Thursday, March 29, 2018

ஓரிதழ்ப்பூ - அமுதமொழி



ஓரிதழ்ப்பூ - அய்யனார் விஸ்வநாத் அவர்களின்  புதினம். அதன் இறுதி வடிவ நகலை அச்சுக்கு முன் படித்து   கருத்து சொல்லும்படி  அனுப்பி வைத்துள்ளார் . படித்துகொண்டிருக்கிறேன் . அகத்திய முனிவரின் தேடலும் போகனின் பதிலுமாய் தேடல் தொடரும் ஆரம்பம் திகைப்பை தருகிறது .

"கொம்பில்லா இலையில்லா காம்பில்லா ஓரிதழ் பூவாம்
கண்டு தெளிந்து உண்டு நீங்கி -நிலையில் நிறுத்து 
பிளவில் பூக்கும் மலரை யரிய வேணுங் கண்
யறிந்த கண்ணை சுவைத்த நாவை அறிந்தறிந்து அடைவாய் உன்மத்தம் "

இந்த பாடல் தேடலுக்கான உந்துதலாக இயக்குகிறது கதை 

ஓரிதழ்ப்பூ  -  என் பார்வையில் .

வாழ்க்கை மனிதர்களை இடம் மாற்றி சேர்த்தே வேடிக்கை காட்டுகிறது. அதிலிருந்து தப்பித்து அவர்கள் அவர்களுக்கான இடத்தை கண்டடைய செய்யும் முயற்சிகளின் சிராய்ப்புகள் வலிகள் வேதனைகள் பரிதவிப்புகளை   எல்லாம் விரிவாய் பேச ஒரு கதையாகிறது ஓரிதழ் பூ.

தனக்குள் உரைவுற்றிருக்கும் மென்மையை எழுப்பத் தெரிந்த புரிதல் தேடி ஆண்களும் பெண்களும் இப்பிரபஞ்ச வெளியெங்கும் அன்பை தொலைத்த அகதிகளாய் அல்லலுற்று அலைவதை படிப்பவர் மனதில் அழுத்தமாய் பதிய வைக்கிறார். தன்னை தன் கதா பாத்திரங்களில் ஒளிந்துகொண்டு கதை ஆசிரியர் பேசாமால் கதை மாந்தர்களின் வாழ்க்கை நகர்வில் அதை உணர்த்திப் போவது இந்தப் புதினத்தின் சிறப்பு.

காமத்தை அதன் அகவியல் சார்ந்த நிறைவை எய்த யத்தனிக்கும் இவரது கதை மாந்தர்கள் நம்முள் நம் அருகில் எதிரில் எங்கும் வியாபிதமாகி நிறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்திப் போகிறார்.

கதையின் ஓட்டம் ஆரம்பத்தில் உள்ளே நுழைய முடியாத ஒரு சின்ன சிக்களை வைக்கிறது. கதை மாந்தர்களின் அறிமுகம் இன்னும் தெளிவான நிறைவில் நேரடியான அறிமுகத்தில் நிகழ்த்தப்பட்டிருந்தால் இந்த நெருடல் உணராமல் சுலபமாய் கதைக்குள் ஒன்றி இருக்க முடியும் 

கதையின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் இடங்கள் புதிய சுவாரஸ்யமான பரவசத்தில் படிப்பவரை ஆழ்த்துகிறது.

மாமுனியின் ஓரிதழ் பூவுக்கான தேடல் அது பெண்ணின் அந்தரங்க உறுப்பின் கலை வடிவாய் பரிமளிப்பதை ஆசிரியர் கதை முழுவதும் தொடர்ந்து வரைந்துப் போகிறார். சில இடங்களில் அது சலிப்பையும் எட்டி பார்க்கச் செய்கிறது .

பெண்ணுடன் கூடல் என்பது உடல் தேவையின் உச்சம் என்பதை விட மனத்திருப்தி, ஆத்மா நிறைவுக்கான தாகம் என்பதான புரிதலை முன் மொழிந்து நகரும் புதினம் இறுதி பக்கங்களில் வேகமெடுத்து ஓடுகிறது . 

புத்தகத்தை தரையில் வைக்க முடியாத ஈர்ப்பை கொட்டியிரைத்து நகர்கிறது. இதோ முடிந்து விடுமோ என்ற பரவச தவிப்பை படிப்பவரின் அனுபவத்தில் விட்டுச்செல்கிறது.

துர்க்கா, அங்கையற்கண்ணி, அமுதா, மலர் எல்லாம் தங்கள் தீரா காதலின் சுதந்திர வேட்கை துரத்த துரத்த அதை கண்டடைய ஓடிய ஓட்டத்தின் களைப்பில் விடுதலை நோக்கி பயணிப்பதாக கதையை முடிக்கிறார்.
இவர் பெண் பாத்திரங்கள் தங்களின் மினுங்கலான அக அழகின் ஒளிர்வில் நிறைந்திருக்கிறார்கள். துர்காவுடன் அங்கையற்கண்ணி பயணமாகிறாள். சங்கமேஸ்வரன் எனும் குறியீட்டு வடிவின் நிஜ உருவின் அன்பில் திளைக்கிறாள் .
அமுதா தனித்தே இப்பிரபஞ்ச அழகை தேடிக்கொண்டு போகிறாள். அதில் அவளுக்குத் துணையாக அவளே போதுமென்ற நிறைவை எட்டுகிறாள்.
மாமுனி துர்காவால் அவரது மனைவி வசம் ஒப்படைக்கப் படுகிறார்.
சில மனிதர்களின் அறிமுகத்தில் நாம் தரிசணங்கள் கண்டடைந்த பரவசத்தில் சிலிர்ப்பதை துர்கா மூலம் நிகழ்த்துகிறார் . அது கேலி செய்கிறாரோ அப்படியான புரிதலை என்றும் கேள்வி எழுப்புகிறது .
இன்னுமொரு வாசிப்பில் வேறு புரிதலையும் தரலாம் இந்தப்பூ. இன்னுமொருவர் வாசிப்பில் பல் வேறு புரிதலும் வசப்படலாம் .

அனைத்தையும் கருத்தேற்று பதிப்பித்தால்  இன்னும் மெருகேறலாம் இந்தப்பூ.

நிறை நன்றியும் வணக்கமும் அய்யனார் விஸ்வநாதன். வாழ்த்துகள் .

ச. கனியமுது 
காவேரிப்பட்டினம்.

ஓரிதழ்ப்பூ - கனவுப் பிரியன்







“ புத்தக அறிமுகம் "



" ஒரு இடத்துல இருக்கமாட்டேன்கிறான். துருதுறுன்னு வாரான். எது கொடுத்தாலும் கொஞ்ச நேரம் தான் வேலையாடுறான். அடுத்ததுக்கு போயிறான் “ என்பது தான் என் குழந்தைகளைப் பற்றி யாரேனும் சொல்லும் அதிகபட்ச குற்றச்சாட்டாக இருக்கும்.

 “ மனசுக்குள்ள நினச்சுக்குவேன் தக்காளி, நெல்லு வச்சா நெல்லு தானே வெளையும்ன்னு “

என்னை ஒருமுகப்படுத்துவது கஷ்டம். என்னை மட்டுமல்ல கூடுதல் சிந்தனை கொண்டவனை நிலைப்படுத்தவே முடியாது. சதா ஏதேனும் ஓடிக்கொண்டே இருக்கும் அவனுள். 

“ தட்டலிஞ்சு திரியிறான் “ என்பார்கள் ஊருக்குள். 

வெளிகாட்டுவதற்கு அவனுக்கு ஏதேனும் தடம் கிடைக்கும் போது வார்த்தை வடிவில் கொட்டத் துவங்கி விடுகிறது அவனது அலைகழிப்பு. 

அதிலும் என்னமாதிரி அகங்காரம் கொண்டவனுக்கு குக்கர்ல மூணு விசில் எல்லாம் பத்தாது. ஏழு விசில் வைக்கணும் அப்போ தான் எதுவுமே வேகும். 

எதையாவது வாசிக்கிறப்போ அல்லது எதையாவது பாக்கிறப்போ அதுக்குள்ளே என்ன மறந்து நிக்கனும். அப்போ தான் எதுவுமே தொடரும். இல்லைன்னா சட்ன்னு நான் சுய நினைவுக்கு வந்துடா அதுக்குள்ளே பயணப்பட என்னால முடியாது. 

கொஞ்சமேனும் எளிமையான புரிதல் இருக்கணும்

புதுசா ஏதாவது இருக்கணும் 

தகவல் இருக்கணும் 

நூறு இருபது வார்த்தைகள் கொண்டு ஏன் இந்த எழவெல்லாம் சொல்லுறேன்னு பாக்குறீங்களா. என்ன எதையாவது  வாசிக்க வைக்கிறது கஷ்டம்ங்கிறதை சொல்லவேண்டி இவ்வளவு மெனக்கெடல். 

எப்போமாவது, இத விடக்குடாது முழுசா வாசிச்சிரனும் எனும் இந்த அற்புதம் நிகழும். 

“ அய்யனார் விஸ்வநாத் “ அவர்களின் “ ஓரிதழ்ப்பூ “ புத்தகம் அதை சாத்தியப்படுத்தியது. 

உண்மையிலே “ ஓரிதழ்ப்பூ “ ன்னா என்ன தெரியுமா ஆறாவது அத்தியாயத்தில் வாத்தியார் கோவத்துல சொல்லுவான் பாரு  “ என்று நண்பன் பீடிகை போட 

பூங்காவனத்தின் புருஷன் மாமுனி போல நானும் 

“ கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஒரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி – நிலையில் நிறுத்து பிளவில் பூக்கும் மலரை யரிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம் “  

எனும் வரிகளில் குடியிருக்கும் அந்த ஒரிதழ்ப்பூ பற்றி தெரிந்து கொள்ளும் ஆசையில் 

பெய்யும் பேய்  மழையையே ஒரு முறை வானத்தை உற்றுப் பார்த்து நிறுத்தும் வரம் கொண்ட மாமுனிவனோடு சேர்ந்து தேடத் துவங்கினேன். 

ரவி – அமுதாக்கா 

அமுதாக்கா – அவ புருஷன் 

ரவி – ரமா 

ரவி – அங்கயர்க்கண்ணி 

அங்கயற்கண்ணி – சங்கமேஸ்வரன் 

சங்கமேஸ்வரன் – மலர்ச்செல்வி 

அங்கயற்கண்ணி – துர்க்கா 

துர்க்கா – சாமிநாதன் 

சாமிநாதன் – லட்சுமி  

துர்க்கா – அய்யனாரு 

அய்யனாரு – பூங்காவனம்ன்னு கதையில் சம்பவங்கள் ஊடே அஞ்சு ஓரிதழ்ப்பூவை ஆசிரியர் வார்த்தையில் பரப்பிக் காட்டுகிறார். 

கதை அப்படியே திருவண்ணாமலையை சுத்தி பேயா சுத்துது. பேய்ன்னா அப்படி ஒரு பேய்த்தனம். 

இந்த புத்தகத்தின் கதையை நிஜம்ன்னு நம்புறதா, புனைவுன்னு சொல்லுறதா இல்லை அதீத புனைவுன்னு எடுக்கவான்னு, வாசிப்பவனை உன் தரத்துக்கு ஏத்தமாதிரி நீயே எது எதுல சேத்தின்னு தேடிக்கோ என்று கொடுத்துவிடுகிறார்.

அகத்திய முனியா கண்டா அகத்திய முனி அதுவே அய்யனாரா கண்டா அய்யனாரு. 

ஓரிதழ்ப்பூ வைத்தேடி அலைஞ்சா ஓரிதழ்ப்பூ, இல்ல ஊருக்குள்ள நடக்கத்தானே செய்யுதுன்னு எடுத்துக் கிட்டா சம்பவம் அவ்வளவு தான். 

ஆனா சொல்லுற விதம் இருக்கே அது ரொம்ப கிளாசிக்கா இருக்கு. 

ஆசிரியரே முன்னுரையில் சொல்லுவது போல முதல் ஏழு அத்தியாயம் மிரட்டாலா இருக்கு. 

உண்மையிலே வந்திருக்கிறது முனிவன் தானா. 

மகரிஷியைத் தேடி வந்தவனா. 

ஓரிதழ்ப்பூ என்ற அந்த வரிகளை எழுதியது யார். 

உண்மையிலே போகர் யாரு. 

இதெல்லாம் மானிட வடிவமா. 

மலர்ச்செல்வி உண்மையிலே அந்த பர்வதமலை காட்டுல காணாம போயிட்டாளா. 

மனிதத் தலை கொண்ட மான் வருமா அங்கயர்கன்னியை தேடி. 

இது எந்த காலத்துல நடக்குது. 

இப்படி பல கேள்விகள் வாசிப்பவன் முன் அடிபட்ட திறந்து இருக்கும் புண் மீது சுற்றிவரும் ஈ போல கோய்ங்ங்ங்.. என்று சுற்றுகிறது.

மகரிஷி, அகத்தியர் எல்லாம் கதையில் வருகிறார்கள். அதற்காக கொதிக்காமல் விசுவாமித்திர்ராக சிவாஜி நடித்த " ராஜரிஷி " யும் தமிழ்ப்படம் தான் என்பதை சமூகம் நினவில்  கொள்ள வேண்டும்.

ஓரிதழ்ப்பூ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ஏகப்பட பூக்கள் பூ மரங்கள். அதி அற்புதமான ஒரு வீதி வழி நடப்பது போல உள்ளது. 

மழைக்கு இடையே ஒரிதழ்ப்பூவை ஒவ்வொருவரும் தரிசிக்கும் நிகழ்வுகளை எல்லாம் நல்ல கவிதைத் தனத்துடன் விவரிக்கிறார். அதிலும் கூடுதலாக அவர் பெண்கள் பகுதியில் இருந்து அவற்றை பேசுவதால் இன்னும் அழகாக உள்ளது. 

“ ஆதி உறவு அந்து போகும் ......உறவு அக்காது “ என்ற வட்டார வழக்கு ஒன்று உண்டு. 

காதல் என்றும் பெண் போக்கிலே என்பார்கள். 

வாழ்வியலும் பெண் போக்கில் தான் 

அப்போ ஓரிதழ்ப்பூ.............?

எங்க ஊருல பஜாருல என்னோட வண்டியை நிறுத்திட்டு ஏதாவது வாங்கப் போவேன். 

திரும்பி வரும் போது சிலநேரம் அழுக்கு உடையோட மெலிந்த பெண் நிற்பாள். என்னைக் கண்டதும் கையை நீட்டுவாள். நானும் சிரித்தபடி பணம் தருவேன். வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல் போய் விடுவாள். ரோட்டில் யாராவது சீண்டினால் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கி விடுவாள். 

அந்த கிறுக்கச்சியை காணும் போதெல்லாம் எனது நண்பர்கள் அது என்ன உன்கிட்ட மட்டும் பணம் கேக்கிறா. நீயும் கொடுக்கிற. பைத்தியக்காரிக்கி போய் பணம் கொடுக்கிற என்றெல்லாம் கூறுவதுண்டு. நான் ஒன்றும் பதில் சொன்னதில்லை. 

ஆனால் கல்யாணம் ஆனதும் மனைவியுடன் முதன் முதலாக அவளை சந்திக்க நேர்ந்த போது மனைவி அவள் என்னிடம் பணம் வாங்கிக் கடந்ததும் கேட்டாள் 

“ யாரு இந்த கிறுக்கி “

“ ............ஸ்கூலோட இங்கிலீஷ் டீச்சர் “ என்றேன் 

திக் என்று பயந்தவளாக “ என்னது “ என்றவளிடம் 

“ நம்ம வீட்டுக்கு எதிரே இருக்கிற அல்லல்காத்தான் வீட்டுக்கு டியுசன் எடுக்க வருவா. நேருல அப்போ பாகிறப்போ ஒரு சிரிப்பு சிரிப்பா அவ்வளவு தான். அப்போ அவளுக்கு கல்யாணம் ஆகல. நல்ல அழகா இருப்பா. ............ளோட ஆட்கள் அஞ்சாறு பேரு சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க. பைத்தியம் மாதிரி திரியிறா.  “ என்றேன். 

எல்லாமே தோற்ற மயக்கம் தான். 

நீ எதுவாக காண்கிறாயோ அதுவாக இருப்பேன். 

இந்த புத்தகமும் அப்படித்தான்.

x

ஓரிதழ்ப்பூ என்பது ஒரு பூ தானா?




நதியின் பெயர் பூர்ணா

 முதல் விழுங்கலில் துவர்த்தாலும்
மறுமுறைக்கு தவித்தது நாக்கு
இரண்டாவது மடக்கில் தோளில் முளைத்தன சிறகுகள்
தக்கையாய் மிதந்தன கால்கள்
கருவறை விட்டெழுந்த அவசரத்தில்
பிருஷ்டங்கள் நடுவே சுருண்டிருந்தது உன் ஆடை
சருமத்தில் சந்தன வியர்வை
வெண்கல முலைகளில் ததும்பும் இனிமை
கனவின் படிகளில் இடறியோ
மதுவின் சிறகிலிருந்து உதிர்ந்தோ
உன் யோனிக்குள் துளியாய் விழுந்தேன்
“யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்”
பூர்ணா நதியின் மடிப்புகளில் ஒடுங்க மறுத்து
அலைகிறது சூரியவெளிச்சம்
ஆர்யாம்பாளின் கண்ணீரில் கரையாத
பிரம்மச்சாரியின் முதலைப் பிடிவாதத்தின்
காவி நெடியில் பூமி மயங்கி மீண்டும் விழித்தது
கற்படியின் குழியில் தேங்கிய நீர் வெதுவெதுப்பு
காற்று உந்திய புதிய அலையில்
குளிர் நதியும் அத்வைதிதான்-
போதையும் களவும் போல
கடவுளைப் புணர்ந்த ஆனந்தம் கொண்டாட நானும்
மனிதனைப் புணர்ந்த பாவம் தொலைய நீயும்
முழுகிக் கொண்டிருக்கிறோம் தேவி ஒரே நதியில்.

 - சுகுமாரன் 


 நான் செய்த தவறுகள்

என்னுடைய முதல் தவறு
கடவுளில்லாத உலகத்தில் பிறந்தது
இரண்டாவது தவறு
கடவுளை எனக்காக உருவாக்கிக் கொண்டது
மூன்றாவது தவறு
பால்பேதமற்றிருந்த கடவுளை
இரண்டாகப் பகுத்து மனித சாயலில் ஆண்-பெண் ஆக்கியது நான்காவது கடைந்தெடுத்த முட்டாள் தனம்
இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டி விட்டது
ஐந்தாவது தவறு
ஆண்கடவுளுக்கு ஆணுறை வழங்க மறுத்தது
ஆறாவதாக குட்டிக் கடவுளைக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்தது
ஏழாவது தவறு
எனது வீட்டுக்குப் பக்கத்திலேயே கோயிலைக் கட்டிக் குடியமர்த்தியது
எட்டாவது தவறு
என் துணைவியை ஆண்கடவுளிடம் சோரம் போக விட்டது ஒன்பதாவது பெருந்தவறு
பழி வாங்கும் எண்ணத்தோடு பெண்கடவுளை நான் வன்புணர்ச்சி செய்தது
பத்தாவது தவறு
என் துணைவியின் வயிற்றில் கடவுள் உண்டானதையும் பெண்கடவுளின் வயிற்றில் மனிதர் உண்டானதையும் கருவழிக்க மறந்தது
நான் செய்த பத்து தவறுகளுள் எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான்.

 - ரமேஷ் பிரேம்

 தவறுகளின் நிமித்தம், நான் உட்செல்கிறேன். பின் வெளி வருகிறேன். அணைக்காமல் விட்டுச் சென்ற சிகரெட் புகைச்சுருள் சிவந்து பின் அமர்கிறது. காற்றுவெளியின் துகள்களின் நடுவே அதன் மீந்த சாம்பல் இன்னும் சின்னஞ்சிறு துகள்களாக, பின் துகள்கற்ற அகாலப்பரப்பாக, ஏதுமற்றதாக மறைகிறது. சுருண்ட புகை மென்மேலும் உயர்ந்து உயர்ந்து, அருகமர்ந்த நாசிகளில் நிரம்பி, சுவாசத்திற்குள் புகப்புக, அதன் திட்டுத்திட்டான அரூபம் படிந்து எண்ணங்களை உரசத் தொடங்கியது. எத்தனை முறை பார்த்திருக்கிறோம். என் முதல் தொடுகை எப்பொழுது நடந்தது. மாமா மறைத்து வைத்திருந்த நிர்வாணப்படங்களையும் அதன் தலைகீழான புணர்வுகளையும், குறிகள் எதன் பொருட்டு அலைக்கழிகின்றன என்றும் நினைத்துக் கொள்கிறேன். கடவுளர்களும் மனிதர்களும் புரளும் நிலையற்ற பரப்பில் தொடர்ச்சியாக உள் நுழைவதும் வெளித் தள்ளுவதும். கனவின் நிலத்தில் தவறுகளினால் (தவறுகளா) உருவாக்கிய உடல்களை விடாது கடித்துக் கொண்டே இருக்கிறது ஆண் மனம். பற்களாலான குறிகள் கொண்டிருக்கிறேன். எண்ணிலடங்கா உடல்களின் சுழலில் மீள மீள உள் செல்கிறேன் வெளித் தள்ளுகிறேன். ஆனால் தொடர்ச்சியாக பீய்ச்சப்பட்ட விந்துவிற்கு பின் எளிய உயிரியாக தன்னை பாவித்துக் கொள்ளாத ஆண்களே இல்லை போலும். எதனையோ தூக்கி சுமந்து கொண்டிருக்கும் பொழுது கால்கள் நழுவி அத்தனையும் கரையற்ற நீர்ப்பரப்பில் கரைந்து ஒன்றுமில்லாமலாவது.

 “கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி நிலையில் நிறுத்தி பிளவில் பூக்கும் மலரையறிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம்”

 ஓரிதழ்ப்பூ பெண்குறி. அகத்தியர், போகர், ரமணர், சங்கமேஷ்வரன், அய்யனார், ரவி, சாமிநாதன், ஜோசியர், பெரியசாமி, மான், திருவண்ணாமலை. மையமற்று அங்கும் இங்குமாக செல்லும் கதை உத்தி. பெண்கள், காளி, துர்கா, லட்சுமி, அங்கயற்கண்ணி, மலர்ச்செல்வி, ரமா, அமுதா, டீச்சர் அம்மா. அவர்களுடைய ஒவ்வோரு ஓரிதழ்களும். திரும்பத் திரும்ப பூக்கள். இவர்களின் உலகிற்குள், கனவிற்குள், உறக்கத்திற்குள், நிலத்திற்குள், உணவிற்குள் என சமனின்றி பாயும் கதையில் தொடர் கண்ணியாக ஒரே பெண்கள். இந்தப் பெரும் சங்கிலியில் ஊளையிட்டுக் கொண்டே இருக்கும் வன மிருகம் ஒன்று கழுத்து கட்டுண்டு இருக்கிறது. கட்டுண்டால் மட்டுமே கிடைக்கும் ஊன். ஆனால் தன்னால் கட்டவிழ்க்க முடியும் என்று அறிந்து கொண்ட பின் தான் அந்த கனத்த சங்கிலியை தன் உடல் முழுதுக்குமாய் கட்டிக் கொள்ள முனைகிறது. பெரிதும் சிறிதுமான இந்தச் சங்கிலியின் அழுத்தம் அதன் உடலை ஒரு எரிவாயு போல உறிஞ்சிக் குடிக்கத் தொடங்குகிறது. ஒரு சமயம் இன்னும் இன்னும் என அந்த மிருகம் லயிக்கையில் நிகழ் உலகில் வெத்துக் கூடாக கிடக்கும் என்றால் அப்படியுமில்லை. அந்த சங்கிலிகள், மிருகம், லயிப்பு, கனவு எல்லாம் கதை சொல்லலில் மையமின்றி போய் விடுகிறது. காமம் தான், பெண் உறுப்பில் பூ பூத்திருக்கிறது.

அமானுஷ்ய குணாதீசயங்களுடன் இருக்கிறார்கள் பெண்கள். மான்களுடன் புணர்ந்து பிள்ளைகள் பெறுவார்கள். பித்தனுடன் கூடி இன்பம் துய்ப்பார்கள். நெஞ்சு மிதித்து காளியாவார்கள். கழுத்துடைந்து பலி ஆடாய்க் கிடக்க விரும்புவார்கள். எதற்கு இப்படி ஒரு பயம் அவனுக்கு அவள் யோனியைப் பார்த்ததும் தொற்றுகிறது. அவன் ஏன் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மூத்திரம் மலம் வாந்தி எனப் போய்க்கொண்டிருக்கும் பாதையில் திரும்பத் திரும்ப பெண் பூ பூ நாற்றம் நாற்றம் என்று எனக்கு தலைகீழாக்கம் ஆகியிருந்தது. உவர்த்த மத நீரின் ருசி, பிசுபிசுப்பு, மணம் என அதன் வாதையின் ரீங்கரிப்பு என்னுள் புகும் பொழுது, இன்னும் ஆழமாக அவள் விரல்கள் உள் நுழைந்து வெளியே பீய்ச்சிக் கொண்டிருந்தாள். திரும்பத் திரும்ப தெளிவற்ற பாதையினுள் போய்க்கொண்டிருப்பதைப் போலவே இருந்தது. ஆனால் சொல்ல விளைவது என்ற கருத்திற்குள் நான் நுழையவே இல்லை.

புனைவு மொழி படிமங்களால் ஆனது என்றே நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் அந்த ஒவ்வொருவனாகவும் ஆகிக் கொண்டிருக்க வேண்டும். விழுந்து எந்திரிக்க வேண்டும். மாயயதார்த்தம், யதார்த்தம், புனைவு, பின் நவீனத்துவம், மிகு கற்பனை, மீளுருவாக்கம், முரணான கதை சொல்லல் முறை என்று எதற்குள்ளும் செல்லவில்லை. ஆனால் வெகு காலமாக ஆண் மனம் உருவாக்கிய பிரக்ஞையைத் தேடிக் கொண்டிருந்தேன். சாத்தியமற்ற வழிகளில் அதன் பைத்தியக்களையைப் பிடித்து விடலாம் என்று நம்பினேன். பெண்கள் தேவதைகளாக இல்லை காளிகளாக உருவானவர்களா என்று நம்பவில்லை. இளகியவர்களா நிச்சயமில்லை. அரதப்பயலுக்கு பொறைந்தைகள, தேவடியாப்பய, புளையாடி மோன, புண்டாச்சி மவன, புண்டைக்கு பொறந்தைகள, தள்ளைய ஓத்தவன, அக்காள வோளி இப்படி உறவுகளுக்குள் தினமும் புணரும் வார்த்தைகளை பெண்களின் மொழி வழியாகவே அறிந்து உணர்ந்திருக்கிறேன். அதனால் அது மிக எளிதாக பெண்ணுக்கான வசை, பெண்களை மைய்யப்படுத்தி ஆணைக் குறிக்கும் வசை. ஆனால் ஆண் பெண் எனும் உறவிற்குள் காமம் அற்றுப் போகையில் அவர்களுக்குள்ளான உறவு என்பது எதனை அமைக்கிறது. எந்தப் பிடிமானம் இருக்கும்.

தன் எளிய தாழ்வுணர்ச்சியிலிருந்து அவன் பெண்களை அறிகிறான். அம்மையை விரும்பும் அகம், காதலியை அங்கு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதே நேரம் அம்மை காளியாகி விடுவதில்லை. காதலியின் காளியின் கணங்கள் அவனுக்கு தேவை. அதே நேரம் சந்தன வல்லியாக அவள் வந்து அணைத்துக் கொண்டு நெஞ்சில் மிதிக்க வேண்டும் என உள்ளூற ஆசைப்படுகிறான். காதலியின் முலையை சப்பாத ஆண் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அவன் குழந்தையாகவும் வன் மிருகமாகவும் திரும்ப காதலனாகவும், எளிய உயிரியாகவும், வெறும் உடலாகவும், புனைந்து கொண்டே இருக்கும் பாவனையில் பெண் தன்னை காதலியாக, அம்மையாக, தமக்கையாக, காளியாக, பிள்ளையாக, அனாதரவானவளாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்களோ?

பிம்பங்களுக்கான எதிர்பிம்பங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கையில் ஒன்றை உணர்கிறேன். பிம்பங்களின் ஆடி யார் வசம் இருக்கிறது என்று. அதனால் வானம் அழைக்க பொதி மூட்டையக் கொண்டு நகரும் ரவி என்னிடம் வசப்படவே இல்லை. வந்திருந்தால் அவன் தொங்கிக் கிடக்கும் மொன்னைக் குறியை நான் அறிந்து கொண்டிருக்ககூடும். கூடவே மொன்னை மனிதனாய் சாமி நாதனின் கால் இடுக்கில் அகப்பட்டுக் கிடக்கும் வெத்துக் களச்சிகளையும். பின் எதற்காக இந்தக் கவிதை. ஏன் அய்யனார் புத்தி பேதலித்திருக்கிறான். அவன் சுகித்த அந்த ஓரிதழ்ப்பூவை, இவர்கள் ஏன் விலக்கினார்கள். ஆமாம். ஒரு பித்து நிலை வேண்டும் போலும் இந்தப் பெண்களுக்கு. அய்யனாரின் பெண்களுக்கு மான் தான் வேண்டும். மான் தலை உள்ள ஆண்களிடம் விடைத்த குறிகள் உண்டோ. இல்லை. இது குறி சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை. ஏன்! திருவண்ணாமலையே ஒரு பெருத்து எம்பி நிற்கும் குறிதானே. வானம் அளக்க, உள் சென்று வெளி செல்கிறேன். மறுபடியும் நான் செய்த தவறுகள். உண்மையில் காமத்தின் பொருட்டு நான் சென்ற தூரத்தின் வழியில் தென்பட்டனர் இவர்கள்.

ஆனால், எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான். போதைக்கும் களவுக்கும் இடைப்பட்ட காலமற்ற பொழுதில் வந்தாய் நீ


நன்றி,

 நந்தகுமார்

http://nanthangl.blogspot.ae/

Featured Post

test

 test