Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, April 2, 2018

ஓரிதழ்ப்பூ மேலும் சில விமர்சனங்கள்

ஓரிதழ்ப்பூ - ராம்கி






ஓரிதழ்ப்பூ- அய்யனார் விஸ்வநாத் 
------------------------------------------------------
அய்யனாரை நான் முதலில் சந்தித்தது ஜெயமோகன் தங்கியிருந்த விடுதியில். அங்குதான் முதலில் கேட்டேன் இந்தத் தலைப்பை.
...
வெயில் கொளுத்தும் களம். மற்ற உணர்வுகளுக்கு இடம் இருக்குமா? இந்த உலகமும் மனிதனும் உருவான காலத்திலேர்ந்தே ஆணும் பெண்ணும் உறவாடிய சிக்கல்களும் தோன்றியிருக்க வேண்டும். மனதின் அடித்தளத்தில் உருவாகும் அர்த்தமற்ற அல்லது அர்த்தமுள்ள நிஜமான உணர்வுகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. 

அது ஒரு மலைகளால் சூழப்பட்ட வெயில் நகரம். தன்னுடைய எண்ண சூழல்களை வைத்து பிடித்தும் பிடிக்காமலும்  போகும் இடங்கள். சங்கமேஸ்வரன் மலர்விழியின் ஆசைக்கு அவளைக் காவுக் கொடுத்துவிட்டு மான் முகத்தோடு, சிறு வயது முதல் மானைப் பற்றிய கனவுகளோடு வளர்ந்து, நரி முகத்தோடு வரும் ரவியைக் கைப்பிடிக்கும் அங்கையை வசீகரிக்கிறான். 

எப்போதும் குடியோடும் அமுதாக்காவின் நினைவுகளோடும் அங்கையை அண்ட முடியாமல் இருக்கும் ரவி.

பூவைத் தேடி அல்லது பூவின் அர்த்தத்தைத் தேடி , துர்காவில் முங்கி கண்டெடுத்த மாமுனி. 

துர்காவின் அரை புருஷன் சாமிநாதன். 

இவர்களிடயே நிகழும் பத்து பதினைந்து நாட்களின் சங்கமம். 

மலையை விட்டு மாமுனி  கடும் கோபத்தோடு இறங்குவதோடு தொடங்கி ரவி வீட்டைவிட்டு இலக்கில்லாமல்  வெளியேறும் வரை முன்னும் பின்னும் பயணிக்கும் அதே சமயத்தில் நகரத்தின் மொத்த சீதோஷ்ண நிலையையும் பதிவு செய்கிறார். 

மலையும், மலைச் சார்ந்த மழையும், கொளுத்தும் வெயிலும் , விஸ்கி மற்றும்  ஏமாற்றங்களும் கொண்ட கதம்பம். நுகர்ந்தால் நாசியில்  குருதி பெருகிடும் மலரை ஒத்து இந்தக் கதையில் போதை சலிப்பின்றி பயன்படுத்தப் பட்டிருகிறது. 

தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், போதை அல்லது அதிகமான புத்துணர்ச்சி என்ற இரண்டு தீவிர நிலைமைகளைக் கொண்டு நகர்கிறது. 

நல்ல பசி வேலையில் உள்ளிறங்கும் உணவுப் போல சரசரவென்று சரியும் எழுத்து. 

குளத்தின் மீது எறியப்பட்ட கல் ஏற்படுத்தும் வெவ்வேறு தவளைப்பாய்ச்சல் போல எழுத்து – ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் வெவ்வேறு உணர்வுகளை உயிர்த்தெழச் செய்கிறது. 

பெண்களே ஆண்களின் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்கள். அகத்தியராக நினைத்துக் கொள்ளும் நபர் துர்காவில் கண்டதும், ரவி தேடிய அமுதா அக்காவிலும், சங்கமேஸ்வரன் மலர்விழியில் கண்டதும் இந்த சக்திதான். 

சம்பவங்கள் துரத்தத் துரத்த ஓடுபவன் ஒருவன், தன் வினையில் இலக்கில்லாமல் ஓடுகிறவன் இன்னொருத்தன் என்று வாழ்க்கை ஒரு சின்ன வட்டத்தில் சுழற்றி சுழற்றி அடிக்கும். நம்மில் பல பேர் அதை உணராமலே வெகு வாழ்க்கையைக் கடந்து விடுவோம். 
எழுத்தாளன் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்து விட்டுச் செல்கிறான். அதனாலேயே ஓடிய வேகத்துக்கு ஒரு ஆசுவாசம் போல ஆற்றுப் படுத்தும் அவனுடைய எழுத்துக்கள். 

ஊரைப் பற்றிய விவரங்கள்  நாவலின் ஊடே விவரிப்பது காட்சியின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்கிறது. 

“திருவண்ணாமலை ஒரு வறட்சிப் பகுதி. வெயில் நகரம். இந்த உயரத்தில் பார்க்கும் பொழுது எவ்வளவு மரங்கள் தென்படுகின்றன. ஒரு நாள் கூட இவ்வளவு மரங்கள் சூழ வாழ்கிறோம் என்ற எண்ணமே தோன்றாமல் இருந்திருக்கிறோம்.” 

நாவலை உருவாக்குவதில் நாவலாசிரியரின் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. சில இடங்களில் உரையாடல்கள் தேவைக்கு அதிகமாகவும் , சில அம்சமான விவரணைகளுக்குப் பிறகு வரும் வட்டார உரையாடலும் நெருடலாக இருக்கிறது. இந்த நாவலின் பிரதான பாத்திரம் ரவியின் தோல்விக்கான காரணம் அவனின் பொறுப்பற்றத் தன்மையும் (ஆனால் அவன் பாவமாகவே படைக்கப் பட்டிருப்பான்) காரணமோ என்றும் யோசிக்க வைக்கிறது. 

மாமுனியின் பாத்திரம் அட்டகாசம். கனவுப் பாதையில் கொஞ்ச நேரம் இவ்வுலகை மறக்க வைக்கிறார் . 

இந்தாருங்கள் ஓராயிரம் பூக்கள் அய்யனார். வாழ்த்துகள்.

Sunday, April 1, 2018

ஓரிதழ்ப்பூ - ஜீ.முருகன்




ஓரிதழ்ப்பூ
...........
அய்யனார் விஸ்வநாத்
………

திருவண்ணாமலை மலைக்கும் அந்த நகரத்துக்கும் அசாதாரணங்கள் நிறைந்த வசீகரங்கள் பல இருக்கின்றன. பெரிய கோபுர வாசலில் இருந்த மண்டபம் (தீ விபத்தில் அது சரிந்துவிட்டது) என்னை ஈர்த்தது போல வெவ்வேறு விதங்களில் அவை உலகத்தின் பல திசைகளிலிருந்து மனிதர்களை ஈர்க்கின்றன. ஆன்மிகம், பக்தி, கிரிவலம், தத்துவம் எல்லாம் மேலுக்கான காரணங்கள் மட்டுமே. 

‘மரம்’ நாவலின் பிரதான பாத்திரங்களை உருவாக்கிவிட்டு அவர்களை எங்கே உலாவ விடுவது என்று சுமார் ஆறு மாத காலங்கள் யோசித்துக்கொண்டிருந்த போது திருவண்ணாமலை நிலவெளியை ஞாபகம்கொண்டதும் சட்டென்று அவர்கள் அங்கே குடியேறிவிட்டார்கள். 

அப்படித்தன் அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ நாவலில் வரும் பாத்திரங்கள் அந்த வினோத நிலவெளியில் பொருந்திப் போயிருக்கிறார்கள். அகத்திய முனி, சாமிநாதன், ரவி, அங்கையர்க்கன்னி, மலர்ச்செல்வி, சங்கமேஸ்வரன், துர்க்கா, அமுதா, ரமா எல்லோருமே தங்களுக்குள் ஒரு அசாதாரணத்தை சுமந்து திருவண்ணாமலை மண்ணில் வலம்வருகிறார்கள்.

‘கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி நிலையில் நிறுத்து பிளவில் பூக்கும் மலரை யறிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம்’ 

என்ற புதிரில் ஒளிந்திருக்கும் ஓரிதழ் பூவை இருநூறு ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காமல் பொதிகை மலையிலிருந்து திருவண்ணாமலைக்கு வருகிறார் அகத்திய முனி. 

ஒரு நாள் ரவி கோபத்தில் அவரிடம் சொல்கிறான், “ங்கொம்மா, பாவடையத் தூக்கிப் பாரு இருக்கும்” என. விடை கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் முனி. பிறகொருநாள் ‘அண்ணாமலை’ தான் அந்த ஓரிதழ்ப்பூ என்றும் கண்டுகொள்கிறார்.

ரமணாஸ்ரமம், சேஷாத்திரி மகரிஷி ஆஸ்ரமம், கந்தாஸ்ரமம், தேனிமலை, சமுத்திரம் ஏரி என ஒரு நாடங்க அரங்கு போல திருவண்ணாமலை மயக்கம் கொள்ள முனி, சாமி, ரவி, துர்க்கா, அங்கை எல்லோரும் நாடக நடிகர்களாக மாறிவிடுகிறார்கள். யாதார்த்தத்தில் காலூன்றாத அவர்களின் வினோதப் பண்புகளே இந்த நாவலின் பெரிய வசீகரம். காமமும் காதலும் போதையும் பைத்திய நிலையும் அவர்களை இயங்கும் விசைகளாகின்றன.

‘மான்’ என்ற படிமம் ரொமான்டிஸத்தை நோக்கி நாவலை இழுத்தாலும் பெரும் காமத்தை நோக்கிய பாத்திரங்களின் விழைவு அதை ஈடு செய்துவிடுகிறது. 

நம்ப முடியாத, நாடகீயமான சம்பவங்களே நாவலின் கட்டமைப்பு என்பதால் நாவலுக்கு பலவீனமாக இல்லாமல் அவையே பலமாகவும் மாறிவிடுகின்றன. 

இந்த நாவல் வேண்டி நிற்கும் தத்துவார்த்த தளம் ஒன்று கைகூடாமல் போனதும் நடந்திருக்கிறது. 

மண் வாசனை உத்தரவாதத்தோடு, வட்டார மொழிப் பேசி, ரத்தமும் சதையுமான மனிதர்கள் உலாவும் யாதார்த்த வகை என்ற பாதுகாப்பான எல்லைக்குள் நீதிக் கதைகள் எழுதுபவர்களுக்கு மத்தியில் அபூர்வமாக மலர்ந்துள்ளது கனவுத் தன்மை கொண்ட இந்த ஓரிதழ்ப்பூ.

..........

வெளியீடு கிழக்குப் பதிப்பகம், பக்கங்கள் 166, விலை ரூ.150.

Thursday, March 29, 2018

ஓரிதழ்ப்பூ - அமுதமொழி



ஓரிதழ்ப்பூ - அய்யனார் விஸ்வநாத் அவர்களின்  புதினம். அதன் இறுதி வடிவ நகலை அச்சுக்கு முன் படித்து   கருத்து சொல்லும்படி  அனுப்பி வைத்துள்ளார் . படித்துகொண்டிருக்கிறேன் . அகத்திய முனிவரின் தேடலும் போகனின் பதிலுமாய் தேடல் தொடரும் ஆரம்பம் திகைப்பை தருகிறது .

"கொம்பில்லா இலையில்லா காம்பில்லா ஓரிதழ் பூவாம்
கண்டு தெளிந்து உண்டு நீங்கி -நிலையில் நிறுத்து 
பிளவில் பூக்கும் மலரை யரிய வேணுங் கண்
யறிந்த கண்ணை சுவைத்த நாவை அறிந்தறிந்து அடைவாய் உன்மத்தம் "

இந்த பாடல் தேடலுக்கான உந்துதலாக இயக்குகிறது கதை 

ஓரிதழ்ப்பூ  -  என் பார்வையில் .

வாழ்க்கை மனிதர்களை இடம் மாற்றி சேர்த்தே வேடிக்கை காட்டுகிறது. அதிலிருந்து தப்பித்து அவர்கள் அவர்களுக்கான இடத்தை கண்டடைய செய்யும் முயற்சிகளின் சிராய்ப்புகள் வலிகள் வேதனைகள் பரிதவிப்புகளை   எல்லாம் விரிவாய் பேச ஒரு கதையாகிறது ஓரிதழ் பூ.

தனக்குள் உரைவுற்றிருக்கும் மென்மையை எழுப்பத் தெரிந்த புரிதல் தேடி ஆண்களும் பெண்களும் இப்பிரபஞ்ச வெளியெங்கும் அன்பை தொலைத்த அகதிகளாய் அல்லலுற்று அலைவதை படிப்பவர் மனதில் அழுத்தமாய் பதிய வைக்கிறார். தன்னை தன் கதா பாத்திரங்களில் ஒளிந்துகொண்டு கதை ஆசிரியர் பேசாமால் கதை மாந்தர்களின் வாழ்க்கை நகர்வில் அதை உணர்த்திப் போவது இந்தப் புதினத்தின் சிறப்பு.

காமத்தை அதன் அகவியல் சார்ந்த நிறைவை எய்த யத்தனிக்கும் இவரது கதை மாந்தர்கள் நம்முள் நம் அருகில் எதிரில் எங்கும் வியாபிதமாகி நிறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்திப் போகிறார்.

கதையின் ஓட்டம் ஆரம்பத்தில் உள்ளே நுழைய முடியாத ஒரு சின்ன சிக்களை வைக்கிறது. கதை மாந்தர்களின் அறிமுகம் இன்னும் தெளிவான நிறைவில் நேரடியான அறிமுகத்தில் நிகழ்த்தப்பட்டிருந்தால் இந்த நெருடல் உணராமல் சுலபமாய் கதைக்குள் ஒன்றி இருக்க முடியும் 

கதையின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் இடங்கள் புதிய சுவாரஸ்யமான பரவசத்தில் படிப்பவரை ஆழ்த்துகிறது.

மாமுனியின் ஓரிதழ் பூவுக்கான தேடல் அது பெண்ணின் அந்தரங்க உறுப்பின் கலை வடிவாய் பரிமளிப்பதை ஆசிரியர் கதை முழுவதும் தொடர்ந்து வரைந்துப் போகிறார். சில இடங்களில் அது சலிப்பையும் எட்டி பார்க்கச் செய்கிறது .

பெண்ணுடன் கூடல் என்பது உடல் தேவையின் உச்சம் என்பதை விட மனத்திருப்தி, ஆத்மா நிறைவுக்கான தாகம் என்பதான புரிதலை முன் மொழிந்து நகரும் புதினம் இறுதி பக்கங்களில் வேகமெடுத்து ஓடுகிறது . 

புத்தகத்தை தரையில் வைக்க முடியாத ஈர்ப்பை கொட்டியிரைத்து நகர்கிறது. இதோ முடிந்து விடுமோ என்ற பரவச தவிப்பை படிப்பவரின் அனுபவத்தில் விட்டுச்செல்கிறது.

துர்க்கா, அங்கையற்கண்ணி, அமுதா, மலர் எல்லாம் தங்கள் தீரா காதலின் சுதந்திர வேட்கை துரத்த துரத்த அதை கண்டடைய ஓடிய ஓட்டத்தின் களைப்பில் விடுதலை நோக்கி பயணிப்பதாக கதையை முடிக்கிறார்.
இவர் பெண் பாத்திரங்கள் தங்களின் மினுங்கலான அக அழகின் ஒளிர்வில் நிறைந்திருக்கிறார்கள். துர்காவுடன் அங்கையற்கண்ணி பயணமாகிறாள். சங்கமேஸ்வரன் எனும் குறியீட்டு வடிவின் நிஜ உருவின் அன்பில் திளைக்கிறாள் .
அமுதா தனித்தே இப்பிரபஞ்ச அழகை தேடிக்கொண்டு போகிறாள். அதில் அவளுக்குத் துணையாக அவளே போதுமென்ற நிறைவை எட்டுகிறாள்.
மாமுனி துர்காவால் அவரது மனைவி வசம் ஒப்படைக்கப் படுகிறார்.
சில மனிதர்களின் அறிமுகத்தில் நாம் தரிசணங்கள் கண்டடைந்த பரவசத்தில் சிலிர்ப்பதை துர்கா மூலம் நிகழ்த்துகிறார் . அது கேலி செய்கிறாரோ அப்படியான புரிதலை என்றும் கேள்வி எழுப்புகிறது .
இன்னுமொரு வாசிப்பில் வேறு புரிதலையும் தரலாம் இந்தப்பூ. இன்னுமொருவர் வாசிப்பில் பல் வேறு புரிதலும் வசப்படலாம் .

அனைத்தையும் கருத்தேற்று பதிப்பித்தால்  இன்னும் மெருகேறலாம் இந்தப்பூ.

நிறை நன்றியும் வணக்கமும் அய்யனார் விஸ்வநாதன். வாழ்த்துகள் .

ச. கனியமுது 
காவேரிப்பட்டினம்.

ஓரிதழ்ப்பூ - கனவுப் பிரியன்







“ புத்தக அறிமுகம் "



" ஒரு இடத்துல இருக்கமாட்டேன்கிறான். துருதுறுன்னு வாரான். எது கொடுத்தாலும் கொஞ்ச நேரம் தான் வேலையாடுறான். அடுத்ததுக்கு போயிறான் “ என்பது தான் என் குழந்தைகளைப் பற்றி யாரேனும் சொல்லும் அதிகபட்ச குற்றச்சாட்டாக இருக்கும்.

 “ மனசுக்குள்ள நினச்சுக்குவேன் தக்காளி, நெல்லு வச்சா நெல்லு தானே வெளையும்ன்னு “

என்னை ஒருமுகப்படுத்துவது கஷ்டம். என்னை மட்டுமல்ல கூடுதல் சிந்தனை கொண்டவனை நிலைப்படுத்தவே முடியாது. சதா ஏதேனும் ஓடிக்கொண்டே இருக்கும் அவனுள். 

“ தட்டலிஞ்சு திரியிறான் “ என்பார்கள் ஊருக்குள். 

வெளிகாட்டுவதற்கு அவனுக்கு ஏதேனும் தடம் கிடைக்கும் போது வார்த்தை வடிவில் கொட்டத் துவங்கி விடுகிறது அவனது அலைகழிப்பு. 

அதிலும் என்னமாதிரி அகங்காரம் கொண்டவனுக்கு குக்கர்ல மூணு விசில் எல்லாம் பத்தாது. ஏழு விசில் வைக்கணும் அப்போ தான் எதுவுமே வேகும். 

எதையாவது வாசிக்கிறப்போ அல்லது எதையாவது பாக்கிறப்போ அதுக்குள்ளே என்ன மறந்து நிக்கனும். அப்போ தான் எதுவுமே தொடரும். இல்லைன்னா சட்ன்னு நான் சுய நினைவுக்கு வந்துடா அதுக்குள்ளே பயணப்பட என்னால முடியாது. 

கொஞ்சமேனும் எளிமையான புரிதல் இருக்கணும்

புதுசா ஏதாவது இருக்கணும் 

தகவல் இருக்கணும் 

நூறு இருபது வார்த்தைகள் கொண்டு ஏன் இந்த எழவெல்லாம் சொல்லுறேன்னு பாக்குறீங்களா. என்ன எதையாவது  வாசிக்க வைக்கிறது கஷ்டம்ங்கிறதை சொல்லவேண்டி இவ்வளவு மெனக்கெடல். 

எப்போமாவது, இத விடக்குடாது முழுசா வாசிச்சிரனும் எனும் இந்த அற்புதம் நிகழும். 

“ அய்யனார் விஸ்வநாத் “ அவர்களின் “ ஓரிதழ்ப்பூ “ புத்தகம் அதை சாத்தியப்படுத்தியது. 

உண்மையிலே “ ஓரிதழ்ப்பூ “ ன்னா என்ன தெரியுமா ஆறாவது அத்தியாயத்தில் வாத்தியார் கோவத்துல சொல்லுவான் பாரு  “ என்று நண்பன் பீடிகை போட 

பூங்காவனத்தின் புருஷன் மாமுனி போல நானும் 

“ கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஒரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி – நிலையில் நிறுத்து பிளவில் பூக்கும் மலரை யரிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம் “  

எனும் வரிகளில் குடியிருக்கும் அந்த ஒரிதழ்ப்பூ பற்றி தெரிந்து கொள்ளும் ஆசையில் 

பெய்யும் பேய்  மழையையே ஒரு முறை வானத்தை உற்றுப் பார்த்து நிறுத்தும் வரம் கொண்ட மாமுனிவனோடு சேர்ந்து தேடத் துவங்கினேன். 

ரவி – அமுதாக்கா 

அமுதாக்கா – அவ புருஷன் 

ரவி – ரமா 

ரவி – அங்கயர்க்கண்ணி 

அங்கயற்கண்ணி – சங்கமேஸ்வரன் 

சங்கமேஸ்வரன் – மலர்ச்செல்வி 

அங்கயற்கண்ணி – துர்க்கா 

துர்க்கா – சாமிநாதன் 

சாமிநாதன் – லட்சுமி  

துர்க்கா – அய்யனாரு 

அய்யனாரு – பூங்காவனம்ன்னு கதையில் சம்பவங்கள் ஊடே அஞ்சு ஓரிதழ்ப்பூவை ஆசிரியர் வார்த்தையில் பரப்பிக் காட்டுகிறார். 

கதை அப்படியே திருவண்ணாமலையை சுத்தி பேயா சுத்துது. பேய்ன்னா அப்படி ஒரு பேய்த்தனம். 

இந்த புத்தகத்தின் கதையை நிஜம்ன்னு நம்புறதா, புனைவுன்னு சொல்லுறதா இல்லை அதீத புனைவுன்னு எடுக்கவான்னு, வாசிப்பவனை உன் தரத்துக்கு ஏத்தமாதிரி நீயே எது எதுல சேத்தின்னு தேடிக்கோ என்று கொடுத்துவிடுகிறார்.

அகத்திய முனியா கண்டா அகத்திய முனி அதுவே அய்யனாரா கண்டா அய்யனாரு. 

ஓரிதழ்ப்பூ வைத்தேடி அலைஞ்சா ஓரிதழ்ப்பூ, இல்ல ஊருக்குள்ள நடக்கத்தானே செய்யுதுன்னு எடுத்துக் கிட்டா சம்பவம் அவ்வளவு தான். 

ஆனா சொல்லுற விதம் இருக்கே அது ரொம்ப கிளாசிக்கா இருக்கு. 

ஆசிரியரே முன்னுரையில் சொல்லுவது போல முதல் ஏழு அத்தியாயம் மிரட்டாலா இருக்கு. 

உண்மையிலே வந்திருக்கிறது முனிவன் தானா. 

மகரிஷியைத் தேடி வந்தவனா. 

ஓரிதழ்ப்பூ என்ற அந்த வரிகளை எழுதியது யார். 

உண்மையிலே போகர் யாரு. 

இதெல்லாம் மானிட வடிவமா. 

மலர்ச்செல்வி உண்மையிலே அந்த பர்வதமலை காட்டுல காணாம போயிட்டாளா. 

மனிதத் தலை கொண்ட மான் வருமா அங்கயர்கன்னியை தேடி. 

இது எந்த காலத்துல நடக்குது. 

இப்படி பல கேள்விகள் வாசிப்பவன் முன் அடிபட்ட திறந்து இருக்கும் புண் மீது சுற்றிவரும் ஈ போல கோய்ங்ங்ங்.. என்று சுற்றுகிறது.

மகரிஷி, அகத்தியர் எல்லாம் கதையில் வருகிறார்கள். அதற்காக கொதிக்காமல் விசுவாமித்திர்ராக சிவாஜி நடித்த " ராஜரிஷி " யும் தமிழ்ப்படம் தான் என்பதை சமூகம் நினவில்  கொள்ள வேண்டும்.

ஓரிதழ்ப்பூ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ஏகப்பட பூக்கள் பூ மரங்கள். அதி அற்புதமான ஒரு வீதி வழி நடப்பது போல உள்ளது. 

மழைக்கு இடையே ஒரிதழ்ப்பூவை ஒவ்வொருவரும் தரிசிக்கும் நிகழ்வுகளை எல்லாம் நல்ல கவிதைத் தனத்துடன் விவரிக்கிறார். அதிலும் கூடுதலாக அவர் பெண்கள் பகுதியில் இருந்து அவற்றை பேசுவதால் இன்னும் அழகாக உள்ளது. 

“ ஆதி உறவு அந்து போகும் ......உறவு அக்காது “ என்ற வட்டார வழக்கு ஒன்று உண்டு. 

காதல் என்றும் பெண் போக்கிலே என்பார்கள். 

வாழ்வியலும் பெண் போக்கில் தான் 

அப்போ ஓரிதழ்ப்பூ.............?

எங்க ஊருல பஜாருல என்னோட வண்டியை நிறுத்திட்டு ஏதாவது வாங்கப் போவேன். 

திரும்பி வரும் போது சிலநேரம் அழுக்கு உடையோட மெலிந்த பெண் நிற்பாள். என்னைக் கண்டதும் கையை நீட்டுவாள். நானும் சிரித்தபடி பணம் தருவேன். வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல் போய் விடுவாள். ரோட்டில் யாராவது சீண்டினால் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கி விடுவாள். 

அந்த கிறுக்கச்சியை காணும் போதெல்லாம் எனது நண்பர்கள் அது என்ன உன்கிட்ட மட்டும் பணம் கேக்கிறா. நீயும் கொடுக்கிற. பைத்தியக்காரிக்கி போய் பணம் கொடுக்கிற என்றெல்லாம் கூறுவதுண்டு. நான் ஒன்றும் பதில் சொன்னதில்லை. 

ஆனால் கல்யாணம் ஆனதும் மனைவியுடன் முதன் முதலாக அவளை சந்திக்க நேர்ந்த போது மனைவி அவள் என்னிடம் பணம் வாங்கிக் கடந்ததும் கேட்டாள் 

“ யாரு இந்த கிறுக்கி “

“ ............ஸ்கூலோட இங்கிலீஷ் டீச்சர் “ என்றேன் 

திக் என்று பயந்தவளாக “ என்னது “ என்றவளிடம் 

“ நம்ம வீட்டுக்கு எதிரே இருக்கிற அல்லல்காத்தான் வீட்டுக்கு டியுசன் எடுக்க வருவா. நேருல அப்போ பாகிறப்போ ஒரு சிரிப்பு சிரிப்பா அவ்வளவு தான். அப்போ அவளுக்கு கல்யாணம் ஆகல. நல்ல அழகா இருப்பா. ............ளோட ஆட்கள் அஞ்சாறு பேரு சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க. பைத்தியம் மாதிரி திரியிறா.  “ என்றேன். 

எல்லாமே தோற்ற மயக்கம் தான். 

நீ எதுவாக காண்கிறாயோ அதுவாக இருப்பேன். 

இந்த புத்தகமும் அப்படித்தான்.

x

ஓரிதழ்ப்பூ என்பது ஒரு பூ தானா?




நதியின் பெயர் பூர்ணா

 முதல் விழுங்கலில் துவர்த்தாலும்
மறுமுறைக்கு தவித்தது நாக்கு
இரண்டாவது மடக்கில் தோளில் முளைத்தன சிறகுகள்
தக்கையாய் மிதந்தன கால்கள்
கருவறை விட்டெழுந்த அவசரத்தில்
பிருஷ்டங்கள் நடுவே சுருண்டிருந்தது உன் ஆடை
சருமத்தில் சந்தன வியர்வை
வெண்கல முலைகளில் ததும்பும் இனிமை
கனவின் படிகளில் இடறியோ
மதுவின் சிறகிலிருந்து உதிர்ந்தோ
உன் யோனிக்குள் துளியாய் விழுந்தேன்
“யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்”
பூர்ணா நதியின் மடிப்புகளில் ஒடுங்க மறுத்து
அலைகிறது சூரியவெளிச்சம்
ஆர்யாம்பாளின் கண்ணீரில் கரையாத
பிரம்மச்சாரியின் முதலைப் பிடிவாதத்தின்
காவி நெடியில் பூமி மயங்கி மீண்டும் விழித்தது
கற்படியின் குழியில் தேங்கிய நீர் வெதுவெதுப்பு
காற்று உந்திய புதிய அலையில்
குளிர் நதியும் அத்வைதிதான்-
போதையும் களவும் போல
கடவுளைப் புணர்ந்த ஆனந்தம் கொண்டாட நானும்
மனிதனைப் புணர்ந்த பாவம் தொலைய நீயும்
முழுகிக் கொண்டிருக்கிறோம் தேவி ஒரே நதியில்.

 - சுகுமாரன் 


 நான் செய்த தவறுகள்

என்னுடைய முதல் தவறு
கடவுளில்லாத உலகத்தில் பிறந்தது
இரண்டாவது தவறு
கடவுளை எனக்காக உருவாக்கிக் கொண்டது
மூன்றாவது தவறு
பால்பேதமற்றிருந்த கடவுளை
இரண்டாகப் பகுத்து மனித சாயலில் ஆண்-பெண் ஆக்கியது நான்காவது கடைந்தெடுத்த முட்டாள் தனம்
இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டி விட்டது
ஐந்தாவது தவறு
ஆண்கடவுளுக்கு ஆணுறை வழங்க மறுத்தது
ஆறாவதாக குட்டிக் கடவுளைக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்தது
ஏழாவது தவறு
எனது வீட்டுக்குப் பக்கத்திலேயே கோயிலைக் கட்டிக் குடியமர்த்தியது
எட்டாவது தவறு
என் துணைவியை ஆண்கடவுளிடம் சோரம் போக விட்டது ஒன்பதாவது பெருந்தவறு
பழி வாங்கும் எண்ணத்தோடு பெண்கடவுளை நான் வன்புணர்ச்சி செய்தது
பத்தாவது தவறு
என் துணைவியின் வயிற்றில் கடவுள் உண்டானதையும் பெண்கடவுளின் வயிற்றில் மனிதர் உண்டானதையும் கருவழிக்க மறந்தது
நான் செய்த பத்து தவறுகளுள் எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான்.

 - ரமேஷ் பிரேம்

 தவறுகளின் நிமித்தம், நான் உட்செல்கிறேன். பின் வெளி வருகிறேன். அணைக்காமல் விட்டுச் சென்ற சிகரெட் புகைச்சுருள் சிவந்து பின் அமர்கிறது. காற்றுவெளியின் துகள்களின் நடுவே அதன் மீந்த சாம்பல் இன்னும் சின்னஞ்சிறு துகள்களாக, பின் துகள்கற்ற அகாலப்பரப்பாக, ஏதுமற்றதாக மறைகிறது. சுருண்ட புகை மென்மேலும் உயர்ந்து உயர்ந்து, அருகமர்ந்த நாசிகளில் நிரம்பி, சுவாசத்திற்குள் புகப்புக, அதன் திட்டுத்திட்டான அரூபம் படிந்து எண்ணங்களை உரசத் தொடங்கியது. எத்தனை முறை பார்த்திருக்கிறோம். என் முதல் தொடுகை எப்பொழுது நடந்தது. மாமா மறைத்து வைத்திருந்த நிர்வாணப்படங்களையும் அதன் தலைகீழான புணர்வுகளையும், குறிகள் எதன் பொருட்டு அலைக்கழிகின்றன என்றும் நினைத்துக் கொள்கிறேன். கடவுளர்களும் மனிதர்களும் புரளும் நிலையற்ற பரப்பில் தொடர்ச்சியாக உள் நுழைவதும் வெளித் தள்ளுவதும். கனவின் நிலத்தில் தவறுகளினால் (தவறுகளா) உருவாக்கிய உடல்களை விடாது கடித்துக் கொண்டே இருக்கிறது ஆண் மனம். பற்களாலான குறிகள் கொண்டிருக்கிறேன். எண்ணிலடங்கா உடல்களின் சுழலில் மீள மீள உள் செல்கிறேன் வெளித் தள்ளுகிறேன். ஆனால் தொடர்ச்சியாக பீய்ச்சப்பட்ட விந்துவிற்கு பின் எளிய உயிரியாக தன்னை பாவித்துக் கொள்ளாத ஆண்களே இல்லை போலும். எதனையோ தூக்கி சுமந்து கொண்டிருக்கும் பொழுது கால்கள் நழுவி அத்தனையும் கரையற்ற நீர்ப்பரப்பில் கரைந்து ஒன்றுமில்லாமலாவது.

 “கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி நிலையில் நிறுத்தி பிளவில் பூக்கும் மலரையறிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம்”

 ஓரிதழ்ப்பூ பெண்குறி. அகத்தியர், போகர், ரமணர், சங்கமேஷ்வரன், அய்யனார், ரவி, சாமிநாதன், ஜோசியர், பெரியசாமி, மான், திருவண்ணாமலை. மையமற்று அங்கும் இங்குமாக செல்லும் கதை உத்தி. பெண்கள், காளி, துர்கா, லட்சுமி, அங்கயற்கண்ணி, மலர்ச்செல்வி, ரமா, அமுதா, டீச்சர் அம்மா. அவர்களுடைய ஒவ்வோரு ஓரிதழ்களும். திரும்பத் திரும்ப பூக்கள். இவர்களின் உலகிற்குள், கனவிற்குள், உறக்கத்திற்குள், நிலத்திற்குள், உணவிற்குள் என சமனின்றி பாயும் கதையில் தொடர் கண்ணியாக ஒரே பெண்கள். இந்தப் பெரும் சங்கிலியில் ஊளையிட்டுக் கொண்டே இருக்கும் வன மிருகம் ஒன்று கழுத்து கட்டுண்டு இருக்கிறது. கட்டுண்டால் மட்டுமே கிடைக்கும் ஊன். ஆனால் தன்னால் கட்டவிழ்க்க முடியும் என்று அறிந்து கொண்ட பின் தான் அந்த கனத்த சங்கிலியை தன் உடல் முழுதுக்குமாய் கட்டிக் கொள்ள முனைகிறது. பெரிதும் சிறிதுமான இந்தச் சங்கிலியின் அழுத்தம் அதன் உடலை ஒரு எரிவாயு போல உறிஞ்சிக் குடிக்கத் தொடங்குகிறது. ஒரு சமயம் இன்னும் இன்னும் என அந்த மிருகம் லயிக்கையில் நிகழ் உலகில் வெத்துக் கூடாக கிடக்கும் என்றால் அப்படியுமில்லை. அந்த சங்கிலிகள், மிருகம், லயிப்பு, கனவு எல்லாம் கதை சொல்லலில் மையமின்றி போய் விடுகிறது. காமம் தான், பெண் உறுப்பில் பூ பூத்திருக்கிறது.

அமானுஷ்ய குணாதீசயங்களுடன் இருக்கிறார்கள் பெண்கள். மான்களுடன் புணர்ந்து பிள்ளைகள் பெறுவார்கள். பித்தனுடன் கூடி இன்பம் துய்ப்பார்கள். நெஞ்சு மிதித்து காளியாவார்கள். கழுத்துடைந்து பலி ஆடாய்க் கிடக்க விரும்புவார்கள். எதற்கு இப்படி ஒரு பயம் அவனுக்கு அவள் யோனியைப் பார்த்ததும் தொற்றுகிறது. அவன் ஏன் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மூத்திரம் மலம் வாந்தி எனப் போய்க்கொண்டிருக்கும் பாதையில் திரும்பத் திரும்ப பெண் பூ பூ நாற்றம் நாற்றம் என்று எனக்கு தலைகீழாக்கம் ஆகியிருந்தது. உவர்த்த மத நீரின் ருசி, பிசுபிசுப்பு, மணம் என அதன் வாதையின் ரீங்கரிப்பு என்னுள் புகும் பொழுது, இன்னும் ஆழமாக அவள் விரல்கள் உள் நுழைந்து வெளியே பீய்ச்சிக் கொண்டிருந்தாள். திரும்பத் திரும்ப தெளிவற்ற பாதையினுள் போய்க்கொண்டிருப்பதைப் போலவே இருந்தது. ஆனால் சொல்ல விளைவது என்ற கருத்திற்குள் நான் நுழையவே இல்லை.

புனைவு மொழி படிமங்களால் ஆனது என்றே நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் அந்த ஒவ்வொருவனாகவும் ஆகிக் கொண்டிருக்க வேண்டும். விழுந்து எந்திரிக்க வேண்டும். மாயயதார்த்தம், யதார்த்தம், புனைவு, பின் நவீனத்துவம், மிகு கற்பனை, மீளுருவாக்கம், முரணான கதை சொல்லல் முறை என்று எதற்குள்ளும் செல்லவில்லை. ஆனால் வெகு காலமாக ஆண் மனம் உருவாக்கிய பிரக்ஞையைத் தேடிக் கொண்டிருந்தேன். சாத்தியமற்ற வழிகளில் அதன் பைத்தியக்களையைப் பிடித்து விடலாம் என்று நம்பினேன். பெண்கள் தேவதைகளாக இல்லை காளிகளாக உருவானவர்களா என்று நம்பவில்லை. இளகியவர்களா நிச்சயமில்லை. அரதப்பயலுக்கு பொறைந்தைகள, தேவடியாப்பய, புளையாடி மோன, புண்டாச்சி மவன, புண்டைக்கு பொறந்தைகள, தள்ளைய ஓத்தவன, அக்காள வோளி இப்படி உறவுகளுக்குள் தினமும் புணரும் வார்த்தைகளை பெண்களின் மொழி வழியாகவே அறிந்து உணர்ந்திருக்கிறேன். அதனால் அது மிக எளிதாக பெண்ணுக்கான வசை, பெண்களை மைய்யப்படுத்தி ஆணைக் குறிக்கும் வசை. ஆனால் ஆண் பெண் எனும் உறவிற்குள் காமம் அற்றுப் போகையில் அவர்களுக்குள்ளான உறவு என்பது எதனை அமைக்கிறது. எந்தப் பிடிமானம் இருக்கும்.

தன் எளிய தாழ்வுணர்ச்சியிலிருந்து அவன் பெண்களை அறிகிறான். அம்மையை விரும்பும் அகம், காதலியை அங்கு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதே நேரம் அம்மை காளியாகி விடுவதில்லை. காதலியின் காளியின் கணங்கள் அவனுக்கு தேவை. அதே நேரம் சந்தன வல்லியாக அவள் வந்து அணைத்துக் கொண்டு நெஞ்சில் மிதிக்க வேண்டும் என உள்ளூற ஆசைப்படுகிறான். காதலியின் முலையை சப்பாத ஆண் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அவன் குழந்தையாகவும் வன் மிருகமாகவும் திரும்ப காதலனாகவும், எளிய உயிரியாகவும், வெறும் உடலாகவும், புனைந்து கொண்டே இருக்கும் பாவனையில் பெண் தன்னை காதலியாக, அம்மையாக, தமக்கையாக, காளியாக, பிள்ளையாக, அனாதரவானவளாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்களோ?

பிம்பங்களுக்கான எதிர்பிம்பங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கையில் ஒன்றை உணர்கிறேன். பிம்பங்களின் ஆடி யார் வசம் இருக்கிறது என்று. அதனால் வானம் அழைக்க பொதி மூட்டையக் கொண்டு நகரும் ரவி என்னிடம் வசப்படவே இல்லை. வந்திருந்தால் அவன் தொங்கிக் கிடக்கும் மொன்னைக் குறியை நான் அறிந்து கொண்டிருக்ககூடும். கூடவே மொன்னை மனிதனாய் சாமி நாதனின் கால் இடுக்கில் அகப்பட்டுக் கிடக்கும் வெத்துக் களச்சிகளையும். பின் எதற்காக இந்தக் கவிதை. ஏன் அய்யனார் புத்தி பேதலித்திருக்கிறான். அவன் சுகித்த அந்த ஓரிதழ்ப்பூவை, இவர்கள் ஏன் விலக்கினார்கள். ஆமாம். ஒரு பித்து நிலை வேண்டும் போலும் இந்தப் பெண்களுக்கு. அய்யனாரின் பெண்களுக்கு மான் தான் வேண்டும். மான் தலை உள்ள ஆண்களிடம் விடைத்த குறிகள் உண்டோ. இல்லை. இது குறி சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை. ஏன்! திருவண்ணாமலையே ஒரு பெருத்து எம்பி நிற்கும் குறிதானே. வானம் அளக்க, உள் சென்று வெளி செல்கிறேன். மறுபடியும் நான் செய்த தவறுகள். உண்மையில் காமத்தின் பொருட்டு நான் சென்ற தூரத்தின் வழியில் தென்பட்டனர் இவர்கள்.

ஆனால், எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான். போதைக்கும் களவுக்கும் இடைப்பட்ட காலமற்ற பொழுதில் வந்தாய் நீ


நன்றி,

 நந்தகுமார்

http://nanthangl.blogspot.ae/

Tuesday, April 18, 2017

விமர்சனமும் சுயமும்






தற்செயலாக இருபது வெள்ளைக்காரர்கள் குறுநாவல் தொகுப்பிற்கு எழுதப்பட்ட விமர்சனத்தை வாசித்தேன்.  திண்ணை இணையப் பத்திரிக்கையில் இரா. ஜெயானந்தன் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் எழுதியிருக்கிறார். சமீபமாகத்தான் கண்ணில் பட்டது.  வழக்கமான விமர்சன சொற்களைப் பயன்படுத்தாமல் அவர் மனதிற்கு என்ன பட்டதோ அதை எழுதியிருக்கிறார்.

இருபது வெள்ளைக்காரர்கள் - புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானே போகவில்லை.  எழுதுவதோடு எழுதுபவனின் வேலை முடிந்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன்.  புத்தகம் பார்த்தீர்களா என்கிற சாதாரணக் கேள்வியைக் கூட  நண்பர்களிடம்  வெகு கவனமாகத் தவிர்த்தேன். என்னுடைய எந்த முயற்சியும் இல்லாமலேயே இருபது வெள்ளைக்காரர்கள் அது  சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்தது. படைப்பு அதற்கான வாசகரைத் தேடிக் கொள்ளும் என்பதெல்லாம் உண்மைதான். மேலதிகமாய் இத்தொகுப்பின் மூன்று குறுநாவல்களையும் இணையத்தில்தான் எழுதினேன். உடனுக்குடன் அதை வாசித்தவர்கள் தங்களின் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது.

பழி எழுதப்பட்ட காலத்தில் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல புதிய வாசகர்கள் அறிமுகமானார்கள். நானுமே பழியைப் பித்து நிலையில்தான் எழுதினேன். இன்றளவும் எனக்கு பிடித்த நாவல் பழிதான்.  பழி தந்த பரவசத்தை  இனி எப்போதுமே அடையமுடியாது எனதான் நினைக்கிறேன்.  முதல் நாவல் என்பதால் தோன்றிய எண்ணம் மட்டுமில்லை என்பதை வாசித்தவர்கள் அறிந்திருப்பார்கள். காமமும் வன்முறையும் அதன் ஆழத்திலிருந்து வெளிப்பட்டன. பழியை இரண்டு பாகங்களாக எழுதினேன். இரண்டாம் பாகத்திற்கு அதிகம் உழைக்க வேண்டி இருந்தது. நான் ஒருபோதும் சென்றிருக்காத ஆந்திராவின் பல பிரதேசங்களில் கதை நிகழ்ந்தது. கோதாவரியாறு தொடங்கி கங்காவரம் வரை ஊர்களை கூகுலில் பிடித்தேன். மேப்பைத் துருவித் துருவி கதை நிகழ வேண்டிய களங்களை அமைத்தேன். தெலுங்கு வார்த்தைகள் அனைத்தையும் நண்பர் கென்னிடமிருந்து பெற்றேன். ரோட் மேப் இன்று வரை மனப்பாடமாகி இருக்கிறது. உண்மையிலே பழியை சாகஸ மன நிலையில்தான் எழுதினேன். அப்படியே அது எழுத்திலும் வந்தது. இன்றளவும் நேர்ப் பேச்சில்  பழியைப் பற்றி யாராவது பேசுகிறார்கள். பயங்கரமான ரைட்டப் என்பது அவர்களிடமிருந்து வரும் முதல் சொல். அதை ஏன் யாரும் அச்சில் கட்டுரையாக எழுதவில்லை என்பது எனக்குத் தெரியாது. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு அது அவசியமும் இல்லை.  ஒன்றை எழுதும்போது பெரும் பரவசத்தை விடவா, அதைப் பற்றி பிறர் எழுதி வாசிப்பதில் வந்துவிடப் போகிறது?

மழைக்காலம் நிறையப் பெண் வாசகர்களைத் தந்தது. அதில் பயன்படுத்திய கவிதைகள், புதுவை நகரம், மழை, காமம், பேச்சு, போதை, இளமையின் ஊசலாட்டம் என மிதமான வாசிப்புற்குத் தேவையான எல்லாமும் இருந்தன.  என் வாழ்வின் முக்கியமான ஒரு காலகட்டத்தை எழுதிப் பார்க்க விரும்பினேன்.  எழுத எழுத அது வேறு வடிவத்தைப் பெற்றது. பழிக்கு அப்படியே நேரெதிராய் அந்நாவல் இருந்தது.  பெயர் உட்பட மழைக்காலம் நாவலில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் மாற்றவில்லை. அப்படியே இருந்தது, அப்படியே எழுதினேன். சில நண்பர்கள் தாமதமாகப் படித்து அடப்பாவி என்றனர். சிரித்துக் கொண்டேன்.

இருபது வெள்ளைக்காரர்கள் இன்னொரு தளம். சுதந்திரத் தன்மையின் மீதிருக்கும் என் விருப்பமும்  அதற்கு நேரெதிரான குமாஸ்தா வாழ்வின் யதார்த்தமும் சேர்ந்து இதை வடிவமைத்திருக்கும் என எண்ணுகிறேன். இதன் திரைக்கதை வடிவம் இன்னும் நன்றாக வந்திருக்கிறது. பார்ப்போம்.

அச்சில் பழியைத் தனியாகக் கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது. ஓரிதழ்ப்பூவை எழுதி முடித்த உடன் நான்கு குறுநாவல்களையும் தனித் தனியாக அச்சில் கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஓரிதழ்ப்பூ வை எழுதும் இந்நாட்களில் மனம் முழுக்க திருவண்ணாமலை அடிவாரத்தில் தஞ்சமடைந்திருக்கிறது. அகத்திய மாமுனியை  வேறு அங்கு அலையவிட்டிருக்கிறேன். முன்பு வரைவு செய்திருந்த வடிவம் மாறிப் போய்விட்டது. கொஞ்சம் நெருக்கடியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மனம் தீவிரத் தன்மை அடைந்திருக்கிறது. விரைவில் முடித்துவிடுவேன் என நம்புகிறேன்.

இந் நான்கு குறுநாவல்களுக்கும் பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. அதைப் பற்றி பிறகு பேசுவோம்.

திண்ணையில் விமர்சனம் எழுதிய ஜெயானந்தன் அவர்களுக்கு நன்றி.



Wednesday, January 11, 2012

தமிழ் நாவல்கள்- ஒரு அழகியல் பார்வை பாகம் 2

நகுலன் கவிதைகளை முன்பே வாசித்திருந்தாலும் இரண்டாயிரத்து ஏழாம் வருட வாக்கில்தான் நகுலன் நாவல்களின் தொகுப்பு - ஐ வாசிக்க முடிந்தது. 1965 லிருந்து 2002 வரை அவரால் எழுதப்பட்ட நிழல்கள், நினைவுப்பாதை, நாய்கள்,நவீனன் டைரி,சில அத்தியாயங்கள்,இவர்கள்,வாக்குமூலம்,அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி என்கிற வெவ்வேறு பெயரில் எழுதப்பட்ட ஒரே தளத்தில் இயங்குகிற நாவல்களின் தொகுப்பை மொத்தமாய் படிக்க முடிந்தது. வாசித்தவரை நகுலன் கதை என்ற ஒன்றை சொல்ல மெனக்கெடவே இல்லை. நனவோடையில் தன் எண்ணங்களை,கொந்தளிப்புகளை, உதிர்த்துக் கொண்டே செல்கிறார். அது வாசகரிடத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தோ அவை கதையாக, படைப்பாக உருமாறுகிறதா என்பதைக் குறித்தோ நகுலனும் சரி அவர் படைப்புகளும் சரி பெரிதாய் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை.

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடுதான் நகுலனின் எழுத்து. நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள். எழுத்தின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார். பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் இவரது பிரதான பாத்திரத்தின் இயல்பாய் நாவல்களில் வெளிப்படுகிறது. வளர்ச்சிக்காய் புகழுக்காய் தத்தமது சுயங்களை தொலைக்கும் மனிதர்களின் மீதான எள்ளலும், கோபமும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.

பெரும்பாலான வாசகர்கள் நகுலனை அவர் படைத்த சுசீலாவின் மூலம்தான்
அடையாளப்படுத்துகிறார்கள். நினைவுப்பாதையில் சிவன் பாத்திரம் யார் சுசீலா? எனும் கேள்விக்கு என் மனதின் பைத்திய நிழல்தான் சுசீலா என்கிறார் மேலும் அவள் திருமணமாகிப் போய்விட்டாள் என்கிற தகவலையும் சொல்லுகிறார்.இல்லாத ஒன்றினை உருவாக்கி கொண்டு உருகும் மனதை பிரம்மிப்பாய் பார்க்க வேண்டியிருக்கிறது. தன்னை ஒரு தோல்விக்கலைஞன் என சொல்லிக்கொண்ட நகுலன் தோற்பதின் சுவையறிந்திருக்க வேண்டும்.உள்விழிப்புபெற்ற மனிதனால் மட்டுமே தோல்வியை கொண்டாட முடியும். ஒஷோ வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது தோற்பவர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும் என்கிறார். நகுலனுக்கும் அதே போன்றதொரு மனோநிலை வாய்த்திருக்க வேண்டும்.

தன் எழுத்துக்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு கூடவே அஞ்சலட்டையும் இணைத்து கொடுக்கும் வழக்கமும், கடிதத்திற்கான எதிர்பார்ப்புகளும், தாமதமானால் எழும் கோபங்களும் எந்த பாசாங்குமில்லாமல் புனைவாகவும் பதியப்பட்டிருக்கிறது. எழுத்து வணிகர்களை அவர்களின் சொந்த பெயர்களிலேயே தன் படைப்புகளில் கிண்டலடித்திருக்கிரார். நகுலனின் எழுத்தை நனவோடை உத்தி என விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள். இன்னும் சிலர் நகுலன் பெரிதாய் எதையும் சாதித்து விடவில்லை எனவும், நோயின் தாக்கத்தால் எழுத்தாய் கொட்டியவற்றை வாசகர்கள் புரிந்து கொள்ளாமல் பிரம்மிப்பாய் அனுகுகிறார்கள் என்றுமாய் எழுதி வருகிறார்கள். அவை குறித்து தேர்ந்த வாசகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உண்மை என்கிற ஒன்று கூரிய வாளினைப் போல இவர் படைப்புகளின் பளபளத்துக் கொண்டிருப்பதை நெருங்கினால் அறிய முடியும். வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.

பின்நவீனம் குறித்தான ப்ரக்ஞை தமிழில் ஏற்பட்ட பின்பு பெண்ணியம், தலித் இலக்கியம், விளிம்பு நிலை மொழி போன்ற பல்வேறு திறப்புகள் தமிழில் நிகழ்ந்தன. பல புதிய கவிதைகள் பெண் மொழியில் எழுதப்பட்டன. ஆண் பெண் பேதமில்லாமல் கவிதைகளில் உடல் மொழி பேசப்பட்டது. போலவே தலித் எழுத்துக்களும் வட்டார வழக்குகளும் செல்வாக்கு பெறத் துவங்கின. தமிழில் பின் நவீனத்துவ நாவல் எழுதுவதற்கான முயற்சிகள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. சிலரால் அதில் வெற்றியும் பெற முடிந்தது. அந்த வகையில் ரமேஷ்-ப்ரேம்களின் சொல் என்றொரு சொல் நாவலை பின்நவீனத்துவ நாவல் வகைமையில் சேர்த்து விட முடியும்.

இந்நாவல் தமிழின் அகமரபுக்கும் புறமரபுக்கும் இடையூடாக ஓடும் ஒரு குறியியல் நாவலாகவும் கதையாடல்கள் பற்றிய கதையாடல்களின் நாவலாகவும் அமைந்திருக்கிறது.சில கதைகளால் கட்டப்படும் தமிழ் மனம்தான் வேறு கதைகளால் கட்டவிழ்க்கவும் படுகிறது என்கிறது. வார்த்தையாடல்களின் கவர்ச்சியும் மொழியின் வசீகரமும் நம்மை வேறு ஏதோ ஒரு உலகத்தில் புரியாத ஒரு வெளியில் தொலைக்கச் செய்து விடுகிறது. காமமும்,புணர்வும், விலங்குகளின் நடமாட்டங்களும், மனித மனங்களின் உள்ளூடாக பயணித்திருப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. புரட்சிகளின் வடிவமாக, அடக்குமுறைகளின் மீறலாக, புனிதங்களின் கட்டுடைப்பாக அதீதன் வரையறுக்கப்படுகிறான். காலத்தை மந்தமாக்கி சொற்கள் எங்கெங்கோ அலைகின்றன. இதன் உள்ளடக்கம் 24 தலைப்புகளில் வெவ்வேறு கதையாடலை முன் வைக்கிறது.வாசிப்பின்பம் என்பதை பிரதியோடே உணர முடிவதும். சிதறலாய் கதையல்லாத கதை ஒன்றை சொல்வதும், மய்யமான கதை சொல்லும் பாணியை தகர்த்திருப்பதும் இந்நாவலின் பின்நவீனத்துவ வடிவத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

தொடர்ந்து இறுக்கமான எழுத்துக்களை பற்றியே பேசுவது போன்ற உணர்வை எழுதும் போதே பெற முடிகிறது. இறுக்கத்தைத் தளர்த்த நாஞ்சிலாரைப் பற்றிப் பேசலாம். வெகுசனக் கதைப் பரப்பில் இருந்தபடியே இலக்கியத் தரத்தை தொடும் எழுத்துதான் இவருடையது. ஒரு தேர்ந்த திரைக்கதைக்கான முழு உத்திரவாதமும் இவரது நாவல்களில் காண முடியும். வழக்கமான கதைகளாக இருந்தாலும் அவற்றை தன் கூர்மையான அவதானிப்பால், நுட்பமான விவரணைகளால் நாஞ்சில் தேர்ந்த இலக்கியப் பிரதியாக மாற்றிவிடுகிறார். நாஞ்சிலின் தலைகீழ் விகிதங்கள் அதிகம் பேசப்பட்ட நாவல். தங்கர் பச்சான் இயக்கத்தில் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்தது. கதையின் சிவதாணுவை சேரன் கச்சிதமாகவே காட்சிப்படுத்தியிருப்பார். நாவலை சிதைக்காத நல்லதொரு சினிமாவில் சொல்ல மறந்த கதையும் அடக்கம். அடுத்ததாய் எல்லோருக்கும் பிடித்த இவரின் நாவல் சதுரங்க குதிரைகள் .

என்னளவில் மிகவும் ஒன்றிப்போய் வாசித்த இவரின் படைப்பு எட்டுத் திக்கும் மதயானை ஒரு வகையில் இந்நாவல் என் நாடோடி மனநிலைக்கு தீனி போடுவதாய் அமைந்திருந்தது. பி.காம் கடைசி வருடம் படிக்கும் பூலிங்கம் தன் வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் வெகு சாதாரணமாய் பேசிய காரணத்திற்காக தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு அபபெண்ணின் தகப்பனாரால் அவமானப்படுத்தப்படுகிறான். வன்மம் கொண்ட பூலிங்கம் அவரின் வைக்கோல் போருக்கு தீவைக்கிறான். உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆந்திரா,கர்நாடகா,கோவா என அலைந்து திரிகிறான். பெரும்பாலும் ரயில் நிலையங்கள், ப்ளாட்பாரங்கள் என நாட்கள் நகர்கின்றன. ரயிலில் ஐஸ்கிரீம் விற்பது,கோவாவிலிருந்து மது புட்டிகள் கடத்துவது. போதை மருந்து கடத்தல், லாரியில் ஓடுவது என வாழ்வு மாறிக்கொண்டே இருக்கிறது. எங்காவது யாராவது எதிரியாக முளைத்து விடுத்துவிடுகிறார்கள். பல சமயங்களில் இவனே இவனுக்கு எதிரியாகிறான். ஒருவழியாய் பாம்பாயில் ஒரு பெரிய சாராய வியாபாரியிடம் தஞ்சமடைகிறன். மிகுந்த பாதுகாப்புகளோடு சாராயம் கடத்துகிறான். நண்பர்கள் வட்டம், புதிதாய் தொழில் ஆரம்பித்தல் என நிலைபெறுகிறது. இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான செண்பகம் பம்பாய்கு திருமணமாகி வருகிறாள். அவளின் கணவரிடம் அல்லல்படுகிறாள். பூலிங்கம் அவளை அவனிடமிருந்து மீட்டு புதிதாய் வாழ்வை தொடங்குகிறான். மிகவும் சாதாரண கதை மாதிரித் தோன்றினாலும் கதையோடு முழுவதுமாய் ஒன்றிப் போக வைக்கும் எழுத்து. நாஞ்சிலின் தனித் தன்மையும் அதுதான்.

என் பாட்டி எங்கள் பகுதியிலேயே நல்ல கதை சொல்லி. ஏராளமான நாட்டுப் புறக் கதைகளையும் இதிகாசக் கிளைக் கதைகளையும் தெரிந்து வைத்திருந்தாள். வெற்றிலை எச்சில் தெறிக்க எல்லா மாலைகளிலும் வீட்டு வாசலில் உட்கார்ந்து தெருக் குழந்தைகள் அனைவரும் படையெனச் சூழ்ந்திருக்க உரத்த குரலில் கதை சொல்லுவாள். அவளின் மகன் வயிற்றுக் கடைசிப் பேரன் என்பதால் மிகுந்த உரிமைகளோடும் பெருமிதங்களோடும் அவள் மடியில் புதைந்து கொண்டு கதை கேட்பேன். தமிழ் இலக்கியத்தில் இத்தகையதொரு பாட்டி- பேரன் மடிப்புதைவு உறவு கி.ராஜநாராயணனுக்கும் அவருடைய வாசகர்களுக்கும் நிச்சயம் இருக்கும். தமிழின் ஆகச் சிறந்த கதை சொல்லி கி.ராஜநாயணன்தான். இதை தமிழ் இலக்கிய அறிமுகமுள்ள அனைவரும் வழிமொழிவார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. கோபல்ல கிராமம்- கோபல்ல கிராமத்து மக்கள் –அந்தமான் நாயக்கர் இந்த மூன்று நாவலையும் ஒரே மூச்சில் வாசித்து பாட்டியின் அருகாமையை மீண்டும் உணர்ந்தேன்.

கோபல்ல கிராமத்தின் விடியல் - கோட்டையார் வீட்டின் சகோதரர்களின் அறிமுகம்-வழிப்பறி- கொள்ளையர்களை கோபல்ல கிராம மக்கள் எதிர் கொள்ளும் சாகசம்- இடை இடையே அக்கிரமத்தின் நீண்ட நெடிய வரலாறு என ஒரு தேர்ந்த கதை சொல்லி அடுக்கடுக்காய் கதைகளை உயிர்ப்பித்துக் கொண்டே போகும் மாயம் நாவலில் தொடர்ந்து நிகழும். கிராமங்களில் இயல்பாகவே உலவும் மிகைக் கதைகள், முனிக் கதைகள் படிக்கும்போதே பரவசத்தையும் புன் முறுவலையும் ஏற்படுத்தும். பெண் பிம்பங்கள் குறித்தான மிகு புனைவுகள், இயல்பாய் நடக்கும் காமம், உறவு மீறல், கள்ளம் எல்லாமும் அடுக்கடுக்காய் இக் கதைகளில் சொல்லப்படும்.

நாயக்கர் சமூகம் ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்த கதையை விலாவரியாகச் சொல்லி இருப்பார். காடுகளை அழித்து விளை நிலங்களை உருவாக்கியது, பசுக்களை கொண்டு விவசாயத்தைத் தழைக்கச் செய்தது, சமூக அடுக்குகளை உருவாக்குவதென நம் முன்னோர்களின் வாழ்வு கதைகளாய் விரியும். கோபல்ல கிராமத்து மக்களில் இந்தியச் சுதந்திரம், மக்களின் வாழ்வில் அரசாங்கத்தின் தாக்கம் எனவாய் வளர்ச்சியடையும். முழுக்க கரிசல் மண்ணின் வாசனையை இக்கதைகளின் வழியாய் நுகர முடியும். யதார்த்த வாதம், வட்டார வழக்கு போன்ற எழுத்து வகைமைகள் தமிழில் செழிக்க விதையாக இருப்பவர் கி.ரா. இவரை அடியொற்றியே ஏராளமான கரிசல் மண் சார்ந்த படைப்பாளிகள் உருவாகினர். கோவில் பட்டியிலிருந்து தமிழிலக்கியத்திற்கு செரிவான படைப்பாளிகள் கிடைத்தனர். கி.ரா ஒரு வாழும் வரலாறு.

பதின்மத்தின் இறுதியில் என்னை மிகவும் சுழற்றியடித்த நாவலாக தி.ஜானகிராமனின் மோகமுள் ஐ சொல்லலாம். பாலகுமாரன் பெண் பிம்பங்களிலிருந்து மெல்ல விடுபட்டு தி.ஜா வின் பெண் பிம்பங்களில் மாட்டிக் கொண்ட தருணம் அது. யமுனாவையும் பாபுவையும் மோகத்தீயில் எரிந்து போகும் மாமியையும் எனக்குள் வாங்கிக் கொண்ட தருணம் அது. யமுனா என்ற பெயர் கொண்ட பெண்ணையாவது பார்த்துவிட மாட்டோமா? எனப் பைத்தியமாய் திரிந்த காலம் அது. எழுத்து வாசிப்பவர்களை என்னவெல்லாம் செய்யும் என்பதை முழுக்க உணர்ந்தே வந்திருக்கிறேன். மோகமுள்ளின் கனவுத் தன்மை தந்த எழுச்சி தி.ஜா வின் புத்தகங்களை தொடர்ந்து தேட வைத்தது. பாலகுமாரனின் காயத்ரிகளை, ஸ்வப்னாக்களை, மரப்பசு அம்மிணி நிர்மூலமாக்கினாள். மரப்பசு அம்மிணிக்குப் பிறகு நிறமிழந்து போன பெண் பிம்பங்களை நினைத்துத் துக்கமாக இருந்தாலும் பதின்மம் முழுக்க பரவசத்தைத் தந்தவர்கள் என்கிற நன்றியும் எனக்கு எப்போதும் உண்டு. அம்மா வந்தாள், செம்பருத்தி, அன்பே ஆரமுதே, மலர் மஞ்சம் என தி.ஜா வின் நாவல்கள் அனைத்துமே நாவல்களின் ஒழுங்கமைவிற்கான உதாரணங்கள். தமிழ் நாவலின் வடிவத்தையே தி.ஜா ஒரு கட்டுக் கோப்பிற்குள் கொண்டு வந்தார்.

தி.ஜாவை வாசித்து முடித்த பின்பு லா.ச.ரா விற்குத் தாவினேன். இன்றைய மனம் பிறழ்ந்த எழுத்துகளுக்கு முன்னோடியாக லா.ச.ராவைச் சொல்லலாம். நிறைவேறாக் காமம், பால்யத்தின் மீதான ஏக்கம், முழுக்க கனவுப் பிரதேசமென லா.ச.ராவின் கதைக் களன் மாயத் தன்மைக்கு அருகாமையில் வருவது. லா.ச.ராவின் எனக்குப் பிடித்த சிறு நாவல் பச்சைக் கனவு மற்றும் கழுகு. அவரின் புகழ் பெற்ற படைப்பான அபிதா வின் மீது எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டெனினும் எழுதப்பட்ட வகையில் அபிதா ஒரு சவாலான படைப்புதான். கழுகு நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலேயும் ஒரு கவிதை வரும். நான் பற்றிய விசாரணைகள், தத்துவத்திற்கும் இருப்பிற்குமான போராட்டம், பெண், உடல், காமம் குறித்தான மிகைகள் என எல்லாமும் கலந்து கட்டிய தெறித்த எழுத்து லா.ச.ரா வினுடையது. சொற்களில் ஒரு வித லயமும் இசைத் தன்மையும் மிகுந்திருக்கும்.

அசோகமித்திரனை வந்தடைந்த போது சற்று நிதானத்திற்கு வந்திருந்தேன். அல்லது அசோக மித்திரன் இந்த நிதானத்தை வர வழைத்தாரா? என்பதும் தெரியவில்லை. உரத்து சொல்லுதலை, நெகிழ்வை, கரைதலை அசோக மித்திரன் சற்று நிதானப்படுத்துகிறார். எந்த வித மிகையுணர்ச்சியும் இல்லாத எழுத்து. மிகு கற்பனைகள், உவமை, உதாரணம், கனவு என எதுவுமே இல்லாத நேரடி முகத்திலறையும் எழுத்து. ஒரு வித மிகை மனதோடு இவரை வாசிக்க ஆரம்பித்த புதிதில் இவர் தந்த அப்பட்டம் சற்று எரிச்சலைக் கூட வரவழைத்தது. அமி யின் தண்ணீர் என்னை அசைத்துப் பார்த்த நாவல். கீழ் மத்திய தர வர்கத்தின் கிட்டத்தட்ட விளிம்பு நிலை வாழ்வின் அவலத்தை சன்னமான குரலில் சொல்லும் நாவல். சென்னையின் பொந்து குடித்தன வாழ்வை, தண்ணீர் பற்றாக்குறை அவலத்தை, மிகையே இல்லாது புகாரே இல்லாது போகிர போக்கில் சொல்லிப் போன நாவல். யமுனா, தாட்சாயணி போன்ற மிகை பிம்பங்களை கற்பனையில் சுகித்த மனது ஜமுனாவை வியர்வையும் சதையுமாய் எழுத்தில் கண்டபோது வெலவெலத்துப் போனது. என்னை நெடுநாட்கள் அலைக்கழித்த பிம்பம் தண்ணீர் ஜமுனாதான்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் வண்ண நிலவனை வாசித்தேன். வண்ண நிலவனுடைய கடல் புரத்தில் எப்போதைக்குமான பிடித்த நாவல். கம்பா நதி,ரெய்நீஸ் அய்யர் தெரு, எஸ்தர் என எல்லா வ.நி யின் படைப்புகளும் எனக்கு பிடித்தமானவைதாம் என்றாலும் கடல் புரத்தில் தனிதான். சில நாவல்களின் ஆரம்ப வரிகள் மனதில் அத்தனை அழுத்தமாய் பதிந்து போகும். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள் நாவலின் முதல் வரி, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் முதல் வரி, போலவே கடல் புரத்தில் ‘குருஸ் மிக்கேலுக்கு யாரையும் பிடிக்காது ‘என்கிற முதல் வரி. வண்ண நிலவன் குலசேகரப் பட்டிணத்தில் வாழ்வுச் சுழலின் நிமித்தம் சில மாதங்கள் சைக்கிள் கடை ஒன்றில் பணி புரிய நேர்ந்தது. அக்காலகட்டத்தில் மீனவர்களின் வாழ்வை மிக நெருக்கமாகக் காணும் வாய்ப்பும் கிட்டியது. அப்பாதிப்பில் உருவானதுதான் கடல் புரத்தில். மீனவர்களின் வாழ்வு குறித்தான மிக முக்கியமான பதிவாகவும் இந்நாவலைப் பார்க்கலாம். பிலோமி கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் துரதிர்ஷட முடிவும் மிகப்பெரும் சங்கடத்தைத் தந்தது. நாவல்கள் மூலமாக என்றும் வாழும் கதை மாந்தர்களில் இந்தப் பிலோமி முக்கியமானவள்.

தமிழில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை, அப்பட்டமான மொழியில் பேசிய முக்கியமான நாவல் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே. ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் இந்நாவல், மொழி அடிப்படையிலும், வடிவ அடிப்படையிலும் நம் சூழலின் புதிய திறப்பு. கந்தன் கதாபாத்திரத்தின் மூலமாக மரபான தமிழ் நாவலை சற்றே கலைத்துப் போட்டிருப்பார். இலக்கிய உலகம் பதிவு செய்யத் தவறிய, தினசரி வாழ்வில் நாம் காண மறுக்கும் மக்களின் வாழ்வை ஜி.நாகராஜன் ஆழமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருப்பார்.

இதையொட்டி பேசவேண்டிய இன்னொரு முக்கியமான நாவல் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி. மற்றும் இதன் இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால். சற்று வியப்பாக சொல்ல வேண்டுமெனில் தமிழில் இதைப் போன்ற ஒரு படைப்பு இன்னும் எழுதப்படவில்லை. காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஒரு படைப்பை எழுதிவிட்டு எந்தச் சத்தமும் சலம்பலும் இல்லாமல் ஒற்றைத் தனியறையில் வாழ்ந்து கொண்டு, மதுரை தினந்தந்தி அலுவலகத்தில் ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்த சிங்காரத்தை நினைத்தால் மேதமைத் தனத்தின் மீது மதிப்பு பன்மடங்காகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து உண்மையான கலைஞர்களை நசுக்கும் வாழ்வின் குரூரத்தின் மீதும் வெறுப்பு படராமல் இல்லை.

மலேசியாவின் பினாங்கு நகரத்தின் செட்டித் தெருவை, சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய INA படைகளின் சாகசத்தை தமிழில் சங்க இலக்கிய உரையாடல் சகிதமாய் படிக்க முடியும் என்பதே தமிழ் வாசகருக்கு மிகப்பெரிய உவகைதான். அப்படி ஒரு பெரும் வியப்பும் திகைப்பும்தான் புயலிலே ஒரு தோணி. இலட்சியவாத இளைஞனான பாண்டியன் மற்றும் அவன் சகாக்கள் லேவாதேவி வாழ்விலிருந்தபடியே ஐஎன் ஏ விற்கு ரகசியமாய் உதவுவது. ஜப்பான் மற்றும் சீனப் படைகளை எதிர்கொள்வது என முற்றிலும் புதிய களத்தை, புதுமாதிரியான எழுத்து நடையை புயலிலே ஒரு தோணி நமக்குப் பரிசளிக்கிறது. பினாங்கில் கொடிகட்டிப் பறந்த மதுரைச் செட்டியார்கள் வாழ்வும். பாண்டியனுக்கு ஏற்படும் மெல்லிய காதலும் நாவலிடையே உண்டு. இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால் இலட்சிய வாத மிகைகளும் சாகசங்களும் தீர்ந்து தத்துவத்தில் அடங்குவதை பதிவு செய்திருக்கும். தமிழின் பெரும்படைப்புகளைப் பட்டியலிட்டால் அதில் முதலிடம் புயலிலே ஒரு தோணிக்குத்தான்.

கொங்கு வட்டாரத்தின் வாழ்வினை களமாகக் கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.திருச்செங்கோடு பகுதியின் மொழியை, மக்களின் வாழ்வை, குறிப்பாய் சக்கிலிய இன மக்களின் பதிவுகளை தமிழில் நாவல் வடிவில் மிகச் சிறப்பாக பதிவு செய்தவர் பெருமாள் முருகன். இவருடைய ஏறு வெயிலும் கூளமாதாரியும் என் மனதிற்கு வெகு நெருக்கமான படைப்புகள்.

எண்பதுகளில் வீட்டு வசதி வாரியம் தமிழ் நாடு முழுவதும் விளை நிலங்களை அழித்து விட்டு வீடுகளைக் கட்டியது. எண்பத்தெட்டில் இவ்வாரியம் திருவண்ணாமலையில் என் வீட்டிற்கு சமீபமாகவிருந்த வயல்கள், கிணறுகள், தோப்புகள், சிறு சிறு குட்டைகள் எல்லாவற்றையும் அழித்து விட்டு மிகுந்த பரப்பளவில் வீடுகளைக் கட்டின. பறவைகளும், சிறுசிறு விலங்குகளும், என் போன்ற சிறாரும் இனி எங்கு போவது என திகைத்துப் போனோம். விவசாயிகள் அனைவரும் காடுகரைகளை விற்றுவிட்டு கிடைத்த பணத்தை குடித்தே அழித்து விட்டு, அதே வீட்டு வசதி வாரியம் கட்டும் கட்டிடங்களுக்கு சித்தாளாகப் போக ஆரம்பித்தனர். இந்த மாபெரும் அவலத்தை கண்கூடாகப் பார்த்திருந்ததால் பெருமாள் முருகனின் ஏறுவெயில் நாவல் என்னால் எப்போதுமே மறக்க முடியாத ஒரு நாவலாக மாறிப்போனது. விளை நிலங்களை விற்ற விவசாயின் சீரழிந்த வாழ்வுதான் ஏறுவெயிலின் கதை. வன்மம் தகிக்கும் வாழ்வின் உக்கிரத்தை நாவல் முழுக்கப் பதிவு செய்திருப்பார். இவருடைய மற்றொரு படைப்பான கூளமாதாரி சக்கிலிய குடி சிறார்களை முன் வைத்து எழுதப்பட்ட சிறப்பான நாவல்.

இதே வட்டார வழக்கில் எழுதப்பட்ட வா.மு.கோமுவின் கள்ளி யும் என்னளவில் முக்கியமான நாவலே. இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றத. இலக்கிய வடிவில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி. கற்பு, ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தை இவரின் கதை மாந்தர்கள் ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள். நள்ளிரவு, விடியல், முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி, பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது.

இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது. விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது. எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது. கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது.

புனைவுத் தளத்தில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். இவரின் கானல் நதி எனக்குப் பிடித்தமான நாவல். குள்ளச் சித்தன் சரித்திரமும் முக்கியமான நாவலே. கானல் நதி இசையை பின்புலமாக கொண்ட நாவல். தனஞ்செய் முகர்ஜி என்றொரு இசைக்கலைஞனின் இசை ஞானம், கல்கத்தா நகர வாழ்க்கை, சரயூ என்கிற பெண்ணின் மீது தோன்றும் நிறைவேறாக் காதல். மேதமைத் தனத்திற்கு பரிசாய் வந்து சேரும் பித்து என வழக்கமாய் யூகிக்க கூடிய தளம்தான் என்றாலும் யுவனின் புனைவு மொழி இந்நாவலின் தரத்தை உயர்த்துகிறது. பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு என நான்கு பாகங்களாக நாவல் பிரிக்கப்பட்டிருக்கிறது. மனதின் ஆழ்நிலைகளை, நுட்பமான சலனங்களை, அசைவுகளை, துல்லியமாய் இந்நாவல் பதிவு செய்திருக்கிறது.

எழுத எழுத போதாமை இருந்து கொண்டே இருக்கிறது. இன்னும் குறிப்பிட ஏராளமான படைப்புகள் உள்ளன. ஆனால் பதினைந்து பக்கத்திற்கும் மேலாக ஒரு இதழில் அடைந்து கொள்ள என்னவோ போல் இருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னும் சில முக்கியமான நாவல்களை பட்டியலாக மட்டும் குறிப்பிடுகிறேன். இது என்னுடைய சொந்த அரசியலுக்கு உட்பட்டதுதான்.

1. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
2. காதுகள் - எம்.வி. வெங்கட்ராம்
3. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா
5. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
7. சாயாவனம் - சா. கந்தசாமி
8. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
9. சோளகர் தொட்டி – ச.பாலமுருகன்
10. கருக்கு -பாமா
11. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
12. வெக்கை - பூமணி
13. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
14. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
15. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
16. பாய்மரக்கப்பல் – பாவண்ணன்
17. பாழி – கோணங்கி
18. செடல்- இமையம்
19. தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.
20. கொரில்லா – ஷோபா சக்தி
21. ரத்தஉறவு - யூமாவாசுகி
22. அளம் - தமிழ்செல்வி
23. அஞ்சலை - கண்மணி குணசேகரன்
24. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
25. கள்ளம் – தஞ்சை பிரகாஷ்.
26. பிளம் மரங்கள் பூத்துவிட்டன, ஒப்பந்தம் - வாசந்தி.
27. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி.
28. ஒரு மனிதனின் கதை - சிவசங்கரி.
29. மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பந்தயப்புறா - பாலகுமாரன்
30. நெடுங்குருதி,யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
31. பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம் – ஜெயமோகன்
32. ராசலீலா, ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா

தமிழ் நாவல் மரபு அதற்கே உண்டான கட்டமைவுகளோடும் அவ்வப்போது மீறல்களோடும் மிகச் சரியாகவே பயணிப்பதாக உணர்கிறேன். முன்னோடிப் படைப்பாளிகள் தொட்டுச் சென்றிருக்கும் உயரத்தை தாண்டுவதென்பது சம கால படைப்பாளிகளுக்கு மிகப் பெரும் சவால்தான்.

Tuesday, January 10, 2012

தமிழ் நாவல்கள்- ஒரு அழகியல் பார்வை பாகம் 1

தமிழ் சிறுகதைகள் எட்டிய உயரத்தை இன்னும் தமிழ் நாவல்கள் எட்டவில்லை என்பது ஒரு சாரரின் கருத்து. இதை முழுவதுமாகவே நிராகரிக்கிறேன். தமிழ் நாவலின் வரலாறு 130 வருடங்களைக் கடந்திருப்பினும் முதல் அறுபது வருடங்களில் எழுதப்பட்ட நாவல்கள் எண்ணைக்கையளவில் மிகவும் சொற்பமானவை. தமிழ் நாவலின் வளர்ச்சி என்று பார்த்தோமானால் அது 1940 திற்குப் பிறகுதான் சீரடைகிறது. ஆக கடைசி எழுபது வருடங்களில் தமிழ் நாவல் சூழலில் நிகழ்ந்திருப்பது நிச்சயம் புலிப் பாய்ச்சல்தான்.

படைப்பாளியாய் எனக்கான தேர்வுகள், அரசியல் பார்வைகள் உண்டெனினும் அவற்றின் தாக்கமில்லாது ஒரு தேர்ந்த வாசகனாய் என் வாழ்வோடு பயணித்த நாவல்களில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதை ஒரு விமர்சனக் கட்டுரையாக எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பு மனதின் அனுபவங்களாக எழுதுவதையே விரும்புகிறேன்.

சம காலத்தில் வாசிப்பு என்பது படைப்பிற்கு நிகரான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. படைப்பையும் வாசகரையுமே பிரதானமாகக் கொள்ள வேண்டிய, படைப்பாளியையே தன் படைப்பின் இன்னொரு வாசகராக மாற்றக்கூடிய சூழல் இது. இச்சூழலின் சுதந்திரத்தைக் கணக்கில் கொண்டு படைப்புகளை முன்னிறுத்தியே இந்தக் கட்டுரையை எழுத விரும்புகிறேன். காலகட்டம், தர வரிசை போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாது எனக்குப் பிடித்த நாவல்களைப் பகிரும் கட்டுரைதான் இது. ஆகவே எது முதல்? எது இரண்டாவது? என்கிற தொணி இதில் கிடையாது. கால வரிசையையும் கணக்கில் கொள்ளாமல் வெறும் மனப்பதிவாக மட்டுமே இக்கட்டுரையை அனுகக் கோருகிறேன்.

ந்த வருடத்தின் நடு வாக்கில் பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை யை வாசித்து முடித்தேன். சென்ற வருட இறுதியில் வாசிக்க ஆரம்பித்த ஆயிரம் பக்க நாவல் இது. ஒப்பீட்டளவில் இதுவரைக்குமான என் வாசிப்பில் மிக அதிக அளவு காலத்தை எடுத்துக் கொண்ட நாவலும் இதுதான். என்னை ஈர்த்த முதல் விஷயமாகச் சுட்ட விரும்புவது இக் கதை இயங்கும் தளம். அந்நிய நிலப்பிரதேசங்களில் துவங்கி, வரலாற்றுப் பயணமாய் இந்தியாவில் நுழைந்து, தொன்மங்களில் முடிவடையும் நெடிய பயணம்தான் இதன் களம். படைப்பாளி தான் வாழ்ந்த, தான் நன்கு அறிந்த, தளங்களில் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற என் எண்ணத்தையும் இந்நாவல் மாற்றியமைத்தது. படைப்பு மனதின் எல்லைகள் என நானாகவே நிறுவிக் கொண்ட பல விஷயங்களையும் தாண்டவராயன் கதை தகர்த்தது.

பதினாறாம் லூயி பிரான்சை ஆண்டக் காலக் கட்டத்தில் முதற்கட்டக் கதை சொல்லப்படுகிறது. பல்வேறு வகையான புதிய நிலப்பிரதேசங்கள் துல்லியமாகவும், புனைவாகவும், மாய யதார்த்தமாகவும் நாவலின் நெடிய வழியெங்கும் பதிவாகியிருக்கிறது. மதங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் யாவற்றையும் கதையோடு பின்னிப் பிணைத்திருப்பதும் ஒரு முழு படைப்பிற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது. ட்ரிஸ்ட்ராம் சதுப்பு நிலப் பெண்ணான எலினார் மீது காதல் கொள்வது- ஒரு மாயக் காட்டில் அவர்களுக்குள் நிகழும் கலவி- அதன் தொடர்ச்சியாய் கண்களை இழந்து விநோத நோய்மையால் பீடிக்கப்படும் எலினார்- அவள் நலம்பெற தேவைப்படும் சிகிச்சைக்காக ட்ரிஸ்ட்ராம் மேற்கொள்ளும் சாகஸப் பயணம் இதான் தாண்டவராயன் கதை. இந்தியாவில் நுழையும் ஆங்கிலேயர்களுக்கு இந்திய செழிப்புகளின் மீது படரும் பேராசை. இந்தியத் தொன்மை வாழ்வு யாவற்றையும் சாக்த, பெளத்த மதப் பின்னணியோடு நிறுவி இருப்பதும் இந்நாவலின் மற்றுமொரு தனித்துவம்.

பா.வெங்கடேசனின் மொழி, அவரின் வரலாறு மற்றும் நிலப்பிரதேசங்களின் மீதான கூர்ந்த அவதானிப்பு இந்நாவலைக் கச்சிதமாய் எழுத வழிவகுத்திருக்கிறது. மேலும் இக்கதையை நிகழ்த்திக் காட்டத் தேவையான அறிதலும், அதற்கான உழைப்பும் வாசிப்பவர்களை பிரம்மிக்கச் செய்து விடுகிறது. இந்நாவலின் அடிநாதம் தீராக் காதல் என்பதாகத்தான் இருக்க முடியும். காதல் மட்டுமே தொன்மங்களில் துவங்கி, நவீனத்தில் கிளைத்து மாயங்களில் திளைக்க முடியும். தாண்டவராயனில் நிகழ்வதும் அதுதான். இந்நாவலுக்கான விரிவான விமர்சனத்தை எழுதி விட வேண்டும் என்கிற பேராசை எனக்கு உண்டு. அடுத்த வருடத்திலாவது அதைச் செய்துவிட வேண்டும்.

சமீபத்தில் படித்த சுவாரசியமான தமிழ் நாவல் தமிழ்மகனின் வெட்டுப் புலி. இரண்டே நாளில் படித்து முடித்த வேகம், நாவலில் இருக்கிறது. திராவிடத்தின் மீதிருக்கும் என் விருப்பமும், பெரியார் சார்புத் தன்மையும் இந்த நாவலை விருப்பத்தோடு படிக்க உதவியிருக்கலாம். தீப்பெட்டி அட்டையிலிருக்கும் சித்திரத்தின் பின்புலம் தேடிப் பயணிப்பது என்பது எத்தனை சுவாரசியமான ஒன் லைனர்! ஒரு நாவல் இம்மாதிரிப் புள்ளியில் துவங்குவது பெரும்பாலான வாசகர்களை ஈர்க்கும். நாவல் உத்தியளவில் இது பிரமாதமான அனுகுமுறை. சரியானத் தகவல்களை, தமிழகத்தின் வரலாறை, புனைவோடு இணைத்துச் சொல்லியிருப்பது இந்த நாவலின் இன்னுமொரு சிறப்பு. புனைவும் வரலாறும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருப்பதாகத்தான் உணர்ந்தேன். எண்பதுகளில் நாவல் தடதடவென முடியும் எல்லையை நோக்கி நகர்ந்தாலும் இதற்கு மேல் விலாவரியாக எழுதத் தேவையில்லை என்பதே என் எண்ணமாகவும் இருக்கிறது.

இலட்சுமண ரெட்டி -குணவதி, தியாகராசன் - ஹேமலதா இவர்களின் பகுதி என்னை வெகுவாகத் தொந்தரவு செய்தது. குறிப்பாய் ஹேமலதா கதாபாத்திரத்தின் கடைசி கால மாற்றங்களும் அதை தியாகராசன் எதிர்கொள்வதும் மீண்டெழுதலின் யதார்த்தம். மேலதிகமாய் இந்த நாவல் முன் வைக்கும் கொள்கைகளின் தேய்வு என்னை அதிர்ச்சியடைவே வைத்தது. ஒரு மாற்று இயக்கமும் அதன் தலைவர்களும் நாளையடைவில் எவ்வாறு பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளத் தேய்வடைகிறார்கள் என்பதிலிருந்து, அவர்களின் சுயலாபம், குடும்ப நலன் என எல்லாப் புள்ளிகளையும் நேரடியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. அண்ணாவிலிருந்து அழகிரி வரைக்குமாய் ஒருவரையும் விடாமல் விமர்சித்திருக்கிறது. தலைவர்களின் வாழ்வைத் தவிர்த்து சாமான்யர்களின் நம்பிக்கைகள், கொள்கைப் பிடிப்புகள் நிறமிழந்து போவதையும் இந்த நாவல் சரியாகவே பதிவித்திருக்கிறது. தீவிரக் கடவுள் மறுப்பாளனான தியாகராசன் ஒரு கட்டத்தில் அன்னையைத் தஞ்சமடைவது எத்தனை பெரிய அவலம்! தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் இரண்டறக் கலந்தது. அதையும் நாவல் ஒரு பிடிபிடித்திருக்கிறது. பாலச்சந்தரிலிருந்து ரஜினிகாந்த், மணிரத்னம் என எவரையும் விட்டுவிடாத சரித்தன்மையும் நாவலில் இருக்கிறது. திராவிடப் பின்புலத்திலிருந்து வந்த பத்திரிக்கையாளன் நடிகையின் பேட்டிக்கு பணம் பெறும் நிலைக்குத் தள்ளப்படும் காலத் தேய்வையும், இயக்கத்தை உருவாக்கியத் தலைவர்களின் சம காலத் தோற்றத்தையும் சரியாய் பதிவித்திருக்கிறார். புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு சமகால அரசியலைக் கடுமையாய் விமர்சிப்பதும் இந்த நாவல் முழுக்க நிகழ்ந்திருக்கிறது

இந்திரா,அண்ணா,எம்ஜிஆ​ர், கருணாநிதி என எல்லோர் மீதும் கதையில் வரும் பாத்திரங்கள் கடுமையான விமர்சனங்களை உரையாடலாகச் சொல்லிவிட்டுப் போகின்றன.நெருக்கடிகால மிசாக் கடுமைகளுக்கு காரணமாக இருந்த இந்திராவுடன் அரசியல் கூட்டு வைப்பதை வேதனையாய் பகிர்ந்திருக்கும் ஒரு பத்தி, அரசியல் சதுரங்கத்தின் சாணக்ய புத்தியைச் சரியாய் துகிலுரித்திருந்தது.எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு.

இந்த வருடத்தில் படித்த இன்னொரு மிகச் சிறந்த நாவல் பிரான்சிஸ் கிருபா வின் கன்னி. கவிஞர்கள் நாவலெழுதும் போது மொழி கூடுதல் சிறப்பாகிவிடுகிறது. கன்னியில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் அதன் மொழிக் கட்டுமாணம். தவிர இந்நாவலில் பதிவாகியிருக்கும் மென் மனம். அதன் மிக மிக அந்தரங்கமான நுட்பம். எதோ ஒரு புள்ளியில் சட்டெனத் தலைகீழாகும் மனதின் விநோதம். இவை எல்லாமும் இந்நாவலில் உண்டு. சந்தனப் பாண்டியின் மனப் பிறழ்விற்கு காரணமாக அமலாவைச் சொல்வதா? சாராவைச் சொல்வதா? அவனின் சிக்கலான் பேரன்புதான் எல்லாவற்றிற்குமான காரணம் என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். மதங்கள்,சம்பிரதாயங்கள் சாதாரணர்களின் வாழ்வில் நிகழ்த்தும் வன்முறையாகக் கூட இந்நாவலை வாசித்துப் பார்க்கலாம். படைப்பாளியை நன்கு அறிந்திருந்தால் நாவலின் வடிவ அமைப்பை கச்சிதமான ஆட்டோ பிக்சன் எனவும் வரையறுக்கலாம். தேவதேவனும், தாடிக்கார தாத்தனும், கடலும் ,நண்டும் பால்யக் கால அத்தைப் பெண்ணும், பைத்திய வெறுமையும், மிகப்பெரும் வாதையும் நாவல் முழுக்கப் பதிவாகி வாசகர்களை கலைத்துப் போடுகிறது. புனைவிற்கும் நிஜத்திற்குமான ஊடாட்டத்தில் கலங்கித் திரிவது படைப்பு மட்டுமல்ல வாசகரும்தான்..

சில படைப்புகளை எங்காவது யாராவது சொல்லக் கேட்டிருப்போம். பின்பு அதைத் தேடியும் கிடைக்காமல் போனால் அதன் மீது மற்ற எல்லாவற்றையும் விட அதிகமான ஈர்ப்பு இயல்பாகவே படர்ந்து விடும். சம்பத்தின் இடைவெளி எனக்கு அப்படி ஒரு அனுபவத்தைத் தந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாய் தேடி பிறகு நண்பரொருவரின் முயற்சியால் ஒளி நகலாக இந்த நாவல் என் கைக்குக் கிடைத்தது. மரணத்தின் வாசனையை முழுக்க வாசிப்பவர்களால் நுகர இயலும். சாவு பற்றிய கேள்வி, சாவு பற்றிய வரையறைதான் இந்த நாவல். கதை என தனியாய் சொல்ல இதில் ஒன்றுமில்லை. சிக்கலான மனம் ஒன்று சாவைத் தொடர்ச்சியாக சிந்திக்கிறது. சாவை வார்த்தையாக்கி விட அது வாழ்வைப் போராட்டமாக்குகிறது.

திரும்பத் திரும்ப வாசிக்கும் நாவல்களில் இது முக்கியமானது. ஒரு வகையில் இந்த நாவல் ஒரு வித போதாமையில் முடிந்து போகிறது. மேலும் அது அப்படித்தான் முடியும். சாவு என்பதை இதுதான் என யாராலாவது அத்தனை எளிதில் வரையறைத்து விட முடியுமா என்ன? சம்பத்தைப் பொறுத்தவரை, சம்பத் தேடிக் கண்டடைந்த வரை. அஃதொரு இடைவெளிதான். அவரின் தேடுதல்தான் இச்சிறுநாவல். தத்துவமும், யதார்த்தமும், நவீன வாழ்வின் வெறுமையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நாவலிது. சுருக்கமாக மரணத்தின் மீதான தியானம் என்கிறார் நாகார்சுனன். கதையின் பிரதான பாத்திரம் தினகரன் என்றாலும் அதை சம்பத்தாகப் புரிந்து கொள்ளும் திறப்பும் வாசகருக்கு இருக்கிறது. சம்பத் தினகரனைப் போலத்தான் வாழ்ந்தார் என அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

காதல் நிமித்தமான தோல்வியொன்றில் மொட்டைமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள விழைந்த நொடிக்கு முன்னதாக தினகரன் தரையில் தன் சடலத்தைப் பார்க்கிறான்.பயந்து பின் வாங்கி அதைப்பற்றியே யோசிக்கும்போது அந்நொடியில் நிகழ்ந்தவைகளை நிசப்தம் என அர்த்தப்படுத்திக்கொள்கிறான்.பின் ஒன்றிலிருந்து ஒன்றாக சாவு புதுப்புது பரிமாணங்களை அவனுள் நிகழ்த்துகிறது.
1.சாவு என்பது நிசப்தம்,தாங்கொனா நிசப்தம்.
2.சாவு என்பது வாழ்விற்கு கருணா சமுத்திரம்.
3.சாவு என்பவர் கண்காணிப்பாளர்.
4.சாவு மனிதர்களுக்காக காத்துக்கிடக்கிறது. காத்திருத்தல் என்பதைக் கண்டறிந்ததும் தினகரன் சிறிது சந்தோஷப்படுகிறான். அந்த எண்ணமும் நெடுநாள் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.பின்பொரு தருணத்தில் சாவென்பது இடைவெளி என அவனுக்குப் புலப்படுகிறது.சுருக்கு கயிற்றின் முடிச்சினுக்கு இடையுள்ள இடைவெளி, கழுத்தை நெருக்கி சாவினுக்கு காரணமாய் அமையும்.ஆக சாவென்பது இடைவெளிதான் என தீர்மானமாய் நம்புகிறான். மகிழ்கிறான். என்னால் குழம்பிப் போகத்தான் முடிந்தது.

தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் தொந்தரவு செய்த எழுத்துக்களுள் முதலாவதாக கோபி கிருஷ்ணன் எழுத்துகளையே குறிப்பிட விரும்புவேன். அவர் வறுமையில் வாடினார். அங்கீகாரமில்லாமல் செத்துப் போனார் போன்ற தனிப்பட்ட விஷயங்களால் உருவான மிகை அல்ல இது என்பதையும் தெளிவாகவே குறிப்பிட விரும்புகிறேன். கலைஞன் எப்போதும் கலைஞன்தான். வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அவனை என்ன செய்துவிட முடியும்? கோபியின் எழுத்துக்களில் தெரிக்கும் அப்பட்டமான நேர்மை என் ஆன்மாவை நேரடியாய் தொடுகிறது. விமர்சனத்தையே வைக்க முடியாமல் போகும் எழுத்து இவருடையதுதான். கோபியின் டேபிள் டென்னிஸ், உள்ளேயிருந்து சில குரல்கள் இவ்விரண்டையும் நாவல் வடிவில் வைத்துப் பேசமுடியும். இரண்டுமே அதனதன் தளத்தில் உச்சமானவை. காமத்தையும், இயலாமையையும் மனப்பிறழ்வையும் இவரால் துணிவாகவும் நேர்மையாகவும் எழுத முடிந்திருக்கிறது.

உள்ளேயிருந்து சில குரல்கள் நாவலில் முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றின சமூகத்தின் தவறான புரிதலினை களையும் பொருட்டு ஒரு மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வார்கள்.அய்ம்பத்தி ஒன்பது மன நிலைகள் தனித்தனியாய் சொல்லப்பட்டிருக்கும். 19 காட்சிகளையும் 59 நிலைகளையும் இன்றும் தொடரும் பழமையெனும் தலைப்பில் ஆறு தனித்தனி குறிப்புகளும் சில செய்திகள் சிந்தனைகள் எனும் தலைப்பில் எட்டு குறிப்புகளும் தொகுக்கப்பட்டிருக்கும்.ஒரு ஆராய்ச்சி நூலின் வடிவத்திலும், பல சிறுகதைகளின் வடிவத்திலும், மொத்தமாய் பார்த்தால் நாவலின் வடிவத்திலுமாய் இப்படைப்பை பல விதங்களில் பொருத்திப் பார்க்கலாம்.என்னைக்கேட்டால் கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பேன்.

ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி சுவாதீனம்,சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சிய கனவு என்கிறார்.மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை எனும் கோபி இப்படைப்பில் அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக கையாண்டதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறார்.

இந்தப் புத்தகத்தை படித்த முடித்தவுடன் இதில் சொல்லப்பட்டிருக்கும் பல நிலைகளில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.என் குணாதிசயங்களை ஒத்த பல நண்பர்கள் இப்புத்தகத்தில் காணக் கிடைத்தார்கள்.என்னுடைய அபார போலித்தனத்தின் காரணத்தால் சமதளத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் அல்லது அது போன்ற ஒரு பிம்பத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.அப்படி ஒரு போலி பிம்பத்தை உருவாக்க முடியாதவர்களை சமூகம் ‘பைத்தியம்’ என்கிறது.

நாவலில் சொல்லப்பட்டிருக்கும் 59 நிலைகளில் வரும் எல்லா மனிதர்களின் அடிப்படைப் பிரச்சினையும் பயம்தான். வாழ்வைப் பற்றின பயம்.சமூகத்தினை பற்றின பயம்.அடுத்தவர்களின் மதிப்பீடுகள் பற்றிய பயம். கட்டமைக்கப்பட்டவைகளின் மீதான பயம். புனிதங்களை மீறுவதன் பயம். புனிதங்களாய் இல்லாமல் போனதின் பயம். ஒருகட்டத்தில் மிகுந்த பயங்கள் தாங்காது, தன்னைக் காத்துக்கொள்ளும்பொருட்டு,வன்முறையாளர்களாக சடுதியில் மாறிப்போகிறார்கள் அல்லது சந்தேகிக்கிறார்கள்.தொடர்ச்சியான சந்தேகித்தல் வினோதமான நடவடிக்கைகளுக்கு அவர்களை உட்படுத்துகிறது.சில சந்தேகங்கள் கொலையிலும் சில சந்தேகங்கள் தற்கொலையிலும் முடிந்துபோகின்றன.

உச்ச மனப் பிறழ்வில் சிதறலாய் கொட்டப்பட்ட வார்த்தைக் கோர்வைகள்தான் டேபிள் டென்னிஸ். காமத்தில் உள்ள பால் வேறுபாடுகளைக் களைவது முதல், அன்பை உறவு எனும் விலங்கிட்டுக் கட்டி வைப்பது வரை சராசரி வாழ்வின் எல்லா முரண்களையும் டேபிள் டென்னிஸ் தொட்டுச் செல்கிறது. “ஜான்ஸி உஷாவுக்குத் தெரிந்துவிட்டது.நடுவிலேயே உருவி எறிந்துவிட்டாள்.தங்கள் பொச்சில் மீதியை முடித்தூக் கொள்ள வேண்டுமாம்.வாருங்கள் ஜான்ஸி,தொலைதூரம் சென்று தோழமை வாழ்வைத் துவங்குவோம்.ஸ்தோத்திரம் ஜான்ஸி.தங்கள் கணவரும் உடன் வரலாம்.அவர் என் தோழர்”

எனும் மனதை எப்படிப் பார்ப்பது?

(தொடரும்)

இந்தக் கட்டுரை பண்புடன் இணைய இதழுக்காக எழுதப்பட்டது. அங்கும் வாசிக்கலாம்

Sunday, January 1, 2012

தமிழ் சினிமா 2011 : பத்து சிறந்த படங்கள்

கடந்த வருடத்தின் சிறந்த பத்து படங்களை தர வரிசையின் அடிப்படையில் கீழே கொடுத்துள்ளேன்

1.ஆரண்ய காண்டம்
2.ஆடுகளம்
3.அவன் இவன்
4.மயக்கம் என்ன
5.யுத்தம் செய்
6.எங்கேயும் எப்போதும்
7.மெளன குரு
8.அழகர் சாமியின் குதிரை
9.வாகை சூட வா
10.மங்காத்தா

இவை குறித்து சற்று விரிவாகவும் பார்க்கலாம்.

2011 ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடம்தான். பத்து படங்களை சமரசம் செய்து கொள்ளாமல் தேற்றி விட முடிந்தது. கடந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக ஆரண்ய காண்டம்படத்தைச் சொல்லலாம் தமிழின் முதல் neo-noir படம். தமிழின் முதல் black humor படம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகக் கூடிய ஏராளமான முதல் தன்மைகள் படத்தில் இருந்தன. நீளமான, சாவகாசமான காட்சிகள். முடிவுகளில் ஒளிந்திருக்கும் விபரீதம் அல்லது விபரீதத்தில் துவங்கி புன்னகையில் முடியும் காட்சியமைப்பு. இவ்வகை திரை மொழி தமிழிற்குதான் புதிதே தவிர ஹாலிவுட்டில் மிகவும் பழைய உத்திதான். இவ்வகைமையில் quentin tarantino பெயர் போனவர். இவரின் எல்லாப்படங்களுமே கிட்டத்தட்ட இப்படித்தான்.

தமிழின் ப்ளாக் காமெடி படத்திற்கான உதாரணமாய் மும்பை எக்ஸ்பிரஸ்ஸை சொல்ல வேண்டிய தர்மசங்கடத்திலிருந்து ஆரண்ய காண்டம் நம்மை காப்பாற்றிவிட்டது. ஒரு நாட்டின் மொழியோ, இன்ன பிற சமாச்சாரங்களோ நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு தேர்ந்த சினிமா காணாமல் போக செய்துவிடுகிறது. ஆரண்ய காண்டமும் தேர்ந்த சினிமாக்களின் பொது மொழியில் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரராக வரும் காளையன் – சோமசுந்தரம்தான். ஒரு கேங்க்ஸ்டர் படத்தில் இப்படியொரு கதாபாத்திரம் ஆச்சர்யப்பட வைத்தது. “சாராயம் வாங்கிக் கொடுத்தவன் சாமி மாதிரி”யில் துணுக்குற வைத்து “ஒரு ஜமீன்னு கூட பார்க்காம அடிச்சிபுட்டீங்க”ல் நெகிழ வைத்து “நீயும் அப்படிச் சொல்லாதடா வெள்ள குஞ்சி” யில் கரைந்து போக வைத்துவிட்டார். படு புத்திசாலித்தனமான திரைக்கதை, உறுதுணையாய் இசை, உயிரோட்டமான கதாபாத்திரங்கள் எனஆரண்ய காண்டம் ஒரு முழு சினிமாவிற்கான உத்திரவாதம்.

ஆடுகளம்


இந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தேசிய விருது உட்பட ஆறு விருதுகளைக் குவித்த படம். கோழிச் சண்டை பின்புலத்தில் நிகழும் துரோகம் வன்மம் யாவற்றையும் படு யதார்த்தமாகவும் கச்சிதமாகவும் பதிவு செய்த படம். யதார்த்தப் படங்கள் வெளித்தோற்றங்களை மட்டுமே, பாவணைகளை மட்டுமே பதிவு செய்யாமல் வாழ்வின் ஆழம் நோக்கியும் நகர வேண்டும். சாதியம் பின்னிப் பிணைந்து கிடக்கும் நம் வாழ்வை விமர்சனங்களோடு பதிவிப்பது அத்தனை எளிதான காரியமில்லை. கமலஹாசன்களால் மெனக்கெடப்பட்டு துதிபாடத்தான் முடிந்ததே தவிர, சாதியத்தின் வன்மத்தை தொட முடியாமலேயே போனது.

ஒரு விளையாட்டுப் பின்னணியில் சாதியத்தின் வன்மங்களை மிக நேரடியாகவும் தெளிவாகவும் பதிவித்ததில் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. ஆடுகளம் வெண்ணிலா கபடிக் குழுவின் நேரடிச் சாடலை, வீரியத்தை எட்டவில்லை எனினும் ஸ்தூலமாக அதை சரியாய் முன்னெடுத்திருக்கிறது. சாதியத்தின் வழி உருவாகும் கெளரவம் என்பதைக் காக்க வேண்டி, மனிதர்கள் நடத்தும் போராட்டமாகத்தான் இப்படத்தைப் பார்க்கிறேன். இறந்து போன கணவனின் கெளரவத்தை மகன் காப்பாற்றாமல் போய்விடுவானோ எனப் புலம்பும் தாய்கிழவி - அம்மா சாவதற்குள் ஒரு முறையாவது சேவற் சண்டையில் ஜெயித்து கெளரவத்தை நிலைநாட்டி விட துடிக்கும் மகன்- பல வருடங்களாய் சேமித்து வைத்திருந்த பெயர், தான் வளர்த்துவிட்ட சீடனாலே மெல்லத் தேய்வதைப் பொறுக்கொள்ள முடியாத குரு - எல்லாத் தவறுகளையும் தன் மீது சுமத்திக் கொண்டு குருவின் கெளரவத்தைக் குலைக்காமல் ஊரை விட்டு வெளியேறும் சீடன். ஆக இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் இன்னொருவரின் கெளரவத்தை அல்லது பிறரால் கட்டமைக்கப்பட்ட தன் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகின்றன. சாதி இந்தக் கதாபாத்திரங்களினூடே மெல்லிதாய் படந்திருப்பதையும் இயக்குனர் நுட்பமாய் பதிவு செய்திருக்கிறார்.

பொல்லாதவன் தந்த வெற்றியினால் அதே திரைக்கதை உத்தியை ஆடுகளத்திலும் வெற்றிமாறன் பயன்படுத்தி இருக்கிறார். ஒரு கதையை எல்லா வகையிலும் சரியாக சொல்ல மெனக்கெடும் உழைப்பும் ஆய்வுகளும் பாராட்டப்பட வேண்டியவை. வெற்றிமாறனுக்கு அது கிடைத்தது.

அவன் – இவன்.
பாலாவின் திரைப்படங்கள் நாயக வழிபாடு என்பதிலிருந்து விடுபடாதவைதாம் என்றாலும் வழக்கமான வெகுசன நாயகத் தன்மைகளிலிருந்து விலகியவை. முரட்டுத்தனமான,ரெளத்ரமான,அன்பை வெளியில் காட்டிக் கொள்ளாத, அன்பிற்காக ஏங்குகிற,நன்றி உணர்வும் விசுவாசமும் மிகுந்த பாலாவின் நாயகர்கள் மிக அழுத்தமான தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துவதில் வியப்பேதுமில்லை. தமிழ் சினிமாவில் பாலாவிற்கு நான் மிக முக்கியமான இடத்தை தர விரும்புவதற்கு காரணம் அவர் படங்களில் இருக்கும் அசல் தன்மைக்காகத்தான். வேறெந்த மொழிப் படங்களின் பாதிப்பும், இயக்குனர்களின் சாயலும் பாலாவிடத்தில் இல்லை. அவருக்கு அவரின் சாயல்கள்தாம் பிரதானம். பாலாவின் நாயகர்களைப் போலவே பாலாவின் திரையாக்கமும் மிகவும் தனித்தன்மையானது. கதாபாத்திரங்கள், அவற்றின் சூழல் இந்த இரண்டையும் உருவாக்க அதிகம் மெனக்கெடும் பாலா தொழில்நுட்பம், திரைக்கதை உத்தி போன்றவைகளை நம்புவதில்லை. நேர்கோட்டில் சொல்லப்படும் வழக்கமான திரைமொழிதான் என்றாலும் கச்சிதமான பாத்திரப் படைப்புகளின் மூலமும் சம்பவாமி யுகே யுகே ஸ்டைல் அழித்தொழிப்புகள் மூலமும் பாலாவின் படங்கள் அசாதாரணத் தன்மையை அடைகின்றன.

எஸ்.ராமகிருஷ்ணின் நெடுங்குருதி நாவல் - வேம்பலை கிராமத்தை நினைவுபடுத்தும் சூழல். திருட்டைத் தொழிலாகக் கொண்ட மக்கள், பெண் சாயல் கொண்ட ‘டோங்கிரி’ துள்ளலான ‘வட்ரூபி மண்டையன்’ என சுவாரசியமான மாற்றுத் தாய் சகோதரர்கள். மொழித் திருகல் இல்லாத அச்சு அசலான மனிதர்கள், விசுவாசமாய் இருக்க ஒரு ஹைனஸ் அவரின் கோரமான சாவு, இறுதியில் சூரசம்ஹாரம். சுபம். பாலாவின் அடிநாதம் இவ்வளவுதான். சூழலையும் ஆட்களையும் மாற்றிப்போட்டால் நந்தாவோ பிதாமகனோ அவன் – இவனோ வந்துவிடும். ஆனால் ஒவ்வொரு படைப்பிலும் இருக்கும் கச்சிதம்தான் பாலா. ஜி.எம்.குமாரின் குரூரமான சாவிற்கு அழுத்தமான பின்னணி இல்லை என்பதுதான் படத்தின் மீதான என் ஒரே பிராது. மற்றபடி படத்தின் சிறந்த அம்சமாக எனக்குத் தோன்றிய, உரையாடல்களிலேயே மனம் திளைத்துக் கொண்டிருந்தது. சாம்பிளுக்கு ஒன்று

”திங்கிறது பேல்றது பேல்றது திங்கறது இதே வேல இவனுக்கு”
…..

‘மாவு மாதிரி போவுதுமா”

”போவட்டுமேடா அதையெடுத்து வந்திருக்கிறவங்களுக்கு ரொட்டியா சுட்டு தர முடியும்.”

இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வசனம் எழுதப் போய் எதை மாற்றினார்கள்? அல்லது எந்த வகையில் தம் எழுத்தாளுமையை நிரூபித்தார்கள்? என்கிற பரவலான கேள்விகளுக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் அவன் இவன் பட வசனம் நல்லதொரு பதில்.

மயக்கம் என்ன
பாலா, மிஷ்கின் வரிசையில் எனக்குப் பிடித்த இன்னொரு இயக்குனர் செல்வராகவன். இந்த மூவருக்குமே திரை மொழியில் தனி பாணி உண்டு. எங்கள் படம் இப்படித்தான் அல்லது ஒரு கதையை இப்படித்தான் சொல்வோம் என்பது போன்ற தனித்தன்மை இந்த மூவருக்குமே உண்டு. தனக்கான ஒரு பாணியை உருவாக்கிக் கொள்வதில் தவறேதுமில்லை. அந்த பாணியை எந்த அளவிற்கு உயிர்ப்பாய் வைத்துக் கொள்ள முடியும் என்பதில்தான் ஒரு படைப்பாளியின் இருப்பு அடங்கியிருக்கிறது. மயக்கம் என்ன விமர்சன அடிப்படையில் மிகவும் சராசரிப்படம். ஆனால் இந்தப் படத்தை உயிர்ப்பிப்பது செல்வாவின் திரையாக்கம்தான் என்பதில் சந்தேகமே கிடையாது. செல்வராகவனின் தனித்தன்மைகள் என்ன என்பது குறித்து யோசித்தால் ஒரு பட்டியலையே தயார் செய்து விடலாம்

1.சுய சரிதைத் தன்மை : Self narration களில் இருக்கும் ரகசியத் தன்மை அலாதியானது. இயக்குனரின் சுயசரிதையாகவும் பிரதான கதாபாத்திரத்தின் சுயசரிதையாகவும் பார்க்க முடிகிற இரண்டு திறப்புகள் இருக்கும்.

2.கதாநாயகிகள்: திறமையானவர்கள்,கனிவானவர்கள், தைரியமானவர்கள், ஏற்கனவே ஒரு காதலனைக் கொண்டிருப்பவர்கள். சராசரி ஆண் புனைந்து கொள்ளும் தேவதைகளின் நிஜநிழல் வடிவங்கள்

3.கதை : கதாநாயகி முதல் காதலைத் துறந்து இரண்டாவதாய் குறுக்கிடுபவனின் மீது சலனப்படுவாள். அவனின் பலகீனத்தை இரசிப்பாள். அவனை நிஜமாய் நேசிப்பாள். அவனின் போராட்டங்களை, இயலாமைகளை எளிதாக்கி அவன் இலக்கை அடைய உறு துணையாய் நிற்பாள். காதல் கொண்டேன், 7ஜி, மயக்கமென்ன மூன்று படங்களின் கதையும் இதுதான். களம்தான் வெவ்வேறு. புதுப்பேட்டையிலும் ஆயிரத்தில் ஒருவனிலும் இதே பெண் சாயல்கள் இருந்தாலும் இரண்டின் தளமும் வேறு.

4.மழை நடனம், நெருப்பு நடனம்

5.காமம் குறித்தான அச்சமின்மை, முடிந்தவரை காமத்தை நேரடியாய் அணுகுவது

6.மனப் பிறழ்வு அல்லது பித்து நிலை

7.போதை மற்றும் கொண்டாட்டம்

காமம், பெண், போதை இவை சலிக்காத விஷயங்கள்தாம் என்றாலும் கவனமாகக் கையாள வேண்டிய தளம். செல்வா இந்த தளத்தில் அடித்து ஆடுகிறார்.
மயக்கம் என்ன படத்தின் முதல் பாதியை தனுஷும் இரண்டாம் பாதியை ரிச்சாவும் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தோல்விக் கலைஞனின் மேட்னஸ் என்கிற புள்ளிக்கு படத்தை நகர்த்தியிருந்தால் மயக்கம் என்ன கச்சிதமாய் வந்திருக்கக் கூடும். ஆனாலும் செல்வாவிற்கு விக்ரமன் நினைவு வந்திருக்க வேண்டாம்தான்.

யுத்தம் செய்
மிஷ்கினின் தனித்துவமான திரையாக்கத்தில் வந்த த்ரில்லர் படம். அவருக்கே உரித்தான கேமிரா கோணங்கள். ஒரு கதையை இப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவேன் என்பது போன்ற திரை மொழி படத்தின் மிகப்பெரிய பலம். குற்றங்கள் – தண்டனைகள் இவற்றுக்கிடையேயான ஆடுபுலி ஆட்டம்தான் கதையின் ஒன்லைனர். வாயூரிசம் குறித்து தமிழில் பதிவுகள் கிடையாது. அந்த வகையில் யுத்தம் செய் வாயூரிசத்தின் விளைவுகளை அடிநாதமாகக் கொண்டு குற்றங்களை உருவாக்கி அவற்றை மறைப்பதும் கண்டுபிடிப்பதுமான சுவாரசிய விளையாட்டைக் கட்டமைத்திருந்தது. முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு கேவிக்கேவி அழும் சேரனா இது என திகைக்க வைத்த பாத்திரப்படைப்பும் இன்ன பிற கதாபாத்திரங்களின் செய்நேர்த்தித் தன்மையும் மிஷ்கினால் மட்டுமே இயலக் கூடிய சாத்தியங்கள். யுத்தம் செய்யில் பதிவு செய்யப்பட்டிருந்த மார்ச்சுவரிக் காட்சிகள் தமிழில் கிடையவே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

துண்டிக்கப் பட்ட கைகளை பொது இடத்தில் காட்சிக்கு வைப்பது, மெல்ல மெல்ல கதாநாயகனும் பார்வையாளர்களையும் புதிரை நோக்கிப் போவது போன்ற த்ரில்லர் தன்மைகள் படத்தின் கச்சிதமான திரைக்கதைக்கு கட்டியம் கூறுகின்றன. படத்தின் இசை,எடிட்டிங் என பல விஷயங்கள் த்ரில்லர் உணர்விற்கு உறுதுணையாக இருந்தது. சில பார்ப்பனியத் தன்மைகள் இடையிடையே எட்டிப் பார்த்தது ”உங்களால இவ்ளோ முடியும்னா படிச்ச எங்களால என்னாலாம் பண்ண முடியும்” என ஜெயப்ப்ரகாஷ் கேட்பது ஆபத்தான விளையாட்டுதான் என்றாலும் நிகழ்ந்த குற்றங்களை கணக்கில் கொண்டு இந்த வசனத்தை தாண்டிப் போகலாம். ஆனால் ஒரு படத்தின் அரசியல் என்பது தவிர்க்கமுடியாதது என்னதான் த்ரில்லர் படம் என்றாலும் அரசியல் ப்ரக்ஞையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

எங்கேயும் எப்போதும்

விபத்தைக் களமாகக் கொண்டு இதற்கு முன்பு வந்த சிறந்த படங்களாக ரிதம் மற்றும் அங்காடித் தெருவைச் சொல்லலாம். ரிதம் வேகமான திரைக்கதை இல்லை என்கிற ஒரே குறைதானே தவிர பிரமாதமான கதைக் களம். அங்காடித் தெருவில் விபத்திற்கு பிரதான இடம் இல்லையென்றாலும் தீர்மானிக்கும் சக்தியாக விபத்து இருக்கிறது. அங்காடித் தெருவிலும் ரிதத்திலும் விபத்திலிருந்து வாழ்வு துவங்கும். இதில் விபத்தோடு சில உயிர்கள் அஸ்தமிக்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸை முதலில் சொல்லி விட்டு பின்பு அந்தக் க்ளைமாக்சின் உச்ச பதற்றத்திற்காகவே கதாபாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள். அஞ்சலி அனன்யா கதாபாத்திரங்கள் யாவும் பாலகுமாரனின் பெண் தன்மைகளைக் காட்சிப் படுத்தியிருந்ததாலோ என்னவோ என்னைப் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஆனால் படம் பார்த்த எல்லோருக்குமே இந்தப் பெண் கதாபாத்திரங்கள் மீது வாஞ்சையும் பிடித்தமும் இருந்ததை பெருவாரியான பஸ்ஸர்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நல்ல படம் என்கிற அங்கீகாரத்தை உடனே தந்துவிடும் அளவிற்கு இயக்கம் இருந்தது. அறிமுக இயக்குனர் என்ற வகையில் சரவணனுக்கு எங்கேயும் எப்போதும் நல்லதொரு ஆரம்பம். ஆனால் ஒரு நல்ல திரைப்படம் என்பது வெறும் இரசனை மனோபாவத்தை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதில்லை. இது முழுக்க ஆண்களின் பெண் பற்றிய பகற்கனவு மட்டுமேதான். இன்னொரு வகையில் பெண் மீது நாம் நிகழ்த்தும் வரலாற்று வன்முறையும் கூட.


மெளனகுரு

வருட இறுதியில் வந்த ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். அறிமுக இயக்குனரான சாந்தகுமார் மிரட்டியிருக்கிறார். ஒரு த்ரில்லர் கதைக்கு தேவையில்லாத எந்த இடைச்சொருகலும் படத்தில் கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் குற்றங்கள்- சாமன்யன் பாதிக்கப்படுவது- அதிலிருந்து வெளிவருவது என்பது போன்ற பழைய ஹீரோயிசக் கதைதான் என்றாலும் சொல்லி இருக்கும் விதம் முற்றிலும் மாறுபட்டது. படத்தின் பலம் சின்னச் சின்ன காட்சியமைப்புகளிலும் பாத்திரப் படைப்புகளிலும் முழு கவனத்தை செலுத்தியிருப்பதுதான். குறிப்பாக கர்ப்பிணி போலிஸ் உமா. ஆர்ப்பாட்டமில்லாத கச்சிதமான நடிப்பு. இப்படி ஒரு கதாபாத்திரம் தமிழில் இதற்கு முன்பு வந்தது கிடையாது. ஒட்டு மொத்த படத்தையும் சாதாரணமாக இந்தப் பாத்திரம் சுமக்கிறது. அதிகம் நடிக்கத் தேவையில்லாத பாத்திரமென்பதால் அருள்நிதி தப்பிக்கிறார். ஓரம்போ ஜான் விஜய், மனநல விடுதி நண்பர் முருகதாஸ் என நேர்த்தியான நடிகர்கள் படத்தின் ஓட்டத்திற்கு உறுதுணையாய் நிற்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை நிற்காத திரைக்கதை, சின்ன சின்ன திருப்பங்கள் என மெளன குரு கச்சிதமான படம்.

அழகர்சாமியின் குதிரை

கதைக்கு சொந்தக்காரரான பாஸ்கர் சக்தியே இணை இயக்குனராகவும் பணியாற்றி இருப்பதாலோ என்னவோ அபூர்வமாய் சினிமாவாகும் இலக்கியம், வழக்கமாய் சிதைந்து போகும் அபத்தத்திலிருந்து இந்தப் படம் தப்பிப் பிழைத்திருக்கிறது. ஒரு சின்னப் புன்முறுவல் இல்லாமல் அழகர் சாமியின் குதிரை சிறுகதையைப் படிக்கவே முடியாது அதேப் புன்முறுவல் படமாய் பார்க்கும்போதும் தங்கி இருந்ததுதான் இந்த முயற்சியின் வெற்றியாகக் கருதுகிறேன். பாஸ்கர் சக்தியின் கதைகள் அதிக இலக்கிய ஜோடனைகளில்லாத, நேரடியான, யதார்த்தக் கதைகள். சில நுட்பமான பார்வைகளும், அபாரமான கிண்டல்களும் பாஸ்கரின் எல்லாக் கதைகளிலுமே காணக் கிடைக்கும். அந்தக் கதைகளில் அழகர்சாமியின் குதிரை உச்சமானது. அதைத் திரையில் காணும்போது கிடைத்த உற்சாகம் வாசகனுக்கே உரியது.

தொழில் முறை நடிகர்களை அதிகம் பயன்படுத்தாமல், கிராமத்து முகங்களைத் தேடிப் பிடித்துப் போட்டிருப்பது படத்தோடு ஒன்றுவதற்கு உதவுகிறது. எவரின் நம்பிக்கைகளையும் காயப்படுத்தாத, மெல்லிதான கிண்டலொன்று படம் முழுக்க இழைந்திருக்கிறது. படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் சில நிமிடங்களே வந்து போகும் அபாரமான கதாபாத்திரங்கள் மற்றும் காட்சியமைப்புகள். அப்புக்குட்டி மனதை அள்ளுகிறார். குதிரையை காணும் இடமாகட்டும், சைக்கிளை அப்படியே போட்டு விட்டுக் காவல் நிலையத்திற்குப் போய் கதறும் காட்சியாகட்டும் அப்புக் குட்டி அபாரப்படுத்தியிருக்கிறார்.

அப்புக் குட்டி போலிஸ் ஸ்டேசனில் அழும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம். அப்படி ஒரு சோகமான காட்சியிலும் அப்புக் குட்டி போலிஸ் என நினைத்து திருடனின் காலைப் பிடித்து அழுவார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதாநாயகனை சித்தரித்திருப்பது மாற்றங்களின் மீது நம்பிக்கையை வரவழைக்கிறது.

குதிரை காணாமல் போனதற்காக கிராமத்து மக்கள் போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் கொடுக்கும் காட்சி, ராமகிருஷ்ணன் அண்ட் கோ வினர் விவகாரமான சிறுவன் பிரபுவை நைச்சியம் பண்ணித் தகவல் வாங்க முயற்சிக்கும் காட்சி, என படம் முழுக்க சப்தமாய் சிரிக்க ஏராளமான காட்சிகள் இருக்கின்றன. படத்தில் ஓரிரு குறைகள் இருக்கிறதுதான் என்றாலும் நல்ல நகைச்சுவையும் அழுத்தமான இரண்டாம் பாதிக் கதையும் நல்ல படம் பார்த்த உணர்வைத் தந்துவிடுகிறது.

சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு படத்தோடு ஒப்பிடுகையில் அழகர்சாமியின் குதிரை சற்றுப் பின் தங்கித்தான் இருக்கிறது என்றாலும் சுசீந்திரன் குழுவினரின் மீது நல்லதொரு நம்பிக்கையை இந்தப் படம் வரவழைத்திருக்கிறது. இந்தப் படத்தை இன்னும் சரியாகச் செய்திருக்கலாம் என்ற எண்ணம் வந்ததுதான் என்றாலும் வந்தவரை ஓகே என சந்தோஷப் பட்டுக் கொள்ளவும் இதில் நிறைய விஷயங்களிருக்கின்றன.

வாகை சூட வா

சிறார்களின் வாழ்வும் கல்வியும் நசுக்கப்படுவதைக் களமாகக் கொண்ட படம். நல்ல பாடல்கள் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமே இல்லாத கதை சொல்லும் முறை, வழக்கமான தமிழ் சினிமாத்தனங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருந்த பாணி என பல சிறப்புகள் இருந்தாலும் வாகை சூடவா வின் பலவீனமான திரைக்கதை படத்தை மிளிரச் செய்யவில்லை. படத்தில் நிகழ்வுகள்/ சம்பவங்கள் என எதுவுமே கிடையாது. இரண்டே கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை. ஒரு மணிநேரப் படமாக்கி இருந்தால் கச்சிதமாக இருந்திருக்கக் கூடும். சற்குணத்தால் களவாணி போன்று இன்னொரு நேர்த்தியான கமர்சியல் படத்தை தந்திருக்க முடியும்தான் என்றாலும் இப்படி ஒரு முயற்சிக்காக பாராட்டத்தான் வேண்டும்.

மங்காத்தா

தமிழில் எனக்குப் பிடிக்காத நடிகர் விஜய். அவருக்கடுத்த இடம் அஜித்திற்கு. இவ்விருவரும் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று கூட சில நேரங்களில் யாரிடமாவது பொங்குவேன். ஆனால் மங்காத்தா அஜித் சற்று அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார். லும்பன் கேரக்டரை ஹீரோயிசம் இல்லாமல் லும்பனாகவே செய்திருக்கிறார் இதுவும் ஹீரோயிசத்தின் பாகம்தான் என்றாலும் கூட வெங்கட் பிரபுவின் வழக்கமான கும்பலர்களில் ஒருவராய் இணைந்திருப்பது நல்லதொரு மாற்றம்தான். வெங்கட் பிரபு சென்னை 28 ற்குப் பிறகு கதைக்கெல்லாம் பெரிதாக மெனக்கெடுவதில்லை. ஹாலிவுட் படங்களை சுட்டு காமெடியையும் சுவாரசியத்தையும் சேர்த்து கமர்சியலாக வெற்றி பெற்று விடுகிறார். மங்காத்தாவிலும் அதே அழுகுணி ஆட்டம்தான். guy Ritchie படங்களை பிச்சி பிச்சி மங்காத்தாவாக்கி இருக்கிறார். போரடிக்காத திரைக்கதை மற்றும் அஜித்தின் மாற்று ஆட்டத்திற்காக படத்தைப் பார்க்கலாம். ஏழாம் அறிவு மாதிரியான தமிழர் உணர்வை தீனியாக்கும் படங்களுக்கு மங்காத்தாக்கள் தேவலாம் என்பது என் துணிபு.

தமிழ் திரை நாயகர்களை பொறுத்த மட்டில் சூர்யாவும் விக்ரமும் நம்பிக்கைத் தரக் கூடியவர்கள் என்கிற பார்வையை இந்த வருடம் மாற்றிக் கொள்ள வேண்டியதாய் போயிற்று. போலவே வருட நடுவில் நம்பிக்கை தந்த சுசீந்திரன் வருட இறுதில் சொதப்பி இருக்கிறார். ராஜபாட்டை போன்ற படத்தை அவரால் எப்படி எடுக்க முடிந்தது என்று எரிச்சல்பட வேண்டியதாய் போயிற்று. மதராசப் பட்டினம் விஜய் மீதிருக்கும் கடுப்பு தெய்வத் திருமகளிற்குப் பிறகு இரட்டிப்பாகியிருக்கிறது. அவர் சொந்தமாக எப்போது படமெடுப்பார் என்பதுதான் அடுத்த வருடத்தின் பேராவல். மற்றபடி தமிழ் சினிமாவிற்கு தியாகராஜன் குமாரராஜா, சாந்தகுமார், சரவணன் போன்ற புது இயக்குனர்கள் இந்த வருடத்தில் சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். அவர்களின் அடுத்த படங்களையும் ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.நடிகைகளில் ரிச்சா. மயக்கம் என்ன படத்தின் இரும்பு மனுஷி ரிச்சாதான்.அஞ்சலியின் நடிப்பிலும் மெருகு கூடிக் கொண்டிருக்கிறது. அமலா பால் அழகாக இருக்கிறார். இசையைப் பொருத்த மட்டில் வாகை சூட வா விற்கு முதலிடம். மயக்கம் என்ன, ஆடுகளம், தெய்வத் திருமகள் படப் பாடல்கள் பிடித்திருந்தன. பின்னணி இசையில் ஆரண்ய காண்டம் யுவன் கலக்கி இருந்தார். யுத்தம் செய் கே நல்ல அறிமுகம்.

அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்.

Featured Post

test

 test