Saturday, November 3, 2012

அத்தியாயம் – நான்கு


ஸ்வப்னா தன் ஸ்லீவ்லெஸ் டாப்ஸை பின் புறம் இழுத்துப் பிடித்து குத்திட்டு நிற்பதை கண்ணாடியில் நன்கு தரிசித்தாள். தலையை இடப்புறமும் வலப்புறமும் அசைத்துப் பார்த்து காதில் மின்னும் வைரத்தை திருப்தியுடன் பார்த்துக் கொண்டாள். பின்புற மேடுகளை தொட்டுப் பார்த்து உள்ளாடை இல்லையென்பதை இன்னொருமுறை உறுதிசெய்துகொண்டாள். ராகேஷிற்கு உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சன்னமான வெள்ளை டாப்ஸ் மட்டும்தான் அணிந்திருக்க வேண்டும். தண்ணீர் கட்டிலின் மேல் கிடந்த டேவிடாஃப் சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்துக் கொண்டு படுக்கையறையை விட்டு வெளியேறினாள். ஹாலில் அமர்ந்து கொண்டு 40 இஞ்ச் எல்சிடி திரையை உயிர்ப்பித்தாள். சன் மியூசிக்கில் வைத்துவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டாள். காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் குமிழ் வழியாய் பார்த்தாள். பின்பு ஒரு புன்னகையை உதட்டில் பொருத்திக் கொண்டு கதவைத் திறந்தாள். 

ராகேஷ்! 

சரியாய் ஐந்தடி ஏழு அங்குலம். கோதுமைக்கும் சற்று கூடுதலான நிறம். வெள்ளை ட்ராக் சூட்டிலிருந்தான். ஆசையாய் அவனை டார்லிங் எனக் கட்டிக் கொண்ட ஸ்வப்னாவை லேசாய் விலக்கினான். 

"வியர்வை யா இருக்கு.. சரி சொல்லு எதுக்கு அர்ஜெண்டா வர சொன்ன?"

" உங்கள நாலு நாளா பாக்காம ஏங்கிட்டேன் ராகேஷ். இன்னிக்கும் பாக்கலனா செத்துடுவேன்னு தோணுச்சி அதான் அர்ஜெண்டா வர சொன்னேன்"

முகத்தைப் பாவமாகவும் கண்களை கிறக்கமாகவும் வைத்துக் கொண்டாள். 

ராகேஷ் நிமிர்ந்து அவளைப் பார்த்து சொன்னான் 

”ஆனா நான் உன்னப் பார்த்தேன்” 

திகைத்த ஸ்வப்னா ”எங்க” எனக் குழம்பிக் கேட்டாள் 

“நேத்து மதியம் 3 மணிக்கு லீ மெரிடியன் ஓட்டல் ரூம் நம்பர் நானூத்து முப்பதில” 

ஸ்வப்னா வெளிறினாள் 

“இல்ல வந்து வந்து” தடுமாறினாள் 

“உன் கூட படுத்தவன் என் அடுத்த படத்தோட புரடியூசர். மறைவா கேமரா வேற வச்சி உன்ன இஞ்ச் இஞ்சா படம் புடிச்சிருக்கான் காமிக்கவா?”

 ஸ்வப்னாவிற்கு குப் பென வியர்த்தது லேசாய் தலை சுற்றுவது போலிருந்தது. 

ராகேஷ் டேவிடாஃப் சிகரெட் பாக்கெட்டை தேடி எடுத்தான். உள்ளே இருக்கும் சிகரெட்டை எண்ணிப் பார்த்தான். குறைந்திருந்த ஒரு சிகரெட் துண்டை ஆஷ்ட்ரோவோடு எடுத்துக் கொண்டான். கையோடு கொண்டுவந்திருந்த பிளாஸ்டிக் பையில் சிகரெட் பாக்கெட்டையும், ஆஸ்ட்ரேவையும் திணித்தான். பின்பு ஸ்வப்னாவை திரும்பிக் கூட பார்க்காமல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான் அவள் தலைகுப்புற கீழேவிழும் சப்தத்தைக் கேட்க ஒரு நிமிடம் கதவருகில் நின்றான் சப்தம் கேட்டது படிகளில் இறங்க ஆரம்பித்தான். 

- பாய்சன் கனவுகள் பக்கம் முப்பத்தி ஆறு மற்றும் முப்பத்தி ஏழு 

கழிவறையில் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினேன். இவளுக்கு சிகரெட் பழக்கம் இருக்காதே. பேசாமல் பாலில் விஷம் கலந்து விடலாமா? வேண்டாம். யாராவது சந்தேகப்பட்டு போஸ்ட் மார்டம் அது இதுவென்று போனால் மாட்டிக் கொள்வோம். தேனிலவிற்கு கொடைக்கானல் போய் வாராய் நீ வாராய் ஸ்டைலில் மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு விடலாமா? காலை எழுந்ததிலிருந்தே இதே சிந்தனைகள் உழன்று கொண்டே கிடந்தன. தலையை உதறியபடி அலுப்பு தீர குளித்தேன். குளித்து முடித்ததும் வழக்கம் போல் துண்டைத் தேடினேன். பாத்ரூம் கதவை லேசாய் திறந்து அம்மா துண்டு எனக் கத்தினேன். சில நொடிகளில் இவள் துண்டோடு முன் வந்து நின்றாள். காலையில் எழுந்த போது அருகில் இல்லை. எனக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. படுக்கையறை பாத்ரூமில் குளித்திருக்க வேண்டும். ஈர துவர்த்தை கூந்தலுக்குச் சுற்றியிருந்தாள். லேசாய் மஞ்சள் பூசிய வட்ட முகத்தில் பெரிய குங்குமப் பொட்டு. நீல நிறத்தில் மெல்லிய காட்டன் சேலையை உடுத்தியிருந்தாள். ஜாக்கெட்டில் அங்கங்கு ஈரம் பளபளத்தது. தலையை லேசாய் குனிந்துகொண்டு மென் புன்னகையோடு துண்டை எனக்காய் நீட்டினாள். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டு கதவைச் சாத்தினேன். ஈரக் கண்ணாடியில் என்னையே ஒரு முறை ஆழமாய் பார்த்துக் கொண்டு மெல்ல முணுமுணுத்தேன்.

”இவளையா கொல்லப் போகிறோம்?”

- மேலும்

2 comments:

Anonymous said...

intresting to read நீங்கள் க்ரைம் நாவல்களை கிண்டல் செய்கிறிரீர்கள் என தோன்றுகிறது

Anonymous said...

எழுத்து வழுக்கிட்டு போவுது அய்யனார் நல்ல ஃப்ளோ. ப்ரேக் போடாம் எழுதனும் :-)

ரவிகண்ணன்

Featured Post

test

 test