Wednesday, October 17, 2012

பன்னீர்ப் பூ


டி சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன். அவள் மதியம் அணிந்திருந்த இளஞ்சிவப்புக் கரை வைத்த கருப்பு நிறக் காட்டன் புடவை என்னுடலைச் சுற்றியிருந்தது. கருப்பு இன்ஸ்கர்ட்டோடு எனக்காய் முதுகு காட்டித் தூங்கிக் கொண்டிருந்தாள். படுத்தவாக்கில் நகர்ந்து இடுப்பில் கை போட்டு இறுக அணைத்து கழுத்து இடைவெளியில் முகம் புதைத்து மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன். விழித்துக் கொண்டாள் போல. பதறி எழுந்து “ஏய் டைம் என்ன ஆச்சு?” என்றாள். தெரியவில்லை. மதியம் ஒரு மணிக்கு அறைக்குள் வந்தோம். வரும்போதே தூறல் பெரிதாகியிருந்தது. ஈரத் தலையோடு உள்ளே வந்தோம். துடைத்துக் கொள் என துண்டைக் கொடுக்கும்போது மழை சப்தம் அதிகமானதைக் கேட்டுக் கண்ணடித்தாள். "செம்ம சுச்சுவேசண்டா" என்றவளை அதற்குமேல் பேசவிடவில்லை.

 என்னை உலுக்கி எழுப்பினாள். போலாம்....போலாம்...போலாம்... என மூச்சுவிடாது நச்சரித்தவளை திட்டிய படியே எழுந்து புடவையை உடலிலிருந்து பிரித்துக் கொடுத்தேன். கண்ணை மூடியபடி அவள் புடவைக்காக கைநீட்டிய காட்சியை சிறிது நேரம் நீட்டித்தேன். சிணுங்கி மேலே பாய்ந்து புடவையைப் பிடுங்கிக் கொண்டு அறையோடு ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள். எழுந்து கிளம்பினேன். மாலை ஐந்துமணி ஆகியிருந்தது. குளிருக்கு உடல் மெல்ல நடுங்கியது. சன்னல் கதவைத் திறந்து பார்த்தேன். மழை விட்டிருந்தது. சன்னலை ஒட்டியிருந்த மாமரம் கனத்த மெளனத்திலிருப்பதைப் போல் பட்டது. பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்துகொண்டு வேறொரு பெண்ணாய் வெளியில் வந்தாள். இளஞ்சிவப்பு நிற ஜாக்கெட்டும் கருப்புக் காட்டன் புடவையுமாய் அவளைப் பார்க்க எப்போதோ விரும்பியிருந்தேன். ஏதோ ஒரு சினிமா படத்தில் கதாநாயகி அணிந்திருந்த உடை. பார்த்தவுடன் பிடித்துப் போய் இவளிடம் சொன்னேன். இன்றைக்காய் எடுத்து வைத்திருந்தாள் போல.

 போலாம்பா என அருகில் வந்தவளை மெதுவாய் அணைத்துக் கொண்டேன். சொன்னா கேள்.. போலாம் வா.. டைமாச்சி.. என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்த அவளின் உதடுகளை சோம்பலாய் கவ்விக் கொண்டேன். சற்றுத் திமிறி என்னைப் பலவந்தமாய் விலக்கி தன் உதடுகளை உள்ளங் கையால் திரும்பத் திரும்ப அழுந்த துடைத்துக் கொண்டாள். அப்படித் துடைக்கும்போது அவள் நெற்றி சுருங்கியிருக்கும். அசூசையுமல்லாத கோபமுமல்லாத ஒரு விநோத முக பாவணை வெளிப்படும். எனக்கு இது ஒரு விளையாட்டாய் இருந்தது. அவள் ஒவ்வொரு உதட்டு முத்தத்திற்கும் இப்படி ஆவாள் என்பதுதான் இன்னும் சுவாரசியம்.

 ப்ளீஸ் போலாம் என்றாள். பெருமூச்சு விட்டபடி அறைக்கதவைத் திறந்தேன். வெளியேறினோம்.

தெருவில் மழை நீர் சிறுசிறு குளங்களை உருவாக்கிவிட்டிருந்தது. ஏழு மணிக்கான இருள் சூழ்ந்திருந்தது. கரு மேகங்கள் உடையும் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தன. அவளின் விரல் பிடித்தேன்.

 “விடு இதென்ன ரோட்ல?”
 .....

 “நீ ஏன் வர? நான் போய்க்கிறனே”

 பதில் சொல்லவில்லை. பிரதான சாலைக்கு வந்தோம். மழையில் எல்லா சிறுநகரங்களும் ஒன்று போலவே காட்சியளிக்கின்றன.

 “டீ குடிக்கலாமா”

 “வேணாம்டா டைம் ஆகிருச்சி”

 “அப்ப பஸ் ஸ்டாண்ட் உள்ள போக வேணாம் இங்கயே நிப்போம்”

திருத்தணியிலிருந்து வரும் பேருந்து நின்றது. ஏறிக் கொண்டோம். கூட்டம் இல்லை. முன் வரிசை சீட்டுகள் தவிர்த்துப் பின்னிருக்கைகள் காலியாகக் கிடந்தன. மொத்தப் பேருந்தே நனைந்து நடுங்கிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. சன்னல்கள் அடைக்கப்பட்டு மெல்லிருளாய் கிடந்தது. இடப்புறம் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தோம். சன்னலை மேலேற்றினாள். ஈரக் காற்று முகத்தை விசிறியது. திருவள்ளூர் ரயில்வே பாலத்தைக் கடந்தவுடன் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. முகமும் ஆடைகளும் நனையத் துவங்கியதும் சன்னலை மூடினாள். எனக்கு மழையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சொல்லவில்லை.

 என் வலக்கை விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு இறுக்கினாள். குளிர்தில்ல என சிரித்தாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழையில் அவளின் கேசம் நெற்றி தோள் எல்லாம் நனைந்திருந்தன.

 “ஈரமான பூ போல இருக்க நீ” என்றேன்.

 “என்ன பூ? ரோஜாவா? இல்ல உனக்கு பன்னீர்பூ தான பிடிக்கும் ஈரப்பன்னீர் பூவா நானு?”

 “இல்லடி நீ பன்னிப்பூ”

என்றதும் வெடித்துச் சிரித்தாள்.

“நான் பன்னி சரி ஆனா நீ எரும. ஹப்பா! என்ன வெயிட்டு”

 நடத்துனர் அருகில் வந்ததும் அவசரமாய் கைப்பை திறந்து பணமெடுத்து நீட்டி ஒரு ஐயப்பன்தாங்கல், ஒரு அசோக் பில்லர் என்றாள். டிக்கெட்டை வாங்கி என் சட்டைப் பையில் திணித்தாள். உனக்கு நான் பன்ற கடைசி செலவு. டிக்கட்ட பத்ரமா வச்சிக்க என்றாள். அவள் கண்களை ஆழமாய் பார்த்தேன். நான் பார்ப்பதை உணர்ந்து கண்களை இன்னும் விரித்தாள்.  “நல்லா பாரு. இனிமே உன் பார்வைக்கெல்லாம் மயங்கமாட்டேன்” என்றாள். பின்னால் திரும்பி யாரும் பார்க்கவில்லையென உறுதிபடுத்திக் கொண்டு அவள் உதட்டைக் கவ்வி இழுத்தேன். என் மார்பைப் பிடித்துத் தள்ளி விடுவித்துக் கொண்டு உள்ளங்கையால் உதட்டைத் திரும்பத் திரும்ப அழுந்த துடைக்க ஆரம்பித்தாள். நான் சிரித்தேன்.

 “உன் ஃப்ர்ஸ்ட் நைட்லயும் இப்படித் தான் பண்ணியா?.. “

 “எப்படி?.. “

 உதட்டைத் துடைத்து துடைத்துக் காண்பித்தேன்.

 “அவன் உன்ன மாதிரி கவிஞன்லாம் கிடையாதே. டைரக்ட் மேட்டர்தான். அன்னிக்கு அவசர அவசரமா முடிஞ்சதும் அவசர அவசரமா எழுந்து போய் கப் கப் னு சிகரெட் புடிச்சான். எனக்கு சிரிப்புதான் வந்தது..”

 “அப்ப சிரிச்சயா? “

 “இல்ல ஆனா அதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் நைட்ட நினைச்சி நிறைய நாள் சிரிச்சேன். “

 “இப்ப சிரிப்பு வருதா”

 “இல்ல” ..

இரண்டு நிமிடம் அநிச்சையாய் மெளனத்திற்குப் போய் மீண்டோம்.

 மீண்டும் என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

 “நைட்டு என்னடா பசங்களோட சரக்கடிக்க போறியா?”

 “தெரில. அடிப்பேன்னுதான் நினைக்கிறேன்.” 

“ஓ சோகத்துல இருக்கியோ?”

 “இல்லயே ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என வெறுப்பாய் சொன்னேன். 

முதுகிற்குப் பின்னால் கைவிட்டு என்னுடலை அவளுக்காய் இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 “சாரி கேக்கணுமா உங்கிட்ட”

 “இல்லடி ஆனா என்ன விட்டு போய்டாத ப்ளீஸ்”

 “ஐயோ இத நீ லட்சம் முற சொல்லிட்டே நானும் லட்சத்தி ஒரு முற விளக்கம் சொல்லிட்டேன். மறுபடியும் ஆரம்பிக்காத ப்ளீஸ்.” 

மெளனமானோம்.

 மழையின் வேகம் சீராய் அதிகரிக்கத் துவங்கியது. சாலையில் ஓடிய நீரைக் கிழித்துக் கொண்டு பேருந்து விரைந்தது. பூந்தமல்லி வந்ததே தெரியவில்லை விசில் சப்தத்தோடு ஐயப்பன் தாங்கல் என்றார் நடத்துனர். இருவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.அதுக்குள்ளவா வந்திருச்சி என்றாள். நான் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் நின்றுவிட்டு பேருந்து கிளம்பியது மீண்டும் தன் கையை முதுகிற்குப் பின் துழாவி என்னை இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 நகரம் வெள்ளக் காடாகியிருந்தது. போரூரிலிருந்து பேருந்து ஊர்ந்துதான் போய் கொண்டிருந்தது. நாங்கள் மெளனத்திலிருந்து மீளவே இல்லை. மழையை, பைத்தியம் பிடித்த வாகன நெரிசலை சோடியம் விளக்குகளின் மங்கல் ஒளியோடு பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருந்தோம். கத்திப்பாரா விற்கு ஒரு கிமீ முன்பே வண்டி சுத்தமாய் நின்றுவிட்டது. இறங்கலாம் என எழுந்து கொண்டாள். இறங்கினோம்.

ஆட்டோ, பேருந்து என சகல வாகனங்களும் பெருங்குரலில் கத்திக் கொண்டிருந்தன. பேருந்து வந்த வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

 “ரொம்ப டைமாயிருச்சா”

 “இல்லபா பரவால்ல”

 நடக்க நடக்க நெரிசல் குறைந்து கொண்டே வந்தது. எதுவுமே பேசத் தோன்றவில்லை. எல்லாம் தீர்ந்த வெளியில் நடந்து கொண்டிருந்தோம். என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள். இது ரோடாச்சே என்றேன். புன்னகைத்து இன்னும் இறுக்கிக் கொண்டாள். சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. எங்களுக்கு சமீபமாய் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஐயப்பன் தாங்கல்? என்றோம். ஓட்டுனர் தலையசைத்தார். ஆட்டோவில் அமர்ந்து மீண்டும் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

மழை சுத்தமாய் நின்று போயிருந்தது. அடுத்த அரைமணிநேரப் பயணம். ஐயப்பன் தாங்கல் வந்துவிட்டது. அந்த பஸ் ஸ்டாப் தாண்டி நிறுத்துங்க என ஓட்டுனருக்காய் குனிந்து சொன்னாள். எனக்காய் நன்கு திரும்பி கடைசியா எனக்கொரு முத்தம் கொடு என்றாள். எனக்குள் அதுவரை அடங்கிக் கிடந்த ஏதோ ஒன்று உடைந்து சப்தமாய் அழுகையாய் வெளியேறியது. ஓட்டுனர் திகைத்து சப்தமெழ வண்டியை நிறுத்தினார். முகத்தை மூடிக் கொண்டு அழுத என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள். நெற்றியிலும் கன்னத்திலும் உதட்டிலுமாய் மாறி மாறி முத்தமிட்டாள். பின்பு மெல்ல தன்னை விலக்கிக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

 0

6 comments:

rajasundararajan said...

'கொசுறு' அல்லது 'ஒட்டுதல்' என்று உணர்த்தும் கதைக்கு ஏன் 'பன்னீரும் பூவும்' என்று தலைப்பு இட்டீர்கள்?

மென்னிருள் = மெனமை + நிருள் அல்லவா? நிருள் என்றால் என்ன?

சிவக்குமரன் said...

நல்லாருக்கு அடர்கானகப் புலி அவர்களே!

சிவக்குமரன் said...

நல்லாருக்கு அடர்கானகப் புலி அவர்களே!

Unknown said...

தண்ணீரில் மிதக்கிறது நெருப்பூ...

Unknown said...

தண்ணீரில் மிதக்கிறது நெருப்பூ...

Anonymous said...

Thx for your post, I really enjoy your blog. Long time lurker, first time commenter, you know the drill. I tried to share this one time before, I don’t think it posted correctly…hopefully it will this time!

Featured Post

test

 test