லாம் பவா சில உதாரணங்களோடு சொல்ல ஆரம்பித்ததும் பினுவை எனக்குப் பிடித்துப் போனது. பினு கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தற்போது தோஹாவில் வசிக்கிறார் என்றதும் விரைவில் பார்த்து விடலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் தொலைபேசுகையில் பினு துபாய் வருவதாகத் தெரிவித்தார். ஒரு பிற்பகலில் ballentine சகிதமாய் அவர் தங்கியிருந்த கடற்கரையோர வில்லா ஒன்றினுள் நுழைந்தேன். இரண்டு நவீன அழுக்கான ஹார்லி டேவிட்சன்கள், அதைச் சுற்றிச் சிதறிக் கிடந்த பேட்டரிகள், தட்டு முட்டு இரும்பு சாமான்கள், வண்ணம் உலர்ந்து உதிர்ந்த பெயிண்ட் காலி டப்பாக்கள் என எல்லாம் சேர்ந்து வில்லாவின் முகப்பில் என்னை வரவேற்றன. உள்நுழைந்தால் வரவேற்பரை முழுக்க இசைக் கருவிகள். கிதார்கள், மிகப் பெரிய ட்ரம்ஸ், கீபோர்ட் இன்னும் பல வகை தந்திக் கருவிகள் (ஸ்பானிய கிதாராக இருக்கலாம்) இங்கும் அங்குமாய் சிதறிக் கிடந்தன. இரண்டு பிரெஞ்சு நபர்கள் மேல் சட்டை இல்லாமல் கணினி முன் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் கைக்குலுக்கி உள் நுழைந்தால் கூடம். நடுக்கூடத்தில் ஒரு சலவை யந்திரம். அதைச் சுற்றி அழுக்குத் துணிகள். அதையும் கடந்தால் ஒரு சமயலறை. அதன் நடுவில் ஒரு பெரிய மகாகனி உணவு மேசை. அதன் மீது மடிக் கணினியை வைத்தபடி ஜூலியா அவரின் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தார். ஜூலியா பினுவின் ஸ்பானியத் தோழி. திருவண்ணாமலையில் சிறிது காலம் வசித்திருந்திருக்கிறார். பவா மற்றும் காயத்ரியின் நலன் விசாரித்துவிட்டு பின் இணைந்து கொள்வதாக விடைபெற்றார்.

சமயலறையிலிருந்து வீட்டின் தோட்டம் துவங்குகிறது. சில மரங்கள் நடப்பட்டிருந்தன. புற்கள் வளர்க்கப்பட்டிருந்தன. வில்லாவைச் சுற்றிலும் விஸ்தாரமான காலியிடம். அங்கங்கே சிகெரெட் துண்டுகள் நிரம்பி வழியும் சாம்பல் கிண்ணங்கள். உடைந்த, நெளிந்த, தூசுபடிந்த இருக்கைகள். இவற்றோடு சுலபத்தில் எண்ணிவிட முடியாத எண்ணிக்கையில் பூனைகள். அந்த வில்லாவின் முகப்பு இரும்பு கேட்டிலிருந்து தோட்டத்துப் புற்செடிவரை எங்கும் நீக்கமற பூனைகள் நிறைந்திருந்தன. சின்னஞ்சிறு குட்டியிலிருந்து முதிர்ந்த பூனை வரை பல்வேறு வடிவில் பூனைகள் அவ்வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தன. பூனைகளுக்கான உணவு அங்கங்கே தட்டுக்களில் சிதறிக் கிடந்தது. அதுதவிர்த்து சமயலறை மேசையின் மீது யாராவது உணவருந்தும்போது அவரை குட்டிப் பூனைகள் மொய்க்கத் துவங்கிவிடும். ஜூலியா மேசையின் மீது உணவருந்திக் கொண்டிருந்தபோது சுமார் பத்து பூனைக்குட்டிகள் அவரின் மீதும் மேசையின் மீதும் ஒன்றன் பின் ஒன்றாய் ஏறியபடி உணவுத் தட்டினை நெருங்கின. ஜூலியா சிறிதும் சப்தமெழுப்பாது, சலிக்காது ஒரு கையினால் உணவருந்தியபடி இன்னொரு கையினால் மேசையிலிருந்து ஒவ்வொரு பூனைக்குட்டியையும் இலகுவாய் கீழிறக்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியை சற்றுத் தொலைவில் அமர்ந்தபடி நானும் பினுவும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

வசிப்பிடங்களில் சுதந்திரத் தன்மை மிகவும் முக்கியமானது. சுத்தமான ஒழுங்கான வீடுகளைக் காட்டிலும் சுதந்திரத் தன்மையை இயல்பாய் கொண்டிருக்கும் இவ்வீடு உண்மையான கலைஞர்களுக்கானது. இந்த வீட்டின் உரிமையாளர் தேர்ந்த இசைக் கலைஞர். உலகின் பல பாகங்களிலிருந்து வரும் பயணிகள், புகைப்படக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் என எல்லாரின் தங்குமிடமும் இதுவாய் இருக்கிறது. பினுவால் இம்மாதிரியான இடங்களில் மட்டுமே தங்க முடிவதாய் சொன்னார். இம்மாதிரியான சூழல் மட்டுமே தொடர்ந்து வேலை செய்வதற்கு உகந்ததாய் இருக்கிறது என்றார்.

பிற்பகலுக்கு சற்று முன்னர்தான் பினு விழித்திருக்கிறார். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக தூங்காது நேற்று முழுக்கத் தூங்கியதாய் சொன்னார். இருவரும் கிளம்பி மெக்டொனால்டில் அமர்ந்தோம். பினு இதுநாள் வரைக்குமான தன் கதைகளை, பயணங்களை, வாழ்வை என்னிடம் சொல்லத் துவங்கினார்.

பட்டப் படிப்பிற்கு பிறகு எந்தத் துறையை தேர்ந்தெடுப்பதென்று மிகவும் யோசித்துப் பின்பு திரைப்படம்தான் தனக்கான துறையெனத் தீர்மானித்து அடையாறு திரைப்படக் கல்லூரியில் விண்ணப்பித்திருக்கிறார். காலியாகவிருக்கும் எட்டு இடங்களில் ஒரு இடம் மட்டுமே மற்ற மாநிலத்தினருக்கானது. அந்த இடத்தினுக்கான நேர்முகத் தேர்வு மிகக் கடினமாக இருக்கும் என்பதினால் பினு மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நேர்முகத் தேர்வை திருப்தியாக செய்தும் ஜூரிகளின் பாராட்டு பெற்றும் அந்த இடம் ஆந்திரா தயாரிப்பாளர் ஒருவரின் மகனுக்கு சென்றுவிட்டிருக்கிறது. வெறுத்துப் போன பினு தன் பயணத்தை துவங்கியிருக்கிறார். ஒரு வருடம் முழுக்க வீட்டைத் துறந்துவிட்டு இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலிருந்து அவர் வீட்டுக்குத் தொலைபேசுகையில் பினுவின் அச்சன் ஆஸ்திரேலியாவிலிருக்கும் புகைப்படக் கல்லூரியில் சேரச் சொல்லி பினுவிற்கு அழைப்பு வந்திருக்கும் தகவலை சொல்லியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் படிப்பு வேலையென பத்து வருடங்கள் வாழ்ந்துவிட்டு துபாய் வந்திருக்கிறார். சாச்சி & சாச்சி என்ற விளம்பர நிறுவனத்தின் முதன்மை புகைப்படக்காரராய் வேலை பார்த்திருக்கிறார். ஆறு வருடத்திற்கு முன்பு துபாயை விட்டுப் போன அந்த நாளை மிகவும் வேடிக்கையும் குதூகலமுமான குரலில் பினு விவரித்தார். தான் பார்த்து வந்த வேலை சலிப்பை ஏற்படுத்தவே ஒரு நாள் இங்கிருந்து ஓடிவிடத் தீர்மானித்திருக்கிறார். தன் நண்பன் ஒருவனை காரில் ஏற்றிக் கொண்டு விமான நிலையம் வந்திருக்கிறார் கார் சாவியை நண்பனிடம் கொடுத்துவிட்டு விமானம் ஏறிப் போய்விட்டிருக்கிறார். மிக அதிக வருமானம், வீடு, கார், நண்பர்கள் என எல்லாவற்றையும் அப்படியே விட்டுச் செல்லும் துணிச்சல் வெகு சொற்பமானவர்களுக்குத்தான் வருகிறது. இப்போது மீண்டும் விளம்பரத் துறையின் மீது பினுவிற்கு ஆர்வம் வந்திருக்கிறது. நிறுவனங்களின் விளம்பரங்கள், நிகழ்வுகள் இவற்றை நண்பர்கள் உதவியுடன் வடிவமைக்கிறார். துபாயில் தன்னுடைய புகைப்படக் கண்காட்சியை வைக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்.

தமிழில் ஒரு படம் பண்ண வேண்டுமென்பது பினுவின் ஆசையாய் இருக்கிறது. சமீபத்தில் பூ படம் பார்த்து பிடித்துப் போனதாம். சிறந்த கதைகளை படமெடுக்கத் துணியாத தமிழ் சினிமாவின் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

பினுவை சந்திக்கப் போவதற்கு முன்பு வரை எனக்கு நிறையத் தயக்கங்கள் இருந்தன. நட்பு நிமித்தமோடு மட்டுமில்லாமல் அவரின் மூலமாய் எனக்கு இரண்டு உதவிகள் தேவைப்பட்டன. ஒன்று என்னுடைய வரவிருக்கும் புத்தகங்களுக்கான முகப்பிற்குத் தேவைப்பட்ட அவரெடுத்த புகைப்படம் மற்றொன்று புத்தகப் பின்பக்கத்திற்கான அவரால் எடுக்கப் படப் போகிற என் புகைப்படம். முதலாவதைக் கூட கேட்டுவிடலாம் இரண்டாவதைக் கேட்கத்தான் நான் மிகவும் தயங்கினேன்.

உணவு முடித்து வீட்டிற்கு வந்ததும் நான் அதைக் கேட்டுவிட்டேன். இதற்கா இத்தனைத் தயக்கம் என்றபடி தன்னுடைய புகைப்படக் கருவியை எடுத்து வந்தார். சூரியன் அமிழும் நேரமாதலால் ஒளி குறைவாக இருந்தது. அவரின் புகைப்படப் பெட்டிக்கு சார்ஜ் தேவைப்படவே ஜூலியாவின் நிக்கானினால் என்னைப் புகைப்படமெடுக்கத் துவங்கினார். ஒரே ஒரு புகைப்படத்திற்காக அவர் செலவிட்ட நேரம் முப்பது நிமிடங்கள் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிளிக்குகள். அவற்றிலிருந்து சிலவற்றை என் மின்னஞ்சலுக்கு அனுப்புவதாய் சொன்னார்.

பினுவிற்கு சிதிலமடைந்த பிரதேசங்களின் மீது பெரும் காதலிருக்கிறது. அதிகம் கண்டு கொள்ளப்படாத இடங்கள், மறைக்கப்பட்டக் காட்சிகள் இவற்றை தனது புகைப்படங்களாக்க பெரிதும் விரும்புகிறார். அவரின் மடிக்கணினியில் அவரெடுத்தப் புகைப்படங்களைக் காண்பித்தார். உலகின் பல்வேறு பாகங்களில் நடத்திய கண்காட்சிகள் அவற்றில் இடம்பெற்ற படங்கள் என எல்லாம் பார்த்து முடித்த பின்பு என் எழுத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார். நான் என் எழுத்தின் மீது வைத்திருக்கிற சுய மதிப்பீடுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். நானிலும் நுழையும் வெளிச்சம் என்கிற தலைப்பை ஆங்கிலத்தில் விளக்கியபோது பினு மகிழ்ந்து போனார். அப்போது ballentine யையும் பூனைகள் புடைசூழ ஆரம்பித்திருந்தோம். இலேசாய் கூச்சம் விலக தலைப்புக் கவிதையை சொல்ல ஆரம்பித்தேன்.
விளக்குகளை அணைத்ததும்
அவள் பிரகாசிக்கத் துவங்குவாள்
இருளில் ஒளிரும் பாஸ்பரஸ் நீயென்பேன்
வெட்கத்தில் குழைந்து இன்னும் இறுக்குவாள்
அவள் உடலிலிருந்து வெளியேறும் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு ஒப்பானது
கருத்த வயல் வெளியில் அலையும்
மின்மினிப்பூச்சுகளின்
ஒளிச் சமிக்ஞைகளுக்கு ஒப்பானது
ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்..
பினு இந்த அவள் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லை இல்லையா? என்றதற்கு ஆம் என்றேன் (வாழ்க போமோ!)

நன்கு இருட்டின பின்பு பினுவிடம் விடைபெற்று வந்தேன். கடற்கரை சாலையில் விரைகையில் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். Bernardo Bertolucci திரைப்படம் ஒன்றினுக்குள் நுழைந்து அவரின் கதாபாத்திரங்களை சந்தித்துவிட்டு வந்த உணர்வைத்தான் அந்த வீடும் மனிதர்களும் பினுவும் தந்திருந்தனர். இம்மாதிரியான மனிதரை எனக்கு அறியத் தந்த பவாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

Monday, July 20, 2009

முப்பத்தைந்து டிகிரி விடியல்

தகிக்கும் அதிகாலையில்
விழித்தெழ வேண்டியிருக்கிறது
முப்பந்தைந்து டிகிரி உஷ்ணச் சூரியனை
ஒற்றைக் கையால் மறைத்தபடி
சிற்றுந்தை அடைவதற்குள்
நக இணுக்குகள் கூட வியர்த்துவிடுகின்றன.
செல்லுமிடமெல்லாம் விழுங்கிக் கொள்ளும்
குளிரூட்டப்பட்ட அறைகள்
சவப் பெட்டியை நினைவூட்டுகின்றன.
ஈரப்பதம் அடர்ந்த இக்காற்றில்
உன் கிசுகிசுப்புகளை கேட்பது எங்கனம்?


நினைவில்
உன் ரோஸ் நிற உதடுகள்
கனவில்
உன் வெள்ளை நிற முயல்கள்
நிகழில்
முப்பந்தைந்து டிகிரி
அதிகாலை வெய்யில்.

Friday, March 14, 2008

வார்த்தைகளில் வரைதலும் தொடர்புகளற்ற குறிப்புகளும்

வியாழக்கிழமை கடவுளர்களை ஜமாலன் புதன் கிழமையே நலம் விசாரித்ததால் சில வாரங்களாய் தலைவைத்துப் படுக்காதிருந்த கராமாவிற்கு தனியாய்ச் செல்ல வேண்டியதாய்ப் போயிற்று. தனியே குடிப்பதை விடச் சலிப்பானது எதுவுமில்லை.இன்றைய மாலையை நுரை பொங்கத் ததும்பி வழியும் பொன்னிற மதுவினைக் கொண்டு குளிப்பாட்டுவோம் ரீதியிலான கிளிட்சே க்களை முனகியபடியிருந்த சமயத்தில் என் எதிர் இருக்கையில் ஓர் இந்தியத் தம்பதிகள் வந்தமர்ந்தனர்.Henican pitcher யைத் தருவித்த கணவர் விரைந்து குடிக்க ஆரம்பித்தார்.அவரின் மனைவி அவரின் குப்பியில் இரு சிப் அடித்துவிட்டு வேண்டாமென்பதாய் தலையசைத்தார்.பின் கழிவறை செல்ல எழுந்திருந்த மனைவியுடன் கழிவறை வரைச் சென்றார்.மனைவி உள்ளே சென்ற சிறிய இடைவெளியில் பிலிப்பைன் பார்டெண்டரிடம் அவசரஅவசரமாக ஒரு லார்ஜ் கேட்டார்.பொறுமையில்லாது அவரே எழுந்து சென்று லார்ஜை வாங்கி வந்து பியர் ஜாரில் உற்றிவிட்டு உடனே பணத்தையும் கொடுத்துவிட்டார்.இந்த லார்ஜ்ஜை பில்லில் சேர்க்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.திரும்பி வந்த மனைவியிடம் இன்னொரு சிறிய டின்னுக்கான ஸ்பெசல் அனுமதி வாங்கிக்கொண்டு அதையும் குடித்து முடித்தார்.ஆக ஒரு பிட்சர்,ஒரு லார்ஜ்,ஒரு டின் பியர் இதைக் குடித்து முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நிமிடங்கள் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்களே. இதற்கு நடுவில் அவர் மனைவியை சமயோசிதமாய் ஏமாற்றவும் மெனக்கெட்டார்.இந்த நிகழ்வு அவரின் மேல் ஒரு பரிதாபத்தை வரவைத்தது.எங்கேயோ,ஏதோ,எவையோ நம்மை திருப்திபடுத்திக்கொண்டிருக்கிறது அல்லது எதையோ திருப்திபடுத்த நாம் எந்தவகையிலாவது மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறோம்.இது போன்ற ஒரு சூழலில் என்னை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள வேண்டுமென்றால் சிலவற்றை எவ்வித தயக்கமுமில்லாமல் விட்டொழிவதே நேர்மையான செயலாய் இருக்க முடியும்.

*********

அது எதிர்பார்த்திராத ஒரு சிறிய கண முடிவில் குறுக்கு வெட்டாய் என் இடது கரத்தை அதன் அடிவயிற்றில் இறக்கினேன்.மீண்டுமது சுதாரித்து எழுவதற்குள் இந்த எல்லையைக் கடந்துவிட வேண்டும்.இதுநாள்வரை குடித்திருந்த பியர்கள் ஓடவிடாமல் செய்துவிட்டிருந்தது. முதன்முறையாய் மதுவினைச் சபித்தபடி ஓடிக்கொண்டிருந்தேன்.தொலைவில் அது நெருங்கும் சப்தங்கள் கேட்டபடியேயிருந்தது. இந்தச் சாலைசந்திப்பில் கலந்துவிட்டால் போதும் பின்பு அதனால் தொடரமுடியாது...தொலைவில் மிகப் பிரகாசமான வெளிச்சப் பந்துகள் முன்னோக்கி நகர்ந்து வந்தது.வாகனமாயிருக்கும் என சாலையின் ஓரமாய் ஒதுங்கினேன்.அருகினில் வர வர வெளிச்சம் மிகப் பிரம்மாண்டமானதாயிற்று வேனிற்கால சூரிய உதயத்தில் தகிப்புகளோடு மேலெழும் சூரியனின் உக்கிரத்தைக் கொண்டிருந்தது. தாங்கமுடியாமல் கண்களை மூடிக்கொண்டேன்.வெளிச்சம் நீண்டு, பரவி, சூழ்ந்து என் தலைமுடியைப் பிடித்து தூக்கி தனது வாயினுள் போட்டுக்கொண்டது.

**********

அந்திவானத்தை கண்ணிமைக்காமல் பார்ப்பது நிறைவைத் தருமொரு செயல்.மேகத்தைக் கவனித்தல் என்றொரு ஓஷோ தியான முறையுமிருக்கிறது. திரண்ட, இளகிய, மென்மையான, இழைகளோடிய, நீல, வெள்ளை நிற மேகங்களை வெளிர் நீல வானப் பின்னனியில் கண்ணிமைக்காது படுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் இணக்கமான செயல்.இந்த நாட்டில் அத்தனை மேகங்களில்லை..வானமும் அத்தனை நீலமாய் இருக்காது.. மேலும் வானம் வெகு தொலைவிலிருப்பது போன்ற உணர்வையும் தரும்....குளிர்காலங்களில் மட்டும் திரெண்டெழுந்த மேகங்களைப் பார்க்கலாம்....அப்போது வானமென்னவோ நெருங்கி வந்திருப்பதாய்த் தோன்றும்...இரண்டு நாளைக்கு முன்பான என் வானம் தப்புதலில் ஒரு பறவையைப் பார்த்தேன்...முதலில் அது பறவை எனத் தோன்றவில்லை பட்டம் என்கிற வடிவத்தையே நினைவூட்டியது.... இருள் தொடங்கியிருந்த மாலையில் கண்களைக் கூர்ந்து பார்த்ததில் அஃதொரு பட்டமில்லை என்பது உறுதியாயிற்று....பறவை என நம்புவதா வேண்டாமா? எனற யோசனையோடு உற்று நோக்கியதில் அது பறவையேதான்...இறக்கைகள் இல்லாத பறவை.. ஆம்! அதற்கு இறக்கைகள் இல்லை....மேலும் அது பறக்கவும் இல்லை... மிதந்துகொண்டிருந்தது.. எவ்வித அவசரமுமில்லாமல் மிக நிதானமாக மிதந்துகொண்டிருந்தது.. மனதில் மெல்லியதாய் குளிரின் சாயல்களில் பயம் படரத் துவங்கியது.. அந்த மிதந்த பறவை எனது மாடியின் கிழக்குத் திசையிலிருந்துதான் வந்தது.. காற்றே இல்லாத வெளியில் அந்நீளமான சற்று அகலமான பறவை மசூதியின் கோபுரத்தை சுற்றி மிதந்து பின் மெல்ல மீண்டும் நான் நின்றிருந்த வாக்கில் திரும்பி மிதந்து வந்தது.. என்னில் பதட்டம் சீராய் கூடியது.. அதை இன்னும் கூர்ந்து நோக்கினேன்.. மழலையின் பழகத் துவங்கும் நடையின் சாயல்களில் அது அசைந்து,மிதந்து வந்தது ..கீழே இறங்கிப் போய்விடலாமா என்ற எண்ணம் மிகத் துவங்கிய கணத்தில் அது தன் திசையை மாற்றியது.. பின் மெல்ல இருள் புள்ளியில் கலந்து மறைந்தது... அடுத்தநாள் காலையை புகை மூடியிருந்தது.சில கார்கள் எரிந்தன... சில உயிர்கள் பிரிந்தன... சிலர் தன் உடல் பாகங்களை இழந்தனர்...நான் அந்த பறவையை வரைய முயன்று தோற்று வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன்..

Monday, December 17, 2007

துபாய் திரைப்பட விழா - நானும் பத்மப்ரியாவும் ஆசிப்பும் அடூரும்


என்னளவில் இந்தத் திரைப்படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.ஒரு புதிய முயற்சி மற்றும் நேர்த்தியான சினிமா என்கிற அடிப்படையில் படத்தை அணுகலாம்.ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணன் என்கிற பெயர் ஏற்படுத்தியிருக்கும் hype ற்கான தனித்தன்மைகள் எதுவும் இத்திரைப்படத்தில் இல்லை.அடூரிடம் பார்வையாளர் அரங்கிலிருந்து கேட்கப் பட்ட முதல் கேள்வி.. இது ஆண்களுக்கெதிரான இன்னொரு பெண்ணிய படமா? என்பதுதான் அடூர் இதை மறுத்தார் இது பெண்ணியம் பேசும் படமில்லை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலான மக்களின் வாழ்வு வெவ்வேறு சிறுகதைகளாக பதிவிக்கப் பட்டிருக்கிறதே தவிர இது ஆண்களுக்கெதிரான படமில்லை என்றார்.
சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன ஏன் மீண்டும் மீண்டும் பெண்ணையே சுற்றி வருகிறது சினிமா? என்கிற கேள்விக்கு தனக்கு தெரிந்த நன்கு பழக்கமான ஒன்றை பதிவிக்கவே தான் விரும்புவதாகவும் மற்ற பிரச்சினைகளைப் பேச வேறு இயக்குநகள் இருக்கிறார்கள் எனவும் எனக்கு உண்மைகளைத் திரைப்படமாக்க மிகவும் பிடித்திருக்கிறது எனவும் பதில் சொன்னார்.இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள்.. இருப்பினும் இன்னும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடக்கிறதே..இந்த நிலை எப்போது மாறும் என நினைக்கிறீர்கள்? எனும் இன்னொரு கேள்விக்கு இந்த கதைகள் 1935க்கும் 1945க்கும் இடையிலானது அப்போது கல்வித்தரம் மேம்பட்டிருக்கவில்லை.இப்போது நகரம் சார்ந்த பெண்களின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன எனினும் இந்த கிரமப்புறம் சார்ந்த பெண்களின் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை அந்த நிலை மாறலாம ஆனால் அந்த மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்றார்.அத்தோடு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரள மாநிலம் பெண்களுக்கு மேம்பட்டதாய்த்தான் இருக்கிறது பெரும்பாலான பெற்றோர்கள் ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை இருவருக்கும் சம கல்வியைத்தான் தருகிறார்கள் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என்றெல்லாம் கேரள சிறப்புகளை சொன்னார்.




தன் திரைப்படம் வெளியிடப்பட்ட திரைப்பட விழாக்கள் அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக சிலாகித்துக் கொண்டார்.அத்துடன் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க நடிகை,நடிகர்கள் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டுவார்கள் இத்தனைக்கும் நான் எத்தனை சம்பளம் என்றெல்லாம் கேட்பதில்லை சொல்லப்போனால் சொற்பமான சம்பளம்தான் ஆனால் எப்படியும் தந்துவிடுவேன் என்றார்.
சிலரின் சிலாகிப்புகளுக்குப் பிறகு வெளியில் வந்த அவரை நானும் ஆசிப்பும் ஓரம்கட்டினோம்.நான் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டிருந்த குறியீடுகளைப் பற்றி (symbolic images) கேட்டேன். இத்திரைப்படத்தில் குறியீடுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றார்.கடைசிக் குறும்படத்தில் நந்திதாவினுடைய தாயின் மரணத்தின்போது ஒரு காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிக்கப்படுமே அதென்ன? என்றேன் அதற்கு அவர் தென்னை மரம் மனிதர்களோடு மிகவும் நெருக்கமானது குடும்பத்தில் மூத்தவர் இறக்கும்போது காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிப்பது வழக்கம் என்றார் (இதைத்தானே குறியீடு என்றேன் ..என்னவோ)The spinster குறும்படம் முடியும்போது உலை கொதிப்பது போன்ற சப்தம் வரும் இது நந்திதாவின் மனதை பதிவிக்கிறதா என்றதிற்கும் இல்லை என மறுத்துவிட்டார்.அந்த சமயத்தில் அந்த இசை இருந்தது இசையை திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதோடு என்னால் ஒத்துப்போக முடிந்தது.




பத்மப்ரியாவை ஆசிப் முற்றுகை இட்டார். சேரனின் தவமாய் தவமிருந்து பேச்சைத் துவங்க வசதியாய் இருந்தது. படம் மிக லெந்தியாச்சே என்றும் விருதுக்காக தனியாய் எடுக்கப்பட்டதிலும் நாந்தான் நடித்தேன் என்றுமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.குட்டியான கருப்புநிற ஆடையில் பத்மப்ரியா அழகாய்த்தான் இருந்தார். நடிக்கத் தெரியவில்லை.. ஆம்பளை மாதிரி இருக்கு... என்றெல்லாம் கமெண்டின அந்த இயக்குநரை ரெண்டு மிதி மிதிக்கலாம் என மனசில் கறுவிக்கொண்ட்டேன்.shall i take a picture with u priya? என்றதற்கு சந்தோஷமாய் இசைந்து என்னுடனும் ஆசிப்புடனும் படமெடுத்துக்கொண்டார். அடுத்தபடமான சந்தோஷ் சிவனின் Before the Rain க்காக ஆயத்தமானோம்.சொற்ப நேரமே இருந்ததால் ஸ்டார்பக்ஸில் லஞ்சை முடித்துக்கொண்டு இருக்கைகளுக்கு திரும்பினோம்.

Sunday, December 16, 2007

துபாய் திரைப்பட விழா - நாலு பெண்கள்

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பத்மப்பிரியா,கீது மோகந்தாஸ்,மஞ்சு பிள்ளை,நந்திதா தாஸ் மற்றும் காவ்யா மாதவன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் தகழி சிவசங்கரன் பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.நான்கு தனித்தனி குறும்படங்களான இவற்றை ஒரு படமாக வெளியிட்டிருப்பது மிகவும் சிறப்பு.நான் லீனியர் அல்லது பன்முக பரிமாணம் போன்ற நோக்கிலும் இத்திரைப்படத்தை அணுகலாம்.திரையீடலுக்கு அடூரும் பத்மப்ரியாவும் வந்திருந்தது எதிர்பாராத மகிழ்ச்சி.திரைப்படம் துவங்குவதற்கு முன் சிறு அறிமுகம் ஒன்றைத் தந்த அடூர் படத்திற்கு பின்பு விரிவாகப் பேசலாம் என்றார்.1935 லிருந்து 1945 வரைக்குமான காலகட்டத்தில் கேரளாவின் கிராமத்து வாழ்வியலைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பேசும் படமாக இது இருக்கும் என்ற அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டார்.
முதல் சிறுகதை The Prostitute சாலையோர வேசியாக நடித்திருப்பது பத்மப்ரியா படபடக்கும் விழிகளும் அழுக்கான ஆடைகளுமாய் முழுமையான கதாபாத்திரமாக மாற்றப்பட்டிருந்தார்.வேசி என தலைப்பிடபட்டிருந்தாலும் இந்த திரைப்படம் பேசுவது விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை.சாலையோரங்களில் வசிக்கும் மனிதர்கள் சமூகத்தின் எவ்வித அடையாளமுமில்லாமல் போவதை, சமூக ஒழுங்குகள் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் இம்மனிதர்களுக்கு எவ்வித அலைக்கழிப்பைத் தருகிறது என்பதை மிக இயல்பாய் பதிவித்திருக்கிறார்.நீள வசனங்கள் இல்லாதது பிரச்சார நெடியை குறைக்கிறது அதே சமயம் அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லாதது படத்திற்கு ஒரு வித நாடகத் தன்மையைத் தந்துவிடுகிறது.குறைவான வசனங்கள், மேல் சட்டையில்லாத ஆண்கள், மிக மெதுவான காட்சியமைப்புகள் என அடூரின் 'ட்ரேட் மார்க்' திரைப்படமாக இருந்தாலும் மிக முக்கியமான விதயம் ஒன்றை பதிவு செய்திருப்பதால் இந்தக் குறும்படம் எனக்குப் பிடித்திருந்தது.பத்மப்ரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இன்னொரு சாலையோர மனிதனிடம் தன் பழைய விதயங்களை நோண்டக்கூடாது என்கிற எச்சரிக்கையோடு சேர்ந்து வாழ்கிறாள்.அவன் மூட்டை சுமக்கும் வேலைக்கும் இவள் கல் சுமக்கும் வேலைக்குமாய் போகிறார்கள்.இரவில் சாலையோரங்களில் படுத்து உறங்குகிறார்கள்.ஒரு நாள் போலிசார் தூங்கிக் கொண்டிருந்த இவர்களை பொது இடத்தில் விபச்சாரம் செய்ததாக சொல்லி கைது செய்கிறார்கள்.நீதிபதியிடம் தாங்கள் கணவன் மனைவி என்பதை மட்டும்தான் அவர்களால் திரும்பத் திரும்பச் சொல்லமுடிகிறது.எவ்வித நிரூபணங்களும் அவர்களிடம் இல்லை. அவள் வேசி என்பதற்கு நிறைய சாட்சிகள் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் தண்டனை கிடைப்பதோடு படம் முடிகிறது.இருவருக்குமே அவரவர் தந்தையின் பெயர் தெரியவில்லை. இருவருக்குமே தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இருவருக்குமே வசிப்பதற்கு வீடெதுவும் இல்லை.ஆதலால் அவர்கள் குற்றவாளிகள்.

இரண்டாவது சிறுகதை The Virgin கீது மோகன் தாஸ் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.சாப்பாட்டு ராமனுக்கு வாழ்க்கைப்படும் இளம் பெண் ஒருத்தியின் துயரங்களையும் சுற்றுப் புற மனிதர்கள் ஒரு பெண்ணின் மீது அவதூறுகளைப் பரப்புவதால் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சொல்லியிருக்கிறார்கள்.எவ்வளவு சாப்பாடு போட்டாலும் தின்கிற ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படும் கீது கச்சிதமாய் நடித்திருக்கிறார்.எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒருவன் திருமணமான முதல் நாளிலேயே அவளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்குப் போய்விடுகிறான்.இரண்டவது சினிமாவிற்கு போய்விட்டு தாமதமாக வந்து குளிக்கப்போகிறான் உட்கார்ந்தபடியே அவளின் முதலிரவு முடிந்து போய்விடுகிறது.மிக அசூசையாய் தின்பதும் மிக இறுக்கமான முகத்தோடும் திரும்பிப்படுத்து தூங்குவதுமாய் இருப்பவனோடு ஒரு நாளை கழித்த பின்பு வெளியில் சொல்ல முடியாத வேதனைகளோடு தாய் வீட்டிற்கு விருந்துக்கு வருகிறாள்.அவள் கணவன் நான்கு நாட்கள் நன்றாய் வயிறு புடைக்கத் தின்கிறான் தூங்குகிறான் ஒரு நாள் பின்பு வந்து அழைத்துப் போவதாய் கிளம்பிப் போய்விடுகிறான்.அவன் திரும்பி வருவதே இல்லை.அதற்குள் சுற்றுப் புற மனிதர்கள் இவள் தப்பானவள் அதனால்தான் அவன் வந்து அழைத்துப் போகவில்லை என அவதூறு பரப்புகிறார்கள்.அவன் அவளை விவாகரத்து செய்யப் போவதாய் ஒருவன் கீது வின் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான்.கீது அதற்கு அவசியமே இல்லை ஏனெனில் எனக்கு கல்யாணமே ஆகவில்லை என சொல்வதோடு இத்திரைப்படம் முடிகிறது.இதில் சொல்லப்பட்ட்வைகளை விட சொல்லப்படாதவைகளே அதிகம்.சொல்லப்படாதவைகள் மிக அதிகமாய் இருந்ததினால் இந்தக் கதை ஒட்டாமலே போய்விடுகிறது.

மூன்றாவது கதை The Housewife ஆறுமுறை கருத்தரித்து இரண்டு குழந்தைகள் பெற்று அவை சில மாதங்களிலேயே இறந்து போன துக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மஞ்சு பிள்ளையின் பக்கத்து வீட்டு மனிதராக முகேஷ் தமிழ்நாட்டில் வசிக்கும் அவர் அவ்வப்போது தன் தாயை வந்து பார்த்து விட்டுப் போவார்.அந்த கிராம மனிதர்களை மறந்துவிடாமல் எல்லாரிடமும் மிக அன்பாக பழகுவதாகவும் ஏழைகளுக்கு உதவும் தயாள மனம் படைத்தவர் என்றுமாய் சொல்லி சிலாகிக்கிறார்கள் மஞ்சு பிள்ளையு ம் அவள் வேலைக்காரியும்.இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே முகேஷ் அவளைப் பார்க்க வருகிரான்.இருவரும் பழங்கதைகளை பேசி மகிழ்கிறார்கள் அவளின் நிலையறிந்த முகேஷ் அவளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறான்.அவள்மீது எதுவும் குறையில்லை எனவும் அவள் கணவன் மீதுதான் குறையிருக்கலாம் என்று சொல்லியுமாய் அவளை மாற்ற முயற்சிக்கிறான்.குழந்தையில்லாததால் குதிரைக்காரனை பயன்படுத்திக்கொண்ட ராணியின் கதையை பூடகமாக சொல்கிறான் மறுநாள் மதியம் வருவதாய் சொல்லிவிட்டு செல்கிறான்.வழக்கத்திற்கு மாறாய் அன்று சீக்கிரம் வீடு திரும்பும் அவள் கணவன் முரளி அவளோடு உறவு கொள்கிறான்.அடுத்த நாள் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வரும் முகேஷை திருப்பி அனுப்பி விடுகிறாள் தனக்கு குழந்தைகளே இல்லாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் நேர்மையாக வாழ விரும்புவதாய் சொல்கிறாள்.இந்தக் குறும்படம் மிகக் க்ச்சிதமாய் இருந்தது தேவையற்றவைகள் எதுவுமில்லாது ஒரு குடும்பப் பெண்ணின் அலைவுகளை மிக நுட்பமாய் பதிவு செய்திருப்பது சிறப்பு.


நான்காவது கதை The Spinster நந்திதாசை பெண்பார்க்க வருபவன் அவளின் தங்கையான காவ்யா மாதவனை மணந்து கொள்கிறான்.எத்தனை முயற்சித்தும் நந்திதாவிற்கு திருமணம் கைகூடாமலே போய்விடுகிறது அவளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாய் சொல்லும் அவளின் சகோதரனும் வெகுநாட்கள் காத்திருக்க முடியாமல் திருமணம் செய்து கொள்கிறான்.ஒரே ஆதரவான தாயும் இறந்துபோகவே அவளின் தங்கையான காவ்யா மாதவனோடு வசிக்கப் போகிறாள்.காவ்யாவின் இரண்டு குழந்தைகளும் நந்திதாவின் மீது அன்பாயிருந்தாலும் காவ்யாவிற்கு பிடிக்காமல் போகவே அங்கிருந்து திரும்பி பழைய வீட்டிலெயே தனியாக வசிக்க ஆரம்பிக்கிறாள்.ஒரு நாள் ஏதோ ஒரு அசைவில் வழியில் சந்திக்கும் ஒருவனை இரவு வரச்சொல்லி அவன் வந்து கதவைத் தட்டும்போது மறுத்துவிட்டு அவனை திருப்பி அனுப்பிவிடுகிறாள்.கடைசி வரை திருமணமாகாத ஒரு பெண்ணின் துயரங்களை பேசும் படம் இது நந்தாதாசுக்கு நடிக்க சொல்லித் தர வேண்டுமா. மிக அழகான மிகைப்படுத்தாத நடிப்பு.

திரைப்படம் முடிந்த பின்பான உரையாடல்கள் மற்றும் அடூரின் பகிர்வுகள் அடுத்த பதிவில்

துபாய் திரைப்பட விழா:திரைப்படங்களுக்கு முன்பு சில புகைப்படங்கள்

நான்காவது சர்வதேசத் திரைப்படவிழா துபாயில் கடந்த 9ம்தேதியிலிருந்து துவங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது.திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களில் ஒன்றான மதினாத் செளக் மிக அழகான,வசதியான இடம். துபாயின் மிக செழிப்பான இடங்களில் ஒன்று.ஏழு நட்சத்திர ஓட்டல் மற்றும் ஜீமைரா ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நடுவில் இருக்கும் இந்த மதினாத் செளக் பாரம்பரிய அராபிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது. முழுதும் மரத்தினாலான பழைய கட்டிடங்களின் சாயலை ஒட்டிய மிக அழகான மால்.திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆசிப்பும் நானும் மாலை சுற்றி வந்தோம் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.காமிரா எதுவும் கொண்டு போகாததால் கைவசமிருந்த மொபைல்களிலே எடுத்தோம்.


















Saturday, August 25, 2007

பண்புடன் அறிமுக விழா மற்றும் பதிவர் சந்திப்பு



வல்லி சிம்ஹன் அம்மா துபாய்க்கு வந்திருப்பது தெரிந்ததும் தொலைபேசினேன் கனிவும் அன்பும் கலந்து நெகிழ்வான ஒரு குரலை கடைசியாய் எப்போது கேட்டேன் என நினைவில்லை.ஆனால் பேசிய பத்து நிமிடங்கள் மகிழ்வாயிருந்தது.பண்புடனுக்கான அறிமுகமும் வல்லியம்மாவை சந்திப்பதற்குமான ஒரு வாய்ப்பாகவும் வெள்ளி மாலை அமைந்தது.கராமா பார்க்கில் கூடி அறிமுக படலம் முடிந்த பின் சிவ் ஸ்டார் பவனில் அமர்ந்தோம்.உடம்பு சரியில்லாத மகி,விடுமுறைக்கு சென்றிருக்கும் பினாத்தலார் மற்றும் லொடுக்காரையும் தவிர்த்து எல்லாரும் வந்திருந்தார்கள்.புதிதாய் சுபேர் என்றொரு பதிவரும் வந்திருந்தார்.

பண்புடனுக்கான அறிமுகத்தை நான் கொடுத்தேன்.பண்புடனுக்கென்று எந்த கொள்கைகளும் கடுமையான சட்ட திட்டங்களும் தான் தோன்றித்தனமான நம்பிக்கைகளும் இல்லை.இது முழுக்க முழுக்க சுதந்திரமான ஒரு இடம்.கருத்தாடல்,கலந்துரையாடல் அவற்றோடு அன்பையும் பண்புடன் பறிமாறிக்கொள்ள ஏதுவான இடம்.செறிவான பரந்த நோக்கமுடைய நபர்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது.வயதுக்கு வராத புனிதர்கள் யாரும் இங்கில்லை என்பதையும் சொல்லிக்கொள்ள வேண்டியுமிருக்கிறது.பண்புடன் வணக்க த்தில் குழு பற்றிய தெளிவான அறிமுகமிருக்கிறது.இதுவரை யாரும் சேராதவர்கள் இதைப் பிடித்துக்கொண்டு வந்துவிடவும்.

அமீரகத்தில் பதிவர் பட்டறை நடத்துவதன் சிக்கல்களை குறித்து அண்ணாச்சி பேசினார்.சென்னை பட்டறையின் வெற்றிக்கு பின்னிருந்த உழைப்பையும்,சரியான திட்டமிடல்களை யும் அனைவரும் சிலாகித்தோம்.கையோடு கொண்டுவந்திருந்த பதிவர் பட்டறை பை,துண்டறிக்கைகள்,குறுந்தகடு என எல்லாவற்றையும் பார்த்தோம்.அமீரகத்தில் இடவசதியும் இணைய வசதியும் தற்போதைய சவால்கள்.நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பட்டறை நடத்திவிட வேண்டும் அதற்கான இடைவெளியில் சிக்கல்களை தீர்ப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இங்கே மாலன்கள் யாருமில்லை என்பதால் கருத்தாடல் பிரச்சினைகள் எதுவும் எழுவதற்கான வாய்ப்புகளில்லை.மேலதிகமாய் சென்னை வலைப்பதிவர் பட்டறை எடுத்துக்காட்டாய் இருப்பதால் புதிதாய் எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்கள் எதுவுமில்லை.

வானொலி அறிவிப்பாளர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பினோம்.துபாயில் தமிழ் வானொலி அறிவிப்பாளர்களின் கொலைவெறி குறித்து அபிஅப்பா மற்றும் லியோ சுரேஷ் மிகவும் வருத்தப்பட்டார்கள்.ஜெஸிலாவும் அபிஅப்பாவும் ஏற்கனவே பதிவிட்டதும் நினைவிருக்கலாம்.சுசித்ராவின் குரலோடு விடிந்த சென்னை காலைகள் சுறுசுறுப்பாக இருந்ததை மறுக்க முடியாது.குரல்வளத் தேர்வுகளோடு அவர்களின் அறிவு வளர்ச்சி குறித்தும் நிர்வாகங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம்.தமிழ்சூழலைப் பொருத்தவரை அடிப்படைத் தகுதிகள் என்பது எதற்குமே தேவையில்லாமல் போய்விட்டது அரசியல்,கலை,இலக்கியம் என எங்கும் அரைகுறைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக விரவிக்கிடப்பதாலும் வெகு சன ஊடகங்களின் திரிபுகளாலும் தமிழில் சிறந்த படைப்புகளோ படைப்பாளிகளோ வருவது மிகவும் அரிதாகிப் போய்விட்டது.இணையத்தைப் பொருத்தவரை இலவச குழுமமொன்றைத் துவங்கி விட்டாலே சிலருக்கு கொம்பு முளைத்துவிடுகிறது.இந்த கும்பல்களின் சிறு பிள்ளைத் தனமான பேச்சுகளும் செயல்களும் சிரிப்பையோடு அவ்வப்போது கோபத்தையும் வரவைக்கிறது.தானொரு குழுமத்தை நடத்தி வந்தாலும் புதிதாய் தொடங்கப்பட்ட ஒன்றினுக்கு வந்து வாழ்த்துக்களையும் அன்பையும் பறிமாறிக்கொள்ளும் மஞ்சூர் ராசா போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


வல்லியம்மாவிற்கு நினைவு பரிசாய் ஆசிப் புத்தகங்கள் வழங்கினார்.ஃபாத்தினும் கையோடு பாட்டிக்கொரு பரிசை கொண்டுவந்திருந்தாள்.ஜெஸிலா,வல்லியம்மா,சுல்தான் பாய்,லியோ சுரேஷை அனுப்பிவைத்துவிட்டு கடைக்கு வெளியே வந்து நின்றபடியே வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.திராவிடம் பெரியாரியல் திரைப்படங்கள்,மலிந்து போன வரலாற்றுத் திரிபுகள்,படைப்புத்திருட்டுக்கள் என பேச்சு நீண்டு கொண்டே போனது.லக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தொலைபேசியில் சொன்னோம்.வரிசையாய் இருபது பேருக்கு மேல் வாழ்த்துக்கள் சொல்லுவோம் என லக்கி நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.ஜி யுடனும் தொலை பேசினோம்.அண்ணாச்சியிடம் ஆள்விரட்டிகளை (புத்தகங்கள்)பறிமாறிக்கொண்டேன்.கொற்றவையை கொடுத்துவிட்டு ஐந்து புத்தகங்களைத் தள்ளிக்கொண்டு வந்தாயிற்று.திரைப்பட குறுந்தட்டுக்களும் கைமாறின.

சுபேரும் அவரின் நண்பரும் முதலில் கிளம்பி விட்டார்கள்.மின்னலும் அவரது நண்பரும் இரண்டாவதாய்.முத்துக்குமரன் நண்பன் மற்றும் குசும்பர் ஒரு வண்டியில் கிளம்பி போணார்கள்.
அண்ணாச்சியும் கிளம்பிப் போனபின் சென்ஷியும் கோபியும் டாக்சி பிடித்தார்கள்.தம்பியும் அபிஅப்பாவும் தியாகுவோடு கிளம்பினார்கள்.எல்லாரையும் அனுப்பிவைத்துவிட்டு மாடிப்படி ஏறுகையில் தோன்றியது வலையில் எழுதி நான் சாதித்தது என்னவென்றால் சில அற்புத மனிதர்களின் அறிமுகமும் சில இதயங்களின் அன்பையும் சம்பாதித்துக்கொண்டதுதான்.

Saturday, August 11, 2007

சுஜாதாவால மட்டுந்தான் இப்படி எழுத முடியுமா என்ன?



இன்று மாலை காற்று அதிகமில்லாதிருந்தது இறகுப்பந்து விளையாட ஏதுவாயிருந்தது.இந்த வாரத்தில் இன்றுதான் சிறப்பாக விளையாடினோம்.நடந்தாலே வியர்க்கும் துபாயில் விளையாடினால் கேட்கவா வேண்டும். விளையாடி முடித்து திரும்பும்போது பனியனை கழட்டி பிழிந்த வியர்வையை தண்ணீர் பாட்டிலில் பிடித்தேன்.
-----------×××----------------
குசும்பன் அண்ட் கோ கராமா வருவதாய் தொலைபேசினார்கள்.எல்லோரும் பனோரமா போனபோது வாசலில் பெரிதாய் பூட்டு தொங்கியது.இன்று துபாயிலிருக்கும் அத்தனை மதுவிடுதிகளுக்கும் விடுமுறை எனத் தெரியவந்தது.வீக் எண்டல லீவா என குமைந்தபடி மீனாபிளாசாவையும் கராமா ஓட்டலையும் எட்டிப்பார்த்து அங்கேயும் பூட்டுக்களை உறுதி செய்துவிட்டு கராமா பார்க் வந்தோம்.இதுவே நம்ம ஊரே இருந்தா காந்தி ஜெயந்திக்கு கூட பிளாக்கில வாங்கலாம் என்ன இருந்தாலும் நம்ம ஊர் மதிரி வருமா? எனப் புலம்பியபடி பார்க்கில் கதையளந்தோம்.பிலிப்பைன் தேசத்துப் பெண்ணொருத்தியை இருளின் துணையோடு ஆராய்ந்து கொண்டிருந்த நம் தமிழ்பையனின் அதிர்ஷ்டத்தை எண்ணிப் புலம்பி அவரவர் காதில் புகைவிட்டுத் திரும்பினோம்.நள்ளிரவில் வாகன நெரிசல் எத்தனை எரிச்சலான ஒன்று.
-----------×××----------------
பின்னிரவில் படிப்பதற்க்குக் கவிதை உகந்தது.அனிதாவின் தனிமைப்பெருவெளி மிக இணக்கமாக இருந்தது.நிகழ்வுகளின் மென் தொடுகை,மறைந்திருக்கும் குரூரம்,கசப்பின் வேர்,என எல்லா உணர்வுகளும் கவிதையில் அழகாய் வெளிப்படிருந்தது.அணில், குளம், மரம், பேருந்து, சன்னல், நெரிசல், தனிமை என பழகிய படிமங்களினூடாய் இவர் பார்த்திருக்கும் உலகம் அற்புதம்.மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுவது அன்பின் மிகுதியென்பதைத் தவிர வேறென்னவாய் இருக்கமுடியும்?.
-----------×××----------------
விழிக்கும்போதே படிக்காமல் சேர்ந்துவிட்டிருந்த புத்தகங்களை நினைத்துக்கொண்டேன்.தற்கால மலையாளக் கவிதைகள் ஜெயமோகன் மொழிபெயர்த்திருக்கிறார்.அத்தனை கவிதைகளிலும் யதார்த்தம் நிரம்பி வழிந்தது.அழகுணர்ச்சியோ படிமங்களோ நுட்பமோ இல்லை வெற்றுச் சொற்கள் மூலம் கோபம் கொட்டி எழுதுகிறார்கள் மலையாளக் கவிகள்.ஜெமோ சொல்வது போல் தமிழ் மலையாளத்திலிருந்தும் மலையாளம் தமிழிலிருந்தும் கற்றுக்கொள்ளக் கவிதையைப் பொறுத்தமட்டில் நிறைய இருக்கிறது.நகுலன் நாவல்களை மிக மெதுவாய் படிக்கப் பிடித்திருக்கிறது.நவீனன் டைரியை மீண்டும் படித்தபோது முன்பு படித்தது போல இல்லை.
கொற்றவையின் முதல் பத்து பக்கங்கள் எரிச்சலாக இருந்தது.நான் எழுதும் கவிதைகளை புரிந்து கொள்ள முடியாத வாசகனின் மனோநிலையும் இப்படித்தானே இருக்கும் என எண்ணிச் சிரித்துக் கொண்டேன்.கானல் நதியை வாங்கிப்போன கதிர் எவன்யா இப்படி எழுதுறான்?.ஒரு மண்ணும் புரியல ஏதோ மொழிபெயர்ப்பு நாவல் போல என்று சலித்தபடி திருப்பித்தந்தான்.கதிருக்கு புனைவு பற்றி விரிவாய் ஒரு நாள் சொல்லனும்.கானல்நதியின் ஆரம்பப் பக்கங்களே அட்டகாசம்! யுவனின் எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது.குள்ளசித்தன் சரித்திரம் என் வாழ்வோடு வெகு தொடர்புடைய நாவல்.யுவன் சந்திக்க வேண்டிய நபர்களில் ஒருவர்.
-----------×××----------------
மதியம் பொன்னுசாமியில் நடப்பன பறப்பனவைகளை வதம் பண்ணித் திரும்பிய களைப்பில் கண்ணைச் சுழற்றியது.ஓஒ வென்ற தொலைக்காட்சி அதிர்வில் பதைத்துக் கண்விழித்தபோது தோனி வாண வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தான். அட நம்ம பசங்களா! என ஆச்சர்யமாய் வெகு நாட்கள் கழித்து விளையாட்டைப் பார்த்தேன்.தோனியின் தைரியம் மிகவும் பிடித்திருந்தது.டெஸ்ட் மேட்சுகளில் 90 ஐ தொட்டுவிட்டாலே ஆடு திருடிய கள்ளனைப்போல நம் வீரர்கள் விழிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.தடவி தடவி 100 அடித்து பின் அடிக்க முயன்று 103 க்கு அவுட் ஆகித் திரும்புவர்.அதுபோல இல்லாமல் தொடர்ந்து மூன்றாவது சிக்ஸ்ருக்கு பந்தை அனுப்பமுயன்ற தோனியின் அணுகுமுறை சுத்த விளையாட்டு.கும்ப்ளே அடித்த செஞ்சுரி விசேச போனஸ்.
-----------×××----------------
இளவஞ்சி பின்னூட்டம் படிய்யா மோகந்தாஸ் பதிவிலே என்று கதிர் தொலைபேசினான் வெள்ளிக்கிழமை யாருடனும் சாட்டுவதில்லை.ஆஃப் லைனில் வலை மேய்ந்தபோது இளவஞ்சியின் பின்னூட்டம் படித்து சிரித்துக்கொண்டேன்.வெங்கட்ராமன் கண்டிப்பாய் அதிர்ந்துபோய் இருப்பார்.நான்கு சுவர்களுக்குள் கயமைத்தனத்தின் மொத்த உருவமாய் இருக்கும் மனித மனம் நான்கு பேர்களுக்கு மத்தியில் புனித பிம்பங்களை புனைந்துகொள்கிறது.சயந்தன் பின்னூட்டத்தின் மூலமாக தந்திருந்த தகவல் முள்ளாய் தைத்தது.டிசே அநாமதேய பின்னூட்டங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் ஆனாலும் அவரின் விளக்கமும் செறிவு.மொக்கை கிங்காய் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகச்சரியன தேர்வு.பொட்டி கடை கெட்ட ஆளுய்யா அதும் அவரோட சேர்ந்து லக்கி அண்ட் கோ அடிக்கும் கும்மி ச்சே கெட்ட பசங்கபா.உங்க பதிவில பின்னூட்டம் போட்ட தமிழச்சி நிசமாய்யா? இல்ல நீங்களே கிரியேட் பண்ணிங்களா?பெயரிலி யை வழக்கம்போல் மெதுவாய்த்தான் படிக்க வேண்டும்.லக்ஷ்மியின் விளக்கமும் பொன்ஸின் தொலைந்த எலியும் புன்முறுவலைத் தந்தது.எலி தான பொன்ஸ் போன போகட்டும் விடுங்க.எனக்கென்னமோ நந்தா மேலதான் டவுட் :)
-----------×××----------------

வார இறுதி நாளில் பியர் குடிக்காமலிருப்பது உடல் நலத்திற்க்குத் தீங்கானது என்ற சான்றோர் வாக்கை பொய்க்க விரும்பாமல் கராமா ஓட்டல் போனோம்.நலம் விசாரித்த பல்லுக்குக் கிளிப் போட்டிருந்த பிலிப்பைன் தேசத்துப்பெண்ணை பதிலுக்கு நலம் விசாரித்தேன் உன் கிளிப்பை எப்போது கழட்டப்போகிறாய் என்றதற்க்கு இன்னும் ஆறுமாதமிருக்கிறது என வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்.கிளிப் போட்டாலும் உன் புன்னகை வசீகரமானதுதான் என்பதற்க்குப் பதிலாய் சூடான பாப்கார்னகளை கிண்ணத்தில் நிரப்பினாள்.சில பொய்களுக்கு பலன் உடனே கிட்டி விடுகிறது.முடித்துத் திரும்புகையில் தாட்டியான ஆப்பிரிக்க தேசத்துப் பெண் வோட்கா பாட்டிலை இடுப்பில் சொருகியபடி வான்னா ட்ரை டகீலா என்றாள்.ஆள விடு ஆத்தா நாளைக்கு ஆபிசு போகனும் எனத் தமிழிலேயே சொல்லி நடையை கட்டினோம்.
-----------×××----------------

எனக்குப் பிடித்த கவிதை-அனிதா

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்

மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்தான்.
ஏன் அழறீங்க என்றவன் பின் தயங்கி
அழாதீங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்
-----------×××----------------

Featured Post

test

 test