Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, May 25, 2017

தினசரிகளின் துல்லியம் - முரகாமியின் ஸ்லீப்

இரண்டு நாட்களாக ஹருகி முரகாமியின் ’ஸ்லீப்’ என்கிற கதை தொந்தரவு செய்கிறது. குறிப்பாக வாகனம் ஓட்டும்போது. ஸ்லீப் கதையின் நாயகிக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கும். ஆனால் அது ’இன்சோம்னியா’ அல்ல. தூக்கம் வராது அதனால் தூங்காமல் இருப்பாள் . பதினேழு நாட்களாக தூங்கியிராத அந்தப் பெண் கதாபாத்திரத்தை எவ்வளவு முயன்றும் நினைவில் இருந்து துரத்த முடியவில்லை.  கணவனும் மகனும் தூங்கிய இரவில் வரவேற்பறையில்  அமர்ந்து கொண்டு  ரெமி மார்டின் சகிதமாய் அவள் வாசிக்கும் அன்னா கரீனா நாவலை மனம் திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்கிறது. நான் அன்னா கரீனாவை வாசித்ததில்லை. இச்சிறுகதைக்குப் பிறகு அன்னா கரீனாவை வாசிக்கும் ஆவல் எழுந்திருக்கிறது.

’ஸ்லீப்’ எனும் இச்சிறுகதை முரகாமியின் ’The Elephant Vanishes’ தொகுப்பில் இருக்கிறது. 1989 இல் எழுதப்பட்ட சிறுகதை. ஆரம்பகால முரகாமியின் சிறுகதைகளில் தினசரிகளைக் குறித்தக் கச்சிதமானச் சித்திரம் இருக்கும்.  ஒரு கதாபாத்திரம் காலை ஆறு பதிமூன்றிற்கு எழுந்து இரவு பத்து முப்பத்தி நான்கிற்குத் தூங்கப் போவது வரைக்குமான சம்பவங்களை நிகழ்வுகளை அல்லது எதுவுமே நிகழாதத் தன்மைகளையும் மிகத் துல்லியமாக விவரிப்பது முரகாமியின் கதை சொல்லும் முறை. ஒரே ஒரு அசைவைக் கூட விடாமல் சொல்லிவிடுவதுதான் இவர் தனித் தன்மை. சில கதைகளில் அலுப்பூட்டும் அளவிற்கு தினசரிகளின் துல்லியம் வந்து விழுந்து கொண்டே இருக்கும். வரிசைக் கிரமம் மாறாத முறைமைகளைக் கொண்டிருக்கும் இவர் கதாபாத்திரங்கள் ஒருபோதும் தினசரிகளில் அலுப்படைவதில்லை. மேலும் அத் தினசரிகளில் ஆழமாய் ஊன்றிப் போக முயலுகின்றன.

முரகாமியின் கதைகள், கதை மாந்தர்கள் என்னுடைய தினசரிகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். செய்யும் எந்த ஒன்றிலும் கவனம் அல்லது நுணுக்கம் குறித்தான பிரக்ஞையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நல்ல எழுத்தும் இலக்கியமும் மனதை விசாலப்படுத்தும் என அறிந்திருக்கிறோம் ஆனால் செயலின் ஒவ்வொரு தன்மையையும் கச்சிதப்படுத்தும் வாழ்வு முறை எனக்கு முரகாமியின் வழியாகத்தான் வந்தது.

ஸ்லீப் கதையின் நாயகிக்கு முப்பது வயது. ஆரம்பப் பள்ளிக்கு செல்லும் ஒரு மகன். கணவன் பல் மருத்துவர். அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பவர். நண்பர்களோ குடிப்பழக்கமோ கொண்டாட்டங்களோ இல்லாதவர். படுத்த உடன் தூங்கிவிடுபவர். மகனுக்கும் அவரின் அத்தனை சாயல்களும் இருக்கும். இவளுக்கு வாழ்வின் மீது பெரிதாய் புகார்கள் கிடையாது. எல்லாமும் சரியாக இருக்கும். காலை எழுந்து சிற்றுண்டி தயாரித்து கணவனையும் மகனையும் காலை எட்டு பதினைந்திற்கு ஒரே மாதிரி பத்திரம் எனச் சொல்லி வழியனுப்புவாள். அவர்கள் இருவரும் ஒரே மாதிரி தலையசைத்து ’டோன் வொர்ரி’ எனச் சொல்லிவிட்டுப் போவார்கள். அவர்கள் சென்ற பிறகு இவள் கடைக்குப் போய் தேவையானதை வாங்கிவருவாள். இவளிடம் ஒரு பழைய ஹோண்டா சிவிக் இருக்கிறது. வீட்டிற்கு வந்ததும் வீட்டைத் துடைப்பது, துணிகளைத் துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவாள். பதினோரு மணி ஆனதும் மதிய உணவைத் தயாரிப்பாள். கணவன் மதிய உணவு அருந்த வருவான். சேர்ந்து சாப்பிடுவார்கள். திருமணம் ஆன புதிதில் மதிய உணவிற்குப் பிறகு அவன் நெடுநேரம் வீட்டில் அவளோடு இருப்பான். அவை மகிழ்ச்சியும் இளமையும் நிரம்பிய காலங்கள். இப்போது அப்படியல்ல ஓரு மணி நேரத்திற்குள் திரும்ப மருத்துவமனை சென்றுவிடுவான். அவன் போன பிறகு வண்டியை எடுத்துக் கொண்டு அருகாமையில் இருக்கும் ’ஹெல்த் க்ளப்’ பிற்குப் போய் நீச்சலடிப்பாள். அழகு குறித்தும் ஆரோக்கியம் குறித்துமான கவனம் அவளுக்கு உண்டு. பின் மதியத்தை வாசிப்பது, ரேடியோ கேட்பது, ’விண்டோ ஷாப்பிங்’ செய்வது போன்ற வெவ்வேறு வகையில் செலவிடுவாள். மாலையானதும் மகன் வருவான். அவனுக்கு நொறுக்குத் தீனி கொடுத்துவிட்டு  விளையாட அனுப்புவாள். இரவுணவைத் தயாரிப்பாள். ஆறு மணிக்கு விளையாடிவிட்டு திரும்பும் சிறுவன் வீட்டுப் பாடங்கள் செய்வான் அல்லது கார்டூன் பார்ப்பான். கணவன் வந்ததும் இரவுணவு.  எட்டரை மணிக்கு மகன் தூங்கப் போவான். பிறகு இருவரும் மொசார்ட் அல்லது ஹேடனைக் கேட்பார்கள். இவளுக்கு இருவரின் இசைக்குமான வித்தியாசம் எப்போதும் பிடிபட்டதில்லை. அவன் இசை கேட்டுக்கொண்டே செய்தித்தாள் வாசிப்பான். பிறகு தூக்கம். அவ்வளவுதான். இந்த வரிசைக் கிரமம் எந்த வகையிலும் மாறாது. மாறாமல் இருக்க அனைவரும் மெனக்கெடுவார்கள்.

ஒருநாள் இவளுக்கு தூக்கம் வராமல் போய் விடுகிறது. தூங்காமல் இருப்பதால் ஏற்படும் எந்த அசெளகரியங்களும் இருக்காது. வழக்கம்போலவே இருப்பாள். ஆனால் தூங்க மாட்டாள். கல்லூரி காலத்திலும் ஒரு மாதம் இப்படித் தூங்காமல் இருந்தாள். தூக்க மாத்திரை, குடி என எதைப் பயன்படுத்தினாலும் தூக்கம் வராது. உடலும் மனமும் அவ்வளவு விழிப்பாகவும் புகை மூட்டமாகவும் இருக்கும். தனக்கு இருந்த சிக்கலை அவள் யாரிடமும்  - இப்போதுபோலவே - சொல்லவில்லை. ஒரு நாள் அந்தத் தூக்கமின்மை போய்விடும். தொடர்ச்சியாக இருபத்தேழு மணி நேரம் தூங்கி எழுந்து சரியாகிவிடுவாள். மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு அந்தப் பிரச்சினை இப்போது வந்திருக்கிறது.

இந்தத் தூக்கமின்மை வருவதற்கு முன்னால் அவளுக்கு பயங்கரமான கனவு ஒன்று வரும். இம்முறை ஒரு வயோதிகன் அவள் காலின் மீது நீரைக் கொண்டிக் கொண்டிருப்பதாய் கனவு வந்தது. ஒரு ஜாரில் நீரை நிரப்பி அவள் பாதங்களின் மீது நிறுத்தாமல் கொட்டிக் கொண்டிருக்கிறான். அவளால் கத்தவோ அல்லது எழுந்து ஓடவோ முடிவதில்லை. தன் கால்கள் விரைத்து நகரமுடியாமல் போய்விடுவோமோ என பயந்து அலறி அக்கனவில் இருந்து விழிக்கிறாள். அவ்வளவுதான். தூக்கமின்மைக்கு வந்து விட்டாள். எழுந்து வியர்வையால் நனைந்த தன் உடைகளை மாற்றிக் கொண்டு ஹாலிற்கு வருகிறாள். ஒரு முழுக் கோப்பை பிராந்தியைக் குடிக்கிறாள்.  திருமணத்திற்கு முன்பு நன்கு குடிப்பாள். கணவனுக்கு  குடிப்பழக்கம் இல்லாததால் அது நின்று போயிருக்கும். எப்போதோ பரிசாய் கிடைத்த ஒரு ரெமி மார்டின் பாட்டில் வீட்டில் இருக்கும்   கனவு தந்த பயத்திலிருந்து விடுபட நரம்புகளை சாந்தப்படுத்த குடிப்பாள். மேலும் ஒரு கோப்பை குடித்ததும் அவளுக்கு என்ன செய்வதன்று தெரியாமல் அன்னா கரீனா புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பாள். அவ்வளவுதான் அந்த உலகத்திற்குள் விழுந்துவிடுவாள். அவளுடைய பழைய இளம் உலகம் விழித்துக் கொள்ளும். முடிவு என்ன என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இக்கதையை வாசித்து முடித்ததும் ஓர் அபரிதமான புத்துணர்விற்குள் தள்ளப்பட்டேன். என்னைச் செயலின்மைக்கு நகர்த்தியவையும் புத்தகங்கள்தாம். இப்போது அதே புத்தகங்களே செயலூக்கியாக இருக்கும் முரணை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

முரகாமியின் The Elephant Vanishes  தொகுப்பு  1980 லிருந்து 1991 வரைக்குமாய் அவர் எழுதிய சிறுகதைகளை உள்ளடக்கியது. மொத்தம் பதினேழுச் சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு மன உணர்வுகளைத் தூண்டிப்பார்க்கும். இத்தொகுப்பின் முதல் சிறுகதையான The Wind-up Bird and Tuesday's Women பின்னாளில் ’வைண்ட் அப் பேர்ட் க்ரோனிகள்’ நாவலின் முதல் அத்தியாயமாகவும் இடம் பெற்றது. இச்சிறுகதையின் தொடர்ச்சியாக ’வைண்ட் அப் பேர்ட்’ நாவலை எழுதியிருப்பார். வேலை இல்லாத ஒரு  மத்திம வயது ஆண் கதாபாத்திரத்தின் தினசரி மிகப் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும்.  The Dancing Dwarf, Lederhosen போன்ற பிற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தன. லெடர்ஹோசன் என்கிற ஜெர்மானிய உடை ஒரு பெண்ணின் அத்தனை வருட வழமையை உடைத்துப் போடும் விநோதமான கதை. விநோதங்களின் அரசனான முரகாமி தினசரிகளில்  இருந்து அதைக் கண்டெடுக்கிறார் என்பதுதான் இன்னும் விசேஷம்.

Tuesday, March 28, 2017

இரு வேட்டைகள்


ஆதிவாசி மற்றும் பழங்குடி மரபுகளையும் அவர்களின் வாழ்வியல் கூறுகளையும் ஒட்டி சமீபமாய் இரண்டு சிறுகதைகளை வாசித்தேன். இரண்டின் தலைப்பும் வேட்டை தான்.

முதல் வேட்டைக் கதை மகாஸ்வேதா தேவி எழுதியது. குருடா மலைப் பிரதேசத்தில் வசிக்கும் ஓராவ்ன் என்கிற பழங்குடி சமூகத்தின் கதை இது. உயரமும் வாளிப்பும் தனித்த அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட மேரி என்கிறப் பெண்ணைப் பற்றிய கதை. மேரி, ஓராவ்ன் தாய்க்கும் ஆஸ்திரேலியத் தகப்பனிற்கும் பிறந்தவள். சுதந்திரத்திற்கு முன்பு இம்மலைப் பிரதேசங்களில் வசித்த அந்நியர்கள், உயரமான மரங்களை வளர்த்ததோடு பழங்குடிப் பெண்களின் வயிற்றில் கருவையும் வளர்த்தார்கள். டிக்ஸனின் பங்களாவில் வேலை பார்த்து வந்த மேரியின் அம்மா இப்படித்தான் கருவுற்றாள். பிறகு அந்த பங்களாவை வாங்கிய ராஞ்சியை சேர்ந்த பிரசாத்ஜியிடம் அம்மாவும் பெண்ணும் வேலை செய்கிறார்கள்.

மேரி அப்பிராந்தியத்தின் பேரழகி. துடுக்கானவள். பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை தனி ஆளாய் கச்சிதமாய் செய்து முடிப்பவள். அவளின் வீரமும் நறுக்குத் தெரிந்த பேச்சும் அவளின் பின்னால் சுற்றும் ஆண்களை சற்றுத் தள்ளி இருக்க வைத்தது. மேலும் அவள் உயரத்திற்கு ஓரவ்ன் சமூகத்தில் ஆண் பிள்ளைகளும் இல்லை. 

பிரஸாத்ஜி யின் தோட்டத்தில் விளையும் பழங்கள் காய்கறிகளைப் பறித்து மேரி, பக்கத்திலிருக்கும் தோக்ரி பஜாருக்கு சென்று விற்று வருவாள். அவளின் நேர்மையும் கறாரான வியாபாரமும் பிரஸாத்ஜி க்கு நிறைய பொருளீட்டித் தரும். தோக்ரி பஜாரில் மேரிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. ராணியைப் போல் நடந்து கொள்வாள். அவளுக்கான டீ, வெற்றிலை, பீடி எல்லாம் மற்றவர்கள் செலவில் தூள் பறக்கும். ஆனால் ஒருவரையும் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டாள்.மேரிக்கு ஜாலிம் என்றொரு முஸ்லீம் காதலன் இருந்தான். என்றைக்கு இருவரிடம் நூறு ரூபாய் சேர்கிறதோ அன்று திருமணம் செய்து கொள்வார்கள்.

 ஓரவ்ன் சமூகத்தினருக்கு மேரி, ஒரு முஸல்மானை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லைதான் என்றாலும் அவள் முழுமையாய் அச்சமூகத்தை சார்ந்தவள் கிடையாது. தவறான உறவில் பிறந்தவள் என்பதால் ஓரவ்ன் சமூகம் அவளைத் தன்னுடையவளாய் கருதுவதில்லை. பிரஸாத்தின் ஐம்பது ஏக்கர் நிலத்தில் சால் மரங்கள் பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும். அப்பகுதியின் மர ஒப்பந்தக் காரனான தஷீல்தார் சிங் பிரசாத்தையும் அவர் மகனையும் ஏமாற்றி மிக மலிவான விலையில் அம்மரங்களை வாங்கிவிடுவான். மரங்களை வெட்டுவதற்கு மிக சல்லிசான கூலியில் ஓரவ்ன் மற்றும் முண்டா சமூகத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் வேலைக்கு அமர்த்திவிடுவான். யாராவது கேள்விகள் கேட்டால் அவர்களை சாராயத்தைக் கொடுத்து மடக்கிவிடுபவன் மேரியைப் பார்த்த உடன் காம வயப்படுகிறான்.

 ஒரு காட்டாற்றைப் போன்ற மேரி, தஷீல்தார் சிங்கை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் ஓரம் தள்ளிவிட்டு போய்கொண்டிருப்பாள். அவனின் காமம் முற்றி எல்லை மீறும்போது கத்தியைக் காட்டி மிரட்டவும் செய்வாள். இருப்பினும் அவன் விடாமல் அவளைத் தொடர்ந்து கொண்டிருப்பான். ஆதிவாசிகளின் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் வேட்டை ஒரு முக்கிய அம்சம். ஈட்டி, வில் அம்புகளை எடுத்துக் கொண்டு காடுகளுக்குப் போய் வேட்டையாடி, அங்கேயே அம்மிருகங்களைத் தின்று குடித்து நடனமாடிக் களித்து மாலையில் வீடு திரும்புவார்கள். இந்த வேட்டை சடங்கு பனிரெண்டு வருடங்கள் ஆண்களுக்கானது, அதன் பிறகு வரும் ஒரு வருடம்தான் பெண்களுக்கு.

மொத்த பெண்கள் கூட்டமே அந்த ஒரு வருடத்திற்காக ஆவலாய் காத்திருக்கும். இம்முறை பெண்களின் வருடம். ஆண்கள் அவர்கள் முறையில் என்னவெல்லாம் செய்வார்களோ அதை பெண்களும் செய்வார்கள். கண்ணில் தென்படும் பட்சிகள், முள்ளம் பன்றிகள், முயல் என எதையும் அடித்து சுட்டுத் தின்பார்கள். மூக்கு முட்டக் குடிப்பார்கள் பின்பு மாலையில் வீடு திரும்புவார்கள். தஷீல்தாரின் தொடர்ச்சியான அலைச்சல்களுக்குப் பிறகு மேரி அவனை காட்டிற்கு வரச் சொல்வாள். வேட்டை நாளில் தன்னை அவனுக்கு விருந்தாகத் தருவதாகச் சொல்வாள். அவனும் மகிழ்ந்து போய் அவளுக்காகக் காத்திருப்பான்.

மேரி தன் கூட்டத்தினருடன் காட்டிற்குச் சென்று நன்றாகக் குடித்து நிறையத் தின்று, நடனமாடிக் களித்துவிட்டு  தஷீல்தாரை வரச் சொன்ன பள்ளத்தாக்கை நோக்கிச் செல்வாள். யூகித்தபடி அவனைக் கொன்றுவிட்டு தன் காதலனைத் தேடிச் செல்வாள். ஒரு பழங்குடிப் பெண் தன் நிலத்தின் ஆதாரங்களை அழிப்பவனைக் கொல்வது கிட்டத்தட்ட ஒரு மிருகத்தைக் கொல்வதைப் போலத்தான். என்ன இந்த ஒப்பந்தக்காரன் கொஞ்சம் பெரிய மிருகம். இவனை வேட்டையாடியதன் மூலம் மற்ற நாலு கால் மிருகங்களின் மேல் அவளுக்கிருந்த பயம் முழுமையாய் விலகிவிட்டதாய் கதை முடியும்.

 ஒரு சாகஸக் கதை போலத் தெரிந்தாலும் காட்டின் விவரணைகளும், பழங்குடியினர் வாழ்வு முறைகளும் வாசிக்கப் பரவசத்தை ஏற்படுத்தியது. காட்டின் வாழ்வு மீதும், ஜிப்சி வாழ்க்கை முறையின் மீதும் ஏற்கனவே எனக்கு ஏக்கம் இருப்பதால் இந்தக் கதை அதிகம் பிடித்துப் போனது. வங்கப் படைப்புகளுக்கே உரிய நிலக் காட்சி விவரணைகளும் இயற்கைக் குறிப்புகளாய் மஞ்சள் நிற கிஷ்கிந்தப் பூ, சிவப்புப் பலாச மரங்கள், மஹீவா மரங்கள், ஸால் மரங்கள் போன்ற புதுப் பெயர்களும் இச்சிறுகதையில் இடம்பிடித்திருந்தன.

 0


 இரண்டாவது வேட்டைக் கதை யூமா வாசுகி எழுதியது. கர்நாடகத்தின் கூர்க் சமூகத்தினரைப் பற்றிய கதை. அவர்களின் சடங்குகள், பண்பாட்டு முறைகள் குறித்து விலாவரியாய் இக் கதையில் சொல்லப்பட்டிருக்கும். எனக்கிருக்கும் தற்போதைய மனநிலையில் யாராவது கர்நாடகம், கன்னடம் எனச் சொல்ல வாயெடுத்தாலே ஆஹா எனச் சொல்லிவிடுவேன் போல. திதி படமும் வாசித்துக் கொண்டிருக்கும் கன்னடப் படைப்புகளும் அந்நிலத்தின் மேல் அப்படியொரு வாஞ்சையை உருவாக்கி விட்டிருக்கின்றன. மேலும் குடகு எனக்கு மிகவும் பிடித்த நிலப் பகுதி. கூர்க் என்னால் மறக்கவே முடியாத அனுபவங்களைத் தந்திருக்கிறது.

ஒரு குடும்பத்திற்குள் நிகழும் பெண் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஏமாற்றம்தான் இக்கதை. அத்தை மகளை மணமுடிக்க இயலாமல் போனவனின் துயரமும் அவனை நேசிக்கும் தந்தையின் வெளிப்பாடும் கூர்க் பண்பாட்டுத் தளத்தின் பின்னணியில் கதையாய் எழுதப்பட்டிருக்கும். கதையை விட இதில் விவரிக்கப்பட்டிருக்கும் கூர்க் சடங்குகள் பெரும் வியப்பைத் தந்தன.

கூர்க் சமூகத்தினரின் திருமணச் சடங்குகள் மிகவும் விசேஷமானவை. பறை இசையும் பாரம்பரிய நடனமும் திருமணத்தின் முக்கிய அம்சங்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து தாள கதிக்கு ஏற்றார்போல் ஆடவேண்டும். இந்த ஆட்டத்தில் தோற்பது பெரும்பாலும் ஆண் தான். தோற்ற ஆணைப் பெண்கள் கிண்டலடித்துத் துரத்துவார்கள். நிகழ்வின் அடுத்த பிரதானமான அம்சம் குடிதான். எவ்வளவு ரூபாய்க்கு மதுவகைகளை வாங்குகிறார்களோ அதை வைத்தே திருமணத்தின் பிரம்மாண்டம் அளக்கப்படும். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அந்நாளில் எல்லோரும் தவறாமல் குடிப்பார்கள். குடித்து மயங்கி விழும் சிறுவர்களை அளவாய் குடித்த அம்மாக்கள் ஓரமாய் படுக்க வைப்பார்கள்.

பெண்ணுக்கு மருதாணி வைத்துவிடுவது, எல்லா மதுவகைகளையும் ஒரு பெரிய கலனில் கொட்டி காக் டெயில் தயாரிப்பது, ஒரு பாத்திரத்தில் அதை மொண்டு சகலருக்கும் ஊற்றுவது என சகலவிதமான மதுக் கொண்டாட்டங்களும் திருமணத்தில் உண்டு. மேலதிகமாய் பெண்ணை திருமண வீட்டிலிருந்து ஐம்பது அடி தள்ளி நிற்க வைத்து விடுவார்கள். மாப்பிள்ளையின் தம்பி அப் பெண்ணை வீட்டிற்குள் விடக் கூடாது. பெண்ணும் அவளது தோழியும் எப்படியாவது மாப்பிள்ளையின் தம்பியை ஏமாற்றி வீட்டிற்குள் நுழைய வேண்டும். மாப்பிள்ளையின்  தம்பிக்குத் துணையாய் அவன் அம்மா, பெண்ணை வீட்டிற்குள் விட்டுவிடாதே நம்மைப் பிரித்துவிடுவாள் என எச்சரித்துக் கொண்டே இருப்பாள். பெண்ணின் தாய் தந்தையரோ வழி மறிப்பவனுக்கு விதம் விதமான மதுவகைகளை புகட்டி, மது ஊற்றி அவனை மயக்கமடையச் செய்து பெண்ணை வீட்டிற்கு உள்ளே விட வேண்டும். இந்த சடங்கு கூர்க் சமூகத்தில் வெகு பிரசித்தம். கதையில் இச்சடங்கு மிகப் பிரமாதமாய் எழுதப்பட்டிருக்கும்.

 கூர்க் சமூகமும் வேட்டைச் சமூகம்தான். இடையில் கத்தி கொண்ட, கருப்பு நிற பாரம்பரிய உடையணிவார்கள். வாக்குத் தவறாமை, நேர்மை போன்றவை அவர்களின் அடிப்படை இயல்புகள்.  வளர்ந்த கூர்க் சமூகம் மெல்ல தன் பழமைகளிலிருந்து விடுபட்டு கல்வி மற்றும் வேலை நிமித்தமாய் நகரப் பொது வாழ்விற்கு தங்களை பழக்கிக் கொண்டார்கள். அதன் வெளிப்பாடாய் ஷகீலா,  தன் மாமன் மகனான பொனாச்சாவை திருமணம் செய்து கொள்ள விரும்பாமல்  தனக்குப் பிடித்த இன்னொருவனை திருமணம் செய்து கொள்கிறாள். தன் அண்ணனான உஸ்மானிக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் ஷகீலாவின் பெற்றோர்கள் மீறுகிறார்கள். அந்நிகழ்விற்கு செல்லும் , தன்னை எப்போதுமே ஒரு கூர்க் ஆக மட்டுமே உணரும் உஸ்மானி என்ன செய்கிறார் என்பதுதான் கதை. 

நல்ல அனுபவத்திற்கு இரண்டு கதைகளும் உத்திரவாதம்.


 நன்றி :  அழியாச்சுடர்கள் தளம்.

வேட்டை கதை 

Sunday, January 11, 2015

சமீபத்திய மூன்று சண்டைகள்


” நீ கேக்குற கேள்விக்குலாம் பதில் சொல்லிட்டு, உன் காசுல திங்குற மூணு வேள சோத்துக்கு பதிலா, நாலு பேரோட படுத்து சம்பாதிக்கலாம், வைடா ஃபோன.. வைடா.. ஃபோன”

தொடர்பு அறுந்துபோனது.

நளன் ஆழமாய் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான். அலைபேசியை சில நிமிடம் வெறித்தான். பின் அதைப் பத்திரமாய் கட்டிலில் எறிந்துவிட்டு குளிக்கப் போனான்.

நளன். வயது 34. ஏதோ ஒரு ஊரில் வேலை பார்க்கிறான். கதையின் முதல் வரியைச் சொன்னது அவன் மனைவி தமயந்தி. அவளும் ஏதோ ஒரு ஊரில் இருக்கிறாள். இருவருக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. ஒரு மகள். வாரத்திற்கு இரண்டு சண்டைகளை தவறாமல் நிகழ்த்துவார்கள். ஒவ்வொரு சண்டையையும் அடுத்த சண்டை தன் தீவிரத்தாலும், உக்கிரமான வார்த்தைகளாலும் மலிவாக்கி விடுவாதால் புதுப்புது சச்சரவுகள் அதன் உச்சத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.

நளன் கறாரானவன். ஒரு நிறுவனத்தில் நிதிப் பிரிவில் வேலை பார்க்கிறான். அதே கணக்குப் பிள்ளை புத்தி வாழ்வின் சகல கூறுகளிலும் தென்படும்.  தமயந்தி தன் ஆடைகளைத் தவிர வேறெதையும் பெரிதாய் பொருட்படுத்தாதவள். சதா இவனிடம் கணக்கு சொல்லவேண்டுமே வென கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். நேற்று காலை வாங்கிய உப்பு அரை கிலோவா? ஒரு கிலோவா? என்கிற குழப்பத்தோடுதான் அவளின் பெரும்பாலான அடுத்த நாள் காலைகள் விடியும். ஆனால் சண்டை என்று என்று வந்து விட்டால் யாரையும் ஒரு கை பார்க்கும் வல்லமை கொண்டவள்.

அலைபேசியில் கத்திவிட்டு கட்டிலில் சுருண்டு படுத்து அழுதுகொண்டிருந்த தமயந்தி, தன் நினைவிற்கு உடனே வந்த பழைய சண்டையை நினைத்துக் கொண்டாள். 

அன்று காலை நளன் ஊரிலிருந்து வந்திருந்தான். மகள் நிலா பள்ளிக்கூடம் போயிருந்தாள். வந்த உடனேயே அவளைக் கட்டிக் கொண்டு படுக்கையில் தள்ளினான். அவர்களின் சண்டைகளைப் போலவே கலவியும் ஆக்ரோஷமானது. மதியம் நிலா பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் வரை படுக்கையிலேயே கிடந்தார்கள். நளன் மதிய உணவை ஓட்டலில் சொல்லிவிட்டு நிலாவோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் நிலா வழக்கத்தை விட சற்று அதிக குறும்புகளை செய்துகொண்டிருந்தாள். அவன் வாங்கி வந்திருந்த இரண்டு பொம்மைகளை பத்தே நிமிடத்தில் உடைத்து எறிந்தாள். எரிச்சலான தமயந்தி, நிலா முதுகில் இரண்டு அடி வைத்தாள். பதிலுக்கு நிலா ஏதோ திட்ட,

“இந்த வயசுல என்ன பேச்சுடி பேசுற?” என அவள் மீதுப் பாயப் போனவளின் தலைமுடியை நளன் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“எதுக்கு இப்ப முடிய பிடிச்சி இழுக்குற? அவ என்ன பேச்சு பேசுறா தெரியுமா, என்ன தடுக்கிற” என்றபடியே இவன் தலையில் ஒரு தட்டு தட்டினாள்.

அவ்வளவுதான் இவனுக்கு ஆத்திரம் பொங்கிவிட்டது.

”பச்ச குழந்தைய அடிக்கிற, ஏன்னு கேட்ட புருஷனையும் அடிக்கிற, என்னடி ரொம்ப குளிர் விட்டு போச்சா?”

என கன்னத்தில் ஒரு அறை விட்டான். அவளும் இவன் மீது பாய முயன்று தோற்றாள். ஆனால் திருப்பி அடிக்க முடியாததின் இயலாமையை அவனை கடுமையாய் வசைந்து தீர்த்துக் கொண்டாள்.

”தேவ்டியாப் பையா, திருட்டுத் தேவ்டியாப் பையா, அடிடா அடி.. என்னக் கொன்னு போட்டுடு..” என அலறினாள்

திடீர் வசையால் திகைத்தவன் “என்னது.. என்னது.. என இன்னும் ரெண்டு அடியை அவளின் வாய் மீது போட்டான்

நிலா இதையெல்லாம் பார்த்து பயந்து, வீறிட்டழுதபடியே அடுத்த வீட்டிலிருக்கும் பாட்டி வீட்டிற்கு ஓடினாள்.

இவர்கள் போட்ட சப்தம் தெருவிற்கே கேட்டது. பக்கத்து வீட்டிலிருந்த நளனின் அப்பாவும் அம்மாவும் உள்ளே வந்தார்கள்

தமயந்தி குளியலறையில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, குத்துக் காலிட்டு உட்கார்ந்து கொண்டு தேவ்டியாப் பையன்… தேவ்டியாப் பையன்… என முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

பதற்றமாய் உள்ளே வந்த அப்பா, “என்னடா பையா, என்னடா சண்ட?” என்றார்

எதுவும் சொல்லாமல் நளன் கோபத்தில் மூச்சிரைத்து நின்று கொண்டிருந்தான்.

“படிச்ச பசங்கதானடா நீங்க, இவ்ளோ அசிங்கமாவா சண்ட போட்டுப்பீங்க?”

எதுவும் பேசாமல் வெளியே போனான். இருட்டிய பிறகு பீர் வாசனையோடு வந்தான். நிலா தூங்கிப் போயிருக்க. இவள் காத்துக் கொண்டிருந்தாள். சமாதானமாகிவிட்டார்கள்.

குளித்து விட்டு வந்த பின்பும் ”படுத்து சம்பாதிச்சி” என்கிற சொல்லே நளன் காதில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது. அருகில் இருந்தால் அடித்து நொறுக்கியிருக்கலாம். என்ன செய்வது?.. என்ன செய்வது?.. என அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். மறுபடியும் அவளைத் தொலைபேசியில் கூப்பிட்டு ஆத்திரம் தீர திட்டினால் என்ன?  அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். சுவிட்ச் ஆஃப் செய்து விட்டிருக்கிறாள்.

இத்தனைக்கும், ”போன மாசம் கொடுத்த பணத்துல ஐயாயிரம் ரூபாய்க்கு கணக்கு வரலயே என்ன செலவு பண்ண?” என சாந்தமாய்த்தான் கேட்டான்.

“எழுதி வைக்க மறந்து போய்ட்டேன், பன்ற செலவுக்கு எல்லாத்துக்கும் கணக்கு சொல்லியே ஆகனுமா?”

என அவள் கோபமாய் திரும்பக் கேட்க, இவன் பதில் பேச, பிரச்சினை முதல் வரியில் வந்து நின்றது. 

பதிலுக்கு எதுவும் செய்ய முடியாத ஏமாற்றத்தோடு கிளம்பிக் கீழே வந்து பைக்கை உதைத்தான். முன்பு நடந்த சண்டை ஒன்று அவன் நினைவில் ஓடியது.

நளனின் ஃபேஸ்புக் தோழிகள் இருவர் அவனைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். சிடுசிடுப்பை சிரமப்பட்டு மறைத்துக் கொண்டு தமயந்தி அவர்களுக்கு காபி கொடுத்து விட்டு, மதிய உணவு பற்றி மூச்சு விடாமல் இருந்தாள்.

பஸ் ஏற்றி விட்டு வருவதாக சொல்லிவிட்டு அவர்களோடு கிளம்பிப் போன நளன் மாலை வரை திரும்பவில்லை. அவனின் அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

தமயந்தி கொதித்துக் கொண்டிருந்தாள்.

நளனின் தோழிகள் இருவரும் நளனிடம் ட்ரீட் கேட்டார்கள். மதியம் அவர்களை சாப்பிட்டுப் போகச் சொல்லாத தமயந்தியின் மீது கோபத்திலிருந்தவன், அவர்களைக் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த மூன்று நட்சத்திர ஓட்டலுக்குப் போனான். மூவரும் பியர் அருந்தினார்கள். கொறிக்க நல்ல உணவும் சேர்ந்து கொள்ளவே பேச்சும் பியரும் மாலை வரை நீண்டது.

ஒரு வழியாய் பில்லைக் கொடுத்துவிட்டு, பஸ் ஏற்றி விட்டு தள்ளாட்டமாய் வீடு வந்தவனை தமயந்தி எரித்து விடுவது போல் பார்த்தபடியே கேட்டாள்.

”எந்த லாட்ஜூல ரூம் போட்ட, ஒருத்தியா? ரெண்டு பேருமேவா?

நல்ல போதையிலும், ஏகத்திற்கும் பணம் செலவாகியிருந்த துக்கத்திலும் இருந்தவன் அவளை ஓங்கி அறைய முயன்றான். சுதாரித்து விலகிக் கொண்ட தமயந்தி அவன் இடுப்பின் மீது உதைத்தாள். கீழே விழுந்தவனின் சட்டையைப் பிடித்து தூக்கி கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். நளன் திருப்பி அடிக்கத் தெம்பில்லாமல் அப்படியே சரிந்தான்.

அதிகாலையில் விழிப்பு வந்தவன் அவசரமாய் படுக்கையைத் திரும்பிப் பார்த்தான். அருகில் தமயந்தி இல்லை. படுக்கையின் மறு முனையில் நிலா கிடந்தாள். நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவிற்கு வந்ததும் ஆத்திரமாய் எழுந்து ஹாலிற்கு வந்தான். ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு முகத்தை குத்துக் காலில் புதைத்திருந்தவளைப் பார்த்தான். அவள் அருகில் போய் தலைமுடியைப் பிடித்து நிமிர்த்தினான். கண்கள் ரத்தச் சிவப்பில் குளமாகி இருந்தன. 

எழுந்து இவனை அணைத்துக் கொண்டாள். சமாதானமாகி விட்டார்கள்.

நளனால் தலைக்குள் ஓடும் பழைய சண்டைகள் குறித்தான சப்தங்களை அலுவலகம் போகும் வரை  தாக்குப் பிடிக்க முடியவில்லை. வண்டியை பாதி வழியில் ஓரம் கட்டினான். அலைபேசியில் அவளை அழைத்தான். இப்போது ரிங் போனது. எடுத்தாள்.

”குடும்பப் பொண்ணு மாதிரியா பேசுற? என்ன செலவு பண்ணோம்னு எழுதி வச்சா என்னா? நான் என்ன நாலு பொண்ணுங்களோட படுத்தா சம்பாதிக்கிறேன். ஒழைச்சுதாண்டி சம்பாதிக்கிறேன் “ 

லேசாய் விசும்பும் சப்தம் கேட்டது. 

அலைபேசியை அவசரமாய் துண்டித்துவிட்டு பைக்கை உதைத்தான்.

 * ரேமண்ட் கார்வரின் படைப்புகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த பாதிப்பில் இதை எழுதிப் பார்த்தேன். சரியாக வந்திருப்பதாக உணரவே இங்கு.. 

Wednesday, October 17, 2012

பன்னீர்ப் பூ


டி சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன். அவள் மதியம் அணிந்திருந்த இளஞ்சிவப்புக் கரை வைத்த கருப்பு நிறக் காட்டன் புடவை என்னுடலைச் சுற்றியிருந்தது. கருப்பு இன்ஸ்கர்ட்டோடு எனக்காய் முதுகு காட்டித் தூங்கிக் கொண்டிருந்தாள். படுத்தவாக்கில் நகர்ந்து இடுப்பில் கை போட்டு இறுக அணைத்து கழுத்து இடைவெளியில் முகம் புதைத்து மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன். விழித்துக் கொண்டாள் போல. பதறி எழுந்து “ஏய் டைம் என்ன ஆச்சு?” என்றாள். தெரியவில்லை. மதியம் ஒரு மணிக்கு அறைக்குள் வந்தோம். வரும்போதே தூறல் பெரிதாகியிருந்தது. ஈரத் தலையோடு உள்ளே வந்தோம். துடைத்துக் கொள் என துண்டைக் கொடுக்கும்போது மழை சப்தம் அதிகமானதைக் கேட்டுக் கண்ணடித்தாள். "செம்ம சுச்சுவேசண்டா" என்றவளை அதற்குமேல் பேசவிடவில்லை.

 என்னை உலுக்கி எழுப்பினாள். போலாம்....போலாம்...போலாம்... என மூச்சுவிடாது நச்சரித்தவளை திட்டிய படியே எழுந்து புடவையை உடலிலிருந்து பிரித்துக் கொடுத்தேன். கண்ணை மூடியபடி அவள் புடவைக்காக கைநீட்டிய காட்சியை சிறிது நேரம் நீட்டித்தேன். சிணுங்கி மேலே பாய்ந்து புடவையைப் பிடுங்கிக் கொண்டு அறையோடு ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள். எழுந்து கிளம்பினேன். மாலை ஐந்துமணி ஆகியிருந்தது. குளிருக்கு உடல் மெல்ல நடுங்கியது. சன்னல் கதவைத் திறந்து பார்த்தேன். மழை விட்டிருந்தது. சன்னலை ஒட்டியிருந்த மாமரம் கனத்த மெளனத்திலிருப்பதைப் போல் பட்டது. பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்துகொண்டு வேறொரு பெண்ணாய் வெளியில் வந்தாள். இளஞ்சிவப்பு நிற ஜாக்கெட்டும் கருப்புக் காட்டன் புடவையுமாய் அவளைப் பார்க்க எப்போதோ விரும்பியிருந்தேன். ஏதோ ஒரு சினிமா படத்தில் கதாநாயகி அணிந்திருந்த உடை. பார்த்தவுடன் பிடித்துப் போய் இவளிடம் சொன்னேன். இன்றைக்காய் எடுத்து வைத்திருந்தாள் போல.

 போலாம்பா என அருகில் வந்தவளை மெதுவாய் அணைத்துக் கொண்டேன். சொன்னா கேள்.. போலாம் வா.. டைமாச்சி.. என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்த அவளின் உதடுகளை சோம்பலாய் கவ்விக் கொண்டேன். சற்றுத் திமிறி என்னைப் பலவந்தமாய் விலக்கி தன் உதடுகளை உள்ளங் கையால் திரும்பத் திரும்ப அழுந்த துடைத்துக் கொண்டாள். அப்படித் துடைக்கும்போது அவள் நெற்றி சுருங்கியிருக்கும். அசூசையுமல்லாத கோபமுமல்லாத ஒரு விநோத முக பாவணை வெளிப்படும். எனக்கு இது ஒரு விளையாட்டாய் இருந்தது. அவள் ஒவ்வொரு உதட்டு முத்தத்திற்கும் இப்படி ஆவாள் என்பதுதான் இன்னும் சுவாரசியம்.

 ப்ளீஸ் போலாம் என்றாள். பெருமூச்சு விட்டபடி அறைக்கதவைத் திறந்தேன். வெளியேறினோம்.

தெருவில் மழை நீர் சிறுசிறு குளங்களை உருவாக்கிவிட்டிருந்தது. ஏழு மணிக்கான இருள் சூழ்ந்திருந்தது. கரு மேகங்கள் உடையும் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தன. அவளின் விரல் பிடித்தேன்.

 “விடு இதென்ன ரோட்ல?”
 .....

 “நீ ஏன் வர? நான் போய்க்கிறனே”

 பதில் சொல்லவில்லை. பிரதான சாலைக்கு வந்தோம். மழையில் எல்லா சிறுநகரங்களும் ஒன்று போலவே காட்சியளிக்கின்றன.

 “டீ குடிக்கலாமா”

 “வேணாம்டா டைம் ஆகிருச்சி”

 “அப்ப பஸ் ஸ்டாண்ட் உள்ள போக வேணாம் இங்கயே நிப்போம்”

திருத்தணியிலிருந்து வரும் பேருந்து நின்றது. ஏறிக் கொண்டோம். கூட்டம் இல்லை. முன் வரிசை சீட்டுகள் தவிர்த்துப் பின்னிருக்கைகள் காலியாகக் கிடந்தன. மொத்தப் பேருந்தே நனைந்து நடுங்கிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. சன்னல்கள் அடைக்கப்பட்டு மெல்லிருளாய் கிடந்தது. இடப்புறம் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தோம். சன்னலை மேலேற்றினாள். ஈரக் காற்று முகத்தை விசிறியது. திருவள்ளூர் ரயில்வே பாலத்தைக் கடந்தவுடன் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. முகமும் ஆடைகளும் நனையத் துவங்கியதும் சன்னலை மூடினாள். எனக்கு மழையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சொல்லவில்லை.

 என் வலக்கை விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு இறுக்கினாள். குளிர்தில்ல என சிரித்தாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழையில் அவளின் கேசம் நெற்றி தோள் எல்லாம் நனைந்திருந்தன.

 “ஈரமான பூ போல இருக்க நீ” என்றேன்.

 “என்ன பூ? ரோஜாவா? இல்ல உனக்கு பன்னீர்பூ தான பிடிக்கும் ஈரப்பன்னீர் பூவா நானு?”

 “இல்லடி நீ பன்னிப்பூ”

என்றதும் வெடித்துச் சிரித்தாள்.

“நான் பன்னி சரி ஆனா நீ எரும. ஹப்பா! என்ன வெயிட்டு”

 நடத்துனர் அருகில் வந்ததும் அவசரமாய் கைப்பை திறந்து பணமெடுத்து நீட்டி ஒரு ஐயப்பன்தாங்கல், ஒரு அசோக் பில்லர் என்றாள். டிக்கெட்டை வாங்கி என் சட்டைப் பையில் திணித்தாள். உனக்கு நான் பன்ற கடைசி செலவு. டிக்கட்ட பத்ரமா வச்சிக்க என்றாள். அவள் கண்களை ஆழமாய் பார்த்தேன். நான் பார்ப்பதை உணர்ந்து கண்களை இன்னும் விரித்தாள்.  “நல்லா பாரு. இனிமே உன் பார்வைக்கெல்லாம் மயங்கமாட்டேன்” என்றாள். பின்னால் திரும்பி யாரும் பார்க்கவில்லையென உறுதிபடுத்திக் கொண்டு அவள் உதட்டைக் கவ்வி இழுத்தேன். என் மார்பைப் பிடித்துத் தள்ளி விடுவித்துக் கொண்டு உள்ளங்கையால் உதட்டைத் திரும்பத் திரும்ப அழுந்த துடைக்க ஆரம்பித்தாள். நான் சிரித்தேன்.

 “உன் ஃப்ர்ஸ்ட் நைட்லயும் இப்படித் தான் பண்ணியா?.. “

 “எப்படி?.. “

 உதட்டைத் துடைத்து துடைத்துக் காண்பித்தேன்.

 “அவன் உன்ன மாதிரி கவிஞன்லாம் கிடையாதே. டைரக்ட் மேட்டர்தான். அன்னிக்கு அவசர அவசரமா முடிஞ்சதும் அவசர அவசரமா எழுந்து போய் கப் கப் னு சிகரெட் புடிச்சான். எனக்கு சிரிப்புதான் வந்தது..”

 “அப்ப சிரிச்சயா? “

 “இல்ல ஆனா அதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் நைட்ட நினைச்சி நிறைய நாள் சிரிச்சேன். “

 “இப்ப சிரிப்பு வருதா”

 “இல்ல” ..

இரண்டு நிமிடம் அநிச்சையாய் மெளனத்திற்குப் போய் மீண்டோம்.

 மீண்டும் என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

 “நைட்டு என்னடா பசங்களோட சரக்கடிக்க போறியா?”

 “தெரில. அடிப்பேன்னுதான் நினைக்கிறேன்.” 

“ஓ சோகத்துல இருக்கியோ?”

 “இல்லயே ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என வெறுப்பாய் சொன்னேன். 

முதுகிற்குப் பின்னால் கைவிட்டு என்னுடலை அவளுக்காய் இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 “சாரி கேக்கணுமா உங்கிட்ட”

 “இல்லடி ஆனா என்ன விட்டு போய்டாத ப்ளீஸ்”

 “ஐயோ இத நீ லட்சம் முற சொல்லிட்டே நானும் லட்சத்தி ஒரு முற விளக்கம் சொல்லிட்டேன். மறுபடியும் ஆரம்பிக்காத ப்ளீஸ்.” 

மெளனமானோம்.

 மழையின் வேகம் சீராய் அதிகரிக்கத் துவங்கியது. சாலையில் ஓடிய நீரைக் கிழித்துக் கொண்டு பேருந்து விரைந்தது. பூந்தமல்லி வந்ததே தெரியவில்லை விசில் சப்தத்தோடு ஐயப்பன் தாங்கல் என்றார் நடத்துனர். இருவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.அதுக்குள்ளவா வந்திருச்சி என்றாள். நான் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் நின்றுவிட்டு பேருந்து கிளம்பியது மீண்டும் தன் கையை முதுகிற்குப் பின் துழாவி என்னை இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 நகரம் வெள்ளக் காடாகியிருந்தது. போரூரிலிருந்து பேருந்து ஊர்ந்துதான் போய் கொண்டிருந்தது. நாங்கள் மெளனத்திலிருந்து மீளவே இல்லை. மழையை, பைத்தியம் பிடித்த வாகன நெரிசலை சோடியம் விளக்குகளின் மங்கல் ஒளியோடு பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருந்தோம். கத்திப்பாரா விற்கு ஒரு கிமீ முன்பே வண்டி சுத்தமாய் நின்றுவிட்டது. இறங்கலாம் என எழுந்து கொண்டாள். இறங்கினோம்.

ஆட்டோ, பேருந்து என சகல வாகனங்களும் பெருங்குரலில் கத்திக் கொண்டிருந்தன. பேருந்து வந்த வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

 “ரொம்ப டைமாயிருச்சா”

 “இல்லபா பரவால்ல”

 நடக்க நடக்க நெரிசல் குறைந்து கொண்டே வந்தது. எதுவுமே பேசத் தோன்றவில்லை. எல்லாம் தீர்ந்த வெளியில் நடந்து கொண்டிருந்தோம். என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள். இது ரோடாச்சே என்றேன். புன்னகைத்து இன்னும் இறுக்கிக் கொண்டாள். சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. எங்களுக்கு சமீபமாய் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஐயப்பன் தாங்கல்? என்றோம். ஓட்டுனர் தலையசைத்தார். ஆட்டோவில் அமர்ந்து மீண்டும் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

மழை சுத்தமாய் நின்று போயிருந்தது. அடுத்த அரைமணிநேரப் பயணம். ஐயப்பன் தாங்கல் வந்துவிட்டது. அந்த பஸ் ஸ்டாப் தாண்டி நிறுத்துங்க என ஓட்டுனருக்காய் குனிந்து சொன்னாள். எனக்காய் நன்கு திரும்பி கடைசியா எனக்கொரு முத்தம் கொடு என்றாள். எனக்குள் அதுவரை அடங்கிக் கிடந்த ஏதோ ஒன்று உடைந்து சப்தமாய் அழுகையாய் வெளியேறியது. ஓட்டுனர் திகைத்து சப்தமெழ வண்டியை நிறுத்தினார். முகத்தை மூடிக் கொண்டு அழுத என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள். நெற்றியிலும் கன்னத்திலும் உதட்டிலுமாய் மாறி மாறி முத்தமிட்டாள். பின்பு மெல்ல தன்னை விலக்கிக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

 0

Tuesday, October 11, 2011

சந்திரா அத்தை



நானும் கண்ணனும் உளுத்துப் போயிருந்த பின்வாசல் மரக்கதவை சப்தமெழத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தோம். சந்திராஅத்தை தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து எங்களைப் பார்த்தவள் வாயெல்லாம் பல்லாகி

” இப்பதான் வர வழி தெரிஞ்சிச்சா?”

என சப்தமாய் கேட்டுக் கொண்டே கையை அருகிலிருந்த தண்ணீர் பாத்திரத்தில் விட்டு அலம்பிக்கொண்டு எழுந்துவந்தாள். என்னை லேசாக அணைத்து தன் காய்த்துப்போன விரல்களால் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தாள்.

”அப்படியே அவர உரிச்சி வச்சிருக்கான் பாரு” எனச் சொல்லிக்கொண்டே

“ராணீ” என சப்தமாய் கூப்பிட்டாள். உள்ளே இருந்து நீளப்பாவாடையையும் ஆண்சட்டையையும் அணிந்த ஒரு பெண் வந்தாள். என்னைப் பார்த்து

”ஐ! சிவாவுமா வந்திருக்கான்?”

என்றபடி நெருங்கி வந்து கையைப் பிடித்துக்கொண்டாள். எனக்குக் கூச்சமாக இருந்தது. இருவரையுமே முதல்முறையாய் பார்க்கிறேன். ஆனால் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

சந்திரா அத்தை அப்பாவிற்கு சுற்றிவளைத்து தங்கை முறைவேண்டும். என்ன காரணமென்றே தெரியாமல் பல வருடங்களாய் தொடர்பில்லாமல் போய்விட்டது. கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலையிலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரம்தான் ஆனாலும் இப்படி ஒரு சொந்தம் இருப்பதே எனக்குத் தெரியாது. மூன்று மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் பதினாலாம் நாள் காரியத்திற்கு இங்கு வந்த அப்பா திரும்பி வரும்போது கண்ணனைக் கூட்டிவந்தார். ப்ளஸ்டூவில் தவறவிட்ட இரண்டுபாடங்களை மூன்று வருடங்களாய் எழுதிக்கொண்டு ஊரைத் தேய்த்துக் கொண்டிருந்தவனை தொழில் ஏதாவது கற்றுக்கொள்ளட்டும் என அழைத்து வந்ததாய்ச் சொன்னார். அப்பாவின் கடையிலும் ஆள் கிடையாது. வீட்டிலும் கூடமாட ஒத்தாசைக்கு ஆளில்லாமல் இருந்தது. கண்ணன் வந்தது எல்லாருக்கும் உதவியாய் இருந்தது.

அப்பா என்னுடைய சைக்கிளை கண்ணனுக்குக் கொடுத்து விடச் சொன்னார். அவர் பேச்சிற்கு மறு பேச்சு கிடையாது. அடுத்தநாளே என் சைக்கிள் பறிபோயிற்று. ஏழாம் வகுப்பிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சைக்கிளை சின்னப்பையன் சின்னப்பையன் என இழுத்தடித்து ஒன்பது வந்தபிறகுதான் வாங்கித்தந்தார். ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் வில்லன் வந்துவிட்டான். இனி கேர்ல்ஸ் ஸ்கூலை சுற்றிக்கொண்டு போக முடியாததையும் ஷீலாவைத் தொடர்ந்து போய் பெல் அடிக்க முடியாததையும் நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது.

ஆனால் கண்ணன் வீட்டிற்கு வந்த நாலாம் நாளிலேயே

“இரண்டாவது ஷோ சினிமாவிற்குப் போலாம் வா”

என இரகசியமாய் கூப்பிட்டபோது உடனே ஒட்டிக் கொண்டேன். வீட்டிற்குச் சமீபமாக இருக்கும் எம்கேஎஸ் டாக்கீஸில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாறும் எல்லாப் படங்களையும் வீட்டிற்குத் தெரியாமல் போய்ப் பார்த்தோம். மாடியில் படுத்துக் கொள்வதாய்ச் சொல்லிவிட்டு எவருக்கும் தெரியாமல் கம்பிநீட்டிவிடுவோம். கண்ணன் சிகரெட் பிடிப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் யாரிடமும் சொன்னதில்லை. காலாண்டுத் தேர்வு விடுமுறையில் கண்ணனோடு நானும் பெண்ணாத்தூர் போகப் போவதாய் அம்மாவிடம் சொல்லிவைத்திருந்தேன்.

“எதுக்குடா அங்கலாம்?” என இழுத்த அம்மாவை நச்சரித்து அப்பாவிடம் சொல்ல வைத்து இதோ கிளம்பி வந்துவிட்டேன்.

0

கண்ணனின் அப்பா அவன் சிறுவனாய் இருக்கும் போதே இறந்து விட்டார். சந்திரா அத்தை சத்துணவுக் கூடத்தில் ஆயா வேலைக்குப் போய் கொண்டிருந்தாள். ராணி ப்ளஸ்டூ படிக்கிறாள். ராணிதான் லொடலொட வெனப் பேசிக்கொண்டே இருந்தாள். அத்தையும் அவளும் அடிக்கடி எங்களைப் பற்றிப் பேசிக் கொள்வார்களாம்.

”உங்க யாரையுமே எனக்குத் தெரியாது” எனப் பேச்சு வாக்கில் பட்டெனச் சொல்லிவிட்டேன். சமைத்துக் கொண்டே இதைக் கேட்ட சந்திரா அத்தையின் முகம் சுருங்கிப் போனது.

”உங்க அம்மாக்காரிதான் எங்க ஒறவே வேணாம்னு இருந்துட்டாளே பின்ன எப்டி சொல்வா? ” என்றபடியே சமையலைத் தொடர்ந்தார். நான் ராணியுடன் வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். யாரோ ஒரு செட்டியாரின் பழைய வீடு. நாட்டு ஓடு போட்ட மூன்று கட்டு வீடு. ஒருவீதியில் முன்வாசலும் இன்னொரு வீதியில் பின்வாசலும் இருந்தன. இப்படியொரு நீளமான வீட்டை நான் பார்த்ததே கிடையாது. வீட்டிற்கு நடுவில் ஒரு திறப்பு இருந்தது. துளசிச் செடிமாடம் ஒன்று சதுரமான சிமெண்ட் தரையில் புதைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி அகலமான மரஊஞ்சல் ஒன்று போடப்பட்டிருந்தது. ஏதோ ஒரு சினிமா படத்தில் இப்படியொரு வீட்டைப் பார்த்திருந்ததை நினைத்துக் கொண்டேன். வீட்டுக்கார பாட்டி முன் கட்டில் இருந்தாள். அத்தையும் ராணியும் பின்கட்டில் இருந்தார்கள். பாட்டியைத் தவிர அந்தப் பெரிய முன் கட்டில் யாருமே இல்லை.

“ஏன் பாட்டிக்கு யாருமே இல்லையா” என ராணியிடம் கேட்டேன். பாட்டியோடு எல்லாருக்கும் ஏதோ சண்டையாம். அதற்கு மேல் ராணிக்கும் ஒன்றும் தெரியவில்லை. வாடகை என்று எதுவும் தருவதில்லை. மாறாய் பாட்டிக்குச் சமைப்பது, அவரின் துணிகளைத் துவைப்பது என எல்லா வேலையையும் சந்திரா அத்தையே பார்த்துக்கொண்டாள்.

சந்திரா அத்தைக்கு நான்கு கைகள் இருக்கிறதா என்றும் கூட சில நேரங்களில் தோன்றும். நடப்பதே கூட விறுவிறு நடைதான். அவளோடு நடந்து போகும் சந்தர்ப்பங்களில் கிட்டத்தட்ட ஓடவேண்டிய நிர்பந்தம்வரும். நொடியில் சமைக்கும் வித்தையைக் கற்று வைத்திருந்தாள். தூங்கி எழுந்து கண்ணனும் நானும் ஏரிக்கரைக்குப் போய் திரும்புவதற்குள் காலை டிபனோடு மதியத்திற்கும் சேர்த்து சாப்பாடு தயாராகி இருக்கும். நல்ல காரமாகத்தான் சமைத்தாள். அம்மாவின் சமையலில் காரமே இருக்காது. போலவே எங்கள் நால்வருக்கு சமைக்க அம்மா சமையல்கட்டே கதியாய்க் கிடப்பாள். இங்கு அது தலைகீழாய் இருந்தது. தினம் நூறு குழந்தைகளைக்குச் சமைத்துப்போட்டு சந்திரா அத்தைக்கு இந்த வேகம் பழகிவிட்டதாய் ராணி சொன்னாள். இடையில் முன்கட்டிற்குப் போய் பாட்டிக்கான சமையலையும் செய்துவிட்டிருப்பாள்.

அத்தை போனதும் கண்ணனும் எங்காவது கிளம்பிப் போய்விடுவான். நானும் ராணியும் அந்தப் பெரிய வீட்டில் விளையாடிக் கொண்டிருப்போம். பல்லாங்குழி, ரம்மி, கேரம்போர்ட் என விளையாட்டு மாறிமாறி தொடர்ந்து கொண்டிருக்கும். மதியம் பாட்டி தூங்கியதும் ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டு தேவி, ராணி, வாரமலர் புத்தகங்களைப் படித்துக்கொண்டு சினிமாக்கதை பேசிக்கொண்டிருப்போம். முன்னிரவுகளில் சந்திராஅத்தையையும் சேர்த்துக்கொண்டு பின்வாசலில் பாய்விரித்து அமர்ந்து திருடன் போலிஸ் விளையாட்டு விளையாடுவோம். சந்திரா அத்தைக்கு போலிஸ் சீட்டு வந்தால் எப்போதும் திருடன் கண்ணன்தான். திருடன் சீட்டு எனக்கோ ராணிக்கு வந்திருப்பதை பூடகமாகச் சொன்னாலும் அத்தை சிரித்துக் கொண்டே “கண்ணந்தான் திருட்டுப் பையன்” என்பாள்.

எல்லா விளையாட்டிலும் நான்தான் ஜெயித்தேன். ராணி வேண்டுமென்றே தோற்கிறாளா என்றும் கூடத் தோன்றும். அத்தை பின் கட்டிலிருந்த சிறிய தோட்டத்தில் பூத்துக் காய்த்திருந்த மருதாணியை பறித்து அரைத்து என் உள்ளங்கையில் பூசினாள். அடுத்த நாள் விரல்கள் சிவந்திருந்ததைப் பார்த்ததும் “உனக்கு ஆச அதிகந்தான்” எனச் சிரித்தபடியே கன்னத்தை வழித்து நெட்டி முறித்தாள். ராணிதான் எப்போதும் சிவா.. சிவா.. சிவா.. என மூச்சுக்கு முன்னூறு சிவா போட்டுப் பேசிக்கொண்டிருப்பாள். வாசன் தியேட்டரில் இரண்டு படங்கள் பார்த்தோம். கோவிலுக்குப்போனோம். ராணி தன் தோழிகள் வீட்டிற்கெல்லாம் ஒரு ரவுண்ட் கூட்டிப் போனாள். இரண்டு மூன்று சொந்தக்கார வீடுகள், ராணி படிக்கும் பள்ளி, என எதையும் விடவில்லை. தினம் எங்காவது சுற்றிக் கொண்டிருந்தோம். எல்லா விஷயத்திற்கும் அப்பாவிடம் அனுமதி கேட்கும் தொல்லையில் இருந்து விடுபட்டு மிகச்சுதந்திரமாய் இருப்பது சந்தோஷமாய் இருந்தது.

திடீரென்று கிளம்ப வேண்டிய நாள் வந்துவிட்டது. பத்துநாட்களும் சடுதியில் மறைந்து போனதை நினைக்க நினைக்கபெரும் துக்கமாக இருந்தது. பிரியும்போது அத்தைக்கு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ராணி அழுதே விட்டாள். “போன உடனே லட்டர் போடு” என அத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். பதினாறு கிலோமீட்டர் தூரம் பெரும் தூரமாய் தெரிந்தது. பொங்கி வந்த விசும்பலை மறைத்துக் கொண்டே ஊர் வந்து சேர்ந்தேன்.

0

தபால் அட்டையில்தான் எழுதிக் கொண்டோம். வாரத்திற்கு ஒரு லட்டர் ராணியிடமிருந்து வந்துவிடும். தீபாவளிவாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்தென ரஜினி,கமல் படம் போட்ட அட்டைகளை அனுப்பிக் கொண்டோம். எங்கள் வீட்டிலிருக்கும் மருதாணிச் செடியைக் கடக்கும்போதெல்லாம் அத்தையும் அந்த வீடும் நினைவில் வந்து கொண்டிருந்தது. அரையாண்டுத் தேர்வு லீவிற்கும் கார்த்திகை தீபத்திற்குமாய் சேர்த்து அத்தையையும் ராணியையும் திருவண்ணாமலை வரச் சொன்னேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை சந்திராஅத்தையும் ராணியும் வந்தார்கள். அம்மா பெயருக்கு சிரித்துப் பேசினாலும் அவளுக்கு உள்ளூர இருவரையும் பிடிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அப்பா வழக்கம்போல கொஞ்சமாய் பேசினார். நான்தான் சரியாக கவனிக்கவேண்டுமே என்கிற முனைப்பில் சதா பேசிக்கொண்டே இருந்தேன். அண்ணன் வெளியூரில் படித்துக் கொண்டிருந்ததால் அவனும் வீட்டில் இல்லை. தீபம் பார்த்துவிட்டு மறுநாளே சந்திரா அத்தையும் ராணியும் கிளம்பிப் போய்விட்டார்கள். என்னை அவர்களுடன் அழைத்துப்போக எவ்வளவு கேட்டும் அம்மா சாக்கு போக்குச் சொல்லி மறுத்துவிட்டாள். அடுத்த வாரம் கண்ணனோடு அனுப்புவதாகச் சொல்லிவிட்டாள். ராணியை இருக்கச் சொல்லிக்கூட அம்மா கேட்கவில்லை. அவர்கள் போனதும் எனக்கு ஆத்திரமாய் வந்தது.

சமையற் கட்டிற்குப் போனேன் அம்மா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். “அப்பனதான் மயக்குனாளுங்கன்னு பாத்தா மைக்கண்ணிங்க இவனையுமில்ல மயக்கிகிறாளுங்க”

நான் வருவதைப் பார்க்காது தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். அருகில் போய் “ஏம்மாஇப்படிபன்ற?”

எனக் கோபமாய் கேட்டேன்.

“உனக்கு என்னடா தெரியும் போ போய் படி” என விரட்டினாள்.

சற்று அழுத்தி ஏன் அவர்களை வெறுக்கிறாய்? என்றபோதுதான் அம்மா அந்தத் தகவலைச் சொன்னாள். அப்பா சந்திராஅத்தையைத்தான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தாராம். பாட்டிதான் முறை வராது எனப் பிடிவாதம் பிடித்து அம்மாவைக் கட்டிவைத்தாளாம். சற்று திகைப்பாக இருந்தாலும் மறைத்துக் கொண்டு “இதுல என்ன பிரச்சினை மொற தெரியாம இருந்திருக்கும்” என்றேன்.

“நீ போ இங்க இருந்து” என அம்மா விரட்டினாள்.

“நீ ரொம்ப பன்றம்மா” என்றதும்

“உங்க அப்பா இன்னும் அங்க போய்ட்டு வந்துட்டுதான் இருக்காரு தெரியுமா?” என வெடித்தாள்.

“போனா என்னமா?” என்றேன்.

“நீ சின்னபையன் உனக்கு ஏன் இந்தப் பேச்சுலாம்? போ இங்க இருந்து” என விரட்டினாள். வந்துவிட்டேன்.

0

அப்பாவும் காதலித்திருப்பார் என்பதை நினைக்க சற்று ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் மகிழ்ச்சியாகக் கூட இருந்தது. காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே இப்போதெல்லாம் பூரிப்பாக இருக்கிறது. முழுப்பரிட்சை லீவிற்காக காத்துக்கொண்டிருந்தேன். லீவு விட்ட அடுத்தநாளே அம்மாவிடம் அடுத்த வருஷம் பத்தாவது எங்கியுமே போவமுடியாது இப்ப மட்டும் போயிட்டு வந்துர்றேன் என்றெல்லாம் சொல்லியும் அவள் கேட்கவில்லை. முடியவே முடியாது என மறுத்தாள்.

திடீரென அப்பாவிடம் கேட்டால் சம்மதம் கிடைத்து விடும் எனத் தோன்றியது. இரவு அப்பாவும் கண்ணனும் கடையிலிருந்து வந்ததும் அப்பாவிடம் கேட்டே விட்டேன். லீவுதான் விட்டாச்சே போய்ட்டுதான் வா என சொல்லிவிட்டு நகர்ந்ததும் எனக்கு உற்சாகம் பீறிட்டது. அம்மாவைப் பார்த்து வெவ்வெவ்வே காட்டி விட்டு தூங்க ஓடிப் போனேன். அடுத்த நாள் அம்மாவின் முணுமுணுப்புகளோடு நான் தனியாய்க் கிளம்பிப் போனேன். போன நேரத்திற்கு ராணி மட்டும்தான் வீட்டிலிருந்தாள்.

“ஐயோ திடீர்னு வந்து நிக்கிற” என ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

அதுவரை காணாமல் போயிருந்த ரெக்கைகள் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டதைப் போலிருந்தது. இந்தப் பழைய வீட்டிற்கு இயல்பாகவே ஒரு சோம்பல் இருந்தது. பின் வாசல்தான் வழி என்பதால் சின்னச் சின்ன செடிகளையும் வாழை மரங்களையும் கடந்துதான் வீட்டிற்குள் நுழைய வேண்டியிருக்கும். தோட்டம் தந்த நிழலால் குளுமை பின்கட்டு முழுக்க இருந்தது. மேலதிகமாய் நிரம்பி வழியும் அமைதியும் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. ராணி என் மீது அன்பைப் பொழிந்தாள். அவளுடன் இருப்பது என்னவெனச் சொல்லிவிட முடியாத உணர்வுகளை உள்ளுக்குள் எழுப்பிக் கொண்டிருந்தது. திருவண்ணாமலை வீடு, அப்பா, அம்மா, அண்ணன், ஊர் நண்பர்கள் என எல்லாமும் சுத்தமாய் நினைவிலிருந்து போய் முழுக்க ராணியோடும் அந்த வீட்டோடும் ஒட்டிக் கொண்டேன். அத்தைக்கும் என் மீது நிறையப் ப்ரியம் இருந்தது. விதம்விதமாக சமைத்துப் போட்டாள். காரசாரமான அவளின் சமையலும் எனக்குப் பிடித்துப் போனது. ராணியின் தோழிகளுக்கும் என்னைப் பிடித்துப் போனது. அவர்கள் செட்டில் இருந்த ஒரு பெண்ணை என்னோடு இணைத்துப் பேசி கிண்டலடித்துக் கொண்டார்கள். முழுக்க பெண்களோடே சுற்றிக் கொண்டிருப்பது மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது.

வந்த மூன்றாம் நாள் இரவு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன். தாகமாய் இருந்தது. சற்றுத் தள்ளி ராணியும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் குண்டு பல்பு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. யாரையும் தொந்தரவு படுத்த விரும்பாமல் நானே சமையல் கட்டிற்கு போய் தண்ணீர் குடிக்க நினைத்து எழுந்தேன். தோட்டத்தை ஒட்டி சமையல் கட்டு தனியாக இருக்கும். இருட்டில் எதன் மீதும் மோதிவிடாமல் இருக்க வேண்டி கவனத்தோடு நடந்து சமையல் கட்டிற்கு வந்தேன். சந்திரா அத்தை சமையலறை நடுவில் எனக்காய் முதுகு காட்டி உட்கார்ந்திருந்தாள். லேசான மது வாடை அடித்தது. அத்தை என்றதும் திடுக்கிட்டு திரும்பியவளின் கையில் ஒரு பிராந்தி பாட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டேன். அவள் அதைப் புடவைத் தலைப்பில் மறைத்தபடியே என்னய்யா தூக்கம் வரல என சாதாரணமாய் கேட்பது போல் கேட்டாள். தண்ணி குடிக்க வந்தேன் என்றதும் ஹால்ல பெஞ்சு மேல சொம்புல தண்ணீ கீதுய்யா எனக் குழறலாய் சொன்னாள். நிறைந்த தூக்கத்தில் இருப்பது போலவும் எதையுமே பார்க்காதது போலவும் பாவனை செய்து கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.

படுத்த அரை மணி நேரம் தூக்கமே வரவில்லை. அத்தை குடிப்பாளா குடிப்பாளா என மனம் அரற்றியபடியே கிடந்தது. அதே நேரத்தில் பாவமாகவும் இருந்தது. நாள் முழுக்க வேலை செய்து கொண்டே இருப்பதால் உடம்பு வலிக்கு குடிப்பாள் போல என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு தூங்கிப் போனேன். அடுத்த நாள் காலை அத்தையின் முகமும் ராணியின் முகமும் ஒரு மாதிரியாய் இருந்தது. ஒரு சின்ன பதட்டத்தை ராணியின் முகத்தில் பார்க்க முடிந்தது. அத்தையிடம் எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். நான் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டேன். அத்தை வேலைக்குப் போனதும் காரம் போர்டு விளையாட்டில் மூழ்கினோம். சற்று நேரத்தில் ராணியும் சரியானது போல் இருந்தது.

மாலை கண்ணன் வந்துவிட்டான். அம்மாவிற்கு என் நினைப்பாகவே இருப்பதாகவும் என்னை உடனே அழைத்து வரும்படியும் சொன்னதாகச் சொன்னான். வந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஓடியிருந்தது. அடுத்த நாள் காலை கிளம்பும்போது எனக்குப் பெரிதாய் வருத்தம் எதுவும் இல்லாதது போல் இருந்தது. அத்தையும் ராணியும் கூட அழவில்லை. ரிசல்ட் வந்ததும் வீட்டுக்கு வா என ராணியிடம் சொல்லிவிட்டு நானும் கண்ணனும் கிளம்பி விட்டோம்.

0

ராணி ப்ளஸ்டூவில் பாஸான தகவலை அப்பா கடைக்கு போன் போட்டுச் சொல்லி இருக்கிறாள். பெண்ணாத்தூரிலிருந்து வந்ததும் நானும் லட்டர் போடவில்லை. அங்கிருந்தும் லட்டர் எதுவும் வரவில்லை. விடுமுறை முடிந்து பத்தாவது துவங்கியது. அதுவரைக்கும் ஏனோதானோவெனப் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் எல்லோருமே நெருக்கமாக மாறிக் கொண்டிருந்தோம். எப்போதும் எங்காவது கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டே இருந்தோம். பேச்சு முழுக்க பெண்களைச் சுற்றியேதான் இருந்தது. அப்படியே ஒரு கிரிக்கெட் டீமையும் ஆரம்பித்தோம். சனி ஞாயிறுகளில் ஸ்பெசல் க்ளாஸ்,டியூசன் என ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டு காலேஜ் கிரவுண்டில் மொத்த வெயிலையும் தலையில் வாங்கிக் கொண்டு நாள் முழுக்க சலிக்காமல் விளையாடினோம். ஜூலை மாதம் ராணிக்கு திருமணம். தூரத்து சொந்தத்தில் மாப்பிள்ளை கிடைத்திருந்தார். நான், அப்பா, அம்மா, அண்ணன் எல்லோருமே போயிருந்தோம். ராணி கல்யாணப் பெண் ஒப்பனையில் வேறு யாரோ போல் இருந்தாள். என்னைப் பார்த்து ஒப்புக்கு சிரித்தது போலிருந்தது. அவள் என் மீது காட்டிய அன்பெல்லாம் எங்கே போனது எனக் குமைந்து கொண்டேன். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் சிரித்து சிரித்துப் பேசியவள் என்னைப் பெரிதாய் கண்டுகொள்ளவே இல்லை. ஏமாற்றமும் ஆத்திரமும் பெருக ஊர் வந்து சேர்ந்தேன்.

ஓரிரு வாரங்களிலேயே கண்ணனும் மெட்ராசில் வேலை கிடைத்துப் போய்விட்டான். ராணியின் கணவர்தான் அந்த வேலையை ஏற்பாடு செய்திருந்தார். மெல்ல கீழ் பெண்ணாத்தூரும் சந்திரா அத்தையும் நினைவிற்கே வராமல் போனார்கள்.

0

படிப்போடு விளையாட்டும் மும்முரமாகச் சென்று கொண்டிருந்தது. ஓரளவிற்கு குறிப்பிடும்படி நாங்கள் விளையாட்டில் வளர்ந்திருந்தோம். சச்சின் கிரிக்கெட் டீம் என்ற எங்களின் டீம் பெயர் மற்ற கிரிக்கெட் டீம்களுக்கு தெரிந்திருந்தது. காலாண்டுத் தேர்வு விடுமுறையில் டோரனமெண்டுகளில் கலந்து கொள்ளும் ஆசை எழுந்தது. சோமாசிபாடியில் இருந்து வரும் ப்ளஸ்டூ மாணவர்கள் சோமாசிபாடியில் விடுமுறையில் நடக்கும் டோரனமெண்டில் கலந்து கொள்ளக் கூப்பிட்டிருந்தார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை ஸ்பெசல் க்ளாஸ் எனச் சொல்லிவிட்டு கிளம்பிப் போனோம். சோமாசிபாடி திருவண்ணாமலைக்கும் கீழ்பெண்ணாத்தூருக்கும் நடுவில் இருக்கிறது. முதல் மேட்சிலேயே தோற்றுப் போனோம். தோல்விக்கு முழு காரணமும் நான் தான் என ஆளாளுக்கு குற்றம் சொன்னார்கள். யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. பஸ் ஸ்டாப்பிற்கு வந்து எல்லோரும் திருவண்ணாமலை பஸ் ஏறும்போது நான் மட்டும் வீம்பிற்காய் எதிர் ஸ்டாப்பிற்குச் சென்று திண்டிவனம் போகும் பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். நண்பர்களை லேசாக மிரட்டும் செயல் மாதிரிதான் செய்தேன். ஆனால் பஸ் போக ஆரம்பித்ததும் லேசாக பயம் வந்தது. கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டதும் சட்டென சந்திரா அத்தை நினைவு வரவே “பெண்ணாத்தூர் ஒண்ணு” எனக் கேட்டு வாங்கிக் கொண்டேன். சரி சந்திரா அத்தையை பார்த்து விட்டு சாயந்திரம் கிளம்பிப் போய்விடலாம் என சமாதானமாய் நினைத்துக் கொண்டேன்.

மதியம் மூன்று மணி இருக்கும். பின் வாசல் கதவு லேசாய் திறந்தே இருந்தது. அத்தை தூங்கிக் கொண்டிருப்பாள் என நினைத்துக் கொண்டே கூப்பிடாமல் உள்ளே போனேன். வீட்டிற்குள் லேசான மது வாடை வீசியது. சமையல் அறையின் கதவு முழுவதுமாய் மூடாமல் லேசாய் திறந்திருந்தது. ஹாலைத் தாண்டிப் போனதும் குளியலறையில் யாரோ குளிக்கும் சப்தம் கேட்டது. அத்தை குளிக்கிறாள் போல என நினைத்துக் கொண்டு தண்ணீர் குடிக்க மீண்டும் சமையலறைக்காய் திரும்பி வந்து கதவைத் திறந்து, அதிர்ந்தேன். என்னால் நம்ப முடியவில்லை. நல்ல வெயிலில் இருந்து வந்ததால், கண்ணை மீண்டும் ஒரு முறை கசக்கிக் கொண்டு பார்த்தேன். அப்பாவேதான். தரையில் ஒரு பாய் விரிக்கப்பட்டிருந்தது. மல்லிகைப் பூ விசிறலாய் தரையில் சிதறிக் கிடந்தது. அப்பா அரை நிக்கர் மட்டும் அணிந்து கொண்டு லேசான குறட்டை ஒலியோடு தூங்கிக் கொண்டிருந்தார்.

சப்தமெழுப்பாமல் கதவை இருந்தபடியே சாத்தி வைத்து விட்டு வேகமாய் வெளியேறினேன். பின் வாசல் உளுத்த கதவு எழுப்பிய சப்தம் பல் கூச்சமாய் இறங்கி நெஞ்சைக் கீறியது.

Painting : Ravi varma

Thursday, July 28, 2011

தமிழின் முதல் பிராந்திய சினிமா

என் பேர் அசோக். நாலு நாளைக்கு முன்னாடிதான் முப்பத்தோரு வயசு முடிஞ்சது. என்னோட கனவு,ஆசை,இலட்சியம் எல்லாமே சினிமாதான். தமிழ்ல ஒரு படம் பண்ணனும் அது இதுவரைக்கும் யாராலயும் பண்ணப்படாததா இருக்கனும். சினிமா உலகத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழ் சினிமா ஆளுமைகள நான் இதுவரைக்கும் நேர்ல கூட பாத்தது இல்ல. ஒரு துணைநடிகர் கூட பழக்கம் கிடையாது. ஆனா எனக்கு சினிமா தெரியும். இதுவரைக்குமான எல்லா தமிழ் சினிமாவையும் தூக்கி சாப்புடுற மாதிரி ஒரு படைப்ப என்னால தர முடியும். படம் பாக்கிறதுதான் என்னோட பிரதான வேலை. மத்த, வேலைக்கு போறது, சாப்பிடுறது, தூங்குறது எல்லாமே அப்புறம்தான். என்னோட முழு நேரமும் சினிமா பாக்கிறதுக்கு மட்டும்தான். என்னோட அறை முழுக்க திரைப்படக் குறுவட்டுகளா சிதறி கிடக்கும். வாங்குற சம்பளத்துல குறு வட்டுகள் வாங்கின மிச்சம்தான் மத்த செலவுகளுக்கு. கிட்டத்தட்ட எல்லா மொழி படங்களையும் பாத்திருக்கேன். உலக வரைபடத்துல எந்த மூலைல ஒரு நல்ல படம் வந்தாலும் உடனே பாத்திருவேன். இணையம் டோரண்ட் இதெல்லாம் இன்னமும் என்னோட சினிமா பைத்தியம் நீடிக்க காரணமா இருக்கு. எல்லா புதுபடங்களையும் தியேட்டர் போய் பார்ப்பேன். தமிழ் சினிமா மட்டும் செலக்டிவா பார்ப்பேன். கிட்டத்தட்ட நோய் மாதிரி இந்த சினிமா பைத்தியம் என்ன பிடிச்சிருக்கு. அதனோட முத்தின நிலைதான் ஒரே ஒரு படமாவது பண்ணிடனுங்கிற இந்த ஆசை. இல்ல வெறி, வெறிதான் சரியான வார்த்தை.

எனக்கு இந்த சினிமா ஆசை நிச்சயம் தமிழ் சினிமா பாத்து வரல. சில படங்கள் நல்ல உணர்வை தந்தாலும் பெரும்பாலான சினிமாக்கள் மேல கோபம்தான் இருக்கு. ஆனா என்னோட முதல் படத்தை தமிழ்லதான் பண்ணனும்னு இருக்கேன். இதுவரைக்குமான தமிழ் சினிமா இயக்குனர்கள் மேல எனக்கு பெரிய மரியாதை ஒண்ணும் கிடையாது. ஒரே ஒரு இயக்குனர கூட என்னோட முன்னோடியா சொல்லிக்க முடியல. சில நேரங்களில ஒட்டு மொத்த தமிழ் இண்டஸ்ட்ரி ஆளுங்களையுமே நான் பயங்கரமா வெறுக்கிறனோன்னும் தோணும். ஆனா சில தனித்தனி ஆளுங்க மேல வாஞ்சையும் இருக்கு. இப்ப இந்த நொடி நடிகர் விக்ரம் மேல இருந்த அந்த வாஞ்சையும் காணாம போய்டுச்சி. தெய்வத்திருமகள் படம் பார்க்க போய் தியேட்டர்ல உட்கார்ந்தேன். அரை மணி நேரம் கூட பாக்க முடியல. எழுந்து வெளில வந்திட்டேன். ஆத்திரமா வருது. இந்த ஐ ஆம் சாம் படமே ஒரு மொக்க படம். அந்த மொக்க படத்தையே மொக்கத்தனமா உருவியிருக்கானுங்களே இந்த அளவுக்கா தமிழ் சினிமா கையாலாகம போய்டுச்சின்னு குமுறலா இருக்கு. இந்த விக்ரம் அய்யோ கொடும, ஷான் பென் ஹேர் கட்டைக் கூட விடாம காப்பி அடிச்சிருக்கான். என்ன எழவுய்யா இது அடிமனசுல இருந்து வெறுப்பு வந்தது. இந்த படத்தோட டைரக்டர் விஜய் மேலயும் எனக்கு சுத்தமா மரியாதை கிடையாது. எஸ்.ஏ.ராஜ்குமார் விக்ரமன் கூட்டணி அபத்தத்த விட இத ஜிவி ப்ரகாஷ் விஜய் கூட்டணி படு மோசமா இருக்கு. க்ளிஷே இசைத் துணுக்காலயும், படு க்ளிஷேவான காட்சி அமைப்புகள் மூலமும் பார்வையாளர்கள உருக வைச்சிடலாம்னு இவங்க ரெண்டு பேரும் நினைச்சிட்டாங்க போல. அப்படி ஒரு நினைப்பு வந்ததுக்கு மதராசபட்டினம் படத்தோட வெற்றிதான் காரணமா இருந்திருக்கும். தெய்வத்திருமகள விட மதராசபட்டினம் இன்னும் அதிக கோவத்த வரவழைச்சது. ஒரு பீரியட் படம் ங்கிறது எவ்ளோ முக்கியமான ஆவணம். அத எவ்ளோ அபத்தமா பன்றாங்க? இவங்களுக்கெல்லாம் மனசாட்சி, வெட்கம் இதெல்லாம் சுத்தமா கிடையாதா? லகான் ட்ரஸ்ஸ 40 களின் வண்ணார் உடைன்னு எப்படி விஜயால காட்சிப்படுத்த முடியுது? இதுல இன்னொரு உச்சக் கொடும என்னன்னா சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விஜய் டிவி விருதையும் இந்தப் படம் வாங்கியிருக்கு. யாரோ ஒரு வடக்கத்தி பொண்ணு சன்னல் துணில சேல கட்டிகிட்டு விருது வாங்கினத பாக்க ஆத்திரமா வந்தது. அட இதையெல்லாம் விடுங்க. 43 ல செத்துப் போன காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்திய நம்ம விஜய் 47 ஆகஸ்ட் 15 நைட்ல உயிர் பொழைக்க வச்சிருப்பார். எவ்ளோ பெரிய ப்ளண்டர் மிஸ்டேக் இது. என்னிக்காவது இந்த விஜய பாத்தா மூஞ்சிலயே ஒரு குத்து விடனும். வரலாறும் தெரியாம சமூகமும் தெரியாம வெறும் டைட்டானிக் படத்த மட்டும் பாத்துட்டு ஒரு பீரியட் படம் எடுத்து அத வெற்றிகரமா ஓடவும் வைக்கிற சாமர்த்தியத்தைத்தான் என்னால பொறுத்துக்க முடியல.

சமீபத்துல ஆரண்ய காண்டம்னு ஒரு நல்ல படம் வந்தது. இதுவரைக்குமான தமிழ்சினிமா கதை சொல்லும் முறையையே ஆரண்ய காண்டம் திருப்பிப் போட்டுச்சி. அதுவும் அந்த நடிகர் சோமசுந்தரம், யப்பா என்ன ஒரு கதாபாத்திரம்யா! இன்னமும் எனக்கு தமிழ்படங்கள் வெறுத்து போகாம இருக்க இந்த மாதிரி சில முயற்சிகள்தான் காரணமா இருக்கு. அநியாயம் என்னன்னா ஒரு வாரம் கூட இந்தப் படம் ஓடல. இந்த கேடுகெட்ட சூழலில நான் படம் எடுத்து அசிங்கபடுறதுக்கு சும்மா இருக்கலாமேன்னும் சில டைம் தோணும். ஆனா எனக்கு ஒரு அடிப்படை விஷயம் தெரியும். இத ஆரண்ய காண்டம், நந்தலாலா படங்கள்லாம் பிராந்திய சினிமா கிடையாது. தமிழ் சூழலின் அசலான படைப்புகள் இவை கிடையாது. நம்மோட பிராந்தியத்துக்கான சினிமான்னு ஒண்ணு இருக்கு. அதைத்தான் நான் பண்ணபோறேன். காதல், பருத்திவீரன்லாம் பிராந்திய சினிமாவின் வெற்றிப் படைப்புகள்னு யாரோ சொன்னாங்க. என்னைப் பொறுத்தவரை தமிழின் அசலான சினிமா இன்னும் யாராலயும் எடுக்கப்படல. நான் தான் எடுக்கப் போறேன்.

தியேட்டரை விட்டு வெளியில் வந்ததும் வெயில் மண்டையைப் பிளந்தது. படம் தந்த எரிச்சல் மனநிலை, பியர் குடித்தால்தான் போகும் போல. அடுத்த தெருவிலிருந்த வழக்கமாய் செல்லும் டாஸ்மாக் பாரில் புகுந்தேன். அரைக் கூலிங்கிற்கு பத்து ரூபாய் அதிகம் கேட்கிறான். வெயில், ஒன்றும் பேசவிடாமல் செய்து விடுகிறது. வாங்கி மடக் மடக் கென குடித்ததும்தான் ஒரு நிதானத்திற்கு வர முடிந்தது. சமீபமாய் என் நண்பன் ஒருவன் எழுதிய நாவலைப் படித்திருந்தேன். நாவல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் நூத்தி அம்பது பக்க நாவலில் முக்கா வாசியை வெட்டிவிட்டு, ஒரே ஒரு தின் லைனை மட்டும் எடுத்து டெவலப் செய்யப் போகிறேன். என்னுடைய முதல் படம் இதுதான் என முந்தா நாள்தான் முடிவு செய்தேன். நண்பனின் பெயர் அய்யனார் விஸ்வநாத். பழி என்றொரு வெளிவராத நாவலை எழுதி இருக்கிறான். அய்யனாரும் நானும் பள்ளித் தோழர்கள். சொல்லப்போனால் எனக்கிருக்கும் ஒரே நண்பன் அவன் தான். ஆனால் அவன் மீதும் எனக்குப் பெரிதாய் மரியாதை ஒன்றும் கிடையாது. அவன் ஒரு டுபாகூர். அவனுக்கு சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தது நான் தான். ஏராளமான பட டிவிடிக்களைத் தந்ததோடு நிற்காமல் அதை எப்படிப் பார்ப்பது என்றும் சொல்லித் தந்திருக்கிறேன். பயல் சுமாராய் எழுதுவான். நான் சொல்வதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு அப்படியே சினிமாக் கட்டுரையாய் எழுதி வைப்பான். இதுவரைக்கும் என்னைப் பற்றி ஒரு இடத்தில் கூட மூச்சு விட்டதில்லை. அவன் எழுதும் சினிமாக் கட்டுரைகள் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். ஒன்றில் கூட நன்றி அசோக் என சொன்னதில்லை. ஒவ்வொரு கட்டுரை படித்து முடித்தும் அடுத்த முறை இவனுக்கு எதுவும் படம் தருவதோ அல்லது விமர்சனத்தை சொல்வதோ கூடாது என நினனத்துக் கொள்வேன். ஆனால் துரதிர்ஷடவசமாக எனக்கு நண்பர்களே கிடையாது. எக்கச்செக்கமாய் படம் பார்த்து பைத்தியமாகி யாரிடமாவது கொட்டத் தோன்றினால நேராய் அய்யனாரிடம்தான் போவேன். அவனும் என்னைப் பேசவிட்டுவிட்டு பொறுமையாய் கேட்பான். என்ன, என் ஒவ்வொரு சந்திப்பிலிருந்தும் நாலு கட்டுரைக்கான விஷயத்தை தேற்றிவிடுவான். ஒழியட்டும். அது ஏன் எல்லா எழுத்தாளன்களும் சல்லிப் பயல்களாகவே இருந்து தொலைகிறான்கள் என்பதுதான் புரியவில்லை. கையிலிருந்த காசிற்கு ஒரு பியர்தான் குடிக்க முடிந்தது. அய்யனாரை வரவழைக்கலாம். அவன் நாவலை படமாக எடுக்கப் போகிறேன் என்றால் தலை கால் புரியாமல் குதிப்பான். தொலைபேசினேன்.

“மச்சி அசோக்டா”
……
“இல்ல போவல. உன் நாவல இப்பதான் படிச்சி முடிச்சேன். உடனே பாக்கனும். எங்க இருக்க?”
…….
“சரி நம்ம பார் க்கு வா வெயிட் பன்றேன்”

அடுத்த அரை மணியில் வந்தான். இவன் ஒவ்வொரு நாளும் ஊதிக் கொண்டே போகிறானோ? எனச் சந்தேகம் வந்தது. வாயெல்லாம் பல்லாக வந்தான்

“ங்கோத்தா காலைலயே ஆரம்பிச்சிட்டியா”

பெயர்தான் எழுத்தாளன். பேசுவது எல்லாம் இப்படித்தான். “இந்த திருட்டு மகள் படம் பாக்க போய்ட்டேன் மச்சி, பத்து நிமிசத்துல எழுந்து வெளில ஓடி வந்திட்டேன்”

“கேட்டுட்டு போவகூடாதா. ரொம்ப மட்டமா காப்பி அடிச்சிருக்கானுங்க”

“அய்யோ எனக்கு ஆத்திரமா வந்தது அதான் குடிக்க வந்துட்டன். சரி பீர் சொல்லு மச்சி”

“தெரியுமே. உனக்கு இந்த மாதிரி டைம்லதான என் ஞாபகம் வரும்”

“அசிங்கப்படுத்தாத ஒய். இருந்த காசுக்கெல்லாம் டென்சன்ல குடிச்சிட்டேன்”

அய்யனார் பீருக்குசொன்னான். நான் அவன் நாவலைப் பிடித்திருப்பதாய் சொன்னேன்.

“சந்தோசம்டா. தமிழ்ல இன்னும் யாரும் இந்த ஸ்டைல்ல எழுதல மச்சான். எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தது”

“அதான் என்னோட ஆசையும். தமிழ்ல யாருமே பண்ணாத ஒரு படத்த பண்ணனும்”

“ஆனா, பழில வன்முறையும் காமமும் ரொம்பி கெடக்கும்டா, தமிழ்ல பண்ண முடியும்னு நினைக்கிறியா? சும்மா மேலோட்டமா பண்ணா படம் தாங்காது மச்சான். நாவலோட டப்பாவே வன்முறைதான். அத நீ சினிமால மேலோட்டமா சொன்னினா டான்ஸ் ஆடிடும். வேலைக்காவாது”

“இல்லடா. இந்த கதய முழுசா பண்ணப் போறதில்ல. நிழல் உலக கதையாவும் சொல்லப் போறதில்ல. சீராளன் குணா தாமஸ்னு படத்துல யாரும் கிடையாது”

“அப்புறம்?”

“நாவலோட முதல் அத்தியாயத்துல எந்த மாற்றமும் கிடையாது. படத்தோட ஸ்டார்டிங்கும் அதான். பாண்டிச்சேரி பார்ட் முழுசா வருது. ஆனா ஹீரோவ சராசரி ஆளா காமிக்கிறோம். பாண்டில வேல பாக்கிறான். பக்கத்து வீட்டு கல்யாணமான பெண் மேல காதல் வருது. அந்த காலாப்பட்டு பார்ட்டையெல்லாம் அப்படியே படமாக்குறோம். ஆனா விஜி புருஷனுக்கு பணம் கொடுத்து செட்டில் பன்றதுலாம் படத்துல கிடையாது. இவங்க லவ் இப்படியே ஓடிட்டு இருக்கும்போது திடீர்னு விஜி புருஷன் வந்து அவள கூட்டிட்டு ஆந்திரா போய்டுறான். அங்க ஒரு விபசார விடுதில விஜிய வித்திட்டு எஸ்கேப் ஆகிடுறான். இங்க பயல் லவ் பீலிங்க்ல துடிக்கிறான். பாண்டில இருக்க முடியாம மெட்ராஸ் போறான். அங்கயும் இருக்க முடியாம ஹைதராபாத் போறான். அங்க ஒரு பார்ல குடிக்க போவும்போது ஒரு ஆள் அறிமுகமாகி அவன விபசார விடுதிக்கு கூட்டிப் போறான். அங்க போய் பாத்தா விஜி. ஆனா நாவல்ல வர்ர விஜி கிடையாது. படத்துல விஜி விக்டிம்தான். ரொம்ப நைஞ்சி போய் இருக்கா. ஹீரோ நைசா விஜிய கூட்டிட்டு எஸ்கேப் ஆகுறான். பெங்களூர்ல போய் புதுசா வாழ்க்கைய தொடங்குறாங்க. ஆனா விஜி மனரீதியா அந்த விபசார விடுதி தாக்கத்துல இருந்து வெளில வர முடியாம தவிக்கிறா. அவனோட உடல் ரீதியாவும் தொடர்பு வச்சிக்க மறுக்கிறா. ஒரு நாள் அவன் இல்லாத நேரம் பாத்து தற்கொல பண்ணிக்கிறா. பயல் பித்து பிடிச்சி திரும்பவும் கொஞ்சம் அலைஞ்சி மெட்ராஸ் வரான். வழில அரக்கோணம் ஸ்டேசன்ல விஜி புருஷன பாக்கிரான். படத்த முடிச்சிடுறோம். படத்தோட ஆரம்பம் அந்த குரூரமான ரயில் கொலை.”

நிறுத்தி விட்டு ஆழமாய் புகையை உள்ளிழுத்தேன். அய்யனார் முகம் மாறியிருந்தது


“நல்லாருக்கு மச்சி. ஆனா இது என் கத கிடையாதே”

“நோ நோ பாதி உன்னோடதுதான் மீதி என்னோடது”

“இதுல என்ன மச்சி புதுசு. ஒரு கள்ள காதல் –பிரிவு, சேர்வு –பிரிவு, பழி. சிம்பிள் பழி வாங்குற கததானடா”

“இல்ல மச்சி. இந்த லைன ரொம்ப ஆழமா டெவலப் பண்ண போறேன்.மொத்தம் மூணு விஷயங்கள் சொல்றோம்

ஒண்ணு, ரொம்ப கவித்துவமா பாண்டிச்சேரி பின்னணில ஒரு காதல் கதைய சொல்லப் போறோம். காதல்ல கள்ள காதல் நொள்ள காதல்னுலாம் எதுவும் கிடையாதுங்கிறதும் படத்துல ஆழமா பதிவாகனும். அப்புறம் படத்துல பாட்டுலாம் கிடையாது. கவிதைகள் மட்டும்தான். உன்னோட சில கவிதைகளும் வேணும்.

ரெண்டு இந்த விபசார விடுதி கதைகள இன்னும் டீட்டெய்லா சொல்லப் போறோம். பெண்களோட ஒட்டு மொத்த வலியும் பதிவாகனும். நம் சூழலோட பாலியல் வறட்சி எந்த அளவிற்கு ஆண்கள மிருகத்தனத்திற்கு கூட்டிப் போவுதுங்கிறதயும் அழுத்தமா பதிவு செய்யறோம்

மூணு, பழி உணர்வோட வன்முறைய அழகா சொல்றோம். விஜி புருஷனுக்கு விஜியோட காதல் தெரிஞ்சிடுது அதுக்கான பழியாதான் அவள விபசார விடுதில தள்ளுறான் இந்த மாதிரி நிறைய பழி உணர்வ படம் முழுக்க சொல்லப் போறோம்”

அய்யனார் மலைப்பாய் பார்த்து சொன்னான் “நல்லாருக்கு மச்சி. ஆனா இத யார்டா தயாரிப்பா எல்லாருமே யோசிப்பாங்கடா”
“ஸ்டார் வேல்யூ முக்கியம் மச்சி. யார் யார நடிக்க வைக்கிறோம்னு கூடலாம் யோசிச்சிட்டேன்”
“யார்லாம் நடிக்கிறாங்க?”
“விஜி கேரக்டர் ஸ்நேகா”
“ஸ்நேகாவா?”
“ஏன்னா விஜிக்கு 30 வயசு. கொஞ்சம் மெச்சூர்ட் முகம் வேணும்”
“ஸ்நேகான்னா பட்ஜெட் எகிறும் மச்சி. அப்புறம் இந்த மாதிரி கேரக்டர் ஒத்துப்பாங்களான்னு தெரில”
“ஏன் புதுப்பேட்டை பண்ணாங்களே. அதுல சில காட்சிகள் ரொம்ப பிரமாதமா வந்திருக்கும். குறிப்பா போட்ல ஸ்நேகாவோட தனுஷ் கலவும் காட்சி”
“யெஸ்.அப்ப ஹீரோ தனுஷா?”
“இல்ல. தனுஷ் 25 வயசு சராசரி ஆண்க்கு ஒத்து வருவார்தான். ஆனா எனக்கு இன்னும் சார்மிங் வேணும்”
“சிம்பு?”
“நோவே”
“வேற யார்ரா?”
“கார்த்தி”
“மச்சி பட்ஜெட்ட யோசிச்சிக்கோ. கார்த்தி ஸ்நேகா சம்பளமே கன்னா பின்னான்னு வரும்”
“ம்ம் பாத்துக்கலாம்”
“விஜி புருஷன் யாரு?”
“எழுதும்போதே யோசிச்சிட்டேன். சம்பத்”
“வாவ் சம்பத் நல்ல செலக்ஷன். ஆனா கார்த்தி ஒட்டல மச்சி”
“யெஸ். ஆனா வேற வழியும் இல்ல. 25 வயசு சார்மிங் ஹீரோ. மார்கெட் வேல்யூவும் இருக்கனும்”
“சரி ப்ரொடியூசர் யாரு”
“தேடனும் மச்சி. ஸ்க்ரிப்ட் முழுசா எழுதனும். அப்புறம் சென்னைக்கு போய் கல்பாத்தி அகோரம் மாதிரி ரெண்டு மூணு பேர பாக்கனும்”
“பட்ஜெட் எவ்ளோன்னு கேட்டா என்ன சொல்வ?”
“மேக்சிமம் ரெண்டு சி ம்பேன்”
“போடாங்கொய்யா. கார்த்தி சம்பளமே நாலு சி டா”
“என்னா மச்சி சொல்ற?”
“என்ன என்னா மச்சி சொல்ற. ஆனா அசோக், ஒரு மனுசனுக்கு தன்னம்பிக்கை இருக்கலாம்டா ஆனா உன் அளவுக்கு இருக்க கூடாது. ஏண்டா டேய் மெட்ராஸ் எந்தப் பக்கம் இருக்குன்னாவது தெரியுமா? எத்தன லட்சம் பேர் ஏகப்பட்ட ஸ்கிரிப்டோட நாய் படாத பாடு படுறாங்கன்னு தெரியுமா?”
“லிசன் அய்யனார் சும்மா வீட்ட விட்டு ஓடிப்போய் மெட்ராஸ்ல சுத்துறவன்லாம் படைப்பாளியோ, கலைஞனோ கிடையாது. இப்ப சினி பீல்ட்ல சோத்துக்கு சிங்கியடிக்கிற எல்லாருமே வெறும் சினிமா மேல இருக்க மோகத்துல, அது தரும் பெரும் பணத்துக்காக, புகழுக்காக ,பெண்களுக்காக ஓடிப்போனவனுங்கதான். அவங்கள வச்சி என்னை எட போடாதே. நான் ஒரு படைப்பாளி”

“சர்தான் மூட்றா. வீட்டுக்குள்ள கதவ சாத்திட்டு நாலு டிவிடிய பாத்துட்டாவே உனக்குலாம் பெரிய புடுங்கின்னு நினைப்பு வந்திருது. ஆனா சினிமாவுல ஜெயிச்சவன்லாம் உன்ன மாதிரி டிவிடி பாத்து ஜெயிச்சவன் இல்ல. ரத்தம் சுண்ட நாயா உழைச்சவனுங்க. சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாத உன்ன மாதிரியான மூடனுங்க கிடையாது”

"எனஃப் அய்யனார். உன்ன மாதிரி அரவேக்காடுங்களோட சகவாசம் வச்சிகிட்டது என்னோட தப்புதான். கெட் லாஸ்ட்"

அய்யனார் எழுந்து என் முகத்தில் குத்தினான். என் சில்லு மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது. பாரில் இருந்து இரண்டு பேர் ஓடி வந்தார்கள். எங்கள் இருவரையும் எல்லாருக்கும் தெரியுமென்பதால் சாதாரணமாய் திட்டி விட்டு போய்விட்டார்கள் ஒன்றும் பெரிதுபடுத்தவில்லை. சப்ளை செய்த பையன் ஒரு ஐஸ்கட்டியை கொண்டு வந்து என் தலையை பின் பக்கமாய் இழுத்து சாய்த்து மூக்கில் வைத்தான். அய்யனார் தன் கைக்குட்டையால் “சாரி மச்சி சாரி மச்சி” என்றபடியே முகத்தில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தான். எனக்கு வலி தெரியவில்லை. போதையும் ஓரளவிற்கு இருந்தது. சற்று நேரத்தில் இரத்தம் நின்றதும் மீண்டும் பீர் சொன்னான்.

மீண்டும் குடித்தோம். நான் எதுவும் பேசவில்லை. இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முனைந்தேன். ஆனால் உள்ளுக்குள் கோபத்தால் பொங்கிக் கொண்டிருந்தேன். இவனைப் போன்ற அரைவேக்காட்டு எழுத்தாளன்கள் என் முன்னால் அமர்ந்து குடிக்கக் கூடத் தகுதியற்றவர்கள். காலம் மற்றும் இயலாமையின் மிகப் பெரிய பழிவாங்கல்தாம் இது போன்றவர்களை சகித்துக் கொள்ளும் நிலைக்கு என்னை தள்ளியிருக்கிறது. வேண்டா வெறுப்பாய் ஏதோ பேசிவிட்டு மீண்டும் ஒரு பியர் குடித்துவிட்டு தள்ளாட்டமாய் கிளம்பினேன். அய்யனார் அறைக்கு வந்து ட்ராப் செய்வதாய் சொன்னான். மறுத்து விட்டேன். வெளியே வந்து ஆட்டோ பிடித்து அறைக்கு வந்து படுத்துக் கொண்டேன். இந்த உலகம் வெற்றியாளர்களுக்கு மட்டுமானது. என்னைப் போன்றவர்களுக்கானதல்ல. ஏனோ திடீரென எனக்கு வாழ்க்கையில் ஜெயித்தே ஆகவேண்டுமென்கிற வெறி வந்தது. பணத்தையும் புகழையும் அடைவது மட்டுமே இந்த உலகில் வெற்றியாகக் கருதப்படுகிறது. அல்லது எங்காவது வெளிநாட்டிற்குப் போய் ஐந்தாறு வருடங்கள் பன்றி மேய்த்துப் பணம் சம்பாதித்துவிட்டு ஊருக்கு வந்து வட்டிக்கு விட்டு வயிறு வளர்த்துக் கொள்வதுதான் சாதனையாமாம். சில பன்றி மேய்ப்பர்கள் பன்றியோடு இலக்கியத்தையும் திரைப்படத்தையும் அயல் தேசங்களில் கனிணி வழியாய் சேர்த்து மேய்க்கிறார்களாம். ஆத்திரம் பொங்கிப் பெருகி என்னைத் தூங்க விடாமல் செய்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன்.

படத்தின் பெயர் என்ன என யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். படத்தின் முதல் சீனை எழுத ஆரம்பித்தேன்.

ஷாட் ஒன் –
அரக்கோணம் ரயில்வே ஸ்டேசன் – ஆட்கள் வருகிறார்கள் – போகிறார்கள். (லைவ் ஆகவே எடுத்து விடலாம். நேரம் இரவு பத்து. அரக்கோணம் போயே எடுக்கலாம். கார்த்திமேல் திடீரென வெறுப்பு வந்தது. சூர்யாவை போடலாம். சூர்யாவை மாறச் சொல்ல வேண்டும். லேசாக தொப்பை இருந்தாலும் ஓகே. ஆனால் உடம்பில் முகத்தில் இருபத்தைந்து வயது தெரியவேண்டும். ரைட்) – சூர்யா லாரியிலிருந்து ஸ்டேசன் வாசலில் குதிக்கிறான் – ஸ்டேசன் உள்ளே கண்கள் தாழ்த்தி நடக்கிறான் – கால்கள் – இரவு நேர சோம்பலான காம இரவு- போதையாய் ஒரு லிப்ஸ்டிக் பெண் - குடித்த ஒரு ஆண்- வியர்வையாய் இரண்டு தொழிலாளிகள் - தூக்கம் நிறைந்த விழிகளோடு ஒரு குழந்தை- கேமரா அப்படியே அலைய வேண்டும். சம்பத் தள்ளாட்டமாய் சூர்யாவைக் கடந்து எதிரில் வரும் ஒரு ஆள் மீது இடித்து விழுகிறான். முன்னால் சென்ற சூர்யாவின் கால்கள் இரண்டு அடி பின்னால் வருகின்றன- விழுந்து கிடக்கும் சம்பத்தைக் கண்கள் பார்க்கின்றன. இப்போது எக்ஸ்டீரீம் குளோசப்பில் சூர்யாவின் முகம். படத்தில் மொத்தம் மூன்றே குளோசப் ஷாட்டுகள். முதல் குளோசப் இதுதான். சூர்யாவின் முகம். ஆத்திரம், வன்மம், வெறுப்பு, இயலாமை, பழி எல்லா உணர்வும் பொங்கிப் பிரவகிக்க சம்பத்தைப் பார்க்கும் சூர்யா.
ஷாட் பினிஷ்

வாவ்! எழுந்து நின்று டேன்ஸ் ஆட வேண்டும் போல இருந்தது. எழுந்து போய் கழிவறையில் ஒன்றுக்கடித்தேன். உலக வெற்றியாளர்கள் மீது, சாதுர்யமானவர்கள் மீது, அய்யனாரைப் போன்றவர்கள் மீது, ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் மீது, ஒன்றுக்கடிப்பது போல் நினைத்துக் கொண்டேன். புளகாங்கிதமாக இருந்தது. நேரம் பார்த்தேன். மணி இரண்டு. எனக்குத் தெரிந்த ஒரே நண்பனான அய்யனாரை அலைபேசியில் அழைத்தேன். அவன் ஹலோவை எதிர்பார்க்காமல் இப்படிச் சொன்னேன்

“தமிழின் முதல் பிராந்திய சினிமாவின் முதல் ஷாட் எழுதப்பட்டுவிட்டது” பதிலையும் எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டேன்.

Monday, May 31, 2010

தில்லி 06 : 2

நேற்று: 29.05.2006 : ஜிபி ரோட் – தில்லி

எல்லா வேலையும் முடிந்தது. யுஏஇ எம்பசியில் பின்புறம் ஸ்டாம்ப் ஒட்டின என் பட்டத்தை வாங்கும்போது பெரிய விடுதலையை உணரமுடிந்தது. எத்தனை அலைச்சல்! எவ்வளவு நீண்ட காத்திருப்பு! வெயில், பசி என எல்லா கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. விஜியும் கொண்டு வந்திருந்த தலையணை புத்தகங்களும் இல்லையென்றால் இன்னும் அதிகமாக சிரமப்பட்டிருப்பேன். கையில் புத்தகம் இருந்தால் எவ்வளவு நீளமான வரிசையிலும் நின்றுவிடலாம். நின்றபடியே அந்த உலகத்தில் தொலைவதில் எனக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. விஜியால் ஒரே இடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. இதற்கும் அதற்குமாய் நடந்து கொண்டிருப்பான். மழையில் எருமைக் கணக்காய் நிற்கும் என்னை சற்று எரிச்சலாகத்தான் அவ்வப்போது வந்து பார்த்துப் போவான். ஒரு வழியாய் எல்லாம் முடிந்தது. மிக உற்சாகமாய் புறா கூண்டு லாட்ஜிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். திடீரென நினைவு வந்தவனாய் ”ஆக்ரா பக்கம்தான தாஜ்மகாலை பார்த்துட்டுப் போய்டலாமே..” என்றேன். உடனே சம்மதித்தான். ரயில் நிலையத்திற்கு போய் பயணச் சீட்டுகளை ஆக்ராவிற்கு மாற்றிவிட்டு அறைக்குத் திரும்பினோம். ஒரு இயல்பான மன நிலை திரும்பியிருந்தது. உணவிற்கு சொல்ல சிப்பந்தியை அழைத்தோம்.

விஜி மூன்று நாட்களில் கத்துக் கொண்டிருந்த இந்தி உதவியுடன் ”ரூமுக்கு பொண்ணு வருமா” என்றான். ”ஜிபி ரோட் சலோ பூரா லடுக்கி ஹெ” என்றார். எங்கள் இருவருக்குமே மெல்லிதான குறுகுறுப்பு ஒன்று தொற்றிக் கொண்டது. எப்படிப் போவது என்பதை அவரிடமே கேட்டுப் புரிந்து கொண்டோம். லேசாய் தூங்கிவிட்டு நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வெகுநேரம் குளித்துத் தயாரானோம். சிவப்பு விளக்குப் பகுதியெல்லாம் சினிமாவில் பார்த்திருந்ததுதான். லேசான பயமும் இருந்தது. ”பெண்ணுடன் இருக்கும்போது போலீசு வந்தால் எப்படி தப்பிப்பது?” என விஜியிடம் கேட்டேன். அவன் இந்த கோணத்தில் சிந்தித்திருக்க மாட்டான் போல. “அய்யோ மச்சான் உள்ள கிள்ள உக்கார வச்சுட்டானுங்கனா துபாய் எப்படிடா போவறது?.. வேணாம் வுடு.. சரக்கடிச்சிட்டு தூங்கிடலாம்.. ஏன் வம்பு” என்றான். எனக்கும் அதுதான் சரியெனப்பட்டது இருப்பினும். சும்மா கொஞ்ச தூரம் நடக்கலாமே என வெகு தூரம் நடந்து ஜிபி ரோடுக்கு வந்து விட்டோம்.

தமிழ் சினிமாக்களில் பார்த்திருந்தது போலதான் இருந்தது. மக்கள் நெரிசல் மிகுந்த, குறுகிய, நீளமான சாலை. நெடுகிலும் மிகப் பழைய வீடுகள். முதல் மாடியின் நீள வராண்டா முழுக்க பெண்கள். மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் முழுக்க பெண்கள். இத்தனை அடர்த்தியான முகப்பூச்சுகளையோ குறைவான ஆடையணிந்த பெண்களையோ இருவருமே பார்த்திருக்க வில்லை. சின்ன பதட்டத்தோடே அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தோம். நான்கைந்து பெண்கள் “ஏ மதராஸி இதர் ஆவ்” எனக் கிண்டலடித்தனர். நானும் இவனும் வேகமாய் நடந்தோம். பின்னாலேயே இரண்டு சிறுவர்கள் தொடந்து கொண்டிருந்தனர். ஒருவன் என் கைப் பிடித்து நிறுத்தினான். உடைந்த தமிழில் “தமில் கேரளா ஆந்திரா எல்லா ஸ்டேட்டும் இருக்கு. மஸ்த் பிகர். நூறு ரூபாதான்” என்றான். பதின்மத்தை தொட்டிராத சிறுவன் அவன். “நை நை ஜஸ்ட் வாக்கிங்” என்றேன். அவன் சற்று நேரம் எதுவும் பேசாமல் நின்றான் பின்பு கையை விட்டுவிட்டு போய்விட்டான். விஜி இன்னொரு சிறுவனுடன் தீவிரமாய் மூன்று நாள் இந்தியில் பேசிக் கொண்டிருந்தான். எனக்காய் திரும்பி “மச்சான் சும்மா போய் எடத்த பாக்கலாண்டா... புடிக்கலன்னு சொல்லிட்டு வந்துடலாம்.. . சும்மா ஒரு டிபரண்ட் எக்ஸ்பீரியன்ஸ்” என சிரித்தான். பயம், ஆசை, தயக்கம், சபலம் என எல்லாம் ஒருமித்த மன நிலை அது. போலாம் என தலையசைத்தேன்.

அந்தச் சிறுவன் முன்னால் நடக்க நாங்கள் பின் தொடந்தோம். பிரதான சாலையிலிருந்து குறுக்கு சந்தில் நடக்கத் துவங்கினான். மிக சிடுக்கான வீதி அது. முழுக்க கடைகளும் மனிதர்களும் அடைத்துக் கிடந்தனர். அவன் மிகச் சுலபமாய் கூட்டத்தில் நீந்திச் சென்றான். எங்களால் தொடர முடியவில்லை. அவ்வப்போது நின்று எங்கள் தலைகள் தெரிந்தவுடன் மீண்டும் நீந்திப் போய் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் எனக்கு பயமாக இருந்தது. திரும்பிப் போய்விடலாம் என இவனை நிறுத்தினேன். திரும்ப யத்தனிக்கும்போது சிறுவன் அருகில் வந்து விஜியின் கையைப் பிடித்துக் கொண்டான். வந்துவிட்டோம் என சொல்லியபடியே அருகில் பிரிந்த இருள் சந்திற்குள் நுழைந்தான். வெளிச்சம் மிகக் குறைவான சந்து அது. மனித நடமாட்டம் இல்லை. பத்தடி நடந்ததும் ஒரு சிதைந்த வீட்டின் பின் கதவின் முன் நின்றான். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதைப் போலிருந்தது. “விஜி வாடா ஓடிடலாம்” என்றேன். சிறுவன் கதவுகளைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தான். நாங்களும் தொடர்ந்தோம். வெளிச்சமற்ற நீள வழி அது. சுரங்கப் பாதை போல மண்ணால் கட்டப்பட்ட இரு சுவர்களுக்கு மத்தியில் நீண்டு கொண்டிருந்தது. நடந்து கொண்டிருந்தோம். திடீரென வெளிச்சம் பாய்ந்தது. நாங்கள் நின்று கொண்டிருந்தது பிரதான சாலையை ஒட்டியிருந்த பழைய கட்டிடம் ஒன்றினுள்தான். சிறுவனை முறைத்தோம் ஆனால் கடிந்து கொள்வதற்கு வாய் வரவில்லை.

அவன் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினான். வளைந்த குறுகிய அரை இருள் படிக்கட்டுகள். இடைவெளியே இல்லாது முழுக்க பெண்கள் நின்று கொண்டிருந்தனர். வியர்த்துப் போய் மேலே வந்தோம். இரண்டு தூண்கள் வைத்திருந்த ஒரு கூடம். படிக்கட்டு முடியுமிடத்தில் ப வடிவ சிமெண்ட் திட்டு. அதில் காலி குடங்கள் அழுக்குப் பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. கூடத்தின் நடுவில் திரி ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தது. ஒரு பெண் குத்துக் காலிட்டு அமர்ந்தபடி சப்பாத்தியை தேய்த்து ஸ்டவ்வின் மேலிருந்த வாணலில் போட்டபடியிருந்தாள். அவளுக்கு சமீபமாய் ஒரு சிமெண்ட் திண்ணை. அதில் ஒரு போலீஸ்காரர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தொப்பியையும் லத்தியையும் அருகில் கிடத்தியிருந்தார். கூடத்தின் வலது புறத்தில் மூன்று அறைகள் வரிசையாய் கட்டப் பட்டிருந்தன. இரும்புக் கதவுகளைக் கொண்ட அவ்வறைகள் மூடியிருந்தன. கூடத்தின் இடது பக்கம் ஒரு நார் கட்டில் அதில் ஒரு கூன் விழுந்த மூதாட்டி அமர்ந்திருந்தாள்.

நாங்கள் தயங்கியபடி சற்று நேரம் நின்றுகொண்டிருந்தோம். போலீஸ்காரரும் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணும் எங்கள் இருவரையும் சட்டை செய்யவில்லை. சிறுவன் திடீரென மாயமாய் மறைந்து விட்டிருக்கிறான். பாட்டி எங்களை அருகில் அழைத்தாள். நடுங்கும் குரலில் ”மதராஸி?” என்றாள் தலையசைத்தோம். ”ஆளுக்கு இருநூறு ரூபாய் எடுங்கள்” என்றாள். அதே நேரத்தில் ஒரு இரும்புக் கதவு பல் கூசும் சப்தத்துடன் திறந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண் உடைகளை சரிசெய்தபடி உள்ளிருந்து வெளியே வந்தாள். பேண்டை தோளில் போட்டபடி ஒரு நோஞ்சான் ஆள் பின்னாலயே வெளியில் வந்தான். நான் “போய்டலாம் விஜி” என அவன் கைகளை பிடித்து இழுத்தேன். வெளியில் வந்தப் பெண் “க்யா” என்றாள். “நை கமிங் ஆப்டர் ஆப்டர்” என்றேன். மீண்டும் நடுங்கும் குரல் “சாலா மதராஸி பணத்த எடு” என்றது. விஜி “நோ பைசா நோ பைசா ஆப்டர் கமிங்” என உளறினான். இன்னொரு இரும்புக் கதவும் திறந்தது. சற்று கனத்த உடம்போடு நடுத்தர வயதுப் பெண் உள்ளாடைகளோடு வெளியில் வந்தாள். ஓடப் பார்க்கிறோம் எனப் புரிந்து கொண்டாள். நெருங்கி வந்து என் சட்டையை கொத்தாக பிடித்து உலகத்தின் அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சித்தாள். “பை மிஸ்டேக் கேம் சாரி சாரி” என்றேன். “திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” என உதறிவிட்டு சிரித்தாள்.

விடுவிடு வென வெளியில் வந்தோம். அவமானம் பிடுங்கித் தின்றது. எதுவும் பேசாமல் வேகமாய் நடந்து கொண்டிருந்தோம். எந்த வழியில் போகிறோம் என்று கூட தெரியவில்லை. திடீரென சூறைக் காற்று அடிக்கத் தொடங்கியது. பிரதான சாலையை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டிருக்கிறோம். தலை முகம் உடைகள் எல்லாமும் மண்ணால் நிரம்பியது. கண்ணை இறுக்க மூடிக் கொண்டேன். திடீரென மழை கொட்டத் துவங்கியது. அருகிலிருந்த பெஞ்சில் கண் மூடி வானம் பார்த்து படுத்துக் கொண்டேன் விஜி எதுவும் பேசாமல் அருகில் அமர்ந்தான். மழை எங்கள் இருவரையும் ஆக்ரோஷமாய் தழுவியது

30.05.2006 இன்று : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை பெயர் தெரியா நிறுத்தம்

நேற்றைய இரவை நினைக்க நினைக்க அவமானமாய் இருந்தது. நினைவை உதறிக் கொண்டேன். கடந்த அரை மணி நேரமாக எந்த வாகனமும் உள்ளே வரவில்லை. அவ நம்பிக்கைகள் மெதுவாய் எங்களின் முகங்களில் படரத் துவங்கின. கல்லூரிக்குத் தொடர்பு கொண்டு மாற்று சான்றிதழ்களை வழங்குவார்களா என கேட்கலாமா என்றான் விஜி. கிடைச்சிடும்டா என்றேன். அந்த குரலில் எனக்கே சுத்தமாய் நம்பிக்கையில்லை. பஞ்சரான வண்டி தயாராகி விட்டது போலிருக்கிறது. நடத்துனர் சிதறிக் கிடந்த பிரயாணிகளை அழைக்கத் துவங்கினார். இந்த வண்டியில் ஏறிக் கொள்ளலாம் என்றபடியே பேருந்தை நோக்கி நடக்கத் துவங்கினோம். படியில் நின்றிருந்த நடத்துனர் எதுவும் கேட்கவில்லை. எனக்கு முன்பு ஏறின விஜி ”டேய் மச்சான் ”என சந்தோஷமாய் கத்தினான். ”என்னடா” என்றபடியே உள்ளே வந்தேன். எங்களின் பைகள் இருக்கைகளில் பரிதாபமாய் அமர்ந்திருந்தன. இருவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போனோம். நாங்கள் வந்த வண்டி இதுதான். வேறேதோ வண்டியை பார்த்து நான் தான் குழம்பி பதறியடித்திருக்கிறேன். விஜி என் கழுத்தை நெறிக்க வந்தான். நான் “ரண்டக ரண்டக ரண்டக” என உற்சாகமாய் கத்தினேன்.

Friday, May 28, 2010

தில்லி 06


இன்று : 30.05.2006 : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை ,பெயர் தெரியா நிறுத்தம்

செய்வதறியாது நின்றுவிட்டேன். திகைப்பும் பயமும் ஒருமித்து அடிவயிற்றிலிருந்து பந்து ஒன்று மேலெழும்பிக் கொண்டிருந்தது. இடம், மொழி, அடையாளம் எதுவும் தெரியாத ஒரு வினோத நகரத்தின் சாலை ஓரத்தில் கைவிடப்பட்டவர்களாய் நானும் விஜியும் நின்று கொண்டிருந்தோம். அவனுக்கு இளகின மனது. எந்த நொடியிலும் அழுதுவிடும் மனநிலையில் இருந்தான். எங்களைக் கடக்கும் வாகனங்களை கைகாட்டி நிறுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தோம். விஜி நிறுத்தாத சில வாகனங்களின் பின்னால் சிறிது தூரம் ஓடி “பைசா தரேன் பைசா தரேன் ஏத்திட்டுப் போ” எனக் கத்திக் கொண்டிருந்தான். எவரும் சட்டை செய்யாது வாகனத்தை அதி விரைவாய் ஓட்டிக் கடந்தனர். தலைப்பாகை அணிந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட நிறுத்தாமல்தான் சென்றனர். காலை எட்டு மணிக்கே சூரியன் முன் நெற்றியை எரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் பதட்டத்திலும் வியர்வையிலும் நனைந்து கொண்டிருந்தோம். மரங்களின் நிழல்கள் ஒரு போதும் தீண்டியிராத தில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் இந்த நெடுஞ்சாலை காலையிலே தகிக்கத் துவங்கிவிட்டது. எங்களைக் கை விட்டுச் சென்ற பேருந்தை இனிமேல் பிடிப்பது சற்றுக் கடினம்தான்.

பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கிய உணவகத்திற்கே மீண்டும் திரும்பி வந்தோம். அங்கு வரும் பேருந்தில் ஏறி, ஆக்ரா போய் எங்கள் உடைமைகள் இருக்கும் பேருந்தைக் கண்டுபிடித்துவிடலாம் என விஜியிடம் ஆறுதலாய் சொல்லத் துவங்கினேன். “ட்ரைவர் இல்ல கண்டக்டர் முகம் நினைவில இருக்கா?” என்றான். இல்லை. சுத்தமாய் நினைவிலில்லை. காலை ஆறு மணிக்கு பேருந்தில் ஏறினோம். டிக்கெட் வாங்கியவுடன் இருவருமே தூங்கிவிட்டோம். இந்த பதட்டங்களுக்கு காரணம் பேருந்தில் வைத்திருந்த எங்களின் பைகளில் ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாய் அலைந்து திரிந்து வெளியுறவு அமைச்சகம், கல்வி அமைச்சகம், யுஏஇ எம்பசி போன்றவற்றிடமிருந்து உறுதி முத்திரைகளை வாங்கியிருந்தோம். ஒழுங்காய் ரயிலேறி சென்னைக்குத் திரும்பியிருக்கலாம். நான்தான் இவ்வளவு தூரம் வந்துவிட்டு தாஜ்மகாலைப் பார்க்காமல் போவதா? என இவனையும் கிளப்பிக் கொண்டு, தில்லி ரிசர்வேசனை ஆக்ராவிற்கு மாற்றிவிட்டு, இன்று அதிகாலையில் பேருந்தைப் பிடித்து வந்துகொண்டிருந்தோம். வழியில் தேநீருக்காக நிற்கையில் இறங்கினோம். இதோ சாலையில் நிற்கிறோம்.

உணவகத்தில் ஒரு பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் பஞ்சரானதாம். பயணிகள் சலித்தபடி கீழிறங்கிக் கொண்டிருந்தனர். வேரெந்த வாகனமும் உள்ளே வரவில்லை. உணவக வாசலிலிருந்த டீக் கடையின் பாதி நிழலில், வாகனங்கள் நுழையும் வழியைப் பார்த்தபடி நின்று கொண்டோம். இந்த பயணமே சிக்கலாய்த்தான் ஆரம்பித்தது.

ஐந்து நாட்கள் முன்பு 25.05.2006: சென்னை செண்ட்ரல்

திட்டமிட்டதைப் போல மதியம் இரண்டு மணிக்கெல்லாம் செண்ட்ரல் வந்து விட்டேன். மே மாத வெயிலின் உக்கிரம் சிதறலாய் கிடந்த மனிதர்களின் முகங்களில் படிந்திருந்தது. இடது தோளில் ஒரு கனமான பையும் வலது கையில் ஒரு சிறிய பையும் வைத்திருந்தேன். வியர்வையில் சட்டை ஏற்கனவே நனைந்து விட்டிருந்தது. ப்ளாட்பாரத்தில் சுழலும் பெரிய மின் விசிறி வெப்பத்தை கக்கியது. அந்த காற்று படாத இடமாய் பார்த்து நின்று கொண்டேன். விஜி இரண்டு மணிக்கெல்லாம் வந்து விடுவதாய் சொல்லியிருந்தான். மாலை ஐந்து மணி க்ராண்ட்(GT) ரயிலில் தில்லிக்குப் போகிறோம். டிக்கெட்டையும் அவன் தான் பதிவு செய்திருந்தான். முதல் முதலாய் தொலைதூரப் பயணம் என்பதால் முந்தின நாள் இரவே எனக்கு தூக்கம் போய்விட்டது. கிட்டத்தட்ட ஐந்து நாள் ரயிலில் பயணிக்க வேண்டும் தில்லியில் இரண்டு நாட்கள் அலைந்து திரிய வேண்டும். எங்களுடைய கல்விச் சான்றிதழ்களை வெளியுறவு அமைச்சகமும் கல்வி அமைச்சகமும் உறுதிசெய்யவேண்டும். பின்பு யுஏஇ எம்பசியிடமிருந்து அச்சான்றுகளில் ஒரு ஸ்டாம்பையும் வாங்க வேண்டும் இம் மூன்று சான்றுகளை வாங்கி அனுப்பினால்தான் துபாயில் எங்களை தேர்வு செய்திருந்த நிறுவனம் விசா அனுப்பி வைக்கும். குறுகிய கால அவகாசமே இருந்ததால் வேலையை முடிக்க வேண்டிய லேசான பதட்டமும் இருந்தது.

வீட்டிலிருந்து புறப்படும்போது ஐந்து நாள் பிரயாணத்திற்கு தேவையான கனமான புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். பின் தொடரும் நிழலின் குரல், பிதிரா, காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் மூன்றை நுழைத்ததுமே பை வீங்கி விட்டது. புளியோதரை, எலுமிச்சை சாதம் வகையறாக்களை பையில் நுழைக்க எடுத்து வந்த என் அம்மாவை ஒரு பார்வை பார்த்தேன். “பிரயாணத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காது எடுத்துட்டுப் போடா” என்றாள். “உன்னோடது நல்ல சாப்பாடுன்னு நான் சொல்லனும் நீயே சொல்லிக்க கூடாது” என்றேன் விரைப்பாக. “காய்ஞ்சி திரும்பி வா அருமை தெரியும் “ என சபித்தபடியே பொட்டலங்களை உள்ளே எடுத்துப் போனாள். விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து சமையலறையை உருட்டிக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. பேருக்காவது இரண்டு பொட்டலங்களை எடுத்துக் கொண்டிருக்கலாம்தான். வேண்டாம் அது வேறு எங்காவது கொட்டிக் கொண்டால் துணியும் புத்தகங்களும் வீணாகி விடும். காலை ஆறு மணிக்கு பேருந்தைப் பிடித்து விட்டேன்.

இரண்டு மணியிலிருந்து காத்திருந்து வெறுத்துப் போய் மூன்று மணிக்கு சமீபமாய் விஜியை அலைபேசியில் அழைத்தேன். எடுக்கவில்லை. அரக்கோணத்திலிருந்து ரயிலில் நின்று கொண்டு வருகிறானோ என்னவோ. அவன் சொந்த ஊர் அரக்கோணம் பக்கத்தில் ஒரு சிறு கிராமம். அனல் காற்றும் மக்கள் கூட்டமும் செண்டரலை காந்தியது. நல்ல பசி வேறு. விஜியுடன் லேசாய் குடித்து விட்டு, சாப்பிட்டுவிட்டு, நாலரை மணிக்கெல்லாம் ப்ளாட்பாரம் வந்து விடுவதுதான் திட்டம். பாவி மூன்று மணியாகியும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டபோது சின்னதொரு சிக்கலில் மாட்டிக் கொண்டதாய் சொன்னான். ஐந்து மணிக்கு கண்டிப்பாய் வந்துவிடுவதாக உறுதியளித்தான். பைகளை சுமந்தபடி சாப்பிடச் சென்றேன்.

சென்னை மிக மோசமான நகரம். அதுவும் வெயில் காலங்களில் இந்த நகரத்திற்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது. இந்த சென்னை வாழ்வு பிடிக்காமல்தான் நல்ல வேலையை உதறிவிட்டு ஆறு மாதத்தினுக்கு முன்பு மதுரை ஓடிப்போனேன். விஜியும் நானும் சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம். அப்போதிருந்தே அவன் துபாய் போக முயற்சி செய்துகொண்டிருந்தான். எனக்கு வெளிநாடு போகும் ஆர்வம் இல்லை. மதுரையே போதுமானதாக இருந்தது. மதுரை நகரமும், மனிதர்களும், உணவகங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒத்தக்கடையிலிருந்து சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு போகும் வழியில் நிலம் கூட பார்த்துவிட்டேன். லோன் கிடைப்பதும் எளிதுதான். விஸ்தாரமாய் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு மதுரையிலேயே செட்டில் ஆகும் எண்ணம்தான் இருந்தது. இவனை தேர்வு செய்த நிறுவனத்தில் இன்னொரு பணி காலியாக இருந்ததாம். வந்துவிடும்படி விஜி நச்சரித்துக் கொண்டிருந்தான். “இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருந்து விட்டு வந்துவிடலாம். …விசா டிக்கெட் எதுக்கும் பணமில்ல…. தங்குர இடமும் அவனே தர்ரான்…. சம்பளமும் ஓகே… என பல்வேறு தூண்டில்கள். கடைசியில் நான் மீனானேன்.

இதோ கடந்த இரண்டு மாதங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம். விசா வந்துவிடும் என அந்நிறுவனம் லட்டர் கொடுத்ததோடு சரி. ஒரு மாதம் எந்த தொடர்புமில்லை. நாங்கள் இருவருமே பார்த்துக் கொண்டிருந்த வேலையை கவுண்டமணியைப் போல விட்டிருந்தோம். ஒரு மாதம் கழித்து சான்றிதழ்களை அட்டஸ்டட் செய்து அனுப்புங்கள் அப்போதுதான் விசா எடுக்க முடியும் என புதிதாய் ஒரு கதை சொன்னார்கள். வெளிநாட்டு வேலை மிதப்பில் ஏகத்துக்கும் செலவு செய்து விட்டிருந்தோம். அங்கே இங்கே கடன் வாங்கி இன்று சென்னை செண்ட்ரல்.

அருகிலிருந்த சாப்பாட்டுக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த வியர்வையில் கூட்டத்தில் நீந்தி, இடம் பிடித்து உட்கார்ந்து, கொதிக்கும் சாம்பாரோடு சாதத்தை தின்று தொலைக்க முடியாது. சென்னையையும் வெயிலையும் மனதார சபித்து விட்டு பக்கத்தில் மதுக் கடையைத் தேடி நகர்ந்தேன். அரசு மதுக்கடையில் பியர் கொதித்தது. ஆத்திரமாய் வந்தது. காண்ட்ராக்ட் முடிய சொற்ப மாதங்கள் மீதமிருக்கும் தனியார் கடை ஒன்று கண்ணில் பட்டது. நல்ல வேளையாய் அங்கே பியர் குளித்திருந்தது. அழுக்கு மேசை, காலுடைந்த மர ஸ்டூல், சுண்டல் சிதறல்களாய் மனிதர்களென கடை பின் பக்கத்தில் பியரை தாகத்துடன் வேகமாய் குடித்து முடித்தேன். தோள்பட்டை வலித்தது. இந்தத் தலயணை புத்தகங்களை எடுத்து வராமலிருந்திருக்கலாம். ஆனால் ஐந்து நாள் பயணத்தில் என்ன செய்வது? மீண்டும் ஒரு பியர் குடித்தேன். உலகம் சந்தோஷமானது. வெயிலைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணன் வரிகள் நினைவுக்கு வந்தன. சென்னையை, கூட்டத்தை, வியர்வையை நான் நேசிக்கத் துவங்கினேன். அடுத்த மாதம் வாங்கப் போகும் சம்பளத் தொகையை நினைத்துக் கொண்டேன். இன்னும் சந்தோஷமானது. அரைப்புட்டி ரம்மை வாங்கி பெப்சி பாட்டிலில் கலந்து பையில் வைத்துக் கொண்டேன். நான்கு மணி ஆகியிருந்தது. விஜி கால் டாக்சியில் வந்து கொண்டிருப்பதாகவும் சரியாய் ஐந்து மணிக்கு ஸ்டேசனில் இருப்பேனனவும் சொன்னான். நான் மீண்டும் பைகளை சுமந்தபடி லேசாய் மிதந்தபடி செண்ட்ரல் திரும்பினேன்.

இரண்டாவது ப்ளாட்பாரத்துக்கு சமீபமான பெஞ்சில் சுமைகளை இறக்கி வைத்து விட்டு அமர்ந்தேன். ஜிடி வந்துவிட்டது. நான் விஜிக்கு அலைபேசவில்லை. இடியே விழுந்தாலும் சமாளிக்கும் உற்சாக மன நிலை இருந்தது. ஜிடி கிளம்பிப் போய்விட்டது. விஜியிடமிருந்து அழைப்பு
“மச்சான் வண்டி வந்துட்சா”
“போய்டுச்சி ஒய்”
“சாரிடா இங்க செம ட்ராபிக்”
“சரி வந்து சேரு தமிழ்நாடுல இடம் இருக்கா பாப்பம்” என்றேன்.
ஐந்தரைக்கு மணிக்கு வந்து சேர்ந்தான். டிக்கெட்டுகளையும் அவனே வைத்திருந்தபடியால் என்னால் கேன்சல் செய்யவும் முடியவில்லை. இருவரும் போய் ஜிடியை பாதி விலைக்கு கேன்சலித்தோம். தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் மூன்றாவது ஏசி டிக்கெட்டுகள்தாம் இருந்தன. “தேர்ட் ஏசிக்கு அவன் கேக்குர காசுக்கு கொஞ்சம் கூட போட்டு பிளைட்ல போய்டலாம் மச்சான்” என்றான். “அடுத்த மாச சம்பளத்த நென... இப்ப புக் பண்ணு” என சிரித்தேன். மேலும் “வட மாநிலங்களில் வெயில் பயங்கரமாக இருக்கும் ஏசி கிடைத்தது நம் அதிர்ஷ்டம்தான்” என்றேன். “இருந்தாலும் செம காசு மச்சான்” என்றான். “வுடு ஒய்” என்றதும் முறைத்தபடியே டிக்கெட் வாங்கினான்.

விஜி அளவில் சிறியதாய் ஒரு பை எடுத்து வந்திருந்தான். என் பெரிய பைகளைப் பார்த்து “பறவையப் போல வாழக் கத்துக்க மச்சான்” என்றான். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்த்து. இடம் தேடி அமர்ந்தோம். ”நீ மட்டும் நல்லா குடிச்சி சந்தோசமா இரு ஒய்” என்றான். முன் மற்றும் பக்கத்து இருக்கைகள் காலியாய் இருந்தன. பையிலிருந்த பெப்சி பாட்டிலை எடுத்தேன். ”மச்சான் நீ கில்லிடா” என்றான். விஜிக்கு பித்த உடம்பு (அப்படித்தான் சொல்வான்) அரை பியருக்கே படு பயங்கரமான உண்மைகளையெல்லாம் உலகினுக்கு உரத்து சொல்ல ஆரம்பித்துவிடுவான். ஹாட் என்றால் ஒரு கட்டிங்தான். மெதுவாய் ஆரம்பித்தான்.

“மச்சான் இன்னா மேட்டர் தெரியுமா நான் அரக்கோணத்துல இருந்து நேத்து சாயந்திரமே திருவள்ளூர் வந்துட்டேன். கார்த்தி ரூம்ல இருந்துட்டு காலைல கிளம்பி மேரியப் பாக்க போனேன். சாப்டுட்டுதான் போகனும்னு அடம்புடிச்சாங்க. அவங்க அன்பை தட்டிக் கழிக்க முடியாம நல்லா சாப்டுட்டு மனசே இல்லாமதான் கால் டாக்சி புடிச்சி வந்தேன் ஒய்” என இளித்தான். எனக்கு ஆத்திரமாய் வந்தது. “தாயோலி உன்னால எவ்ளோ லாஸ்” “கோச்சுக்காத ஒய் இன்னொரு ரவுண்ட் ஊத்து” என்றபடியே சரிந்தான் ஸ்லீப்பர்களை விரித்து மட்டையானோம்.

இன்று : 30.05.2006 : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை, பெயர் தெரியா நிறுத்தம்

கடந்த பதினைந்து நிமிடமாக எந்த வாகனமும் உள்ளே வரவில்லை. காற்றில் இதற்கு முன்பு அனுபவித்திராத வினோத வாசமிருந்தது. வயிற்றில் பசி நிரந்தரமாக இருந்தது. நன்றாக சாப்பிட்டு ஐந்து நாட்கள் ஆகின்றன. எல்லா உணவிலும் நீக்கமற அடிக்கும் எழவெடுத்த எண்ணெய் நாற்றம் வயிற்றைக் குமட்டியது. அவ்வப்போது வெறும் காற்றை வாந்தியாய் எடுத்துக் கொண்டிருந்தேன். இந்த தில்லி நகரம் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. குவியல் குவியலாய் மக்கள். எங்கு பார்த்தாலும் காவிக் கறை. எப்போதும் எதையாவது குதப்பும் சொத்தைப் பல் மனிதர்கள். வத்திப்பெட்டி வசிப்பிடங்கள். மிக மோசமான உணவகங்கள். என மத்திய வர்க்கம் புழங்கும் தில்லி நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது. இந்தியாவின் சொர்க்கம் தென்னிந்தியாதான் என தோன்றிற்று. போதாதென்று இம்மாதிரியான அனுபவங்கள் வேறு. எனக்கு பைத்தியம் பிடித்து விடுவது போலிருந்து.

விஜி சற்று நிதானமாகி இருந்தான்.” நம்ம பேக் பஸ்லதான் மச்சான் இருக்கும்.. எவன் எடுக்க போரான்..கவுருமெண்ட் பஸ் தான நாம வந்தது… பஸ் ஸ்டாண்ல இருக்க கவுண்டர்ல எடுத்து வச்சிருப்பானுங்க.. போய் எடுத்துக்கலாம்..” என பதில் எதிர்பாராது அவனுக்கு அவனே பேசிக் கொண்டிருந்தான்.
இங்கு எல்லா பேருந்துகளுமே ஒரே மாதிரி இருந்து தொலைகிறது. இந்தி எழுத்துக்களை இருவருமே வாழ்நாளில் முதல் முறையாய் பார்ப்பதால் என்ன எழுதி இருக்கிறதென்றும் தெரியவில்லை. நாங்கள் வந்த பேருந்தின் எண்ணும் தெரியாது. இறங்கும்போது பின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் ஸ்டிக்கர் ஒன்றை நினைவில் வைத்துக் கொண்டு இறங்கினேன். டீ குடித்து விட்டு திரும்பி பார்க்கையில் மஞ்சள் ஸ்டிக்கர் உணவகத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பதபதைத்துதான் இவனை அழைத்துக் கொண்டு வெளியில் ஓடினேன். அதற்குள் அந்த பேருந்து பிரதான சாலையில் மாயமாகி இருந்தது.

ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். நேற்றைய இரவு தந்த பயங்கர அனுபவத்தை விட இது மோசமில்லைதான். வினோதக் காற்றின் வாசத்தை சிகரெட் புகை இடம்பெயர்க்கத் துவங்கியது.

.........மேலும்

Wednesday, February 10, 2010

கினோகுனியா

இருவரும் திகைத்துத்தான் போனோம். கிட்டத் தட்ட இரண்டு மணி நேரத்தினுக்கும் மேலாக இந்தப் பேரங்காடியின் இரண்டாவது தளத்தில் கினோகுனியா வைத் தேடிக் கொண்டிருக்கிறோம். கினோகுனியா என்பது புத்தகக் கடையின் பெயர். உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்தக் கடை தங்களின் கிளைகளை வைத்துள்ளது. பெரும்பாலான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்தக் கடைக்கு அடிக்கடி வருவோம். இவள் இக்கடையின் உறுப்பினர் திட்டத்திலும் இருக்கிறாள். இருநூறு திர்ஹாம்களுக்கு மேல் வாங்கினால் இருபது திர்ஹாம் தள்ளுபடியும் இவளுக்கு கிடைக்கும். இன்று இந்தக் கடையைக் காணோம். சுற்றி சுற்றி ஒரே இடத்தினுக்கு வந்து கொண்டிருந்தோம் இருவருக்குமே மிக நன்றாகப் பரிச்சயமான இடமிது. திடீரென எப்படி மறைந்து போகும்? இவ்வளவு பெரிய கடையினை காலி செய்யவே கிட்டத்தட்ட பத்து நாட்கள் பிடிக்கும் இவள் போன வாரம் வேறு இங்கு வந்து போயிருக்கிறாள். இந்த வாரம் கினோகுனியா இருந்த இடத்தில் பாரீஸ் காலரி என்கிற வாசனைத் திரவியக் கடை இருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய பேரங்காடியான இதில் இடக்குழப்பங்கள் சாதாரணமென்பதால் பழியை எங்களின் கவனத்தின் மீது போட்டுக் கொண்டு இந்தத் தளம் முழுக்க சுற்றியலைந்தோம். உண்மையிலேயே அந்தக் கடை இல்லை.

வேறு உதவியை அணுகலாம் என்கிற நோக்கில் அங்குத் தென்பட்ட பேரங்கடிக் காவலர்களிடம் விசாரிக்க முடிவு செய்தோம். சீருடை அணிந்த மண்ணின் மைந்தர் ஒருவரிடம் விசாரிக்கையில் “அப்படி எதுவும் இங்க இல்லயே” என்றார். இவள் துணுக்குற்றாள் “முன்னாடி வந்திருக்கோம் இடம் மறந்திடுச்சி” “இல்ல மேடம் அந்த மாதிரி கட எதுவும் இங்க இல்ல. வேணும்னா அங்க இருக்க மேப்ப பாத்துக்கோங்க” என்றபடியே விலகிப் போனார். ஒவ்வொரு தளத்திலும் பேரங்காடியின் வரைபடம் சட்டம் போட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அதை இருவருமே மறந்துவிட்டிருந்தோம். லேசாய் சிரித்தபடியே வரைபடத்தை நோக்கிச் சென்றோம். வரைபடத்திலும் கினோகுனியா இல்லை. இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு மணி நேரம் அலைந்ததில் இருவரின் முகத்திலும் சோர்வு படித்திருந்தது. ஆனாலும் கடை குறித்தான தகவல்களையாவது அறிந்து கொண்டேயாக வேண்டுமென இவள் பிடிவாதமாய் இருந்தாள். என்னால் அவளை சமநிலைக்கு கொண்டு வர முடியவில்லை.

பேரங்காடியின் உதவி மேசை நினைவுக்கு வரவே அங்கு சென்று விசாரித்தேன். உதவி மேசையிலும் அப்படி ஒரு கடை இல்லை என்றார்கள். இவளின் ஆத்திரம் அதிகமானது ஆங்கிலத்தில் இரையத் துவங்கினாள். “நான் போன வாரம்தான் அந்த கடைக்கு வந்து மூணு புக் வாங்கினேன் இதோ இதே தளத்துலதான் அந்த கட இருந்தது. அதுக்குள்ள எப்படி காணாம போகும்? நீ வேலைக்கு புதுசா? எவ்ளோ நாளா இங்க இருக்க? இந்த மால் மேனேஜர கூப்டு” என்கிற அவளின் கத்தலுக்கு அங்கங்கே சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு கணம் நின்று விட்டு பின்பு நடக்க ஆரம்பித்தனர். நான் பொறுமையை மெதுவாய் இழக்கத் துவங்கினேன். பசி வேறு கோபத்தை அதிகமாக்கியது.

“ஏய் வா போலாம்.” “இல்ல நான் இந்த மால் மேனஜர பாத்துட்டுதான் வருவேன். உங்க மேனஜர கூப்ட போறிங்களா இல்லயா” என உதவி மேசைக்காய் திரும்பி அவள் கத்தத் துவங்கினாள்.

அந்த பிலிப்பைன் தேசத்துப் பெண் இவளின் கத்தலில் பயந்து போனது யாருக்கோ அவசரமாய் தொலைபேசியது. குட்டி மாமிச மலையையொத்த அராபியர் ஒருவர் அசைந்து அசைந்து வந்தார். என்ன விசயம் என இவளிடம் கேட்க இவள் கினோகுனியா புராணத்தை ஆரம்பித்தாள். குட்டி மலை சிரமப்பட்டு வாய் திறந்து என் முப்பது வருட அனுபவத்தில் அப்படி ஒரு கடையை நான் கேள்விப்பட்டது கூட இல்லை என்றார். இவளுக்கு கண்களில் நீர் திரண்டது. என் விரல்களை அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள். பின்பு உதவி மேசையை விட்டு நகர்ந்தாள். சற்று தூரம் நடந்து சென்று அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து அழத் துவங்கினாள். எனக்கு கோபம், எரிச்சல், பரிதாபம், என எல்லா உணர்வுகளும் ஒரே சமயத்தில் எழுந்தன.

மெல்ல அவளருகில் அமர்ந்து தலைவருடிச் சொன்னேன் “இங்க இருக்க எல்லாப் பயலுகளும் முட்டாளுங்க புக்க பத்தி இவனுங்களுக்கு என்ன தெரிய போவுது. ஒரு வேள நாம எந்த தளம்னு மறந்து போயிருக்கலாம் அடுத்த வாரம் வந்து மெதுவா முதல் தளத்துல தேடலாம் இப்ப வா போலாம்” என்றேன். அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். “அப்படியும் இருக்கலாம். வா இப்பவே போய் முதல் தளத்துல தேடலாம்” என என்னை இழுத்தபடியே தானியங்கி படிக்கட்டுகளுக்காக காத்திருக்காது படிகளில் தாவித் தாவி இறங்கினாள். எனக்கு கண்கள் இருண்டன.
0

இந்த நாள் இத்தனை மோசமாக விடிந்திருக்கவில்லை. இந்தப் பாலையில் எப்போதாவது பெய்யும் அபூர்வ மழை நேற்றைய இரவில் ஆரம்பித்திருந்தது. அடர்ந்த மேகங்களும் பிசுபிசுத் தூறல்களும் என் சொந்த தேசத்தில் வாழும் உணர்வைத் தூண்டியிருந்தன. பின்னிரவு முழுக்கத் தூங்காது மழையோடும் பாடல்களோடும் நொடிகளை நகர்த்திக் கொண்டிருந்தேன். லேசாய் வெளிச்சம் வர ஆரம்பித்த போது வெகு மாதங்கள் கழித்து ஒரு கவிதையை வேறு எழுதி விட்டிருந்தேன். மிகுந்த நிறைவோடு தூங்கச் செல்கையில்தான் தொலைபேசியில் இவள் அழைத்தாள். பத்து நாட்களுக்கு முன்பு செத்தாலும் என் முகத்தில் விழிப்பதில்லை என்ற சபதங்களோடு சென்றவள் இன்றுதான் அழைக்கிறாள். நடுவில் நான் இரண்டு முறை தொலைபேசியில் அழைத்தும் ஒரு முறை நேரில் சென்றும் கூட அவளின் கோபத்தை தணிவிக்க முடியாமலிருந்தது. ஒருவேளை மழையைப் பார்த்து இளகிவிட்டாளோ என புன்னகைத்தபடியேதான் தொலைபேசியை உயிர்ப்பித்தேன்.

அவள் குரலில் இன்னும் லேசாய் கோபமிருந்தது. ஆனாலும் அவளுக்கு கடந்த ஆறு நாட்களாக நடக்கும் சம்பவங்களின் புதிர் தன்மை என்னிடம் சொல்லாதிருக்க முடியாததாய் இருந்திருக்கிறது. இதுவரை அவள் பதினேழு பொருட்களைத் தொலைத்திருக்கிறாள். இன்னும் என்னவெல்லாம் காணாமல் போகுமோ என்று நினைத்து பயந்துதான் என்னை அழைத்திருக்கிறாள். முதலில் தொலைந்தது அவளின் செல்போன். என்னிடம் கோபித்துக் கொண்டு போன மூன்றாம் நாள் மாலை அது காணாமல் போயிருக்கிறது. மாலை நடைக்கு அவள் வழக்கமாய் செல்லும் டெய்ரா ஆப்ரா சாலையில்தான் அது காணாமல் போயிருக்கிறது. இவள் நடைக்கு செல்லும்போது உடன் கைப் பை எதுவும் எடுத்துச் செல்வதில்லை. செல்போனை மட்டும் எடுத்துச் செல்வாள். வழியில் தெரிந்தவர் தென்பட்டாலும் கூட ஒரு புன்னகையோடு கடந்து விடுவது இவள் வழக்கம். அந்த போன் எப்படி மாயமானது என்பது இந்த நிமிடம் வரை அவளுக்குப் புதிராக இருப்பதாகச் சொன்னாள். இரண்டு புத்தகங்கள், நான்கு டிவிடிகள், இரண்டு ரேபான்கள், கார் சாவி, தங்கக் கொலுசு (ஒரே ஒரு காலில் மட்டும் அணிந்திருப்பாள். மிக மெல்லிதான ஒரே ஒரு முத்து வைத்த கொலுசு அதை மட்டும் அணிவதாய் ஒத்துக் கொண்ட இரவில் நான் வாங்கித் தந்தது) இரண்டு வளையல், ஒரு நகவெட்டி, இரண்டு சிகரெட் லைட்டர் என இத்தனையும் காணாமல் போயிருக்கின்றது.

யாராவது உன் நண்பர்கள் எடுத்து வைத்து விளையாடுவார்கள் என அவளைத் தேற்றினேன். அவளுக்கு அதிகம் நண்பர்களில்லை மேலும் அவளின் வீட்டிற்கெல்லாம் அத்தனை எளிதில் யாரையும் அனுமதிப்பவளுமல்ல என்பதினால் என்னுடைய ஆறுதல்கள் பலனில்லாமல் போனது. தன்னைச் சுற்றி ஏதோ வினோதமாக நடக்கிறது என புலம்பினாள். ஒவ்வொன்றாய் காணாமல் போய்கொண்டு வந்து கடைசியில் தானும் காணாமல் போய்விடுவதுதான் நடக்கப் போகிறது என பயந்தபடியே அவள் சொன்னபோது எனக்கு வந்த தூக்கமும் காணாமல் போனது.

அடுத்த அரை மணிநேரத்தில் அவளின் வீட்டிலிருந்தேன். என்னைப் பார்த்ததும் கோபத்துடனே சிரித்து வைத்தாள். ஏதாவது கவன குறைவில் எங்காவது வைத்திருப்பாள் என்றுதான் அவள் முகத்தினைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. உள்ளே தோன்றிய வினோத மனநிலை சமநிலைக்கு வந்தது. அவள் ஒவ்வொரு பொருளும் காணாமல் போன நேரம், இடம், சம்பவங்கள் என துல்லியமாய் விளக்க ஆரம்பித்தாள். நான் ஒரு சின்ன கொட்டாவியுடன் வரவேற்பரையிலேயே தூங்க ஆரம்பித்தேன்.அவள் நான் தூங்குவது தெரிந்தும் கூட சொல்லிக் கொண்டிருந்தாள்.

மதிய உணவிற்காகவும் அப் இன் த ஏர் படம் பார்க்கவும்தான் இந்தப் பேரங்காடியினுக்கு வந்தோம். இரண்டு மணிக் காட்சி நிறைந்து விட்டதால் நான்கரை மணிக் காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகள் எடுத்துக் கொண்டு மீதமிருக்கும் இரண்டு மணிநேரத்தை கினோகுனியாவில் கழிப்பதுதான் எங்களின் திட்டமாக இருந்தது.

0
முதல் தளத்திலும் இதற்கும் அதற்குமாய் விறுவிறு வெனத் தேட ஆரம்பித்தாள். எல்லாரிடமும் விசாரித்தாள். ஒரே பதிலே திரும்பத் திரும்பக் கிடைத்தது. நான் பொறுமை இழந்து அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டேன். காலையிலிருந்து எதுவுமே சாப்பிட்டிருக்கவில்லை. நன்கு தெரிந்த ஒன்றை எல்லாரும் இல்லை இல்லை எனும்போது ஆத்திரமாக வருகிறது. அவள் இன்னும் குழம்பிப் போய் இருந்தாள். இழுக்காத குறையாய் அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினேன். கீழ்தளத்திலிருந்து காரை உயிர்ப்பித்து வெளியே வந்தோம். இவள் புலம்பலை நிறுத்தவில்லை. கண்களில் மெல்லிதாய் நீர் பளபளத்தது.

“எவ்ளோ பெரிய கட எப்படி யாருக்கும் தெரியாம போகும்” இப்பவாச்சும் நம்புறியா என்ன சுத்தி ஏதோ நடக்குது” என பேசிக்கொண்டே வந்தவள் திடீரென சக்கரங்கள் அதிரும்படி ப்ரேக் பிடித்து காரை நிறுத்தினாள். கதவுகளை வேகமாய் திறந்து கொண்டு “அவன் தான் அதே கிழவன் தான். ஒவ்வொரு பொருளும் காணாம போவும்போதும் இந்தக் கிழவன பாக்குறேன் இந்த கடைய மறைச்சது இவனாதான் இருக்க முடியும். உன்ன விட மாட்டேண்டா!” எனக் கத்தியபடியே யாரையோ நோக்கி ஓடத் துவங்கினாள்.

Featured Post

test

 test