Showing posts with label #zerodegreepublishing. Show all posts
Showing posts with label #zerodegreepublishing. Show all posts

Thursday, January 30, 2020

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை


தமிழ் சிறுகதைப் பரப்பில் எல்லாவித சாத்தியங்களும் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டன. ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் கூட மிகுந்து வராத இறுகிய கட்டுமாணங்கள் கொண்ட நவீனச் சிறுகதைகளிலிருந்து, சொல்லாமல் சொல்லிப் போகும் நுண்மக் கதைகள் வரை எல்லாமும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. இனிப் புதிதாய் இதே மரபில் எழுத என்ன இருக்கிறது என்கிற வியப்பும் சோர்வும் ஒரு சேர எழும்போதெல்லாம் நான் சிறுகதை எழுதுவதை தள்ளிப்போடுவேன்.

அதே நேரத்தில் இனிமேலும் கதை என்ற ஒன்றை வழுவாத சட்டகங்களோடு எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற எண்ணமும் தோன்றும். அது வலுவடைந்து என்னை என் விருப்பத்திற்கு எழுத வைத்தது. அவை கதைகள் ஆகின்றனவா, கலையம்சம் கொண்டிருக்கின்றனவா என்பதெல்லாம் வாசகர் தீர்மானிக்க வேண்டியவை.

மேலும் நம் சிறுகதைச் சூழலில் வட்டாரவழக்கு, காமம், வாழ்வியல் என எல்லாமும் போதுமான அளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. இனிமேலும் வாழ்வை ரத்தமும் சதையுமாகப் பதிவிக்கிறேன் என்கிற பெயரில் யதார்த்தத்தைச் சுரண்டிக் கொண்டிருப்பது உண்மையிலேயே அலுப்பானது என்பதால் நான் வழமையான கதைகளை எழுதவும் முயலவில்லை. இத் தொகுப்பில் இருப்பவை யாவும் என்னுடைய அறிதல்களும் அறிய முயன்றவையும் மட்டும்தான்.

சொந்த அறிதலைப் பொதுவுக்குக் கடத்துவதே கலை என்பார்கள். என் வாழ்வும் பயணமும் எனக்குத் தந்ததை இப்படிப் புனைவுகளாய் எழுதிப் பார்த்திருக்கிறேன். இது பொதுவுக்கு கடத்தப்பட்டிருக்கிறதா என்பதை வாசிப்பவர்கள் அறியத் தந்தால் மகிழ்வேன்.

முள்ளம்பன்றிகளின் விடுதியும் சரக்கொன்றையின் கடைசி தினமும் தொடர்ந்து அறிவியல் புனைவுத் தொடர்களைப் பார்த்தும், கதைகளை வாசித்தும் உருவான மன நிலையில் எழுதிப் பார்த்தவை. இன்னொரு கதையான சமீபத்திய மூன்று சண்டைகள் ரேமண்ட் கார்வரை வாசித்த பாதிப்பில் எழுதிப் பார்த்தது.

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சமவெளி மான் கதையின் போதாமைதான் ஓரிதழ்ப்பூவாக உருவானது. சோதிடன், அங்கையற்கன்னி, மலர்ச்செல்வி கதாபாத்திரங்கள் என்னோடு நான்கு வருடங்கள் வரைப் பயணித்தார்கள்.

கினோகுனியா, நீலகண்டப் பறவை ஆகிய இரண்டும் நான் வாழும் இந்த நிலப்பரப்பு எனக்குத் தந்தவை.

இப்படியாக வெவ்வேறு தருணத்தில், காலங்களில், மனநிலையில் எழுதிப் பார்த்த இக் கதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்நூலை மிகத் தரமாய் கொண்டு வரும் ஜீரோ டிகிரியின் எழுத்துப் பிரசுரத்துக்கு என் நன்றி.

இந்நாட்களில் என் இயங்கு சக்தியாக இருக்கும் சாருவுக்கும் காயத்ரி மற்றும் ராம்ஜிக்கும் என் அன்பு. சாருவின் முன்னுரை இந்த வருடத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. இந்தத் தொகுப்புக்காக மட்டும் நான்கு நாட்களை ஒதுக்கி ஒவ்வொரு சொல்லாய் வாசித்து மொத்தக் கதைகளையும் மெருகூட்டிய சாருவின் அன்பு நெகிழ வைக்கிறது. பதிலுக்கு இன்னும் அதிக அன்பை சாருவுக்குத் தர முயல்வேன் .

மிக்க அன்புடன்
அய்யனார் விஸ்வநாத்
துபாய், டிசம்ப ர் 06, 2019


Thursday, October 10, 2019

ஹிப்பி தற்போது விற்பனையில்


ஹிப்பி நாவல் வெளிவந்துவிட்டது. நண்பர்கள் கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி இணையத்தில் வாங்கலாம்.

https://zerodegreepublishing.com/books/new-releases/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%be/?fbclid=IwAR1vAecoFTx9Jec7DmmohoOfAqaZ0ZYTDiscA7WK0Q-Mz-8aF6hS_Ikfz24


இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது.
ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கும் இந்நாவலில் வெயிலும் மழையும் ஊடுபாவி வடதமிழகத்தின் இன்னொரு முகத்தை அறியத் தருகின்றது.
ஹிப்பிகளும், விளிம்பு நிலை மனிதர்களும் சேர்ந்து உருவாக்கும்        இக்கதைவெளியெங்கும் கஞ்சா நெடி விரவிக் கிடக்கிறது. ஒரு புள்ளியில் நிலைபெறாத நாடோடி மனங்களில் உள்ள காமமும், போதையும், கைவிடப்பட்ட அன்பும், கொண்டாட்டமும் வாசிப்போரைக் கனவுத் தன்மைக்குள் தள்ளுகிறது.
அய்யனார் விஸ்வநாத்தின் தனித்துவமான மொழியும் பின் நவீனத்துவக் கதை கூறலும் இந்நாவலின் அலாதியான வாசிப்பின்பத்திற்கு வலு சேர்க்கின்றன.


0

மாரியோ பர்கஸ் யோசாவைப் படிக்கும் போதெல்லாம் இந்த அளவு சுவாரசியமாகக் கதை சொல்ல தமிழில் யாருமே இல்லையே என்று வருத்தப்படுவேன். இங்கே இலக்கியம் என்றாலே ‘டல்’லாக இருக்க வேண்டும் என்று ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அய்யனார் விஸ்வநாத்தைப் படித்த போது அந்த என் எண்ணம் மாறி விட்டது. பிரமாதமான கதைசொல்லி. அதே சமயம் Content-உம் பல உள்ளடுக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. அய்யனார் வெறும் கதைசொல்லி மட்டும் அல்ல. மீண்டும் மீண்டும் வாசிக்கக் கோருபவை அவர் நாவல்கள். அந்தத் தன்மைதான் பொழுதுபோக்குக் கதைகளுக்கும் இலக்கியத்துக்குமான வித்தியாசம். அய்யனார் விஸ்வநாத்தின் ஹிப்பி நாவலைப் படித்து விட்டேன். அற்புதம். எடுத்தால் கீழே வைக்க முடியாது. நல்லவேளை, அய்யனார் ஏற்கனவே வெளிநாட்டில் இருக்கிறார். இல்லாவிட்டால் கதையின் முடிவுக்காக அவரை நாடு கடத்தியிருப்பார்கள். மிரட்டும் நாவல். இதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
– சாரு நிவேதிதா

Featured Post

test

 test