Saturday, August 18, 2007

குரூரப் புன்னகையின் பின் மறையும் உண்மைகள்



மிக கவனமாய் சொற்களைத் தேர்ந்தெடுத்தெல்லாம்
என்னால் பேசமுடியாது தோழி!
வார்த்தைகளின் மீதோ
ஒப்பனைகளின் மீதோ
எனக்கெந்த கவர்ச்சியும் இல்லை

வெகு நாகரீகமாய் பேசாதிருப்பதும்
விகாரங்களை அழகான கவசங்கள் கொண்டு மறைக்காமலிருப்பதும்
வெளித்துப்பும் சொற்களின் முன் பின் பக்க விளைவுகள் குறித்து சிந்திக்காமலிருப்பதும் மொத்தத்தில் சிந்திக்காதே இருப்பதும் வாழ்வதற்க்கான ஆபத்தான வழிகளை கண்டறிந்தவர்களின் அகராதியிலிருந்து என்னால் திருடப்பட்டவை

தனக்கான புனித பிம்பங்களை புனைந்துகொள்பவர்களை
பொய்களின் ஒட்டு மொத்த குத்தகைக்காரர்களை
பின்னால் குத்தும் பழகிய பேடிகளை
பெண்களை கிளர்த்த காதல் கவிதைகளாய் எழுதிக் குவிப்பவர்களை
இனிமேல் குடிப்பதில்லை என்றபடி தினம் குடிப்பவர்களை
கடவுள் வரிசையாய் நிற்கவைத்து குறிகள் அறுப்பாரென
இனிவரும் குழந்தைகளுக்கு கதைகளாக சொல்லலாம்

உன் வழமையான பழக்கமான உலகத்திலிருந்து
என்னிடம் பேசும்போதாவது வெளியில் வந்துவிடு
பொய்மையும் வாய்மையிடத்து என்றவர்களின் சிலைகளின் மீது
காகங்கள் பல வருடங்களாய் கழிந்து கொண்டிருக்கிறது.
ஒரு உண்மையின் மூலம்
சில புனிதர்களின் இரவுகளைத் தூங்கவிடாமல் செய்துவிட்டு
குரூரமாய் புன்னகைத்துக்கொள்ளலாம் வா!

12 comments:

குசும்பன் said...

எனக்கு புரியுது!!!! எனக்கு புரியுது:))))

பாரதி தம்பி said...

தாவு தீரல.. டவுசர் கிழியல..

வல்லிசிம்ஹன் said...

எனக்குப் புரிவது ஒன்று.

யார் உங்களைக் காயப்படுத்தினார்கள்.

உண்மையும் பொய்யும் கலந்து உலவும் உலகம் இது.
ஏமாற்றத்துக்குத் தயாராக இருந்துதான்
முன்னேறவும் வேண்டும்.இந்தக்
கவிதை ,கற்பனை மட்டும்தான் என்றால்,
மிக நன்றாக இருக்கிறது அய்யனார்.

கண்மணி/kanmani said...

அய்யனார் கவிதைகள் ஒரே மாதிரி தொனியிலிருப்பதாகத் தோன்றினாலும் நீங்கள் தேர்வு செய்யும் படங்கள் அருமை.பொருத்தமாகவும் இருக்கிறது.
புரிந்தும் புரியாமலும் இருக்குது கவிதை.
நாம் நாமாக இருக்கும்வரை பிரச்சினையில்லைதானே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யனார் ஆவேசமாய் மூன்று போஸ்ட் ஒரே நாளில்... ??

Jazeela said...

போச்சு போச்சு எல்லாருக்கும் புரிய ஆரம்பிச்சுடுச்சு. அய்யனார் உஷார்! :-))

Unknown said...

அய்யனார்,

பெண்களின் நாடக்கதன்மை அவர்களின் பரிணாம இயல்பின் பரிமாணம். ஆணின் வெளிப்படை போன்றே பெண்ணின் இரகசியங்களாலான உலகையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களைப் போன்றே அவர்களையும் மாறச்சொல்லுவது சற்று வன்மையாக உள்ளது.புனைவு அவர்களின் தளம். இருபாலும் ஓர்மொழியில் பேசினால் அழகியலுக்கான தன்னிலை வெளி குறைந்து விகாரமாகிவிடும்.

Perfection is Dead என்று ஓஷோ சொன்னதை நினைவுகூறுங்கள்.

அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வது தான் முற்போக்குத்தனம்... அவர்கள் யாராக இருந்தாலும்.

கவிதைகள் எழுதப்படக்கூடாது, அவை நிகழ வேண்டும். அந்நிகழ்வில் இதுபோன்று முரண் தெரிய வாய்ப்பில்லை.

கோபிநாத் said...

அய்ஸ் ;-))

Ayyanar Viswanath said...

குசும்பா என்னய்யா புரிஞ்சது உனக்கு

சந்தோசம் ஆழியூரான்
ஒரே டவுசர எத்தன முறதான் கிழிக்கறது :)

Ayyanar Viswanath said...

நன்றி வல்லிம்மா..இது கற்பனைதான் ..காயத்துக்கு இடமே இல்லை வாழ்வு எப்போதும் கொண்டாட்டம்தான் :)

நன்றி டீச்சர் படங்கள் எந்த புண்ணியவான் எடுத்ததோ யாரையும் கேட்காம நான் எடுத்து போட்டுக்கிறேன்
:)

Ayyanar Viswanath said...

முத்துலெட்சுமி கமெண்டதிற்க்கு நன்றி :)
ஆமாங்க இந்த வாரம் 2 நாள் லீவு வெட்டியா இருந்தேன்.. அதான் இந்த 3 இம்சையும்

ஜெஸிலா
எப்பவும் புரியாம எழுதி எனக்கே போரடிச்சிருச்சி அதான் இப்படி :)

Ayyanar Viswanath said...

இசை நல்ல விளக்கம்..
ஆனால் கவிதை என்பது தத்துவங்களையோ ஆழ்ந்த/மிகச்சரியான தீர்வுகளையோ கொண்டு செய்யப்படுவதில்லையே..இஃதொரு உணர்வு நிலையின் வெளிப்பாடு அவ்வளவே..

என்னா கோபி :)

Featured Post

test

 test