Thursday, January 24, 2019

சலனமற்று முன் நகரும் புராதனப் படகு- த்வீபா




கிரிஷ் காசரவள்ளி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான த்வீபா  ( தீவு) கன்னடப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்துவிட்டு இன்னும் அத் திரைப்படத்தின் நினைவுகளோடே சுற்றிக் கொண்டிருக்கிறேன். வாழ்நிலம் மீதான மனிதனின் உரிமை,  தொன்மத்துடனான மனித இருப்பு, இயற்கையுடனான வாழ்வியல் பிணைப்பு, அதிகாரங்களும் அரச யந்திரங்களும் உருவாக்கும் சூழலியல் சீர்கேடு, இறுதியாய் பெண் குறித்தான தெய்வ ஒப்பீடுகள் என இந்தத் திரைப்படம் எல்லாக் காலத்திற்கும் பேசப்பட வேண்டிய நுட்பமான விஷயங்களை மிகச் சரியாய் பேசியிருக்கிறது.

ஒன்றன் பின் ஒன்றாய் இந்தத் திரைப்படம் தொடும் உணர்வுகளும் அரசியலும் நிலைப்பாடும் நிலைகுலைய வைக்கின்றன. ஆழமான நதியின் மீது சலனமற்று முன் நகரும் புராதனப் படகைப் போல இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. திரைப்படத்தின் எந்தக் காட்சியையுமே கிரீஷ் காசரவள்ளி உருவாக்கவில்லை. கதைப் பேசும் இடத்திற்கே சென்று மொத்த சம்பவங்களையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இயற்கையோடு இணைந்து ஒரு திரைப்படம் உருவாவது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால் த்வீபா அப்படியே வந்திருக்கிறது. மிகப்பெரிய மாஸ்டரால் மட்டுமே இயலக் கூடிய விஷயங்கள் இவை. அந்த வகையில் கிரீஷ் காசரவள்ளியை உலகத்தின் மிகச் சிறந்த மாஸ்டர் இயக்குனர்களின் வரிசையில் வைத்துப் பேசிவிட முடியும்.

த்வீபா - சாகித்ய அகடாமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் நா டிசெளசாவின் நாவல் - கன்னடத்தில் சாகித்ய அகடாமி விருது பெற்ற என்கிற அடைமொழியை எந்தத் தயக்கமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கு தகுதியானப் படைப்புகளுக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது. தமிழில் எழுதத்தான் கூச்சப்பட வேண்டும்.  இந்த நாவலைத்தான் கிரீஷ் திரையில் கொண்டு வந்திருக்கிறார். நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியம் கன்னடத்தில்தான் எழுதப்படுகிறது. இந்தக் கூற்றை நிரூபிக்க இதோ இன்னொரு உதாரணம் இந்த நாவல். 

கன்னட மொழிபெயர்ப்புகள் தமிழில் அதிகம் நிகழ வேண்டும். எழுத்தாளர் விவேக் ஷன்பேக் தவிர வேறு யாரும் சமீபமாய் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. வங்கம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகும் மிகச் சிறந்த படைப்புகளும் தமிழிற்கு வருவதில்லை. சினிமாப் பின்புலம் கொண்ட அல்லது தன்முனைப்பும், பிரபல வெறியும் கொண்ட பிற மொழி எழுத்தாளர்களின் படைப்புகள் அதேத் தன்மைகளைக் கொண்டிருக்கும் தமிழர்களால் மொழிபெயர்க்கப்படுகிறது. இது இந்திய இலக்கியத்தையே குழி தோண்டிப் புதைக்கும் செயலாகவே பார்க்கிறேன். தமிழில் மொழிபெயர்ப்போர் குறைந்தபட்ச நேர்மையுடனாவது இயங்க வேண்டிய தேவை இப்போது அதிகம் உருவாகியிருக்கிறது. மொழிபெயர்ப்புகளில் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருந்த நேஷ்னல் புக் ட்ரஸ்ட் இப்போது இயங்குகிறதா என்பதும் தெரியவில்லை.

இந்தப் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான நாகியை செளந்தர்யா ஏற்று நடித்திருக்கிறார். உயிரைக் கொடுத்து நடிப்பது எனச் சொல்வார்களே அதற்கு உதாரணமாக செளந்தர்யாவின் இந்தக் கதாபாத்திரத்தைச் சொல்லிவிடலாம்.  தவிர செளந்தர்யாவே இப்படத்தின் தயாரிப்பாளர். நிஜமாகவே செளந்தர்யாவின் இழப்பு இப்போதுதான் என்னை பாதித்திருக்கிறது. இவ்வளவு மகத்தான நடிகையை தமிழ் சினிமா எவ்வளவு மோசமாகப் பயன்படுத்தியிருக்கிறது என்பதை நினைத்தால் இன்னும் எரிச்சல் மண்டுகிறது. கூரியப் போர் வாட்களை  வெங்காயம் நறுக்க மட்டுமே பயன்படுத்தும் அகங்காரம் கொண்டது நம் தமிழ் சினிமா. அதோடு ஒரு தசாம்தத்திற்கு ஓரிருவர் என உருவாகி வரும் கலைஞர்களையும் பணத்தாலே அடித்து  மிக மோசமான மசாலாப்பட இயக்குனர்களாக மாற்றிவிடும் வல்லமையும் கொண்டது. போகட்டும். 

இந்தப் படம் குறித்துச் சொல்ல இன்னும் இருக்கிறது. இது வெற்றுப் புலம்பலாகப் போய்விடவிடவே அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


2 comments:

Ramkumar Narasimhan said...

Sir please change the year of movie realeasd. You have wrote 2012.The movie released in 2002

Ramkumar Narasimhan said...

Sir The movie released in year 2002. You have wrote as 2012.
Thanks

Featured Post

test

 test