Thursday, November 1, 2012

அத்தியாயம் இரண்டு.


“இன்னிக்கு காலைல முகூர்த்த நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஓடிப் போகலாம்னு இருந்தேன்”

அறையின் நீல மங்கல் வெளிச்சத்தில் அவள் முகம் இறுகியது லேசாகத் தெரிந்தது.

நான் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் கேட்டேன்

 “ஏன் இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமில்லையா?”

மல்லிகைப்பூவின் அடர் வாசமும் புதுத் துணிகளின் நறுமணமும்அந்தக் குறுகிய அறையை நிறைத்திருந்தன. அடைத்தபடி போடப்பட்டிருந்த கட்டிலின் ஒரு முனையில் நானும் மறுமுனையில் இன்று காலை மனைவியான அவளும் அமர்ந்திருந்தோம்.

“நான் இன்னொருத்தர காதலிச்சேன் “  தலை நிமிராமல் இறுகிய அதே குரலில் சொன்னாள்.

எனக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது.

“பெண் பார்க்க வந்தப்பவே சொல்லி இருக்கலாமே? பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு ஆயிரம் முற கேட்டனே? நீயும் பல்ல பல்ல காமிச்சியே”

என் குரல் ஆற்றாமையால் உயர்ந்திருந்தது

“சொல்லமுடியாத சூழ்நிலை”

 ஐந்து நிமிடம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மின் விசிறியின் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அமைதியை உடைத்தேன்.

 “சரி ஏன் காலைல ஓடிப்போகல? “

“அந்த கடைசி நிமிஷ தைரியம் எனக்கு இல்லாமப் போய்டுச்சி... தவிர நேத்தில இருந்து கேட்டுட்டே இருந்த உங்க சந்தோஷமான சிரிப்பு.., கல்யாணத்துக்கு வந்திருந்த வி.ஐபி ங்க.. , உங்களுக்கு இருக்க பேர்..., கூடியிருக்க சொந்தக்காரங்க முகங்கள் எல்லாம் சேர்ந்து என்னப் போக விடாம செய்ஞ்சிருச்சி... எப்ப உங்களுக்கு மனைவியானனோ அந்த நொடில இருந்து உங்ககிட்ட உண்மையா இருக்கனும்..., எதையும் மறைக்க வேணாம்னு தோனுச்சி அதான் சொன்னேன்..“

கொஞ்சம் இலேசானதைப் போல் உணர்ந்தேன். இவள் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போயிருந்தாள் என்னவாகி இருக்கும்? யோசிக்கவே பயமாக இருந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு,

“இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நான் நினைக்கல.. காதலிக்கிறது ஒண்ணும் பெரிய கொலகுத்தம்லாம் கிடையாதே.. சந்தர்ப்பமும் சூழலும் சரியா அமைஞ்சா காதல்.., கல்யாணத்துல முடியும் இல்லனா இல்ல அவ்ளோதான். இதுல பெரிசா வருத்தப்பட எதுவும் கிடையாது”

நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன். மீண்டும் மெளனம் எங்களைச் சூழ்ந்தது.

“எனக்கொரு சிகரெட் பிடிக்கனும் போல இருக்கு போய்ட்டு வந்திடுறேன்”

எனச் சொல்லியபடியே எழுந்து கதவைத் திறந்தேன். அறிமுகமில்லாத வீடு. ஹாலில் நிறைய பேர் படுத்திருந்தனர். வெளியில் போவதா வேணாமா என யோசனையாக இருந்தது. தயங்கியபடி கதவைப் பிடித்துக் கொண்டு நின்றேன். பின்னால் வெகு அருகில் வந்து

“ மாடிக்குப் போலாம் வாங்க” என்றாள்

இருவரும் அதிக சப்தம் எழுப்பாமல் அறையை விட்டு வெளியேறி பின்வாசல் கதவைத் திறந்து கொண்டு பக்கவாட்டில் இருந்த மாடிப்படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினோம். சற்று விஸ்தாரமான மாடிதான். அடுத்தடுத்த வீடுகள் கிடையாது. சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஆழமாய் உள்ளிழுத்தேன். பக்க வாட்டு கட்டைச் சுவரில் சாய்ந்தபடி கைகளைக் குறுக்கில் கட்டிக் கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு ஸ்மெல் பிடிக்கலன்னா கீழ போ நான் வந்திடுறேன்”

புன்னகைத்து “பரவால்ல இருக்கன்” என்றாள்

“ரொம்ப வித்தியாசமான முதலிரவில்ல “என சிரித்தேன் உதட்டைப் பிதுக்கினாள்

“என்னோட கதைகள் ல நிறைய ட்விஸ்ட் வரும். ஆனா முதலிரவுல மட்டும் ட்விஸ்ட் வச்சதே இல்ல. பாரேன் என்னோட முதலிரவுல எவ்ளோ ட்விஸ்ட்னு”

 குரலில் இருந்தது கேலியா வருத்தமா என்பதைப் பிரித்தரிய முடியவில்லை. பதிலுக்கு அவளிடமிருந்து என்ன உணர்ச்சிகள் வெளிப்பட்டன என்பதையும் சன்னமான நிலவொளியில் பார்க்கமுடியவில்லை.

 நானொரு க்ரைம் கதை எழுத்தாளன். இதுவரை நானூறு துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறேன். என்னுடைய முதல் க்ரைம் கதையை ப்ளஸ் டூ படிக்கும்போது எழுதி முடித்தேன். அச்சில் வந்தது என்னவோ டிகிரி முடித்து வேலைக்குப் போன பின்புதான். ஆனால் முதல் கதை அச்சிற்கு வரும் முன்பே கிட்டத்தட்ட நாற்பது கதைகளை எழுதி முடித்திருந்தேன். என் நண்பன் விச்சுதான் என் கதைகளை படித்துவிட்டு கைக் காசைப் போட்டு மாத நாவலாகப் பிரசுரித்தான். முதல் நாவலான ‘பெளர்ணமி இரவில்’ பதிப்பித்த நூறு காபிகளும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. அந்த பெயரையே மாத நாவலுக்கு தலைப்பாக வைத்துக் கொண்டோம். பெளர்ணமி இரவில் இதழ் மாதம் பத்தாயிரம் காபிகள் வரை விற்கிறது. இருபத்தைந்து வயதில் வீடு, கார் என செட்டிலாகிவிட்டேன். சொந்த ஜாதியிலேயே பெண் தேடி, அதிக சிக்கலில்லாத குடும்பமாய் தேடிப் பிடித்து, ஜாதகப் பொருத்தத்துடன் சந்தோஷமாய் இவளை மணந்து கொண்டேன். சொல்லப்போனால் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை சொந்த வாழ்வில் திருப்பங்களே இல்லாமல் இருந்தது.

புகைத்து முடிந்ததும் கீழிறிங்கினோம். இரவு விளக்கை அணைத்து விடச் சொன்னாள். கட்டிலில் படுத்துக் கொண்டோம். அடுத்த அரை மணிநேரத்தில் மூர்க்கமாய் கலவி கொண்டோம். எனக்கு முதன் முறை கிடையாது. அவளுக்கும் முதல் முறையாய் இருக்காது என தீர்க்கமாய் நம்பினேன். அந்த நம்பிக்கை மெல்ல அருவெருப்பாய் மாறத் துவங்கியது. எழுந்து உட்கார்ந்தேன். அவள் தூங்கிவிட்டிருந்தாள். கட்டிலை விட்டிறங்கி சன்னலுக்காய் போய் ஒரு கதவை மட்டும் திறந்து கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். அறையில் நிலவெளிச்சம் லேசாய் விழுந்தது. கட்டிலுக்காய் திரும்பி, உடை கலைந்து, கால்களகற்றிக் கிடந்தவளைப் பார்த்தேன். இதுவரை நான் எழுதியதிலேயே எளிமையான கொலை எந்த நாவலில் வருகிறது? என்பதைக் குறித்து யோசிக்கத் தொடங்கினேன்.

- மேலும்

Featured Post

test

 test