Wednesday, August 1, 2007

எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறை



சங்கமித்திரையை குறுகலான டெம்போ அமர்வுகளுக்கிடையில்தான் முதலில் பார்த்தேன்.பேருந்து நிலையத்திலிருந்து லாஸ்பேட் போகும் டெம்போவினுள் குறுகி உட்கார்ந்து போகும் சுகம் சற்று அலாதியானதுதான்.மிக நெருக்கமாய் மனிதர்களுடன் பயணிப்பது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.தொடர்ந்து ஒரே இடத்தில்,ஒரே சம்பவங்கள்,ஒரே மனிதர்களென கடந்து போகும் நாட்கள்
மிகவும் இதமானவை.சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரே மனிதர்களை ஒரே இடத்தில் ஒரே கால அவகாசத்தில் பார்ப்பது சற்று அபூர்வம்தான்.பாண்டிச்சேரியில் இது சாத்தியம்.டெம்போ ஸ்டேண்டில் காலை எட்டு மணிக்கு ராஜா டெம்போவில் நான் உட்பட நான்கு பேர் தினசரி அதே டெம்போவில் உடன் வருவர்.இது ஒரு மாதிரி பழகிவிட்ட சுகம்.வேறெந்த வசதி அந்த சமயத்தில் கிட்டினாலும் அதைத் தவிர்க்கத்தான் தோன்றுகிறது.சங்கமித்திரை அந்த நால்வரில் ஒருவள்.

தமிழ்சினிமாக்களில் நிகழ்வது போலத்தான் தொடர்ந்து ஒரு மாதமாய் அதே டெம்போவில் பயணித்தாலும் சின்னதாய் புன்னகைத்துக் கொள்ளக்கூட இல்லை.அஜந்தா தியேட்டர் சிக்னலில் நான் இறங்கி கொள்வேன்.சங்கமித்ரா லாஸ்பேட் வரை போவாள்.சில்லறை இல்லாத ஒருநாளில் நாளை தருகிரேனென ராஜாவிடம் சொல்லிவிட்டு இறங்கிப் போனேன்.அவள் இறங்குமிடத்திலும் சில்லறை பிரச்சினை எழவே எனக்கும் சேர்த்து காசு கொடுத்திருக்கிறாள்.மறுநாள் அது தெரியவரும்போது புன்னகைத்தாள்.உடனேவெல்லாம் பழகிவிடவில்லை.ஏதோ ஒரு புள்ளியில் இருவருக்குமான தடைகள் இணைந்திருந்தது.சனவரி மாத நேரு பூங்கா மலர் விழாவில் கூட்டத்தில் ஒருத்தியாய் அவளை சந்தித்தபோது அலோ சொல்ல முடிந்தது.இப்படியாய் சின்ன சின்ன சந்திப்புகள்.மெல்ல இருவரும் நட்பானோம்.

ஒருநாள் தொலைபேசினாள் மதியம் கடற்கரைக்கு வர முடியுமா என கேட்டாள். மதிய நேரங்களில் கடற்கரைக்குப் போக எனக்கு மிகவும் பிடிக்கும் ஆளில்லாத அந்த மொட்டை வெயிலில் பூவரச மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருப்பேன்.சிந்தனைகள் இல்லாது நுரைதெறிக்க எழும் அலைகளை பார்த்துக் கொண்டிருப்பது பிடித்தமான ஒன்றாக இருந்தது.

எண்களை சங்கமித்ராவைப்போல் யாராவது ஞாபகம் வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.சில சம்யங்களில் என் தொலைபேசி இலக்கமே எனக்கு மறந்துபோய்விடுகிறது.கூகுள் விக்கிபீடியா என்றெல்லாம் வந்துவிட்டபிறகு மூளையின் தேவை அவசியமில்லாமல் போய்விடுகிறது.அபத்தமாய் சிந்திப்பதற்க்கு பதிலாய் சும்மா இருப்பது சுகமாய்த்தான் இருக்கிறது.இப்போதெல்லாம் மூளை என்கிற வஸ்து நமக்கிருக்கிறதா என யோசித்து சிரித்துக் கொள்வதுண்டு.

சங்கமித்ரா ரகுமானை முதலில் பார்த்தது 1997 ஆகஸ்ட 4 ம்தேதி மதியம் 3 மணிக்கு ரகுமான் சங்கமித்ராவை காதலித்ததாய் சொன்னது 1997 நவம்பர் 4 ம் தேதி இருவரும் ஒன்றாய் பேருந்தில் இரவில் பயணித்தது 1997 டிசம்பர் 30.சங்கமித்ராவை ரகுமான் வீட்டுக்கு நண்பர்களோடு நண்பர்களாய் கூட்டி சென்றது 1998 ஜீலை 3ம் தேதி.ரகுமான் சங்கமித்ராவை முத்தமிட்டது 1998 ஆகஸ்ட் 4 மதியம் 3 மணிக்கு.ரகுமானுக்கு சென்னையில் வேலை கிடைத்த நாள் 1999 மே 28.சங்கமித்ரா ரகுமானைப் பற்றி வீட்டில் சொன்னது 1999 நவம்பர் 23 . சங்கமித்ராவின் அப்பா ஒரு நள்ளிரவில் ரகுமான் வீட்டிற்க்கு போய் அவன் அம்மவை மிரட்டியது 1999 டிசம்பர் 3. கடிதமெழுதி வைத்துவிட்டு சங்கமித்ரா வீட்டை விட்டு வெளியே வந்தது 1999 டிசம்பர் 21 இரவு மணி 11,பேருந்து எதுவும் கிடைக்காமல் லாரி ஒன்று அவளுக்காய் நின்றபோது மணி 12.30 அந்த லாரி போகுமிடம் குமாரபாளையம் எனத் தெரிந்து மகிழ்ந்து குமாரபாளயம் சங்கரி வீட்டிற்க்கு போய் சேர்ந்தது விடியற்காலை 4.30.ஒரு வாரத்திற்க்குப் பிறகு ரகுமான் தொடர்பு கொண்டு பாண்டிச்சேரியில் நண்பன் வேலை செய்யும் நிறுவனத்திற்க்கு அப்ளிகேசன் போடச் சொல்லியிருக்கிறான்.இண்டர்வியூ நடந்தது 2000 சனவரி 7 ம் தேதி. பொங்கல் கழிந்து 16 ம் தேதி வேலையில் சேர்ந்திருக்கிறாள்.

ரகுமான் அம்மாவிற்க்கு இவளை பிடிக்காமல் போனது.நேரடியாக சொல்லாவிட்டாலும் அம்மா உயிரோடு இருக்கும்வரை கல்யாணம் நடக்காதென இருவருக்கும் திட்டவட்டமாய் தெரிந்த நாள் பிப்ரவரி 3 ம் தேதி.அம்மா மனசு மாறும்வரையோ அல்லது இறக்கும் வரையோ காத்திருப்பேன் என இவள் அவனிடம் சொன்னது பிப்ரவரி 5.வாரம் இரண்டு முறை அவனும் இரண்டு முறை இவளுமாய் தொலைபேசிக்கொண்டிருந்ததும் சில மாதங்களிலேயே பறிபோயிற்று நல்ல வாய்ப்பு வந்திருக்கிறதென மலேசியாவிற்க்கு ரகுமான் போனது 2000 ஏப்ரல் 27ம் தேதி.

இரண்டு வருடங்களில் பதினோரு முறை அவன் தொலைபேசியதாயும் அவன் தொடர்பு எண் எதுவும் தரவில்லை எனவும் சொன்னாள்.அவன் அம்மாவை சமீபத்தில் பார்த்ததாகவும் அவள் முன்பை விட ஆரோக்கியமாய் இருப்பதாயும் சொன்னாள்.அடுத்த வருடம் அவன் ஊருக்கு வரும் தகவலும் அவன் அம்மாவின் மூலம்தான் தெரியவந்ததாம்.அந்தரங்கம் தெரிந்து கொண்டபிறகு வெகு நெருக்கமாய் உணர முடிந்தது.எல்லா சனிக்கிழமை மதியங்களிலும் சினிமாவிற்க்கோ கடற்கரைக்கோ சென்றோம் பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போனது.ஆனால் ரமணிசந்திரனிடமிருந்து அவளை விடுவிக்க முடியவில்லை.வேறெந்த புத்தகத்தையும் அவளால் படிக்க முடியவில்லை என சிரித்தபடியே ஒரு நாள் சொன்னாள்.

ஏப்ரல் பதினேழாம் தேதி அவளுக்கும் ஏப்ரல் பதிமூன்றாம் தேதி எனக்கும் பிறந்த நாள் இதென்ன இப்படி இருக்கிறதென் சிரித்தபடி நடுவில் ஒரு நாளை தேர்ந்தெடுத்து 2002 ஆம் ஆண்டின் ஏப்ரல் 15 ம் தேதியை இருவரும் தத்தம் பிறந்த நாளாய் கருதி கொண்டாடினோம்.அன்றுதான் சங்கமித்ராவின் அறைக்கு முதலில் போனேன்.பேச்சிலர் ஆணின் அறைக்கும் பெண்ணின் அறைக்கும் பெரிதாய் வித்தியாசம் ஒன்றுமில்லை.என்ன..சிகெரெட் நாற்றமில்லை அவ்வளவுதான்.இருப்பினும் குறுகலான அந்த அறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.எப் எம் ஓடிக்கொண்டிருக்க பேசியபடியே சமைத்தாள்.எப்போது பேசினாலும் நாட்கள் தேதிகளை துல்லியமாய் குறிப்பிட்டு பேசுவது அவள் வழக்கம்.இதெப்படி முடிகிறது என என் கேள்வியை சின்னதாய் ஒரு புன்னகையின் மூலம் தவிர்த்து பழக்கமாயிடிச்சி என்றாள்.
சங்கமித்ராவின் அறைத்தோழி பூங்கொடிக்கு 30 வயதிற்க்கு மேல் இருக்கும்.திருமணமாகி விவாகரத்தும் ஆகி விட்டதென பிறிதொரு சந்தர்ப்பத்தில் சங்கமித்ரா சொன்னாள் அதுவும் நான் வலிந்து கேட்டபின்பே.

ஒரு வருடம் நீடித்தது இந்த நட்பு. மீண்டும் என் மாறுதலின் நிமித்தமாய் சென்னைக்குப் போய்விட்டேன்.ஈஸிஆர் ரோடில் 4 மணிநேரத்தில் வந்து பார்க்கும் தொலைவுதான் என்றாலும் ஏனோ அவளை மீண்டும் சந்திக்க தோணவில்லை எனது சோம்பலை நேரமில்லை என்ற சமாளிப்புகளுடன் அவளிடம் தொலைபேசும்போது சொல்வேன்.ஒரு நள்ளிரவில் ஏனோ எனக்கு பிடித்தவர்கள் வெகு சீக்கிரத்தில் என்னை விட்டு விலகிப்போய்விடுகிறார்கள் என சொல்லியபடி தொலைபேசியை வைத்தாள்.மீதமிருந்த இரவை அவளின் துயரம் மிகுந்த சொற்கள் என்னை ஆக்ரமித்து தூங்கவிடாமல் செய்தது.

ஒருவேளை தலைக்குனிந்த, ஓரக்கண்ணால் பார்க்கும் வழக்கம் கொண்ட, எல்லாவற்றுக்கு மறுத்தும் தனியான சந்தர்ப்பங்களில் மறுத்தைவிட அதிக துணிவாய் விழைந்தும், கிறக்கமாய் பேசும், பொய் சொல்லும், அடிக்கடி துப்பட்டாவையோ, புடவையின் மாராப்பையோ அட்ஜஸ்ட் செய்தபடி பேசும் ஏனைய பெண்களில் ஒருத்தியாய் அவள் இல்லாதிருந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.ஏனோ தெளிவான பெண்களின் மேல் சராசரி ஆணிற்க்கு இருக்கும் பயம் எனக்கப்போது இருந்ததும் அவளை பார்ப்பதை தவிர்த்ததிற்க்கு காரணமாய் இருந்திருக்ககூடும்.

சரியாய் ஒரு வருடம் கழித்து அவளை பார்க்க போயிருந்தேன் அதே அலுவலகம்தான் ஆனால் வீடு மாறியிருந்தாள்.சாரத்தில் ஒரு அடுக்குமாடிகுடியிருப்பில் அவள் வீட்டிற்க்கு சென்றபோது மகிழ்ந்துபோனாள்.வீடு சுத்தமாய் இருந்தது.மிகுந்த ஆவலுடன் திருமணமாகி விட்டதா என கேட்டேன் அவள் ரகுமானுக்கு ஆகிவிட்டது என்றாள்.என்னிடம் சொல்ல வார்த்தைகள் எதுவும் வரவில்லை. 2003 பிபரவரி பதினாலாம் நாள் இரவு 11.45 க்கு ரகுமான் தொலைபேசியில் அழைத்திருக்கிறான் தன் அம்மாவின் பிடிவாதம் தகர்க்க முடியாத ஒன்றாயிருக்கிறது எனவும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும்,நாம் பிரிந்து விடுவதுதான் சரியென தோன்றூகிறதெனவும் அவளை மறந்து விடச்சொல்லியபடியுமாய்ச் சொல்லித் தொடர்பை துண்டித்திருக்கிறான்.சங்கமித்ராவின் உடல் முழுதும் பற்றி எரிந்திருக்கிறது.கசப்பும் வேதனையும் உள்ளிருந்து மிகுந்தெழுந்து அருவெருப்பில் குமைந்து போயிருக்கிறாள்.ஆனால் அவள் அழவில்லை.குளியலறையின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு எரிச்சல் தீரும் வரை குளித்திருக்கிறாள்.பின் சரியாய் துவட்டப்படாத தலையோடு இரவு 1.35 க்கு தூங்கி கொண்டிருந்த பூங்கொடியை உலுக்கி எழுப்பி அவள் உதடுகளில் வன்மமாய் முத்தமிட்டதாய் சொன்னாள்.

28 comments:

த.அகிலன் said...

வந்தேன் வாசித்தேன் போகிறேன் ஒரு பிரமிப்பின் புன்னகையோடு

கதிரவன் said...

தனிமை / நிராகரிப்பின் வலியை நன்றாக உணர வைத்திருக்கின்றீர்கள்.

Anonymous said...

அய்யனாரே, கதை செவ்விளனி, கடைசி வரி ஒரே கசப்பு...

லொடுக்கு said...

இப்படி எழுதுற அய்யனார் எனக்கு புடிச்சிருக்கு. :)

அருமை!

Jazeela said...

புனைவு அருமை.

என்னை பொருத்தவரை பெண்கள் ஓர்மி. அதனால் கருப்பொருள் பிடிக்கவில்லை :-(

Ayyanar Viswanath said...

அகிலன் மிக்க நன்றி

நன்றி கதிர்

திகிலன் :)

Ayyanar Viswanath said...

லொடுக்கு உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி :)

நன்றி ஜெஸிலா ..

Anonymous said...

ஹேய் அய்ஸ், ரொம்ப ஜோருப்பா கதை, ரொம்ப BORE அந்த கடைசி கேவலமான Touch....
வாழ்த்துக்கள்.

Anonymous said...

wow.. superb writing da..
even the style is somewhat different and very beautiful
i feel your way of storytelling is for more better than the poems(it's my opinion since it was very difficult to understand your poems)

good keep it up

Ramesh V

கோபிநாத் said...

அய்ஸ் கதை நல்லா இருக்கு...ஆனா முடிவு தான் கொஞ்சம்.....

லக்ஷ்மி said...

//ஆனால் ரமணிசந்திரனிடமிருந்து அவளை விடுவிக்க முடியவில்லை.//
//ஏனோ தெளிவான பெண்களின் மேல் சராசரி ஆணிற்க்கு இருக்கும் பயம் எனக்கப்போது இருந்ததும் அவளை பார்ப்பதை // இரண்டும் எங்கயோ கொஞ்சம் இடிக்குது. மத்தபடி புனைவு ரொம்பவே அருமை.
//அம்மா மனசு மாறும்வரையோ அல்லது இறக்கும் வரையோ காத்திருப்பேன் என இவள் அவனிடம் சொன்னது பிப்ரவரி 5// இந்த வரிய படிச்சதுமே முடிவு தெரிஞ்சுடுச்சு... ஹ்ம்ம்.....

Anonymous said...

தலைவா, இனிக்க இனிக்க பலகாரம் தந்து சாப்பிட வச்சிட்டு கடைசியில வாந்தி எடுக்க வச்சிட்டியே

Anonymous said...

அய்யனார் கதை சொல்லிய விதம் அபாரம் ... ஆனால் FINAL TWIST மிக கீழ்த்தரமாகத்தான் இருக்க வேண்டுமென கட்டாயமில்லை
நல்லவிதமாகவும் TWIST வைத்து ரசிக்க செய்யலாம்.

Unknown said...

\\ஏனோ தெளிவான பெண்களின் மேல் சராசரி ஆணிற்க்கு இருக்கும் பயம் //

உங்களுக்கு மட்டுமல்ல,எல்லா ஆண்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். சங்கமித்திரையின் ஒட்டு மொத்த வலியை அந்தக் கடைசி வரியில் மிகச் சிறப்பாக உணர்த்தியிருக்கிறீர்கள்.

இலவசக்கொத்தனார் said...

நல்ல கதை சிலர் சொல்வது போல் இல்லாமல் கடைசி வரி நன்றாக வந்திருப்பதாகவே நினைக்கிறேன். கொஞ்சம் எடிட் செய்து இருக்கலாமோ?

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அய்யனார், பொதுவாகவே உங்களின் இதமான எழுத்து பிடித்திருக்கிறது. கதை சொல்லும் திறனும் அருமையாக இருக்கிறது. இக்கதையும் அப்படியே. கடைசி வரியின் திருப்பமும் அருமை. அது பலருக்கு உவப்பானதாக இல்லை என்று தெரிகிறது. எனக்கு இயல்பானதாகவே தெரிகிறது. உங்களின் துணிவுக்கு வாழ்த்துக்கள். எண்களை அதிகம் நினைவில் கொள்பவள் என்று நிறுத்துவதற்காக எழுதியதன் நீளம் மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம்.

Anonymous said...

என்ன சொல்லி ஆரம்பிப்பது? பொத்தாம் பொதுவா ரொம்ப நல்லாருக்குய்யான்னு சொல்லி முடிச்சிடட்டுமா?? மனசுவரலை.

//பின் சரியாய் துவட்டப்படாத தலையோடு இரவு 1.35 க்கு தூங்கி கொண்டிருந்த பூங்கொடியை உலுக்கி எழுப்பி அவள் உதடுகளில் வன்மாய் முத்தமிட்டதாய் சொன்னாள். //

வன்மமாய்னு போடுங்க. கவனிக்கலையா?

சிலர் நல்லாருக்குன்னும் சொல்லுவாங்க. மோசம்னும் சில பேரு சொல்லுவாங்க இந்த வரிகளை.

நீங்க ஒருவேளை இந்த பதிவைப்பற்றி ரொம்ப (நேரம்) சிந்தித்திருந்தீர்களோ? ஒருவேளை அதனால்தானோ என்னவோ அந்த கடைசி வரிகளில் அவ்வளவு வீச்சோ? ஒரு வேளை நீங்கள் சங்கமித்திரயை உங்களிலோ, உங்களிற்கு நெருக்கமானவர்களிலோ உணரலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த வரிகள் என் புரிதலில் தவறில்லை என்ற பதிலை நீங்கள் சொல்ல நேரிடலாம். அஃப்கோர்ஸ் அதில் தவறேதும் இல்லை.

பாலகுமாரனின் எழுத்துக்களை வெறியாய் படித்த காலம் என்று ஒன்று உண்டு. அவனுடைய பல புத்தகங்களை படித்து அந்த வயதில் மலைத்துப் போய் நின்றதுண்டு. ஆனால், "பயணிகள் கவனிக்கவும்" ல் விதவையை மணக்க வாசெக்டமி செய்து கொண்ட நாயகன், இரும்புக் குதிரைகளில் உன் மூலமா எனக்கொரு குழந்தை வேணும், உன் கூட வாழலைன்னாலும் பரவாயில்லை.. என்று விஸ்வநாதனிடம் Just like that சொல்லி வரும் மகளை பாதுகாப்பாய் அணைத்துக் கூட்டிச் செல்லும் காயத்ரியின் தந்தை என்று சில(பல) கதைகளில், வலிந்து திணிக்கும் தனித்துவத்தை ஒத்துக் கொள்ள மறுக்கும் ஒரு உணர்வு எனக்கு இந்த கடைசி வரிகளில் தோன்றியது.

ரமணிச்சந்திரனும்...., தெளிவான பெண்ணும்.... என்று இரு இடங்களில் சற்றே வேறுபட்டாலும், வெளியில் வீராப்பாய் இருந்தாலும், சட்டென்று மனம் சோர்ந்து உட்கார்ந்திருக்கும் போது குழந்தையாய் எவர் மடியையேனும் தேடும், Submissive மனதிற்கு, எவர் மடியும் கிடைக்காத பட்சத்தில், அந்த sumissiveness ஐ ர.ச கதைகளில் அவ்ர் தேடித் தீர்த்துக் கொள்ளலாம் என்று எனக்குள் நானே சமாதானம் செய்து கொண்டேன்.

ஆனால், இப்படியா வரி வரியா இழைச்சு இழைச்சு எழுதறதுன்னு சண்டைக்கு போகலாமான்னு யோசிக்கற அளவுக்கு இருக்கு இந்த பதிவு.

//ஒருவேளை தலைக்குனிந்த, ஓரக்கண்ணால் பார்க்கும் வழக்கம் கொண்ட, எல்லாவற்றுக்கு மறுத்தும் தனியான சந்தர்ப்பங்களில் மறுத்தைவிட அதிக துணிவாய் விழைந்தும், கிறக்கமாய் பேசும், பொய் சொல்லும், அடிக்கடி துப்பட்டாவையோ, புடவையின் மாராப்பையோ அட்ஜஸ்ட் செய்தபடி பேசும் ஏனைய பெண்களில் ஒருத்தியாய் அவள் இல்லாதிருந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.ஏனோ தெளிவான பெண்களின் மேல் சராசரி ஆணிற்க்கு இருக்கும் பயம் எனக்கப்போது இருந்ததும் அவளை பார்ப்பதை தவிர்த்ததிற்க்கு காரணமாய் இருந்திருக்ககூடும்.//
என்னய்யா கமெண்டை போடுய்யான்னா, ஒரு பதிவே எழுதி வெச்சிருக்கேன்னு நீங்க கேட்கலாம். மேல இருக்கற வரிகளோட பாதிப்பிலிருந்து இன்னும் மீளலைய்யா....
கை வலிக்கற வலிக்க இறுக்கக் குலுக்கினதாய் நினைத்துக் கொள்ளுங்கள்.

செல்வநாயகி said...

அய்யனார்,

உங்களின் நட்சத்திரவாரம் நன்றாக இருந்தது. நல்ல இடுகைகள். சேர்த்துவைத்து நேற்றுத்தான் படித்தேன். பாராட்டுக்கள்.

Ayyanar Viswanath said...

ரசிகன் அனானி ஜி சங்கர் கோபி குமரன் மற்றும் டெல்பின் மேம்

இந்த கதையின் ஜீவனே கடைசி வரியில்தான் இருப்பதாக எனக்குப் படுகிறதுஒரு பெண் தனக்கான எல்லாவற்றையும் துறந்து காதல் என்கிற ஒற்றை நம்பிக்கையை மட்டும் சுமந்தபடி ஒரே ஒரு ஆணை நம்பி (இரவில் லாரியில் பயணிக்கிறாள்)வெளியில் வருகிராள் அவனுக்கான அவளின் காத்திருப்புகளின் முடிவில் ஏற்படும் துக்கம் வெறுப்பு ஆற்றாமை கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தவேண்டும் அந்த செயல் வழமையாய் கட்டமைக்கப்பட்ட ஒன்றினை புனிதமென்று பொது மக்காளால் கொண்டாடப்படும் ஒன்றை சிதைப்பதாய் இருக்கவேண்டும் ஏற்கனவே ஒரு ஆணை தவிர்த்து விட்டு வந்த பூங்கொடி யை முத்தமிடுவது மூலம் அவள் வன்மம் சரியாகவே வெளிப்படுகிறது என்பது என் கருத்து.உங்களின் பகிர்தல்களுக்கு மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

லக்ஷ்மி ரமணிசந்திரன் படிக்கும் பெண்கள் தெளிவா இருக்கமாட்டாங்களா என்ன? இருங்க ரமணிசந்திரன்கிட்டயே சொல்ரேன் :)

அந்த பெண் அதிமேதாவிலாம் இல்ல லக்ஷ்மி..ரொம்ப படிச்ச பெண்கள் காதலுக்காக வீட்டை துறக்கமாட்டாங்கதானே..கொஞ்சம் தெளிவா சிந்திக்ககூடிய பெண் அப்படின்னு எடுத்துக்கலாம்

Ayyanar Viswanath said...

தாமோதர் மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

கொத்ஸ் சரியான புரிதல்களுக்கு மிக்க நன்றி

செல்வராஜ் முதல் வருகைக்கு நன்றி வலையில் எனக்கு மிகவும் இணக்கமான எழுத்து உங்களுடையது..உங்களின் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது..

கொத்ஸ் மற்றும் செல்வராஜ் நீளம் ஒரு குறைதான் சுட்டியதிற்க்கு நன்றி

Ayyanar Viswanath said...

நந்தா என் எழுத்து உங்களுக்குப் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.உண்மையை சொல்லப்போனால் சிறுகதை என்கிற வடிவம் மீது எனக்கு ஆர்வம் என்று பெரிதாய் ஒன்றுமில்லை.உங்களைப் போன்றவர்களின் சிலாகிப்பு எனக்கு பெரும் ஆச்சர்யத்தை தந்தது.என் எழுத்தின் மீது நம்பிக்கையும் வந்தது என சொல்லலாம்.தொடர்ந்து இதைப்போல எழுதவும் ஆசையாய் இருக்கிறது.உங்களின் இந்த அன்பிற்க்கு நன்றி மட்டும்தான் சொல்லமுடிகிறது நந்தா

அதெல்லாம் சரி யார் அந்த முத்தப் பெண் சொல்லப்போறிங்களா இல்லையா :)சீக்கிரம் சொல்லுங்க இல்லைன்னா பொற்கொடிகிட்ட தொடர்பதிவுகளா போடச் சொல்லுவோம்

Ayyanar Viswanath said...

செல்வநாயகி

உங்கள் பின்னூடங்களை எதிர்பார்த்திருந்தேன் எனச் சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை எப்படியும் பூங்காவைப் பிடித்து வந்து சேர்வீர்கள் என்று தெரியும் :)

மிக்க நன்றி

Anonymous said...

good writing

கதிர் said...

இங்க பாருய்யா...

நான் சாதாரணமா பேசிட்டு இருந்த ஒரு கதைக்கருவை புனைவா எழுதி பேரு வாங்கிட்டாரு இந்த ஆளு.

நல்லா இருய்யா. :))

Thangamani said...

நட்சத்திர வாரப்பதிவுகள் வாசித்து இப்போது இந்தச் சிறுகதையினையும் வாசித்தேன். எளிமையாகவும், நேரடியாகவும் சொல்வதால் நதியின் படித்துறைகளில் அடிக்கிற அலைமாதிரி ஒரு குளிர்ச்சியும், இளமையும் நடையில் இருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்!

நன்றி!

Anonymous said...

Naan rasitha varigal.

ஏதோ ஒரு புள்ளியில் இருவருக்குமான தடைகள் இணைந்திருந்தது.

பின் சரியாய் துவட்டப்படாத தலையோடு இரவு 1.35 க்கு தூங்கி கொண்டிருந்த பூங்கொடியை உலுக்கி எழுப்பி அவள் உதடுகளில் வன்மாய் முத்தமிட்டதாய் சொன்னாள்.

Featured Post

test

 test