Thursday, June 16, 2022

திரையே நிகழாக - சினிமா



லுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பரபரவென ஓடிக்கொண்டிருந்த வேலை கடந்த வாரத்தோடு முடிந்தது. கிடைத்த நேர மிகுதியில் ஜோ அண்ட் ஜோ , டான், இன்னலவரெ, சிபிஐ 5, ஐங்கரன், ஜனகனமண, நெஞ்சுக்கு நீதி, சேத்துமான், 12த் மேன் என தமிழிலும் மலையாளத்திலும் வரும் அனைத்து சுமார் படங்களையும் பார்த்து வைத்தேன். 

சிபிஐ 5 மரண மொக்கையாக இருக்கவே இது எப்படி ஐந்து படங்கள் வரை வந்திருக்க முடியும் என முதல் படமான சிபிஐ டைரிக் குறிப்பு (மலையாளம்) படத்தையும் பார்த்தேன். அதுவும் சுமார்தான். கே.மது என்பவர்தான் இந்த சிபிஐ வரிசையின் இயக்குநர். ஒரே மாதிரியான அலுப்பூட்டும் பேட்டர்ன், இது எப்படி 5 படங்கள் வரை வந்தது என்பதும் தெரியவில்லை.

ஜோமோன் ஜோமோள் படத்தின் ட்ரைலர் எனக்குப் பிடித்திருந்தது. மாத்யூவ் தாமஸ் பயலை கும்ப்ளாங்கி நைட்ஸிலிருந்தும் நஸ்லெனை தண்ணீர் மத்தான் தினங்களிலிருந்தும் பிடித்துப் போனதால் சற்று ஆவலாகத்த்தான் காத்திருந்தேன். ஆனால் படத்தில் ’காரியமாயிட்டு’ ஒன்றுமில்லை. நிகிலா விமலைப் பார்க்கப் பிடித்திருந்தது. 

ஜனகனமண படத்தின் கடைசி இருபது நிமிடங்களை வெட்டி வீசி இருந்தால் நல்லதொரு படமாக வந்திருக்கும். சங்கிகளின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக பெங்களூரைக் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம்தான் ஆனால், தமிழ், மலையாளம், கன்னட மொழிக் கலப்பு சரியாக வரவில்லை. மிகவும் செயற்கையாக இருந்தது. இருப்பினும்  படத்தில் பேசப்படும் அரசியல் முக்கியமானது. இந்திய அளவில் அரசியல் கூறுணர்வு கொண்டவர்களில் மல்லுகள் முதன்மையானவர்கள் என்பதை நிரூபித்திருக்கும் இன்னொரு படம். 

இன்னலவரெ மற்றும் ஐங்கரன் படங்களை முழுமையாகப் பார்க்க முடிந்தது ஆனால் மனதில் நிற்கும்படி ஒரு காட்சியும் இல்லை. இந்த ஜீ.வி. பிரகாஷ் இருபது படங்கள் வரை நடித்திருப்பார் என நினைக்கிறேன். ஏன் ஒரு படம் கூட பேசும்படியாக இல்லை என்பது தெரியவில்லை. அவர் மீண்டும் இசைக்குத் திரும்பலாம். தானொரு சினிமா மெட்டீரியல் இல்லை என்பதை  அவரே விரைவில் உணரும் காலம் வரட்டும்.

நெஞ்சுக்கு நீதி மிக மோசமாக படமாக்கப்பட்டிருந்தது. ஆர்டிகள் 15 படத்தின் துவக்கக் காட்சியில் கொட்டும் மழையில் ஒரு நாட்டுப்புறப் பாடல் வருமில்லையா மொத்தப் படமும் அந்த ஒரு காட்சிக்கு இணை வைக்கக் காணாது. ஆனாலும் இந்தப் படம் பேசும் அரசியல் முக்கியமானது. சாதியின் பெயரால் இன்றும் நிகழும் குரூரக் கொலைகளுக்குப் பின்னிருக்கும் வன்மத்தை பேசும் கதைக்களம் என்பதால் குறைந்த பட்சம் கட்சிக்காரர்களாவது பார்த்து விழிப்படையட்டும் என்கிற நல் நோக்கத்தில் தனியாக விமர்சனம் என எதையும் எழுதவில்லை. ஜீ.வி. பிரகாஷூக்கு சொன்னதுதான் உதயநிதிக்கும். ஜீ.வி யாவது தன்னால் முடிந்த அளவுக்கு சட்டையைக் கிழித்துக் கொள்கிறார்.  உதயநிதியோ சவரம் செய்யக் கூட மெனக்கெடுவதில்லை. இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஒட்டு மொத்த தமிழ்சினிமாவும் அவர் கைகளில்தான் என்பதால் நமக்குச் சொல்ல ஒன்றுமில்லை. 

டான் – நூறு கோடி வசூலித்ததாக செய்திகளைப் பார்த்தேன். உண்மையாகவா? ஒரே ஒரு காட்சியைக் கூட ஒருவரும் புதிதாக யோசித்து வைக்கவில்லை. க்ரிஞ் டு த கோர். இந்தப் படமெல்லாம் இந்த ஓட்டம் ஓடுவது வரவிருக்கும் புது இயக்குநர்களின் திறமைகளை மிக மோசமாகக் குறைக்கும். ஏற்கனவே தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி அரை வேக்காடுகளால் நிரம்பி வழிகிறது. டான் போன்ற படங்களின் வெற்றி அரையைக் காலுக்கும் கீழாக்கும்.

சேத்துமான் படத்தின் கதைக்களம் முக்கியமானது. பெருமாள் முருகன் கதைகளை வாசித்திருப்பதால் படம் முதல் காட்சியிலிருந்தே உள்ளே இழுத்துக் கொண்டது. ஆனால் எதையோ சொல்ல வந்து எதையுமே சரியாக சொல்லாமல் விட்ட உணர்வே படம் பார்த்த பின்பு எழுந்தது. விக்ரம்களின் காலத்தில் இப்படி பிராந்திய உணர்வுடன் படமெடுக்க முன்வந்ததற்காக இயக்குநர் மற்றும் படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்.

12த் மேன் -  ”சும்மாதான இருக்கோம் ஒரு படம் எடுத்து வைப்போம்”  என்பது போல இருந்தது. ஐந்தாறு ஃபீல்ட் அவுட் நாயகிகளையும் நாயகர்களையும் உடன் மோகன்லாலையும் கூட்டிக் கொண்டு இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒரு வீக் எண்டட் ட்ரிப் போய் இருப்பார்கள் போல அங்கு வைத்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. இதைப் போன்ற ஒரே அறையில் / களத்தில் நிகழும் பல துப்பறியும் படங்களை பார்த்திருந்தாலும் முழுப் படத்தையும் பார்க்க வைத்த சுவாரசியம் திரைக்கதையில் இருந்தது. ஆனால் புதிதாக ஒன்றுமில்லை. 

No comments:

Featured Post

test

 test