
பார்வையை சற்று விரிவாக்கினால் இந்திய அளவில் கூட அபர்ணா சென், மீரா நாயர், தீபா மேக்தா, ரேவதி, ஃபரா கான், ப்ரேமா கர்னாத், ராஜஸ்ரீ, பூஜாபட் தவிர்த்து வேறெந்த பெண் இயக்குனர்களும் பேசப்படவில்லை அல்லது உருவாகவில்லை. பெண்களை நடிகை அல்லது கவர்ச்சி என்கிற பிம்பத்திற்கு மேல் நகர இந்திய மனங்கள் அனுப்பதிப்பதில்லையா? அல்லது இந்தத் துறையைப் பொருத்த வரை பெண்களும் தங்களின் மூளையை விட அழகின் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.
தமிழ் சினிமாவில் பெண்பார்வை, பெண் உணர்வு, பெண்ணியம் என்றெல்லாம் பேசிய ஆண்கள் திரையில் நம் முன் வைத்ததெல்லாம் அபத்தங்களையும் ஆபாசக் குப்பைகளையும்தான். பெண்ணிய இயக்குனர் என அடையாளப்படுத்தப் பட்ட பாலசந்தருக்கு நாயகி ஜாக்கெட் மாற்றுவதைக் காட்டுவதே மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இம்மாதிரியான குப்பைகள் பெருகாமலிருக்கவாவது பெண் இயக்குனர்களின் பங்கு தமிழ் சூழலுக்கு அவசியமாகிறது. இதுவரை தமிழ் சினிமாக்களில் எழுதப்பட்ட காதல் பாடல்களில் பெண் தன்மையே / பார்வையே இல்லை என்கிற அதிர்ச்சி வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் கேட்டதும்தான் எனக்கு எழுந்தது. இதுவரை பெண்களின் காதலுணர்வுகளாய் ஆண்களால் எழுதப்பட்ட பாடல்களில் துருத்திக் கொண்டிருந்ததெல்லாம் ஆணாதிக்கமும் அபத்தமும் மட்டும்தான் என்பதை உணர ஒரு பெண் பாடலாசிரியரின் பங்கு அவசியமாகிறது. பெண்ணியம் என்பது கருப்பினப் பெண்ணிற்கும் வெள்ளையினப் பெண்ணிற்கும் வெவ்வேறானது. சினிமாவும் சரி வாழ்வும் சரி அவரவர் பிரச்சினைகளை அவரவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும் என்பது என் துணிபு.
பெண் தன் காதல் உணர்வைச் சொல்வதாய் ஒரு பாடல் எழுதப்படக்கூட தமிழ்சினிமா எழுபது வருடங்களுக்கு மேல் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாய் போயிற்று. இப் பரிதாப நிலையில் நாம் பெண் இயக்குனர்களை எப்படி எதிர்பார்க்க? இம்மாதிரியான சூழலிலிருந்து அவ்வப்போதாவது வெளிவரும் பெண்களை வரவேற்பது மிகவும் அவசியமானது. அதே சமயம் அவர்களின் படங்களின் மீதான விமர்சனங்களையும் கவனமாக அணுக வேண்டியதும் அவசியமாகிறது.

ப்ரியாவின் உதவி இயக்குனரான நந்தினியின் திரு திரு துரு துரு படத்தை கோவையில் பதிவுலக நண்பர்களுடன் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. சம கால

பணத் தேவை, கடுமையான போட்டி, மந்தமான வியாபாரச் சூழல், இழுத்து மூடும் திரையரங்குகள், வணிகக் குறி, ரசிகவிசிலடிச்சான் குஞ்சுகள், தொலைக்காட்சி சீரியல்கள், திருட்டு விசிடி போன்ற நெருக்கடிகள் ஓரளவிற்கு சுமாரான படங்கள் வந்தால் போதும் என்கிற கட்டத்தினுக்கு பார்வையாளனை நகர்த்தி விடுகின்றன. அதையும் நிறைவேற்றச் சாத்தியமில்லாத நம் பண முதலை தயாரிப்பாளர்கள், ஸ்டார்கள், தலைகள், தளபதிகள், வீரர்கள், புயல்கள், கபோதிகள், கவிர்ச்சி கன்னிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாரையும் ஒரு சாக்கில் கட்டி நடுக்கடலில் விட்டு வந்தால் போதும் தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்.
திரைப்படத் துறையில் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஓரிரு பெண்களை வலைப்பக்கங்களில் பார்க்க முடிகிறது. சந்திரா, தேன்மொழி தாஸ் போன்றோர் இலக்கியப் பின்புலத்தோடு திரையில் இயங்கிவருகின்றனர். ஏற்கனவே இலக்கியவாதியான உமாசக்தியும் இப்போது சந்திராவுடன் இணைந்திருக்கிறார். இவர்களின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.