Showing posts with label அயல்வெளிக் குறிப்புகள். Show all posts
Showing posts with label அயல்வெளிக் குறிப்புகள். Show all posts

Wednesday, February 7, 2018

முன்பின் எந்தச் சாயல்களுமில்லாத இன்றைப்போல


லாகிரி வஸ்துக்களைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன். ஒப்பீட்டளவில் பெரும் தீங்கைத் தரும்  இணையம் மற்றும் ஃபேஸ்புக் புழக்கத்தையும் குறைத்துவிட்டேன். அலுவலகக் கணினியில் ஹென்றி மில்லர் - தற்போது செக்ஸஸ் -1, காரில் முரகாமியின் Dance Dance Dance  ஒலி நூல்,  ஐபோனில் What we talk about When we talk about Running, Mac இல் நார்கோஸ் தொடர், டிவியில் சத்யஜித்ரே என எல்லாவற்றையும் பிடித்தமானதாக மட்டும் மாற்றி வைத்திருக்கிறேன். மாலை வேளைகளில் குடும்பத்தோடு வேதாத்திரி மகரிஷியின் எளிய உடற்பயிற்சிகள். வியாழக் கிழமைகளில் ஷீரடி சாய்பாபாவை நோன்பிருந்து வணங்குதல் என பெளதீக இருப்பும்  ஒழுங்கமைவில் சென்றுகொண்டிருக்கிறது. மனமும் உடலும் நீரூற்றிக் கழுவிட்ட சிவப்பு சிமெண்ட் தரை போல இருக்கிறது. அத்தனைக் குளுமை. சுகந்தம். மெளனம். அமைதி. ஏகாந்தம்.

சகலமும் ஒரு நிலைக்கு வந்திருக்கிறது. தலைக்குள் எப்போதும் கேட்கும் இரைச்சல் இல்லை. இனி வேண்டுவது, ஆவது, சென்றடைவது என்றெல்லாம் எதுவும் கிடையாது. வழக்கமான பழக்கத்தின் விளைவால் வார இறுதியின் மாலைகள் மட்டும் சற்றுச் சவாலாக இருக்கிறதுதாம் ஆனால் அதைக் கடந்துவிடவும் முடிகிறது.

வார நாட்களைப் போலவே வார இறுதியிலும் அதிகாலையில் விழிப்பு வந்துவிடுகிறது. பிடித்தமாதிரியான காஃபியைத் தயாரித்து அருந்துகிறேன். இங்கு வந்து வசித்த வீடுகளில் தற்போது வசிக்கும் இந்த வீடே ஒப்பீட்டளவில் மிக விசாலமான, வெளிச்சமான வீடு. வீட்டிற்கு முன் கட்டிடங்களில்லாத வெளியும் கிடைத்திருப்பதால் வெளிச்சமும் காற்றும் வீட்டை நிரப்புகின்றன. பால்கனியில் நின்று  உயர்ந்திருக்கும் கட்டிடங்களோடு மெளனமாய் உரையாட முடிகிறது. எட்டு வருடங்களுக்கு முன்பு பர் துபாய் வீட்டில் வசித்தபோது  வீடுகளைப் பற்றி குளிர் நினைவுகள் என்றொரு குறிப்பை எழுதினேன். அந்த வீட்டிற்குப் பிறகும் ஐந்து வீடுகள் மாறினேன். இது நான் வசிக்கும் முப்பதாவது வீடு. அதேப் புன்னகைதாம் ஆனால் அயற்சியில்லை.

அடுத்து எழுத வேண்டிய நாவல் குறித்தான எண்ணங்கள் அவ்வப்போது வந்து போகின்றன. திருவண்ணாமலை ட்ரிலாஜியின் கடைசி நாவலைத்தான் ஓரிதழ்ப்பூவிற்குப் பிறகு எழுத வேண்டும் என  திட்டமிட்டிருந்தேன்.  என்னுடைய ஏழு வயதில் ஜப்தி காரியந்தல் கிராமத்திலிருந்து திருவண்ணாமலை தேனிமலைப் பகுதிக்கு வந்து குடியேறினோம். தண்டராம்பட்டு  சாலையை ஒட்டியே என் பாட்டி நிலம் வாங்கி வீட்டைக் கட்டினார்கள். வீட்டு முகவரி பார்வதி நகர் என்றாலும்  வீடிருக்கும் பகுதி தேனிமலைதான்.

தேனிமலைப் பகுதியில்  1980 களில்  24 மனை தெலுங்கு செட்டியார்களும் ஒரு குழுவாக வந்து குடியேறினார்கள். துணிகளை மூட்டை கட்டியும் சைக்கிளில் வைத்துமாய் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று விற்று வருவார்கள் என்பதால் அவர்களைப் பொதுவாக மூட்டைக்காரர்கள் என அழைப்பார்கள்.  அவர்களுக்கு முன்பே  தேனிமலையில் ஒட்டர்கள் வசித்து வந்தனர். பன்றி வளர்ப்பு அவர்களின் முதன்மையான தொழிலாக இருந்தது. இந்த இரு சமூகங்களுக்கிடையே இருந்த நட்புறவும் விரோதமும்தான் பிரதான கதைக் களம்.

90 களின் இறுதியில் எங்கள் பகுதி மெல்ல அடையாளமிழந்தது. தாமரைக் குளத்திலிருந்து ஆரம்பித்து பார்வதி நகர் வரைக்குமாய் விரிந்திருந்த பசுமையான வயல்களை, குளங்களை, குட்டைகளை, கிணறுகளை அழித்துவிட்டு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளை அமைத்தது. என் கண் முன்னால் நிகழ்ந்த இந்த மாற்றம் ஏற்றுக் கொள்ள முடியாததாய் இருந்தது. அவ்வளவு கொண்டாட்டமான என் பால்யம் திடுதிப்பென வெளிறிப்போனது.

என்னுடைய முதல் இருபது வருட வாழ்வையும் இதன் பின்னணியில் சேர்த்து எழுதி திருவண்ணாமலை   ட்ரிலாஜியை நிறைவு செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் இதற்கு இன்னும் சில தகவல்கள் தேவைப்படுகின்றன. தேனிமலைப் பகுதியில் எஞ்சியிருக்கும் சில முதியவர்களை சந்திக்க வேண்டும். எனவே தற்போதைக்கு என் எந்த சாயல்களுமில்லாத ஒரு நாவலை எழுதிப் பார்க்கும் ஆவல் எழுந்திருக்கிறது.  புதிர், காமம், குடி, வன்முறை எல்லாமும் அலுப்பாகத் தோன்றுவதால் முற்றிலும் புதியதொரு எண்ணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

நேற்றின் எந்தச் சாயல்களுமில்லாத இன்று எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது என்பதை நேற்றைக் கொன்றவர்களே அறிவர்.

Thursday, January 4, 2018

பசுஞ்சமவெளியும் பொன்னிற ஒளிக் கதிர்களும்


2017 எனக்கு மிக முக்கியமான வருடம். இவ்வளவு அழுத்தத்திலா இத்தனை நாள் இருந்தோம் என்பது வெளியேறிய பின்னர்தாம் தெரியவந்தது.  வானம் வரை விரிந்த பசுஞ்சமவெளியும், மினுங்கும் பொன்னிற சூரிய ஒளிக் கதிர்களும் சதா என் நினைவில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தன. இவ்வருடம் முழுவதுமே   அவ்வளவு மலர்ந்திருந்தேன். யார் மீதும் கோபமில்லை. எதன் மீதும் துக்கமில்லை. முழுமையாய் விடுதலையடைந்த மன உணர்வு இருந்து கொண்டிருந்தது. எனக்குள் நுழையும் எல்லாச் சொற்களும் பொருள் பொதிந்திருந்தன அல்லது சொற்களையும் மனிதர்களையும் சம்பவங்களையும் இவ்வருடத்தில்தான்  கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். எப்போதும் மூளையின் கட்டுப்பாட்டிலிருந்த என் இயல்பு  அதன்  வறட்டுத்தனத்திலிருந்து வெளியேறியது.  பயங்களாலும் வெறுமைகளாலும் வெறுப்பினாலும்  பொறாமைகளாலும் இயலாமைகளாலும் சோம்பலாலும்  துக்கத்தினாலும் இன்ன பிற எல்லாச் சிறுமைகளாலும் தன்னை வருத்திக் கொண்டிருந்த ஓர் ஆன்மா விடுதலை பெற்றது. மிகையாகச் சொல்லவில்லை,  எனக்கு இது நேர்ந்தது.

ஓரிதழ்ப்பூ நாவலை எழுதி முடித்து, மெய்ப்புப் பார்த்து, திருத்தி, இறுதியை மீண்டும் மாற்றி எழுதி, மிகக் கச்சிதமான நூலாகக் கொண்டு வந்ததுதான் 2017 ஆம் வருடத்தின் சாதனை. இச்சாதனையில் சரி பங்கு ஹரன் பிரசன்னாவிற்கும் நாவலை உடனே வாசித்து அதன் நிறை குறைகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் உரித்தானது. ஓரிதழ்ப்பூவை எழுத நிறைய கால அவகாசம் எடுத்துக் கொண்டேன். நான்கு வருடங்கள் என்பது நூற்றைம்பது பக்க நாவலுக்கு மிக அதிகம். இடையில் நிகழ்த்திரை கட்டுரைத் தொகுப்பிற்காக ஆறு மாதங்கள் போனாலும் மூன்றரை வருடங்களை வீணடித்தேன். போகட்டும் இனி சீரான இடைவெளிகளில் திட்டமிட்டிருக்கும் படைப்புகள் வெளிவரும்.

ஓரிதழ்ப்பூவின் செழுமைக்கு உதவிய நண்பர்களை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் பின் வருமாறு:

போதிராஜா o ஜெயமோகன் o ஜீ.முருகன் o ராஜசுந்தரராஜன் o உமாகதிர் o ச.கனியமுது o ரமேஷ் விஸ்வநாதன் o கல்பனா o மோகனவள்ளி o ஜெ.தீபலக்‌ஷ்மி o அசோக் o பினு பாஸ்கர் o மாரி விஸ்வலிங்கம் o முபாரக் o ஆபிதின் o தமிழ்நதி o பெருந்தேவி o லதாமகன் o எம்.மணி o லாவண்யா o தளபதி முஸ்தபா o கென் o சதீஷ்குமார் ராஜா o சக்ரா அருண் o ஹரன் பிரசன்னா மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர்

ஓரிதழ்ப்பூ அத்தியாயங்களாக தனிமையின் இசை பக்கத்தில் வெளியானபோது ஒவ்வொரு அத்தியாயத்தையும் நானூறிலிருந்து ஐநூறு பேர்  வரை வாசித்தார்கள். இந்த எண்ணிக்கை தந்த மலைப்பும் உற்சாகமும்தான் கிட்டத்தட்டக் காணாமலே போன என்னை மீட்க உதவியது. வெறும் எண்களாக மட்டுமே அறிமுகமாகி என்னை மீட்டுக் கொண்டு வந்தவர்களுக்கும் இந் நாவல் சமர்ப்பணம்.

0

2017 ஆம் வருடத்தின் துவக்கத்திலிருந்தே துபாயிலிருக்கும் தமிழ் வானொலியான 89.4 FM ல் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். நண்பர் நாகா நடத்தும் வானவில் நிகழ்ச்சியில் அவ்வப்போது பேசியது ஒரு புது அனுபவம். நேரிடையாக வெகு சன ஊடகத்தில் பேசுவது ஆரம்பத்தில் சிறு தயக்கத்தைத் தந்தாலும் பேசப் பேச உற்சாகமாக இருந்தது.  உலக இலக்கியம், புது சித்தாந்தங்கள், சம கால சிந்தனைப் போக்குகள், நாவல்கள், எழுத்தாளர்கள் என எல்லா தரப்பு விஷயங்களையும் பேசுகிறேன். இது உரையாடலாக அமைவது இன்னும் சிறப்பு. இதன் மூலம் புது நண்பர்களைப் பெற்றேன். வானொலி நேயர்களுக்கு அறிந்தவனானேன். வெகு சன ஊடகத்தில் அதன் இயல்பானக் கேளிக்கைகளை மீறி இலக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்தை செலுத்தும் நாகாவின் முயற்சி குறிப்பிடத்தக்கது. அவருக்கு என் நன்றி.

இந் நிகழ்வு  கூட்டிற்குள் புதைந்துகொண்டிருந்தவனை மீண்டும் வெளியே வரவும் மனிதர்களோடும் சமூக நிகழ்வுகளோடும் பங்கு கொள்ளவும் வைத்தது.  இவ்வருடத்தில் துபாயில் நிகழ்ந்த பெரும்பாலான நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். தொடர்பே இல்லாதிருந்த பழைய நண்பர்களோடு நட்பைப் புதுப்பித்தேன். இந்த நட்பு சங்கமம் புத்தகக் கண்காட்சி, திரைப்பட விழா, நூல் வெளியீட்டு விழா எனத் தொடர்ந்தது. ஜெயமோகனைச் சந்தித்து உரையாடியது, சல்மாவைச் சந்தித்தது என இந்த வருடம் முழுக்க குறிப்பிடத்தக்க  நிகழ்வுகள் இருந்தன. வருடத்தின் இறுதியில் நண்பர் மகேந்திரன் முன்னெடுப்பில் அல் அய்ன் நகரத்தின் பூங்காவில் பத்தொன்பது நண்பர்கள் வரைச் சந்தித்தது முத்தாய்ப்பு.

விடுமுறைக்கு ஊருக்குப் போனால் எங்காவது நண்பர்களோடு கிளம்பிப் போய் குடித்துக் கும்மாளமிடுவதுதான் வழக்கம். ஆனால் இம்முறையோ குடும்பத்தோடும் உறவினர்களோடும் அதிக நேரத்தை செலவழித்தேன். ஷீரடி சாய்பாபா கோவிலுக்குப் போனேன். எப்போதும் தூறிக் கொண்டிருந்த  மழையில் நனைந்து கொண்டே ஷீரடியிலும் நாசிக்கிலும் சுற்றி வந்தது முற்றிலும் புது அனுபவம். ஓர் அதிகாலையில் வாய்த்த சாய்பாபாவின் தரிசனம் சிலிர்ப்பூட்டுவதாய் இருந்தது. 

0
2017 ஜனவரி மாதத்தில் நண்பன் பினு பாஸ்கர் தன் திரைப்பட வேலைக்காய் அழைத்திருந்தான். கிளம்பிப் போய் பத்து நாட்கள் அவனோடு திரைக்கதை வேலைகளைப் பார்த்தேன்.  ஒரு திரைக்கதையை செப்பனிடுவது அலுப்பூட்டும் வேலையாகத்தான் இருந்தது. மொத்தக் குழுவினரும் பகலில் வேலை பார்க்கமாட்டார்கள். எனக்கோ இரவு பத்து மணிக்கே கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தாக்குப் பிடித்து ஐந்து நாட்கள் கேரளாவிலும் ஐந்து நாட்கள் என் திருவண்ணாமலை வீட்டிலுமாய் அமர்ந்து கோட்டையம் திரைக்கதையை முழுமையாக்கினோம். சுதந்திரமாய் இயங்கினேன். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்தன. நன்றாக வந்திருக்கிறது. எல்லாம் சரியாக அமைந்தால் படம் பேசப்படும் என்றே நம்புகிறேன்.

பிப்ரவரியிலிருந்து கேம் ஆஃப் த்ரோன் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட எழுபது மணி நேரம். சில பகுதிகளை மீண்டும் மீண்டும் பார்த்தேன். இரண்டு மாதங்களை முழுமையாய் இத்தொடருக்குத் தந்தேன். எனக்குள்ளிருந்த ஏதோ ஒரு தடையை இத் தொடர் உடைத்தது. ஓரிதழ்ப்பூவை மீண்டும் மும்முரமாக எழுத இந்த ஃபேண்டஸி உதவியது. வழக்கம்போல நிறைய திரைப்படங்களைப் பார்த்தேன். கணிசமான மலையாளப் படங்கள் வெள்ளிக்கிழமை வெளிவரும் தமிழ்படங்களென எதையும் தவறவிடவில்லை. இவ்வருடத்தில் கண்டடைந்த அபூர்வமாக  பின்லாந்து இயக்குனர் அகி கரிஸ்மாகியையும்   இயக்குனர் யார்கோஸ் லாந்திமோஸையும் குறிப்பிடலாம். லாந்திமோஸின்  The Killing of a Sacred Deer திரைப்படத்தை துபாய் திரைப்பட விழாவில் பார்க்க முடிந்தது இன்னும் சிறப்பு. நிறைய குறிப்பிடத் தகுந்த புத்தகங்களையும் வாசித்தேன். வாசித்த பார்த்த சிறந்தவைகளை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

வருடத்தின் இறுதி வாக்கில் மாமல்லன் வழியாய் அமேஸான் கிண்டிலை அறிந்து கொண்டேன். இதுவரை பத்து புத்தகங்களை கிண்டிலில் பதிவேற்றி இருக்கிறேன். இன்னும் 3 நூல்களை  செப்பனிட வேண்டும். கிண்டிலில் வரவேற்பு நன்றாக இருக்கிறது. இதுவரைக்கும் விற்ற புத்தகங்கள், வாசிக்கப்பட்ட பக்கங்கள் குறித்தான புள்ளி விவரங்களைப்  பார்க்கும்போது சின்னதாய் பயம் எழுகிறது. ஏழாயிரம் பக்கங்கள் வரை வாசிக்கப்பட்டதாய் கிண்டில் சொல்கிறது. இது மிகப்பெரிய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் தந்திருக்கிறது. இன்னும் இன்னும் எழுத ஆர்வமும் மேலிடுகிறது. 2018 அதற்கான முன்னெடுப்பாய் அமையும் என்றே நம்புகிறேன்.

எப்போதும் என்னோடிருக்கும் உங்களுக்கு நன்றி.


Sunday, November 30, 2014

கூண்டுப் புளி

நேற்று இரவு முழுவதும் ஒரு நொடி கூட என்னால் தூங்க முடியவில்லை. ஒரு முழு இரவையும் கொப்பளிக்கும் எண்ணங்களோடும், குற்ற உணர்வோடும், இயலாமையோடும் கழித்தது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். வாழ்வில் ஏரளமான தூங்க முடியாத நிசிகள் இருந்திருக்கின்றனதாம் என்றாலும் விடியலில் எப்படியாவது தூக்கம் இழுத்துக் கொண்டுவிடும். ஆனால் நேற்று அப்படி ஒன்று நிகழவேயில்லை. மனம் குழப்பத்திலும் கழிவிரக்கத்திலும் சஞ்சலித்தபடியே இருந்தது. இப்படியான போராட்ட மனநிலைக்கான காரணத்தை எழுதக் கூச்சமாக இருக்கிறது. வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்றபடியே இருக்கிறது. இனி தனியாகக் குடிப்பதில்லை. அப்படியே குடித்தாலும் இணையத்தைத் திறப்பதில்லை என்கிற கறாரான முடிவிற்கும் வந்திருக்கிறேன். வெள்ளி இரவு நிலையில்லாமல் உளறிக் கொட்டி ஒரு ஆன்மாவின் முகச் சுளிப்பிற்கும் கோபத்திற்கும் உள்ளானதை எண்ணி வெட்குகிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக என் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியிருக்கிறேன். கூகுல் ப்ளஸ் என்னை அத்தனை விகாரங்களோடும் ஏற்றுக் கொண்டு விட்ட இடம் என்பதால் முதல் நாள் உளறி அடுத்த நாள் அழிப்பது வழக்கமாகவே மாறிவிட்டது. அதைக் குறித்து வெட்கமேற்படாதவாறு வழமை பார்த்துக் கொள்கிறது.

என் தனிமையை எந்த அளவிற்கு கொண்டாடுகிறேனோ அந்த அளவிற்கு அதைக் கண்டு பயப்படுபவனாகவும் இருக்கிறேன். கட்டவிழ்த்த வனாந்திர வெளியும் சுதந்திரமும் என்னை அதிக உற்சாகமடைய வைக்கும் அதே நேரத்தில் அந்த மிகு வெளி குறித்து மிரட்சியும் அடைகிறேன். எனக்கு கூண்டுதான் சரியாக இருக்கும். கூண்டில்தான் என்னால் மனச் சமாதானங்களோடு வாழ்ந்து கொள்ள முடிகிறது. கூண்டின் பாதுகாப்பு குறித்து அதன் வழமைகள் குறித்து அதன் சோம்பல் தன்மை குறித்து இந்தப் புளிக்கு மிகுந்த ஆசுவாசங்கள் இருக்கின்றன. செய்ய ஒன்றுமே இருக்காத வாழ்வை எப்படி ஒரு மனம் விரும்ப முடியும்? ஒரு நாள் முழுக்க எதையுமே செய்யாமல் கடத்தும் தடித்தனம் எப்படியோ வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. அந்த தடித்தனத்தில் ஊறி மூளையும் உடலும் மட்கிக் கொண்டிருக்கிறது. இலைகள் மட்கினால் சரி. மரமே மட்குவதை என்ன செய்து சரி செய்ய முடியும்?

 சும்மா இருப்பதுதான் பெரிய விஷயமாகிற்றே. "கிட சும்மா" என சமாதானமாகிவிடலாமென்றாலும் சதா பகற் கனவில் மூழ்கும் மனதின் ஓயாத பேராசையைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதென்ன சுயமிது? இத்தனை ஆசைகளையும் கனவுகளையும் இதன் ஆழத்தில் யார் வந்து கொட்டியிருப்பார்கள்? மனம் பேராசையின், சுயப் பெருமிதத்தின், பகட்டு வெளியின் நாயகனாகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது. போகுமிடமெல்லாம் ராஜாதி ராஜப் பின்னணிக் குரல் காதில் விழுந்து கொண்டே இருக்கவேண்டுமென விரும்புகிறது. பச்சையாக சொல்வதென்றால் சில சினிமாக்காரர்களின் பகட்டு வாழ்வை அருகிலிருந்துப் பார்த்துவிட்டு தானும் அதுபோல மாறிவிட இந்தப் புளி கொட்டையைப் பிதுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சினிமாப் பித்திலிருந்து வெளிவர புத்தக வாசிப்பைத் துரிதப்படுத்தி யிருக்கிறேன். என் நமுத்த வழமைகளில் இருந்து சீக்கிரம் வெளியே வர வேண்டும். மாலையில் கர்ம சிரத்தையாய் நடப்பது. இசை கேட்பது. புத்தகம் படிப்பது. குறைவாய் படம் பார்ப்பது. குறைவாய் உண்பதென திடீரென வாழ்வு நம்ப முடியாத ஒழுங்கிற்கு திரும்பிவிடும். அந்த கணத்திற்காக காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு செய்ய ஒன்றும் இல்லை. ஃபேஸ்புக்கைத் தொலைத்திருப்பதால் மீண்டும் வலைப்பூ வில் நாட்டம் செல்லத் துவங்கியிருக்கிறது. எழுதாமல்தான் நான் துருப்பிடித்துப் போனேன். இனி எழுதி எழுதி என்னை மீளக் கொணர்வேன்.



Thursday, March 7, 2013

கடைசி நாளில்....3



மேடைப் பேச்சில் பள்ளிக் காலங்களில் சிறந்து விளங்கினேன். டிபன் பாக்ஸ், எவர்சில்வர் தட்டு, எவர் சில்வர் பூக்கூடை, தம்மாதூண்டு பித்தளை கப், பிளாஸ்க் என நான் வாங்கி குவித்திருந்த பரிசுகளின் எண்ணிக்கை அதிகம்தான். இது போக சான்றிதழ்கள். நான்கு வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வீட்டில் பழைய குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கும்போது இச்சான்றிதழ்கள் அடங்கிய ஃபைல் கைக்குக் கிடைத்தது. சுவாரசியமாய் எடுத்துப் பார்த்துக் கொண்டே வந்தபோது ஒரு சான்றிதழில் பவாயின் கையெழுத்திருந்தது. ஆச்சரியமும் சந்தோஷமுமாக இதை பவா விடம் சொன்னேன். 93 ஆம் வருட கலை இலக்கிய இரவு நிகழ்வுகளின் ஒரு பாகமாக பள்ளி மாணவர்களுக்கு நடத்திய பேச்சு போட்டி ஒன்றில் நான் முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். சான்றிதழில் பவா வின் கையொப்பம். ஆனால் அதை அவரிடமிருந்து வாங்கினேனா என்பது நினைவில்லை. மேடை, மைக், பேச்சு என்பதெல்லாம் என் நினைவிலிருந்து மங்கியே போனது. கூச்ச சுபாவியாக, கூட்டுக்குள் அடங்கிகொள்ளும் ஆமையாக மாறிப்போனேன். பதினைந்து வருடங்கள் கழித்து என் புத்தக வெளியீட்டு விழா மேடையில்தான் மீண்டும் மைக்கைப் பிடிக்க நேர்ந்தது. பேசிமுடித்தவுடன் ஆரம்பிக்கும்போது சொன்ன வணக்கமும் முடிக்கும்போது சொன்ன நன்றியும் மட்டுமே நினைவிலிருந்தது. அநிச்சை செயல் என்பதின் அர்த்தம் எனக்கு அப்போதுதான் விளங்கியது. நல்லா பேசின என பெருந்தன்மையாக பிரபஞ்சன் தேற்றினார். தமிழ் ஏதோ கிண்டலடித்த நினைவு. இப்பின்புலத்தில் எஸ்கேபி கல்லூரியில் சினிமா குறித்து ஒரு மணி நேரம் பேசவேண்டும் என்பதை நினைத்து இரண்டு நாள் திகிலாகத் திரிந்தேன். ஆனால் பேசித்தான் ஆகவேண்டும். விழா அழைப்பிதழில் பெயரெல்லாம் வந்துவிட்டது. முதல் நாள் வம்சிக்குப் போய் சினிமா தொடர்பான புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தேன். ஒரு உரையை தயாரித்துவிட்டு படித்துவிடும் திட்டம். ஆனால் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட வாசிக்க நேரம் வாய்க்கவில்லை. துண்டு சீட்டு குறிப்புகள் கூட இல்லாமல் அடுத்த நாள் காலை எஸ்கேபி கல்லூரிக்குப் போய்விட்டேன்.

எஸ்.ராமகிருஷ்ணனை முதல் முறையாய் சந்தித்தேன்.  முன்பு தொலைபேசியில் பேசியிருந்ததோடு சரி. எழுதிக் கொண்டிருக்கும் நாவல், சினிமா குறித்தெல்லாம் பகிர்ந்துகொண்டார். விழாவின் அறிமுக உரையை கருணா நிகழ்த்தினார். வெகு இயல்பான பேச்சு. பொறியியற் கல்லூரியில் Film Club தொடங்குவதன் பின்புலத்தை விவரித்துக் கொண்டிருந்தார். தன் கல்லூரியிலிருந்து வெளியே போகும் மாணவர்கள் வெறும் மதிப்பெண்களை மட்டும் கொண்டு போகிறவர்களாக இருக்ககூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். கலை, இலக்கியம், சினிமா என சகல விஷயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு சரியான அறிமுகத்தைத் தருவதில் முனைப்பாக இருக்கிறார். அடுத்த சிறப்புரை எஸ்.ராமகிருஷ்ணனுடையது.  விலாவரியாக சினிமா குறித்து ஒரு பேருரையை நிகழ்த்தினார். பிறகு சில குறும்படங்களைப் பார்த்தோம். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பேச்சு என்னுடையது. வழக்கம்போல வணக்கம் சொன்னதும் நன்றி சொன்னதும்தான் நினைவில் இருக்கிறது. வெகுநேரம் பேசிவிட்டதைப் போல் தோன்றவே திடீரென நிறுத்திவிட்டேன். இன்னும் சிறிது நேரம் பேசியிருக்கலாம் என எல்லோரும் வருத்தப்பட்டார்கள். நான் சொன்ன சில்ரன் ஆப் ஹெவன் கதையில் சில தகவல் பிழைகளை வம்சி சுட்டினான். "ஆனா நீங்க கத சொன்ன ஃப்ளோவுல அதுலாம் யாருக்கும் தெரிஞ்சிருக்காதுண்ணே" எனவும் தேற்றினான். வம்சி மிகக் கூர்மையான பார்வையைக் கொண்டிருக்கிறான். நிறைய வாசிக்கிறான். நிறைய படங்கள் குறித்து விவாதிக்கிறான். அவன் வளர்ச்சி மகிழ்வளிக்கிறது. ஷாஜியும் அஜயன் பாலாவும் இந்திய சினிமா மற்றும் தமிழ் சினிமாக்கள் குறித்துப் பேசினார்கள். ஷாஜியிடம் கே.ஜி.ஜார்ஜ் குறித்துப் பேசிகொண்டிருந்தேன். ஷாஜிக்கும் கே.ஜி.ஜார்ஜை மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு கட்டுரை எழுதச் சொல்லி கேட்டேன். அஜயன் தன் அடுத்த படம் குறித்து பகிர்ந்து கொண்டார். மாலை எஸ்கேபி கல்லூரியின் திறந்த புல்வெளி அரங்கில் ஐரோப்பிய பெண்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. திபெத்திய பெண் புத்தர் வழிபாட்டு முறைகளை மேடையில் நிகழ்த்தினார்கள். அக்குழுவின் தலைமைப் பெண்மணியோடும் கிதார் கலைஞரோடும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

விழாவின் இரண்டாம் நாள் காலை எடிட்டர் லெனின்  எடிட்டர் லெனின் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் உள்ளே நுழைந்தேன். வாயிலில் ராம் உலாத்திக் கொண்டிருந்தார். லெனின் பேசி முடிக்கும்வரை  கிடைத்த ஒருமணிநேர இடைவெளியில் இரண்டு டீ குடித்து மூன்று சிகரெட் பிடித்து அரங்கிற்கு வெளியே எங்களின் பேச்சு நீண்டு கொண்டிருந்தது. ராம் ஒரு அற்புதமான கலைஞன். பினுவைப் போல, செளக்கத்தைப் போல, அருணைப் போல, நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உடனேயே ராமை எனக்குப் பிடித்துப் போனது. எங்களுடைய புத்தக வெளியீட்டு விழாவில் ராம், ஷைலஜாக்காவின் சூர்ப்பணகை குறித்து நிகழ்த்திய உரை இன்னும் நினைவில் இருக்கிறது. இந்நிகழ்விலும் ராமின் பேச்சு அபாரமாக இருந்தது. கற்பனையை, மிதத்தலை, போலிமதிப்பீடுகளை செவிட்டில் அறைந்து யதார்த்தத்தை, அழகியல் போர்த்தப்பட்ட குரூரத்தை ராமின் பேச்சு முன் வைத்தது. அரசியல், கலை, இலக்கியம்,சினிமா குறித்தெல்லாம் மிக வெளிப்படையாக, கறாரான விமர்சனப் பார்வை ராம் முன்வைத்தார். இந்த உரை இரண்டு நாள் விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. பேச்சை முடித்துக் கொண்டு வந்தவரிடம் ராம் மைக்கின் முன்னால் நீங்கள் வேறொரு ஆள் எனச் சொன்னேன்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு  கிளம்பி பாண்டிச்சேரி போனேன். நாகரத்னம் கிருஷ்ணாவின் புத்தக வெளியீடு. வாசு மற்றும் நண்பர்கள் போவதாய் சொல்லியிருந்தார்கள். வாசுவிற்கு தொலைபேசி மாலை அவர்களோடு திண்டிவனத்தில் இணைந்து கொண்டேன். இங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை இருந்தது. தமிழவனை முதன் முறையாகப் பார்த்தேன்ரமேஷ் வந்திருந்தார். போப்பு, பரமேஸ்வரி, மதுமிதா, யுகபாரதி மணிகண்டன், வா.மணிகண்டன் உள்ளிட்ட பல நண்பர்களை சந்தித்தேன். விழா முடிந்து பாண்டிச்சேரி கடற்கரைக்குப் போனோம். அஜந்தா மாடியில் அமர்ந்தபடி, பவுர்ணமி நிலவை, அலைகளை பார்த்தபடி குடித்தேன். இரவு முழுக்க பாடல்களைப் பாடியும் பேசியுமாய் கழிந்தது. இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாய் அந்த இரவு இருந்தது. வாசுவிற்கு நன்றி. அதிகாலையிலேயே சின்னவனுக்கு ஜூரம் என மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. போக திட்டமிட்டிருந்த சித்தப்பா வீட்டிற்கு போகாமல் வீடு திரும்பினேன்.

தொடர் பயணங்களின் விளைவாக நால்வருமே சளியும் இருமலும் ஜூரமுமாய் அவதிப்பட்டோம். பயல்கள் விளையாடப் பெரிய வெளியும், நாய்குட்டியும் இருந்ததால் உடல்நலன் குறித்து அவர்கள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு நாளின் மொத்த வெயிலையும் தலையில் வாங்கினார்கள். தெருவின் எல்லா வீடுகளுக்கும் மிக இயல்பாய் சென்று வந்தார்கள். வீதி நாய்களின் வாலைப் பிடித்து இழுக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். ஆட்டுகுட்டிகளை விரட்ட, மாடுகளுடன் சண்டையிட விரும்பினார்கள். இருவரையும் கட்டுக்குள் வைத்திருக்க பெரும் சிரமப்பட்டோம்.

எஸ்கேபி கல்லூரி விழாவின் தாக்கம் தணியுமுன்னரே பவா அடுத்த நிகழ்விற்கு அழைப்பிதழை தயாரித்துவிட்டார். இம்முறை பவா வின் ஆங்கிலப் புத்தக வெளியீடு. ஆங்கிலத்திலேயே பேசுவதாக சொன்னேன். குவாவாடிஸ் என்பதால் இடம் குறித்த  அச்சம் குறைவாக இருந்தது. இம்முறை எழுதி வைத்து வாசித்துவிட்டேன். வழக்கம்போல பவா தன் ஆத்மார்த்தமான உரையை நிகழ்த்தினார். ஷைலஜாக்கா புத்தகத்திலிருந்து அப்பா கட்டுரையை வாசித்தார். போப்பு பேசினார். இறுதியாக ஜேபி ஒரு பிரமாதமான உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். ஜேபி பவாவின் பள்ளிக்காலத்திலிருந்து நண்பர். இருவரின் நட்பையும் குவாவாடிஸ் உருவான விதத்தையும் மிக ஆதூரமான நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார். குவாவாடிஸ் இடமே வேறொரு மனநிலையைத் தந்தது

ஊருக்கு கிளம்பும் நாள் வந்தே விட்டது. கடைசி நிகழ்வாக எங்கள் வீட்டின் மூன்று குட்டிப் பயல்களுக்கும் மொட்டையடித்து காதுகுத்தினோம். பிரபஞ்சன் மிக சாதுவாய் இரண்டு கண்டங்களையும் தாண்டினான். ஆகஷூம் அகிலும் களேபரப்படுத்தினார்கள். ஒரு வழியாய் நிகழ்ச்சி நல்லபடியாய் முடிந்தது. அடுத்த நாள் மிகப்பரபரப்பாய் இருந்தது. தொடர்பு விட்டுப்போன என் பால்ய நண்பர்கள் மூவர் தொலைபேசினார்கள். மதியம் பவாவிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பும்போது மழைத்துளியொன்று முகத்தில் பட்டது. மிக உற்சாகமாய் கடைசி மணிநேரங்கள் கடந்தன. மழை விட்டதும் என் பால்ய நண்பர்களில் ஒருவன் சந்திக்க விரும்பினான். இரமணாசிரமம் எதிரில் இருந்த தேநீர் கடையில் அமர்ந்தபடி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தொடர்பு விட்டுப்போன பத்துவருடங்களை பேச்சால் மீண்டும் இணைத்தோம். இன்னொரு பால்ய நண்பனும் வந்து இணைந்துகொண்டான். அவர்களுக்கு தொடர்பிலிருக்கும் நண்பர்களோடு தொலைபேசியில் பேசினேன். இனி எல்லோருடனும் தொடர்பில் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டே வீடு வந்து நள்ளிரவில் விமான நிலையத்திற்கு கிளம்பினோம்.

இடையில் சினிமாபற்றி ஒரு புத்தகம் கொடுங்கள் என ஷைலஜாக்கா கேட்டார்கள். இந்த வலைப் பக்கத்திலிருக்கும் சினிமாக் கட்டுரைகள், வவெதொஅவெகு கட்டுரைகளை  ஏற்கனவே நிகழ் திரை கனவு என்ற பெயரில் தொகுத்து வைத்திருந்தேன். அதை லேசாக தட்டி ஒரு வாரத்தில் தந்துவிடுவதாய் சொன்னேன். ஆனால் அத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்த்தபோது மிக சாதாரணமாய் இருப்பதாய் பட்டது. இதையெல்லாம் புத்தகமாய் வேறு போட வேண்டுமா என்கிற தயக்கமும் மேலெழுந்தது. ஆகவே புதிதாய் ஒரு சினிமா புத்தகம் எழுத முடிவெடுத்திருக்கிறேன். அதிகம் அறியப்படாத இயக்குனர்களின் மொத்த திரைப்படங்கள் குறித்தும் விலாவரியாய் எழுதும் திட்டம். எமீர்கஸ்தூரிகா, டோனி காட்லிப், பார்க் வூ, கிடானோ என இந்தப் பட்டியல் நீளுகிறது. இந்தியாவிலிருந்து இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் குறித்த ஒரு முழுமையான கட்டுரையும் புத்தகத்தில் இடம்பெறும். ஏற்கனவே எழுத ஆரம்பித்துவிட்டேன். இரண்டு மாதத்திற்குள் முடித்துவிடும் ஆசை இருக்கிறது. இந்த புத்தகம் முழுமையாய் வருவதற்கான எல்லா உழைப்பையும் இடவேண்டும்.


Featured Post

test

 test