Thursday, November 11, 2010

அத்தியாயம் 7. துண்டிப்பு

படிக்கட்டுகளில் இறங்கி வரும் அரவம் கேட்டு விஜி தலை தூக்கிப் பார்த்தாள். அவளின் பெரிய கண்கள் சிவந்து, குளமாகியிருந்ததை மென் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. இத்தனை இறுக்கமான, தவிப்பான ஒரு மனநிலை எப்போதும் எனக்கு வாய்த்ததில்லை. என்ன மாதிரியான உணர்விது? என்பதைப் புரிந்து கொள்ள முயன்று தோற்றேன். விஜி மெல்ல தலை தூக்கி என்னைப் பார்த்துவிட்டு மறுபடியும் தலை கவிழ்ந்து கொண்டாள்.

“விஜி” என்றேன். மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தாள்.
”நான் போறேன்”
”நீங்க எதுக்கு போகனும்? அது தூங்கி எந்திரிச்சதும், நாங்க கிளம்பிடுறோம்” என்றாள்
அதில் தெறித்த விலகலை, சடாரென என்னை யாரோவாய் சித்தரித்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
”எப்படி உன்னால முடிஞ்சது விஜி?”
”தெரில. திடீர்னு எனக்கு எல்லாம் தப்பா நடக்கிறா மாதிரி பட்டது.. ஒருவேளை நீங்க ஊருக்குப் போகாம இருந்திருந்தா இது நடந்திருக்காதோ என்னவோ.. நீங்க இல்லாத முத நாள் இரவு என்னால தூங்க முடியல. ஏதோ ஒரு மயக்கம் உங்க மேல இருந்தது போல. அது அன்னிக்கு தீர்ந்தா மாதிரி இருந்தது… நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு யோசிச்சப்ப பயமா இருந்தது… என் மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சிருச்சி… என் வீட்டுக்காரர் எனக்காகதான் ஒரு கொல பண்ணிட்டு போலிசுக்கு மாட்டாம தலமறைவா சுத்திட்டிருக்கார். நான் என்னடான்னா இன்னொருத்தரோட எந்த குத்த உணர்வுமே இல்லாம ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கேன்னு ஏதோதோ தோண ஆரம்பிச்சிருச்சி… சரியா விடியற்காலைல இந்த மனுசன் கண்ணு முன்னால நிக்குறார்… என்ன மன்னிச்சிடு விஜயான்னு கால்ல விழுந்தார்… பதறிப் போய்ட்டேன்… நீங்க கொடுத்த பணத்த வச்சி ஆந்திரால ஒரு சின்ன கடை போட்டிருக்காராம்... எனக்கு துரோகம் பண்ணிட்டத நெனச்சி இங்கிருந்து போன நாள் ராத்திரில இருந்து தூக்கம் வராம ரொம்ப அழுதாராம்… ஆவறது ஆவுட்டும்னு என்ன கூட்டிப் போக வந்திருக்கார்… உண்மைய சொல்லனும்னா நான் தான் அவருக்கு துரோகம் பண்ணேன்… இன்னொரு ஆளோட மூணு மாசம் வாழ்ந்தும் என்ன வந்து கூட்டிப் போய் வச்சி வாழ நினைக்கிறார்... எனக்கும் அவரோட போறதுதான் சரின்னு படுது… உங்க கிட்ட சொல்லாம போக கூடாதுன்னுதான் ரெண்டு நாள் காத்திருந்தோம்… உங்க கிட்ட வாங்கின பணத்தை இரண்டு மூணு மாசத்துல திருப்பிக் கொடுத்திருவேன்னு சத்தியம் பண்ணி இருக்கார்… உங்களுக்கு என்ன விட நல்ல பெண் கிடைக்கும்... உங்க வாழ்க்க நான் இல்லனாலும் நிச்சயம் சந்தோஷமாதான் இருக்கும்...” விஜி தரையைப் பார்த்தபடி விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

எனக்கு சகலமும் அந்நியமாகிப் போனதைப் போலிருந்தது. கொண்டு வந்திருந்த பையை அப்படியே எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு முன் வாசலுக்காய் நடந்தேன். விஜி பதறிப் பின்னால் வர, திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன். விடியற்காலை இருட்டு கண்களுக்கு முன்னால் லேசான குளிருடன் விழித்திருந்தது. விஜி வாசலில் என்னங்க! என்னங்க! என மெல்லமாய் கூப்பிடக் கூப்பிட சாலைக்கு வந்துவிட்டேன். நடை தள்ளாடுவதை உணர முடிந்தது. நீள் சாலையின் இடையிடையே குறுக்கும் மறுக்குமாய் சிறு சிறு சந்துகளிலிருந்து ஆட்டோக்கள் ப்ரேக்குள் தேய கிறீச்சிட்டபடி, வசையுடனும், பெருத்த சப்தத்துடனும் என்னைத் தாண்டிப் போயின. கடற்கரைக்கு வந்துவிட்டிருக்கிறேன். சடுதியில் என் வாழ்வு அற்பமாகிப் போனாற்போலிருந்தது. அப்படியே நடந்து போய் கடலில் கலந்து விடும் உந்துதல்கள் எழ ஆரம்பித்தன.

கரையோரப் பாறைகள் தாண்டி சிறிய மணற்பரப்பில் போய் அமர்ந்து கொண்டேன்.கடல் ஹோ வென இரைந்தது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாமல் இருந்தது. எங்கு போக? என்ன செய்ய? என்றெல்லாம் யோசித்து குழம்பிப் போனேன். இதுதான் வாழ்வு, இதுதான் எதிர்காலம் என்றெல்லாம் நம்பி இருந்த ஒரு விஷயம் திடீரென தன் அடையாளத்தை முற்றிலுமாய் அழித்துக் கொண்டு காணாமல் போய்விடுவதன் பயங்கரத்தை நம்பக் கடினமாய் இருந்தது. திரும்பத் திரும்ப எப்படி முடிஞ்சது விஜி? எப்படி முடிஞ்சது விஜி? என்கிற கேள்விகள்தாம் விடாமல் நினைவை மோதிக் கொண்டிருந்தன.

கற்பனையில் போயிருந்த பிரான்ஸ் நகரமும் திராட்சைத் தோட்ட வாழ்வும் கைகொட்டி சிரிப்பதைப் போலிருந்தது. வஞ்சிக்கப்பட்ட உணர்வுகள் பெருகி வழிந்தன. என்னை விஜியின் இடத்தில் வைத்துப் பார்த்து ஏதாவது சமாதானங்களை வலிந்து செய்து கொள்ள முடியுமா என்றெல்லாம் யோசித்தும் கூட விஜி செய்தது துரோகமாகத்தான் எனக்குப் பட்டது. ஆனால் எதுதான் துரோகமில்லை விஜிக்கு நீ செய்தது மட்டும் என்ன? துரோகம்தானே. சமூக ஒழுங்குகளின் அடிப்படையில் உனக்கும் விஜிக்கும் இருந்தது ‘கள்ள காதல்’தானே காதலே கள்ளமாகிவிட்டபின்பு துரோகம் ஏன் நிகழக் கூடாது? சொல்லப் போனால் இந்த துரோகம் என்ற வார்த்தையே மிகுந்த அருவெறுப்பானது, சுயநலமானது. காதலை கள்ளமென ஒத்துக் கொள்ளாத நீ சந்தர்ப்ப சூழலை மட்டும் துரோகம் என முத்திரை குத்துவதேன்? வேலை, குடும்பம் என்றிருந்த பெண்ணை வார்த்தைகளைத் தூவி வளைத்துப் போட்டதுமில்லாமல் அவளை பிழியப் பிழிய மூன்று மாதங்கள் உன் உடல் இச்சைக்கு பயன்படுத்தியுமிருக்கிறாய். இந்தக் கருமத்திற்கு காதல் என்ற பெயர் வேறு ஒரு கேடா?. ஆனாலும் நான் விஜியை காதலித்தேன். மீதமிருக்கும் என் வாழ்நாள் முழுவதையும் அவளோடு வாழ்ந்துவிட தீர்மானித்திருந்தேன். இந்த நிழல் உலகத்திலிருந்து பிய்த்துக் கொண்டு தூரதேசம் எங்காவது ஓடிப்போய் விஜியுடன் வாழவே நான் விரும்பினேன். பிறகு ஏன் திருமணம் செய்து கொள்ளாமலிருந்தாய்? சட்டப்படி விஜிக்கு விவாகரத்து கிடைக்க அல்லவா நீ முயற்சி செய்திருக்க வேண்டும்? அவ புருஷன் சமூகத்தின் முன்னால ஒரு குற்றவாளி..போலீசு வேர தேடிட்டு இருக்கு, இந்த லட்சணத்துல எந்த அட்ரஸுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்ப? நீ மட்டும் சமூகத்துக்கு குற்றவாளி இல்லயா?உனக்குலாம் அட்ரஸ் இல்லயா? என்னாங்கடா டேய்? அதான் அவனுக்கு அவ்ளோ பணம் குடுத்திட்டமே, வாங்கிட்டு பல்ல இளிச்சிட்டு வேர போனானே.. இனிமே திரும்ப மாட்டான், எந்த தொந்தரவும் இருக்காதுன்னு நம்புனேன். எல்லாம் சரிதான் ராசா, நீ ஏன் இவளுக்கு தாலி கட்டல? ஏன் வீட்டுக்குள்ளாரயே பொத்தி பொத்தி வச்சிருந்த? ங்கொய்யால அந்த பொண்ணுக்கு துணி போட கூட நீ சுதந்திரம் கொடுக்கல. காமாந்தகப் பேய்டா நீ! என்ன கொடும துணி இல்லாம இருந்தாதான சுதந்திரம். அது உன்னோட கற்பிதம்.. பைத்தியக்காரன் மாதிரி அந்த பொண்ண டார்ச்சர் பண்ணி இருக்க.. அதான் அவ புருசன் வந்ததும் பாதுகாப்பு கருதி போய்ட்டா.. ஒலகத்துல எந்த பொண்ணுமே தன்னோட பாதுகாப்புத்தான் மொத இடம் கொடுப்பா.. அததான் விஜியும் பண்ணியிருக்கா..பொத்திட்டு போய் வேலய பாருடா.

இந்தப் போதை மிகுந்த பின்னிரவில் நானும் நானுமாய் சப்தமாய் சண்டையிட்டுக் கொள்ள துவங்கினோம். உள்ளுக்குள் கேள்விகளும் எதிர்கேள்விகளும் பொங்கிப் பெருகி மண்டைக்குள் ஓயாத கூச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது. என்னை மிக அதிகமாய் வெறுக்கத் துவங்கினேன். விஜியின் மீது ஏற்பட்ட அதிர்ச்சியும் வெறுப்பும் மெல்ல என் மீது திரும்ப ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வெறுப்புகள் அடர்த்தியாய் மிகுந்து வர ஆரம்பித்தன. எந்த அர்த்தமுமே இல்லாத என் இருப்பின் மீது அசாத்திய வெறுப்பும் கோபமும் ஒருமித்து எழுந்தது. எழுந்து ஈர மணலில் சிறிது தூரம் நடந்தேன். மண்டைக்குள் கூய்ச்சல் ஓய்ந்தது போலிருந்தது. தூக்கம் கண்களை அழுத்தவே மணற்பரப்பை ஒட்டி இருளில் தனித்து பிரம்மாண்டமாய் தெரிந்த ஒரு பாறைக்கு அடியில் போய் படுத்துக் கொண்டேன். ஏதேனும் பாம்போ, தேளோ என்னைக் கடித்துக் கொன்றுவிட்டால்கூட நிம்மதியாகப் போகும். மறுநாளை உணரமுடியாமல் போனால் அதுவே எனக்குக் கிடைத்த பெரிய வரம் என வாய்விட்டுச் சொல்லியபடி தூங்கிப் போனேன்.

துரதிர்ஷ்ட வசமாய் ஓரிரு மணி நேரத்திலேயே மீனவர்களால் எழுப்பப்பட்டேன். என் மீது சிறிய கல் ஒன்று வந்து விழுந்தது. எழுந்து பார்த்தபோது நான்கு பேர் நின்றிருந்தனர். அதிகாலையில் கடலுக்கு செல்பவர்கள் போல. வலை சகிதமாய் நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் என்னை கரையில் ஒதுங்கிய பிணம் என நினைத்திருக்கிறார்கள். உயிர் இருப்பதை தெரிந்து கொள்ளவே கல்லெறிந்திருக்கிறார்கள். என்ன? ஏது? என விசாரித்தார்கள். எதுவும் பதில் பேசாது பாறைகளின் மீதேறி சாலைக்கு வந்தேன். கடற்கரைச் சாலையில் மக்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. ஒரு பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டேன்.

ஆறு மணிக்கு சமீபமாய் ஒருவன் பக்கத்தில் வந்து அமர்ந்தான். “வா போலாம்” என்றான்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எப்படி இவர்கள் தேவையான போதெல்லாம் மிகச் சரியாக கண்டுபிடிக்கிறார்கள்? என்பது புரியாமலிருந்தது. என்ன செய்ய வேண்டுமென குழம்பி போயிருந்ததில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தோன்றியது பதில் பேசாமல் போனேன். கார் ஒன்று தயாராய் இருந்தது. ஏறிக்கொண்டேன். அழைக்க வந்தவன் கையிலிருந்த ஜோல்னாப் பையில் கைவிட்டு ஒரு புகைப்படத்தை வெளியில் எடுத்தான். “இதான் பீசு. ஊர் சேலம். அட்ரஸ் பின்னால இருக்கு. கழுத்த கீறனும். காரியம் முடிஞ்சதும் பின் பக்கமா வெளில போகனும். முன் கதவ தாப்பா போடனும். நாளைக்கு மதியம் ஒரு மணிக்குள்ள நடக்கனும். நீ தங்கப்போற ஓட்டல் வாசல்ல கொண்டுபோய் கார் விடும்.” எனச் சொல்லி முடித்துவிட்டு ட்ரைவருக்கு சைகை தந்தான். காந்தி சிலை தாண்டி கார் நின்றது. இறங்கிக் கொண்டான். கதவை அடித்து சாத்தினான். நான் இருக்கையில் சரிந்து கண்களை மூடிக் கொண்டேன். பின் அவன் வைத்து விட்டுப் போன புகைப்படத்தைப் பார்த்தேன். சிவப்பு நிற சேலையை முக்காடிட்ட வெளுத்த குண்டுப் பெண். சேட்டுப் பெண்ணாய் இருக்கலாம் என நினைத்தபடியே தூங்கிப் போனேன்.

ஓவியம்: salvador dali

- (முதல் பாகம் முற்றும்)

18 comments:

யுவா said...

அவனின் பின்புலத்திற்கேற்ப துரோகத்தின் விசாரணைகள். பின்றீங்க!

jayaramprakash said...

very very interesting.congrats ayyanar sir.Thanks cable ji.

Mohan said...

கதை முன்னும் பின்னுமாய் பயணித்தது மிகவும் நன்றாக இருந்த‌து!

Mohan said...

கதை முன்னும் பின்னுமாய் பயணித்தது மிகவும் நன்றாக இருந்த‌து!

இரவுப்பறவை said...

புனைவு நன்றாக இருக்கிறது!
இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்....

☀நான் ஆதவன்☀ said...

க்ளாஸ் அய்யனார். அவனுக்கும் அவன் மனசாட்சிக்கும் நடக்குற உரையாடல் அருமை.

அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்.

கவிதா | Kavitha said...

/நானும் நானுமாய் சப்தமாய் சண்டையிட்டுக் கொள்ள துவங்கினோம். உள்ளுக்குள் கேள்விகளும் எதிர்கேள்விகளும் பொங்கிப் பெருகி மண்டைக்குள் ஓயாத கூச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது//

எனக்கு இப்படி நிறைய நடக்கும்.. இபப்டி நடக்கும் போது எல்லாம் தலைவலி ரொம்ப அதிகமாக இருக்கும்.. :) இதை வேறு மாதிரி செய்யலாம்.. பதில் இல்லாம செய்யனும்னு கோயில் போயி சாமிக்கிட்ட பேசுவேன்.. திருப்பி பதிலே வராது.. ஒன் வே தான் :), நானே பதிலும் சொல்லும் போது இருக்கும் தலைவலி இந்த கோயில் விஷயத்தில் இருக்காது :))

படம் சூப்பர் அய்ஸ்... அந்த லிங்க் போயி பார்த்தேன்..அங்க... அட:)))) பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு...

நன்றி :))

பிரபல பதிவர் said...

இந்த அத்யாயம் க்ளாஸ்.....

Anonymous said...

very nice expecting the next chapter

surya

Ramprasad said...

Dramatic entertainment, the sequence of talking with in the soul is too good. The soul explains the thing that has been done by him and he is clarifying the same. Excellent Sir :)

All the Best

சைவகொத்துப்பரோட்டா said...

இரண்டாம் பாகத்தை கூடிய விரைவில் எழுதி விடுங்களேன்.

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

//அவ புருசன் வந்ததும் பாதுகாப்பு கருதி போய்ட்டா.. ஒலகத்துல எந்த பொண்ணுமே தன்னோட பாதுகாப்புத்தான் மொத இடம் கொடுப்பா.. அததான் விஜியும் பண்ணியிருக்கா..பொத்திட்டு போய் வேலய பாருடா//

அருமை அருமை பெண்களை பற்றி நெத்தியடி அடிச்சு இருக்கீங்க....

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

அருமை அருமை பெண்களை பற்றி நெத்தியடி அடிச்சு இருக்கீங்க....

N.Parthiban said...

அன்புள்ள அய்யனார்,

தங்களின் இந்த தொடரை ஒரே மூச்சில் படித்து இன்புற்றேன்...மிகவும் அழகான நடை....ஒரு Quentin Tarantino, Christopher Nolan திரைப்படத்தை பார்ப்பதை போன்ற ஒரு உணர்வும் விவரிப்பும் உங்கள் எழுத்தில் உள்ளது...உங்களின் விவரிப்புகளில் உள்ள பல விஷயங்கள் காதல், காமம், வலி, தவிப்பு, etc கண்டிப்பாக சொல்வேன் அதை அனுபவித்தவனால் தான் எழுத முடியும், படித்து உணரவும் முடியும்...என்னால் பல விஷயங்களை அப்படி உணர முடிந்தது...மற்றும் ஒரு ஆச்சரியம் இங்கே பலரும் உங்கள் எழுத்தில் ஆபாசம் இருப்பதாக உணர்வது அல்லது அப்படி உணர்ந்ததாக நீங்கள் சொல்வது. எனக்கு எங்குமே அப்படி தோன்றவில்லை...நிஜத்தில் இல்லாத எதையும் தாங்கள் சொல்லவில்லை என்பது மட்டும் அல்ல அது அதையும் தாண்டி ஏதோ ஒன்று உள்ளது...என் ஒரே கோரிக்கை நீங்கள் உங்களுக்கு தோன்றுவதை எந்த தடையும் இல்லாமல் எழுதுங்கள் அப்போது தான் நீங்கள் எழுத நினைப்பது நிறைவடையும்...

என்றும் அன்புடன்,
நெ. பார்த்திபன்
www.parthichezhian.com

Anonymous said...

please publish the second part

Unknown said...

//ஒலகத்துல எந்த பொண்ணுமே தன்னோட பாதுகாப்புத்தான் மொத இடம் கொடுப்பா.. அததான் விஜியும் பண்ணியிருக்கா// மிகச் சரியான அவதானிப்பு அய்யனார் ;)))

காதல், காமம், துரோகம், மரணம் இந்த நூலிழையில் கடினமாக பயணம் செய்கிறது கதை....சில ஆழங்களைத் தொட்டிருப்பினும் முரண்கள் இருக்கவே செய்கின்றன (தனி மடல் அனுப்புகிறேன், நீ விரும்பினால் வெளியிடு)

மற்றபடி கதை வேகம்....ஸ்டான்லி குப்ரிக் படம் பார்த்த வியப்பில் ஆழ்கிறேன்....வாழ்த்துக்கள் அய்ஸ் தொடர்ந்து எழுது!

Unknown said...

டாலி படம் அருமை....அவரைப் பற்றிய புத்தகம் வாசித்திருக்கிறாயா?

Anonymous said...

Hellooooooooooo,,,,,,,,,,,,,what happend to second part?????? eagrly waiting............pls publish it..

Featured Post

test

 test