Tuesday, October 2, 2007

மழைக்கால கிளர்வுகள் 3 -வழிதப்பி ஓய்தல்


மழையடித்து ஓய்ந்த பின்னிரவு பேரமைதியை கிழித்தபடி
காற்றில் அலைகிறது ஆந்தையின் ஒலி
தூக்கம் கலைந்து மெல்லிய இருளினூடே கண்கள் துழாவிப் பார்க்கையில்
சலனமில்லாது சிறு குழந்தையின் சாயல்களில் தூங்கிக்கொண்டிருக்கிறாய்

முன்னிரவில் மழையின் தாள லயத்திற்கேற்றார் போலிருந்தது
உன் முத்த சப்தங்கள்
எப்போது மழையடித்தாலும் மிருகத்தின் புணர்ச்சி வாசம்
உன் உடலிலிருந்து கசிய ஆரம்பிக்கிறது
முதல் மழைத்துளியொன்றை நீ உணரத் துவங்கியவுடன்
உன் உதடுகளுக்கு பசிக்க ஆரம்பித்துவிடுகிறது.

உதடுவழி திறந்து உள்நுழைகையில்
தொலைந்து போன குழந்தையின் தவிப்பை உன்னுடல் ஏற்கிறது
எவ்வித தவிப்புமின்றி மிக நிதானமாய் உன்னுடல் கலக்கிறேன்
நீயோ 'இம்முறை நிதானம்' 'இம்முறை நிதானமென'
ஒவ்வொருமுறையும் வழித்தப்புகிறாய்

இருளில் பிரகாசிக்கும் உன் கண்களிலிருந்து எழுதலாம் இன்னும் பல நூறு கவிதை

4 comments:

குசும்பன் said...

சூப்பர்:)))

பொண்ணு பார்க்க போய் இருக்கிங்கன்னு தம்பி சொன்னார், ஆனா கவிதை எல்லாம் படிச்சா வேற மாதிரில்ல இருக்கு..அவ்வ்வ்வ்வ்

வர வர உங்க கவிதை எல்லாம் புரியுது அய்யனார்:))))

தமிழ்நதி said...

செல பேர் ஊருக்குப் போனாலாவது கொஞ்சம் தலய சாய்க்கலாம்னு பாத்தா, போன இடத்துலயும் பேசாம இருக்க மாட்டேங்கிறானுவ. மழயப் பத்தி எழுதுறேன்னு கெளம்பிடறானுங்க. மழன்னுதான் மொதல்ல பயகல்லாம் தொடங்குறானுவ.. அதுக்கப்பால பாத்தா முத்தம் அது இதுன்னு ஆரம்மிச்சுடறானுவ. கொலை பண்ண வைய்க்கிறதுன்னு தீர்மானம் பண்ணிட்டுத்தான் ஊருக்குக் கிளம்பினயா ராசா...!:)

நாகை சிவா said...

//வர வர உங்க கவிதை எல்லாம் புரியுது அய்யனார்:))))//

அதானே... நமக்கு புரியுற மாதிரி அவரு எழுத ஆரம்பிச்சுட்டாரா.. இல்ல அவரு எழுதுறது எல்லாம் நமக்கு புரிய ஆரம்பிச்சுட்டா...

அய்யயோ... அப்ப நாமளும் இலக்கியவியாதிகள் ஆயிட்டோமா?

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

கவிதைகள் நல்லாயிருக்கு அய்யனார். இந்த மூணு கவிதைகளுக்காகவும் உங்களுக்கு முத்த(மிழ்)க் கவிஞர் என்றொரு பட்டம் வழங்கலாம்னு தோணுது :-))

Featured Post

test

 test