Showing posts with label மாஸ்தி. Show all posts
Showing posts with label மாஸ்தி. Show all posts

Wednesday, December 10, 2014

சிக்கவீர ராஜேந்திரன் - 2

வீரராஜன் கோழையோ சோம்பேறியோ அல்ல. விளையாட்டிலும் துப்பாக்கி சுடுவதிலும் தேர்ச்சி பெற்றவன். சிறுவயதில் வீரராஜனுக்கு கிடைத்த அளவுகடந்த சுதந்திரம், தாயின் அரவணப்பின்மை, தந்தையின் சரியான வழிகாட்டலின்மை போன்றவைகள் அவனை முரட்டு இளைஞனாக வளர வழிவகுக்கிறது. வீரராஜனுக்காக எதையும் செய்யத் துணியும் சக விளையாட்டுத் தோழனான நொண்டிப் பசவனின் அளவு கடந்த மரியாதையும் பக்தியும் விசுவாசமும் வீரராஜனை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றன. பெண்பித்து, மதுமயக்கம் என சகல போகங்களிலும் மிக இளம் வயதிலேயே வீரராஜன் எல்லையற்றுத் திளைக்கிறான். மகனின் போக்கைக் கண்டு திகைக்கும் தந்தை குடகு வம்சத்தை சேர்ந்த துணிச்சலும் கம்பீரமும் நற்குணங்களும் கொண்ட பெண்ணான கெளரம்மாவை வீரராஜனுக்கு மணம் முடித்து வைக்கிறான். தந்தைக்குப் பிறகு அரியணை ஏறியதும் அவனின் தீய குணங்களும் இரட்டிப்பாகின்றன.

கெளரம்மா வீரராஜனின் அத்தனை மூடத்தனங்களையும் தாங்கிக் கொள்கிறாள். வீரராஜன் மீது மக்களுக்கும் மந்திரிகளுக்கும் ஏற்படும் அசெளகர்யங்களை முடிந்தமட்டில் கெளரம்மா தீர்த்து வைக்க மெனக்கெடுகிறாள். வீரராஜனுக்கு இருக்கும் ஒரே பலகீனமான மகள் பாசத்தை வைத்து ஓரிரு நற்காரியங்களை அவளால் சாதித்துக் கொள்ள முடிந்தாலும் அவனின் தீமைக் குணங்கள் ஒரு எல்லைக்கு மேல் அவளை நகரவிடாமல் செய்து விடுகிறது.

முப்பத்தைந்து வயதிலேயே வீரராஜன் மூப்படைந்து விடுகிறான். அளவு கடந்த பெண் இன்பத்தால் ஆண்மையையும் இழக்கிறான். சதா பசவனுடன் இழந்த ஆண்மையை மீட்டெடுக்க மருத்துவ வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறான். இருந்த போதிலும் கண்ணில் படும் பெண்டிரை கவர்ந்து வரச் சொல்லி அரண்மனையில் வைத்துக் கொள்கிறான். இந்த மீறல் எல்லை தாண்டி அசலூர் உயர்குடிப் பெண்கள் மீதும் பாய்கிறது. இத்தகவல் ஆங்கிலேயர் அரசிற்குப் போக வீரராஜனுக்கு சிக்கல் ஆரம்பிக்கிறது. அரண்மனை வரவு செலவை கவனித்துக் கொள்ளும் செட்டியார் குடும்பத்துப் பெண்கள் மீதும் சிக்கவீர ராஜன் தன் கவனத்தைத் திருப்ப குடகின் மிக முக்கியஸ்தர்களும் மந்திரிகளும் மன்னன் மீது அதிருப்தியும் கோபமும் அடைகின்றனர்.

தங்கை தேவம்மாவும் மைத்துனன் சென்ன பசவனும் தனக்கு எதிராக கலகம் செய்யத் துணிவதாகக் கருதி வீரராஜன் தங்கையை அரன்மணைக்குள் சிறை வைக்கிறான். மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கும் சென்ன பசவன் தகுந்த நேரம் பார்த்து வீரராஜனை பதவியிலிருந்து இறக்கிவிட்டு தன் மனைவியை ராணியாக்க முயற்சிகளை எடுக்கிறான். அதற்காக தொடர்ச்சியாக பெங்களூரை ஆளும் ஆங்கில அரசிற்கு கடிதங்களை எழுதுகிறான்.

சிக்கவீர ராஜனின் பெரியப்பாவும் அவர் மகனும் குடகின் நிலை சரியில்லை எனவும் மக்கள் துயரடைகின்றனர் எனவும் சென்ன வீரன் மூலம் கேள்விப்பட்டு குடகிற்கு  வருகின்றனர். அங்கிருக்கும் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசி மன்னனை பதவியிலிருந்து இறக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

மன்னனின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உள்ளூர் இளைஞர்கள் காவிரி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் கீழ் அணி திரள்கின்றனர்.

வீரராஜனின் தகப்பன் லிங்கராஜன் தாசி குலப் பெண்ணான பாப்பாவை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்துவிட்டு குழந்தை பிறந்ததும் அரண்மனையை விட்டு விரட்டிவிடுகிறான். அந்தக் குழந்தையின் பிஞ்சுக் காலை வளைத்து அரண்மனை சேவகர்களிடம் வளரவிடுகிறான். பல வருடங்கள் கழித்து பாப்பா பகவதியாகத் திரும்பி வருகிறாள். அரசனை வீழ்த்தி அவளின் குழந்தையை அரசனாக்க முயற்சிகளை எடுக்கிறாள்.

வீரராஜனின் தன் உண்மை ஊழியனான நொண்டி பசவனை மந்தியாக்குகிறார். இது மற்ற முக்கிய மந்திரிகளான போபண்ணாவிற்கும் லக்‌ஷ்மி நாரயணய்யாவிற்கும் பிடிக்காமல் போகிறது. அரசன் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மிக மோசமான நிலையை அடைகின்றன.

இப்படியாக எல்லாத் திசைகளில் இருந்தும் சிக்கவீர ராஜனுக்கு எதிரிகள் முளைக்கின்றனர். இதுபோன்ற சூழல்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவையும் வீழ்த்திய வெள்ளை அரசு குடகையும் மிக எளிதாக தன்னுடையதாக்கிக் கொள்கிறது. மைசூரைப் போல குடகும் வெள்ளையரிடம் போய்விடக்கூடாதென குடகின் மந்திரிகள் ராணி கெளரம்மாவை அரியணையில் ஏற்றும் முயற்சிகளும் பலிக்காமல் குடகு ஆங்கிலேயர் வசமே போகிறது.

சிக்கவீர ராஜன் தன் தங்கையின் பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற பிறகு புத்தி பேதலித்து படுக்கையில் வீழ்கிறான். அப்போதிலிருந்து கடைசியாகப் பசவன் அவன் கையாலே கொல்லப்படுவது வரை நடைபெறும் சம்பவங்கள் யாவும் பரபரப்பும் வேகமும் மிகுந்தவை. இந்தப் பகுதியை வாசித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு Downfall திரைப்படம் நினைவிற்கு வந்தது. ஹிட்லரின் கடைசிப் பத்து நாட்களை பேசும் மிகக் கச்சிதமான ஜெர்மானியப் படமது. ஹிட்லர் மெல்ல மெல்ல சுற்றி வளைக்கப்படும் சம்பவங்களும் நிகழ்வுகளும் எத்தனை சுவாரசியமும் திருப்பமும் வாய்ந்ததோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் சிக்க வீர ராஜேந்திரன் நாவலின் கடைசிப் பக்கங்கள் இருந்தன.

ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் சிக்க வீர ராஜேந்திரனுக்கும் இடைய நிகழும் கடிதப் போர் நாவலில் மிக முக்கியமான பகுதி. நாசூக்காகவும் மிக விவரமாகவும் வெள்ளையர்கள் குறு நில மன்னர்களுக்கு கொடுத்த அழுத்தம் கடிதங்களில் மிகத் துல்லியமாய் வெளிப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் தங்கள் விரோதத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் ஒரு குழுவினர் மடிகேரிக்கு வந்து விருந்தினர்களாகத் தங்கி விட்டுப் போவார்கள். ஆங்கிலப் பெண்களுக்கு இந்திய அணிகலன்கள் மீது பெரும் விருப்பம் இருந்தது. ராஜ பரம்பரை நகைகளை சன்மானம் பெறுவதற்காக மன்னர்களுக்கு முன் நடனமாடவும் உறவு கொள்ளவும் தயாராக இருந்தனர். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் நிகழ்வுகளும் நடந்தேறியிருப்பதை சம்பவங்களாக ஆசிரியர் விவரித்திருப்பார்.
0

நாவலில் நொண்டிப் பசவன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறுவயதில் சக விளையாட்டுத் தோழர்கள் அவனை வெறுத்து ஒதுக்க வீரராஜன் மட்டும் பசவனைத் தன்னோடு சேர்த்துக் கொள்வான். அந்த நன்றியும் விசுவாசமும் பசவனுக்கு சாகும் வரை தொடரும். வீரராஜன் சிறைபிடிக்கப்படும்போது தன்னுடைய அவசர மூடத்தனத்தால் பசவன்  தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக தவறாகப் புரிந்து கொண்டு அவனை சுட்டு வீழ்த்தி விடுவான். ஆனாலும் அரசனுக்கு ஏதும் நேரக்கூடாது என்ற எண்ணத்தோடே பசவன் மடிந்து போவான். பசவனுக்கு  அவன் பிறப்புப் பின்னணி தெரியாமலே போய்விடும். நாய்களையும் மிருகங்களையும் வளர்ப்பவன். பிறப்பால் நாவிதன் என்றெல்லாம் மற்ற மந்திரிமார்களால் இகழப்பட்டவன், அரசன் லிங்கராஜனின் மகன் தான் என்பது அவன் இறப்பிற்குப் பிறகே தெரியவரும். 

வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு புறமும் தியாகமும் நன்றிவிசுவாசமும் ஒருபுறமுமாய் ஏராளமான கதாபாத்திரங்கள் நாவல் நெடுகப் பயணித்திருக்கின்றன. தொட்டவீர ராஜனின் நண்பரான கிழவர் உத்தய்ய தக்கன், சென்ன பசவனுக்காக உயிரை விடும் சோமன், ராணி கெளரம்மாஜி, தீட்சிதர், மந்திரிகள் போபண்ணா, லக்‌ஷ்மி நாரயணய்யா, உத்தய்யன், தொட்டவ்வா என விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் உதாரணமாய் பல கதாபாத்திரங்கள் மேன்மையாய் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ராணி கெளரம்மாஜிக்கு அரசாள எல்லாத் தகுதியுமிருந்தும் கணவனை பதவியிலிருந்து இறக்கிவிட்டு அந்த இடத்தில் அமர மாட்டேன் என தீர்க்கமாய் மறுத்துவிடுகிறாள். ராஜ வாழ்க்கை போனபின்பும் காசியில் தொடர்ச்சியாய் நோன்பிருந்து பூஜைகள் செய்து உயிரை விடுகிறாள். கெளரம்மாஜி குடகின் மனசாட்சியாக குடகர்களின் மேன்மை குணங்களின் ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

ஆங்கிலேயர் குடகை கைப்பற்றிய பிறகு பனாரஸில் சில காலம் வசிக்கும் வீரராஜன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதன் மூலம் வெள்ளையரின் நன்மதிப்பை சம்பாதித்து மகளை ராணியாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். அதுவும் தோல்வியடையவே இங்கிலாந்திற்கு செல்கிறான். அங்கு ராஜனின் மகள் ஒரு ஆங்கில அதிகாரியை திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்குப் பிறந்த பெண் இந்தியா வந்து இந்த நாவலை எழுதும் ஆசிரியரிடம் பின் கதைகளைக் கூறுவதாக நாவல் நிறைவடைகிறது.


0




Tuesday, December 9, 2014

சிக்கவீர ராஜேந்திரன் - 1

சிக்கவீர ராஜேந்திரனை இவ்வளவு தாமதமாக வாசித்ததை எண்ணி வருந்தினேன். குடகுப் பகுதிக்கு செல்வதற்கு முன்னால் இந்நாவலை வாசித்திருந்தால் அந்தப் பிரதேசங்களை இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும். மடிகேரியில் எஞ்சியிருக்கும் நினைவுச் சின்னங்களையும் தேடிப் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். போகட்டும். அடுத்த பயணத்திலாவது குடகுப் பகுதியை முழுமையாய் பார்க்க வேண்டும். நாவலில் குறிப்பிட்டிருக்கும் இடங்களை குறிப்பாய் மடிகேரி, நால்கு நாடு மற்றும் அப்பங்குள அரண்மனைகளை பார்த்து வர வேண்டும். 

சிக்கவீர ராஜேந்திரன் நாவல் ஸ்ரீநிவாச என்கிற மாஸ்தி வெங்கடேச அய்யங்காரால் 1956 இல் கன்னடத்தில் எழுதப்பட்டது. வரலாற்றுப் புனைவு என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இந்நாவலைச் சொல்லலாம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் நான்லீனியர், மெட்டா போன்ற உத்திகளை மிக அசாதரணமாக நாவலில் கையாண்டிருக்கிறார். நாவலின் வடிவமும், எழுதப்பட்ட விதமும், மிகச் சாதாரணமான பேச்சு மொழியும், வாசிப்பின்பத்தின் உச்சிக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன. நாவலின் சரளமான தமிழாக்கம் ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கிறோம் என்கிற கவனமே ஏற்படாதவாறு அத்தனை நேர்த்தியாக இருந்தது. 
ஹேமா ஆனந்ததீர்த்தன் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 

ஹேமா ஆனந்ததீர்த்தன் பலவருடங்களுக்கு முன்பு மாத நாவல்களை மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு சில நாவல்களை வாசித்த நினைவும் இருக்கிறது. சிக்கவீர ராஜேந்திரனை மொழிபெயர்த்ததின் மூலம் அவரின் தமிழிலக்கியப் பங்களிப்பு மிக முக்கியமானதாகிறது.

சிக்கவீர ராஜேந்திரன் நாவலுக்காக மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் ஞானபீட விருதைப் பெற்றார். கன்னடத்தின் ஆஸ்தியாகக் கருதப்படும் மாஸ்தி குறித்து விக்கியில் சில சுவாரசியமான தகவல்களைப் பார்த்தேன். மொத்தம் 123 நூல்களை கன்னடத்திலும் 17 நூல்களை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். தன்னுடைய 95 ஆவது வயதில் பிறந்த தினத்தன்றே இயற்கை எய்தியிருக்கிறார் (ஜூன் 06,1891 – ஜூன் 06 1986) புதுக்கன்னடச் சிறுகதை வடிவம் மாஸ்தி வெங்கடேச அய்யங்காருக்காகவே காத்துக் கொண்டிருந்ததாக விமர்சகர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.

குடகின் கடைசிக் குறுநில மன்னனான சிக்கவீர ராஜேந்திரனின் வாழ்வைத் (பெரும்பாலும் உண்மைச் சம்பவங்கள்) தொகுத்து எழுதப்பட்ட நாவல்தான் இது. இந்நாவலில் ஆசிரியரும் கதாபாத்திரமாக வருகிறார். சிக்கவீர ராஜேந்திரனின் மகளைச் சந்தித்தது, அவள் மூலமாய் ஆவணங்களைப் பெற்றது, மொத்தமாய் திரட்டிய தகவல்களைக் கொண்டு இதை ஒரு நாவலாய் எழுத ஆரம்பிப்பது என நாவல் எழுதப்பட்ட கதையை நாவலுக்கு உள்ளேயே கொண்டுவந்திருக்கிறார். மேலும் கதை சொல்லப்படும் முறை மரபான ஆரம்பம் முதல் இறுதி வரையாய் இல்லாது, பிரச்சினைகள் துவங்கும் காலகட்டத்தில் இருந்து ஆரம்பித்து இடை இடையே மூன்று தலைமுறை கதையைச் சொல்லி, பல புதிர் சுவாரசியங்களை உள்நுழைத்து, பின்பு அவை ஒவ்வொன்றாய் அவிழ்வதாய் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வடிவம் சம காலத்திலும் புத்தம் புது வடிவமாகப் போற்றப்படுவது. இதை அறுபது வருடங்களுக்கு முன்பு மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் பயன்படுத்தியிருப்பது என்னை வியப்பிலாழ்த்தியது.

தென் கர்நாடகத்தின் மிகச் செழிப்பான பகுதியான குடகு காவிரியின் பிறப்பிடம். காவிரி மட்டுமில்லாது பத்திற்கும் மேற்பட்ட ஏராளமான சிற்றாறுகள் பாயும் மலைப் பகுதி. இங்கு வசிப்பவர்கள் குடகர்கள் எனப்பட்டனர். ஆனாலும் எந்த ஒரு காலத்திலும் இப்பகுதியை குடகர்கள் அரசாண்டதாக வரலாறு கிடையாது. குடகர்கள் அரச பதவியை வலிந்தே ஏற்காமல் இருந்ததாக நாவலில் வரும் மந்திரியான போபண்ணா கதாபாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மிக செழிப்பான பகுதியான குடகு, பக்கத்து அரசுகளான மலையாளம், மைசூர், மங்களூர் போன்றவற்றின் பொறாமையைப் பெற்றிருந்ததாலும் மலைக் காடென்பதால் குடகை வெற்றிக் கொள்வது சிரமமாக இருந்தது. கதம்ப, கங்க, சோழ, சாளுக்கிய, ஹேய்சால வம்சங்கள் ஆண்டபிறகு கேரி அரச வம்சம் இருநூறு வருடங்கள் குடகை ஆட்சி புரிந்தது. கடைசியாக உடையார்களின் அரசாட்சி இருந்தது. அதன் கடைசி மன்னன் சிக்கவீர ராஜேந்திரன் குடகுப் பகுதி ஆங்கிலேயர் வசம் போக காரணமாக இருந்தான். அந்த சம்பவங்களைத்தான் இந்நாவல் பேசுகிறது. 

வரலாற்று நாவல்கள் இதுவரை நம் மீது படிய வைத்திருக்கும் அத்தனை மரபு மிகைகளையும் இந்நாவல் அடித்து நொறுக்கியிருக்கிறது. சதா போகத்தில் திளைக்கும் முரட்டுக் குடிகார அரசனை பார்க்க மிக நெருக்கமாக இருந்தது. நம்முடைய பெரும்பாலான வரலாற்று நாவல்கள் மிகையான ஜோடனைகள் நிறைந்தவை. அதிகாரச் சார்பு கொண்டவை. மன்னனை வீரதீரபராக்கிரம் பொருந்திய சாகச நாயகனாக மட்டுமே நமக்குச் சொல்லிக் கொண்டிருந்தவை. தமிழில் இந்தப் போக்கு அலுப்பூட்டும் அளவிற்கு எழுதப்பட்டு சமகாலத்தில் மட்டுமல்லாது என்றென்றைக்கும் போற்றப்படும் தமிழ் அடையாளங்களாக உருவாக்கப்பட்டன.  

பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும் நாவல்கள் மட்டுமே இந்த அயற்சியூட்டும் வரலாற்று நாவல் பொய்மைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றின. ஆனாலும் இவ்விரண்டு நாவல்களும் சிக்கவீர ராஜேந்திரன் நாவல் தந்த களிப்பைத் தரவில்லை. வரலாற்றுப் புனைவை இப்படி நேரடியான மக்கள் மொழியில் எழுத முடியும் அதிலேயும் மன்னன் என்பவன் மக்களில் ஒருவன் தான். அவனும் இன்னொரு மனிதனைப் போலவேதான் இருப்பான் - பேசுவான் - நடந்து கொள்வான். சதா கெட்டவார்த்தைகளை அள்ளி வீசுவான் என்பதெல்லாம் நமக்குப்/ எனக்குப் புதிதுதான். 

தொட்ட வீர ராஜேந்திரன் இந்த வம்சத்தின் மிகச் சிறந்த அரசனாகப் போற்றப்பட்டான். குடகு மக்களின் விருப்பத்தையும் அன்பையும் பெற்ற ஒரே அரசனாக தொட்டவீர ராஜேந்திரனே கருதப்பட்டான். சூழ்ச்சியால் அவனிற்குப் பிறகு ஆட்சிக்கு வரும் தம்பி லிங்கராஜன் மற்றும் லிங்கராஜனின் மகனாகிய சிக்கவீர ராஜேந்திரன் ஆகிய இம்மூன்று தலைமுறைக் காலத்தின் வரலாறு சுருக்கமாகவும் சிக்கவீர ராஜேந்திரனின் வீழ்ச்சி குறித்து விலாவரியாகவும் நாவலில் பேசப்படுகிறது.

வீழும் காலம் என்பது அதிகார வாழ்வில் மிக முக்கியமான பகுதி. ஒரு வம்சம் வீழ்ச்சியடையும்போது மக்கள் உடனடியாய் அந்த வீழ்ச்சியின் பின்புலத்தை அறிந்து கொள்ள ஆர்வமடைவார்கள். அதிகாரம் தன் தரைத்தளத்திற்குக் கீழே சாமான்யர்களால் நெருங்க முடியாத ஏராளமான ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. இரகசியங்களின் மீதான விருப்பம் நம்மை கதைகளை எழுதவும் வாசிக்கவும் தூண்டுகிறது. அப்படித்தான் பலப்பல வரலாற்றுப் புனைவுகள் கதைகளாக எழுதப்பட்டன. மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் இன்னொரு நாவலான ”சென்னப்பசவ நாயக” நாவலும் ஷிமோகா பகுதியின் கடைசி நாயக்க மன்னின் வீழ்ச்சியைத்தான் பேசுகிறது. இந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.கண்டிப்பாக சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். மாஸ்தி தன் சிறுகதைகளுக்காகத்தான் அதிகம் பேசப்பட்டார்.

-    
-  மேலும்


Featured Post

test

 test