Showing posts with label OSHO. Show all posts
Showing posts with label OSHO. Show all posts

Monday, August 27, 2018

மெளனத்தின் சங்கீதம்

மூன்று மாதங்களாய் இந்தப் பக்கத்தைத் திறக்க முடியவில்லை. புழக்கத்தில் இல்லாமல் இருந்தால் எல்லாமும் துருப்பிடித்துப் போகிறது. இந்தப் பக்கம் மட்டும் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியம். தினம் ஐம்பது பேராவது இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்கிறார்கள். அந்த எளிய மனங்களுக்காவது எதையாவது இங்கு கிறுக்கி வைக்க வேண்டும். இந்தியப் பயணம், தொடர்ச்சியான விடுமுறைகள் என அலுவலகத்தில் சாவகாசமாய் உட்கார்ந்து எழுத நேரம் வாய்க்கவில்லை. என் அலுவலக மேசையும் கணினியும் இல்லாமல் போனால் என்னால் எழுதவே முடியாதோ என்கிற பயமும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. நிறைய எழுதுவதற்கான உந்துதலில் மேக்புக்கை  வாங்கியதோடு சரி. ஓரிதழ்ப்பூவின் எடிட்டிங் வேலை பார்த்ததைத் தவிர, அதை வரவேற்பரையில் பார்க்க முடியாத படங்களைக் காண மட்டுமே பயன்படுத்துகிறேன். 

’வாட்ஸப்’ வழியாய் அமீரகத் தமிழ் வாசிப்பாளர் குழுமம் என்கிற பெயரில் நாற்பது நண்பர்கள் இணைந்திருக்கிறோம். ஒரு வருடத்திற்கும் மேலாய் இந்தக் குழு கலையாமல் இருப்பதும், தினம் உரையாடல்கள் நிகழ்வதும் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய நிகழ்வுதான். நிறைய சந்திப்புகளும்,  விவாதங்களும், கிண்டலும் கேலியுமாய் குழு ஆரோக்கியமாக நகர்கிறது. தினசரியின் சலிப்பை உணர்ந்து ஒரு வருடமாகிற்று. ஃபேஸ்புக்கில் கிடந்து உழலுவதும் தவிர்க்கப்பட்டு மன ரீதியிலாய் ஆரோக்கியமாக உணர்கிறேன். எந்த உளைச்சலும், உயர்வுணர்வும், தாழ்வுணர்ச்சியும் இல்லை. 

இதுவே எழுதுவதற்கான சரியான மனநிலையும் காலமும் என்பதை உணர்ந்தே என் அடுத்த நாவலை எழுத ஆரம்பித்தேன். சோம்பலால் தள்ளிப் போகிறது. மேலதிகமாய் இரண்டு சிறுகதைகளும் மூளையில் வந்து உட்கார்ந்து கொண்டு நகராமல் அடம்பிடிக்கின்றன. இடையில் மீண்டும் கவிதை எழுதும் முனைப்பு வேறு. ஆனால் ஒரு வரி கூட எழுதவில்லை. இந்தச் சுகசெளகர்யச்சோம்பலிலிருந்து மீள வேண்டும்.

வாழ்வு இணக்கமாக இருக்கிறது. நண்பர்கள் மகிழ்வைக் கூட்டுகிறார்கள். சகலத்திலும் மென்மையும் கருணையும் நிரம்பி வழிகிறது. ஆன்மாவின் இசைத்தட்டிலிருந்து மெளனத்தின் சங்கீதம் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. நினைவில் அவ்வப்போது எழும் பிழைகளின் அவமானத்தைத் துடைத்தெறிந்து விட்டு முன்னால் நகர்கிறேன். இந்த நிகழ் மகத்தானது. ஒருபோதும் மீளக் கிடைக்காதது. சிரிக்கும் செம்மஞ்சற்ப்பூவில் தோற்கும் வெட்கைச் சூரியனைப் பார்த்துப் புன்னகைத்துக் கடக்கிறேன்.


0

’நார்கோஸ்’, ’வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ தொடர்களுக்குப் பிறகு நெட்ஃபிலிக்ஸில் ’ப்ரேக்கிங் பேட்’ இரண்டு சீசன்களைப் பார்த்தேன். இடையில் ’சாக்ரெட் கேம்ஸ்’ எட்டு பகுதிகள் - அவ்வளவுதான் வந்திருக்கிறது,-  ’ப்ளாக் மிர்ரர்’ நான்கு பகுதிகள் பார்த்து முடித்திருக்கிறேன். ப்ளாக் மிர்ரரின் முதல் இரண்டு கதைகளும் வியப்பிலாழ்த்தின. எதிர்காலத்தின் கதைகள் என இவற்றை வகைமைப்படுத்தலாம்.  அறிவியல் புனைக் கதைகள் என்பதைத் தாண்டி கதை சொல்லலில் எவ்வளவு துல்லியம்! Black Mirror - Series 4 ன் முதல் கதையான USS Callister தந்த வியப்பு, கடந்த ஒருவாரமாக அப்படியே இருக்கிறது Arkangel மற்றும் Crocodile கதைகளும் பிரமாதம். Game of Thrones போல மிகத் தாமமாக கண்டறிந்த தொடர் இது. இதற்கு முன்பு வெளியான  ப்ளாக் மிர்ரரின் முதல் மூன்று பாகங்களையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

Sacred Games வழக்கமான மும்பை தாதா கதைதான்.  மனித வாழ்வில் ஒருபோதும் அலுக்கவே அலுக்காதவை என சில விஷயங்கள் உண்டு. போலவே  பணம்,பெண்,போதை, அதிகாரம், வன்முறை இவற்றை உள்ளடக்கிய சினிமா அல்லது தொடர் எத்தனை வந்தாலும் அவை கண்டிப்பாய் நம்மை கட்டிப்போடும். கொஞ்சம் சுவாரசியமும், புத்திசாலித்தனமான திரைக்கதையும், தேர்ந்த நடிகர்களும் இருந்தால் போதும். திரையுடன் பார்வையாளர்கள் ஒன்றிப்போகலாம்.  அப்படித்தான் இந்தத் தொடரும் இருக்கிறது. 

சாயிஃப் அலி கான் இவ்வளவு நல்ல நடிகரா என்ன! என்கிற வியப்புதான் முதலில் தோன்றியது. சாயிஃப் அலி கான் சினிமா வாழ்வில்  சர்தாஜ் சிங் போல ஒரு கதாபாத்திரம் கூட  அமையவில்லை என்றே நினைக்கிறேன். சந்தேகமே வேண்டாம் அவரின் ’கேரியர் பெஸ்ட்’ இதுதான்.

Ganesh Gaitonde வாக தானைத் தலைவன் நவாசுதீன் சித்திக். சாயிஃப் உயிரைக் கொடுத்து நடிப்பதை ஒரே ஒரு உடலசைவில் நவாசுதீன் மிக எளிதாக தாண்டுகிறார். மொத்த தொடரையும் இவரது இருப்பே தாங்குகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த சமகால நடிகன் இவராகத்தான் இருக்க முடியும். Sacred Games குறித்தும் விரிவாக எழுதுகிறேன்.


Tuesday, May 1, 2018

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்



இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷால் ஈர்க்கப்பட்டு கம்யூன் உள்ளே வந்தவர். Swami Prem Niren என்கிற சந்நியாசப் பெயரால் அறியப்பட்டவர். ரஜனீஷின் எல்லா வித சட்ட சிக்கல்களையும் இவரே எதிர் கொண்டார்.

Charlotte விமான நிலையத்தில் கைதான ரஜனீஷ் மூன்று சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டார். அவரைப் பதினைந்து நாட்கள் அலைக்கழித்தும் அரசு எதிர்பார்த்த குற்றம் எதுவும் கிடைக்கவில்லை. பிலிப்பின் திறமையான முயற்சியால் குடியேற்ற மோசடி என்கிற வகையில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

பிலிப்பின் ஒட்டு மொத்த பேச்சிலும் அவருக்கு ரஜனீஷ் மீதிருந்த அன்பும் பக்தியும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்தத் தொடரின் இன்னொரு பிரமாதமான அம்சம் இதன் எடிட்டிங். ஆறு பகுதியிலேயும் பிலிப்பின் பேச்சு இடம்பெற்றிருக்கும்.  ரஜனீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாட்களை நினைவு கூரும்போது பிலிப் நிலை குலைகிறார்.  பகவான் எவ்வளவு அற்புதமான மனிதர்! எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

ரஜனீஷ்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோற்றத்தைப் பார்த்து தான் அடைந்த துயரத்தைப் பகிரும்போது பிலிப் முழுமையாய் உடைகிறார். ரஜனீஷின் மிகப் பெரிய பலம் பிலிப் போன்ற லட்சக்கணக்கான மனிதர்கள் அவர் மீது கொண்டிருக்கும் அன்புதான். வெறும் குரு- சீடன் என்பதையும் தாண்டிய பிணைப்பு இது.

பிம்ப உருவாக்கம் மீது நம்பிக்கையற்றவன் என்ற போதிலும் ஓஷோ என்றதுமே உருவாகும் வாஞ்சையை என்னாலுமே தவிர்க்க முடிவதில்லை. நான் அனைவரிடமும் சொல்வதுதான். ஓஷோ மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். இதில் நானும் அடக்கம்தான்.

0

கம்யூனிலிருந்து வெளியேறிய ஷீலா குழுவினர் ஜெர்மனியில் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பிக்கின்றனர். ஜெர்மனில் வெளியாகும் பரபரப்புப் பத்திரிக்கையான ஸ்டெர்ன் ஷீலாவின் கதையை பிரசுரிக்க விரும்புகிறது. எப்போதுமே செய்திகளில் அடிபட விரும்பும், லைம்லைட்டில் இருக்க விரும்பும் ஷீலா இதற்குச் சம்மதிக்கிறார். அவரின் நிர்வாணப் புகைப்படத்தோடு முழுக் கதையும் வெளியாகிறது. இதைக் குறித்துச் சொல்லும்போது நாங்கள் வாழ எங்களுக்குப் பணம் தேவையாக இருந்தது. ஆகவே இதற்கு சம்மதித்தேன் என்கிறார் ஷீலா.

FBI ரஜனீஷைக் கைது செய்யும் அதே நேரம் ஷீலாவும் கைது செய்யப்பட்டு அமரிக்காவிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார். குற்றங்களாக - ரகசிய ஒலிப்பதிவு, கொலை முயற்சி மற்றும் குடியேற்ற விசா மோசடி போன்றவை நிரூபிக்கப்படுகின்றன. ஷீலாவிற்கு இருபது வருட ஆயுள்  தண்டனை கிடைக்கிறது. ஆனால் நன்னடத்தை காரணமாக இரண்டரை வருடத்தில் வெளியே வருகிறார். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் ஷீலா முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

0

இந்தத் தொடரின் போதாமை குறித்தும் சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எனக்குமே ஹாசியாவின் தரப்பு இல்லாதது பெரும் உறுத்தலாக இருந்தது. ஹாசியா தற்போது இல்லையென்பதால் அது இயலவில்லை ஆனால் அவரின் கணவரும் ஓஷோவின் தனிப்பட்ட மருத்துவருமான ஜார்ஜின் நேர்காணலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறவில்லை. ஷீலா மிகத் தவறாக ரஜனீஷைப் பொதுவெளியில் கட்டமைத்தார் என்பதுதான் இவர்களின் ஆணித்தரமான தரப்பு. ஏன் ஒவ்வொரு ஓஷோ நம்பிக்கையாளரின் தரப்பும் இதுதான். இந்த ஆவணப்படம் பார்க்கும் வரை நானுமே கூட அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். இந்த நம்பிக்கையை Wild Wild Country அசைத்துப் பார்த்திருக்கிறது.

பிலிப் என்கிற Swami Prem Niren இன் இணையதளத்தில் ரஜனீஷ் மருத்துவரின் நேர்காணல் கிடைக்கிறது. அவர்களின் தரப்பை - ஆவணப்படம் சொல்லாததை - அறிய இங்கே செல்லுங்கள்

http://sannyasnews.org/now/archives/7751

Monday, April 30, 2018

Wild Wild Country - 2 விஷக்கன்னி


இந்த ஆவணப்படம் குறித்தான  முதல் பதிவிற்கு வந்த எதிர்வினைகள், என் ஒரு பக்க சாய்வைக் குறித்து கேள்வி எழுப்பின. ஒருவேளை ஷீலா தந்த வியப்பில்  மிகையாக எழுதுகிறேனோ என எனக்கே சந்தேகம் தோன்றியதால் நான்கைந்து நாட்கள் இதை எழுதுவதை தள்ளிப்போட்டேன். இப்போது மனம் சமநிலைக்கு வந்திருப்பதாகவே உணர்கிறேன்.

எல்லாத் தரப்புகளையும் இந்தத் தொடர் உள்வாங்கியிருப்பதுதான் இதன் தனிச் சிறப்பு. முடிந்தவரை உண்மைகளைச் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார்கள்.  ஷீலாவின் இடத்தைப் பறித்துக் கொண்ட Ma Prem Hasya (Francoise Ruddy) மரணமடைந்து விட்டதால் அவரின் தரப்பு மட்டும் இதில் பதிவாகவில்லை. ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் எதனால் ரஜனீஷ் அவ்வளவு மோசமாக ஷீலாவை வெறுத்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் துல்லியமாக  நமக்குக் கிடைத்திருக்கும்.

ஷீலா தன் பதினாறாவது வயதில் ரஜனீஷை மும்பையில் வைத்துச் சந்திக்கிறார். குஜராத் படேல் சமூகத்தைச் சேர்ந்த ஷீலாவிற்கு ரஜனீஷை அவரின் தந்தை இரண்டாம் புத்தா என்கிற அடைமொழியோடு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அந்த சந்திப்பை ஷீலா அவ்வளவு பரவசத்தோடு நினைவு கூர்கிறார். அவரின் கண்களைப் பார்த்த நொடியில் தான் முழுமையடைந்ததாகவும் அந்த கணத்தில் இறந்துபோகவும் தயாராக இருந்ததாகவும் சொல்கிறார்.  பின்னணியில் காண்பிக்கப்படும் புகைப்படங்களும் அவ்வளவு உண்மையாக இருக்கின்றன.

பதினேழாவது வயதில் ஷீலாவை அவரது பெற்றோர் உயர்கல்வி பயில நியூஜெர்ஸிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஷீலா அங்கே மார்க்கை சந்திக்கிறார். My first love, the beautiful man என மார்க் குறித்து விழிகள் விரியப் பேசுகிறார். உயர் சமூக இளைஞர்களின் ஹிப்பிக் கொண்டாட்ட வாழ்வாக இவர்களின் காதல் இருந்ததைப்  புகைப்படங்கள் வழியாய் புரிந்து கொள்ள முடிகிறது. மார்க்கிற்கும் ரஜனீஷைப் பிடித்துப் போகவே இருவரும் பூனே ஆசிரமத்திற்கு வந்து சேர்கின்றனர். சில வருடங்களில் மார்க் கேன்சரில் இறந்து போக, ஷீலா பூனா ஆசிரமத்திற்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.

ஷீலா தன்னை ஒரு மார்க்கெட்டிங் ஆளாகத்தான் முன் நிறுத்திக் கொள்கிறார். தியானம் செய்வதில் அவருக்கு ஆர்வமில்லை. தியானத்தை ஒரு பொருளாக,  பணத்தைக் கொண்டு வரும் பொருளாக மட்டுமே பார்க்கிறார்.

இந்தியாவில் 70 களின் இறுதியில் ரஜனீஷ் பரவலாக சென்றடைகிறார்.  அதே நேரம் அவருக்கு கணிசமான எதிரிகளும் உருவாகின்றனர். ஒரு முறை அவரின் மீது கத்தி வீசப்படுகிறது. அரசியல்வாதிகளையும் தன்னுடைய கிண்டல்களால் முறைத்துக் கொள்ளவே கம்யூனில் ஒரு வித சமனில்லாத நிலை நிலவுகிறது. மேலும்  ஏராளமான பணமும் குவிகிறது.

ஷீலா அமெரிக்காவிற்கு சென்று விடும் யோசனையைச் சொல்கிறார். ரஜனீஷ் உடனே அதை அங்கீகரிக்கிறார். ஒரேகன் மாநிலத்தின் ஆண்டலோப் பகுதியில் 65000 ஏக்கர் நிலத்தை ஷீலா வாங்குகிறார். எதற்குமே பயனில்லாத இடம். கரடுமுரடான மலைக் குன்றுகளையும் பாறைகளையும் கொண்ட  முரட்டு நிலம். ஷீலா அந்த நிலத்தைப் பண்படுத்துகிறார். சொற்ப வருடத்தில் அந்தப் பிரதேசத்தையே நவீன நகரமாக மாற்றிக் காட்டுகிறார். இந்தப் பகுதிகளின் வீடியோ ஃபுட்டேஜ் களைப் பார்க்க பார்க்க ஆச்சரியம் மேலெழுகிறது. 80 களில் இருக்கும் கட்டுமாண வசதிகள், உபகரணங்களைக் கொண்டு அதிவேகமாக ஒரு நகரத்தை உருவாக்க முடியும் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் ஷீலா அதை நடத்திக் காண்பிக்கிறார்.

அதி நவீன தியான அரங்கங்கள், தனித்தனிக் குடியிருப்புகள், டைனிங் ஹால்கள்,  நீச்சல் குளங்கள் என பிரம்மிக்க வைக்கும்படியாய் ஒரு நகரம் தயாராகிறது. மேலும் விவசாய நிலங்களை உருவாக்கி அதில் கம்யூனிற்குத் தேவையான காய்கறிகளையும் பயிரிட்டுக் கொள்ளும்படியான வசதிகளையும் ஏற்படுத்துகிறார்கள்.

ரஜனீஷ் ஏர்வேஸ் என்கிற பெயரில் கம்யூனில் ஒரு விமான தளமே உருவாகிறது. நான்கைந்து விமானங்கள் நிற்கின்றன. வரிசையாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், குவியும் மக்கள் கூட்டம் என மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமான  ரஜனீஷ்புரம் உருவாகிறது. நீளமான சிவப்பு அங்கி மற்றும்  ஓஷோ உருவம் பதித்த டாலைரைக் கொண்ட மணியை அணிந்த ஆயிரக்கணக்கான சந்நியாசிகள் ரஜனீஷ் புரத்தை நிறைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கோப்பான அமைப்பின் பின்னால் ஷீலா இருக்கிறார். கம்யூனின் ஒவ்வொரு அசைவும் ஷீலாவிற்கு தெரிகிறது. ரஜனீஷின் தனியறை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் ரகசிய ஒலிக்கருவிகள் பதிக்கப்பட்டு எல்லாப் பேச்சுக்களும் பதிவு செய்யப்படுகின்றது. கொஞ்சம் நாடகத்தனமாக சொல்லப்போனால் அங்கு ஷீலாவிற்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையமுடியாது.

ஷீலா தினமும் மாலையில் ரஜனீஷை சந்திப்பார். அப்போது ரஜனீஷ் மெளனத்திலிருந்தார். அவர் சந்திக்கும் ஒரே நபர் ஷீலா மட்டும்தான்.  ஷீலா எல்லா விஷயங்களையும்  ரஜனீஷிடம் பகிர்ந்து கொள்வார் மேலும் அவரின் விருப்பத்தையும் கம்யூனின் அடுத்த கட்ட நகர்வையும்  ரஜனீஷ் சொல்லியதாக சந்நியாசிகளிடம் அல்லது முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களிடம் ஷீலா சொல்வார்.  இந்த ஒரு வழிப் பாதையில் நான்கு வருடங்கள் யாரும் குறுக்கிடவில்லை.

கம்யூனிற்குப் பிரச்சினைகள் எப்படி உருவாகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

1. 50 குடும்பங்கள் வசிக்கும் ஆண்டலோப் பகுதி முழுக்கவே வெள்ளையர்கள் வசித்து வந்தனர். இயல்பாகவே அவர்களிடம் நிற உணர்வும் கடவுள் பக்தியும் மிகுந்திருந்தது.  திடீரென உருவான ரஜனீஷ்புரத்தின் பிரம்மாண்டமும் அங்கு குவியும் ஆட்களும் அங்கிருந்து வரும் சப்தங்களும் அவர்களின் இயல்பைக் குலைத்தது.
மெல்ல  ரஜனீஷ் புரத்தின் மீது மிகுந்த வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு நாள் ரஜனீஷ்புரக் குடியிருப்பில் வெடிகுண்டு ஒன்று வெடிக்கிறது.

2. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நிறவெறி பிடித்த உள்ளூர்காரர்கள்தாம் என ஷீலா நினைக்கிறார். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே கம்யூனின் பாதுகாப்பிற்கான ஒரே வழி என ஷீலா நம்புகிறார் எனவே ரஜனீஷ்புரத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலிலும் ஈடுபாடு காண்பிக்க ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவரான   கிருஷ்ண தேவா ஆண்டலோப்பின் மேயராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அமெரிக்காவின் ஜனநாயக சட்டங்கள் ஷீலாவிற்கு தன் எல்லைகளை விரிவாக்க உதவியாக இருக்கின்றன. மேலும்  எங்கெல்லாம் வழிகளை உருவாக்க முடியுமோ அங்கெல்லாம் ஷீலாவால் ராஜபாதையையே போட்டுக் கொள்ளும் ஆற்றல் இருந்தது.

3.அடுத்ததாக 1984 ஆம் ஆண்டின் வாஸ்கோ கவுண்டி தேர்தலில் வெற்றிபெற ஷீலா தேர்ந்தெடுத்த வழிதான் அவரே சொல்வதுபோல எவராலும் கற்பனை கூட செய்து பார்த்திராத ஒன்று. நாடெங்கிலும் உள்ள ஆயிரம் வீடற்ற மனிதர்களை/ நோயாளிகளை அழைத்து வந்து கம்யூனில் தங்க இடமும் உணவும் கொடுக்கிறார். நோயுற்றவர்களுக்கு மருத்துவ வசதிகளையும் செய்து தருகிறார். அவர்களுக்கு கம்யூனில் வேலையும் தரப்படுகிறது. அரசாங்கத்தாலும் சக மனிதர்களாலும் கைவிடப்பட்டவர்கள் ஷீலாவின் மூலம் மீண்டும் ஒரு அடையாளத்தையும் புது வாழ்வையும் பெறுகிறார்கள். ஆனால் ஷீலாவின் உண்மையான நோக்கம், நடைபெற இருக்கும் தேர்தலில் ஆயிரம் பேரையும் தமக்கு ஆதரவாக  வாக்களிக்கச் செய்வதுதான். ஆயிரம்பேரும் பதிவுசெய்து கொள்ளப் போகும் நாளில் அதை எதிர்பார்க்காத ஒரேகன் மாநில அரசு, தேர்தலுக்கு முன்னரான வாக்காளர் பதிவை ரத்து செய்கிறது. தம் திட்டத்தில் தோல்வி அடையும் ஷீலா கணிசமான நபர்களை - தொந்தரவு செய்யும் நபர்களை என ஷீலா குறிப்பிடுகிறார் - வெளியேற்றுகிறார். அதில் ஒரு நபரால் கழுத்து நெறிக்கப்பட்டு சாகும் நிலையை அடைந்து தப்பிக்கிறார்.

4. தன் திட்டங்கள் முறியடிக்கப்பட்டாலும் மனம் தளராத ஷீலா  சந்நியாசிகளைப் பயன்படுத்தி பல்வேறு உணவகங்களின் உணவுகளில் விஷத்தைக் கலந்ததாகச் சொல்கின்றனர். இதனால் வாஸ்கோ கவுண்டியைச் சேர்ந்த 750 நபர்கள் ஒரே நேரத்தில் வயிற்று உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.  ஆனால் ஷீலா இதை மறுக்கிறார். பிற்பாடு இந்தக் குற்றம் ஷீலாவின் மீது சுமத்தப் பட்டாலும் நிரூபிக்கப்படவில்லை. மேலும் நகரத்திற்கு தண்ணீர் வரும் நீர்த்தொட்டியில் எலியின் துணுக்குகளை ஷீலாக்குழுவினர் கலந்ததால்தான் 750 பேர் பாதிக்கப்பட்டனர் என்றொரு கதையையும் உள்ளூர் வாசிகள் சொல்கின்றனர். ஆனால் இரண்டிற்குமே ஆதாரம் இல்லை.

5. இந்தக் காலகட்டத்தில் ரஜனீஷின் புகழ் ஹாலிவுட் வரை பரவுகிறது. நிறைய புதுப் பணக்காரர்கள் உள்ளே வருகின்றனர். குறிப்பாக காட்பாதர் திரைப்படத் தயாரிப்பாளரின் முன்னாள் மனைவி Francoise Ruddy ரஜனீஷிடம் நெருக்கமாகிறார். அவரின் புதுக் கணவர் ரஜனீஷின் மருத்துவராகிறார். ஷீலாவிற்கு இந்த நபர்களின் நெருக்கம் பிடிக்காமல் போகிறது.  குறிப்பாக ரஜனீஷின் மீது கொண்டிருக்கும் தனக்கு மட்டுமேயான தன்மைதான் அவரைக் கொலை வரைக்கும் இட்டுச் செல்கிறது.

6. ரஜனீஷின் மருத்துவரான ஜார்ஜை கொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றம் ஷீலா மீது சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது. ரஜனீஷை மரணத்திலிருந்து காக்கவே  மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதாக ஷீலா தன்னுடைய தரப்பாக கூறுகிறார்.  ரஜனீஷ் மருத்துவரிடம் வலிக்காமல் சாகும் முறையை கேட்டு அறிந்துகொண்டதை ஷீலா இரகசிய பதிவுக் கருவிகளின் மூலம் கேட்டதாகவும். மோர்பினைப் பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைத்ததை கேட்டு பதட்டமடைந்ததாகவும் கூறுகிறார். இந்தக் குழுவினர் அவரை மயக்க மருந்துகளிலேயே வைத்திருந்தனர் எனவும் ஷீலா குற்றம் சாட்டுகிறார். தனக்கு நெருக்கமான சந்நியாசிகளில் ஒருவளான ஸ்டோர்க் மூலம் விஷ மருந்து கொண்ட ஊசியை மருத்துவர் மீது செலுத்தி இருக்கிறார். ஆனால் மருத்துவர் தப்பித்துக் கொண்டார்.

7. ’பொசஸிவ் ’ குணம்தான் ஷீலா வீழ்ச்சியடைய முக்கியக் காரணமாக இருந்தது. ஷீலாவிற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஸ்டோர்க்கிற்கே ஒரு முறை விஷம் வைத்திருக்கிறார் என்பதுதான் மிகவும் அதிர்ச்சியான செய்தி. ஒருமுறை  ரஜனீஷ், தான் வந்த காரின் பானட் மீதிருந்த ரோஜாப் பூக்கள் முழுவதையும் அங்கு நின்று கொண்டிருந்த ஸ்டோர்க்கை எடுத்துக் கொள்ளுமாறு  சொல்லியிருக்கிறார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஷீலா அடுத்த நாள் ஸ்டோர்க்கின் காபியில் விஷத்தைக் கலந்திருக்கிறார்.



தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஹாலிவுட் குழாமினரின் செல்வாக்கு கம்யூனில் அதிகரிக்கிறது. ஒருகட்டத்தில் ஷீலாவால் ரஜனீஷைப் பார்க்கக் கூட முடியாமல் போகிறது. தான் பாடுபட்டு உருவாக்கியவை எல்லாம் நொறுங்குவதைப் பார்க்க முடியாமல் ஷீலா தனக்கு நெருக்கமான 25 பேருடன் ஜெர்மனிக்குப் போய்விடுகிறார்.

இதுவரைக்குமே கம்யூன் மீது சுமத்த ஒரு குற்றமும் அரசிற்கோ, கம்யூன் மீது அதிருப்தியில் இருந்த மக்களுக்கோ கிடைக்கவில்லை. ஆனால் நான்கரை வருடங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ரஜனீஷ் முதன் முறையாய் பேச ஆரம்பிக்கிறார்.
ஷீலாவின் மீது அடுக்கடுக்காய் குற்றங்களை சுமத்துகிறார். ஐம்பதைந்து மில்லியன் பணத்தை எடுத்துக் கொண்டு ஷீலா ஓடிவிட்டதாக சொல்கிறார். தன் தனிப்பட்ட மருத்துவரைக் கொல்லப் பார்த்ததாகவும், ரஜனீஷ்புர வளர்ச்சிக்குத் தடையாக இருந்த அட்டர்னி டர்னரைக் கொல்ல முயற்சித்தார் எனவும் இதெல்லாம் தனக்குத் தெரியாமல் நடந்தது எனவுமாய் சொல்கிறார்.

மீடியாக்களும், அரசும், FBI ம் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மதத்திற்கும் உள்ளூர் அரசியலுக்கும் எதிர்ப்பாய் முளைத்த இராட்சத மரத்தை வேரோடு பிடுங்கி எறிய தங்களின் அனைத்து சக்திகளையும் அவர்கள் முடுக்கி விடுகிறார்கள்.

ரஜனீஷ் அவர்களாகப் பிடுங்கிப் போடுவதற்கு முன்பு தாமாகவே உருவான எல்லாவற்றையும் அழிக்கிறார்.

“ என்னுடைய சாராம்சமே மதங்களுக்கு எதிரானதுதான், நானே ஒரு மத அடையாளமாக மாறுவேனா? சுத்த நான்சென்ஸ் எல்லாமே ஷீலாவின் விளையாட்டு”  என அவர் ஷீலா கட்டி வைத்த கோட்டையை உடைக்கிறார். ரஜனீஷ் இசம் புத்தகங்களைக் கொளுத்துகிறார்கள். அதென்ன சிவப்பு ஆடை என்கிற அடையாளம்? அதையும் அழி என உடைகளைக் கொளுத்துகிறார்கள்.

ஒரு நெடிய தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதைப் போல ரஜனீஷ் நடந்து கொள்கிறார்.  ஷீலாவின் நம்பிக்கையாளர்களை அதிரடியாக மாற்றுகிறார். ஹசியா வின் குழாம் அதிகார வட்டங்களுக்கு உள்ளே வருகிறது. மேயரான கிருஷ்ணாவை மாற்றுகிறார்கள். எல்லாக் கட்டுக் கோப்பும் குலைகிறது.

ஷீலா மீது கம்ப்ளைண்ட் ரெஜிஸ்டர் செய்யவே  FBI உள்ளே நுழைகிறது. வயர் டேப்பிங் என்கிற ரகசிய ஒலிப்பதிவு அமரிக்காவில் குற்றமாகக் கருதப்படும். அதற்கான ஆதாரத்தை FBI  கைப்பற்றுகிறது.  ஏராளமான ஆயுதங்களையும்  கைப்பற்றுகிறார்கள். மூன்றாவதுதான் மிகப் பெரிய குற்றம். குடியேற்ற உரிமை மோசடி. இதில் ரஜனீஷின் பெயரையும் சேர்க்கிறார்கள்.

மேயர் கிருஷ்ணா அப்ரூவராக மாறுவதால் FBI ன் வேலை இன்னும் எளிதாகிறது. ஷீலாவிற்கும் ரஜனீஷிற்கும் வாரண்ட் கிடைக்கிறது. உடனே கைது செய்யும் உத்தரவையும் நீதிமன்றம் இடுகிறது.

ரஜனீஷைக் கைது செய்த நாடகம்தான் அமெரிக்கா ஆடிய மிகப் பெரிய ஆட்டம். மொத்த மீடியாவும் ரஜனீஷ் கைது நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்தது. போலிஸ் கம்யூன் உள்ளே நுழைய பயப்படுவது போல் நடித்தது. உள்ளே அனைவரும் ஆயுதங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாக்குதல் நிகழலாம் என கதைகளை கட்டிவிடுகிறார்கள். கம்யூனிற்கு பின்னால் இருக்கும் காடுகள் வழியாய் போலிஸ்காரர்கள் பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைய முயற்சிப்பது போல் காண்பிக்கிறார்கள். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை.

இந்த அபத்த நாடகத்தின் உச்சம்தான் இன்னும் அபத்தம். ரஜனீஷ் தன் விமானத்தின் மூலம் கம்யூனை விட்டு வெளியேறுகிறார். தப்பிக்க முனைகிறார். FBI  சிரித்துக் கொள்கிறது. வான்வழிப் படைக்கு உத்தரவுகள் பறக்கின்றன. அங்கு அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. விமானம் தரையிறக்கப்பட்டு ரஜனீஷ்  கைது செய்யப்படுகிறார்.

- மேலும்

Wednesday, April 25, 2018

Wild Wild Country - மா ஆனந்த் ஷீலா



ஓஷோவின் அமெரிக்க வாழ்வைக் குறித்து வெளியாகி பெரும் அதிர்வுகளைக் கிளப்பியுள்ள வைல்ட் வைல்ட் கண்ட்ரி ஆவணப்படத்தில் மா ஆனந்த் ஷீலா கேமிராவைப் பார்த்து இப்படிச் சொல்வதோடு ஆறாவது  பகுதி நிறைவடைகிறது.

“ அவ்வளவுதானா எல்லாம் முடிந்ததா? இந்தப் பேச்சு முடியவே முடியாதென நினைத்தேன். இது மதுவிற்கான நேரம். வாருங்கள் நாம் மதுவருந்துவோம்” 

கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த எனக்குமே கூட அப்படி ஒரு எண்ணம்தான் தோன்றியது. ஆனால் அதிகாலை எழ வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டே, கனத்த இதயத்தைப் போர்த்திவிட்டுப் படுத்தேன்.

மா ஆனந்த் ஷீலா - நிச்சயம் இந்தப் பெயர் எனக்குப் புதிது கிடையாது. இருபதுகளிலேயே அறிந்து கொண்ட பெயர்.  ஓஷோவின் பேச்சுக்களின் வழியாய் ஷீலாவை அறிந்திருந்தேன்.  ஷீலா அமெரிக்காவில் ஓஷோவின் சரிவுகளுக்கு காரணமாய் இருந்தவர். ஓஷோ ஆசிரமத்தை மிகத் தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டவர் என்பதுதான் இதுநாள் வரைக்குமான ஷீலா பற்றிய என் அறிதல். ஆனால் இந்த ஆவணப்படம் அதை மாற்றியிருக்கிறது. 

ஷீலா நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று. தவறான ஆட்களின் தூண்டுதலால் ஷீலாவின் மீது வெஞ்சினம் கொண்ட ரஜனீஷ், ஷீலாவிற்கு குழி தோண்டுவதாய் நினைத்துக் கொண்டு தானும் விழுந்தார். அதேக் குழியில் அவரை நாடி வந்தவர்களையும் விழ வைத்தார். ஆனால் ஷீலா என்கிற அற்புதம் மட்டும் தன் குருவின் மீதான தீராக் காதலுடன் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

தான் நினைத்ததை செயல்படுத்த ஷீலா கையாண்ட விதங்கள் வேண்டுமானால் சட்டத்திற்கு புறம்பாக இருக்கலாம் (  இந்தச் சட்டங்கள் என்பவையே யாரோ ஒரு சாரருக்கு சாதகமானவைதானே) ஆனால் ஷீலாவின் செயல்பாடுகளுக்குப் பின் இருந்த நோக்கங்கள் ரஜனீஷ் மீதிருந்த காதலால் அன்பால் பக்தியால் உருவானவை. அதில் என்ன பிரச்சினை இருக்க முடியும். ஷீலாவை இத்தனை வருடங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்தமைக்காக இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்து விட்டு வருந்தினேன்.

0

என்னுடைய சகோதரன் வழியாய் ஓஷோ எனக்கு அறிமுகமானார். புத்தகங்கள் பேச்சுக்கள் வழியாய் மெது மெதுவாய்  ஈர்க்கப்பட்டு பின்னர் ஒரு மீட்சிக்கு வேண்டி ஓஷோவின் சந்நியாசியாகவும் மாறினேன். என்னுடைய  இருபத்தோராவது வயதில் திருச்சி ஆசிரமத்தில் ஸ்வாமி ப்ரேம் அய்கா என்கிற சந்நியாசப் பெயர் எனக்கு கிடைத்தது. தியானங்கள், ஓஷோ நண்பர்களுடனான பயணங்களென முழுக்கப் பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஓஷோவின் பேச்சுக்களில் ’தனித்துவம்’ ’சுதந்திரம்’ ’கற்பனை’ என்கிற மூன்று விஷயங்கள் என்னைப் பெரிதும் பாதித்தன.  இருபதுகளில் உள்ள ஒரு சிறுநகரத்து இளைஞனுக்கு பெரிதாய் என்ன துக்கங்கள் இருந்துவிட முடியும்? ஓஷோவின் தியானங்களும் நடனங்களும் அதைக் கரைத்தன. நான் தன்னம்பிக்கையும் ஆற்றலும் கொண்டவனாய் மாறவும் உதவின. இதோ இதையெல்லாம் இப்படி எழுத விதையாகவும் அந்த அறிதல்கள் இருந்திருக்கக் கூடும்.

இந்தப் பின்புலத்தால் ’வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ என்கிற ஆவணப்படத்தோடு என்னால் முழுவதுமாக கரைந்து போக முடிந்தது.  இதன் ஆறு பகுதிகளையும் பார்க்கும் நாட்களில் ஆச்சர்யம்  அதிர்ச்சி வியப்பு என மாறி மாறி  உணர்வுகளால் அலைக்கழிக்கப் பட்டேன்.

 ஷீலாவின் முதல் பேச்சிலிருந்து கடைசிப் பேச்சு வரைக்குமான ஒவ்வொரு சொல்லும் என்னை அசர வைத்தது. என்ன ஒரு ஆளுமை . என்ன மாதிரிப் பெண் இவள்! எவ்வளவு புத்திக் கூர்மை!, எவ்வளவு ஆற்றல்! என மாய்ந்து போனேன். உண்மையில் ஹாலிவுட் ஆட்களை ஓஷோ தொலைவில் வைத்திருந்தால், ஷீலாவை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் இன்றைய அமரிக்காவில் பாதியை ரஜனீஷ்- இசம் கைப்பற்றி இருக்கும். கிறிஸ்துவ மதம் பெரும்பான்மையானதாக மாறி இருக்காது. அமெரிக்க வரலாறே திருத்தி எழுதப்பட்டிருக்கும். 

தன் இரும்புக் கரங்களால் உலகையே வேட்டையாடிக் கொண்டிருக்கும்  அமெரிக்கப் பெரியண்ணன்கள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டிருப்பார்கள். ரஜனீஷ்-இசம் ஒரு மதமாக மாறி மக்களை கொண்டாட்டத்தில் திளைக்க வைத்திருக்கும். இன்றைய முழு மூட அமெரிக்க சமூகம் உருவாகியே இருக்காது. உலகமே அமைதியாக இருந்திருக்கும். ஓஷோவின் முட்டாள்தனத்தால் எல்லாம் பாழானது.

எப்படி? 

எழுதுகிறேன்.





Wednesday, June 14, 2017

குரங்குப் புத்தியும் பிழைகளற்ற நிகழும்


இரண்டு வாரங்களாக ஓஷோவின் சொற்பொழிவைக்  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  நோன்புக் காலம் என்பதால் அலுவலக நேரம் மிகக் குறைவு. அலுவலகத்தில் ஐந்து மணி நேரமென்றால் அதற்குச் சரிபாதி காரில் இரண்டரை மணி நேரம். ஓஷோவைத் துணைக்கு அழைத்துக் கொண்டதால் இந்த அலுப்பு சுத்தமாய் தெரியவில்லை. வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் பயண நேரத்தைக் கடந்து விட முடிகிறது. 1984 ஆம் வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமெரிக்காவில் ஓஷோ நிகழ்த்திய உரைகள்  From Unconciousness to Consciousness என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கிறது.  முப்பது மணி நேரத்திற்கு மேல் நீளும் பேச்சு. ஒரு நொடி கூடத் தொய்வடைய வைக்காத பேச்சு. வெடிச்சிரிப்பும் கும்மாளமுமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மதங்கள், வழிபாட்டு முறைகள்,  தேவதூதர்கள், மெசையாக்கள், தீர்த்தங்கரர்கள், புத்த பிட்சுகள், சங்கராச்சாரியார்கள், போப்புகள், என ஒருவரையும் விடாமல் காய்ச்சி எடுக்கிறார். மிக ஆணித்தரமான வாதங்களை இவற்றிற்கு மற்றும் இவர்களுக்கு எதிராக முன் வைக்கிறார். கேட்க கேட்க புதுப் புது கதவுகள் திறக்கின்றன. காந்தியின் எளிமை குறித்தும் உணவு குறித்தும் ஓஷோ கிண்டலாய் விமர்சிக்கும்போது எழும் சிரிப்பு அடங்க வெகு நேரமாகிறது. ஆனால் இந்த அத்தனை தர்க்கங்களையும் உள்வாங்கிக் கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறேன். அவரே சொல்வது போல் அவரைப் பின் தொடர்பவர்களென யாரும் இருக்க கூடாது. சுயத்தை மீட்டெடுக்க வைப்பதே இத்தனைப் பேச்சுக்களின் நோக்கம். அந்த நோக்கத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டதாய் நினைக்கிறேன்.

குரங்கின் வழி வந்ததால் மனிதன் இயல்பாகவே குரங்கின் தோற்றத்தோடு அதன் சுபாவத்தையும் ஒத்திருக்கிறான்.  குரங்கால் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க முடியாததைப் போலவே  நம் மனமும் புத்தியும் எண்ணங்களும் சதா அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன. இரண்டாவது விஷயம் இன்னொருவரைப் போலச் செய்வது.  குரங்கிடமிருந்துதான்  இந்த இமிடேட் செய்யும் சுபாவமும் நமக்கு வந்திருக்கிறது. நாம் எப்போதுமே பிறரைப் போல வாழ்கிறோம் அல்லது மற்றவர்களைப் போலாக மெனக்கெடுகிறோம். மற்றதைப் பார்த்து ஏங்கியே செத்தும் போகிறோம். தனித்தன்மை என்பது குறித்து யோசிக்கக் கூட மறுக்கிறோம். இந்தக் குரங்குப் புத்தியிலிருந்து வெளிவந்து விட்டாலே நிறைய துன்பங்களைத் தவிர்க்க முடியும் எனத் தோன்றுகிறது. 

பயல்களிடம் ஓஷோ சொன்ன குரங்கு குல்லாய் கதையை சொன்னேன். இந்த இரண்டு அடிப்படை புத்திகளை மட்டும் சிறு வயதிலேயே களைந்து விட்டால் போதும். பெரும்பாலான பிரச்சினைகளைத் தாண்டி வந்து விடலாம்.

மதம் என்கிற பெயரில் சித்தாந்தம் என்கிற பெயரில் சொர்கத்தில் சிறப்பான வாழ்வு என்ற பெயரில் மனிதன் தன்னை வதைத்துக் கொள்வதை ஓஷோ மிகக் கடுமையாய் சாடுகிறார். எளிமை மிகப் போலித்தனமானது என்கிறார். எளிமை மீது எனக்கும் பெரிய மதிப்பில்லை. பெரும்பாலான எளியர்கள் அதை தங்களின் வலிமைக்கான, அதிகாரத்தைச் சென்றடைவதற்கான கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது தமிழ் சூழலில் கண்கூடு. காந்தியின் எளிமை இன்றளவும் வியந்தோந்தப்படுகிறது. ஆனால் ஓஷோ அதை தரைமட்டமாக்குகிறார்.  காந்தி வறுமையை மக்களிடம் புகுத்தினார் என்கிறார். தன்னை வருத்திக் கொள்பவன் மாசோகிஸ்ட். பிறரை வருத்துபவன் சாடிஸ்ட். மிக அபூர்வமானவர்களே ஒரே நேரத்தில் சாடிஸ்டாகவும் மாசோகிஸ்டாகவும் இருக்கின்றனர். காந்தி அத்தகைய மாசோ சாடிஸ்ட் என வறுத்தெடுக்கிறார். காந்தி ஆசிரமத்தில் வழங்கப்படும் வேப்பிலைச் சட்னியையும், கொசுக் கடிக்காமல் இருக்க மண்ணென்ணையை உடம்பில் பூசிக் கொள்வதையும் காந்தியின் மாசோகிஸ சாடிசங்களுக்கான உதாரணங்களாகச் சொல்கிறார். ஒரு அமெரிக்கர் காந்தி ஆசிரமம் வந்து வேப்பிலைச் சட்னியை சாப்பிடும் அனுபவத்தை விவரிக்கும் போது சிரிப்பை அடக்கமுடிவதில்லை.


ஒரேகனில் இருக்கும் ரஜனீஷ்புர ஆசிரமம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறது என்பதற்கு, ”மன்னித்துக் கொள்ளுங்கள் இப்போதைக்கு இவ்வளவு வசதிதான் முடிந்தது விரைவில் இன்னும் வசதியாக இந்த ஆசிரமத்தை மாற்றுகிறோம்” எனப் பதில் சொல்கிறார். 

சுயவதை போலித்தனமானது. மதம், கடவுள், ஆன்மீகம், ஒழுக்கம், கர்மா எனப் பல்வேறு பெயர்களில் அதை இன்னொருவரின் மீது செலுத்துவது என்பது குரூரமானது. மேலும் ஓஷோ தன்னிடம் வருபவர்களிடம் இப்படி இருக்கச் சொல்கிறார். அவரது வார்த்தைகளில்,

I teach you to live tremendously, ecstatically, in every possible way. On the physical level, on the mental level, on the spiritual level, live to the uttermost of your possibility. Squeeze from each single moment all the pleasures, all the happinesses possible, so that you don't repent later on that, "that moment passed and I missed."

நிஜமாகவே இப்படி வாழத்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. ”நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம் ” என்ற சுராவின் வரியை இலக்கியவாதிகளான நாம் நினைவில் வைத்திருப்போம். பிழையற்ற அவமானமற்ற நினைவுகளிற்கு, நிகழை முழுமையாய் வாழ்வதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நானும் அதை நோக்கி நகர்வதாத்தான் தோன்றுகிறது.



Thursday, March 7, 2013

நான் கடவுள்

என் அப்பாவிற்கு கடவுளர்கள் குறித்துப் பெரிதாய் புகார் கிடையாது ஆகவே வீட்டில் பக்தியின் தாக்கங்களான பூஜை, வழிபாடு,விசேஷங்கள் என எதுவும் இருந்தது கிடையாது. ஆனால் நான் பதினைந்து வயது வரை பக்திப் பழமாகத்தான் வளர்ந்தேன். பதின்மத்திற்குப் பிறகு சாமியார் பித்தும் சேர்ந்துகொண்டது. போன மாதம் கூட ஒரு வளரும் சித்தரைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வந்தேன். இப்பித்திற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது என் ஊரைத்தான். இரமணர் ஆசிரமத்திற்கு சமீபமான வீடென்பதால் என் பள்ளி விடுமுறைப் பகல்கள் முழுக்க ஆசிரமமும் அதையொட்டிய மலையடிவாரத்திலேயும் விளையாட்டாய் கழிந்தன. படிப்பு,விளையாட்டு,புகை,காதல் என எல்லாமும் பருவங்களுக்கேற்ப மாறினாலும் இடங்கள் மட்டும் மாறவேயில்லை. கூரையை முட்டும் உய:ரத்திற்குப் புற்றுகொண்ட கருமாரியம்மன் கோவிலைத் தாண்டினால் வரும் பலாக் குளம், தலைப்பிரட்டைகளை மீனெனப் பிடித்த காலத்திலிருந்து ஓர் அந்திக் கருக்கலில் கவிதாவை முத்தமிட்ட தருணம் வரை என்னை அறிந்திருந்தது. எங்கள் குழாமின் அனைத்து சதியாலோசனைகளும் குளம் சாட்சியாகத்தான் நிகழ்ந்தன. யார்ரா இந்த லூசு என ராஜசேகரை இக்குளத்திற்கு சமீபமாய் நிற்கவைத்துக் கிண்டலடித்ததும் உண்டு. ஓரிரு முறை பியர் குடித்தோம். முதல் குடி நிகழ்வில் இரண்டு மிடறு குடித்து விட்டு நாச்சி உளறினான். மூன்று நாட்களுக்கு முன்பு பாருவின் முலைகளை இங்கு வைத்துதான்…. இருங்கள் நான் சொல்ல வந்தது சாமியார்கள் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் இந்த பலாக்குள சம்பவங்களை சொல்கிறேன்.

 சிறு வயதிலிருந்து ஆசிரமத்திற்குப் போய்கொண்டிருப்பதாலோ என்னவோ இரமணரின் மீது பயங்கலந்த பக்தி இருந்தது. எட்டாம் வகுப்பில் இரமணாசிரம நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தியது. மாணவர்களுக்கான சிறப்பு வெளியீடுகளாய் இரமணரின் வாழ்க்கை வரலாறு, உரைகள், தத்துவங்கள், பாடல்கள் போன்றவை எங்களுக்கு இலவசமாய் தரப்பட்டன. அவற்றிலிருந்து போட்டிகள் வகுக்கப்பட்டன. எல்லாவற்றையும் வாசித்து முடித்ததும் இரமணரை முழுமையாய் அறிந்து கொள்ள முடிந்தது. ‘நான்’ தத்துவம் புகைமூட்டமாய் புரிவது போலிருந்தது ஆனால் புரியவில்லை. நான் யார்? ஆன்மாவுக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம்? ரெண்டும் வேற வேறன்னா உறவுகள் ஏன்? வாழ்க்கை முறை என்ன? வெற்றி தோல்வி ன்னா என்ன? ஏன் படிக்கனும் வேலைக்கு போகனும்?என பயங்கர குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பதிமூன்று வயதில் அய்யங்குளத்தில் மொட்டையடித்துக்கொண்டு கோவணத்தோடு ஒரு ஒல்லிப் பதின்மன், அண்ணாமலையார் கோவிலை நோக்கி கொட்டும் மழையில் ஓடும் சித்திரம் எனக்குள் பதிந்து போனது. பெரிய கோவிலில் இரமணர் அமர்ந்திருந்த இடமான பாதாள லிங்கம் இன்று வரை எனக்குப் பிடித்த இடமாக இருக்க காரணம் இந்தச் சித்திரமாகத்தான் இருக்க வேண்டும். 

 இந்த ‘நான்’ குழப்பங்கள் எல்லாம் சில மாதங்கள்தாம் நீடித்தன. எங்கள் பகுதியில் மிகப் பரந்த அளவில் வயல்களை அழித்துவிட்டு தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியம், ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தது. சில HIG வீடுகள் தயாராகி புதிதாய் குடும்பங்களும் வர ஆரம்பித்திருந்தன. சம வயதை ஒட்டிய பெண்களை அங்கும் இங்குமாய் பார்த்ததும் எல்லாம் மறந்து போனது. பத்தாம் வகுப்பில் ஞானப் பிரசன்னா என்கிற பேரழகியைத் தொடர்ந்து போய் பிரம்மகுமாரிகள் அமைப்பைத் தெரிந்து கொள்ள நேரிட்டது. தியானம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் குபீரென முலைத்து தினம் மாலை இராஜயோக தியான நிலையத்திற்குப் போக ஆரம்பித்தேன். ஆரம்பம் வேறாக இருந்தாலும் நல்ல பயன் இருந்தது. நான் பற்றிய கேள்விகளுக்கு அங்கு வெள்ளையுடை அணிந்தவர்களிடம் பதில் இருந்தது. ஒரு காரின் படத்தைக் காட்டி இந்த என்ஜின் தான் ஆன்மா என்றார்கள். சுலபமாகப் புரிந்தது. தியானம் பற்றிய அடிப்படைகளை கற்றுக் கொண்டதும் அங்கு போவதை நிறுத்திக் கொண்டேன். இல்லையென்றால் ராஜஸ்தான் அனுப்பியிருப்பார்கள். 

அடுத்த ஆறுவருடம் சாமி, பக்தி, கோவில், ஆன்மீகம், சிந்தனை, குழப்பம், என எதுவும் என்னைத் தாக்காதவாறு கல்வியும் நண்பர்களும் தோழிகளும் காதலியும் பியரும் பார்த்துக் கொண்டார்கள். 

இருபத்தோரு வயதில் Prodigal son ஐப் போலத்தான் என் சகோதரனிடம் திரும்பி வந்தேன். ஓசூர் நகரம் அக்காலகட்டத்தில் எனக்கான எல்லாவற்றையும் கொண்டிருந்தது. தனிமை வீடும், ஏராளமான புத்தகங்களும், பிடித்த வேலையுமாய் அந்நாட்கள் நகர்ந்தன. இலக்கியத்தோடு ஓஷோவும் புத்தகங்கள், கேசட்டுகள் வழியாய் அறிமுகமானார். தமிழில் வந்த என் இளைமைக்கால நினைவுகள், புல் தாமாகவே வளர்கிறது, வெற்றுப்படகு போன்ற புத்தகங்கள் ஓஷோவின் மீது பிடித்தத்தை ஏற்படுத்தின. The new man கேசட்டை திரும்பத் திரும்பக் கேட்டுத் தேய்த்தேன். Individuality, Responsibility, Freedom குறித்தெல்லாம் மிகப் பெரிய திறப்பு ஒன்று எனக்குள் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக திருச்சி, கோவை, போபால், குச்வாடா என பயணித்ததும் Swami Prem aika எனப் பெயர் வந்ததும் போதியமட்டில் இதே பக்கங்களில் புனைவாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தீர்த்திருக்கிறேன். இதனோடே வேதாத்திரி மகரிஷி கும்பலோடும் நெருக்கமான தொடர்பிருந்தது. ஓசூரில் மனவளக் கலை மைய நண்பர்களோடு தினம் உடற்பயிற்சி, தியானம், அவ்வப்போது கோவில்களுக்குப் பயணம் என வேறொரு பாதையில் உற்சாகமாய் பயணித்துக் கொண்டிருந்தேன். உலக சமாதானத்திற்கு தியானம் செய்வது, மழை வேண்டி தியானம் செய்வது போன்றவற்றையெல்லாம் மிகுந்த ஆத்மார்த்தமாக செய்து கொண்டிருந்தேன். எப்படி ஓஷோ,வேதாத்திரி என்ற இரு வேறு துருவங்களையும் அப்போது ஒன்றாகப் பார்க்கமுடிந்தது என்ற ஆச்சரியம் எனக்கு இப்போதும் உண்டு. சில நேரங்களில் அப்போது மிகத் தூய்மையான மனதோடு இருந்ததாக நினைத்துக் கொள்வேன்.                               

ஒரு நாள் என் நண்பன் ஒரு ஜோசியரைப் பார்க்க அழைத்துச் சென்றிருந்தான். ஒரு தாளில் என் பெயர், பிறந்த நாள், நேரம் எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்தேன். சில மணி நேரங்கள் கழித்து என்னை உள்ளே கூப்பிட்டார். எனக்கு அப்போது நீளத் தாடி வைத்த யாரைப் பார்த்தாலும் ஓஷோ போல இருக்கும். அவரும் நீளத்தாடி வைத்திருந்தார். அவர் சொன்னது 

1. உனக்கு உன் குலதெய்வமே தெரியாது. தேடி கண்டுபிடி. குடும்பத்தோடு போய் கும்பிடு 

2. ஈரோடு தாண்டி கொடுமுடிக்கு போ. பவானி ஆற்றில் வேட்டியோடு இறங்கி குளித்துவிட்டு வேட்டியை ஆற்றோடு விட்டுவிட்டு அரசமரத்தடி பிள்ளையாரை கும்பிடு 

3. நங்கநல்லூர் ஆஞ்சநேயரைப் போய் கும்பிடு 

அடுத்த வாரமே ஊருக்குக் கிளம்பிப்போய் நம் குலசாமி எதென வீட்டில் கேட்டேன். அய்யனார் என்றார்கள். "எங்கிருக்கிறது கோவில்?"  "பெண்ணாத்தூர்ல எங்கயோ.." என விட்டேத்தியாய் பதில் வந்தது. அப்பாவை கழுவி ஊற்றிவிட்டு பெண்ணாத்தூர் போய் என் தாத்தாவின் சகோதரரைக் கண்டுபிடித்து அவர் மூலமாய் அந்த கோவிலையும் கண்டுபிடித்தேன். அது கோவில் அல்ல நுணாமரத்தடியில் மண்ணில் ஊன்றப்பட்ட ஒரு மைல்கல். அவ்வளவுதான். பிறகு எல்லோரையும் கூட்டிக் கொண்டு போனேன். அடுத்த வாரமே கொடுமுடி. நல்லவேளையாக பவானியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இடுப்பளவு ஆழத்தில் அந்த அதிகாலையில் இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்? என்ற அவ நம்பிக்கையோட வேட்டியை ஆற்றில் விட்டு வந்தேன். அதற்கடுத்த வாரம் சென்னை. சென்னை பால்ய நண்பர்கள் குழாம் போதையோடு வரவேற்று மிகுபோதையோடே வழியணுப்பியது. ஒரு மாதத்தில் பொட்டியை கட்டிக் கொண்டு சென்னை வந்துவிட்டேன். வேறுவேலை. இப்போது நான் இங்கிருக்க காரணமான வேலை. அபாரமான தற்செயலாகக் கூட இருக்கலாம். ஆனால்.. ஆனால்.. 

சென்னை வாழ்க்கை ஓசூர் வாழ்க்கையைப் போல தூய்மையானதாக இல்லை. மீண்டும் பெண்கள், குடி, நண்பர்கள் குழாம் என அல்லோகலப்பட்டது. ஒரு திடீர் வெறுமையில் பத்து நாட்கள் தொடர்ச்சியாய் விடுமுறை எடுத்துக் கொண்டு திருமுடிவாக்கம் விபாசனா மையத்திற்குப் போய்விட்டேன். வழக்கம்போல உபயம் என் சகோதரர்தான். மொழியை எல்லா வகையிலும் துறந்துவிட்டு மெளனத்திற்குள் செல்வது எனக்கொரு பிரச்சினையாக இல்லை. சொல்லப்போனால் மிகுந்த மகிழ்ச்சியோடே மெளனத்திற்குள் புக முடிந்தது. முதல் மூன்று நாட்கள் கடும் பசியில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தாலும் நான்காம் நாள் பழகிவிட்டது. நாள் முழுக்க சுவாசத்தையும், புலன்களையும் வேறொரு ஆளாய் பார்த்துக்கொண்டிருந்தது தனி அனுபவம். ஆறாம் நாளோ ஏழாம் நாளோ எனக்கு Exhibitionist என்கிற புதிய சொல்லும், ஒரு மனிதனும் அறிமுகமானார்கள். 

மாலை ஆசிரமத்தை சுற்றி ஒரு நடை போவது எல்லோருடைய வழக்கமாகவும் இருந்தது. சூரியன் மறைந்துபோன அந்தி. அப்போது அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. எங்களோடு பயிற்சிக்கு வந்த ஒரு கண்ணாடி அணிந்த குண்டு இளைஞன் கட்டிடத்தின் மீதேறி நின்றுகொண்டிருந்தான். இவன் ஏன் மேலே ஏறி நிற்கிறான்? என குழப்பத்தோடே அவனைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தோம். எங்களோடு சில வெளிநாட்டுப் பெண்களும் பயிற்சிக்கு வந்திருந்தனர். இரண்டு அழகான பெண்கள். அந்தப் பயல் மேலே நின்றுகொண்டு அவ்விரு பெண்களையும் பார்த்தபடியே தன் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து… அதிர்ச்சியில் உறைந்தேன். எல்லோருமே பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டோம். விஷயம் நிர்வாகிகளுக்குப் பரவி அவனை வெளியேற்றிவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் என்னை இந்நிகழ்வு பாதித்தது. இரான் சினிமா, ரஷ்ய இலக்கியம், ஆங்கிலத் துப்பறியும் நாவல்கள் தாண்டி பெரியதாய் என் உலகம் விரிவடைந்திராத காலகட்டம் அது. காமமும் மனப்பிறழ்வும் அத்தனை நெருக்கமாக இருக்கமுடியுமா? என்கிற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.


அடுத்த நாள் மன ஒருமை கைவிட்டுப் போனது. போலவே சிலருக்கும். எல்லோருமாய் கிசுகிசுப்பாய் பேச ஆரம்பித்துக் கொண்டோம். மாலையில் மதிலேறி குதித்து வெகுதூரம் நடந்து போய் சிகரெட் பிடித்தோம். ஒன்பதாவது நாளைக் கடக்க பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. பத்தாம் நாள் அடித்துப் பிடித்து ஆசிரமத்தை விட்டு வெளியேறிஒரு வழியாய் பஸ்ஸை பிடித்து அலைபேசியில் நண்பர்களை பிடித்து நேரா பாருக்கு வந்துருங்கடா” எனச் சொல்லிவிட்டு வழக்கமாய் செல்லும் பாரில் போய் விழுந்தேன்.

ஆன்மீகத்தின் வழியாய் தன்னை அறிவது ஒரு குழப்பமான சித்திரமாகவே எனக்குள் இன்னும் இருந்துவருகிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இந்தக் கட்டுரையில் இழையோடியிருக்கும் விடலைத் தனம்தான் தன்னையறிதலில் என் நிலை. திருவண்ணாமலையில் சில இளம் சாமியார்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். எல்லாம் உதறி தனியாய் வந்து அண்ணாமலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தத்துவார்த்தமாகப் பேசினாலும் அவர்களும் சராசரி லெளகீக வாழ்க்கையை இரகசியமா வாழ்கிறார்கள். சரியாய் சொல்லப்போனால் இன்னும் வசதியான லவ்கீகம். வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே என்கிற மனப்பான்மைதான் என்னிடம் எப்போதுமிருக்கிறது. அந்த லெளகீக வாழ்வு நூறு ஏக்கர் நிலம்கோடிகள்ரஞ்சிதாபோலீஸ்ஜீப்பில் புளகாங்கிதமாய் ஏறுவதென விரிவடையும் போதுதான் பொறாமை எட்டிப் பார்க்கிறது. ஸ்ரீதர் கிண்டலடித்திருக்கும் இக்கட்டுரைதான் இந்நினைவுகளைக் கிளறிப்போட்டது. நித்தியை விஞ்சும் சாமியாராகும் எல்லாத் தகுதிகளும் என்னிடம் உண்டு. ஆன்மீகம்இலக்கியம்,அரசியல்வரலாறுபுவியியல்,சினிமா என எல்லாவற்றைக் குறித்தும் ஆழமாய் பேசுவது போன்ற பாவணையை எளிதில் உருவாக்கிவிடுவேன். திருவண்ணமலையின் அடுத்த நித்தியாய் நான் வரவேண்டும் என நீங்கள் அனைவரும் உளமாற வேண்டிக்கொள்ளுங்கள். அதுவே இப்போதைக்குச் செய்ய வேண்டியது.



Featured Post

test

 test