Thursday, November 4, 2010

அத்தியாயம் 4. சத்ரு

விஜயலட்சுமி ஆடைகளற்று கட்டிலில் சிதறிக் கிடந்தாள். நாகராஜ் அவளின் சரிந்திருந்த இடது முலையை வலக்கையால் பற்றியபடி, கழுத்து இடைவெளியில் முகம் புதைத்து, வாயில் எச்சில் ஒழுக தூங்கிக் கொண்டிருந்தான். சில நொடிகள் இமைக்க மறந்துவிட்டு அப்போதுதான் போட்ட படுக்கையறையின் சுவிட்சை அவசரமாய் அணைத்து விட்டு வெளியில் வந்தேன். இதயத் துடிப்பை கட்டுப்படுத்த முனைந்து தோற்றேன். ஆழமாய் சுவாசத்தை இழுத்து விட்டுக் கொண்டேன். மாடிக்கு போய் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். ஆனால் இது இப்படி இருந்திருக்க வேண்டாம்தான். அடிவயிற்றிலிருந்து கசப்பு மிகுந்து வந்தது. வாழ்வில் முதன் முறையாய் வாய் விட்டு அழவேண்டும் போலிருந்தது. என் மீது கட்டுங்கடங்காத ஆத்திரம் பொங்கியது. மீண்டுமொரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். சப்தமெழுப்பாது கீழே போய் சமையலறை கப் போர்டிலிருந்து பிராந்தி புட்டியை எடுத்து அப்படியே தொண்டையில் சரித்துக் கொண்டேன். வாய் தொண்டை வயிறு எல்லாம் எரிந்தது. இருளில் கண்கள் மூடி நின்று கொண்டிருந்தேன். புட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு மாடிக்குத் திரும்ப வந்து மீண்டுமொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன்.

நான்கு நாட்கள் முன்பு என் நிறுவனம் சார்பில் ஒருவன் ப்ளூஸ்டார் ஓட்டலில் வைத்து சந்திக்க வந்திருந்தான். இங்கு வந்து ஆறு மாதங்கள் ஓடிப் போயிருந்தன. ஏதாவது அவசர வேலையாய் இருக்கலாம் என எதிர்பார்த்திருக்கவே “அம்பாசமுத்திரம் போகிறேன் வர இரண்டு மூன்று நாட்களாகலாம். நீ உன் அம்மா வீட்டில் போய் இரு”வென விஜியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

இந்த வீடிருப்பது ஈஸ்வரன் கோவில் தெருவின் மத்தியில், கிட்டத்தட்ட பிரெஞ்சு வீதிகள் இந்த வீட்டிலிருந்துதான் துவங்கும். மொட்டை மாடியிலிருந்து பரந்த கடலைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். கடைசி மூன்று மாதத்தை நானும் விஜியும் இந்த வீட்டில்தான் கழித்தோம். என் வாழ்வின் மிக நிம்மதியான நாட்களாக இவை இருந்தன. என்னை ஒரு குழந்தையைப் போல் விஜி பார்த்துக் கொண்டாள். இந்த மூன்று மாதங்களில் ஒரு முறை கூட எங்களுக்குள் சோர்வுகளோ கசப்புகளோ இல்லாதிருந்தது. அவள் என்னை ஆழமாக நேசித்தாள். நான் அவளின் நேசத்தின் ஆழத்தினுக்குப் போக முயன்றுத் தோற்றுக் கொண்டிருந்தேன். விஜியை முறைப்படித் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவள் ஏற்கனவே கட்டியிருந்த தாலியை கழற்றி வைத்து விட்டாள். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று கூட அவள் வற்புறுத்தவில்லை. என்னிடம் எதையுமே அவள் எதிர்பார்க்க வில்லை. நாங்கள் நன்றாய் குடித்து, சமைத்து, சாப்பிட்டு, புணர்ந்து வாழ்வைக் கொண்டாடினோம். உடலின் எல்லா உச்சங்களையும் தொட்டோம். காமத்தின் அத்தனை சாத்தியங்களையும் நிகழ்த்திப் பார்த்தோம். எங்களுக்குள் கூச்சமோ அச்சமோ இல்லாதிருந்தது. நான் அவளுடலையும் அவள் என் உடலையும் பரஸ்பரம் கொண்டாடினோம். வீட்டிலிருக்கும்போது ஆடைகள் அணியும் வழக்கத்தை நாங்கள் இருவருமே விட்டிருந்ததால் அவளின் பேரழகு, கதவுகள் அடைக்கப்பட்ட வீட்டின் மென்னிருளில் எப்போதும் பிராகாசித்துக் கொண்டிருக்கும். என்னுடைய எல்லா முரண்களையும், கிறுக்குத்தனங்களையும் புன்னகையோடும் மிகுந்த இசைவோடும் ஏற்றுக் கொண்டாள்.

அன்று காலாப்பட்டிலிருந்து மறு நாள் மதியம்தான் முதலியார் பேட்டை வீட்டுக்குத் திரும்பினோம். அக்கம் பக்கம் வீடுகளின் சுவாரஸியத்தை நாங்களிருவரும் கூட்டியிருப்போம் என்பதை பல ஜோடிக் கண்களின் குத்தல்களிலிருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது. அடுத்த நாள் விஜியின் அம்மாவை ஆஸ்பத்திரியிலிருந்து கூட்டி வந்துவிட்டோம். அதற்கடுத்த நாள் இந்த வீட்டிற்கு விஜியைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டேன்.

கடந்த மூன்று மாதத்தில் விஜியை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிந்திருந்ததாய் நினைவில்லை. காய்கறி மார்க்கெட்டிலிருந்து, மீன் கடைவரை இணைந்துதான் சென்றோம். கழிவறைக் கதவுகளைக் கூட அடைக்கும் வழக்கமில்லாதிருந்தது. கிடைத்த சில போதை தருணங்களில் என் வேலை குறித்து மேலோட்டமாய் சொல்லியிருந்தேன். அவள் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.. என்னை எந்த வகையிலும் கேள்வி கேட்காதிருந்தாள். அதுதான் அவளிடம் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. நம் சூழலில் உறவுகள் அத்தனை இணக்கமானதில்லை. எல்லாருக்குள்ளும் விழித்திருக்கும் எஜமான் - அடிமை மனோபாவம்தான் பெரும்பாலான உறவுகளில் நிறைந்திருக்கிறது. எங்களுக்குள் அப்படி எந்த சிக்கலும் இல்லாதிருந்தது. சுதந்திரத் தன்மையை எல்லா வகையிலும் உணர்வதென்பது மிகப்பெரிய விடுதலை. நாங்கள் கிட்டத்தட்ட கானக விலங்குகளைப் போலத்தான் வாழ்ந்தோம். விஜியின் பாண்டிச்சேரி பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டு பிரான்ஸ் சென்றுவிடும் திட்டமிருந்தது. என்னிடமிருந்த சேமிப்பு அங்கு புதிய வாழ்வைத் துவங்க போதுமெனதான் தோன்றியது. அவ்வப்போது பிரான்ஸ் கனவுகளிலேயும் மூழ்கிக் கொண்டிருந்தோம். கோடார்ட்,ஃபெலினி படங்களை பார்த்தும் ஷார் பத்தாயின் கதைகளைப் படித்துமாய் பிரான்சின் மீதான பித்தங்களையும் வளர்த்துக் கொண்டோம்.

(ஃபோர்னோ கதைகளை படித்தபடியும், டிண்டோ ப்ராஸ் படங்களை பார்த்தபடியுமாய் நாங்கள் மேற்கொண்ட கலவிகளையெல்லாம் சொல்லுமளவிற்கு தமிழ் சூழல் இன்னும் தயாராகவில்லை என்பதை உணர்ந்தே, இந்த அத்தியாயத்தியில் சொல்லப்பட்டிருந்த அத்தகவல்களை அழிக்கிறேன். இதுவரைக்கும் எழுதியதைப் படித்து விட்டு கடந்த ஆறு மாத காலமாய் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும், நட்பு வைத்திருக்கும் ஒரே ஒரு நண்பியிடமிருந்து நேற்று மாலை தொடர்புகளைத் துண்டித்துக் கொளவதாய் குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. அது கூடப் பரவாயில்லை ‘ஒண்ணாப்பில் ஒண்ணுக்கு போனேன் பத்தாம்ப்பில் பதுங்கி பதுங்கி ளவ் பண்ணேன்’ என்றெல்லாம் எழுதுபவர்களின் அதி தீவிர ரசிகையாக என் நண்பி மாறிப்போயிருக்கிறாள் என்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனின் மிக நெருங்கிய தோழியாக மாறிவிட்டிருக்கிறாள் என்றுமாய் அங்கங்கே இருக்கும் இலக்கிய ரகசிய ஏஜெண்டுகளிடமிருந்து வந்த தகவலைக் கேட்டுத்தான் மிகவும் நொறுங்கிப்போனேன். அவள் இதற்குப் பதிலாய் என்னைப் பிய்ந்த செருப்பால் அடித்திருக்கலாம். போகட்டும். ஆனால் இந்த எழுத்துக்கள் என்னவெல்லாம் செய்து தொலைக்கின்றன என்பதை நினைத்தால் குமைந்து கொள்ளாமல் இருக்க முடிவதில்லை. மேலதிகமாய் நான் எழுதுவதைப் படிக்கும் மிக சொற்பமான நண்பர்களும் இந்த நாவலை வெளியிடத் துவங்கிய நாளிலிருந்து என்னுடன் பேசுவதை வலிந்து தவிர்க்கிறார்கள். அவர்கள் எப்போதுமே அதி நல்லவர்கள் தோற்றத்தை பொதுவெளியில் வலிந்து திணிப்பவர்கள்தாம். போகட்டும். எனக்கு எவரின் மீதும் வருத்தமோ, கோபமோ, அன்போ, வெறுப்போ இல்லை. சொல்லப்போனால் எதுவுமே இல்லை. என்னைத் தவிர்ப்பதோ, விலகுவதோ, நெருங்குவதோ அஃது அவரவர்களின் பிரச்சினைதான். இருப்பினும் இவர்களின் மனத்தாங்கலை ஓரளவு கருத்தில் கொண்டு ஆறு பத்திகளில் மிக சுவாரசியமாய் எழுதப்பட்ட மாற்றுக் கலவி, மாற்று உச்ச பத்திகளை வருத்தத்தோடே நீக்குகிறேன்)

என்னைப் பார்க்க ஒருவன் வருதாய் தகவல் கிடைத்தபோது, இப்போது செய்யப்போகும் வேலையே கடைசியாக இருக்கட்டுமென நினைத்துக் கொண்டேன். பாண்டியிலிருந்து சென்னை போக வேண்டியிருந்தது. நான்கு நாட்கள் அங்கேயே தங்கி வேலையை முடிக்க வேண்டி இருந்தது. இடையில் இவளைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. அம்மா வீட்டிற்கு போயிருப்பாள் என நினைத்தபடிதான் என்னிடமிருந்த மாற்று சாவியினைக் கொண்டு கதவைத் திறந்து நேராய் படுக்கையறைக்கு வந்தேன். கட்டிலில் கிடந்த விஜியின் உடலும்,அவளின் கழுத்து இடைவெளியில் புதைந்திருந்த நாகராஜின் எச்சில் ஒழுகிய முகமும்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்து கொண்டிருந்தன. இது ஏன் இப்படி முடியவேண்டும்? நான் வாழ்நாள் முழுக்க எவனையாவது கொல்ல கத்தியோடுதான் அலைந்து கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது. எப்போதாவது கவனம் பிசகி நடுத்தெருவில் தூக்கிப் போடக் கூட ஆளின்றி செத்துப்போவதுதான் எழுதப்பட்ட விதியோ? இதை எதைக் கொண்டும் மாற்ற முடியாது போல இருக்கிறது என்றெல்லாம் குமைந்து கொண்டேன். என்னுடைய கழிவிரக்கம் மிகுந்து போதைக்குச் சமமாய் பெருகி அந்த இரவில் தன்னந்தனியாய் அரற்றிக் கொண்டிருந்தது.

நான்கு நாட்களில் என் ஒட்டு மொத்த வாழ்வும் மாறிப்போனதாய் உணர்ந்தேன். இவ்வளவு விரைவில் இத்தனை சம்பவங்கள் எப்படி நிகழ்கிறதெனவும் ஆச்சரியமாய் இருந்தது. என் வாழ்வில் பல வருடங்கள் எதுவுமே நிகழாது இருந்திருக்கின்றன. வெறுமனே புத்தகம் படித்து, சாப்பிட்டுத் தூங்கிக் கழித்த நாட்கள்தாம் அதிகம். நானாக எந்த ஒன்றையுமே உருவாக்க மெனக்கெடுவதில்லை. எந்த இடத்தில் என் பங்கு அத்தியாவசியமாகிறதோ அந்த இடத்தை முழுமையாய் நிரப்பிவிட்டு வெளியேறிவிடுவதுதான் வழக்கமாய் இருந்தது. ஆனால் இப்போது நிகழும் ஒவ்வொரு சம்பங்களும் புதிதாய் இருக்கின்றன. எல்லாவற்றையும் நானாகத்தான் தொடங்குகிறேன். அன்று விஜியை பீச் ரிசார்டுக்கு அழைத்துப் போகாதிருந்திருந்தால் இந்நேரத்தில் ஏதாவது ஒரு பாரில் அமர்ந்து மெதுவாய் குடித்துக் கொண்டிருந்திருக்கலாம். அல்லது என்னை அழைத்துப் போனவனோடு வேலை முடிந்ததும் ஓய்வெடுக்க ஆந்திரா போயிருக்கலாம். இப்படி ஒரு அதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருந்திருக்காது.

என் படுக்கையில் படுத்திருக்கும் நாகராஜை ஒரு மாதத்திற்கு முன்பு நான் நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில், இதே மொட்டை மாடியில்தான் பார்த்தேன். அன்று இரவு தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது விஜி இல்லாமலிருந்தாள். தூக்கம் போய்விட்டது. மாடிக்குப் போய் புகைக்கலாம் என எழுந்து படிக்கட்டுகளில் ஏறும் போது பேச்சு சப்தம் கேட்டது. விஜி யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.

“நீ ஏன் இங்க வந்த?”
“உன்ன ஓக்கதாண்டி தெவுடியா”
“கத்தாத பேசு. அவர் எந்திரிச்சிடபோறார்”.
“அந்த நாராகூதி மவன இப்பவே கொன்னு போட்டுர்ரேன் பார்... யார்வீட்ல வந்து கைவச்சிருக்கான்..மவன என்ன பன்ரேன்னு மட்டும் பார்..”
“ரொம்ப கத்தாதே.. நீ இங்க இருக்கன்னு தெரிஞ்சா கூட போதும்.. உன்ன போலீஸ் சுடும்.”
“சுடும்டி சுடும். உனுக்காக ஒருத்தன் தலய சீவுனன் பார்.. அப்ப சுடாத போலிசு இப்பதான் சுடுதா?”
“அப்ப தைரியமிருந்தா பகல்ல வா”
“வருவேண்டி சிதி” என்றபடி பளாரென அறைந்தான்

நான் மாடிக்கு வந்துவிட்டிருந்தேன். அவன் ஓட ஆயத்தமானான்.

என்னை எதிர்பார்த்திராத விஜயலட்சுமி அய்யோஓ என தலையைப் பிடித்தபடி தரையில் அமர்ந்து அழத் துவங்கினாள். “ஓடாத இரு” என அவனை நிறுத்தினேன். “அழாத விஜி எழுந்திரு… வாங்க கீழ போய் பேசலாம்” என இருவரையும் கூட்டிக் கொண்டு கீழே வந்து ஹாலின் சுவிட்சைப் போட்டேன். விஜியினால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“முதலியார் பேட்ட வீட்டு மொட்டை மாடில அன்னிக்கு எகிறி குதிச்சி ஓடினது நீதான?” என்றேன் நாகராஜைப் பார்த்து
நாகராஜ் பற்களைக் கடித்தான். “கண்டவன்லாம் என்ன பாத்து கேள்வி கேட்கும்படி வச்சிட்டியேடி தெவுடியா எனக் கத்திக் கொண்டே விஜியை எட்டி உதைத்தான். அவள் அம்மாவென அலறியபடியே கீழே விழுந்தாள். நான் பதறிப் போனேன். அவளைத் தூக்கி அருகிலிருந்த சோபாவில் அமர வவத்தேன்.

சிவந்த விழிகளோடு நாகராஜ் இதை பார்த்துக் கொண்டிருந்தான். நான் சடாரெனத் திரும்பி நாகராஜின் முகத்தில் ஒரு குத்துவிட்டேன். நாகராஜ் முகத்தைப் பொத்திக்கொண்டு மடங்கி உட்கார்ந்தான். வாயிலிருந்து இரத்தம் கசிந்தது. ஏற்கனவே நன்றாய் குடித்திருந்தான். நான் சற்று சகஜமானேன். குடிக்கிறியா என்றபடியே உள்ளறையிலிருந்து பிராந்தி புட்டியை எடுத்து வந்துத் தந்தேன். அவன் அதை அப்படியே வாயில் சரித்துக் கொண்டான்.

விஜி கூந்தலை அள்ளி முடிந்து கண்களைத் துடைத்துக் கொண்டபடி “இதான் என் புருசன்” என்றாள். நான் இதை எதிர்பார்த்தேன். மெல்லத் தலையசைத்தபடி
“உனக்கு என்ன வேணும்?” என நாகராஜைப் பார்த்துக் கேட்டேன்.
நாகராஜ் கடுமையாய் என்னைப் பார்த்தபடி “யாரண்ட பேசிட்டிருக்கன்னு தெர்லடா உனக்கு …வேணாம்.. கைல சாமான் எதுவும் கொண்டாரததால நீ இன்னிக்கு பொழச்ச மவன விடியறதுக்குள்ள இங்கிருந்து ஓடிப்போய்டு இல்லனா விடிஞ்சதும் ரோட்ல செத்து கெடுப்ப” எனக் கண்கள் துடிக்க நா குழறியபடிக் கத்தினான்.
நான் படுக்கையறைக்குப் போய் மினியேச்சரை மறைத்து எடுத்து வந்தேன். கீழே மடங்கி உட்கார்ந்திருந்தவனின் கழுத்தில் உதைத்துக் கீழே தள்ளி அவன் வாய்க்குள் துப்பாக்கியைச் செருகினேன்ன். நாகராஜ் அலறினான். “வுட்ரு என்ன”

மெல்ல பிடியை விடுவித்தேன்.
“இப்ப சொல்லு உனக்கு என்ன வேணும்?”
“இந்த தெவுடியா”
“அது முடியாது. நான் விஜிய கல்யாணம் பண்னிகிட்டேன்”
“எம் பொண்டாட்டிய நீ எப்புட்ரா கல்யாணம் பண்ணுவ சிதி”
துப்பாக்கியை அவன் நெற்றியில் வைத்தபடி “இங்க பார் ஒர்ரே இழுப்புதான்.. தெறிச்சிடுவ.. சாக்குல கட்டி, கடல்ல தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பன்… விஜிய நீ கல்யாணம் பண்ணிகிட்ட ஒரே காரணத்துக்காகத்தான் உன்கிட்ட இன்னும் பேசிட்டிருக்கேன்.. நீ எங்க வாழ்க்கைல குறுக்க வராம இருக்க உனக்கு எவ்ளோ வேணும் சொல்?|

நாகராஜ் அருகில் வைத்திருந்த புட்டியை வாய்க்குள் சரித்துக் கொண்டான்.

“இருவத்தைந்தி கொடுத்திரு நான் எங்கனா வடநாட்டுக்கா போய் உக்கந்துக்கரேன்”
“பதினைஞ்சி தரேன். போய்டு” என்றபோது விஜி அதிர்ந்து கத்தினாள்.

“என்ன பேசுறீங்க நீங்க… இதோ ஒரே போன் போதும்.. போலீசு இவன வந்து அள்ளிட்டு போய்டும்... என்ன பேரம் பேச இவன் யாரு?.. என்றபடியே தொலைபேசிக்காய் எழுந்து போய் ரிசீவரைக் கையிலெடுத்தாள். நாகராஜ் மதுப்புட்டியை எடுத்து அவள் மீது வீசியெறிந்தான். புட்டி நங் கென அவளின் பின்னந்தலையில் தாக்கியது. விஜி தலையைப் பிடித்தபடி பக்கவாட்டில் சாய்ந்தாள். நான் ஓடிப்போய் அள்ளிக்கொண்டேன்.

நாகராஜ் இரைந்தான். “டேய் ஓத்தா, நாளைக்கு காலைல அரியாங்குப்பம் படகுதொறைல பதினைஞ்சி லட்சத்தோட வா. நான் வாங்கினு கம்முனு போய்டுரேன் இல்லனா மதியானம் நீங்க ரெண்டு பேரும் ஒட்டுத் துணி இல்லாம ரோட்ல செத்து கெடப்பீங்க..நான் யாரு இன்னாங்கிறதலாம் இந்த தேவுடியாகிட்டயே கேட்டுக்கோ என்றபடியே எழுந்து மாடிப்படிக்காய் வெளியேறினான்.

மறுநாள் காலை போய் பணத்தைக் கொடுத்தேன். எல்லா பற்களும் தெரிய இளித்தான். “சேப்பு என் பொண்டாட்டி ராணி மாதிரி நல்லா பாத்துக்க” என்றான். எதுவும் பேசாமல் திரும்ப வந்தேன். விஜிக்கு தலை லேசாய் புடைத்திருந்தது. அழுதபடி சோபாவில் படுத்துக் கிடந்தாள். மீண்டு வர ஓரிரு நாட்கள் பிடித்தன. அவனை சுத்தமாய் மறந்திருந்தபோது இப்போது திடீரென எங்கிருந்து முளைத்தான் என பிடிபடாமல் இருந்தது.

ஒருவேளை விஜி முகத்தில் ஏதாவது மயக்க வஸ்துக்களை தெளித்து அவளை மயங்கச் செய்து சல்லாபித்திருப்பானோ என்ற சந்தேகம் வந்தது. எது எப்படி இருந்தாலும் விலகிவிடுவது என முடிவு செய்தேன். எந்த சப்தமும் எழுப்பாது வந்தபடியே திரும்பிப் போய்விடுவதுதான் உத்தமம். என்ன இருந்தாலும் இடையில் வந்தது நான் தான் என்றெல்லாம் பல சமாதானங்களை எனக்கு நானே சொல்லிக்கொண்டபடி கீழே வந்தேன். விஜி ஹாலில் குத்துக்காலிட்டு முகத்தை கால்களுக்குள் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தாள்.

- மேலும்

2 comments:

Mohan said...

ஒவ்வொரு பாகமும் மிகவும் அருமையாகப் போய்க்கொண்டிருக்கிறது!

கவிதா | Kavitha said...

//ஆறு பத்திகளில் மிக சுவாரசியமாய் எழுதப்பட்ட மாற்றுக் கலவி, மாற்று உச்ச பத்திகளை வருத்தத்தோடே நீக்குகிறேன்//

சென்ற பதிவில் தான் சொல்லியிருந்தேன். முகவரியோட இமெஜ் க்குள்ள மாட்டிக்காம எழுதறீங்கன்னு என் கண்ணு பட்டு போச்சோ?? :))

ம்ம்ம்.. உங்க இஷ்டம். .கதைக்கு அது அவசியம் னு தேவைப்படும் போது எழுதி இருக்கலாம்..

ஏன்ன்னா.. மற்றவை க்கூட அப்படி அவசியத்தை கருதி எழுதறீங்கன்னு தான் நினைத்தேன்..

Featured Post

test

 test