Monday, November 5, 2012

அத்தியாயம் ஆறு

பரந்த நீர்வெளியின் ஒரு கரையிலிருந்து நீரின் முடிவாய் வீற்றிருக்கும் பசும் மலையைப் பார்க்கும் சந்தோஷம் வேறெதிலும் கிடைத்துவிடாதுதான். விழிப்பு வந்ததும் மனம் உடலை இழுத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டது. நேற்று மாலை இருள் கவிழ ஆரம்பித்திருந்த நேரத்தில் இப்பகுதியைக் கடந்தோம். பார்த்த உடனேயே பிடித்துப் போன இடம். நாளைய விடியலை இங்கிருந்துதான் துவங்க வேண்டுமென நேற்று காரில் போகும்போதே நினைத்துக் கொண்டேன். அதிகாலையில் விழித்துக் கொள்ளும் பழக்கமெனக்கு. கடந்த இருபது வருடங்களாக ஆறு மணிக்கு மேல் ஒரு நாளும் தூங்கியதாய் நினைவில்லை. பதின்மத்தின் துவக்கங்களில் மிகப் பிடித்தமான வேலையே தூங்குவதுதான். அம்மா கும்பகர்ணி எனத்தான் கூப்பிடுவார்கள். கும்பகர்ணி பெயரை ஒருமுறை வாய்விட்டு சொல்லிப்பார்த்தேன். சிரிப்பு வந்தது. என் வாழ்வின் மிகப்பிரமாதமான காலகட்டமது. பள்ளிப் படிப்பு முடித்ததும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது. மனம் அவ்விஷயங்களை நினைக்க விரும்பாமல் உதறிக் கொண்டு மலையையும் நீர்வெளியையும் பார் என்றது.

துர்கா இந்த மலைநகரத்தைத் தான் தேர்வு செய்தாள். அவள் தேர்வுகளின் மீது எனக்கு மறுபரிசீலனையே இருந்தது கிடையாது. கடந்த ஒரு வருடமாய் அவளுடைய தேர்வுகளின்படிதான் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. துர்கா என்னுடைய சலிப்பான நிகழையே கிட்டத்தட்ட மாற்றியமைத்தாள். துர்கா... மிதமான குளிர் விரவிய அதிகாலையில் கிசுகிசுப்பாய் அவள் பெயரை உச்சரித்து சிரித்துக் கொண்டேன். அதிகாலை மேகங்கள் சோம்பலாய் நகராமல் நின்றுகொண்டிருந்தன. சலனமே இல்லாத நீர்பரப்பு. பிப்ரவரி மாதத்தின் இளந்தென்றல் காலை. அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். கரையோர உயர் மரங்கள் கிளைகள் முழுக்கப் பூக்களைச் சூடியிருந்தன. என்ன பெயர் என்றெல்லாம் தெரியவில்லை. மஞ்சள் நிறச் சிறுசிறு பூக்கள் காற்றிற்கு தூறலாய் நீரின் மீது விழுந்துகொண்டிருந்தன. துர்காவைக் கேட்டால் இந்த மரங்களின் முழு வரலாறையும் துல்லியமாக சொல்வாள். எப்போது பூக்கும் எப்படிக் காய்க்கும் என்பதையெல்லாம் அவள் சின்னஞ்சிறு கண்கள் விரிய சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்க மனம் பிரியத்தில் கசியும்.

அப்பாவிற்கு மலை நகரங்கள் பிடித்தமானவை. அவர் தம்முடைய இளம் பிராயத்தை பணத்திற்காய் பாலைவன நாடுகளில் தொலைத்திருந்தார். என்னுடைய ஐந்தாம் வகுப்பு வரை வருடத்திற்கொருமுறை நிறைய சாக்லேட்டுகளோடு வரும் இளம் அப்பாவின் பிம்பம் நன்றாய் நினைவிருக்கிறது. பாட்டி இறந்த பிறகு எங்களோடே நிரந்தரமாக வந்துவிட்டார். அப்பா மிக நிதானமானவர். வார்த்தைகளை அவ்வளவு கவனமாக, கச்சிதமாகப் பேசுவார். அம்மாவிடம் கூட அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. ட்யூஷன் போகும் காலைகளில் ஸ்கூட்டரில் கூட்டிப் போய் விடும் அப்பா. வீட்டில் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் அப்பா. கணக்கு சொல்லித் தரும் அப்பா. ரஜினி படம் கூட்டிப் போகும் அப்பா. கோடை விடுமுறையில் உல்லாசப் பயணம் கூட்டிப் போகும் அப்பா என எல்லாமும் அப்பாதான். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றதும் பொறியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க படிவம் வாங்கப் போன அப்பா சடலமாகத்தான் திரும்பவந்தார். சாலை விபத்து. ஸ்கூட்டரிலிருந்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் போய்விட்டது. இறந்த அப்பாவின் உடலைப் பார்க்கவேயில்லை. பயமாக இருந்தது. இந்த நொடி கூட வயிறு பிசைகிறது. அந்த கணத்தின் தாக்கம் இம்மி அளவு கூட குறையவில்லை. ஒருவேளை அப்பா இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்குமோ?

தலையை உலுக்கிக் கொண்டேன். சதா பிரச்சினைகளில் மூழ்கித் திளைத்து தன்னை வருத்தி இன்பம் காணும் இம்மனநிலையை விட்டொழிக்கவே முடியவில்லை. எழுந்து நடக்க ஆரம்பித்தேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டேன். பச்சை வாசம். விநோதமான பூக்களின் மணம். மூளை சுறுசுறுப்பானது. இருள் முழுவதுமாய் விலகி பச்சை நிறம் பிரகாசிக்க ஆரம்பித்தது. எங்கெங்கிலும் பச்சை. பசுமை. மரங்கள். பறவைகள் விழித்துக் கொண்டுவிட்டன. ஏராளமான கிளிகள் தென்பட்டன. பெரிய மரங்களின் பொந்துகளிலிருந்து ஓரிரு கிளிகள் எட்டிப்பார்த்தன. திரும்பிப்பார்த்தேன். ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதைப் போலிருந்தது. துர்கா விழித்துக் கொண்டு தேடுவாளே எனத் தோன்றியதும் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் தங்கி இருக்கும் விடுதியிலிருந்து இந்த இடம் பத்து நிமிட நடைதான். மீண்டும் உட்காராமல் விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தேன்.

எதிரில் துர்கா வந்து கொண்டிருந்தாள். த்ரீபைஃபோர்த் டாப்ஸ் சகிதமாக வந்து கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். துர்கா நல்ல கருப்பு. நல்ல உயரம். அவள் தோள் உயரம்தான் இருப்பேன். குட்டை யாக முடிவெட்டிக் கொள்வாள். அடர்த்தியான சுருள் முடி. கொஞ்சம் விட்டு வெட்டிக்கோயேன் என்றாள் ப்ச் என மறுத்துவிடுவாள். பார்த்த உடன் உற்சாகமாக கையசைத்தாள். சிரிப்பு வந்தது. வந்ததும் தோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டாள்.

”வெதர் செம ப்ளசண்ட் இல்ல ”

 ”ம்ம்”

”மைண்ட் ஃப்ரீ ஆகிடுச்சா”

”முழுசான்னு சொல்லிட முடியாது. ஆனா நல்லாருக்கு. தேங்க்யூ”

”ம்ம் சரி சாப்டுட்டு ஒரு குட்டி ரவுண்ட் அடிக்கலாம். பதினோரு மணிக்கு வெயில் அடிக்க ஆரம்பிச்சிடும். ஆக்சுவலா இது ஏழைகளின் ஊட்டிதான் ஸோ எப்பவும் குளிர் இருக்காது “

”அட அப்படி ஒரு பேர் இருக்கா”

”சிலர் சொல்வாங்க. தினத்தந்தில கூட அப்படித்தான் எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்”

விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தோம். துர்கா தோளில் கை போட்டுக் கொண்டேதான் வந்தாள். என் உயரம் அவளுக்கு கை போட்டுக் கொண்டு நடக்கத் தோதாய் இருக்கும். சரிவுக்கு இடப்புறம் ஏலகிரி என கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட மஞ்சள் போர்ட் ஐப் பார்த்தேன். ஒரு மஞ்சள் நிறப் பறவை போர்டின் மேல் சாவகாசமாய் அமர்ந்திருந்தது

”ஏய் அங்கபோரு போர்ட் க்கு மேச்சா ஒரு பறவை.”

”அதுதான் மாங்குயில்”

”அட மாங்குயில் ந்கிறது பறவ பேரா? நான் சினிமாப் பாட்டுன்னு இல்ல நினைச்சேன்”

”ஆமா இது மாம்பழக் கலர்ல இருக்கில்லயா அதான் அந்த பேர் தவிர சார் மாமரத்தை சுத்தியேதான் கிடப்பார்”

”அப்ப பூங்குயில்னும் ஒண்ணு இருக்கா”

”ஓ இருக்கே”

”கூவின பூங்குயில் குருகுகள் இயம்பின னு திருப்பள்ளி எழுச்சிலாம் பாடியிருக்காங்களே”

”எனக்கு ராமராஜன் பாட்டு மட்டும்தான் தெரியும் ”

சிரித்தாள்.

இந்தக் கருப்புப் பெண்கள் சிரிக்கும்போதுதான் எத்தனை வசீகரம். என் தோளைத் தாண்டி நீண்டிருந்த அவளின் விரல்களைப் பிடித்துக் கொண்டேன்.

- அத்தியாயம் ஒன்று வீணாவின் தலைப்பிடப்படாத புதிய நாவல்

”பிரமாதமான துவக்கம் வீணா. மனசு அப்படியே அந்த மலைப்பிரதேசத்துக்கு போய்டுச்சி”

கட்டிலின் ஹெட்போர்டில் தலையணை வைத்துச் சாய்ந்தபடி வீணாவின் கையெழுத்துப் பிரதியை வாசித்துக் கொண்டிருந்தேன். அவள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

”மொத்தம் ஐந்து அத்தியாயம் தாண்டா எழுத முடிஞ்சது”

”முடிச்சிட்டேன்னு சொன்ன?”

”இல்ல முடிக்க முடியல. இந்த ரெண்டு பெண்களும் என்ன ரொம்பவுமே தொந்தரவு பன்றாங்க”

”ம்ம் நாவல் எப்படிப் போகும்னு யூகிக்க முடியுது. நீ என்ன லெஸ்பியன் ஃபார்ம் குள்ள போகப் போறியா?”

”தெரியலடா ”

”வேணாம். இதுல நல்ல சென்ஸ் இருக்கு. புரட்சி, உடல்தத்துவம், புண்ணாக்குன்னு சுத்த விட்டுடாதே. பொயட்டிக்கா கொண்டுபோய் மெலோட்ராமடிக்கா முடிச்சிடு”

சிரித்தாள். ”நீ இப்படி சொல்வேன்னு தெரியும்”

”ரைட்டு விடு. ரெண்டுபேருக்கும் நடக்கும் கலவிய பத்து பக்கத்துக்கு ததும்ப ததும்ப எழுதி வை. கோடார்ட், பெலினி, பியானோடீச்சர் எல்லாத்தையும் சைட்ல பாத்துக்க. இருக்கவே இருக்கு டிண்டோ ப்ராஸ் மொத்த படத்தையும் பாத்து உடலதிகாரத்தை களையும் வழிமுறைகளை விளக்கி சுதந்திரத்தின் உச்சத்த துர்கா காளியின் வடிவமாகி தொட்டாள் னு அடிச்சிவிடு. நவீன இலக்கிய வாசகர்கள் சிலிர்த்துட்டு படிப்பாங்க”

”வேற எப்படி எழுத சொல்ற? துர்காவும் ஷங்கியும் வாழ்நாள் முழுக்க தோழிகளாக, அன்பு நிறைந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்னு முடிச்சிடவா? ”

”கூட ஒரு காதல சேத்துக்க. ஒரு ஆண் உள்ளாற பூந்து துர்காவ கல்யாணம் ற பேர்ல ஏமாத்திடுறான். அவன் கூட வாழமுடியாம துர்கா மறுபடியும் ஷங்கி கிட்ட வந்து சேர்ந்துடுறா. சுபம்”

 ”கண்மணி மாத இதழ்ல பப்ளிஷ் பண்ணிடலாமா? காறித் துப்பிடுவேன். ஓடிப்போய்டு.”

”அடங்குடி. நீ என்ன பெர்ஸா எழுதி கிழிச்சிட போற? ஒண்ணு இந்த பேட்டர்ன் இல்லனா பிரெஞ்ச் பாதிப்பு பேட்டர்ன். வேற என்ன சொல்லிட முடியும் இந்த தளத்த வச்சிட்டு”

”அய்யனார், லிசன் நீ ஒரு சாகித்ய அகடாமி வின்னர் கிட்ட பேசிட்டு இருக்க. தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான அடையாளம் நானு. மைண்ட்ல வச்சிக்க”

”கண்ணு உனக்கு விருதுகொடுத்தப்ப யார் நடுவரா இருந்தாங்கன்னு எனக்கு தெரியும்”

”அசிங்கமா பேசாத உன்கூட படுத்திட்டா எல்லார்கூடவும் படுத்துருவேன்னு நினைக்கிறியா?”

”சே அப்படி சொல்லல. ஆனா சாகித்ய அகடாமி விருதுலாம் பெரிய அங்கீகாரம்னு நீ நினைச்சின்னா உன்ன விட முட்டாள் யாரும் கிடையாது. ஒண்ணுமே வேணாம் உனக்கு முன்னாடி யார்யார்லாம் இந்த விருத வாங்கி இருக்காங்கன்னு நீயே கேட்டுப் பாத்துக்க”

சிரித்துவிட்டாள் ”யெஸ். ஐ அட்மிட்”

”அவ்ளோதான் வீணா. இந்த நவீன இலக்கியம் நவீனத்துக்குப் பிறகான இலக்கியம் எல்லாமே பம்மாத்து. ”

”அப்போ பல்ப் எழுத்துதான் நிஜம்னு சொல்லவர்ரியா?”

”இல்ல பல்ப் எழுத்தலாம் எழுத்து ஸ்கேல்ல வச்சிப் பாக்க கூட தகுதி இல்லாதது”

”அப்புறம் ஏன் மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதுற?”

 ”எனக்கு வேற எதுவும் தெரியாதே. இது தொழில் வீணா. சமூகம், புரட்சி, இலக்கியம், மேன்மை னு எந்த ஸோ கால்டு ஏமாத்து வேலையும் இல்லாத தொழில். ஐ எண்டர்டைன் பீபிள் தட்ஸ் ஆல். அதுக்கு மேல ஒண்ணும் கிடையாது”

”ஸப்பா போதும்டா தலவலிக்குது. நீ உன் ரூம்க்கு போ. நான் தூங்க போறேன்”

”பாவி மெட்ராஸ்ல இருந்து மழைல அடிச்சி புடிச்சி நீ கூப்டேங்கிறதுக்காக வந்திருக்கேன். கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம ரொம்ப அசால்டா கெளம்புன்ற?”

”ஓ அப்படியா சரிங்க சார் கிளம்புங்க சார் நாளைக்கு காலைல பாப்பம் சார்”

கட்டிலிருந்து எழுந்து போய் வீணாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

“எப்படி இருக்க பொண்ணே”

”நல்லாருக்கேன் டா”

”சாரி கசாமுசான்னு பேசி உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டனா”

 ”நோ மேன். நீ உன் பார்வைய சொல்ற இதுல என்ன தப்பு?”

”சரி ஸரக்கு என்ன வச்சிருக்க”

”நோ சரக்கு, நான் எழுதனும். நீ கெளம்பு”

 ”இன்னிக்கு மட்டும். ப்ளீஸ் ப்ளீஸ்”

 ”பாவி மூட கெடுக்காத”

”நோ ஐ கெடுக்கபோவபையிங்க் யூ ஒன்லி”

”கருமம் போய் ட்ரஸ்ஸ மாத்திட்டு வா. ரெடி பண்ணி வைக்கிறேன்”

”தேங்க்யூ டார்லிங்”

”ஆனா மவனே குடிச்சிட்டு நான் தான் ஒலகத்தின் தலைசிறந்த எழுத்தாளினி. என்னோட ஒரு வரிய படிச்சிட்டு நாள் முழுக்க தேம்பி தேம்பி அழுதேன்னு லாம் அடிச்சி விட கூடாது. இப்ப எப்படி என்ன காய்ச்சி எடுத்தியோ அப்படியேதான் விடியுற வர பேசிட்டு இருக்கனும். ஓகேவா”

”ஓகே மா டன்”

- மேலும்

No comments:

Featured Post

test

 test