Showing posts with label NETFLIX. Show all posts
Showing posts with label NETFLIX. Show all posts

Tuesday, January 3, 2023

King Pele : அஞ்சலி



சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் விளையாடிய ஆட்டங்களைப் பார்த்ததில்லை எனச் சொன்னேன். அப்போதுதான் அகில், பெலே வின் ஆவணப்படம் ஒன்று நெட்ஃபிலிக்ஸில் இருப்பதாகச் சொன்னான். உடனே பார்க்க ஆரம்பித்தோம். முதல் அரை மணி நேரம் ஊன்றிப் பார்த்தவர்கள் மெல்ல நழுவிப் போனார்கள். நான் முழுமையாகப் பார்த்து முடித்தேன். அவர் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்ட அடுத்த நாள் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்ததாலோ என்னவோ நெகிழ்ந்தும் போனேன்.
ஆவணப் படத்தை மிகச் சிரத்தையாக எடுத்திருக்கிறார்கள். கால்பந்துப் போட்டிகளை படத்தோடு இணைத்த விதமும் அபாரமாக இருந்தது. எனக்கு அந்தப் போட்டிகளைக் குறித்து ஒன்றும் தெரியாததால் பார்ப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருந்தது. அறுபதுகளில் உலகப் புகழை பெலே அடைந்த விதம் ஆச்சரியமானது. இத்தனைக்கும் ப்ரஸீல் என்கிற நாடு உலக வரைபடத்தில் எங்கிருக்கிறதென ஒருவருக்கும் தெரியாது. பெலே ப்ரஸீலை உலகம் அறியச் செய்தார்.
1970 ஆம் வருடம் மூன்றாம் முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு உடை மாற்றும் அறையில் பெலே “I am not Dead “ என மூன்று முறை உரத்துக் கத்தியிருக்கிறார். அவர் அதற்கு முன்பு
விளையாடிய இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களிலும் காயமடைந்து விலக நேரிட்டது. உலகக் கோப்பை நமக்கு ஒத்து வரவில்லை என முடிவு செய்து இனி உலகக் கோப்பையில் விளையாடப் போவதில்லை எனவும் அறிவித்திருக்கிறார். ஆனால் அரசாங்கத்தின் அழுத்தங்களால் வேறு வழியின்றி கலந்து கொண்டார்.
அந்த முறை எல்லாமும் சரியாக அமைந்து வெற்றிக் கோப்பையையும் முத்தமிட்ட பிறகு இப்படிக் கத்தியிருக்கிறார்.
அப்போது உடனிருந்த சக விளையாட்டு வீரர் கிட்டத்தட்ட ஐம்பத்தி இரண்டு ஆண்டுகள் கழிந்தும் அந்தத் தருணத்தை நினைத்தால் உடல் சிலிர்க்கிறதென படத்தில் சொல்கிறார்.
“வெற்றிகள் பரிசளிப்பது கோப்பையை மட்டுமில்லை, மாபெரும் விடுவிப்பை, அதையே நான் அதிகம் விரும்புகிறேன்”. என்பதுதான் பெலே வின் கூற்று. பதினேழு வயதில் ப்ரஸீலுக்காக ஆடத் துவங்கி முப்பது வயதில் முதல் தர ஆட்டங்களிலிருந்து விலகிவிடும் பெலே வை கால்பந்தின் பிதாமகன் என ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர். அறுபதுகளில் உலகமே பெலே வின் மீது பைத்தியமாக இருந்தது. அதே சமயம் அரசியல் காரணங்களுக்காக பெலேவை விமர்சிப்பவர்களும் உண்டு.
ப்ரஸீல் சர்வாதிகாரத்தால் துன்பப்பட்டபோது அரசாங்கத்திற்கு எதிராக பெலே எதையும் சொல்லவில்லை. அன்று அவர் குரல் கொடுத்திருந்தால், நடந்து கொண்டிருந்த அக்கிரமங்களுக்கு எதிராக நின்றிருந்தால், ஒட்டுமொத்த ப்ரஸீலுமே அவர் பின் திரண்டிருக்கும் என ஒரு கால்பந்து ரசிகர் ஆதங்கப்பட்டதையும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலாக பெலே எனக்கு கால்பந்து விளையாடுவதைத் தவிர்த்து வேறொன்றும் தெரியாது என்கிறார்.
இன்னும் சிலர் முகம்மது அலியையும் பெலே வையும் ஒப்பிட்டு முகம்மது அலி தன் புகழை எப்படிப் பயன்படுத்தினார் என்பதையும் பதிவு செய்கிறார்கள். ஆனால் முகம்மது அலி வாழ்ந்த சூழலில் பேச்சு சுதந்திரம் இருந்தது. ப்ரஸீலிலோ அதற்கும் கூட வழியில்லை. Medici போன்ற ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியிடம் எதுவும் எடுபட்டிருக்காது. பெலே அரசியலில் நுழையாமலிருந்ததே நல்லது எனவும் ஒரு தரப்பு பதில் கூறுகிறது.
கிங் பெலேவுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது அவருக்குத் தெரிந்ததெல்லாம் மைதானமும், பந்தை இலக்குக்கு விரட்டுவதும்தான். தன் வாழ்நாளில் அதை மட்டுமே செய்தார். ப்ரஸீல் மட்டுமல்ல உலகமே அவரை கிங் பெலே எனக் கொண்டாடுகிறது. அதற்கு அவர் முழுத் தகுதியானவர். ‘கிங்’ கிற்கு மனமார்ந்த அஞ்சலி.

Thursday, June 16, 2022

திரையே நிகழாக- தொடர்கள்



நெஃபிலிக்ஸில் Ozark தொடரின் நான்காம் பாகத்தை ஆரம்பித்து நிறுத்தினேன்.  முதல் மூன்று பாகங்கள் சுவாரசியமாகப் போயின. பின்பு அந்த பேட்டர்ன் அலுக்க ஆரம்பித்ததால் நிறுத்தி விட்டேன். ஒரே ஒரு breaking bad தான் இருக்க முடியும். அதே தோசையை திரும்பவும் சுட்டு வைக்கும்போது அலுப்பு வந்து விடுகிறது. இருப்பினும் சுவாரசியமான கதைப் பின்னல்கள், கதாபாத்திரங்கள், மற்றும் எதிர்பாராத ட்விஸ்ட்களுக்காக ஒரு மாதத்தை இந்தத் தொடருக்குத் தந்தேன். அதுவே போதுமானது.

கொஞ்சம் நிதானமான தொடர்கள் எதையாவது பார்ப்போம் என்றெண்ணி அமேசான் ப்ரைமில் பஞ்சாயத்து சீசன் இரண்டை ஒரே அமர்வில் பார்த்து முடித்தேன். பஞ்சாயத்து முதல் சீசன் எனக்கு இன்னும் பிடித்திருந்தது. இதுபோன்ற ஆளரவம் குறைவான கிராம வாழ்க்கை மீதும்  வெள்ளந்தியான  மனிதர்கள் குறித்த கற்பனைகளும் மிருகங்கள் வாழும் நகரங்களில் உழலும் நம் அனைவருக்குமே உண்டு. நம்மிடம் இருக்கும் இந்த நாஸ்டால்ஜி வகை மென் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட இன்னொரு தொடர்தான் இது. பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கிராமத்தில் உயர் சாதியினரை விட்டால் வேறு ஆட்களே கிடையாதா என்பது போன்ற சலிப்பும் உடன் எழுந்தது. குப்தாக்களும், பாண்டேக்களும் , திரிபாதிகளும் சேர்ந்து நடித்த மற்றும் எடுத்த அவர்களைப் பற்றிய தொடர் போல. மாற்று ஆட்களோ பார்வைகளோ எதுவும் கிடையாது. மிக செளகர்யமாக, மனதை அலட்டிக் கொள்ளாமல் இது போன்ற தொடர்களை எடுக்கலாம், பார்க்கலாம், மூடி வைக்கலாம். அவ்வளவுதான். 

Dark தொடருக்குப் பிறகு அறிவியலின் பக்கம் போகாததால் கொஞ்சம் அறிவியல் புனைவின் பக்கம் ஒதுங்கலாம் என்றெண்ணி Outer Range தொடரின் முதல் இரண்டு பகுதிகளைப் பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்பேன்.

இந்த நாட்டு நெட்ஃபிலிக்ஸ் Peaky Blinders தொடர் நம்பர் ஒன் இடத்தில் காண்பித்துக் கொண்டிருந்ததால் பார்க்கலாமே என்றெண்னி ஆரம்பித்தேன். அப்படியே இழுத்துக் கொண்டது. முதல் பாகத்தைப் பார்த்து முடித்தேன். சுவாரசியமான தொடர். காலகட்டத்தைக் கொண்டுவந்த மெனக்கெடலும் - வரலாறைப் புனைவோடு இணைத்த அபாரமான திரைக்கதையும் ஊன்றிப் பார்க்க வைத்திருக்கிறது. மொத்த பாகங்களையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

கூடவே Apple tv யில் Physical தொடரையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். கதாநாயகியை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவளின் மன ஓட்டங்களை அல்லது மைண்ட் வாய்ஸை இடை இடையே இணைத்திருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.  பல இடங்களில் என் குணாதிசயத்தையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ள முடிந்தது. நம்மால் சகித்துக் கொள்ளவே இயலாத பல இடங்களில் சம்பந்தமே இல்லாமல் கடமைக்காக அமர்ந்திருப்போம் இல்லையா – நாயகி அதைப் பல இடங்களில் பிரதிபலிக்கிறார்.

இவற்றுக்கிடையில் நல்ல விமர்சனங்கள் வருவதைப் பார்த்து பிபிசி தயாரிப்பில் வந்திருக்கும் This Is Going to Hurt தொடரின் முதல் இரண்டு பகுதிகளையும் டெலிக்ராம் வழி பார்த்து - மிரண்டு இது நமக்கானதில்லை என மூடி வைத்தேன். மருத்துவமனைகள் குறிப்பாக பிரசவ விடுதிகளின் மீது எனக்கு ஆழ்மனதில் ஒரு பயம் இருக்கிறது. அது தொடர்பான எதையும் தவிர்க்கவே முயல்வேன். இது ஒரு ஃபோபியாதான் – இன்னொரு சமயம் இதைக் குறித்து எழுதுகிறேன்.

ஒரு மலையாள சினிமா கதை விவாதத்தில் பங்கு கொள்ள முடிந்தது. கேரளாவையே மிரட்டிய  இன்னும் முடியாத ஒரு கொலை வழக்கை திரைக்கதையாக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம். இதையே நாவலாக்கினால் என்ன என்கிற எண்ணமும் எழுந்திருக்கிறது. மதுரை நாவலை எழுதும் கையோடு இந்தக் கொலைக் கதையையும் எழுதிவிடலாம்தான்.  அதற்கு இந்த ஒட்டு மொத்த சினிமா மற்றும் தொடர் அடிக்‌ஷனை நிறுத்த வேண்டும். புதிதாக எதையும் ஆரம்பிக்காமல் Peaky Blinders மற்றும் Physical தொடர்களை மட்டும் பார்த்து முடித்துவிட்டு நாவல்களுக்குத் திரும்ப வேண்டும்.



Thursday, July 4, 2019

பெண்களின் மன நல விடுதி கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது





Girl, Interrupted படம் மன நல விடுதியில் தங்க நேரிலும் பெண்களின் வாழ்வை மிகத் துல்லியமாகப் பேசுகிறது. 1999 இல் வெளிவந்த திரைப்படம். நான் நேற்றுதான் பார்த்தேன். தொடர்களைப் பார்க்கும் மனநிலையிலிருந்து தற்காலிகமாக வெளியேறியிருப்பதால் நெட்ஃபிலிக்ஸைத் துழாவி இந்தப் படத்தைக் கண்டுபிடித்தேன். One Flew Over the Cuckoo's Nest – ஐ கொண்டாடிய உலகம் Girl, Interrupted ஐ ஏன் கைவிட்டது எனத் தெரியவில்லை. அதிகம் கவனம் பெறாத மிக ஆழமான படம். பெண்களின் மன உணர்வுகளையும் சிக்கல்களையும் இவ்வளவு ஆழமாகப் பேசிய படம் எதுவும் சமீபமாய் பார்த்த நினைவில்லை.

Susanna Kaysen என்கிற அமெரிக்க எழுத்தாளர் தன்னுடைய மனநல விடுதி நாட்களை Girl, Interrupted எனும் பெயரில் நினைவுக் குறிப்புகளாக எழுதினார். அதுவே திரைப்படமானது. சுசன்னா பாத்திரமேற்று நடித்த Winona Ryder இந்தத் திரைப்படத்தை தயாரித்துமிருந்தார். அற்புதமாக நடித்திருந்தார் என்றாலும் லிசா என்கிற துணைக் கதாபாத்திரமேற்று நடித்த ஏஞ்சலினா ஜூலி நடிப்பில் இவரைப் பின்னுக்குத் தள்ளி மொத்த விருதுகளையும் வாங்கி விட்டிருக்கிறார்.

படத்தின் உரையாடல்கள் அபாரமானவை. மீண்டும் மீண்டும் வாசிக்கப் பட வேண்டியவை. மன நலம் சார்ந்த பேச்சை மிகச் சரியாக கையாண்டிருக்கிறார்கள். சில காட்சிகளை யூகிக்க முடிந்தது. டெய்சிக்கு என்ன நேரும் என்பது முன்னரே அறிந்ததுதான். கனமான திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் நாடகீயத் தருணங்கள் படத்தில் கிடையாது என்பதுதான் One Flew Over the Cuckoo's Nest படத்திற்கும் Girl, Interrupted படத்திற்கும் உள்ள வேறுபாடு. மேலும் ஜாக் நிக்கல்சன் என்கிற அரக்கனால் முன்னது பிரபலமானது. பின்னதில் எழுத்து வலுவானது. எழுதுபவனாய் இதுவே முதன்மையானதாய் தோன்றுகிறது.

Girl, Interrupted  படம் பார்த்து முடித்ததும் உடனடியாக ’பிக் பாஸ்’ வீட்டின் பெண்கள்தாம் நினைவிற்கு வந்தனர். 

மனம் பிறழ்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் பெண்கள் சேர்ந்து இருக்க நேரிடும் உலகம் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சிகளில் களேபரம் செய்யும் பெண்களின் உலகை விடத் தரமானதாக இருக்கிறது. 

’பிக் பாஸ்’ பெண்கள் சரியான மன நலம் கொண்டவர்கள் என சமூகத்தால் நம்பப்படுகிறவர்கள். இந்தச் சரியானப் பெண்களின் மன விகாரங்களைச் சகித்துக் கொள்ள முடிகிறதா என்ன?ஆனால் சிகிச்சைக்காக ஒரே கூரையின் கீழ் தங்க நேரிடும் பெண்களின் உலகில் இவ்வளவு வன்மங்கள் கிடையாது.  மன நல விடுதியில் பெண்களின் சக இருப்பு கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது. 

காழ்ப்புகளாலும் பொறாமைகளாலும் பிரபல வெறியாலும் நிரம்பி வழியும் இந்த ’சோ கால்ட்’ மன நிலை சரியான பெண்களின் உலகைப் போல, மன நல விடுதியில் இருக்க நேரிடும் பெண்களின் உலகு இல்லை. இவர்கள் தங்கள் இதயங்களை இறக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். 

லிசா வின் குரூரமானப் பேச்சைத் தாங்க முடியாமல் சுசன்னா சொல்வாள். ”உன் இதயத்தில் அன்பில்லை, உண்மை என்கிற சாக்கை வைத்துக் கொண்டு இதயத்தைச் சாகடித்துவிட்டாய். நீ ஏற்கனவே இறந்து போனவள்” என்பாள். 

இதயம் மரத்துப் போன அத்தனைப் பேரும் நடைப் பிணங்கள்தாம். நடைப் பிணங்களின் நட்சத்திர வாழ்வில்தாம் எத்தனைப் பூச்சுகள்? 

Thursday, April 11, 2019

தில்லி க்ரைம்- இந்திய மகள்களின் துயரம்




நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய வரவான Delhi Crime குறுந்தொடரைப் பார்த்து முடித்தேன். ஒரே நாளில் பார்த்துவிட முடிந்தது. அதைத் தொடரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். இந்தியாவையே உலுக்கிய நிர்பயா வழக்கின் பின்னணியை அலசும் தொடர். பின்னணி என்பதை விட காவலர்கள் மற்றும் சட்டத்தின் பணி என்னவாக இருந்தது என்பதைப் பேசுகிறது. மிகச் சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் போலிஸ், குற்றவாளிகளைப் பிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை கொஞ்சம் உணர்வுப்பூர்வமாகவும் சாகச மனப்பாங்கோடும் கதைகளாகப் பார்க்க முடிகிறது. 

நிறைய போதாமைகள் உள்ளன என்றாலும் மிக இறுக்கமான திரைக்கதையும் அபாரமான நடிகர்களும் மிகப்பெரிய பலம். குறிப்பாக டிசிபி வர்த்திகா சதுர்வேதி யாக நடித்திருக்கும் Shefali Shah வின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பு தொடரின் தரத்தை உயர்த்துகிறது. எப்படி Sacred Games தொடரில் சாயிஃப் அலி கான் மின்னினாரோ அதற்கு இணையாக இவரது நடிப்பைப் பேசலாம். ஒரு சாயலில் நம் ஶ்ரீவித்யாவைப் போல இருக்கிறார். அதே அளவில் பெரிய, கருணை மிகுந்த கண்கள் இவருக்கும் இருக்கிறது. இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே எனத் தேடியதில் காந்தி மை ஃபாதர் படத்தில் கஸ்தூரிபா காந்தியாக நடித்தவர் இவர்தான் என்பது தெரியவந்தது.

போலிஸ்காரர்களின் அர்ப்பணிப்பு மட்டுமே பிரதானமாகப் பேசப்படுவதால் இந்தத் தொடர் ஒற்றைப் பார்வையாகச் சுருங்கி விடுகிறது. இந்தியா முழுக்க கிளர்ந்தெழுந்த மக்களின் எழுச்சியும், போராட்டங்களும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. நிர்பயா வழக்கின்போது இருந்த மக்களின் மன உணர்வையாவது குறைந்த பட்சம் கொஞ்சம் நெருங்கிப் பார்த்திருக்கலாம்.

தொடரின் ஆரம்ப பயங்கரத்தை மட்டும் முதல் நாள் பார்த்துவிட்டு இனிமேல் இதைத் தொடர்ந்து பார்க்கவேண்டுமா அல்லது இயலுமா என்கிற கேள்விகள் எழுந்தன. இப்போது இருக்கும் மனநிலையில் நெஞ்சை உலுக்கும் தினசரி செய்திகளைக் கூட நான் வாசிப்பதில்லை. நம் நாளிதழ்கள் முழுக்க புனைவெழுத்தாளர்கள் நிரம்பி வழிவதால் அவர்கள் எழுதும் வன்புணர்வுக் கதைகள் நிஜ வன்புணர்வு நிகழ்வுகளை விட மோசமாக இருக்கின்றன. மேலும் ஒரு பூதத்தைப் போல பெருத்து நிற்கும் நியூஸ் மீடியாக்களுக்கு தீனி போட குற்றங்களின் போதாமையும் உள்ளதால் இவர்கள் இட்டுக் கட்டும் கதைகளில் அருவெருப்பு நிறைந்து வழிகிறது. 

இருப்பினும் ஏதோ ஒரு மன தைரியத்தில் நேற்று காலையில் பார்க்க ஆரம்பித்து இரவு முடித்தேன். வயதின் காரணமாக நிர்பயா வழக்கில்  தப்பித்த  குற்றவாளி யைக் குறித்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு அவன் எங்கோ, ஏதோ ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தாலும்  தினசரி அவனால் நிம்மதியாக உறங்கி விட முடியுமா என்ன?.

தொடரில் இந்த இளம் குற்றவாளி அகப்படும்போது அவன் வயது கேட்கப்படுகிறது. அவனால் அதற்கு சரியான பதிலைத் தர முடியவில்லை. பதினேழு அல்லது பதினெட்டு இருக்கலாம் என்கிறான். பதினெட்டுதான் என உடனிருக்கும் ஒரு ஆண் போலிஸ் சொல்லி கைது செய்ய முனைய, ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் ''இல்லைப் பதினாறுதான் இருக்கும் முகத்தைப் பார்த்தால் தெரியவில்லையா' என வலுக்கட்டாயமாக அவனை இளங் குற்றவாளிப் பிரிவில் கைது செய்கிறார். நிஜத்தில் என்ன நடந்தது எனத் தேடிப் பார்க்க வேண்டும். மேலும் இந்த வழக்கின் பின்னாலிருந்த அதிகாரிகள், அவர்களது செயல்பாடுகள் குறித்தும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலை இந்தத் தொடர் ஏற்படுத்தி இருக்கிறது. காட்சிப்படுத்தப் பட்டவைகளில் எத்தனை சதவிகிதம் புனைவு என்பது தெரியவில்லை. ஒருவேளை நிகழ்வுகளை அப்படியே வைத்துக் கொண்டு கதாபாத்திரங்களை மட்டும் புனைந்திருக்கலாம் என்பது என் யூகம்.

என் நண்பன் ஒருவன் கேரளத்தையே உலுக்கிய சூரியநெல்லி விவகாரத்தைக் களமாகக் கொண்டு ஆங்கிலத்தில் ஒரு நாவலை எழுதியிருக்கிறான். அவன் அந்த நாவலை எழுதும்போது  தினசரி என்னோடு உரையாடுவான். அவன் தொடர்ந்து எழுத சில திரைப்படங்களையும் படைப்புகளையும் பரிந்துரை செய்தேன். நூலாக்கம் முடிந்து அடுத்த வாரம் புத்தகம் கைக்கு கிடைக்கும். சொல்ல வந்தது சூரியநெல்லி வழக்கின் பயங்கரம் குறித்துத்தான். ஒரு பதினாறு வயதுப் பெண்ணை நாற்பதிற்கும் மேற்பட்டோர் சீரழித்த பயங்கரம்தான் இந்த சூரியநெல்லி விவகாரம். ஒரு முக்கியமான அரசியல்வாதியும் இந்த விவகாரத்தில் அடிபட்டதால் வழக்கு திசைதிருப்பப்பட்டதா அல்லது உண்மையில் நடந்தது என்ன என்கிற தெளிவு நீதிமன்றத்திற்கு கிடைக்கவே இல்லை. தல்வார் பயங்கரம் எப்படி இன்றும் சந்தேகத்தைக் கிளப்புகிறதோ அப்படியே சூரிய நெல்லி விவகாரமும் ஏராளமான சந்தேகங்களைக் கொண்டிருக்கிறது. 

நிர்பயா வழக்கும் இப்படி சந்தேகங்களால் மூடப்படாமல் போவதற்கு இரண்டு காரணங்கள்தாம் பிரதானம். ஒன்று இவ்வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் விளிம்பு நிலை மனிதர்கள். இரண்டு நிர்பயா வை இந்தியா தன் மகளாகப் பார்த்தது.

வன்புணர்விற்கும் சீரழிவிற்கும் நசிவிற்கும் உள்ளாகும் அனைத்துப் பெண்களும் இந்தியாவின் மகள்தாம் என்கிற பார்வை அரசாங்கத்திற்கு எப்போது வருகிறதோ அப்போதுதான் பெண்கள் மீது நிகழும் வன்முறைகள் குறையும்.



Thursday, January 31, 2019

ROMA - சமன் செய்யும் துயர்




அல்போன்ஸோ க்வெரானின் ரோமா படத்தைப் பார்த்து முடித்தேன். முதன் முறையாய் ஒரு நெட்பிலிக்ஸ் திரைப்படம் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கரின் பல்வேறு பிரிவுகளில் இடம் பிடித்திருப்பது நல்ல விஷயம்தான். திரைப்படம் திரையரங்குகளை மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை.  தமிழ்சூழலில் 'ரிலீஸ்' தான் மிகப் பெரியச் சிக்கலாக இருக்கிறது. ரோமா போன்ற உதாரணங்கள் நம் சூழலில் நல்ல நம்பிக்கைகளை விதைக்கலாம்.

அல்போன்ஸோ க்வெரானின் எல்லாத் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். Y Tu Mamá También, படமும் Children of Men திரைப்படமும் எனக்குப் பிடித்தமானவை. குறிப்பாக சில்ரன் ஆஃப் மென் என்னை நடுங்க வைத்தது. தொழில் நுட்ப ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் இவரின் திரைப்படங்கள் உச்சமானவை. ரோமா வின் ஒவ்வொரு காட்சியுமே இவரது Technical Brilliance க்குச் சான்று.

கருப்பு வெள்ளையில்தான் உணர்வுகள் மிகத் துல்லியமாக வெளிப்படுகின்றன. அதுவும் ரோமா போன்ற சற்றுக் கூடுதலாக நெக்குருக வைக்கும் படங்கள் கருப்பு வெள்ளையில் இன்னும் மிளிர்கின்றன.

ஒரு மத்தியதரவர்க்க வீட்டின் பணிப்பெண்ணைக் குறித்த கதை என ஒருவரியில் சொல்லிவிடக் கூடிய விஷயதாம்தான். 1970 களில் மெக்சிகோ நகரமே உள்நாட்டுக் கலவரங்கள், மாணவர் போராட்டங்களெனத் தடுமாறிக் கொண்டிருந்த காலம். அதே நெருக்கடிகள் பெரும்பாலான குடும்பங்களையும் அலைக்கழித்தது. குறிப்பாய் பெண்கள் எல்லாவித துரோகங்களிற்கும் உள்ளாகினர். இந்த நெருக்கடிகளும் இழப்புகளும்  மாறி மாறி மக்களைத் துன்புறுத்திய  கருப்பு வெள்ளை நாட்களை அல்போன்ஸோ க்வெரான் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

ஒட்டு மொத்த திரைப்படத்தையும் ஒற்றைச் சொல்லில் துயரும் காலம் அல்லது துயர் என சுருக்கி விடலாம். ஆனால் இந்த உணர்வைக் கையாண்ட விதம்தான் ஆச்சரியத்தைத் தருகிறது. ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட பலக் காட்சிகள் வியப்பைத் தந்தன. எவ்வளவு பெரிய ஒத்திசைவு இந்த குழுவினருக்கு இருந்திருக்க வேண்டும். மிகவும் அர்ப்பணிப்பான பணியின் பலனே இந்த அங்கீகாரம்.



இறுதிக் காட்சியில் நெகிழ்ந்தும் பதபதைத்தும் போனேன். ஏனோ யூமாவாசுகியின் இரத்த உறவு நாவல் படம் நெடுக நினைவில் வந்து கொண்டே இருந்தது. மீண்டும் அந்த நாவலை வாசிக்கும் எண்ணத்தையும் இந்தப் படம் தூண்டியது. துயரமும் இழப்பும்தான் மானுடத்தை இணைக்கிறது. சமூக அடுக்குகள், கருப்பு வெள்ளை மனநிலைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாவற்றையும் துயர் சமன் செய்து விடுகிறது. ரோமா திரைப்படம் இதன் சாட்சியமாய் விளங்குகிறது.

அறிவுத் தளத்தில் இந்தத் திரைப்படத்தை 'சென்டி' என ஒதுக்கிவிடலாம்தான் ஆனால் உணர்வுத் தளத்தில் அப்படிச் செய்ய இயலுமா எனத் தெரியவில்லை.
சமீபமாய் என்னைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் 'சென்டி' யாக மாறிக் கொண்டிருக்கிறது. நானும் இந்தக் கத்தியைப் பள்ளத் தாக்கில் விசிறி எறிந்துவிட்டு அதி 'சென்டி'யாய் எழுதிக் கொண்டிருப்பதை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

Thursday, January 10, 2019

Black Mirror: Bandersnatch (2018)



Netflix இல் வெளிவரும் Black Mirror தொடரின் ரசிகன் நான்.  மிகச் சமீபமாய் நண்பர் பினாத்தல் சுரேஷ் பரிந்துரையின் அடிப்படையில் நான்காவது season லிருந்து பார்க்க ஆரம்பித்தேன்.  முதல் கதையான  USS Callister தந்த வியப்பால் இதுவரை வெளிவந்த மொத்தப் பகுதிகளையும்  தொடர்ச்சியாய் பார்த்து முடித்தேன். வேறொரு உலகத்தில் மிகச் சரியாக சொல்லப்போனால் எதிர்காலத்தில் வாழ்வது போன்ற பிரம்மை உருவானது. என் ஒவ்வொரு நொடியும் யாராலோ கண்காணிக்கப்படுகிறது. என் எல்லா நகர்வுகளையும் யாரோ தீர்மானிக்கிறார்கள் என்பன போன்ற கற்பனைகள்  சூழ ஆரம்பித்தன. உண்மையில் என் பைத்தியம் முற்றிற்று. கிட்டத்தட்டக் கடவுளைப் போன்றே அறிவியலையும் காண வேண்டும். அறிவியலும் கடவுளும் ஒன்றே என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்தேன்.

சதா இந்தக் கதைகளில் மூழ்கிக் கிடந்ததன் பலனாய் "முள்ளம்பன்றிகளின் விடுதி" என்றொரு கதையை எழுத முடிந்தது. (இந்தக் கதையை ஒட்டக மனிதர்கள் எனும் பெயரில் கானல் பதிப்பகம் தொகுத்த அமீரகச் சிறுகதைகள் நூலில் வாசிக்க முடியும்) ஆனாலும் இந்தத் தொடர் அடிமை மனநிலை சரியாகப் படாததால் 'நெட்ஃபிலிக்ஸை' கைவிட்டேன்.  அடுத்த Black Mirror பகுதி வரும்போது பார்த்துக் கொள்ளலாம். மேலதிகமாய் ஏப்ரலில் வரும் GOT . இதைத் தாண்டி வேறெந்த தொடரையும் பார்க்க கூடாது எனவும் முடிவெடுத்திருந்தேன். கடந்த வாரம் வெளியான Bandersnatch குறித்து நண்பர்கள் வியப்பாய் பேசிக் கொண்டதும்,  குறிப்புகளை வாசிக்காமல் இணையத்தில் தரவிறக்கிப் பார்க்க ஆரம்பித்தேன்.

Bandersnatch ஐ மொத்தம் ஆறு மணி நேரம் ஓடக்கூடிய படமாக வடிவமைத்திருக்கிறார்கள். முதல் இரண்டு மணி நேரங்கள் பார்த்து முடித்ததும்  பொறி தட்டியது. ஏதோ பிசகு இருப்பதைப் போல் தோன்றியது. படத்தின் புதிர் பாதைகளில் தொலைந்து போனதால் இரண்டு மணி நேரங்கள் போனதும் தெரியவில்லை. நிறுத்தி விட்டு படத்தைக் குறித்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்தப் படம் ஒரு Interactive Film என தெரியவந்தது. படத்துடன் பார்வையாளர்கள் இணைந்து பயணிக்கும் வகையில் திரை நாயகனின் தேர்வுகளை நாமே எடுக்கலாம். கனிணி விளையாட்டப்போல ஒரு கதையை சொல்ல முடிவது அறிவியல் தந்த கொடைதாம். மீண்டும் நெட்பிலிக்ஸை உயிர்ப்பித்து Bandersnatch ஐ முதலில் இருந்து பார்த்தேன். கதை தெரிந்து விட்டதால் தேர்வுகளின் முடிவு எங்கிட்டுச் செல்லும் என்பதும் தெரிந்திருந்தது. ஆனால் சுவாரஸ்யம் குன்றவில்லை. கொடுக்கப்படும் option களை தேர்வு செய்து படம் பார்த்தால் ஒண்ணரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து இன்னொரு option ஐ தேர்வு செய்து அதே கதையை இன்னொரு வடிவில் பார்க்கலாம். இப்படியாக ஆறு மணி நேரங்கள் பார்க்க முடியும்.

இந்த வியப்பை பயல்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். முதல் காட்சியில் வரும் கெலாக்ஸ் தேர்வைப் போட்டுக் காண்பித்தேன். இருவரும் கொஞ்சம் கூட வியப்பைக் காட்டிக் கொள்ளவில்லை. "இதெல்லாம் ரொம்ப பழசுப்பா" என்றபடியே ரிமோட்டை வாங்கி நெட்பிலிக்ஸிலேயே இருக்கும் ஒரு இன்ட்ராக்டிவ் கார்டூனைப் போட்டுக் காண்பித்தார்கள். ஓ என்றபடியே சிரித்து வைத்தேன். "இத பாத்துதாம்பா ப்ளாக் மிர்ரர்ல காப்பி அடிச்சிருக்காங்க" என்ற கிண்டல் கமெண்ட் ஒன்றும் வந்தது.  இந்த இலக்கியச் சோம்பல் மன நிலையிலிருந்து விரைவில் வெளியே வந்தாக வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன்.

Monday, August 27, 2018

மெளனத்தின் சங்கீதம்

மூன்று மாதங்களாய் இந்தப் பக்கத்தைத் திறக்க முடியவில்லை. புழக்கத்தில் இல்லாமல் இருந்தால் எல்லாமும் துருப்பிடித்துப் போகிறது. இந்தப் பக்கம் மட்டும் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியம். தினம் ஐம்பது பேராவது இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்கிறார்கள். அந்த எளிய மனங்களுக்காவது எதையாவது இங்கு கிறுக்கி வைக்க வேண்டும். இந்தியப் பயணம், தொடர்ச்சியான விடுமுறைகள் என அலுவலகத்தில் சாவகாசமாய் உட்கார்ந்து எழுத நேரம் வாய்க்கவில்லை. என் அலுவலக மேசையும் கணினியும் இல்லாமல் போனால் என்னால் எழுதவே முடியாதோ என்கிற பயமும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. நிறைய எழுதுவதற்கான உந்துதலில் மேக்புக்கை  வாங்கியதோடு சரி. ஓரிதழ்ப்பூவின் எடிட்டிங் வேலை பார்த்ததைத் தவிர, அதை வரவேற்பரையில் பார்க்க முடியாத படங்களைக் காண மட்டுமே பயன்படுத்துகிறேன். 

’வாட்ஸப்’ வழியாய் அமீரகத் தமிழ் வாசிப்பாளர் குழுமம் என்கிற பெயரில் நாற்பது நண்பர்கள் இணைந்திருக்கிறோம். ஒரு வருடத்திற்கும் மேலாய் இந்தக் குழு கலையாமல் இருப்பதும், தினம் உரையாடல்கள் நிகழ்வதும் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய நிகழ்வுதான். நிறைய சந்திப்புகளும்,  விவாதங்களும், கிண்டலும் கேலியுமாய் குழு ஆரோக்கியமாக நகர்கிறது. தினசரியின் சலிப்பை உணர்ந்து ஒரு வருடமாகிற்று. ஃபேஸ்புக்கில் கிடந்து உழலுவதும் தவிர்க்கப்பட்டு மன ரீதியிலாய் ஆரோக்கியமாக உணர்கிறேன். எந்த உளைச்சலும், உயர்வுணர்வும், தாழ்வுணர்ச்சியும் இல்லை. 

இதுவே எழுதுவதற்கான சரியான மனநிலையும் காலமும் என்பதை உணர்ந்தே என் அடுத்த நாவலை எழுத ஆரம்பித்தேன். சோம்பலால் தள்ளிப் போகிறது. மேலதிகமாய் இரண்டு சிறுகதைகளும் மூளையில் வந்து உட்கார்ந்து கொண்டு நகராமல் அடம்பிடிக்கின்றன. இடையில் மீண்டும் கவிதை எழுதும் முனைப்பு வேறு. ஆனால் ஒரு வரி கூட எழுதவில்லை. இந்தச் சுகசெளகர்யச்சோம்பலிலிருந்து மீள வேண்டும்.

வாழ்வு இணக்கமாக இருக்கிறது. நண்பர்கள் மகிழ்வைக் கூட்டுகிறார்கள். சகலத்திலும் மென்மையும் கருணையும் நிரம்பி வழிகிறது. ஆன்மாவின் இசைத்தட்டிலிருந்து மெளனத்தின் சங்கீதம் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. நினைவில் அவ்வப்போது எழும் பிழைகளின் அவமானத்தைத் துடைத்தெறிந்து விட்டு முன்னால் நகர்கிறேன். இந்த நிகழ் மகத்தானது. ஒருபோதும் மீளக் கிடைக்காதது. சிரிக்கும் செம்மஞ்சற்ப்பூவில் தோற்கும் வெட்கைச் சூரியனைப் பார்த்துப் புன்னகைத்துக் கடக்கிறேன்.


0

’நார்கோஸ்’, ’வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ தொடர்களுக்குப் பிறகு நெட்ஃபிலிக்ஸில் ’ப்ரேக்கிங் பேட்’ இரண்டு சீசன்களைப் பார்த்தேன். இடையில் ’சாக்ரெட் கேம்ஸ்’ எட்டு பகுதிகள் - அவ்வளவுதான் வந்திருக்கிறது,-  ’ப்ளாக் மிர்ரர்’ நான்கு பகுதிகள் பார்த்து முடித்திருக்கிறேன். ப்ளாக் மிர்ரரின் முதல் இரண்டு கதைகளும் வியப்பிலாழ்த்தின. எதிர்காலத்தின் கதைகள் என இவற்றை வகைமைப்படுத்தலாம்.  அறிவியல் புனைக் கதைகள் என்பதைத் தாண்டி கதை சொல்லலில் எவ்வளவு துல்லியம்! Black Mirror - Series 4 ன் முதல் கதையான USS Callister தந்த வியப்பு, கடந்த ஒருவாரமாக அப்படியே இருக்கிறது Arkangel மற்றும் Crocodile கதைகளும் பிரமாதம். Game of Thrones போல மிகத் தாமமாக கண்டறிந்த தொடர் இது. இதற்கு முன்பு வெளியான  ப்ளாக் மிர்ரரின் முதல் மூன்று பாகங்களையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

Sacred Games வழக்கமான மும்பை தாதா கதைதான்.  மனித வாழ்வில் ஒருபோதும் அலுக்கவே அலுக்காதவை என சில விஷயங்கள் உண்டு. போலவே  பணம்,பெண்,போதை, அதிகாரம், வன்முறை இவற்றை உள்ளடக்கிய சினிமா அல்லது தொடர் எத்தனை வந்தாலும் அவை கண்டிப்பாய் நம்மை கட்டிப்போடும். கொஞ்சம் சுவாரசியமும், புத்திசாலித்தனமான திரைக்கதையும், தேர்ந்த நடிகர்களும் இருந்தால் போதும். திரையுடன் பார்வையாளர்கள் ஒன்றிப்போகலாம்.  அப்படித்தான் இந்தத் தொடரும் இருக்கிறது. 

சாயிஃப் அலி கான் இவ்வளவு நல்ல நடிகரா என்ன! என்கிற வியப்புதான் முதலில் தோன்றியது. சாயிஃப் அலி கான் சினிமா வாழ்வில்  சர்தாஜ் சிங் போல ஒரு கதாபாத்திரம் கூட  அமையவில்லை என்றே நினைக்கிறேன். சந்தேகமே வேண்டாம் அவரின் ’கேரியர் பெஸ்ட்’ இதுதான்.

Ganesh Gaitonde வாக தானைத் தலைவன் நவாசுதீன் சித்திக். சாயிஃப் உயிரைக் கொடுத்து நடிப்பதை ஒரே ஒரு உடலசைவில் நவாசுதீன் மிக எளிதாக தாண்டுகிறார். மொத்த தொடரையும் இவரது இருப்பே தாங்குகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த சமகால நடிகன் இவராகத்தான் இருக்க முடியும். Sacred Games குறித்தும் விரிவாக எழுதுகிறேன்.


Thursday, February 22, 2018

Narcos : நமுத்த வாழ்வின் பரவசம்


பாப்லோ எஸ்கோபார்  - கொலம்பியாவை உலகறியச் செய்த பெயர். பாப்லோ கொல்லப்பட்டு கால் நூற்றாண்டு ஆகப் போகிறதென்றாலும் இன்று வரை  இந்தப் பெயர் தந்து கொண்டிருக்கும் ஈர்ப்பை தொடர்ந்து வெளிவரும் புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சினிமாக்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். அசாதாரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் நம்முடைய நமுத்த சாதாரண வாழ்வில் இருக்கும் ஒரே பரவசம் . எனவேதான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், டான் கள், கொள்ளைக் கூட்டத் தலைவர்கள், போதை மருந்து மாஃபியாக்கள், நடிகர்கள், குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் போன்றோரின் சொந்த வாழ்வை ஒட்டிய படைப்புகள் எப்போதும் வெற்றியில் சோடை போவதில்லை.

நார்கோஸ் மிக நேரடியாக கொலம்பியாவின் போதை மருந்துக் கும்பல் தலைவனான பாப்லோ எஸ்கோபாரின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறது. வாழ்வைப் பதிவு செய்வதில் இருக்க வேண்டிய நேர்மை இந்தத் தொடருக்கு இருக்கிறதா என்றால்   இதுவரை இல்லை. அதாவது இரண்டு சீசன்கள் வரை. எனவே மூன்றாவது சீசனைப் பார்க்கும் ஆர்வம் விட்டுப் போயிற்று. ஆனால் வெற்றியைக் குறிவைத்து எடுக்கப்படும் தொடர்களில் இருக்க வேண்டிய சகலமும் நார்கோஸ் தொடரில் இருக்கிறது. பணக்கார வாழ்வின் பகட்டு, குடி, காமம், அதிகாரம் மற்றும் இவற்றோடு சம பங்கு இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. எனவே இயல்பாகவே ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. மிக வேகமாக இத்தொடரைப் பார்த்தும் விடுகிறோம். ஆனால் இறுதியில் இத்தொடர் புதிதாக எதையாவது  சொல்லியிருக்கிறதா என யோசித்தால் வெறுமை தான் எஞ்சுகிறது. ஏற்கனவே நாம் பார்த்து சலித்த இலத்தீன் அமெரிக்க டான் களின் வாழ்வு, கொக்கைன் கடத்தல் பின்னணி, அமெரிக்க அரசின் அடுத்த நாட்டின் மீதான ’அக்கறை’ என ஏற்கனவே பார்த்து சலித்த விஷயங்கள்தாம் தொடரை ஆக்ரமித்திருக்கின்றன . மேலும் டான்கள் தங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் செண்டிமெண்ட் காதல், மனைவி அம்மா பாசம் என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விஷயங்கள் யாவும் திகட்டிப் போனவை. ஒருவேளை காட் ஃபாதர் வரிசைப் படங்கள், ஸ்கார்ஃபேஸ், குட் ஃபெலாஸ், மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ் மாதிரியான படங்களைப் பார்த்திராதவர்களுக்கு இந்தத் தொடர் நல்ல அனுபவத்தைத் தரலாம்.

நார்கோஸ் தொடரின் சிறப்பம்சம்  என்னவென்று பார்த்தால் இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் நிஜக் காட்சித் துணுக்குகள்தாம். கதையின் போக்கை ஒட்டியே 1970 -90 களில் கொலம்பியா மற்றும் அமெரிக்காவில் நடந்த நிஜ சம்பவங்களையும் டாக்குமெண்டரிக் காட்சிகளாக இணைத்திருப்பது தொடரின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது.  பாப்லோ எஸ்கோபராக நடித்திருக்கும் பிரேசில் நடிகரான Wagner Moura வின் பிரமாதமான நடிப்பும் நம்மைத் திரையோடு ஒன்ற வைக்கின்றது. கொலம்பியச் சூழல், நடிகர்கள், பின்னணி இசை, லேப் கள் எனப்படும் கொக்கைன் மருந்து தயாரிக்கும் இடங்கள், பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏராளமான துணை நடிகர்கள் என தொடருக்கான உழைப்பு பிரம்மாண்டம்தான் என்றாலும் திரைக்கதை ஒரே விஷயத்தையே சுற்றிச் சுற்றி வருவதால் அலுப்பையும் தவிர்க்கமுடிவதில்லை. அமெரிக்கத் தூதரகத்தின் உள்ளடி வேலைகள், கொலம்பிய அதிபரின் அரசியல் நகர்வுகள், அவரும் துணை அதிபரும் பாப்லோவை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளில்  தென்படும் முதிர்ச்சியற்ற தன்மை  போன்றவை  தொடரை மேலும் பலகீனப்படுத்துகின்றன.

 பாப்லோ எஸ்கோபரின் அசலான வாழ்வைத் தேடி வாசித்தால் தொடரில் சொல்லப்பட்டிருப்பதை விடக் கூடுதல் சுவராசியம் கொண்டதாக இருக்கிறது. நார்கோஸ் தொடர் எஸ்கோபரின் கொக்கைன் சாம்ராஜ்யத்தின் துவக்கத்தையும் உச்சத்தையும் சரிவையும் பிரதானமாக முன் வைக்கிறது. ஆனால் பாப்லோ கொக்கைன் உலகிற்கு வருவதற்கு முன்னரான வாழ்வு இன்னும் அசாத்தியத் தன்மை கொண்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பவனாக, சில்லறைத் திருடனாக, கார் திருடனாக, அடியாளாக மெல்ல மெல்ல வளர்ந்து கொக்கைன் உலகில் நுழைந்திருக்கிறார். உலகக் குற்றவாளிகளின் வரலாற்றில் பாப்லோ எஸ்கோபர்தான் மிகப் பெரிய செல்வந்தர். 1990 களில் பாப்லோவின் வருட வருமானம் 30 பில்லியன் அமரிக்க டாலர். ஆம் பில்லியன். எவராலும் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வாழ்வை பாப்லோ எஸ்கோபர் வாழ்ந்திருக்கிறார்.  ஏராளமான வசிப்பிடங்கள். வீட்டிற்குள்ளேயே மிருகக் காட்சி சாலை வைத்திருந்ததாகவெல்லாம் விக்கி சொல்கிறது. வியப்புதான் மேலிடுகிறது.



நார்கோஸ் போல கவர்ச்சி சாயம் பூசாத அசலான பாப்லோ எஸ்கோபரின் வாழ்வை தேடி வாசிக்க அல்லது பார்க்க விருப்பமாக இருக்கிறது.  பாப்லோவின் நிருபர் காதலி - தொடரில் வலேரியா - எழுதிய Loving Pablo புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தழுவி ஜேவியர் பார்டம் - பெனலோப் குருஸ் நடிப்பில் சென்ற வருடம் ஒரு ஸ்பானிய படமும் வெளியாகி இருக்கிறது. திரைப்படத்திற்கு வரவேற்பு இல்லை என்பதாக விமர்சனங்கள் சொல்கின்றன. பாப்லோவைக் குறித்தான நேஷனல் ஜியாக்ராபியின் டாக்குமெண்டரி ஒன்று கிடைத்திருக்கிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.






Featured Post

test

 test