Tuesday, May 28, 2013

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இரண்டு


பயப்பட வைக்கிற அழகு அவ. அவளோட கண்கள சந்திச்ச நொடி செத்தாலும் மறக்காது. பெண் பார்க்க போயிருந்தப்ப கொஞ்சம் கூச்சத்தோட அவங்க வீட்ல தல குனிஞ்சி உட்கார்ந்திருந்தேன். மருதாணி சிவப்பேறிய பாதங்கள் மெல்ல நடந்து வந்திச்சி. கொலுசு தவழ்ந்து தவழ்ந்து வர சப்தம். அவளோட பாதங்கள் அவ்வளவு கச்சிதமா அளவெடுத்து செதுக்கின மாதிரி இருந்தது. நிமிர்ந்து முகம் பாக்கவே தோணல. பாதங்களையே பாத்திட்டிருந்தேன். கூட வந்தவங்க கிண்டல் கேட்டு நிமிர்ந்து பாத்தேன். அவ ரொம்ப நேரமா என்னையே பாத்திட்டிருந்தாபோல. அவ்வளவு ஆழமா ஒரு பார்வ. சடார்னு சிலிர்த்து போச்சி. அவ கண்கள தாண்டி என்னால எதையும் பாக்க முடியல. எழுந்து வெளிய ஓடிடனும் போல இருந்தது. இவ்ளோ அழக என்னால தாங்க முடியாதுன்னு தோணுச்சி. அவ முகத்த சரியா பாக்க கூட முடியாம, எப்படா இந்த பெண் பார்க்கிற  சம்பிரதாயம் முடியும்னு நெருப்பு மேல உட்கார்ந்திருந்தேன். முடிஞ்சதும் ஓட்டமும் நடையுமா வந்துட்டேன். அம்மாகிட்ட பொண்ண பிடிக்கலன்னுட்டேன். ஏண்டான்னு கேட்டதுக்கு பதிலே தெரியல. அப்புறம் தொடர்ந்து அந்த பார்வை ராத்திரில தூங்க விடாம இம்சிச்சது. அம்மாவும் அந்த பொண்ணையே முடிச்சிடலாம்னு வற்புறுத்துனாங்க. மூணு நாள் கழிச்சி பட்னு சரின்னுட்டேன்.
தாலி கட்டி முடிச்சப்புறம்தான் மண மேடைல அவள சகஜமா என்னால பாக்க முடிஞ்சது. சந்தன நிறம். என்ன விட கொஞ்சம் உயரம். அய்யோ அவ உடம்ப உங்ககிட்ட என்னால சொல்லவே முடியாது. சாகடிக்கிற அழகு அவ. முதலிரவு. அவள தொட்ட உடனேயே சிலிர்த்திடுச்சி. அணைச்ச உடனே எனக்கு எல்லாமே ஆகிடுச்சி. மூணு மாசம் இப்படியே போச்சு. ஒரே ஒரு முற கூட என்னால சரியா பண்ண முடியல. ஆண்ம குறைவா இருக்குமோன்னு சந்தேகமா இருந்தது. எனக்கு பழக்கமான ஒரு பெண்ணிருந்தா. அவளோட கல்யாணத்துக்கு முன்னவே எனக்கு தொடர்பு இருந்தது. அவளுக்கும் என்ன பிடிக்கும். அவளோட ஒரு நாள் உறவு வச்சிகிட்டேன். உறவு திருப்தியா இருந்தது. பிழிஞ்சிட்டடான்னு ஆசையா அலுத்து கிட்டா. அப்போ பிரச்சின மனசுதான்னு தெளிவாகி, ஒரு நாள் நல்லா குடிச்சிட்டு போனேன். நல்ல வெளிச்சத்துல அவளோட துணிகள முழுசா விலக்கினேன். தகதகன்னு அவளோட முலைகள் ரெண்டும் ஜொலிச்சது. மிரண்டுட்டேன். மெதுவா  அவ இடுப்புக்கு கீழ பாத்தப்ப அய்யோ அவ்வளவு பெரிய பூ . அம்மா! எனக்கு மயிர்க்கால்லாம் நின்னுடுச்சி. என்ன மன்னிச்சிடுன்னு சொல்லிட்டு வெளில ஓடிவந்தேன். இருட்டுல எந்த பக்கம் போறேன்னு தெரியாத ஓட்டம். ஓடிக் களைச்சி எங்கயோ விழுந்து மயங்கிட்டேன். மறுநாள்தான் எழுந்திரிச்சி பார்த்தேன். என்னால அவளோட வாழவே முடியாது. அவ மோகினி, சாமி. அவளப் பாக்கவே பயமா இருக்கு. என்னால வீட்ட விட்டு ஓடவும் முடியல. அம்மாவ தனியா விட்டுப் போகவும் முடியாது. “

சாமி அசையாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

போதை தெளிந்து எழுந்து  அவர் முன்னால் நடக்க நான் பின் தொடர்ந்தேன். வேட்டவலம் ரோட்டிலிருந்து வெகுதூரம் நடந்து செங்கம் ரோட்டிற்கு வந்துவிட்டோம். இரமணாசிரமம் தாண்டியதும் சாமி சடாரென வலது புறம் திரும்பி கருமாரியம்மன் கோயில் தாண்டி, பலாக்குளத் திட்டில்  போய் அமர்ந்து கொண்டார். அவர் உட்கார்ந்த இடத்திற்கும் கீழ் இறங்கி இன்னொரு கருங்கல்லில் உட்கார்ந்து கொண்டேன். என்ன ஏது என்றெல்லாம் அவர் கேட்கவில்லை நானாய்தான் சொல்ல ஆரம்பித்தேன். சாமி எதுவும் பேசாமல் தொடர்ந்து மெளனமாய் இருந்தார். குளத்தில் பாதி அளவிற்குதான் நீர் இருந்தது. பாசிக் குளம் கருமையாய் எந்த அசைவுமே இல்லாமல் தூங்கிக் கிடந்தது. எனக்குப் புகைக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் மீண்டும் கஞ்சாப் புகையை உள்ளிழுக்க பயமாய் இருந்தது

அவராய் ஆரம்பிக்கட்டும் எனக் காத்திருந்தேன்.

நிலா அவ்வப்போது மேகங்களுக்கிடையில் எட்டிப் பார்த்ததே தவிர முழுவதுமாய் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. மிக அருகில் மலை துவங்கியது. நேரம் என்னவாகி இருக்கும் எனத் தெரியவில்லை. ஒரு மணியை தாண்டி இருக்கலாம். மனித சஞ்சாரமே இல்லாத இந்த இரவு எனக்குப் புதிது. பிறந்தது முதல் திருவண்ணாமலையில்தான் இருக்கிறேன் என்றாலும் இந்தப் பகுதிகளுக்கு வந்ததே கிடையாது. பலாக்குளத்தின் கரையோரங்களில் மிகப் பிரம்மாண்டமான மரங்கள் அடர்த்தியாய் கருமையைப் பூசிக் கொண்டு நின்றுகொண்டிருந்தன. காலிடுக்கிலிருந்து பாம்பு ஏதாவது வருமா? என யோசனையாக இருந்தது. பாம்பின் நினைவு வந்த பிறகு உட்கார முடியவில்லை. எழுந்து கரையில் நடக்க ஆரம்பித்தேன்.

சாமி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

வீட்டுக்கு போ. பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க வழிய பாரு. உம் பொண்டாட்டி மோகினியும் கிடையாது சாமியும் கிடையாது. சாதாரண பொம்பளதான். எல்லாப் பொம்பளக்கிம் இருக்கிறதுதான் அவளுக்கும் இருக்கு. பூ இருக்கு புண்ணாக்கு இருக்குன்னு நீயா எதையும் கற்பன பண்ணிக்காத

மெளனமாக இருந்தேன்

வேலைக்கு ஏதாச்சும் போறியா?”

ம். ஸ்கூல் வாத்தியார்

அடப்பாவி புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறவனா நீ?”

தலையை குனிந்து கொண்டேன்

பள்ளிகோடம் போறதில்லயா?”

இப்ப ஒருமாசமா போறதில்ல. மெடிக்கல் லீவ். “

எப்ப கல்யாணம் ஆச்சி உனக்கு ?”

நாலு மாசம் இருக்கும்

அப்ப இது ஏதோ பிரம்ம. உம் பொண்டாட்டிய எங்காச்சிம் தனியா கூட்டிப் போ. தகிரியமா அவள பாரு. எல்லாம் சரியா போய்டும்.”

எதுவும் பேசாமல் மெளனம் காத்தேன்.

பொம்பளப் பாவம் சும்மா விடாதுடா. அவள இப்படி தவிக்க விடாத. ஒழுங்கா குடுத்தனம் நடத்துற வழிய பாரு.”

எழுந்து வீட்டிற்காய் நடக்க ஆரம்பித்தேன். அவரைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.


வீதி நாய்களும் குறைக்க சோம்பல்படும் நேரத்தில் கதவைத் தட்டினேன். லேசாய்த்தான் தட்டினேன். வாசல் பல்பு பளிச் சென எரிந்தது. சத்தமே இல்லாமல் கதவு திறந்தது. கதவுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு மிரண்ட பெரிய விழிகளால் என்னைப் பார்த்தாள். ஹாலில் நீல விளக்கு. பார்வையை தாழ்த்திக் கொண்டு சற்று முன்னால் போய் தயக்கமாய் திரும்பிப் பார்த்தேன். நீல வெளிச்சத்தில் பெரிய பெரிய பூப்போட்ட நைட்டியில் பூப்பூவாய் நின்று கொண்டிருந்தாள். பூ பூ மனம் அடிக்கத் தொடங்கியதுஅடித்தடித்து பூ பூ பூ என உரக்க கத்த ஆரம்பித்தது. தலையைப் பிடித்துக் கொண்டு தோட்டத்திற்காய் ஓடினேன்வெளிச் சுவரிற்கும் மாடிக்குப் போகும் படிக்கட்டிற்கும் இடையே ஒரு மிகச் சிறிய இடம் இருக்கும். அங்கு போய் உடல் குறுக்கிப் படுத்துக் கொண்டேன்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test