Monday, November 10, 2014

உன்னத எழுத்தின் அய்ம்பது தடைக்கற்களும் ஒரே ஒரு உண்மையும்


    நிகழ்திரை யின் கடைசிக் கட்டுரை என்று எழுதினேன் என தேடிப்பார்க்க வேண்டும். கடந்த டிசம்பர் மாத துவக்கமாக இருக்கலாம். அதற்குப் பிறகு ஒன்றுமே எழுதவில்லை. இந்த தேக்கம் எப்படி வந்தது? இவ்விரல்களால் இந்த எழுத்துக்களைத் தட்டச்சி எத்தனை மாதங்களாயிற்று? நான் எழுதாமலிருப்பதற்கான காரணங்கள் என்ன என யோசித்துப் பார்த்ததில் உடனடியாய் அய்ம்பது காரணங்களைப் பட்டியலிட முடிந்தது. இதில் ஒரே ஒரு உண்மைதான் இருக்கமுடியும் என அந்தரப்பட்சி கத்திக் கதறிச் சொல்கிறது. அதைக் காரணம் கேட்டவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளவும்.

 1. மனம் ஒன்றவில்லை.

 2. எழுத ஒன்றுமேயில்லை.

 3. எழுத பயமாக இருந்தது.

 4. எழுதத் தயக்கமாக இருந்தது.

 5. இனி உண்மையை எழுத முடியாதெனத் தோன்றியது.

 6. பாவணைகளின் மீது பெரும் சலிப்பு வந்தது.

7. எழுத்தென்பதே பாவணையாகத்தான் இருக்க முடியும் என்கிற ஆழமான நம்பிக்கை விழுந்தது.

8. என்னை யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

9. எனக்குத் தனிமை தேவைப்பட்டது.

10. என் சுற்றங்களை எனக்குப் பிடிக்கவில்லை.

11. இந்த மெய்நிகர் உலகம் அலுப்பூட்டியது.

 12. எழுத்துக்கள் வழி உருவாகும் அல்லது எழுத்துக்களால் உருவாகும் உணர்வுகள் அத்தனையும் போலித்தனமானவை எனத் தோன்றியது.

 13. இணையம் வழியோ அல்லது அச்சு வழியோ எழுத சலிப்பாக இருந்தது.

 14. எழுத, என்ன எழுத, எழுதி என்ன ஆக, என ஒரு புள்ளியில் விழுந்த அவநம்பிக்கை பன்மடங்காகப் பெருகியது.

 15. எழுத சோம்பலாக இருந்தது.

 16. என்னால் புதிதாக எதுவுமே எழுத முடியாதெனத் தோன்றியது.

 17. இனி புதிதாக எழுத எதுவுமே இல்லை எனவும் தோன்றியது.

 18. நானும் எழுத வேண்டும் என்கிற உந்துதலை வாசித்த எந்த எழுத்துக்களுமே தரவில்லை.

 19. என் வாழ்வில் சிக்கல்களே இல்லை.

 20. என்னை இந்த வாழ்வும் மனிதர்களும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். 

21. நான் சக மனிதர்களை தவிர்க்க விரும்புகிறேன்.

 22. என்னிடம் சுயநலம் மிகுந்தது.

 23. பேராசை புகுந்தது.

 24. உச்சபட்ச சோம்பலனாக மாறிப்போனேன்.

 25. காணும் காட்சிகள் யாவற்றையும் வார்த்தைகளாய் மாற்றி அதில் சில புனைவு சுவாரஸ்யங்களை நுழைத்தோ அல்லது பழைய மிகப்பழைய நினைவுகளில் திளைத்து அதில் சமபங்கு பகற் கற்பனையைப் புகுத்தி எழுத்துக்களாய் மாற்றியோ திருப்தியடையும் நிகழின் மீது மிகுந்த பரிதாபம் எழுந்தது. 

26. என் முதல் நாவல் பழி மீதிருக்கும் வசீகரம் குறையவேயில்லை.

 27. பழியைத் தாண்டி என்னால் எழுத முடியாதெனத் தோன்றியது.

 28. என்னை இந்த முட்டாள் சமூகம் கொண்டாடவேயில்லை.

 29. குறிப்பாக ஃபேஸ்புக் பெண்களுக்கு என்னைத் தெரியவேயில்லை. பிறகு எழுதி என்னாகப்போகிறதென எழுதாமல் இருந்து விட்டேன்.

 30. நான் எந்தக் குழாமிலும் இல்லாததால் என் பெயர் எல்லாத் தரப்பிலும் மிகக் கவனமாகத் தவிர்க்கப்படுகிறது. அந்த சிரமத்தை அவர்களுக்கு ஏன் வைப்பானேன்?

 31. சமகால எழுத்து சல்லிப் பயல்களிடம் சிக்கிக் கொண்டதால் எழுதவில்லை.

 32. இலக்கியத்தை காசாக்கி விளம்பரமாக்கி சந்தி சிரிக்க வைக்கும் வியாபாரிகள் மிகுந்திருக்கும் இந்த காலகட்டத்தில் நான் எழுதாமல் இருப்பது எனக்கும் எழுத்திற்கும் நல்லது.

33. வாசிப்பதை விட, எழுதுவதை விட , சினிமா பார்க்கப் பிடித்திருந்தது

34. வலைப்பூவில் எழுதி, அதற்குப் பொருத்தமாய் ஒரு படம் தேடி, போஸ்ட் செய்து, கூகுல் பள்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் இணைப்பு கொடுத்து அதிகபட்சம் முந்நூறு பேரை படிக்க வைப்பதால் என்னாகி விடப்போகிறது?

35. தமிழ் இணைய சமுகத்திற்கு தமிழ் சினிமாதான் சகலமும். இந்த ஆட்டு மந்தைகள் வாசிக்க ஏன் இந்தனை பிரயத்தனம்?

36. சும்மா இருக்கப் பிடித்திருந்தது.

37. எழுத நிறைய இருந்தும் எழுதாமலிருப்பதுதான் உன்னதம். அது தன்னிலிருந்து தானாய் மிகுந்து வரவேண்டும் ஒருபோதும் செய்யக் கூடாது.

38. எழுத்து ஆன்மாவிலிருந்து உருவாகவேண்டும். காலையெழுந்தவுடன் கக்கூஸ் என்பது மாதிரி ஆகிவிடக் கூடாது.

39. ஒரே விஷயத்தைத் திரும்ப திரும்ப எழுதாதே

40. சினிமா பற்றியே எழுதாதே. ஏற்கனவே யாரும் சினிமா தாண்டி சிந்திப்பதேயில்லை.

41. தமிழ் சினிமாவிற்கும் அதில் பணிபுரிவோருக்கும் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் மிரட்சியடைய வைக்கிறது. ஒரு எழுத்தாளனாய் என்னைக் கூசிச் சுருங்கச் செய்கிறது.

42. இலக்கியம் மீதும் தமிழ் எழுத்தாளர்கள் மீதும் இருந்த கவர்ச்சியும் விருப்பமும் போய்விட்டது.

43. வளவளவென எழுதாதே. எழுத்து கச்சிதமாக இருக்க வேண்டும். மிகக் குறைவாக ஆனால் ஆழமாக எழுதுவதே எழுத்து. இது மினிமலிச காலம்.

44. குமாஸ்தா வாழ்வின் இன்பங்களில் திளைப்பதால் எழுதவில்லை.

45. குடும்பம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதால் எழுதவில்லை

46. நான் வெறுப்பில் திளைக்கிறேன்

47. சதா காமத்தில் உழல்கிறேன்

48. பொறாமை மிகுந்திருக்கிறது.

49. இணையத்தில் எங்கு திரும்பினாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களாகவே காணக் கிடைக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை அறிவு சமூகத்தில் எழுதாமலிருப்பதே தனித்துத் தெரிவதற்கான ஒரே வழி.

50. அலுவலக கணினியில் தமிழ் தட்டச்சு கடந்த ஒரு வருடமாக செயல்படவில்லை.

No comments:

Featured Post

test

 test