Thursday, February 22, 2018

துமாரி சுலு


வித்யா பாலனைப் பிடிக்கும் என்றாலும்  ’நெகிழவைக்கும்பெண்ணிய’  வகைமைத் திரைப்படமோ என அஞ்சி ’துமாரி சுலு’ வைப் பார்க்காமல் விட்டேன். சோம்பலான ஒரு மதியப்பொழுதில்  சும்மா பார்த்து வைப்போமே என ஆரம்பித்து முழுமையாய் ஒன்றிப்போனேன். படம் இப்படிக் குறிப்பு எழுதும் அளவிற்குப் பிடித்துப் போனது.

துமாரி சுலு வில் குறிப்பிட்டே ஆகவேண்டிய முதல் விஷயம், இது பெண்ணை மய்யமாகக் கொண்ட படமென்றாலும் எந்த ஆணையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லை. குறிப்பாகப் பிரதான பெண் கதாபாத்திரத்தின் கணவரை உலகின் மிக மோசமான அயோக்கியனாய் சித்தரிக்கவில்லை. இந்த ஆசுவாசம் மட்டுமல்லாது இந்தப் பிரதான பெண் கதாபாத்திரம் துன்பத்திலும் சோர்விலும் மூழ்கி ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு பல தடைகளைத் தாண்டி குறிப்பாக ஆண்களை மிதித்து மேலெழுந்து நிற்கவில்லை. இந்த இல்லாத தன்மைகளே படத்தின் மிகப்பெரிய பலம்.

மிக இயல்பான, பாவணைகள் குறைவான, எளிமையான, வெள்ளந்தித்தனமும் உஷார்தனமும் சேர்ந்த ஒரு மிடில் க்ளாஸ் புடவை கட்டிய ஆண்ட்டியின் சில சுவாரசியமான நாட்களை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது. வித்யா பாலன் இந்தக் கதாபாத்திரத்தில் அப்படிப் பொருந்திப் போகிறார். சர்வ நிச்சயமாக வேறொரு நடிகையால் இந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்க முடியாது என்பது திட்டவட்டம். சுலு என்கிற சுலோச்சனாவின் கணவராக நடித்திருக்கும் அஷோக் கதாபாத்திரமும் சிறப்பு.

லெமன் ஸ்பூனில் ஆரம்பித்து டிபன் காண்ட்ராக்ட் கிடைக்குமா எனக் கண்கள் மின்னக் கேட்கும் காட்சி வரை மொத்தமும் வித்யாபாலனின் விளையாட்டு. அடித்து ஆடியிருக்கிறார். படத்தின் பல காட்சிகள் கவிதை. குறிப்பாகத் தொலைபேசியில் துமாரி சுலு நிகழ்ச்சியில் பேசும் ஒரு முதியவர், தன் மனைவி பெயரும் சுலோச்சனாதான் அவளுக்கும் உன்னைப் போன்ற குரல் அவளையும் சுலு என்றுதான் அழைப்பேன் எனக் கூறும் இடம் . இது ஒரு தேய்ந்த காட்சிதான். வழக்கமாக இது போன்ற காட்சிகளில் நாயகி குளோஸ்-அப் பில் கண் கலங்குவதாக ஒரு ஷாட்டை வைப்பார்கள். ஆனால் அப்படி  க்ளிஷே வாக மாற இருக்கும் ஒரு காட்சியை தன் இலகுவான வெளிப்பாட்டால்  வித்யா சம நிலைக்குத் திருப்பியிருப்பார்.  இப்படிப் பல காட்சிகள் வித்யாவினால் மெருகூட்டப்பட்டிருக்கும். மகன் திரும்பக் கிடைக்கும் காட்சியில் நொடி நேர மெளனத்திற்குப் பிறகு வெடிக்கும் காட்சியும் அபாரம்.



இறுதிக் காட்சியில் கிடைக்கும் நெகிழ்ச்சியை உருவாக்க வேண்டி மகன் காணாமல் போகும் சம்பவம், சுலுவின் இரட்டை சகோதரிகள் தரும் அழுத்தம், ரேடியா ஜாக்கி வேலையை விடுவது போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த மெனக்கெடல்களையும் தவிர்த்திருந்தால் முழுமையான இயல்பான படமாக வந்திருக்கும். ஆனால் இந்த உருவாக்கப்பட்டவைகள் தரும் உணர்வும் நன்றாகத்தான் இருந்தது.

துமாரி சுலு வின் தமிழ் வடிவத்தில்  ஜோதிகா நடிக்க இருப்பதாக வந்த செய்தியைப் படித்ததிலிருந்து சற்று திக் கென்றுதான் இருக்கிறது.   மகேஷிண்ட ப்ரதிகாரம் தமிழில் வந்த அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் அடுத்த அதிர்ச்சி. எப்படி  பகத் பாசிலுக்கு மாற்றாய் உதயநிதியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லையோ அதற்கு சற்றும் குறையாதது வித்யா இடத்தில் ஜோதிகாவை வைப்பது. இந்த கோராமைகளிலிருந்து பணம் போடும் தயாரிப்பாளர்களாவது எங்களைக் காக்க வேண்டும்.


No comments:

Featured Post

test

 test