Showing posts with label இருத்தலியம். Show all posts
Showing posts with label இருத்தலியம். Show all posts

Wednesday, February 7, 2018

முன்பின் எந்தச் சாயல்களுமில்லாத இன்றைப்போல


லாகிரி வஸ்துக்களைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன். ஒப்பீட்டளவில் பெரும் தீங்கைத் தரும்  இணையம் மற்றும் ஃபேஸ்புக் புழக்கத்தையும் குறைத்துவிட்டேன். அலுவலகக் கணினியில் ஹென்றி மில்லர் - தற்போது செக்ஸஸ் -1, காரில் முரகாமியின் Dance Dance Dance  ஒலி நூல்,  ஐபோனில் What we talk about When we talk about Running, Mac இல் நார்கோஸ் தொடர், டிவியில் சத்யஜித்ரே என எல்லாவற்றையும் பிடித்தமானதாக மட்டும் மாற்றி வைத்திருக்கிறேன். மாலை வேளைகளில் குடும்பத்தோடு வேதாத்திரி மகரிஷியின் எளிய உடற்பயிற்சிகள். வியாழக் கிழமைகளில் ஷீரடி சாய்பாபாவை நோன்பிருந்து வணங்குதல் என பெளதீக இருப்பும்  ஒழுங்கமைவில் சென்றுகொண்டிருக்கிறது. மனமும் உடலும் நீரூற்றிக் கழுவிட்ட சிவப்பு சிமெண்ட் தரை போல இருக்கிறது. அத்தனைக் குளுமை. சுகந்தம். மெளனம். அமைதி. ஏகாந்தம்.

சகலமும் ஒரு நிலைக்கு வந்திருக்கிறது. தலைக்குள் எப்போதும் கேட்கும் இரைச்சல் இல்லை. இனி வேண்டுவது, ஆவது, சென்றடைவது என்றெல்லாம் எதுவும் கிடையாது. வழக்கமான பழக்கத்தின் விளைவால் வார இறுதியின் மாலைகள் மட்டும் சற்றுச் சவாலாக இருக்கிறதுதாம் ஆனால் அதைக் கடந்துவிடவும் முடிகிறது.

வார நாட்களைப் போலவே வார இறுதியிலும் அதிகாலையில் விழிப்பு வந்துவிடுகிறது. பிடித்தமாதிரியான காஃபியைத் தயாரித்து அருந்துகிறேன். இங்கு வந்து வசித்த வீடுகளில் தற்போது வசிக்கும் இந்த வீடே ஒப்பீட்டளவில் மிக விசாலமான, வெளிச்சமான வீடு. வீட்டிற்கு முன் கட்டிடங்களில்லாத வெளியும் கிடைத்திருப்பதால் வெளிச்சமும் காற்றும் வீட்டை நிரப்புகின்றன. பால்கனியில் நின்று  உயர்ந்திருக்கும் கட்டிடங்களோடு மெளனமாய் உரையாட முடிகிறது. எட்டு வருடங்களுக்கு முன்பு பர் துபாய் வீட்டில் வசித்தபோது  வீடுகளைப் பற்றி குளிர் நினைவுகள் என்றொரு குறிப்பை எழுதினேன். அந்த வீட்டிற்குப் பிறகும் ஐந்து வீடுகள் மாறினேன். இது நான் வசிக்கும் முப்பதாவது வீடு. அதேப் புன்னகைதாம் ஆனால் அயற்சியில்லை.

அடுத்து எழுத வேண்டிய நாவல் குறித்தான எண்ணங்கள் அவ்வப்போது வந்து போகின்றன. திருவண்ணாமலை ட்ரிலாஜியின் கடைசி நாவலைத்தான் ஓரிதழ்ப்பூவிற்குப் பிறகு எழுத வேண்டும் என  திட்டமிட்டிருந்தேன்.  என்னுடைய ஏழு வயதில் ஜப்தி காரியந்தல் கிராமத்திலிருந்து திருவண்ணாமலை தேனிமலைப் பகுதிக்கு வந்து குடியேறினோம். தண்டராம்பட்டு  சாலையை ஒட்டியே என் பாட்டி நிலம் வாங்கி வீட்டைக் கட்டினார்கள். வீட்டு முகவரி பார்வதி நகர் என்றாலும்  வீடிருக்கும் பகுதி தேனிமலைதான்.

தேனிமலைப் பகுதியில்  1980 களில்  24 மனை தெலுங்கு செட்டியார்களும் ஒரு குழுவாக வந்து குடியேறினார்கள். துணிகளை மூட்டை கட்டியும் சைக்கிளில் வைத்துமாய் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று விற்று வருவார்கள் என்பதால் அவர்களைப் பொதுவாக மூட்டைக்காரர்கள் என அழைப்பார்கள்.  அவர்களுக்கு முன்பே  தேனிமலையில் ஒட்டர்கள் வசித்து வந்தனர். பன்றி வளர்ப்பு அவர்களின் முதன்மையான தொழிலாக இருந்தது. இந்த இரு சமூகங்களுக்கிடையே இருந்த நட்புறவும் விரோதமும்தான் பிரதான கதைக் களம்.

90 களின் இறுதியில் எங்கள் பகுதி மெல்ல அடையாளமிழந்தது. தாமரைக் குளத்திலிருந்து ஆரம்பித்து பார்வதி நகர் வரைக்குமாய் விரிந்திருந்த பசுமையான வயல்களை, குளங்களை, குட்டைகளை, கிணறுகளை அழித்துவிட்டு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளை அமைத்தது. என் கண் முன்னால் நிகழ்ந்த இந்த மாற்றம் ஏற்றுக் கொள்ள முடியாததாய் இருந்தது. அவ்வளவு கொண்டாட்டமான என் பால்யம் திடுதிப்பென வெளிறிப்போனது.

என்னுடைய முதல் இருபது வருட வாழ்வையும் இதன் பின்னணியில் சேர்த்து எழுதி திருவண்ணாமலை   ட்ரிலாஜியை நிறைவு செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் இதற்கு இன்னும் சில தகவல்கள் தேவைப்படுகின்றன. தேனிமலைப் பகுதியில் எஞ்சியிருக்கும் சில முதியவர்களை சந்திக்க வேண்டும். எனவே தற்போதைக்கு என் எந்த சாயல்களுமில்லாத ஒரு நாவலை எழுதிப் பார்க்கும் ஆவல் எழுந்திருக்கிறது.  புதிர், காமம், குடி, வன்முறை எல்லாமும் அலுப்பாகத் தோன்றுவதால் முற்றிலும் புதியதொரு எண்ணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

நேற்றின் எந்தச் சாயல்களுமில்லாத இன்று எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது என்பதை நேற்றைக் கொன்றவர்களே அறிவர்.

Sunday, March 10, 2013

பாரதிக்குப் பிறகு..


பாரதிக்குப் பிறகு மனுஷ்யபுத்ரன்தான் 
சாரு சொன்னார். இனியும் ஸொல்வாரா எனத் தெரியாது
பாரதிக்குப் பிறகு தேவதேவன்தான் 
ஜெமோ சொன்னார்.இனியும் ஸொல்வார்
பாரதிக்குப் பிறகு நீதான் மச்சி
நாக்குழறலாய் நண்பன் சொன்னது
அடுத்த குடியிலும் நிச்சயம் ஸொல்வான்
பாரதிக்குப் பிறகு நீதாண்டி 
நாக்குழறாமல் நானும் ஒரு 
கவிஞரிடம் ஸொன்ன நினைவு
அடுத்த முறையும் ஸொல்ல  தயார்தான்
அவள்தான் கேட்க விரும்பாமல் போய்விட்டாள்.                                                                                                                                      


·         இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஜாலி' யான மூடில் எழுதியது. சீரியசான மூடில் படித்தாலும் சரியாக இருப்பதுபோல் தோன்றியதால் இங்கே


Wednesday, December 8, 2010

நந்தலாலா- தனித்துவத்தின் பாடல்



தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் என அறியப்பட்ட பெரும்பாலான படங்களுக்குச் சில பொதுத் தன்மைகள் இருக்கும். அழுத்தமான காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை கதறி அழ வைப்பது, எதிர்பார்த்திராத மிகப்பெரிய அதிர்ச்சியை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாத்திரங்கள் மூலமாய் ஏற்படுத்தி பார்வையாளர்களை ஒரு விதத் துயர மன நிலைக்குத் தள்ளுவது போன்றவைகள் சில உதாரணங்கள். சமீபத்தில் வெளிவந்து தமிழின் சிறந்த படங்களாக அறியப்பட்ட காதல்,பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம், அங்காடித் தெரு போன்ற படங்களும் இந்த பொது விதிகளுக்கு உட்பட்டுத்தான் தங்களின் இடங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. அத்துடன் இயக்குநரின் ஒட்டு மொத்த திறமையையும் வசனங்களின் மூலமோ, காட்சிகளின் மூலமோ, மொத்தமாய் கொட்டி படத்தின் சிறந்த கலைத் தன்மையை நிறுவிக் கொள்வதுதாம் வழக்கமானதாக இருந்து வந்திருக்கின்றது. இந்தப் பொதுத் தன்மை இந்திய அளவில் கூட பொருந்திப் போகலாம்.

சத்யஜித்ரேவிலிருந்து சமீபத்திய வசந்தபாலன் வரைக்குமாய் இந்திய சினிமாக்களில் சிறந்த படங்கள் என அறியப்பட்டவைகளில் பெரும்பாலானவை அழுகாச்சி படங்கள்தாம். மூளையிலிருக்கும் எல்லாவற்றையும் திரையில் பகிரங்கப்படுத்தி, ஒரு வித திணிக்கப்பட்ட கதை சொல்லல்கள்தாம் பெரும்பாலும் நம் திரையை நிறைத்து வந்திருக்கின்றன. இந்தப் பொதுத் தன்மையை நந்தலாலா உடைத்திருக்கிறது. அழுத்தத்தைக் கொண்டு வருகிறேன் பார் என்றெல்லாம் முக்கி முக்கி மெனக்கெடாமல் போகிற போக்கில் விசிறலாய் இந்தப் படம் ஏகப்பட்டக் கிளர்வுகளை,அழுத்தங்களை,நெகிழ்வுகளை,கரைவுகளை பார்வையாளரிடத்தில் கடத்திச் செல்கிறது. எல்லாவற்றையும் சொல்லி விடுவதன் அபத்தங்களிலிருந்துத் தப்பித்து நந்தலாலா மெளனத்தை இசைக்கிறது. சொல்லாமல் விடுவதன் இன்பத்தை நந்தலாலாவின் ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது. படம் பார்த்து முடித்த பின்பு அந்த மெளனம் நம்மையும் ஆக்ரமிக்கிறது.


மிஷ்கினின் திரைமொழி தமிழிற்கு மிகவும் புதிது. இதுவரைக்குமில்லாத புதியதொரு திரை பாணியை மிஷ்கின் தக்க வைத்திருக்கிறார். இவரின் திரை நாயகர்கள் பதட்டமானவர்கள். முரட்டுத்தனமும் கனிவும் நிரம்பியவர்கள். மிஷ்கினின் படங்களில் முகங்களை விட கால்கள் பிரதானமானவை. செவ்வியல் நாடகத் தன்மையும், போலி பாவனைகளிலிருந்து தப்பித்து நேரடியாய் இதயத்தோடு பேசும் வசன உத்தியும் மிஷ்கினின் தனித் தன்மைகள். இவரின் மூன்று படங்களும் மெல்லியதொரு பதட்டத்தை, அலைவை ஒவ்வொரு காட்சியிலும் தக்க வைத்திருக்கின்றன. ஒரு வித சிலிர்ப்பு மன நிலையை மிஷ்கினின் சித்திரம் பேசுதடியும் அஞ்சாதேவும் எனக்குப் பரிசாகத் தந்தன. நந்தலாலா இந்தப் பதட்டங்களிலிருந்து மீண்டு நிறைவை அடைந்திருக்கிறது. தனித் தன்மைகள் நிறைந்த ஒரு படத்தை உருவாக்குதென்பது மிகவும் கடினமானது. தனக்கான ஒரு பாணியை, திரை மொழியை தக்க வைத்துக் கொண்டவர்கள் நம் சூழலில் வெகு சிலரே. அந்த வெகு சிலரின் பட்டியலில் மிஷ்கினும் இணைகிறார்.

அகிரா குரசோவாவின் பெரும்பாலான படங்களில் அற உணர்வும், மனித நேயமும், அன்பும், கருணையும் மேலோங்கி இருக்கும். ஆனால் எதையும் வெளிப்படையாக காட்சிப்படுத்தியிருக்க மாட்டார். துருத்திக் கொண்டிருக்கும் எந்த ஒரு பிரச்சார வசனங்களும், அழுத்தக் காட்சிகளும் இவரது படங்களில் கிடையாது. இவரது கதாபாத்திரங்கள் அன்பையும் அறத்தையும் இயல்பான ஒரு விஷயமாகக் கொண்டிருக்கும். எனக்குப் பிடித்த அகிராவின் கதாபாத்திரங்கள் சிலவற்றை யோசிக்கும்போது உடனடியாய் நினைவுக்கு வருபவையாக Madadayo படத்தின் விரிவுரையாளர், Dersu Uzala படத்தில் வரும் நாடோடி வேட்டைக்காரன், The Lower Depths படத்தில் வரும் துறவி கதாபாத்திரங்களைச் சொல்லலாம். நேய உணர்வை படம் முழுக்க பயணிக்கும் ஒரு துணைக் கதாபாத்திரமாகவே அகிரா மாற்றிவிடுவார். Red Beard டாக்டர் பாத்திரத்திலிருந்து இடியட் மிஷ்கின் பாத்திரம் வரைக்குமாய் அறம்தான் அகிராவின் முக்கியமான பேசுபொருளாக அவரின் படங்கள் முழுக்கப் பயணித்து வந்திருக்கிறது

அகிராவிற்கு அடுத்தபடியாய் மிஷ்கினின் படங்கள் இதே தளத்தில் இயங்குகின்றன. நாடகத் தன்மையும் உணர்வெழுச்சியும் மிகுந்த கதாபாத்திரங்கள், திடீரென அதற்கு நேர்மாறாய் அமைதித் தன்மைக்கு திரும்பும் வினை மாற்றங்கள் எல்லாம் அகிராவின் படங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்த அற்புதம். பூனை வளர்க்கும் Madadayo படத்தின் பேராசிரியர் கதாபாத்திரத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். வாழ்வின் மேலான நிலை, கீழான நிலை என எல்லாவற்றையும் புன்னகையோடும் அன்போடும் கடக்கும் பேராசிரியர் தான் வளர்த்த பூனை காணாமல் போனபின்பு அடம்பிடிக்கும் சிறுவன் மன நிலைக்குத் தாவிவிடுவார். இம்மாதிரியான வினோத அகிரா கதாபாத்திரங்களின் ஒட்டு மொத்த சாரமாகவே பாஸ்கர் மணி கதாபாத்திரம் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தின் வலிமையை உணர்வுபூர்வமாக வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது (அகிராவின் தீவிர இரசிகர்களைத் தவிர) என்கிற சிக்கல் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது மிஷ்கினுக்கு தோன்றியிருக்கலாம். அதன் நிமித்தமாகவே இந்தக் கதாபாத்திரத்தில் மிஷ்கினே நடித்திருக்கலாம். ஒரு வகையில் இந்த முடிவு பாராட்டப்பட வேண்டியது. வேறு எந்தத் தொழில் முறை நடிகராலும் பாஸ்கர் மணி கதாபாத்திரத்தை சிறப்பாய் செய்திருக்க முடியாது.

நந்தலாலாவின் அடிநாதம் வெகு எளிமையான ஆனால் ஒட்டுமொத்த கிழக்குச் சித்தாந்தத்தின் சாரமாய் இருக்க கூடிய நிலைப்பாடுதாம். அது அன்பை வெளியே தேட வேண்டியதில்லை என்பதுதாம். இதுநாள் வரைக்குமாய் அன்பை நாம் எப்படிப் புரிந்து வந்திருக்கிறோம்? உறவுகளின் வழியே நாம் பெறுவதுதாம் அன்பா? பிற மனிதர்களிடமிருந்து பெறுவது மட்டும்தான் அன்பா? நமக்கே நமக்காய் இருப்பது மட்டும்தான் அன்பா? என்பன போன்ற அடிப்படைக் கேள்விகளை வெவ்வேறு நிகழ்வுகளின் மூலமாய் இத்திரைப்படம் தொடர்ச்சியாய் எழுப்புகிறது. இறுதியில் வேறு எவரிடமிருந்தும் பெற்றுவிடமுடியாத, இதற்காகத்தான் இது என்கிற கொடுக்கல் வாங்கல் பிணைப்பில்லாத, தன்னுள் மட்டுமே முழுமையாய் நிறைந்திருக்கும் பேரமைதிதான் அன்பு என்பதை எல்லாரும் உணர்ந்து கொள்வதாய் இந்தப் படம்/பயணம் நிறைவடையும். தமிழில் இம்மாதிரியான ஒரு தளத்தில் வேறு ஏதாவது முயற்சிகள் நடந்திருக்கிறதா? என்றால் சின்னத் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது. இந்தப் படத்தில் சொல்லப்பட்டதை விட சொல்லப்படாதவைகள் ஏராளம். அந்த சொல்லப்படாதவைகளைப் புரிந்துகொள்ள அங்கங்கே சிறுசிறு பாதைகளை இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது. அந்தப் பாதைகளின் வழியை தொடரும்போது ஏற்படும் உணர்விற்குப் பெயர் பிரம்மிப்பாகத்தான் இருக்க முடியும்.

நந்தலாலா படம் முழுக்க சின்ன சின்னதாய் ஏகப்பட்ட நுட்பங்கள் விரவிக் கிடக்கின்றன. இத்தனைச் சிக்கனமாய் ஒரு படைப்பைச் செதுக்கியிருக்கும் மிஷ்கினின் அறிதல் மீது அன்பு பெருக்கெடுக்கிறது. பாஸ்கர் மணி சுவற்றில் கோடு கிழித்தபடியே நடப்பதன் மூலமாய் ஆதூரமான ஒரு பிடிமாணத்திற்காய் ஏங்கித் தவிக்கும் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அறிமுகக் காட்சியில் கவனமாகவும், தன் தாயைச் சுமந்தபடி வெளியேறும் காட்சியில் அநிச்சையாகவும் இந்தச் சுவர் கோடு காட்சி பதியப்பட்டிருக்கிறது. மிஷ்கின் வேறோ அவரது தாய் வேறோ அல்ல. சொல்லப்போனால் இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே ஒன்றுதான். தன் தாயின் சாயல்களை பாலியல் தொழிலாளியிடம் வெறித்தனமாய் தேடும் கிழவன் உட்பட அனைவரும் ஒன்றைத்தான் முன் வைக்கிறார்கள். அது அவர்களுக்குக் கிடைக்காமல் போன அன்பாகத்தான் இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் அன்பிற்காய் ஏங்குகின்றனர். இவர்கள் அனைவருமே வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனிமையில் கழிக்க சபிக்கப் பட்டவர்களாய் இருந்திருக்கிறார்கள். யாராவது ஒருத்தர் அன்பின் சிறு பொறியைத் திறந்து காண்பித்தாலும் உடைந்து போகக் கூடியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே இந்த முயற்சியில் தோல்வியடைகிறார்கள். ‘நொண்டி’ ‘மெண்டல்’ என்கிற வார்த்தைகள் மட்டுமே இவர்களைச் சிதைக்கப் போதுமானதாய் இருக்கிறது.


கிழவனின் முரட்டுத் தடி ‘திம்’ ‘திம்’ என அதிர்ந்தபடி எல்லோரையும் ஒரு கட்டத்தில் தாக்குகிறது. ஏற்கனவே கைவிடப் பட்டவர்கள் இன்னும் செயலிழந்து போகிறார்கள். எல்லாம் உடைந்து அழ ஆரம்பிக்கும்போது மழை எல்லா நாற்றத்தையும் கழுவி விடும் என நம்புகிறார்கள்.ஒரு நிறைமாத தாய் பாம்பு கைவிடப்பட்டவர்களின் தலைப் பக்கமாய் ஊர்ந்து செல்கிறது. வயிற்றுக்குள் குட்டிப் பாம்போடு அது மிகப் பெரும் நம்பிக்கையையும் சுமந்தபடி ஊர்ந்து செல்கிறது. இருத்தலின் அழகை இத்தனைக் கச்சிதமாய் இந்திய சினிமாவில் நாம் பார்த்திருக்க முடியாது. படம் முழுக்க ஒன்றிலிருந்து இன்னொன்றுக்காய் கதாபாத்திரங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். பயணம் என்பது கதை நிகழும் தளமாக மட்டும் இல்லாமல் அகமும் புறமுமாய் பயணம் நிகழ்ந்தபடியிருக்கிறது. இறுதியில் வண்ண பலூன்களை சுமந்தபடி பாஸ்கர்மணி சேர்ந்த இருவரைக் கடந்து போகிறான். நாம் மெளனத்திற்குப் போகிறோம்.

2

கிக்கிஜீரோவை அட்டைக் காப்பி அடித்துவிட்டார்கள் என துப்பறியும் சாம்புக்களும், விமர்சன அதிபுத்திசாலிகளும் கண்டுபிடித்திருக்கிறார்கள். திருடன், திமிர்பிடித்தவன், ஆணாதிக்கவாதி என்றெல்லாம் கூட மிஷ்கினுக்குப் பல பட்டங்களை இணையத்தில் வாரி வழங்கியிருக்கிறார்கள். கிக்கிஜீரோதான் என்று நீ ஏன் ஆரம்பத்திலேயே ஒத்துக் கொள்ளவில்லை? இப்போது ஒப்புக்கொண்டாயா சரி, பிறகு ஏன் டைடில் கார்டில் கதை கிடானோ எனப் போடவில்லை? இப்படி மாறி மாறிக் கேள்விகளால் நம்மவர்கள் துளைத்தெடுக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சொல்லக் கூடிய ஒரே சரியான பதில் “ஆம் அது அப்படித்தான் நண்பர்களே!” என்பதுதாம். இருப்பினும் நான் புரிந்து கொண்ட வரையில் இந்தக் காப்பிக் களங்கத்திற்கு ‘சப்பை’ கட்ட முயற்சிக்கிறேன்.

அகிரா குரசோவாவையும், கிடானோவையும் தன்னுடைய மானசீக குருமார்கள் என்கிறார் மிஷ்கின். இவர்களின் படங்களின் மூலமாய்த்தான் மிஷ்கின் தனக்கான திரைமொழியைக் கண்டறிந்திருக்கிறார் என்பதை ஆரம்ப நிலை உலகப்பட பார்வையாளர்களால் கூட அனுமானித்து விட முடியும். தமிழ் சினிமாவின் ‘பிரம்மா’ கே.பாலச்சந்தர் சமீபத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார். “ஒரு காட்சி என்பது ஆரம்பம், நிகழ்வு, முடிவு என எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் அது அது சிறந்த படமாக முடியும்” நல்ல கருத்துதான். இப்படிச் சம்பிரதாயமாக எந்த ஒரு புண்ணாக்குமே இல்லாமல் காட்சிகளை உருவாக்கும் தமிழ் சினிமா சூழலில் ஏதாவது இருக்க வேண்டும் என அறிவுறுத்துவது நியாயமானதுதான். இம்மாதிரியான ஒண்ணாங் க்ளாஸ் தமிழ் சூழலில் மிஷ்கின் அடைந்திருக்கும் உயரத்தை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது கடினமானதுதான்.

மிஷ்கினின் திரைமொழி ஒரு காட்சியின் முடிவையும் இன்னொரு காட்சியின் முடிவையும் இணைக்கிறது. அதாவது அடுத்தடுத்த இரண்டு காட்சிகளின் முடிவை மட்டுமே மிஷ்கின் நமக்குப் பார்க்கக் கொடுக்கிறார். ஆரம்பத்தையும் நிகழ்வையும் வெட்டி எறிந்து விடுகிறார். இந்த உத்தியை மிஷ்கின் அஞ்சாதே படத்திலும் கச்சிதமாகப் பயன்படுத்தி இருப்பார். (நரேன் முதல் நாள் வேலைக்குப் போய் திரும்பி வரும் இரவுக் காட்சியை நினைவுபடுத்திப் பாருங்கள்) கிடானோ கிக்கிஜீரோவை முழுக்க இந்த பாணியில்தான் இயக்கியிருப்பார். நந்தலாலாவிற்கான சிறுவனை மிஷ்கின் கிக்கிஜீரோவில் கண்டுபிடித்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமைதான் இரண்டு படங்களையும் இணைக்கிறதே தவிர இரண்டு படங்களின் அடிநாதமும் வெவ்வேறு. கிக்கிஜீரோ வை இந்தப் படம் பல மடங்கு தாண்டியிருக்கிறது என்பதுதான் என் பார்வையாக இருக்கிறது.

உதாரணத்திற்கு லாரி ட்ரைவர் கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். சாலைப் பயணத்தை களமாகக் கொண்ட கதையில் லாரியையோ, லாரி ட்ரைவரையோ தவிர்க்க முடியாது. இதையெல்லாம் காப்பி என்றால் தமிழ் சினிமா ‘புத்திசாலி’ப் பார்வையாளனை ஒன்றுமே செய்ய இயலாததுதான். கிக்கிஜீரோ லாரி ஓட்டுநரும் நந்தலாலா லாரி ஓட்டுநரும் எந்த அளவிற்கு நுட்பமாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என யோசித்துப் பார்த்தாலே இரண்டு படங்களுக்குமான வித்தியாசம் புரிந்து விடும். நந்தலாலா கதாபாத்திரங்களில் என்னை மிகவும் நெகிழ வைத்த பாத்திரமாக இந்த லாரி ஓட்டுனர் இருக்கிறார். வலிமையான உடல் கொண்ட ஓட்டுநர், ஹாரனைத் திருடியதற்காக பாஸ்கர் மணியை அடி அடியென அடிப்பார். அப்படியே சாலையில் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பிக்கும் பாஸ்கர் மணியின் இயலாமை ஓட்டுநரை கலங்கடித்து விடும். பாடலின் பின்னணியில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் மனித நேயத்தின் உச்சம். இம்மாதிரியான ஒரு காட்சியைக் கூட கிக்கிஜீரோவில் பார்க்க முடியாது.

சிட்டி ஆஃப் காட் படத்தின் காப்பி புதுப்பேட்டை, பை சைக்கிள் தீஃப் படத்தின் காப்பி பொல்லாதவன், இன் டு த வைல்ட் படத்தின் காப்பி கற்றது தமிழ் என்பது மாதிரியான பயங்கரமான கண்டுபிடிப்புகளை நம்மவர்கள் தொடர்ச்சியாய் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் நல்ல படங்கள் வரத் துவங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இன்னும் தம்முடைய ஒலக சினிமா அறிவை பகிரங்கப்படுத்திக் கொண்டிராமல் ஆரோக்கியமான/ உருப்படியான விமர்சனங்களை விமர்சகர்கள் முன் வைக்க வேண்டும். காப்பி என்கிற விஷயம் அயோக்கியத்தனமானதுதான். அடுத்தவரின் உழைப்பைச் சுரண்டும் எல்லா வழிகளும் அடைக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் எது காப்பி? எது ஒரிஜினல்? என்கிற தெளிவு நம்மவரிடையே வளர்த்தெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

Friday, May 21, 2010

புவி இயக்கம்


இரு பெரும்
மலைத் துண்டுகளுக்கு
இடைப்பட்ட பிளவில்
பயணிக்கிறது
செங்கொன்றைப் பூ

தடித்த வேர்களிடமோ
தழை விரித்துப்
படர்ந்திருக்கும்
கிளைகளிடமோ
சிக்காது
நிலம் தொடும்
துல்லிய கணத்தில்
மலைகள்
நகரத் துவங்கும்
சமவெளிகள் சிதையும்
பள்ளத்தாக்குகள்
விழித்துக் கொள்ளும்

நெஞ்சு பதபதைக்க
பார்த்துக் கொண்டிருக்கும்
கடவுள்
மீண்டுமொரு சிகரெட்டைப்
பற்ற வைத்துக் கொள்கிறார்.

Saturday, December 20, 2008

வாசகனின் நாட்குறிப்பிலிருந்து...

19.02.2012 : ஞாயிறு: இரவு 8.30
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஏற்பட்ட உணர்வுகளை வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும்.வினோதங்களின் திகைப்புகளிலிருந்து விடுபட வெகுநேரம் பிடித்தது.

பயம்.. பயம்... பயம்... இந்த பயம் என்பதை திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி சொல்கையில் அல்லது கத்துகையில் பயம் பாசியைபோல் இழை இழையாகப் படரத் துவங்குகிறது. அடிவயிற்றிலா ஆரம்பிக்கிறது பயம்?இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஆனால் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர் பயம்தான்.இப்போதெல்லாம் அதிகமாக பயப்படுகிறேன்.காரணமேயில்லாமல்;பயப்பட வேண்டிய எந்த நிகழ்வுகளுமே நடந்துவிடாதபோதும் கூட என்னால் பயப்படாமல் இருக்கமுடியவில்லை....இதனால்தான் பயம் வருகிறது என்றெல்லாம் இல்லை.எல்லாமும் பய நிலைக்குத் தள்ளுகிறது.சென்ற வாரத்தில் தூக்கம் வராத பின்னிரவில் வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கிறதெனக் கவலைப்பட்டேன்.அடுத்தநாள் கிட்டத் தட்ட முன் தின இரவின் அதேப்பொழுதில் வாழ்வு எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறதென மிக அதிகமாய் வருந்தினேன்.இது மனநலம் தொடர்புடைய குறைபாடா என விபரீதமாய் யோசித்துத் தொலைகிறேன்.(இந்தப் பத்தியை எழுதி முடிக்கும்போது பாருங்களேன்..விபரீதம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறேன். கடந்த இரண்டு தினங்களில் இந்த விபரீதம் என்கிற வார்த்தையைப் பதினெட்டு முறை பயன்படுத்திவிட்டேன்.ஏன் சம்பந்தமே இல்லாமல் ஒரே வார்த்தை திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி என் நாவிலிருந்து வெளிப்பட வேண்டும்? ஏதேனும் விபரீதம் நிகழப்போவதைதான் மறைமுகமாக இது சுட்டுகிறதோ?எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.என்மேல் பேரன்பு கொண்ட தோலர், தோழர், தோழர்காள்! தோழரே!! டேய் தோலா!!! எனக்கு யாராவது உதவுங்களேன்...

-மீப்பெருவெளியில் தொலைந்த மீ (பீ)யொலிக் குறிப்புகள்:அய்யனார்

22.05.2012 :ஞாயிறு:இரவு 11
கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றின் நெகிழ்வுகள் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டிருக்கிறது.இந்தப் புத்தகத்தை படித்திருக்க வேண்டாம்தான்.படித்து முடித்ததும் விலகிப்போனவளின் நினைவுகள் விடாது இம்சிக்கத் துவங்கியது.

எல்லா ஞாயிற்றுக் கிழமைகளைப் போலவே இன்றும் ஏழு மணிக்கெல்லாம் வந்துவிட்டிருந்தாள்.டிசம்பர் மாதக் குளிரில் தண்ணீர் விறைத்திருக்கும்.எப்படிக் குளித்தாள் எனத் தெரியவில்லை.தலைக்கு வேறு குளித்துத் தொலைத்திருக்கிறாள்.விழித்தெழுந்த காலையில் மஞ்சள் நிற புடவையும்,தழைந்த கூந்தலில் மல்லிகைப் பூவுமாய் ஆத்மார்த்த காதலியை பார்க்கும் வாய்ப்பு கிட்டப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.அவளுக்கு விநாயகரை மிகவும் பிடிக்கும்.யானை என்றால்தான் பயப்படுவாள்.மணக்குள விநாயகருக்கு பனியில் குளித்திருந்த தாமரை மலர்களை இன்னொரு பனியில் குளித்த தாமரை சகிதமாக வாங்கிக் கொண்டு போய் சாத்தினேன்.விடுமுறை நாளை இப்படித்தான் துவங்குவோம்.எல்லாச் சனிக்கிழமை மாலைகளிலும் அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.இப்படிச் சொல்வாள் "முதல்ல கோயில்,அப்புறம் பீச்,..ம்ம்.. அப்புறம் கொஞ்சமா எங்காச்சிம் சாப்டுட்டு சினிமா..ஒரே ஒரு முத்தம்தான் ஓகேவா?..மதியம் எங்காச்சும் போய் நான்வெஜ்... ஹாஸ்டல் சாப்பாடு கொடும தெரியுமா?..சாயந்திரம் நம்ம பார்க்ல.. நம்ம ப்ளேஸ் அங்கயும் ஒண்ணே ஒண்ணுதான்.."அவள் சொன்ன முறை மாறாது ஒரு நாள் கழியும்.முத்தக் கணக்கில் மட்டும் சற்று தாராளமாய் இருப்பாள்.வழக்கமாய் நடப்பதை எதற்கு எழுதிக் கொண்டிருக்கிறேன் எனில் இன்று மதியம் உணவகத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் இப்படிப் புலம்பவிட்டது.

அந்த மேல்தட்டு உணவகத்தின் குளிரூட்டப்பட்ட பிரிவில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம்.அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லா உடைகளணிந்த இருபது வயது மதிக்கத் தக்க ஆணும், பதின்மங்களைத் தாண்டியிராத பெண்ணும்(அந்தப் பெண் பள்ளிச் சீருடை தாவணி அணிந்திருந்தாள்)மிகுந்த தயக்கங்களோடும்,பயத்தோடும் எனக்கு எதிரிலிருந்த இருக்கைகளில் வந்தமர்ந்தனர்.அந்தப் பெண் அந்த சூழலை மருண்ட பெரிய விழிகளின் துணைகொண்டு மிரட்சியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவன் மிகுந்த பதட்டமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.மெனு கொடுக்கப்பட்டது.வாங்கிப் புரட்டிப் பார்த்தவனின் கண்களில் அதிர்ச்சி தெறித்தது.அந்தப் பெண்ணை பார்த்தவாறு "வேற எங்காச்சும் போலாம் இங்க நம்ம ஊரு சாப்பாடு இல்ல" எனச்சொல்லி அப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டான்.பத்து நிமிடத்திற்குள் நடந்த இந்நிகழ்வு என்னை சமநிலையில் இருக்கவிடாது துன்புறுத்தியது.இவளிடம் புலம்பியபடி இருந்தேன்."நீ இருக்கச் சொல்ல வேண்டியதுதானே நாம் கொடுத்திருக்கலாமே" என என் குற்ற உணர்வுகளை இன்னும் அதிகமாக்கினாள்..

- உதிர் நட்சத்திரங்களின் வழி பயணித்தவளோடு வாழ்ந்த தொள்ளாயிரத்து முப்பத்தியோரு நாட்கள்:அய்யனார்

19.08.2012 : ஞாயிறு : மதியம் 3 மணி
இவ்விதமான கதை சொல்லல்கள் என் இளம்பிராயத்து வாழ்வை மீட்டுவதாய் இருந்தது.நான் தொலைத்த என் கிராமம் சார்ந்த நினைவுகளை இப்புத்தகத்தில் அடையாளம் கண்டுகொண்டேன்.

"அவன் எம்மாம் பெரிய மசிராண்டியா இருந்தா எனுக்கின்னா..போடா பெரிசா வந்திட்டான்..மான ரோசத்தோட வாழறவடா நானு..ஒத்த பொம்பளயா ஒன்ன வளக்கல?. நீ இன்னா அழுவியா பூட்ட?..எவன் ஒறவுஞ்சாரமும் எனுக்கு வேணாம்.. எந்தக் கொம்பன் வூட்டுக்கும் நான் வர்ல.. எவனும் இங்க வரவும் வேணாம்".

மாமா வீட்டுத் தொடர்பு இப்படித்தான் அறுபட்டது.போன வருசக் கடேசியில் மல்லாட்டக் கொல்லியில் தப்புக்காய் பொறுக்கப் போன போது பூங்காவனத்தை கடேசியாய் பார்த்தது.காஞ்சியில் ஒன்பதாவது சேர்ந்தபிறகு முன்பு போல் வெளியில் போக முடியவில்லை.சனி ஞாயிறில் மாட்டை ஓட்டிக்கொண்டு பெரிய்ய ஏரி,காவாங்கரை எனப் போய்விடுவதால் ஊரில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்ள முடியாமல் போனது.ஏரிக்கரை இலுப்பை மரத்தடி மதியங்களில் விழிப்பும் கனவுமாய் பூங்காவனத்தின் முகம் வந்து போகும்.அலையலையாய் கூந்தலும், குறும்புச் சிரிப்புமாய் என்னை நிறைக்கையில் அம்மாவின் குரல் அசீரரியாய் காதில் ஒலிக்கும்."இலுப்பம்பூ வாசனைக்கு மத்தியானத்துல முனி கினி வந்து அண்டும்..அந்த பக்கமா போய் ஒக்காராதே" சற்றுத் தள்ளிப்போய் கொடுக்காப்புளி மரத்தடி முட்களை அகற்றிவிட்டு அமர்வேன்.


- பூங்காவனம் : அய்யனார்

23.12.2012 : ஞாயிறு பின்னிரவு 2.00
இன்று சுத்தமாய் தூங்க முடியவில்லை.பல கவிதைகள் எனக்குப் பொருந்திப் போனது.வெறும் அழகியல் சார்ந்தவைதான் என்றாலும் நெடுநாள் புகைக்காமல் இருந்த என்னை புகைக்க வைத்தது இத்தொகுப்பு...

பூவரசமர பெஞ்சிலமர்ந்தபடி
மதிய மழையும்
கடலும்
கலவுவதினை
பார்த்துக் கொண்டிருந்தோம்
மஞ்சள் நிற இறக்கைகளும்
நீலக் கழுத்தையும்
கொண்ட சிறுபறவையொன்று
மஞ்சள் நிற பூவரசம் பூவிலிருந்து எட்டிப்பார்த்தது
பூ பிரசவித்த பறவை என பரவசப்பட்ட
அவளின் முகமேந்தியபடி சொன்னேன்
பூவீன்ற இப்பறவையும்
இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்
அபூர்வமானவர்களென

...................................
ஒரு மழை நாளில்
வந்திருக்க வேண்டிய நேரம் வரை
வராமல் போனாள்
குத்தும் சாரல்களின் துணையுடன்
வழியெங்கிலும் தேடியலைந்து
திரும்பினேன்
அவளோடு சேர்ந்து
நனைந்த பூனைக்குட்டியொன்றும்
பூட்டிய கதவுகளுக்கு முன்
ஒண்டிக்கொண்டிருந்தது


-நானிலும் நுழையும் வெளிச்சம்:அய்யனார்

Featured Post

test

 test