Showing posts with label திரைப்பட விழா. Show all posts
Showing posts with label திரைப்பட விழா. Show all posts

Thursday, January 1, 2015

BIRD MAN - துபாய் திரைப்பட விழா - 3

BIRD MAN or The Unexpected Virtue of Ignorance 



அலெஹாந்த்ரோ யொன்ஸேல்ஸ் இனாரித்து வின் முதல் ஹாலிவுட் படமிது மெக்சிகோ வைச் சேர்ந்த இனாரித்து நான்லீனியர் கதை சொல்லல் மூலம் உலகம் முழுக்கப் பிரபலமடைந்தவர். மன உணர்வுகளை மிக ஆழமாய் ஊடுருவும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் தேர்ந்தவர். அமரோஸ் பெர்ரோஸ். பாபேல், 21 கிராம்ஸ், பியூட்டிபுல் ஆகிய நான்கு அற்புதமான திரைப்படங்களைத் தந்தவர். அவரின் முதல் ஹாலிவுட் படம் என்பதால் எனக்கு நிறையவே எதிர்பார்ப்பிருந்தது. ஹாலிவுட் வழமைக்குள் சிக்கிக் கொள்வாரா? அல்லது தன் பாணி கதை சொல்லலை ஹாலிவுட்டில் நிகழ்த்திக் காண்பிப்பாரா? என்பது போன்ற பல கேள்விகள் எனக்குள் இருந்தன. திரைப்படம் பார்த்து முடிந்ததும் இந்தக் கேள்விகளுக்கு ஒரு குழப்பமான பதில்தாம் கிடைத்தது. ஒரு திரைப்படமாக BIRD MAN எனக்குப் பிடித்திருந்தது. மைக்கேல் கீடனின் அசாதரணமான நடிப்பு, புதிதான கதைக்களம், விநோதமான சம்பவங்கள் என திரைப்படம் புத்தம் புது அனுபவமாகத்தான் இருந்தது ஆனால் இனாரித்துவின் வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து இத்திரைப்படம் முற்றாய் விலகியிருந்தது.
ஹாலிவுட் கருப்பு நகைச்சுவைத் திரைப்படங்களுக்குப் பெயர் போனது. Coen brothers இந்த வகைமையில் உச்சங்களைத் தொட்டவர்கள். இந்த வகைமையில் இனாரித்து பலப் புது விஷயங்களை பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். இத்திரைப்படத்தை Black comedy என்பதை விட சர்ரியலிசக் காமெடி என்பது மிகப் பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட எமீர் கஸ்தூரிகா வின் Arizona dream திரைப்படம் தந்த உணர்வையே இந்த படமும் தந்தது. அரிஸோனா ட்ரீமின் புதிரும் அபத்தமும் கிண்டலும் BIRD MAN திரைப்படத்திலும் இருந்தது.
BIRD MAN திரைப்படத்தின் கதையே மைக்கேல் கீடன் என்கிற நிஜமான நடிகனின் வாழ்வைப் பார்த்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த நிஜமான நடிகனின் பாதிப்பு இருக்கும் புனைவு நாயகனாக, நிஜமான நாயகனே நடித்திருப்பது இத்திரைப்படத்தின் மெட்டா தன்மையைக் கூட்டுகிறது. அசலில் மைக்கேல் கீடன் காமிக்ஸ் கதாபாத்திரமான பேட்மேனின் திரைவடிவ நாயகன். கீடன் நடிப்பில் 1989 ஆம் வருடம் BATMAN திரைப்படமும் 1992 இல் BATMAN RETURNS திரைப்படமும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. புனைவு நாயகனான ரிக்கன் தாம்ஸன் BIRDMAN சாகசக் கதாபாத்திரத்தில் நடித்து ஹாலிவுட்டில் பெரும் புகழ் பெற்ற நாயகன். தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஹாலிவுட்டில் ஓரம் கட்டப்பட்டு நாடகம் பக்கம் ஒதுங்குகிறான். தனிமையில் இருக்கும்போது ரிக்கன் தாம்ஸனுக்கு தொடர்ச்சியாக சாகஸக் கதாநாயகனான BIRDMAN னின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மீண்டும் பழைய புகழ் அடைய வேண்டுமென்கிற மனத் துரத்தல்கள் அவனிடம் இருந்து கொண்டே இருக்கிறது. பார்வையால் பொருட்களை உடைக்கச் செய்வது, விரல் அசைவில் பொருட்களை நகரச் செய்வது (telekinesis) அந்தரத்தில் உடலை மிதக்கச் செய்வது( Levitation) போன்ற சில வித்தைகளையும் ரிக்கன் தாம்ஸன் கற்று வைத்திருக்கிறான். இதனால் முழுமையாகவே தன்னை ஒரு சாகஸநாயகனாக கருதிக் கொள்கிறான். யதார்த்தம் அப்படி இல்லாததை அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
ரிக்கன் தாம்ஸனுடைய நாடகக் குழுவினர் ரேமண்ட் கார்வரின் “What We Talk About When We Talk About Love எனும் சிறுகதையை நாடகமாக நிகழ்த்துகிறார்கள். ரிக்கனுடைய நண்பனும் வக்கீலுமான ஜேக் இந்நாடகத்தின் தயாரிப்பாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறான். ரிக்கனின் மகள் அவனுக்கு உதவியாளரகவும் ஜேக்கின் காதலி, முன்னாள் மனைவி, ப்ராட்வே நடிகன் மைக் மற்றும் அவன் காதலி ஆகியோர் நடிகர்களாகவும் பங்காற்றுகிறார்கள். இந்த நாடக ஒத்திகையில் நிகழும் அபத்தங்கள், முரண்கள், விநோதங்கள், தனிமனித நெருக்கடிகள் யாவும் மிகப் புதிதான உணர்வை நமக்குத் தருகின்றன. மொத்த திரைப்படமும் நாடக அரங்கிற்குள்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. இருட்டான ஒப்பணை அறைகள், குறுகலான நடைபாதைகள், சதா அதிர்ந்து கொண்டே இருக்கும் ட்ரம்ஸ் ஒலி என மொத்த காட்சிப் பதிவும் நம்மை ஒரு பழைய தியேட்டருக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு மிகப் புதிதாக இருந்தது. பெரும்பாலான காட்சிகளை க்ளோஸ் அப் ஷாட்டில் படம்பிடித்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் பேச்சுக்கேற்ப காமிரா சதா அசைந்து கொண்டே இருந்தது. ஏதோ நாமே திரைப்படத்திற்குள் விழுந்து கதாபாத்திரங்களுக்கு நடுவில் நடந்து போவது போன்ற தோற்ற மயக்கமெல்லாம் எனக்கு உருவானது.

போதை மருந்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் ரிக்கனின் மகள் கதாபாத்திரமும் அவளுக்கும் மைக்கிற்கும் இடையே நிகழும் பால்கனி உரையாடல்களும் படத்தில் இன்னொரு சுவாரசியமான இழை. ரிக்கனின் மகளான சாம் (Emma Stone) தந்தையின் மன நிலையை உணர்ந்து கொள்கிறாள் அவருக்கு சம காலத்தின் நகர்வை, சமூக வலைத்தளங்களின் நிமிடப் புகழை, அவர் மிகப் பழைய ஆள் என்பவற்றையெல்லாம் புரிய வைக்க மெனக்கெடுகிறாள். அது ரிக்கனை மேலும் மன உளைச்சலுக்குக் தள்ளுகிறது. அக்குழுவில் புதிதாக உள்ளே வரும் ப்ராட்வே நடிகனான மைக் (Edward Norton) நாடகத்தின் மொத்த பெயரையும் தட்டிக் கொண்டு போகிறான். விமர்சகர்கள் மைக்கைப் புகழ்ந்து தள்ள ரிக் மிக மோசமான சுய பச்சதாப நிலைக்கு ஆளாகிறான். பின்பு அவனே எதிர்பார்க்காத சில விஷயங்கள் அசந்தர்ப்பமாக நடந்து மீண்டும் ரிக்கன் மீடியாவில் பேசப்படும் நபராகிறான். அதிகப் புகழடைகிறான். இறுதிக் காட்சியின் புதிரை சாம் மட்டுமே அறிந்தவளாகிறாள். அவளின் அப்புன்னகைக்கு பின்னால் என்ன இருக்கும் என்பதை நம்மிடமே விட்டுவிடுகிறார்கள்.
ஹாலிவுட் வணிகத் திரைப்படங்கள் மீதான நுட்பமான கிண்டல், சமூக வலைத்தளங்களின் ஹிப்போக்ரசி போன்றவை சமதளத்திற்கு கதையை இழுத்தாலும் கீடனின் பறவை மனிதன் கீடனின் முதுகிற்குப் பின்னாலேயே நடந்து கொண்டிருப்பது, கீடன் நகரத்தின் மீது பறந்தபடியே பாய்ந்து வரும் அசாதரண மிருகங்களை நொடிப்பொழுதில் அழிப்பது போன்ற காட்சிகள் மாயவெளிக்கு நம்மை நகர்த்துகின்றன. ரேமண்ட் கார்வரின் What We Talk About When We Talk About Love சிறுகதையை நாடகமாகவே நான்கு முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அதே கதையில் பலப் புது சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்த சம்பவங்கள் The Unexpected Virtue of Ignorance என்கிற உப தலைப்பிற்கு காரணமாக அமைகின்றன.
BIRD MAN திரைப்படம் திரைப்பட விழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டது. நான் ஒரு வாரநாளில் மாலை ஆறு மணிக் காட்சிக்குப் போயிருந்தேன். அரங்கின் முன்னிருக்கைகள் கூட முழுவதுமாய் நிரம்பி இனாரித்துவின் புகழைப் பறைசாற்றின. வழக்கமாய் பிரபல இயக்குனர்களின் திரைப்படங்கள் முடிந்த பின்பு உரையாடல் இருக்காது. இத்திரைப்படத்திற்கும் அதுவே நிகழ்ந்தது. துபாய் திரைப்பட விழாவைக் கடந்த ஏழு வருடங்களாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதன் ஒழுங்கு நேர்த்தியும் விளம்பரமும் புகழும் கூடிக் கொண்டே போகின்றன என்றாலும் திரைப்படத் தேர்வுகளில் அவ்வப்போது சறுக்கிறார்கள். இது அம்மாதிரியான ஒரு வருடம்.

துபாய் சர்வதேசத் திரைப்பட விழா 2014 - 1

பதினோராவது துபாய் சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் பத்தாம் தேதி துவங்கி பதினேழாம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் நூற்றுப் பதினெட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வழக்கமாய் Arabian Nights, Gulf Voices, Celebration of Indian Cinema, Cinema of Asia Africa, Cinema for Children & Cinema of the World எனும் உப பிரிவுகளில் திரைப்படங்கள் தொகுக்கப்படும். இந்த வருடம் Celebration of Indian Cinema – Cinema of Asia Africa ஆகிய இரண்டு பிரிவுகளும் இல்லை. மொத்தமாய் இந்திய ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படங்களை Cinema of the World எனும் ஒரே பிரிவில் கொண்டுவந்து விட்டனர். இதைத் தவிர்த்து உள்ளூர் படைப்புகளுக்கென முஹர் பிரிவும் உண்டு. இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூர் படைப்புகளுக்கு மொத்த பரிசுத் தொகையான 575,000 யு.எஸ் டாலர்கள் பிரித்து அளிக்கப்படும். துபாய் திரைப்பட விழாவில் மத்திய கிழக்கின் திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்படும். மற்ற திரைப்பட விழாக்களில் இல்லாத அளவிற்கு பிராந்தியம் சார்ந்த படைப்புகள் அதிகம் இடம்பெறும்.

இவ்வருடப் பட்டியலில் நான் பெரிதும் எதிர்பார்த்த துருக்கி இயக்குனர் நூரி பில்ஜெ ஜிலானின் Winter Sleep திரைப்படம் இடம்பெறவில்லை. Winter sleep கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதைப் பெற்றிருந்ததாலும் சமீபமாய் பார்த்திருந்த Three monkeys, distant மற்றும் once upon a time in Anatolia ஆகிய நூரியின் திரைப்படங்கள் தந்த புத்துணர்வாலும் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க ஆர்வமாக இருந்தேன். இதை சரிகட்டும் வகையில் எனக்கு மிகப்பிடித்த இயக்குனரான அலெஹாந்த்ரோ யொன்ஸேல்ஸ் இனாரித்து வின் BIRDMAN திரைப்படம் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. கூடுதலாக தமிழ் திரைப்படமான காக்கா முட்டையும் பார்க்க முடிந்தது. இவை தவிர இடம்பெற்றிருந்த மற்ற படங்களின் மீது ஈர்ப்பு வரவில்லை. ஏனோ இந்த வருடம் மத்தியக் கிழக்கின் திரைப்படங்களை காணும் ஆர்வமும் வரவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு குர்து படவிழா என்கிற உபதலைப்பில் குர்திஸ்தானைக் களமாகக் கொண்ட திரைப்படங்களை திரையிட்டார்கள். அதில் சில படங்களைப் பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். மேலும் இரானிய யதார்த்த சினிமாக்களின் மீதும் சமீபமாய் அலுப்பு படர்ந்திருக்கிறது. ஓரிரண்டு எகிப்து மற்றும் லெபனான் படங்களையும் சென்ற வருடங்களில் கடனே என்று பார்த்த அனுபவமும் இருப்பதால். இவ்விழாவில் என்னுடைய தேர்வு மிகக் குறைவானதாக இருந்தது. தேர்ந்தெடுத்த இரண்டு படங்களின் தலைப்புகளும் பறவை சம்பந்தமாய் அமைந்தது மிக யதேச்சையான ஒன்றுதான்.
மேலும்

Tuesday, December 21, 2010

தகேஷி கிடானோவின் Outrage 2010

Outrage படத்தை திரைப்பட விழா பட்டியலில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சமீபமாய் கிடானோவின் படங்களைத் தொடர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிக்கிஜீரோவை சென்ற வருடமே பார்த்திருந்தும் ஏனோ இவரைப் பின் தொடரத் தோன்றவில்லை. மிஷ்கினின் அலாதியான சிலாகிப்புகள்தாம் கிடானோவை மறுபடியும் தேடிப் பிடிக்க வைத்தது. இதுவரைக்கும் பார்த்த கிடானோவின் படங்களில் இருக்கும் பொதுவான ஒரு அம்சமாக எள்ளல் தன்மையைச் சொல்லலாம். கிண்டலும் கேலியும் இவரது எல்லா படங்களிலும் மெல்லிதாய் இழையோடுகிறது. சின்னப் புன்முறுவல் இல்லாமல் கிடானோவின் படங்களை நம்மால் பார்க்கவே முடியாது. வெகு சாதாரண ஆட்களாகத்தான் இவரது கதாநாயக பிம்பங்கள் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் திடீரென வல்லமை கொண்டவர்களாகவும் சடுதியில் கோழைகளாகவும் மாறிவிடுகிறார்கள். இவரது பெரும்பாலான கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாய் தோல்வியைச் சந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதை வெகு எளிதில் கடந்து போகிறார்கள். Kids Return படத்தில் வரும் இரண்டு நண்பர்கள் காலத்தின் சுழற்சியில் முன்னும் பின்னுமாய் பயணித்து மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்து சேர்வார்கள். “நம்முடைய வாழ்க்கை அவ்வளவுதானா? முடிந்து போயிற்றா?” என ஒருவன் கேட்கிறான். இன்னொருவன் புன்னகைத்துக் கொண்டே சொல்கிறான். “நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை” படம் முடிந்துபோகிறது. ஒரு காட்சியை எங்கு துவங்க வேண்டும். எங்கு முடிக்க வேண்டும் என்பதற்கு கிடானோவின் படங்கள் சம காலத்தின் மிகச் சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன. தேவையில்லாத ஒரு அசைவையோ படத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு சொல்லையோ கூட இவரது படங்களில் நம்மால் காண இயலாது. கச்சிதமும் நுட்பமும் பின்னிப் பிணைந்தவைதாம் கிடானோவின் திரைப்படங்கள்.

Outrage படத்தில் இரண்டு நொடிக்கும் குறைவான காட்சி ஒன்று வரும். இமையை லேசாக வேறு பக்கம் அசைத்திருந்தாலும் நாம் அந்தக் காட்சியை தவற விட்டுவிடக் கூடும். உயிர்பயம் காரணமாக இரயிலில் தப்பிச் செல்லும் ஒருவனை எதிராளி ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சி அது. இரயில் வேகமாகக் கடக்கும் போது ஒரு சிவப்புப் புள்ளி கண்ணிமைத்து மறையும். இந்தக் காட்சிக்கு தியேட்டரில் பலத்த ஹா க்கள் எழுந்தன. கிடானோவிற்கு உலகம் முழுக்க ஏராளமான இரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை திரைப்பட விழாவில் காண முடிந்தது. வழக்கமாய் திரைக்கு வெகு சமீபமான முன் இரண்டு வரிசை இருக்கைகள் காலியாகத்தான் இருக்கும். ஆனால் வியாழக் கிழமை மதியம் 1 மணிக் காட்சிக்கு அரங்கம் நிறைந்திருந்தது. பத்து நிமிடம் முன்னதாகச் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டதால் வலது பக்கம் அரேபிய பெண்ணும் இடது பக்கம் பிரான்சு தேசத்துப் பெண்னும் அமர ஆசிர்வதிக்கப்பட்டேன். படத்தின் இரசனையான பல வன்முறைக் காட்சிகளில் இடது பக்கம் அமர்ந்திருந்த அரேபியப் பெண் விநோதமான உஸ் உஸ் களை எழுப்பிக் கொண்டிருந்தார். கிடானோ ஒருவனின் முகத்தில் கத்தியால் ஆழமாய் பெருக்கல் குறி போடும் காட்சியில் ஆரம்பித்து அவ்வப்போது வரும் விரல்களை வெட்டும் காட்சிகள் வரை இவர் எழுப்பிய சப்தம் அலாதியான இன்பத்தைத் தருவதாக இருந்தது. குழந்தைகள் ஜெய்ண்ட் வீலின் பரவசத்தில் கத்தும்போது தரையில் இருந்து பார்க்கும் பெரியவர்களின் புன்முறுவலைப் போல அடிக்கடி நான் புன்னகைத்துக் கொண்டேன். வலது பக்கம் அமர்ந்திருந்த ப்ரெஞ்சுப் பெண் கிடானோவின் ஒவ்வொரு அசைவிற்கும் வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார். கிக்கிஜீரோ படத்தை விட இதில் அபாரமானதொரு தாதா கதாபாத்திரத்தை ஊதித் தள்ளியிருக்கிறார் கிடானோ. எழுத்தாளர், ஓவியர், திரைக்கதையாளர், எடிட்டர், இயக்குனர், நடிகர் என எல்லா வடிவங்களிலும் கிடானோ மிளிர்கிறார். சமகால சினிமாவின் ஜீனியஸ் என தாராளமாய் இவரைச் சொல்லலாம்.

எல்லா இயக்குனர்களுக்கும் கேங்ஸ்டர் உலகத்தின் மீது பெரும் விருப்பம் இருக்கிறது. நிழல் உலகத்தின் வாழ்வு அதிக சவால்கள் நிறைந்திருக்குமென்பதால் கலைஞர்களுக்கு இயல்பாகவே அந்த உலகத்தின் மீது ஒரு பிடித்தம் இருக்கலாம். உலக அளவில் அதிகம் சிலாகிக்கப்பட்ட கேங்ஸ்டர் படமாக காட் ஃபாதரைச் சொல்கிறார்கள். மார்லன் ப்ராண்டோவின் நுணுக்கமான நடிப்பில் மூன்று பாகங்களாய் வெளிவந்த இந்தப் படம் உலகம் முழுக்க இரசிக்கப்பட்டது. என் தனிப்பட்ட இரசனை அடிப்படையில் மார்டின் ஸ்கார்சஸின் good fellas படத்தையே கேங் ஸ்டர் உலகத்தின் மிக முக்கியமான பதிவு எனச் சொல்வேன். உலகம் முழுக்க ஏராளமான கேங்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும் அவர்கள் உலகத்தின் நுட்பங்களையும், கொண்டாட்டங்களையும், அபத்தங்களையும், நேர்த்தியாகப் பதிவித்தவர்களாக டராண்டின் குவாண்டினோவும் மார்டின் ஸ்கார்சஸும் சொல்லலாம். இந்த வரிசையில் இப்போது கிடானோ. ஜப்பானிய நிழல் உலகத்தின் சுவாரசியத்தை பார்வையாளர்களுக்குத் தன்னுடைய அபாரமான இயக்கத்தாலும், அசாதாரண நடிப்பினாலும் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறார் கிடானோ.

கதை வழக்கமானதுதான். சர்வ வல்லமை பொருந்திய நிழல் தாதா. நகரம் முழுக்க ஏராளமான நிழல் தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனம் தோற்றுப் போகும் அளவிற்கு கட்டுக்கோப்பான அமைப்பு, இப்படி எவராலும் அசைக்க முடியாத ஒரு அமைப்பை நிர்வகித்து வருகிறார். அவர் ஆளுமைக்குக் கீழ் இருக்கும் ஒரு குட்டி தாதாவின் ஆட்களுக்கும், அவருடைய ஆட்களுக்கும் சிறிய தகராறு ஒன்று வருகிறது. இந்தத் தகராறு சின்ன சின்னதாய் ஏகப்பட்ட குழப்பங்களை விளைவிக்கிறது. இரண்டு தரப்பிலும் ஆட்கள் கொல்லப்படுகிறார்கள். குட்டி தாதாவிற்கு கீழ் கிடானோ. கிடானோவிற்கு நம்பிக்கையாய் சிலர். இவர்களுக்குள் நடைபெறும் நிழல் உலக அரசியல் விளையாட்டும், பழிவாங்கலும், வியாபார போட்டிகளும்தான் படத்தின் பிரதான அம்சம். அதிகாரம், பதவி வெறி, வன்மம், இந்தப் பின்புலத்தில் நடக்கும் பாம்பு ஏணி விளையாட்டுதான் இந்த மொத்த திரைப்படமும்.

படத்தில் ஏராளமான வன்முறைக் காட்சிகள் வருகின்றன என்றாலும் அவைகளை குரூர நகைச்சுவை வடிவத்தில்தான் படமாக்கி இருக்கிறார். நிர்வாகத்திற்கு பிடிக்காத விஷயங்களை செய்துவிட்டால் ஒரு விரலை வெட்டிக் கொண்டு போய் தலைவருக்கு சமர்ப்பிப்பது நிழல் உலகத்தின் சம்பிரதாயங்களில் ஒன்று. படத்தில் ஏராளமான விரல்கள் பார்வையாளர்களின் பலத்த சிரிப்புப் பின்னணியில் வெட்டப்படுகின்றன. ஒரே ஒரு கொலை மட்டும் படு குரூரமாக இருந்தது. அதே நேரத்தில் அந்தக் கொலைக்குப் பின்னாலிருக்கும் கற்பனைத் திறன் குறித்தும் சிலாகிக்காது இருக்க முடியவில்லை. கிடோனோவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனை காரில் கடத்திக் கொண்டு போய், முகத்தை கருப்புத் துணியினால் மூடி, பலமான சுருக்குக் கயிறை கழுத்தில் மாட்டி விடுகிறார்கள். ஏற்கனவே பின்புறமாய் கைகளை மடக்கிக் கட்டியாயிற்று. மிக நீளமான கயிறின் அடுத்த முனையை சாலையோரத்தில் இருக்கும் ஒரு பலமான இரும்புத் தூணில் கட்டிவிடுகிறார்கள். கார் கதவைத் திறந்து வைத்துவிட்டு சீறலாய் காரைக் கிளப்புகிறார்கள். இரும்புத்தூணில் கட்டப்பட்ட கயிறின் அடுத்த முனையில் பிணைக்கப்பட்டிருக்கும் இவனது கழுத்துடல் மிகக் கோணலாய் விசிறியடிக்கப்பட்டு, சடுதியில் உயிர் போய் துவண்டு கிடக்கிறது.கிட்டத் தட்ட என்னை உறைய வைத்த காட்சி இது. இம்மாதிரியான காட்சிகளும், நொடியில் மின்னிப் போகும் அபாரமான திரைக் கோணங்களும் கிடானோவின் படங்களில் மட்டுமே காணமுடிபவை.

இந்த படத்தை திரையில் காண்பது நல்லதொரு அனுபவமாக இருக்கக் கூடும். ஒரு மிட் ஷாட்டில் பல விஷயங்கள் நடக்கின்றன. கிடானோவின் படங்களை ஒரு முறை மட்டும் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவது முட்டாள்தனமான செயலாகத்தான் இருக்கக் கூடும். கிடானோவின் படங்கள் மிஷ்கினை உருவாக்கியதில் வியப்பேதுமில்லை.

Thursday, December 16, 2010

கரிசனமும் யதார்த்த இம்சையும் - துபாய் திரைப்பட விழா


ஏழாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில்கடந்த பனிரெண்டாம் தேதி துவங்கி வரும் பத்தொன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. 57 நாடுகளிலிருந்து 153 படங்கள் திரையிடப்படுகின்றன. 127 hours, the kings speech போன்ற புதிய படங்கள் நேரடியாய் திரையிடப்படுகின்றன. இந்தியப் படங்களாக நம் ஊரிலிருந்து மைனா திரையிடப்படுகிறது. மலையாளத்தில் நயன் தாரா நடிப்பில், ஒரே கடல் இயக்குனர் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் எலெக்ட்ரா, இந்தியில் அபர்ணா சென்னின் இயக்கத்தில் An Unfinished Letter போன்றவை திரையிடப்படுகின்றன.

திரைப்பட விழாக்களில் நான் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களையும் எளிதில் பார்க்க முடிகிற படங்களையும் தவிர்த்து விடுவேன். புதிய பிரதேசங்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள உதவும் படங்களை பார்ப்பதற்கே விருப்பமாக இருக்கும். அரேபிய குறும்படங்கள், அரேபிய – பிரான்சு, அரேபிய - ஆப்பிரிக்க கலாச்சார தழுவல்களில் உருவாக்கப்படும் படங்களின் மூலம் மிகவும் புதிய நிலப் பிரதேசங்களின் வாழ்வைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நேற்று மாலை MIN YE ( Tell me Who you are) என்கிற ஆப்பிரிக்கத் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஆப்பிரிக்காவின் மாலி பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் படமிது. இப்படத்தின் இயக்குனர் Souleymane Cisse ஏற்கனவே சர்வதேச அளவில் கவனம் பெற்றவர். கான் திரைப்பட விழாவில் சிறந்த வெளி நாட்டுப் படங்களுக்கான பிரிவில் இவரது முந்தைய இரண்டு படங்கள் தேர்வாகி இருக்கின்றன. MIN YE ( Who you are) எனும் இந்தப் படம் ஆப்பிரிக்க இஸ்லாம் சூழலில் இயங்கும் மத்தியதர வர்க்க குடும்பங்களின் கதையைப் பேசுகிறது. மதம், கலாச்சாரம் இவைகள் பெண்களுக்கு தரும் மன ரீதியிலான அழுத்தங்களையும் அதிலிருந்து மீள விரும்பும் பெண்களின் விருப்பத்தையும் இப்படம் களமாகக் கொண்டிருக்கிறது, அவ்விருப்பங்களின் தோல்வி எவ்வாறு பொய்களாகவும் துரோகங்களாகவும் வடிவம் கொள்கின்றன என்பதையும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.
இந்தப் பகுதிகளில் ஆண்கள் வசதிக் கேற்ப நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சட்டமும் மதமும் அதற்குப் பூரணமாய் சுதந்திரம் அளிக்கிறது. கணவனை வேறொரு பெண்ணிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத பெண்களின் அகப் போராட்டங்களையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. உயர் கல்வி பயின்று நல்ல பதவியில் இருக்கும் பெண்களும் இந்த இரண்டாம் /மூன்றாம் தார சிக்கலிலிருந்து தப்ப முடியாது. மருத்துவம் பயின்று நல்லதொரு பணியில் இருக்கும் மிமி என்கிற கதாபாத்திரத்தின் மூலமாய் பெண்களின் ஆசைகள், இயலாமைகள், துரோகங்கள் என எல்லா நிலைகளும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள் இவைகளுக்கான பின்புலமாய் இருக்கின்றன என்பதுதாம் மறைபொருளாக படத்தில் பேசப்படுகிறது.

படத்தில் மனதைத் தொடும் எந்த ஒரு விஷயமும் கிடையாது. அடூர் கோபால கிருஷ்ணன்களை விட படு மோசமான திரையாக்கம். படம் முழுக்க தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பாணியில்தான் இயக்கப்பட்டிருந்தது. சினிமா மொழி, திரைக்கதை யுக்தி, பார்வையாளனை கட்டிப் போடுதல் போன்ற எந்த மெனக்கெடலும் திரைப்படத்தில் இல்லை. மேலதிகமாய் படத்தில் எந்த விதமான அரசியல் தன்மையும் இல்லை. ஆனாலும் இந்தப் படம் நேரடியாய் மக்களின் வாழ்வைப் பேசுகிறது. ஒரு சாதாரண குடும்பக் கதை. அதை யதார்த்தமாகவும் சிக்கனமாகவும் படமாக்கி இருக்கிறார்கள். நடிகர்களின் முழு நடிப்புத் திறமைதான் படத்தின் சிலாகிக்கும் அம்சமாக இருக்கிறது. மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் இருந்து திரைப்படங்கள் இப்படித்தான் படமாக்கப்படுகின்றன. அவர்கள் எந்த ஜோடனைகளையும் நம்புவதில்லை. மாறாய் தங்களின் கலாச்சார சிக்கல்களை, வாழ்வின் இயலாமைகளை, கொண்டாட்டங்களை ஓரளவு நேர்மையுடன் பதிவு செய்து விட முனைகிறார்கள்.

இந்திய சூழலில் பத்து, இருபது வருடங்களுக்கு முன்னால் கலைப்படங்கள் இப்படித்தான் வந்தன. கேமராவை கொண்டு போய் ஒரு இடத்தில் வைத்துவிட்டு இயக்குனரும் கேமிராமேனும் டீ குடிக்கப் போய்விட்டார்களா? என அஞ்சும் காட்சியமைப்புகள்தாம் இந்திய சினிமாக்களில் நிறைந்திருக்கின்றன. இம்மாதிரியான அயர வைக்கும் காட்சிகளுக்குப் பெயர் போனவர் அடூர் கோபாலகிருஷ்ணன். சமீபமாய் அவரது நிழல் குத்து படம் பார்த்து, அயர்ந்தேன். கதை மிகவும் முக்கியமானதுதான். எவரும் தொடத் தயங்கும் தளம்தான். இருப்பினும் அதை யதார்த்தமாய் பதிவு செய்வதாய் சொல்லி அயர வைப்பதுதான் யதார்த்த சினிமாக்களின் தோல்வியாக இருக்கிறது. உதாரணத்திற்கு நிழல் குத்து படத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்ப்போம். தூரத்திலிருந்து புள்ளியாய் ஒரு மாட்டு வண்டி தெரியும். மெல்ல அவ்வண்டி கேமரா வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி வரும் வரும் வரும் வரும்.. கேமிரா அசையாது ஒரே கோணத்தில் இருக்கும். பொழுதும் போகும்.. போகும்... அதிலிருந்து மூவர் இறங்குவர். இருள் மெல்லக் கவிய ஆரம்பிக்கும். ராந்தல் விளக்கைப் பொருத்துவர். பின்பு மெல்ல இருளுக்காய் நடக்க ஆரம்பிப்பர். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கேமிரா ஒரே இடத்தில் அசையாது இருக்கும். சில நேரங்களில் கொட்டாவியோடு கொலை வெறியும் சேர்ந்து கொள்ளும் அளவிற்கு இந்த யதார்த்தத்தை நம்மவர்கள் சாறு பிழிந்திருக்கிறார்கள். தூய சினிமா என்பது இதுவல்ல. சினிமாத் தொழில் நுட்பம் வளர்ந்திராத கருப்பு வெள்ளை காலகட்டங்களிலேயே பிரெஞ்சு புதிய அலை சினிமாக்கள் காட்சி மொழியின் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. சொல்லப்போனால் ஃபெலினி இயக்கிய 8 ½ திரைப்படத்தைப் போலவெல்லாம் இன்னொரு திரைப்படத்தை உருவாக்கிவிட முடியுமா? என்பது சந்தேகம்தான்.

திரையிடலுக்குப் பின்பு இயக்குனருடன் அரங்கத்திலேயே குழுவாக உரையாட முடிந்தது. திரைப்பட விழாக்களில் இருக்கும் சிறப்பு அம்சமாக இந்த ஒரு நிகழ்வைச் சொல்லலாம். படத்தின் இயக்குனர் அல்லது நடிகர்களுடன் படம் பார்த்து முடித்த பின்பு அத்திரைப்படம் எழுப்பும் கேள்விகளை பகிர்ந்து கொள்வது நல்லதொரு அனுபவமாக இருக்கும். சில நேரங்களில் இந்த உரையாடல்கள் படத்தையே வேறு மாதிரி புரிந்து கொள்ள உதவும். இன்னொரு வகையில் இந்த உரையாடல்கள் நம்முடைய சொந்த அனுபவத்தை பாதித்து விடவும் கூடும். சமீபத்தில் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அபுதாபியில் நடந்த திரைப்பட விழாவில் சில படங்களைப் பார்த்தேன்.


ப்ரேசிலிலிருந்து I travel because I have to, I come back because I love you என்றொரு படம் பார்த்தேன். படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. படத்தின் பிரதான கதாபாத்திரம் கேமராதான். படம் முழுக்க ஒருவனின் கண்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். வெறுமனே குரல் ஒன்று, விடாமல் பேசிக் கொண்டிருக்கும். மனைவியை விட்டுப் பிரிந்து ப்ரேசிலின் வறண்ட பிரதேங்களில் மண் ஆய்வு செல்லும் ஒருவன் ஒவ்வொரு நாளையும் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. மிகக் கவித்துவமான உரையாடல்கள், கவிதைகள், காட்சி மொழிகள் என படம் மிக நல்லதொரு அனுபவமாக இருந்ததது. கிட்டத்தட்ட ஒரு நல்ல நாவலை வாசித்து முடித்த திருப்தியை படத்தின் பின்னணியில் ஒலிக்கும் குரல் தந்திருந்தது. படம் முடிந்த பின்பு இயக்குனர் இப்படத்தைப் பற்றித் தந்த தகவல்கள் கிட்டத்தட்ட படத்தையே வெறுக்க வைத்து விட்டது. முதலில் இது ஒரு திரைப்படமே அல்ல. பத்து வருடங்களுக்கு முன்னால் இயக்குனர் ப்ரேசிலின் வறண்ட பகுதிகளை ஒரு டாக்குமெண்டரியாக எடுக்க வேண்டுமென விரும்பியிருக்கிறார். அப்பிரதேசங்களுக்கு பயணித்து மனிதர்கள் குடிபெயர்ந்து போன வெற்றிடப் பகுதிகளை கேமிராவில் பதிவு செய்திருக்கிறார். இடையில் அந்த டாக்குமெண்டரி முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. சமீபமாய் எங்கிருந்தோ இதை மீண்டும் தோண்டியெடுத்து காட்சிகளுக்கு பின்னணியாய் கதை ஒன்றை எழுதி கதைக்குச் சம்பந்தமாய் ஓரிரு காட்சிகளை மட்டும் எடுத்திருக்கிறார்கள். எடிட்டிங்கை கவனமாய் செய்து முடித்ததும் இதோ ஒரு திரைப்படம் தயாராகிவிட்டிருக்கிறது. இது ஒரு well made movie அவ்வளவுதான் என அவர் சிரித்துக் கொண்டே சொன்னபோது எனக்கு அதுவரைக்கும் இருந்த உற்சாக மனநிலை காணாமல் போனது.

ஆனால் இந்த Tell me Who you are படம் பார்த்து விட்டு உரையாடியது மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆப்பிரிக்காவின் மாலி போன்ற பிரதேசங்களில் பெண்களின் வாழ்வு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குனர் தந்த பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் அதிகம் படித்திருந்தாலோ நல்ல வேலையில் இருந்தாலோ அவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினமானது. ஏதாவது ஒரு ஆணுக்கு மூன்றாம் தாராமாகவோ நான்காம் தாரமாகவோகத்தான் வாழ்க்கைப்பட வேண்டி இருக்கும். இந்த நிலை மாறுவதற்கு எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுமில்லை என்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு ஆப்பிரிக்கர் மிகவும் கோபமாக ஒரு கேள்வியை முன் வைத்தார். மிமி கதாபாத்திரம் சோரம் போவதாய் காண்பிப்பதன் மூலம் வெளியில் போய் படித்து விட்டு வரும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் போன்றோர் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்பதாய் ஆகாதா? என்றார். இதற்கும் மிக நிதானமாகவே, எந்த சமூகத்தில்தான் சோரம் போவது நடக்கவில்லை? என்றொரு எதிர்கேள்வியும் இயக்குனர் வைத்தார். கலாச்சார நெருக்கடிகள் நிறைந்த சூழலில் பொய்களும் மீறலும் இருக்கும்தான் என்றார்.

இந்த விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி பின் தங்கிய பிரதேசங்களின் சினிமாவிற்கான கரிசனத்தையும் நாம் தந்தாக வேண்டும். ஏராளமான பணமும், தொழில் நுட்பமும், திறமையும் நிறைந்து கிடக்கும் தழிழ் சூழலில் பெரும்பாலும் வணிகக் கொடுங் குறிகள்தாம் விறைத்துக் கிடக்கின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பிரதேசத்திலிருந்து நேர்மையான படங்கள் வருவதை சினிமா மொழி அறிந்த தமிழ் மனமாக விருந்தாலும் கொண்டாடத்தான் வேண்டும் என்றபடியே அரங்கை விட்டு வெளியே வந்தேன். கிடானோவின் outrage, அலெஜாண்ட்ரோவின் Buitiful, துருக்கிப் படமான Poetry போன்றவைகளைப் பார்க்க திட்டமிட்டிருக்கிறேன். பார்த்து விட்டுப் பகிர்கிறேன்.

Friday, March 19, 2010

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா



ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.

மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco

நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.

ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும் திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.

ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.

மொராக்கோ திரைப்படமான The man who sold the world புதுமையான காட்சி அனுபவத்தைத் தந்தது. திரைப்படவிழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டு இரண்டு முறையும் அரங்கு நிறைந்தது. இவ்விழாவில் பார்த்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான படமாக இதைச் சொல்லலாம். இமாத் நூரி(Imad Noury), சுவெல் நூரி (Swel Noury) என்கிற மொராக்கோ சகோதரர்கள் இயக்கிய படமிது. இவர்களின் தந்தை ஹக்கிம் நூரி மொராக்கோவில் நன்கு அறியப்பட்ட இயக்குனர். தாய் மரியா (Maria Pilar Cazorla) ஸ்பானியத் திரைப்பட தயாரிப்பாளர். இத் திரைப்படத்தை தயாரித்திருப்பதும் இவர்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் 'A Weak Heart' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. பெரும்பாலான காட்சிகளில் இரஷ்ய இயக்குனர் அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் பாதிப்பை உணர முடிந்தது. திரையில் மிகச் சிறந்த கவித்துவப் படிமங்களை உண்டாக்குவதில் வல்லவரான தர்க்கோயெவ்ஸ்கியால் பயன்படுத்தப்பட்ட பல திரைப்படிமங்கள் இவர்களை பாதித்திருக்கின்றன. கவித்துவ உச்சங்களை திரையில் கொண்டுவர தர்க்கோயெவ்ஸ்கியால் மட்டும்தான் முடியுமென்கிற என் இறுக்கமான நம்பிக்கைகளை இவர்கள் சற்றுத் தளர்த்தியிருக்கிறார்கள். மத்திய கிழக்கின் intellectual cinema என இத்திரைப்படத்தை தாராளமாக கொண்டாடும் அளவிற்கு மிக நேர்த்தியான முறையில் படமாக்கப் பட்டிருக்கிறது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்ப சுவெல் நூரி.

ரெட் காமிராவினைக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள். லில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Audrey Marnay யின் வெண்ணிற உடலில் தனியாய் தெரியும் அடர் சிவப்பு உதடுகளும் சிவப்புச் சாயம் பூசின நகங்களும் ரெட் காமிராவின் அசாத்தியங்கள். படம் முழுவதுமே சிவப்பு நிறம் காதலின் நிறமாகவும் கொண்டாட்டத்தின் நிறமாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

காட்சிகளுக்குப் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்கள் படத்திற்கு அசாதாரணத் தன்மையை தந்திருக்கின்றன. மனதின் மிக ஆழமான, கொந்தளிப்பான, உணர்வுகளின் / உணர்ச்சிகளின் தெறிப்பை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிந்தது. பதினைந்து தலைப்புகளில் இத்திரைப்படம் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு அடையாளமில்லா தேசத்தில் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. வளைந்த கால் ஒன்றையும் மிக இலேசான இதயத்தையும் கொண்டவனுமான எக்ஸ்(Said Bey) அரசாங்கத்தின் கோப்புகளை மறு பிரதியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். எக்ஸின் கையெழுத்து அந்த ஊரிலேயே மிகச் சிறந்த கையெழுத்தாய் இருப்பதனாலும் அவன் உடல் சிக்கலை முன் வைத்தும் அவனை அரசாங்கம் போர் முனைக்கு அனுப்பி வைக்க வில்லை. எக்ஸின் அறைத்தோழனும் சக பணியாளனுமான நே (Fahd Benchamsi) எக்ஸின் மீது மிக ஆழமான அன்பை வைத்திருக்கிறான். இருவரும் மிக நெருக்கமான அடர்த்தியான அன்பில் திளைக்கிறார்கள். மேலதிகமாய் எக்ஸிற்கு லில்லி என்கிற மிக அழகான பாடகியின் காதலும் கிட்டுகிறது. அவள் எக்ஸை இந்த உலகத்தின் எல்லாவற்றையும் விட அதிகமாய் நேசிக்கிறாள்.

தன் மீது நம்பிக்கை வைக்கும் உயரதிகாரி, அன்பையும் அக்கறையும் கொட்டும் உயிர்த்தோழன், தன்னை வாரிக் கொடுக்கும் அழகான காதலி என எல்லாமிருந்தும் எக்ஸ் துயரமடைகிறான். பதட்டமடைகிறான். இந்த உலகத்தில் தனக்கு மட்டும் எல்லாம் கிடைத்துவிட்டதே என குற்ற உணர்வு கொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையை குலைத்து விடுவோமோ என பயப்படுகிறான். தன்னை உலகத்துடன் பொருத்திப் பார்த்து உலகம் எப்போது மகிழ்வடைகிறதோ அப்போதுதான் தன்னால் மகிழ்வாய் இருக்க முடியும் என நம்புகிறான். இறுதியில் மனநிலை பிறழ்கிறான்.

இப்படத்தின் திரையாக்கம் மகிழ்வையும், உற்சாகத்தையும், அன்பில் திளைத்தலையும், நட்பையும், காதலையும், காமத்தையும், உடலையும், போதையையும், பைத்தியத்தன்மையையும் மிகச் கச்சிதமாக பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. போர்ச்சூழலை காண்பிக்க இரண்டு சிதிலமடைந்த வீடுகளும் எக்ஸ் மற்றும் நே வின் பதட்டங்களும் போதுமானதாய் இருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் கதையும் புறம் சாராது அகத்திலேயே பயணிப்பதால் இடம்/தேசம் குறித்தான அடையாளமற்றத் தன்மையை உண்டாக்க இயக்குனர்கள் பெரிதாய் மெனக்கெட வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது.

திரையிடலுக்குப் பின்பான கலந்துரையாடலில் நூரி சகோதரர்களில் ஒருவரும் தயாரிப்பாளரான தாயும் மற்றும் எக்ஸாக நடித்திருந்த சையத்பேவும் பங்குபெற்றனர். இரஷ்ய நாவலை அராபிய போர் சூழலுக்குப் பொருத்த எவ்வாறு முடிந்தது என்கிற வினாவிற்கு நூரி பதிலளித்தார். தஸ்தாயெவ்ஸ்கி, காஃப்கா போன்றவர்களின் படைப்புகளில் சூழல்கள் பின்னணிகள் குறித்த பெரும் விவரணைகள் இல்லாதது எல்லா சூழல்களுக்கும் பொருந்திப் போக இலகுவாய் இருக்கிறதென்றார். தாய் தயாரிப்பாளராக இருந்ததால் தங்களால் சுதந்திரமாய் இயங்க முடிந்ததென்றும் பட நேர்த்தியை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட முடிந்ததாயும் பகிர்ந்தனர். அரை மில்லியன் யூரோக்களை இப்படத்திற்கு செலவு செய்ததாய் மரியா பகிர்ந்தார். முப்பது வயதையும் எட்டியிராத இவ்விளம் இயக்குனர்கள் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியமானதுதான். மேலதிகமாய் இத்திரைப்படம் மூலமாய் உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன போன்ற மொன்னை கேள்விகளுக்கும் மிக நிதானமாய் பதில் சொல்லும் பொறுமையும் இவர்களுக்கு இருக்கிறது.படம் முடிந்த பின்பு நூரியின் கைகளை அழுத்தமாய் பற்றிக் குலுக்கினேன். இவ்விரு சகோதரர்களும் வருங்கல மத்தியக் கிழக்கின் தவிர்க்க முடியாத சினிமா அடையாளமாகவிருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

துபாய் திரைப்பட விழாவின் வண்ணம் வருடத்திற்கு வருடம் மெருகேறிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக இந்நிகழ்வை அவதானித்து வருபவன் என்கிற முறையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் மிக தைரியமான படங்களை விழாக் குழுவினர் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். உள்ளூர் படங்களுக்கு கணிசமான பரிசை வழங்குவதின் மூலம் அராபிய இளைஞர்களிடையே திரைப்படம் குறித்தான சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறார்கள். அய்ரோப்பிய திரைப்பட விழாக்களைப் போல கவர்ச்சியும் வசீகரமும் புகழின் வெளிச்சமும் அங்கீகாரங்களும் இன்னமும் இவர்களுக்கு கிடைக்கவில்லைதான் எனினும் மத்தியக் கிழக்கின் பெருமளவில் அறியப்படாத சினிமாக்களுக்கு இவ்விழா ஒரு பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

அகநாழிகை மார்ச் 2010 இதழிலும் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. நன்றி வாசு.

Thursday, December 17, 2009

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா

அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகள்:

ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.

மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco

நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.

ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும் திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.

ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.

Monday, December 17, 2007

துபாய் திரைப்பட விழா - நானும் பத்மப்ரியாவும் ஆசிப்பும் அடூரும்


என்னளவில் இந்தத் திரைப்படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.ஒரு புதிய முயற்சி மற்றும் நேர்த்தியான சினிமா என்கிற அடிப்படையில் படத்தை அணுகலாம்.ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணன் என்கிற பெயர் ஏற்படுத்தியிருக்கும் hype ற்கான தனித்தன்மைகள் எதுவும் இத்திரைப்படத்தில் இல்லை.அடூரிடம் பார்வையாளர் அரங்கிலிருந்து கேட்கப் பட்ட முதல் கேள்வி.. இது ஆண்களுக்கெதிரான இன்னொரு பெண்ணிய படமா? என்பதுதான் அடூர் இதை மறுத்தார் இது பெண்ணியம் பேசும் படமில்லை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலான மக்களின் வாழ்வு வெவ்வேறு சிறுகதைகளாக பதிவிக்கப் பட்டிருக்கிறதே தவிர இது ஆண்களுக்கெதிரான படமில்லை என்றார்.
சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன ஏன் மீண்டும் மீண்டும் பெண்ணையே சுற்றி வருகிறது சினிமா? என்கிற கேள்விக்கு தனக்கு தெரிந்த நன்கு பழக்கமான ஒன்றை பதிவிக்கவே தான் விரும்புவதாகவும் மற்ற பிரச்சினைகளைப் பேச வேறு இயக்குநகள் இருக்கிறார்கள் எனவும் எனக்கு உண்மைகளைத் திரைப்படமாக்க மிகவும் பிடித்திருக்கிறது எனவும் பதில் சொன்னார்.இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள்.. இருப்பினும் இன்னும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடக்கிறதே..இந்த நிலை எப்போது மாறும் என நினைக்கிறீர்கள்? எனும் இன்னொரு கேள்விக்கு இந்த கதைகள் 1935க்கும் 1945க்கும் இடையிலானது அப்போது கல்வித்தரம் மேம்பட்டிருக்கவில்லை.இப்போது நகரம் சார்ந்த பெண்களின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன எனினும் இந்த கிரமப்புறம் சார்ந்த பெண்களின் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை அந்த நிலை மாறலாம ஆனால் அந்த மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்றார்.அத்தோடு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரள மாநிலம் பெண்களுக்கு மேம்பட்டதாய்த்தான் இருக்கிறது பெரும்பாலான பெற்றோர்கள் ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை இருவருக்கும் சம கல்வியைத்தான் தருகிறார்கள் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என்றெல்லாம் கேரள சிறப்புகளை சொன்னார்.




தன் திரைப்படம் வெளியிடப்பட்ட திரைப்பட விழாக்கள் அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக சிலாகித்துக் கொண்டார்.அத்துடன் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க நடிகை,நடிகர்கள் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டுவார்கள் இத்தனைக்கும் நான் எத்தனை சம்பளம் என்றெல்லாம் கேட்பதில்லை சொல்லப்போனால் சொற்பமான சம்பளம்தான் ஆனால் எப்படியும் தந்துவிடுவேன் என்றார்.
சிலரின் சிலாகிப்புகளுக்குப் பிறகு வெளியில் வந்த அவரை நானும் ஆசிப்பும் ஓரம்கட்டினோம்.நான் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டிருந்த குறியீடுகளைப் பற்றி (symbolic images) கேட்டேன். இத்திரைப்படத்தில் குறியீடுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றார்.கடைசிக் குறும்படத்தில் நந்திதாவினுடைய தாயின் மரணத்தின்போது ஒரு காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிக்கப்படுமே அதென்ன? என்றேன் அதற்கு அவர் தென்னை மரம் மனிதர்களோடு மிகவும் நெருக்கமானது குடும்பத்தில் மூத்தவர் இறக்கும்போது காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிப்பது வழக்கம் என்றார் (இதைத்தானே குறியீடு என்றேன் ..என்னவோ)The spinster குறும்படம் முடியும்போது உலை கொதிப்பது போன்ற சப்தம் வரும் இது நந்திதாவின் மனதை பதிவிக்கிறதா என்றதிற்கும் இல்லை என மறுத்துவிட்டார்.அந்த சமயத்தில் அந்த இசை இருந்தது இசையை திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதோடு என்னால் ஒத்துப்போக முடிந்தது.




பத்மப்ரியாவை ஆசிப் முற்றுகை இட்டார். சேரனின் தவமாய் தவமிருந்து பேச்சைத் துவங்க வசதியாய் இருந்தது. படம் மிக லெந்தியாச்சே என்றும் விருதுக்காக தனியாய் எடுக்கப்பட்டதிலும் நாந்தான் நடித்தேன் என்றுமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.குட்டியான கருப்புநிற ஆடையில் பத்மப்ரியா அழகாய்த்தான் இருந்தார். நடிக்கத் தெரியவில்லை.. ஆம்பளை மாதிரி இருக்கு... என்றெல்லாம் கமெண்டின அந்த இயக்குநரை ரெண்டு மிதி மிதிக்கலாம் என மனசில் கறுவிக்கொண்ட்டேன்.shall i take a picture with u priya? என்றதற்கு சந்தோஷமாய் இசைந்து என்னுடனும் ஆசிப்புடனும் படமெடுத்துக்கொண்டார். அடுத்தபடமான சந்தோஷ் சிவனின் Before the Rain க்காக ஆயத்தமானோம்.சொற்ப நேரமே இருந்ததால் ஸ்டார்பக்ஸில் லஞ்சை முடித்துக்கொண்டு இருக்கைகளுக்கு திரும்பினோம்.

Sunday, December 16, 2007

துபாய் திரைப்பட விழா - நாலு பெண்கள்

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பத்மப்பிரியா,கீது மோகந்தாஸ்,மஞ்சு பிள்ளை,நந்திதா தாஸ் மற்றும் காவ்யா மாதவன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் தகழி சிவசங்கரன் பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.நான்கு தனித்தனி குறும்படங்களான இவற்றை ஒரு படமாக வெளியிட்டிருப்பது மிகவும் சிறப்பு.நான் லீனியர் அல்லது பன்முக பரிமாணம் போன்ற நோக்கிலும் இத்திரைப்படத்தை அணுகலாம்.திரையீடலுக்கு அடூரும் பத்மப்ரியாவும் வந்திருந்தது எதிர்பாராத மகிழ்ச்சி.திரைப்படம் துவங்குவதற்கு முன் சிறு அறிமுகம் ஒன்றைத் தந்த அடூர் படத்திற்கு பின்பு விரிவாகப் பேசலாம் என்றார்.1935 லிருந்து 1945 வரைக்குமான காலகட்டத்தில் கேரளாவின் கிராமத்து வாழ்வியலைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பேசும் படமாக இது இருக்கும் என்ற அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டார்.
முதல் சிறுகதை The Prostitute சாலையோர வேசியாக நடித்திருப்பது பத்மப்ரியா படபடக்கும் விழிகளும் அழுக்கான ஆடைகளுமாய் முழுமையான கதாபாத்திரமாக மாற்றப்பட்டிருந்தார்.வேசி என தலைப்பிடபட்டிருந்தாலும் இந்த திரைப்படம் பேசுவது விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை.சாலையோரங்களில் வசிக்கும் மனிதர்கள் சமூகத்தின் எவ்வித அடையாளமுமில்லாமல் போவதை, சமூக ஒழுங்குகள் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் இம்மனிதர்களுக்கு எவ்வித அலைக்கழிப்பைத் தருகிறது என்பதை மிக இயல்பாய் பதிவித்திருக்கிறார்.நீள வசனங்கள் இல்லாதது பிரச்சார நெடியை குறைக்கிறது அதே சமயம் அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லாதது படத்திற்கு ஒரு வித நாடகத் தன்மையைத் தந்துவிடுகிறது.குறைவான வசனங்கள், மேல் சட்டையில்லாத ஆண்கள், மிக மெதுவான காட்சியமைப்புகள் என அடூரின் 'ட்ரேட் மார்க்' திரைப்படமாக இருந்தாலும் மிக முக்கியமான விதயம் ஒன்றை பதிவு செய்திருப்பதால் இந்தக் குறும்படம் எனக்குப் பிடித்திருந்தது.பத்மப்ரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இன்னொரு சாலையோர மனிதனிடம் தன் பழைய விதயங்களை நோண்டக்கூடாது என்கிற எச்சரிக்கையோடு சேர்ந்து வாழ்கிறாள்.அவன் மூட்டை சுமக்கும் வேலைக்கும் இவள் கல் சுமக்கும் வேலைக்குமாய் போகிறார்கள்.இரவில் சாலையோரங்களில் படுத்து உறங்குகிறார்கள்.ஒரு நாள் போலிசார் தூங்கிக் கொண்டிருந்த இவர்களை பொது இடத்தில் விபச்சாரம் செய்ததாக சொல்லி கைது செய்கிறார்கள்.நீதிபதியிடம் தாங்கள் கணவன் மனைவி என்பதை மட்டும்தான் அவர்களால் திரும்பத் திரும்பச் சொல்லமுடிகிறது.எவ்வித நிரூபணங்களும் அவர்களிடம் இல்லை. அவள் வேசி என்பதற்கு நிறைய சாட்சிகள் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் தண்டனை கிடைப்பதோடு படம் முடிகிறது.இருவருக்குமே அவரவர் தந்தையின் பெயர் தெரியவில்லை. இருவருக்குமே தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இருவருக்குமே வசிப்பதற்கு வீடெதுவும் இல்லை.ஆதலால் அவர்கள் குற்றவாளிகள்.

இரண்டாவது சிறுகதை The Virgin கீது மோகன் தாஸ் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.சாப்பாட்டு ராமனுக்கு வாழ்க்கைப்படும் இளம் பெண் ஒருத்தியின் துயரங்களையும் சுற்றுப் புற மனிதர்கள் ஒரு பெண்ணின் மீது அவதூறுகளைப் பரப்புவதால் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சொல்லியிருக்கிறார்கள்.எவ்வளவு சாப்பாடு போட்டாலும் தின்கிற ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படும் கீது கச்சிதமாய் நடித்திருக்கிறார்.எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒருவன் திருமணமான முதல் நாளிலேயே அவளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்குப் போய்விடுகிறான்.இரண்டவது சினிமாவிற்கு போய்விட்டு தாமதமாக வந்து குளிக்கப்போகிறான் உட்கார்ந்தபடியே அவளின் முதலிரவு முடிந்து போய்விடுகிறது.மிக அசூசையாய் தின்பதும் மிக இறுக்கமான முகத்தோடும் திரும்பிப்படுத்து தூங்குவதுமாய் இருப்பவனோடு ஒரு நாளை கழித்த பின்பு வெளியில் சொல்ல முடியாத வேதனைகளோடு தாய் வீட்டிற்கு விருந்துக்கு வருகிறாள்.அவள் கணவன் நான்கு நாட்கள் நன்றாய் வயிறு புடைக்கத் தின்கிறான் தூங்குகிறான் ஒரு நாள் பின்பு வந்து அழைத்துப் போவதாய் கிளம்பிப் போய்விடுகிறான்.அவன் திரும்பி வருவதே இல்லை.அதற்குள் சுற்றுப் புற மனிதர்கள் இவள் தப்பானவள் அதனால்தான் அவன் வந்து அழைத்துப் போகவில்லை என அவதூறு பரப்புகிறார்கள்.அவன் அவளை விவாகரத்து செய்யப் போவதாய் ஒருவன் கீது வின் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான்.கீது அதற்கு அவசியமே இல்லை ஏனெனில் எனக்கு கல்யாணமே ஆகவில்லை என சொல்வதோடு இத்திரைப்படம் முடிகிறது.இதில் சொல்லப்பட்ட்வைகளை விட சொல்லப்படாதவைகளே அதிகம்.சொல்லப்படாதவைகள் மிக அதிகமாய் இருந்ததினால் இந்தக் கதை ஒட்டாமலே போய்விடுகிறது.

மூன்றாவது கதை The Housewife ஆறுமுறை கருத்தரித்து இரண்டு குழந்தைகள் பெற்று அவை சில மாதங்களிலேயே இறந்து போன துக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மஞ்சு பிள்ளையின் பக்கத்து வீட்டு மனிதராக முகேஷ் தமிழ்நாட்டில் வசிக்கும் அவர் அவ்வப்போது தன் தாயை வந்து பார்த்து விட்டுப் போவார்.அந்த கிராம மனிதர்களை மறந்துவிடாமல் எல்லாரிடமும் மிக அன்பாக பழகுவதாகவும் ஏழைகளுக்கு உதவும் தயாள மனம் படைத்தவர் என்றுமாய் சொல்லி சிலாகிக்கிறார்கள் மஞ்சு பிள்ளையு ம் அவள் வேலைக்காரியும்.இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே முகேஷ் அவளைப் பார்க்க வருகிரான்.இருவரும் பழங்கதைகளை பேசி மகிழ்கிறார்கள் அவளின் நிலையறிந்த முகேஷ் அவளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறான்.அவள்மீது எதுவும் குறையில்லை எனவும் அவள் கணவன் மீதுதான் குறையிருக்கலாம் என்று சொல்லியுமாய் அவளை மாற்ற முயற்சிக்கிறான்.குழந்தையில்லாததால் குதிரைக்காரனை பயன்படுத்திக்கொண்ட ராணியின் கதையை பூடகமாக சொல்கிறான் மறுநாள் மதியம் வருவதாய் சொல்லிவிட்டு செல்கிறான்.வழக்கத்திற்கு மாறாய் அன்று சீக்கிரம் வீடு திரும்பும் அவள் கணவன் முரளி அவளோடு உறவு கொள்கிறான்.அடுத்த நாள் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வரும் முகேஷை திருப்பி அனுப்பி விடுகிறாள் தனக்கு குழந்தைகளே இல்லாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் நேர்மையாக வாழ விரும்புவதாய் சொல்கிறாள்.இந்தக் குறும்படம் மிகக் க்ச்சிதமாய் இருந்தது தேவையற்றவைகள் எதுவுமில்லாது ஒரு குடும்பப் பெண்ணின் அலைவுகளை மிக நுட்பமாய் பதிவு செய்திருப்பது சிறப்பு.


நான்காவது கதை The Spinster நந்திதாசை பெண்பார்க்க வருபவன் அவளின் தங்கையான காவ்யா மாதவனை மணந்து கொள்கிறான்.எத்தனை முயற்சித்தும் நந்திதாவிற்கு திருமணம் கைகூடாமலே போய்விடுகிறது அவளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாய் சொல்லும் அவளின் சகோதரனும் வெகுநாட்கள் காத்திருக்க முடியாமல் திருமணம் செய்து கொள்கிறான்.ஒரே ஆதரவான தாயும் இறந்துபோகவே அவளின் தங்கையான காவ்யா மாதவனோடு வசிக்கப் போகிறாள்.காவ்யாவின் இரண்டு குழந்தைகளும் நந்திதாவின் மீது அன்பாயிருந்தாலும் காவ்யாவிற்கு பிடிக்காமல் போகவே அங்கிருந்து திரும்பி பழைய வீட்டிலெயே தனியாக வசிக்க ஆரம்பிக்கிறாள்.ஒரு நாள் ஏதோ ஒரு அசைவில் வழியில் சந்திக்கும் ஒருவனை இரவு வரச்சொல்லி அவன் வந்து கதவைத் தட்டும்போது மறுத்துவிட்டு அவனை திருப்பி அனுப்பிவிடுகிறாள்.கடைசி வரை திருமணமாகாத ஒரு பெண்ணின் துயரங்களை பேசும் படம் இது நந்தாதாசுக்கு நடிக்க சொல்லித் தர வேண்டுமா. மிக அழகான மிகைப்படுத்தாத நடிப்பு.

திரைப்படம் முடிந்த பின்பான உரையாடல்கள் மற்றும் அடூரின் பகிர்வுகள் அடுத்த பதிவில்

துபாய் திரைப்பட விழா:திரைப்படங்களுக்கு முன்பு சில புகைப்படங்கள்

நான்காவது சர்வதேசத் திரைப்படவிழா துபாயில் கடந்த 9ம்தேதியிலிருந்து துவங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது.திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களில் ஒன்றான மதினாத் செளக் மிக அழகான,வசதியான இடம். துபாயின் மிக செழிப்பான இடங்களில் ஒன்று.ஏழு நட்சத்திர ஓட்டல் மற்றும் ஜீமைரா ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நடுவில் இருக்கும் இந்த மதினாத் செளக் பாரம்பரிய அராபிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது. முழுதும் மரத்தினாலான பழைய கட்டிடங்களின் சாயலை ஒட்டிய மிக அழகான மால்.திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆசிப்பும் நானும் மாலை சுற்றி வந்தோம் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.காமிரா எதுவும் கொண்டு போகாததால் கைவசமிருந்த மொபைல்களிலே எடுத்தோம்.


















Featured Post

test

 test