Thursday, March 30, 2017

முதல் சினிமா



சினிமா எழுத்தாளனாய் என்னுடைய முதல் அறிமுகம் மலையாளத்தில் இருக்குமென எதிர்பார்த்திருக்கவில்லைதாம். ஆனால் அது நிகழ்ந்தே விட்டது. நண்பன் பினு பாஸ்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் கோட்டையம் என்கிற மலையாளப் படத்திற்கு எழுதியிருக்கிறேன். கனடாவில் வசிக்கும் சஜித் தயாரிக்கும் படமிது. 'என்ஆர்ஐ ப்ரடியூசர்' என்கிற பதமெல்லாம் சஜித்திற்கு பொருந்தாது. அவரும் என்னைப் போல மாத சம்பளத்திற்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர். சினிமா மீதிருக்கும் ஆர்வம் மற்றும் பினு மீதிருக்கும் நம்பிக்கை NITEVOX எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கக் காரணமாக இருக்கலாம். இந்நிறுவனத்தில் நானும் ஒரு அங்கம். 

எங்களின் முதல் படம் 30 நிமிடக் குறும்படமான Road Song. இதில் வரும் தமிழ் பகுதியை நான் எழுதினேன். போர்ச்சுகல் நாட்டிலிருந்து பினுவும், கனடாவிலிருந்து சஜித்தும், துபாயிலிருந்து நானுமாய் மூன்று தேசங்களிலிருந்தபடியே இந்தப் படத்தை உருவாக்கினோம். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'ரோட் சாங்' தந்த நம்பிக்கையில் என்னுடைய இருபது வெள்ளைக்காரர்கள் குறு நாவலை திரைக்கதையாக எழுதினோம். பினுவிற்கு இந்த நாவலின் மீதும் அதன் உலகளாவியக் கட்டமைப்பின் மீதும் பைத்தியம் இருந்தது. எப்படியாவது திரையில் இருபது வெள்ளைக்காரர்களைக் கொண்டு வந்துவிட வேண்டுமென இரண்டு வருடங்கள் அலைந்தான். பணம் இருபது வெள்ளைக்காரர்களை காத்திருக்க வைத்திருக்கிறது. கோட்டையம் எங்களைக் கரைசேர்த்தால் அடுத்த படம் இருபது வெள்ளைக்காரர்கள்தாம்.

 கோட்டையத்தின் மூலக் கதை கஃபூரினுடையது. சஜித்தும் பினுவும் ஒருவருடமாக இக்கதையை வேறு வேறு வடிவில் எழுதிப்பார்த்து, பணம் கிடைக்கும் நேரத்தில் காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இறுதி வடிவத்திற்கும் முழுமை செய்வதற்குமாய் என்னை அழைத்தார்கள். நானும் பினுவும் சஜித்தும் சேர்ந்து இத் திரைக்கதையை முழுமை செய்தோம். பத்து இரவுகளை இத்திரைப்படத்திற்காய் அர்ப்பணித்தேன். நிச்சயம் புது அனுபவம்தான். சினிமா வேலை ஒன்றும் நான் நினைத்துக் கொண்டிருந்தது போல அத்தனை ஆடம்பரமானதில்லை. முதல் மூன்று நாட்களிலேயே விழி பிதுங்கியது. மிக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் உழைக்க முடியவில்லை. இரவு முழுக்க தூங்காமல் கதையிலோ எழுத்திலோ விழுந்து கிடக்க முடியவில்லை. நான்கு நாட்கள் குருவாயூரில் இருக்கும் பினுவின் புராதன வீட்டிலும், நான்கு நாட்கள் என் திருவண்ணாமலை வீட்டிலும், இரண்டு நாட்கள் பினுவின் குடிலிலுமாய் அமர்ந்து எழுதி முடித்தோம்.

எங்கள் மூவருக்குமிடையே இருக்கும் அலைவரிசை ஒற்றுமையால் கறாராய் கருத்துகளை முன் வைக்கவும், நிறைய விஷயங்களை களையவும் முடிந்தது. மிக சுதந்திரமாய் இயங்கினேன். இதுவரைக்கும் ஒரு படத்திற்கு மூன்று மொழிகளில் எழுதியிருக்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படத்திற்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பயன்படுத்தினோம். திரைப்பட உருவாக்கத்தில் வேறு சில சாகசங்களையும் செய்திருக்கிறோம் அவற்றைப் பிறகு எழுதுகிறேன். ஸ்க்ரிப்ட் அளவில் படம் பிரமாதமாய் வந்திருக்கிறது. ஒரு சினிமாவின் மற்ற அம்சங்களும் சரியாக சேர்ந்தால் நிச்சயம் கோட்டையம் வெற்றி பெறும்.

எந்தப் பின்புலமும் இல்லாமல் திறமை ஒன்றையே நம்பி அசுரத்தனமாய் உழைத்துக் கொண்டிருக்கும் கோட்டையம் குழுவினற்கு வாழ்த்துகள். படம் வெளிவந்த பிறகு விரிவாய் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Featured Post

test

 test