Showing posts with label வம்சி. Show all posts
Showing posts with label வம்சி. Show all posts

Friday, January 9, 2015

வம்சி வெளியீடுகள் 2015





1. நிலம் - பவா செல்லதுரை

பவா வின் நிலம் தொகுப்பை கையெழுத்துப் பிரதியாகவும், கணினிப் பிரதியாகவும் சென்ற வருடமே வாசித்திருந்தேன். மேலும் சில மனிதர்களை இந்நூலில் சேர்த்தால் கச்சிதமாகவிருக்கும் என நானும் ஷைலஜாக்காவும் நம்பினோம். பவா நிதானமாக இன்னும் சில மனிதர்களை இந்நூலில் கொண்டு வந்திருக்கிறார்.

2. கவர்னரின் ஹெலிகாப்டர் - எஸ்.கே.பி. கருணா

கருணாவின் கட்டுரைகள் சுவாரசியமானவை. திருவண்ணாமலை நகரத்தின் இன்னொரு முகத்தை இவரின் சிறுகதைகளும் கட்டுரைகளும் காட்சிப்படுத்துகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள்  அனைத்தும் நல்ல சிறுகதைக்கான எல்லாக் கூறுகளும் உடையவை. எங்கள் ஊரிலிருந்து இன்னொரு எழுத்தாளர் என மகிழ்ந்து கொள்ளும்படியான மொழியும் விவரணையும் கொண்டவரின் முதல் தொகுப்பு.



3. புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -பாரதிமணி

பல பரிமாணங்களையும் நெடிய அனுபவங்களையும் கொண்ட பாரதிமணி அவர்களின் குறிப்புகளாலான சுயசரிதையாக இந்நூல் வடிவம் பெற்றிருக்கிறது. பாரதி மணி அவர்களை நேரில் சந்தித்திராத சந்திக்க விருப்பம் கொண்டிருக்கும் பலருக்கும் இத் தொகுப்பு வடிகாலாக இருக்கும்.



4. யாதுமாகி - எம்.ஏ.சுசீலா

அசடனை மொழி பெயர்த்த எம்.ஏ.சுசீலா அவர்களின் முதல் நாவல்.


5. தெக்கத்தி ஆத்மாக்கள் - பா. ஜெயப்பிரகாசம்

6. எட்டு கதைகள் - இராஜேந்திர சோழன்

7. கவிஞர் சக்தி ஜோதியின் கவிதைத் தொகுப்புகள்

8. விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன்

9. 7.83 ஹெர்ட்ஸ் - க.சுதாகர்

புத்தகத் திருவிழாவில் வம்சி பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 582 மற்றும் 583



Sunday, December 29, 2013

நிகழ் திரை : உலகத் திரை பிம்பங்களின் பரவச நடனம்




இந்த வருடத்தின் துவக்கத்தில் வந்திருக்க வேண்டிய புத்தகமிது. ஜனவரி மாத விடுமுறைக்கு திருவண்ணாமலை வந்த  முதல் நாளில் ஷைலைஜாக்கா என்னிடம் கேட்ட சினிமாப் புத்தகம் ஒரு வழியாய் வருடக் கடைசியில் சாத்தியமாகி இருக்கிறது. ஆரம்பத்தில் என் வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட சினிமாக் கட்டுரைகளை தொகுத்து விடும் எண்ணமிருந்தது. அதைச் செயல்படுத்தும் நோக்கில் என் கட்டுரைகளை மீண்டும் வாசித்துப் பார்த்தேன். அவை மிகப்பெரும் அவநம்பிக்கையைத் தந்தன. என் வலைப்பக்க கட்டுரைகள் புத்தக வடிவில் வர எவ்வித முகாந்திரமுமில்லாத உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன. ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட்டு புதிதாய் எழுதிக் கொள்ளலாம் என்கிற முடிவிற்கு வந்தேன். ஷைலஜாக்கா விடம் பதினைந்தே நாளில் புத்தம் புதிதாய் ஒரு சினிமாப் புத்தகம் எழுதித் தருவதாக சொன்னேன்.  ஆனால் நான் நினைத்தது போல் இந்தப் புத்தகம் பதினைந்தே நாளில் எழுதிவிடும் அளவிற்கு எளிமையானதாய் இருக்கவில்லை அல்லது எனக்குப் பதினைந்தே நாளில் ஒரு சினிமாப் புத்தகம் எழுதும் அளவிற்கு எழுத்து இன்னமும் கைகூடி வரவில்லை.

ஊரிலிருந்த வரை ஒரு வரி கூட என்னால் எழுத முடியாமல் போனது. மீண்டும் துபாய்க்கு வந்ததும் பத்து சம கால இயக்குனர்களின் படங்களைக் குறித்து விரிவாய் எழுதும் எண்ணம் உதித்து, புத்தகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. பத்து இயக்குனர்களைத் தேர்வு செய்ய ஒரு மாதம் போனது. அடுத்த ஆறு மாதங்கள், மிகச் சரியாய் ஜூன் மாதத்திற்குப் பிறகு மீண்டும் எழுதா நிலைக்குப் போனேன். இதற்கு இடையில் வலைப்பக்கத்தில் இரண்டு குறு நாவல்களை ஒரே சமயத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். அதையும் மே மாதத்தோடு ஊற்றி மூடி விட்டு எதையுமே எழுதாமல் நாட்களைக் கடத்தினேன்.

நவம்பர் மாதத்தின் சோர்வுற்ற ஒரு பிற்பகலில் பவா வைத் தொலைபேசியில் அழைத்தேன். பவா சினிமாப் புத்தகம் பற்றிக் கேட்டார். பாதியிலேயே நிற்கிறது பவா என்றேன். பரவாயில்லை உங்கள் வலைப்பக்கத்தில் சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் சுட்டிகளை மட்டும் மடலிடுங்கள் நாங்களே எடுத்து தொகுத்துக் கொள்கிறோம் என்றார். என் மீதான பவா வின் மிதமிஞ்சிய நம்பிக்கையின் உயரம் எப்போதும் உயிர்ப்பாய் இருக்கும் என் சோம்பலை அசைத்துப் பார்த்தது. அவரிடம் மீண்டும் பதினைந்து நாள் அவகாசம் கேட்டேன்.  இந்த முறையும் பதினைந்து நாளில் என்னால் மூன்று கட்டுரைகளை மட்டுமே எழுத முடிந்தது. எடுத்துக் கொண்ட இயக்குனர்கள் யாவரும் மிக சிக்கலான தளத்தில் இயங்குபவர்கள் என்பதால் அவர்களின் அனைத்து படங்களையும் மீண்டும் பார்க்க வேண்டி வந்தது. மேலும் புனைவல்லாத கட்டுரைகளை எழுதுவதில் நான் தேர்ச்சி பெற்றிருக்கவும் இல்லை என்பதை இக்கட்டுரைகள் எழுதும்போது அறிந்து கொண்டேன். கட்டுரை நடைக்கு என் புனைவு மூளை ஒத்துப் போகவுமில்லை.

போதாத குறைக்கு என் அரசு அலுவலகத்தின் செத்த மூளைகள் யாவும் நெடிய தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, என்னை விரட்டி விரட்டி வேலை வாங்க ஆரம்பித்தன. ஆகவே வழக்கமாய் எழுதும் என் அலுவலக மேசையில் உட்காரக் கூட முடியாமல்  போனது. இந்தப் பத்து கட்டுரைகளும் விடுமுறை நாட்களில், நள்ளிரவில், அதிகாலைகளில் எழுதப்பட்டன. எழுதும்போது பயல்கள் லாப்டாப்பின் மீது பாய்ந்து விடாதபடி கல்பனா பார்த்துக் கொண்டாள். அதோடு நிற்காமல் என்னால் எழுத முடியவில்லை அய்யனார் விஸ்வநாத் அவ்வளவுதான் எனச் சோர்ந்து இப்புத்தகம் எழுதும் திட்டத்தைக் கைவிட்ட போதெல்லாம் என்னைத் தேற்றி எழுதவும் வைத்தாள். ஷைலஜாக்காவின் தொடர்ச்சியான மின்னஞ்சல் விசாரிப்புகளின் மூலம் ஒரு வழியாய் இந்தப் புத்தகம் முடிந்தே விட்டது.

என் சினிமாப் பைத்தியம் பற்றி நண்பர்கள் நன்கறிவர். அந்தப் பைத்தியம் இந்தப் புத்தகம் எழுதப்படும் நாட்களில் முற்றியிருந்தது. என் எல்லாப் புத்தகங்களும் எழுதப்படும்போது தந்த பரவசங்களையும் திளைப்பையும் இப்புத்தகத்தை எழுதும்போதும் பெற்றுக்கொண்டேன். எழுதுபவனாய் ஒருவனுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? எழுத்து எழுதப்படும்போதே எல்லாவற்றையும் தந்து விடுகிறது.

உலக சினிமாவை அறிமுகப்படுத்தியதோடு மட்டும் நிற்காமல் இன்றளவும் என் சினிமா அறிவின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கும் என் மூத்த சகோதரன் ரமேஷிற்கும், இணையப் பக்கங்களில் ஏழு வருடங்களாக என்னோடு சினிமா பற்றி உரையாடிக் கொண்டும் புதுப்புது படங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுமிருக்கும் நண்பர்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாய் சினிமாவை உன்னதமான கலை வடிவம் என நம்பும் அத்தனை உள்ளங்களுக்கும் இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன்.

வழக்கம் போல இந்தப் புத்தகமும் வெளிவருவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்து, என் அநியாயச் சோம்பலைச் சகித்துக் கொண்ட ஷைலஜாக்காவிற்கும் சந்தித்த முதல் நாளிலிருந்து நம்பிக்கையும் அன்பையும் ஆன்மாவிலிருந்து தந்து கொண்டிருக்கும் என் ப்ரிய பவா விற்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்நூலாக்கத்திற்கு மெனக்கெட்ட வம்சித் தோழமைகளுக்கு என் அன்பு.


அய்யனார் விஸ்வநாத்
டிசம்பர் 28, 2013
துபாய்
ayyanar.v@gmail.com


Monday, April 30, 2012

எல்லா நாளும் கார்த்திகை - பவா.செல்லதுரை

பவா வின் சமீபத்திய எல்லா நாளும் கார்த்திகை தொகுப்பிற்கு என் முன்னுரை

  நாடோடியின் பாடல்

 “நான் மீடியாவாய்ஸ்ல எழுதிட்டிருந்த தொடர நிறுத்திட்டேன் அய்யனார்” “ஏன் பவா?”
“எழுதனுமேன்னு கமிட்மெண்டோட எழுத பிடிக்கல. மறுபடியும் எப்ப தோணுதோ அப்ப எழுதிக்கலாம்”

இதுதான் பவா. தன்னை ஒருபோதும் எழுத்தைச் செய்பவனாக மாற்றிக் கொள்ள விரும்பாத கலைஞன். எந்த ஒன்றிலும் ஆத்மார்த்தமாக மட்டுமே ஈடுபடவிரும்பும் எளிய மனம்தான் பவாவினுடையது . ஏன் அதிகம் எழுதுவதில்லை? என்கிற வழக்கமான நுண்ணுணர்வற்ற கேள்விக்கு பவாவின் பதில் மிகவும் சுவாரசியமானது

நான் ஏன் எழுதவேண்டும்? 

ஆனால் ஒன்றை மட்டும் எல்லோரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எழுதும் காலம்தான் எழுத்தாளருக்கு மிகவும் கொண்டாட்டமானது. அதிலும் எழுத்தைப் பிறருக்காகச் செய்யாமல் ஆழ்ந்த நேசத்தோடும் தனக்கே தனக்கான நெகிழ்வோடும் எழுதுபவர்களுக்கு எழுதும் காலத்தின் மகிழ்வை எளிதில் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பவா இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து முடிக்கும்வரை எழுத்தின் வசீகரப் பிடிக்குத் தன்னைத் தந்திருந்தார். இதை நேரில் பார்த்தும், கட்டுரைகளின் சில பகுதிகளைப் படிக்கும்போதும் உணர்ந்து கொண்டேன். இது கலைஞர்களுக்கே உரித்தான சந்தோஷம். காலையில் எழுந்து கழிவறை செல்வதுபோல எழுத்தைப் பாவிப்பவர்களுக்கு, எழுத்துப் போலிகளுக்கு, எழுத்தைப் பண்டமாய் மாற்றுபவர்களுக்கு வாழ்வில் ஒருபோதும் கிட்டிடாத உண்மையின் தரிசனம். பவா அந்த தரிசனத்தின் உச்சத்திற்கு தன்னைத் தந்துவிட்டிருந்தார்.

பவாவின் எழுத்தை விமர்சகச் சட்டத்திற்குள் வைத்துக் கூறுபோட்டு இது இந்தவகை என நிறுவுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசங்களற்ற நாடோடியின் பாடல் எந்த ராகத்தில் இருந்தால்தான் என்ன? என்ன மொழியில் இருந்தால்தான் என்ன? அந்தக் குரலின் வசீகரம் அல்லவா நம்மை அடித்துப் போடுகிறது! அந்தக் குரலின் எளிமையல்லவா நம்மை அசைத்துப் பார்க்கிறது! அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் அந்த சாரீரமல்லவா நம்மை கரைய வைக்கிறது! பவா வின் எழுத்து அத்தகையதுதான். பவாவின் எழுத்தை நாடோடியின் பாடலுக்கு நிகராகத்தான் பார்க்கிறேன்.

இந்தத் தொகுப்பில் தமிழின் பல பிரபலங்கள் குறித்த பகிர்வு இருக்கிறது. சமூகத்தால் அடையாளங் காணப்பபட்ட பிரபல கலைஞர்களிலிருந்து பிரபலமல்லாத கலைஞர்கள் வரைக்குமாய் ஏராளமான மனிதர்களைப் பற்றிய முழுமையான பார்வை இருக்கிறது ஆனால் அவர்களை வெற்றி தோல்வி எனப் பிரித்துப் பார்க்காமல், இருமையில் நிறுத்தாமல் கலைஞர்களாய் மட்டுமே அடையாளங் கண்டு பதிவு செய்திருப்பதுதான் இத்தொகுப்பின் மிகச் சிறந்த அம்சம். பவா மனிதர்களை அப்படித்தான் பார்க்கிறார். ஒரு சாமான்யனின் மனம் பவாவின் எழுத்து முழுவதும் தொடர்ந்து இயங்கியபடியே இருக்கிறது.

பவாவின் எழுத்து வாசிப்பவர்களை தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதை சற்றே இடம்பெயர வைக்கிறது. எழுத்தின் வழியே பவா காட்சிப்படுத்தும் உலகில் தன்னை மொத்தமாய் தொலைப்பதும் எல்லா மனங்களுக்கும் நிகழ்வதுதான். இலக்கியம், திரைப்படம், ஓவியம், புகைப்படம் என எல்லாத் துறைகளிலும் மிளிர்ந்த/மிளிரும் கலைஞர்களுடனான தன் அனுபவத்தை சாதாரணனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். எல்லோராலும் அறியப்பட்டவர்களின் இன்னுமொரு அறியாதப் பக்கம் பவாவின் எழுத்து வழியே , வாழ்வு வழியே பதிவாகியிருக்கிறது.

  “எந்த மனித மனமும் தட்டையானதல்ல. அது முரண்பாடுகளால் ஆனது. எந்த மனிதனையும் முழுக்கப் புரிந்து கொண்ட சகமனிதனோ, உறவுகளோ நிச்சயம் இல்லை”

இப்படி ஒரு எழுத்தை எதிரிகளற்ற, துவேஷங்களற்ற, போட்டிகளற்ற, பவா மட்டும்தான் எழுத முடியும் மேலும் அவர் கண் வழியாய் நாம் காணும் சித்திரங்கள் அபூர்வமானவை. பிரபஞ்சன் குறித்த கட்டுரையில் பவா எழுதியிருந்த வரிகள் என்னைத் தூங்கவிடாமல் அலைக்கழித்தன.

  “இப்பூமி பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லெளகீக வாழ்வின் முன் இப்படித்தான் உள்ளடங்கிபோய்விடுகிறது. மூன்றாந்தர மனிதர்களின் வெற்றி பெருமிதத்திற்கு முன் ஒரு படைப்பாளி ஒடுங்கிப் போவது இந்த புள்ளியில்தான்” “ஒரே மனிதன் ஒட்டுமொத்த மானுட பசிக்கான துயரத்தைப் பாடிக்கொண்டே தன் சொந்த பசிக்காகவும் ரொட்டிகளை தேடவேண்டியிருந்தது”

எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு ‘பிழைக்க’ வழி தெரியாத ஒட்டுமொத்த எழுத்தாளர்களுக்கான ஆறுதலாகவும் இவ்வரிகள் இருந்தன. படைப்பாளிகளுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டிய கர்வத்தை ஜெயகாந்தனின் கட்டுரை வழியாய் ஒரு சம்பவத்தின் மூலமாய் பவா நினைவு கூர்கிறார்.

  “இன்னொரு நாற்காலி ஜெ.கே.வின் நெருங்கிய நண்பரும், அப்போதைய பாண்டிச்சேரி சபாநாயகருமான கண்ணனுக்கு. மேடையில் நின்று ஒரு நாற்காலியை எடுக்கச் சொல்கிறார். கண்ணனைப்பார்த்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டுகிறார். கண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி அதை நோக்கி போகிறார்"

இந்த வரிகளைப் படிக்கும்போது மேலிட்ட கர்வம் ஒரு படைப்பாளிக்கே உரியது. சமீபத்தில் இறந்து போன தன்னுடைய நண்பன் ராஜவேலின் மரணத்தை பவாவின் வார்த்தைகளில் காட்சியாய் காணும்போது துக்கம் மேலிட்டது. தன்னுடைய நண்பன் இறந்து போன துக்கத்தை தாங்க முடியாது வார்த்தைகளில் கொட்டித் தீர்ப்பது என்பது வேறு. ஆனால் பவா தன் நண்பனின் மரணத்தில் அவன் தந்தையின் துக்கத்தைப் பார்த்து பரிதவிக்கிறார். மகனை சாகக் கொடுத்து வாழநேரிடும் தகப்பன்களின் ஒட்டு மொத்த துக்கத்தை வார்த்தைகளாய் கடத்துகிறார்.

  “ஒரு புது வேட்டி போர்த்தி, கால் விரல்களைச் சேர்த்துக் கட்டி, பன்னீர் தெளித்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, இவை அனைத்தையும் தனியாய் அசாத்திய மவுனத்தோடு செய்தவர் ராஜவேலுவின் அப்பா. எங்கள் நாலைந்து பேரின் மூச்சுக் காற்றை உட்கொண்டு அவ்வறை சுவாசித்துக்கொண்டிருந்தது. நான் வயதான அந்தத் தகப்பனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டோ அவரிடம் உறைந்த அந்நேர மவுனம், என்னை பயமுறுத்தியது. எல்லாம் முடிந்து, தன் மகனின் காலடியில் நின்று, படுத்துறங்கும் மகனை ஆசைதீர பார்வையால், முழுமையாய் பருகினார். ‘‘மகனே’’ என ஓங்காரித்து வந்த அக்குரலொலி, அங்கிருந்த எங்கள் எல்லோரையும் அசைத்தது. அதன் பிறகான பத்துப் பதினைந்து நிமிடமும் அவர் தன் மொழியற்ற குரலால், வெவ்வேறு உடல் மொழியால், தன் பிரிவாற்றிய அந்நிமிடம் என் வாழ்வில் வேறெப்போதும் காணக்கூடாதது. பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு சவங்களாக அப்பாக்கள் வாழும் வாழ்வெதற்கு?”

இந்த வார்த்தைகளின் இந்த வார்த்தைகள் உருவாக்கிய காட்சியின் தாக்கத்தை ஒரு இளந்தகப்பனாய் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒட்டுமொத்த மனித மனதின் நேர்மையான சாட்சியம்தான் பவாவின் எழுத்து. கந்தர்வனின் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை பாரதி படத்தின் துவக்கக் காட்சியை நினைவூட்டியது. ஞானராஜசேகரனின் பாரதி திரைப்படம் எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று. அத்திரைப்படமும் பாரதியின் மரணத்திலிருந்துதான் துவங்கும். பவாவின் கந்தர்வன் கட்டுரையும் அவரது மரணத்திலிருந்துதான் துவங்குகிறது. கந்தர்வனின் படைப்புலகை இப்படி எழுதுகிறார்

  “மனிதனின் மென் உணர்வுகளைத் தன் படைப்புப் பக்கங்களெங்கும் படிய வைத்துக் கொண்டேயிருந்தவர் கந்தர்வன். கவர்மெண்ட் ஆபீஸ்களின் பழுப்பேறிய கோப்புகளுக்கிடையே கிடந்த இந்த மகத்தான மனிதர்களை அள்ளிக் கொண்டுவந்து நம் முன் நிறுத்தினார் கந்தர்வன்” 

கந்தர்வன் என்கிற படைப்பாளியின் ஒட்டு மொத்த எழுத்து சாராம்சத்தை இப்படி இரண்டே வரிகளில் அதன் உன்னதம் குறையாது பதிவு செய்வதை முக்கியமானதாகப் பார்க்கிறேன். பவா வால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. 

ஒரு படைப்பாளியைக் குறித்து பதிவு செய்வதென்பது மிகவும் சவாலான விஷயம். பதிவு செய்பவரின் கண்களைப் போலவே அப்படைப்பாளியை பிறர் அனுகுவது கிடையாது. படைப்பும் படைப்பாளியும் நேர்கோட்டில் பயணிப்பவை அல்ல. ஆனால் எல்லாப் படைப்பாளிக்கும் எல்லா படைப்பிற்கும் ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஒரு படைப்பாளியைக் குறித்த பதிவு என்பது அந்த ஆன்மாவை நெருங்கினால் கூட எனக்குப் போதுமானது. இம்மாதிரியான ஒரு மனநிலையில் பவாவின் தொகுப்பை வாசித்தவுடன் முழுமையாக நிறைவடைந்தேன். எல்லாப் படைப்பாளிகளின் ஆன்மாவையும் பவா மிக இலகுவாகத் தொட்டிருக்கிறார். அவர்களை அப்படியே எழுத்தாக மாற்றியிருக்கிறார். இக்கட்டுரைத் தொகுப்பை வரலாற்று ஆவணமாகக் கூட மதிப்பிட முடியும். மேலும் இத்தொகுப்பில் பதிவாகியிருக்கும் மனிதர்கள் கலவையானவர்கள். தமிழ் சினிமாவை மாற்றியமைத்த பாலுமகேந்திரா பாரதிராஜா க்களிலிருந்து நவீனத் திரை மொழியின் உச்சங்கள் தொடும் மிஷ்கின் வரைக்குமாய். சிறுபத்திரிக்கை கவிஞன் கைலாஷ் சிவனி லிருந்து எழுத்துப் பேராளுமை ஜெயகாந்தன் வரைக்குமாய் சமூகம் நிர்மாணித்திருக்கும் ‘தகுதி’ ‘அடையாளங்கள்’ குறித்த கவலை ஏதுமற்று படைப்பையும் படைப்பாளியின் கலை மனதையும் மட்டுமே முன்நிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இடையே சாமான்ய மனிதர்களின் அசாதரணமான வாழ்வையும் தரிசிக்க முடியும்.

இம்மாதிரியான ஒரு கலவையை பவா வால் மட்டும்தான் உருவாக்க முடியும். ஒரு நீர்வண்ண ஓவியம் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு குழைத்துக் குழைத்து உருவாவது போல இத்தொகுப்பு உருவாகி இருக்கிறது. 

“ப்ரியமுள்ள பவா, உங்கள் கட்டுரைகளை மீண்டும் ஒருசேர வாசித்திருப்பதால் வாய்த்திருக்கும் இந்நெகிழ்வான மனநிலையில், பாலுமகேந்திரா உங்களிடம் சொன்னது நினைவிற்கு வருகிறது. அதையொட்டி யோசித்துப் பார்த்தால் உண்மையான கலைஞர்கள் அனைவருமே புலிகள்தாம். புலி இறந்த பின்னாலும் அதன் கோடுகள் அழிவதில்லை. போலவே உண்மையான படைப்பாளிக்குப் பிறகும் அவன் படைப்புகள் நிற்கும். நான் உங்களை அப்படித்தான் பார்க்கிறேன் பவா”


என்றென்றைக்குமான ப்ரியங்களுடன்

அய்யனார்விஸ்வநாத்
பிப்ரவரி 28,2012 துபாய்

Tuesday, April 17, 2012

இருபது வெள்ளைக்காரர்கள் - முன்னுரை

18 டிசம்பர் 2011 துபாய் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வித சாகஸ மன நிலையில் திளைத்துக் கொண்டிருந்தேன். மனம் எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மிகவதிக உணர்வெழுச்சி என்னை முழுவதுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. ஒரு நாளின் வரிசைக் கிரமத்தில் ஒரு நொடியைக் கூட முன் பின் மாற்ற அனுமதிக்காத என்னுடைய நிகழ், மிகுந்த இயலாமையோடு அத்தனை எழுச்சியையும் கொண்டு போய் எழுத்தில் கொட்ட வழிவகுத்தது. அந்தப் பேரெழுச்சியில் எழுதப்பட்டதுதான் ‘பழி’. இரண்டு பக்கங்கள் எழுதினாலே இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் மனதின் அரிப்புகளையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு நூறு பக்கங்கள் எழுதி முடித்தேன். ஆறு மாத மகனும் மனைவியும் ஊரிலிருந்து வந்த பின்னர் மனதின் பரபரப்பு சற்று அடங்கியது. நானும் எழுதியதை தூக்கிப் போட்டுவிட்டு மிக சந்தோஷமாய் மகனின் உலகத்திற்குள் நுழைந்து கொண்டேன். பாதியில் விட்ட பழியை எடுத்துப் படித்த என் மனைவி, அதன் காமத்தையும் வன்மத்தையும் கண்டு மிரட்சியடைந்து இதைப் பிரசுரித்தால் படிப்பவர்கள் உன்னைக் கெட்டவனாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் என பயந்தாள். எழுதியதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே எனவும் அறிவுறுத்தினாள்.

இடையில் மழைக்காலம் கதைக்கான முடிச்சு மனதில் விழுந்தது. அம்முடிச்சை அப்படியே கொண்டுபோய் பாண்டிச்சேரியில், நான் கடந்து வந்த சூழலில் பொருத்திக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஆனால் அந்தக் கதைக்கு தேவையான மென்மையையும் காதலையும் என்னால் எழுத்தில் கொண்டு வரவே முடியவில்லை. முழுக்க வன்மத்திலும் காமத்திலும் மனம் தகித்துக் கொண்டிருந்தது. எழுதாமல் தீராதிது என உணர்ந்ததும் மழைக்காலத்தை அழித்து விட்டு மீண்டும் பழியை தூசி தட்டி, உத்திகளைப் புகுத்தி, அத்தியாயங்களாய் பிரித்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். சாகஸம், காமம்,வன்மம், பரபரப்பு என வெகுசன வாசிப்பிற்கு தேவையான எல்லா விஷயங்களும் பழியில் இருந்ததால் இணையத்தில் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல புதிய வாசகர்களின் அறிமுகமும் கிடைத்தது. என் வலைப் பக்கத்தைப் பார்த்தாலே விழுந்தடித்துக் கொண்டு ஓடும் பலரையும் இந்நாவல் கட்டிப் போட்டது. போலவே பல விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். இலக்கிய வாசகர்களிடமிருந்தும், பெரும்பாலான வாசகிகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டேன். ஆனால் எல்லாத் தரப்பு வாசகர்களும் ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டார்கள். அது பழியின் சுவாரசியம். ஒரே மூச்சில் படித்தேன் என்பதுதான் எல்லோருடைய பகிர்வாகவும் இருந்தது.

பழிக்கு கிடைத்த வரவேற்பு தந்த உற்சாகம் அடுத்தடுத்து மழைக்காலத்தையும் இருபது வெள்ளைக்காரர்களையும் எழுத வைத்தது. மழைக்காலம் குறுநாவலில் வரும் மையப் பாத்திரங்களைத் தவிர்த்து பிற எல்லாப் பாத்திரங்களும் நிஜமானவை. இடம்,சூழல், பெயர் என எதையும் மாற்றவில்லை. எழுதித் தீரா சில விஷயங்களின் வரிசையில் காதலுணர்வும், இளமையும்தான் முதலிடத்தைப் பிடிக்கும் போல. என்னால் விட்டு வெளியேறவே முடியாத பொறிதான் மழைக்காலமாக வடிவம் பெற்றது. சில மென் உணர்வுகளை இந்தக் குறுநாவல் அசைத்துப் பார்க்கலாம்.

என்ன எழுதினாலும் அதாகவே, அந்த எழுத்தின் உணர்வாகவே கிடப்பதுதான் என்னுடைய மாபெரும் சிக்கல். இந்த சிக்கல் பிற படைப்புகள் மூலமும் அவ்வப்போது ஏற்படுவதுதான். பழி எழுச்சியையும், மழைக்காலம் காதலுணர்வையும், இருபது வெள்ளைக்காரர்கள் நடுவாந்திரமாக ஒரு மன உணர்வையும் தந்தது. ஒரே நேரத்தில் நெருங்கியும், விலகியும் சஞ்சரிக்கும் மனதை இருபது வெள்ளைக்காரர்கள் உருவாக்கியது. திருவண்ணாமலை சமுத்திர ஏரிக்கரை, இரமணாசிரமம், மலை சுற்றும் பாதை, ஜவ்வாதுமலை அடிவாரம், வனம்,மலை ஓடை, என இடங்களின் மீது புனையப்பட்ட கதைதான் இருபது வெள்ளைக்காரர்கள். இந்தக் கதைக்கான ஆதாரப் புள்ளி நிலப் பிரதேசங்கள்தாம். இந்த இடங்களெல்லாம் என் மனதின் அடியாழத்தில் தங்கிப் போனவை. ஒரு வகையில் இப்பிரதேசங்களில் அலைந்து திரிய முடியாமல் போன ஏக்கத்தின் வடிகாலாகவும் இக் குறுநாவலை அனுக முடியும். மற்றபடி எழுத்தின் மூலம் எழுதுபவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லாமும் எனக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. இனி கிட்டுபவை எல்லாம் மிகுதியே.

என்னுடன் எப்போதுமிருக்கும் பவா, பார்த்துப் பார்த்து புத்தகத்தை நேர்த்தியாய் கொண்டு வர மெனக்கெடும் ஷைலஜாக்கா, மூன்று நாவல்களையும் சிரத்தையாய் வாசித்துத் தொகுத்த ஜெயஸ்ரீ, நெருக்கடியான பணிகளுடைக்கிடையிலும் அட்டைப் படம் தந்த பினு, வடிமைத்த வம்சி நண்பர்கள் என எல்லோருக்கும் நன்றி சொல்லி மாளாது. என்றென்றைக்குமான என் ப்ரியங்களும் அன்பும்.


அய்யனார் விஸ்வநாத்
ayyanar.v@gmail.com
ayyanaarv.blogspot.com
00971554216250

Monday, March 22, 2010

விழாக் குறிப்புகள் - 2


சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அளவில் சிறிய விமான நிலையம் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து விட முடிந்தது. வெளியேறும் வழியில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். மூன்று மாதத்தினுக்கு முன்பு வரும்போது இப்படிச் சுற்றி வர வேண்டியதில்லை. பெரும்பாலான நவீனப்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் யாவும் நமக்கு மிகப்பெரும் தொல்லையாகத்தான் இருக்கின்றன. சிம் கார்டு மாற்றி வாட்சைத் திருகி சென்னைக் காற்றை ஆழமாய் உள்ளிழுத்தபோது ஒரு சிறிய பரவசம் உண்டாயிற்று. எந்தக் கவலையுமற்று மனிதர்கள் வெற்றுத் தரையில் தலைக்கு கை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர். திறந்திருந்த இரண்டு ஏர் டெல் கடைக்காரர்கள் இரும்பு நாற்காலியில் சரிந்து ஆழமாய் தூங்கிக் கொண்டிருந்தனர். குளிர் மென்மையாய் பரவியிருந்தது. டாப் அப் செய்ய வேண்டியிருந்ததுதான் என்றாலும் அவர்களின் தூக்கத்தை கெடுக்க மனதில்லாமல் நகர்ந்தேன். மகேந்திரா வேனிலிருந்து கிராமத்து மனிதர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். தூக்கம் நிறைந்த கண்களோடு வழியெங்கும் தாயகம் திரும்புபவர்களின் உறவினர்கள் காத்துக் கிடந்தனர். இம்மாதிரி சம்பிரதாயங்களான விடைபெறல், வரவேற்றல், கண்ணீர், இதெல்லாம் என்னை சம நிலையில் இருக்க விடாமல் செய்துவிடுமென பயந்தே நான் உறவுகளையும் நண்பர்களையும் விமான நிலையத்தினுக்கு அழைப்பதில்லை. மேலதிகமாய் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வந்துவிடுவதால் பெரிய இடைவெளியோ நெகிழ்வுச் சமாச்சாரங்களோ இருப்பதில்லை.

அங்கிருந்த கடையொன்றில் தேநீரும் தண்ணீர் பாட்டிலொன்றும் வாங்கினேன் அய்ம்பது ரூபாய் கொடுத்ததில் சில்லறையாக ஏதோ திருப்பித் தந்தனர். சென்னை நம்பவே முடியாத அளவினுக்கு விலைகளை உயர்த்திக் கொண்டுள்ளது. டீயைக் குடிக்கவே முடியவில்லை. மோசமானதொரு சுவையிலிருந்தது. உடன் வந்த உயரமான ஜீன்ஸ் பெண் எனக்கு முன்னர் வந்து அதே டீயை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தாள். டீயை எறிந்து விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன். திருவண்ணாமலை என்பதால் பேருந்து வசதி சற்று அதிகம்தான். விமான நிலையத்திலிருந்து இறங்கி சாலைக்கு எதிர்புறம் சென்றால் போதுமானது. ஆட்கள் குறைவான பேருந்துகள் தூங்கியபடி வந்து கொண்டிருக்கும். குளிர் காற்று முகத்தில் படபடக்க பயணிக்கும் இந்த நான்கு மணி நேரத்தில் என்னால் எப்போதுமே ஒரு நொடி கூட தூங்க முடிந்ததில்லை. மெல்ல இருள் விலகிக் கொண்டிருக்கும் பின்னிரவைப் பார்த்தபடி வழியில் தென்படும் ஊர்களுக்கு வந்த தருணங்களை, நிகழ்ந்த சம்பவங்களை நினைத்தபடி, நேரம் கடக்கும். இம்மாதிரி தருணங்கள் பகல் கனவில் மூழ்கித் திளைக்க வசதியானது. சமீபத்தில் வந்து கொண்டிருக்கும் பகல் கனவையெல்லாம் எழுதி உங்களை கிச்சுகிச்சு மூட்ட விருப்பமில்லாததால் பகல் கனவு என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.

திண்டிவனம் தாண்டியபோது இரவு மெல்ல விலகியிருந்தது. பனிப்புகை மூடிய காலை உதித்த முதல் கணத்தை தரிசிக்க முடிந்தது. செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வரை பிரதான சாலையை ஒட்டிய வயல்கள் வரிசையாய் வந்து கொண்டிருந்தன. பசிய புற்களில்,அடர் பசும் நெற்கதிர்களில் பனி படந்திருந்தது. அதிகாலைப் பனிக்காற்றில் கலந்திருந்த பசுந்தாவரங்களின் வாசம் சுவாசத்தை நிரப்பியது. சாலையை ஒட்டிய குடிசைகள், ஓட்டு வீடுகள், சமீபமாய் கட்டப்பட்ட ஒரே மாதிரியான மெத்தை வீடுகளென சிறுசிறு இடைவெளிகளில் வீட்டின் முகங்கள் வந்து கொண்டிருந்தன. சொல்லி வைத்தாற்போல் எல்லா வீட்டு முற்றத்திலும் அதே நேரத்தில் பெண்கள் சாணம் தெளித்துக் கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் குத்துக் காலிட்டு அமர்ந்து கையில் ஒரு குச்சியினை வைத்துக் கொண்டு மண்ணைக் கீறியபடி சிறுவர்கள் மலம் கழித்துக் கொண்டிருந்தனர், அசை போட்டபடி நடக்கும் மாடுகள், புலுக்கை உதிர்க்கும் ஆடுகள், விடியலை அறிவிக்கும் கோழிகள் என கண்களில் பட்டு வேகமாய் மறையும் சாலையோர கிராமக் காட்சிகளை விழுங்கியபடி பயணித்துக் கொண்டிருந்தேன். கீழ் பெண்ணாத்தூரைக் கடந்த போது கருவேல மரங்கள் சூழந்த அந்த ஏரியும் அதனுள் மாலை நேரங்களில் சூரியன் தங்கமாய் மின்னும் பின்னணியில் விளையாடிக் களைத்த சிறு பிராயத்து நாட்களும் நினைவில் வந்தது. மேலும் அவ்வயதில் அக் கிரமத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் கிணறுகளில் குதித்து கும்மாளமிட்டிருந்ததையும் நினைத்துக் கொண்டேன். பம்பு செட்டு, கிணறை ஒட்டிய பெருமரக் கிளைகள் போன்றவற்றின் மீதேறிக் குதிப்பது மிகப்பெரும் சாகசச் செயலைப் புரிந்த மனநிலையைத் தரும். இந்த மன நிலை இன்னமும் கூட அப்படியேதான் இருக்கிறது. சமீபத்தில் மஸ்கட் சென்றிருந்த போது வாதிபின்காலித் என்கிற இடத்தில் கென்னுடன் ஒரு உயரமான பாறை மீதிருந்தது நீரில் குதித்து புளகாங்கிதமடைந்து கொண்டேன்.

திருவண்ணமலை வந்துவிட்டது. பெரியார் சிலை நிறுத்ததில் இறங்கியதும் பிரம்மாண்டமான பேனர் ஒன்று என்னை வரவேற்றது. புத்தக வெளியீட்டு விழா பேனர் தான் அது. மிக நேர்த்தியான ஓவியத்துடன் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை பறை சாற்றிக் கொண்டிருந்தது. மூன்று சாலைகள் சந்திக்கும் திருவண்ணாமலையின் முக்கிய இடங்களிலெல்லாம் மிகப் பெரிய விளம்பரங்கள் நேர்த்தியான ஓவியத்துடனும் புகைப்படத்துடனும் வைக்கப்பட்டிருந்ததை ஆட்டோவில் செல்லும்போது பார்த்துக் கொண்டேன்.

காலை பத்தரை மணிக்கு வம்சியில் வைத்து பவா வைக் கட்டிக் கொண்டேன். மிகப் பெரிய மலர்ந்த வரவேற்பை ஒவ்வொரு முறையும் அவரிடம் உணரமுடிகிறது. க.சீ.சிவக்குமார் நான்கு நாட்கள் முன்னதாகவே அங்கு வந்துவிட்டிருந்தார். தொடர்ச்சியாக நண்பர்கள் வந்து கொண்டேயிருக்க சுவாரசியமாய் பேச்சும் டீயும் ஓடியபடி இருந்தது. அழைப்பிதழ்களை அணுப்பியபடி, நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தபடி, அந்த நண்பகல் கடந்தது. என் சொந்த வேலை ஒன்றையும் மதியவாக்கில் முடித்துக் கொண்டு நானும் சிவாவும் பிரபஞ்சனை சந்திக்கச் சென்றோம். மதிய உணவை பவாவின் நிலத்தில் அவரின் புதுக் குடிலில் வைத்துக் கொள்ள திட்டமிட்டோம்.

தொடரும்..

Thursday, March 18, 2010

விழாக் குறிப்புகள் -1

நினைவு முழுக்க படு வேகமாய் கடந்து போன இரண்டரை நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களும் தருணங்களும் மனிதர்களும் பேச்சுக்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொரு முறையும் என் சொந்த நகரத்தை விட்டு வரும்போது ஒற்றையனாய்த்தான் வருகிறேன் (எப்படி உள் நுழைந்தேனோ அப்படியே) சென்னை விமான நிலையத்தினுக்கு விரையும் வாகனமொன்றில் சன்னல் வழியே இரவுக் குளிர் காற்று முகத்தினை சிதறடித்துக் கொண்டிருந்தது. என்னுடலை உறைவித்து நினைவுகள் எங்கெங்கோ உலவிக் கொண்டிருந்தன. கடந்த வியாழக்கிழமை மாலை துவங்கிய பயணமிது. இதோ அதே புள்ளியை நோக்கிய திரும்பல். ஒரு வித இறுக்கமும், இலகுவும் தோன்றி மறைந்தன. எல்லா இறுக்கங்களையும் நான் இலகுவாய் எடுத்துக் கொள்ள இச்சூழலால் தயாரிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான் உண்மையாய் இருக்க முடியும்.

ஒரு படைப்பு வேண்டுமென்றால் பூ மலர்வது போல இயல்பாய் உதிர்க்கலாம் ஆனால் அந்தப் படைப்பை வெளியே கொண்டுவருவதற்கும், வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும் ப்ரயத்தனங்கள் எடுக்க வேண்டியிருக்கிறதென ஷைலஜா ஒரு முறை சொன்னார். இதை என்னால் முழுமையாய் உணர முடிந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில்தான் துவங்கியது இந்த புத்தகப் பணி. இத்தனைக்கும் இந்த மூன்று புத்தகங்களின் உள்ளடக்கங்களும் ஏற்கனவே எழுதப்பட்டவைதாம். அவற்றை புத்தக வடிவத்தினுக்கேற்றார் போல் மாற்றித், தொகுத்துத், திருத்தி, அட்டையைத் தேர்வுசெய்து, நண்பர்களிடம் படிக்கத் தந்து, முன்னுரை வாங்கி, அச்சகத்தினுக்கு அனுப்ப வேண்டியதுதான் வேலை.

இம்மாதிரியான வேலைகளில் அனுபவமில்லாததால் பல்வேறு வகையில் இடையூறுகளையும், தாமதங்களையும் எதிர் கொள்ள நேர்ந்தது. இத்தனைக்கும் பவா நான்கு புத்தகங்களை கொண்டு வர விரும்பினார். நானாகத்தான் மூன்றாகக் குறைத்தேன். அதற்கே எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்களும் எனக்காக வேலை செய்ய வேண்டியதாய் போயிற்று. புத்தகச் சந்தையில் இடம்பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தில் இரவு பகலாய் செயல்பட்டு சரியான நாளில் மூன்று புத்தகங்களையும் வம்சி குடும்பத்தார் புத்தகச் சந்தைக்கு கொண்டுவந்துவிட்டு மகிழ்ச்சியாய் தொலைபேசினர். எனக்கு லேசான குற்ற உணர்வும், மகிழ்வும் அந்த தருணத்தில் ஒருமித்து எழுந்தது. விற்பனையும் நல்ல முறையில் இருந்ததாக தெரியவந்ததும் சற்று ஆறுதலாக உணர்ந்தேன்.


இதோ இந்தப் பயணம் வெளியீட்டு விழாவினுக்காக நிகழ்ந்திருக்கிறது. சொந்த நகரத்தில் வசிக்க இயலாதவர்களுக்கு மட்டுமே அந்நகரம் மிகுந்த வசீகரமுடையதாய் இருக்கிறது என்பது உண்மைதான். இரு சக்கர வாகனத்தில் கூட இலகுவாய் பயணிக்க இயலாதிருக்கும் சாலைகளால் ஆன இச்சிறுநகரத்தின் மீதுதாம் என் பிரியங்கள் படர்ந்திருக்கின்றன. இதே நகரத்தில் எனக்குப் பிடித்தமான ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் சகிதமாய் புத்தகங்களை வெளியிட வாய்த்தது என் வாழ்வின் அதி முக்கிய நிகழ்வுதாம். வெளிச்சத்திற்கான நகர்வுகளை, மய்யத்திற்கான தயாரிப்புகளை நிகழ்த்தினாலும் நான் அடிப்படையில் கூட்டுக்குள் சுருங்கி வாழ்வதில் திருப்தியடையும் உயிரினம்தான் என்பது இந்த நிகழ்வில் உறுதியாயிற்று. படபடப்பும், வெட்கமும், கூச்சமும் சேர்ந்து கலவையான ஒரு மனநிலையில்தான் விழா முழுக்கத் திளைத்துக் கொண்டிருந்தேன். முதல் புத்தக வெளியீட்டு விழாவில் எழுத ஆரம்பிக்கும் புதியவர்கள் வழக்கமான ஏற்புரையாய் சொல்லும் தேய்ந்த வசனங்களை நானும் சொன்னேனா என்பது நினைவிலில்லை. ஆனால் அதே தொணியில் வேறு சொற்களைத்தான் நானும் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

இந்த விழாவினுக்கான அடித்தளங்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டும் எனப் பேச ஆரம்பித்தபோதே பவாவினால் முன்னெடுக்கப்பட்டதுதான். திருவண்ணாமலையில் வெளியீடு என்பதை நானும் விரும்பியதால் சற்றுத் தாமதமாக நடத்த வேண்டியதாயிற்று. மானஸியின் பிறந்த நாளைத் தொடர்ந்து மார்ச் இரண்டாவது வாரத்தில் புத்தக வெளியீடுகளை நிகழ்த்தி விடலாம் என்பதை பவா தொலைபேசி உறுதி செய்ததும் பத்து நாட்கள் விடுமுறைக்குத் திட்டமிட்டேன். இத்தனை வருடங்களாய் தூங்கி, சமீபமாய் விழித்துக் கொண்ட என் அலுவலகம் திடீர் புத்திசாலிகளை அங்கங்கே உலவ விட்டதில் என் விடுமுறை மறுக்கப்பட்டது. நிகழ்வினுக்கு வர முடியாத மன நிலையை வளர்த்துக் கொண்ட பின்பு வம்சி வெளியீடுகளின் அழைப்பிதழைப் பார்த்தேன். என் தனியொருவனுக்காக இத்தனை பேர் மெனக்கெடும்போது இங்கென்ன வேலையென ஒரே ஒரு நாளை போராடிப் பெற்றுக் கொண்டு வியாழக் கிழமையன்று ஒரு மோசமான வானூர்தியில் என் இடத்தைப் பதிந்து கொண்டேன். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எனும் குறுகலான வானூர்தியில் ஏறியதும் லேசான பினாயில் வாசம் வீசியது. மோசமான நிறத்தில் உடையணிந்த மெலிந்த பெண்கள் கடமையாய் புன்னகைத்ததும் அவசரமாய் அவர்களின் கண்களைப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டேன்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் கடுமையான நட்டம் காரணமாக(அப்படித்தான் சொல்லப்படுகிறது) இரவில் சொற்பமாய் தரும் உணவையும் நீரையும் தவிர்த்து மற்ற எல்லாவற்றினுக்கும் காசைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பணம் பிடுங்குவதின் உச்சமாய் குட்டித் திரையில் ஆர்யாவும் த்ரிஷாவும் பேசிக் கொள்வதைக் கேட்க ஐந்து திர்ஹாம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. நடமாடும் மதுச்சாலைகளும் உண்டு என்பது லேசான ஆசுவாசத்தை தந்தது. கிட்டத் தட்ட ஆறு மணி நேர இடுக்கிப் பயணமிது. நம் சொந்த ஊர் பேருந்தில் கூட தாராளமாய் அமரலாம். ஆனால் இந்த இருக்கை பேருந்து இருக்கையை விட அளவில் குறுகியதாய் இருந்தது. ப்ளாக் லேபிள் லார்ஜ் பதினோரு திர்ஹாம், சோடா நான்கு திராம், கண்ணாடியும் பிளாஸ்டிக்குமல்லாத க்ளாஸ் மற்றும் வறுகடலை இரண்டு திராம், பனித் துண்டங்களை பற்றி விசாரிக்கவில்லை. எனினும் சற்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது துபாய் மதுவிடுதிகளோடு ஒப்பிடுகையில் சற்றுக் குறைவுதான். மூன்று முறை பிளாக்கியதும் எதைப் பற்றியும் கவலைப்படாது தூங்கி விட்டேன்.

விழித்துப் பார்த்தபோது திருச்சிராப் பள்ளி எனப் பரிதாபமாய் எழுதப்பட்ட பெயர்பலகை நள்ளிரவில் தனியாய் கண்ணில் பட்டது. துபாயிலிருந்து திருச்சி வந்து பின் சென்னை வரும் விமானமிது. கிட்டத் தட்ட எல்லா இருக்கைகளும் இங்கேயே காலியாகிவிட்டிருந்தன. தென் தமிழ்நாட்டுப் பயணிகளுக்கு இவ்விமானம் நேர அடிப்படையில் வசதியானதாக இருக்கலாம். இதே விமானம் கோலாலம்பூர் வேறு போகிறதாம். சென்னை மற்றும் கோலாலம்பூர் பயணிகள் ஏறிக்கொண்டதும் மீண்டும் செங்குத்தான பயணம் துவங்கியது. இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த இருபது வயது மதிக்கத் தக்க உயரமான பெண்ணொருத்தி எனக்கு எதிர் இருக்கையில் பெற்றோர் சகிதமாய் வந்தமர்ந்து உடனடியாய் தூங்கிப் போனாள். சுஜாதாவின் ரங்கத்துப் பெண்களின் நிழலை அவள் தன் முகத்தில் தேக்கி வைத்திருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்களின் பரபரப்பை நினைத்துக் கொண்டேன். தூக்கம் விலகி ஓடியது. இந்தப் பயணத்திற்கான துவக்கப் புள்ளி எதுவாக இருந்தது? இணக்கமான மனிதர்களற்ற சூழலா? மிகப்பெரும் பூதத்தைப் போல இளைப்பாறிக் கிடந்த நேரமா? இணையத்தின் அசாதாரண சாத்தியமா? ஓசி வலைப்பூ? நண்பர்கள்? நண்பிகள்? தோழிகள்? காதலிகள்? இவையெல்லாமும்தான் என்றாலும் எல்லாவற்றுக்குமான துவக்கப்புள்ளி ஆறுவயதில் எனக்கு அறிமுகமான, பார்வதி நகருக்கு குடிநீர் வந்ததை அறிவிக்கும் பணியிலிருந்த, நைனார் தாத்தாவின் கையிலிருந்த பூந்தளிர் புத்தகமாகத்தான் இருக்கமுடியும்.


தொடரும்..

Tuesday, March 9, 2010

புத்தக வெளியீட்டு விழா


வம்சி வெளியீட்டு விழாவில் என்னுடைய மூன்று புத்தகங்களும் வரும் சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையில் வெளியிடப் பட இருக்கின்றன. தமிழ்நதி சந்திரா முத்து கிருஷ்ணன் ஆகியோர் என் புத்தகங்களைக் குறித்து பேச இருக்கிறார்கள். வம்சியின் மற்ற புத்தகங்களும் உடன் வெளியிடப்படுவதால் திரளான படைப்பாளிகள் கலந்து கொள்கிறார்கள். மூன்று நாள் பயணமாக வரும் நானும் விழாவில் பங்கு கொள்கிறேன். நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்கும் நண்பர்கள் இச்சிறு அறிவிப்பை அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும். முதல் புத்தக வெளியீட்டை சொந்த ஊரில் நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து ஞாயிறு மதியம் வரை 9952236058 என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Friday, January 29, 2010

வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்



நாளை (சனிக்கிழமை - 30.1.2010) மாலையும், நாளை மறுநாள் (ஞாயிறு - 31.1.2010) காலையும்,நடக்க இருந்த வம்சி புத்தக வெளியீடுகள் புக்பாயிண்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கீழ்க்கண்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


சனிக்கிழமை (30.1.2010) மாலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை



ஞாயிறு (31.1.2010) காலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

இக்‌ஷா மையம்
பாந்தியன் சாலை
(மியூசியம் அருகில்)
எக்மோர்

இதனை வாசிக்கும் நண்பர்கள், தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள். எரிந்து போன புத்தகங்களுக்கும் புக் பாயிண்ட் நிர்வாகத்தினுக்கும் ஆழ்ந்த வருத்தங்கள்.

Friday, December 25, 2009

வம்சி வெளியீடுகள் - 2010



இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு வம்சி புக்ஸ் நாற்பது புத்தகங்களைக் கொண்டுவருகிறது. நூல் விவரங்கள்..

1. தென்னிந்திய நவீன சிறுகதைகள்.தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, நவீன போக்குகளை பிரதிபலிக்கும் நவீன சிறுகதைகளின் தொகுப்பு - தொகுப்பு : கே.வி. ஷைலஜா.

2. அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கைய்யா முருகன், வி. ஹரி சரவணன்.
இந்திய பழங்குடி மக்களின் இன வரைவியல் குறித்த ஆய்வு பயணம்.

3. 19, டி. எம். சாரோனிலிருந்து - பவாசெல்லதுரை மண் சார்ந்த, மனிதம் சார்ந்த கட்டுரைகள்

4. உரையாடலினி - அய்யனார் விஸ்வநாத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

5. சூர்ப்பனகை கெ.ஆர்.மீரா. - தமிழில் கே.வி. ஷைலஜா நவீன மலையாள பெண்ணிய சிறுகதைகள்.

6. ஒரு கலகக்காரனின் கதை - ஜான் அப்ரகாம் தொகுப்பு ஆர்.ஆர். சீனிவாசன்.

7. ஒற்றை கதவு - சந்தோஷ் யெச்சிக்கானம் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ.
மலையாள நவீன சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

8. உலக சிறுவர் சினிமா - பாகம் 3 விஸ்வாமித்திரன்.
உலகம் முழுவதிலுமிருந்து விஸ்வாமித்திரன் தொகுக்கும் சிறுவர்களுக்கான சினிமா.

9. பிறிதொரு மரணம் உதயசங்கர் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு.

10. எஸ். லட்சுமண பெருமாள் கதைகள் - முழுமையான சிறுகதைகள்

11 . கனக துர்கா - பாஸ்கர் சக்தியின் இதுவரையிலான முழுமையான கதைகளும் குறுநாவல்களும்.

12. தனிமையின் இசை - அய்யனார் விஸ்வநாத்தின் கவிதைகள்.

13. பாழ் மண்டபமொன்றின் வரைபடம். - கே. ஸ்டாலின் கவிதைகள்

14. மக்களுக்கான சினிமா - மாரிமகேந்திரன் (இலங்கை)

15. வியாழக்கிழமையைத் தொலைத்தவன் - விக்ராமதித்யனின் சமீபத்திய கவிதைகள்.

16. நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து... - பின்னிமோசஸ்

17. உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமாரின் புதிய கதைகளின் முழுத் தொகுப்பு.

18. என்றும் வாழும் தெருக்கூத்து - பி.ஜே. அமலதாஸ்.

19. அமெரிக்கன் - தமிழில் சா. தேவதாஸ் - நாவல்

20. இறுதிசுவாசம் - லூயிபுனுவல் சுயசரிதம்

21. புதிர்களை விடுவித்தல் - சா. தேவதாஸ்

22. இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - சா. தேவதாஸ்

23. தங்கராணி - வேலுசரவணன் (4 சிறுவர் நாடகங்கள்)

24. மனரேகை - விஸ்வாமித்திரன் (நகுலன் குறித்த எழுத்தும் புகைப்படங்களும்)

25. நானிலும் நுழையும் வெளிச்சம் - அய்யனார் விஸ்வநாத்

26. பெருவெளிச் சலனங்கள் - தொகுப்பு மாதவராஜ் (வலைபதிவுகளில் கிடைத்த அனுபவ பகிர்வுகள்)

27. கிளிஞ்சல்கள் பறக்கின்றன - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)

28. மரப்பாட்சியின் சில ஆடைகள் - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)

29. குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது - மாதவராஜ்(சொற்சித்திரங்கள்)

30. கண்ணாடி உலகம் - வே. நெடுஞ்செழியன் (கவிதைகள்)

31. கனா - ம. காமுத்துரை (சிறுவர்களின் மனஉலகை பேசும் கதைகள்)

32. சிலர்அதன் செவ்வி தலைப்படுவர் - ஆர்.ஆர்.சீனிவாசன்
(10 தமிழ் ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள்)


மறுபதிப்பில் ...

1. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே.வி. ஷைலஜா
2. எனக்கான வெளிச்சம் - தி. பரமேஸ்வரி (கவிதைகள்)
3. எதிர்பாராமல் பெய்த மழை - சிபிலா மைக்கேல் தமிழில்: சுகானா


வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601 செல் : 9444867023
e.mail- vamsibooks@yahoo.com

Featured Post

test

 test