Sunday, February 18, 2018

Dance Dance Dance - Haruki Murakami


ஹாருகி முரகாமியின் நாவலான  Dance Dance Dance ஐ ஒலி வடிவில் கேட்டு முடித்தேன். ஒலி வடிவம் எனக்கு மிகப் பழகிய ஒன்றுதான். பதின்மத்திலிருந்தே ஓஷோ பேச்சுக்களை கேசட்டில் திரும்பத் திரும்பக் கேட்டுத் தேய்த்த அனுபவம் இருக்கிறது என்பதால் ஒலி வடிவம் எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட. ஆனால் நாவல்களை ஒலி வடிவில் இதுவரை முழுமையாகக் கேட்டதில்லை. சென்ற வருடம் The Girl with the Dragon Tattoo நாவலைக் கேட்க ஆரம்பித்து, அலுப்படைந்து  பாதியிலேயே நிறுத்தினேன். அதற்குப் பிறகு ஒலி வடிவ நாவல்களை முயற்சிக்கவில்லை. இந்த வருட முயற்சியில் வெற்றி. பதிமூன்று மணி நேர  Dance Dance Dance ஐ மிகுந்த ஆர்வத்துடன் கேட்டேன். இதில் முக்கிய பங்கு இந்நூலை வாசித்த குரல் கலைஞரான Rupert Degas க்கு உரித்தானது. கேட்பதற்கு மிகக் கச்சிதமான குரல் இவருடையது. குரல்களின் வித்தியாசங்கள் வழியாய் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிக்காட்டிய விதமும்  அபாரம். மிகவும் ஒன்றிப்போய் கேட்டேன்.

டான்ஸ் டான்ஸ் டான்ஸ் முரகாமியின் ஆறாவது நாவல். மூன்றாம் நாவலான A Wild Sheep Chase ன் தொடர்ச்சி. இதிலேயும் ஷீப் மேன் எனப்படும் புனைவுக் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. ஒப்பீட்டளவில் எனக்கு Wild Sheep Chase நாவலே பிடித்திருந்தது. டேன்ஸ் நாவலில் மிக அலுப்பூட்டும் அளவிற்கான ஒரே விவரணைகள் திரும்பத் திரும்ப வருகின்றன. குறிப்பாக இளம்பெண் யூக்கிக்கும் கதை சொல்லிக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் அவ்வளவு அலுப்பூட்டின.

கதை சொல்லி நாவல் முழுக்க குடித்துக் கொண்டும் தின்று கொண்டுமிருக்கிறார். அவரின் மிகத் திட்டமிடப்பட்ட துல்லியமான நாட்கள் சில இடங்களில் அபார உணர்வையும் சில இடங்களில் அலுப்பையும் தருகின்றது. முதல் அத்தியாயங்களில் வந்து கொண்டே இருக்கும்  டால்பின் ஹோட்டல்  குறித்த மிக நீண்ட விவரணைகள் எரிச்சலை வர வழைக்கின்றன. யாராவது கதை சொல்லியுடன் தின்றும் குடித்தும் கலவியும் கொள்கிறார்கள். அதைக் குறித்தும் மிக நீளமான வியாசங்கள். அடேய் முரகாமி போதும்டா என்கிற அளவிற்கு சில பகுதிகள் அலுப்பூட்டின. நாவலின் மிக சுவாரசியமான விஷயங்களாக நான் கருதியவை.

1. கதாபாத்திரங்களை இணைத்த முறை. வெவ்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களை ஒரே இழையின் கீழ் கொண்டு வந்தது. உதாரணம் : கீக்கி - மே - ஜூன் இவர்களை இணைக்கும் சங்கிலியாக கோதண்டா.

2. கோதண்டாவிற்கும் யூக்கிக்கும் இடையே உள்ள தொடர்பு.

3. யூக்கியின் குடும்பம் குறித்தான சித்தரிப்பில் இருந்த புதுத் தன்மை . எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும் என நம்பும் எழுத்தாளர் அப்பா, வேலை என்று வந்து வந்துவிட்டால் சகலத்தையும் மறந்து போகும் புகைப்பட நிபுணரான அம்மா.
இவர்களுக்கிடையே அல்லாடி தனிமையில் விடப்படும் பதிமூன்று வயது யூக்கி.  மேலதிகமாய் அப்பாவின் நண்பன். அம்மாவின் ஒற்றைக்கை நண்பன்.

4. ஹவாய் குறித்தான விவரணைகள் - அங்கு நிகழும் விநோத சம்பவம்.நிகழ்ந்த / நிகழவிருக்கும்  மரணங்களை எலும்புக் கூடுகளோடு இணைத்திருப்பது.

5. பால்ய நண்பர்களான கதைசொல்லியும் கோதண்டாவும் முதலில் சந்திக்கும் அந்த இரவு. இருவரும்  சகல மதுவகைகளையும்  குடித்துத் தீர்க்கிறார்கள். எல்லாம் குடித்து ஓய்ந்த பிறகு கோதண்டா விலை மாதுக்களை அழைக்கிறான். கதைசொல்லி மே வோடும் கோதண்டா உடன் வரும் இன்னொரு பெண்ணுடனும் கலவி கொள்கிறார்கள். இந்த சம்பவங்களின் விவரணைகள் துல்லியத்தின் உச்சம்.

6. நடிகனான கோதண்டாவின் வாழ்க்கை. அவனுக்கும் அவன் மனைவிக்குமான விநோத உறவு.

7. மறைந்து போதல் குறித்தான கருத்தாக்கம். உடல்கள் சுவரின் வழியாய் இன்னொரு உலகில் நுழையும் மாயத்தன்மை.

8. நாவலின் புத்தம் புதுத் தன்மை. இந்நாவல் வெளியான வருடம் 1988. முப்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவலில் இருந்த சமகாலத் தன்மை வியப்பூட்டியது. ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஆழமான கற்பனையூக்கம் முரகாமியிடம் மிகுந்திருக்கிறது எனவேதான் அவர் காலம் கடந்தும் அப்படியே நிற்கிறார்.


முரகாமியின் பிரதானக் கதாபாத்திரங்கள் அபாரமான இசை ஞானம் கொண்டவை. டான்ஸ் கதைசொல்லியும் தொடர்ச்சியாய் அறுபதுகளின் ராக் அண்ட் ரோல் இசையைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான். நாவலைக் கேட்டுக் கொண்டிருந்த நாட்களில் நானும் பீச் பாய்ஸ் குழுவினரின் பாடல்களை யூடியூபில் தேடிப் பார்த்தேன்.  பீட்டில்ஸ் குழுவினரின் இசை எனக்கு பரிச்சயமானதுதான் என்றாலும் பீச் பாய்ஸை மிகவும் பிடித்திருந்தது.

ஒப்பீட்டளவில் நார்வேஜியன் வுட், காஃபா ஆன் த ஷோர், வைண்ட் அப் பேர்ட் உயரங்களுக்கு இந்நாவல் இல்லை. எனவே வாசிக்காமல் வைத்திருக்கும் முரகாமியின் முதல் இரண்டு நாவல்களை Hear the Wind Sing மற்றும் Pinball ஐ தவிர்த்துவிட்டு After Dark ஐ எடுத்திருக்கிறேன்.

ஆனால் முரகாமியின் நாவல்களை வாசிக்கும் நாள்களில் ஒரு வித ஒழுங்கமைதி நமக்குள்ளேயும் வந்து விழும். அந்த அமைதியை இந்த நாவலும் தந்தது. ஓஷோ எப்போதும் விழிப்புணர்வில் இருக்க வேண்டியதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பார். முரகாமியின் நாவல்களும் அதைத்தான் செய்கின்றன. ஆழமும் அகலமுமான விழிப்புணர்வு. தன்னைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கவனிப்பது. இந்தத் தன்மை இந்த நாவலிலும் இருக்கிறது. A wide beautiful awareness of being.




No comments:

Featured Post

test

 test