Wednesday, April 18, 2012

பழி - சில கடிதங்கள்

“விஜி நான் அன்னிக்குப் போனது நீ இன்னொருத்தரோட படுத்திருந்தேன்னு இல்ல. எங்க நான் உன் வாழ்க்கைய பாழாக்கிடுவனோன்னு நினைச்சிதான் போனேன்” விஜி சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தாள். “நல்ல ஜோக் இது. நான் இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சிதானே என்கிட்ட பழகின? ஆரம்பத்துல இருந்தே நான் இன்னொருத்தன் பொண்டாட்டிதானே, அன்னிக்கு ராத்திரி மட்டும் என்ன உனக்கு திடீர் ஞானோதயம்?”

- இது பழி நாவலின் ஒரு பகுதி. ஆனால், பாண்டியில் விஜியை பிரிகையில்,

  “விஜி” என்றேன். மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தாள். ”நான் போறேன்” ”நீங்க எதுக்கு போகனும்? அது தூங்கி எந்திரிச்சதும், நாங்க கிளம்பிடுறோம்” என்றாள் அதில் தெறித்த விலகலை, சடாரென என்னை யாரோவாய் சித்தரித்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ”எப்படி உன்னால முடிஞ்சது விஜி?” ”தெரில. திடீர்னு எனக்கு எல்லாம் தப்பா நடக்கிறா மாதிரி பட்டது.. ஒருவேளை நீங்க ஊருக்குப் போகாம இருந்திருந்தா இது நடந்திருக்காதோ என்னவோ.. நீங்க இல்லாத முத நாள் இரவு என்னால தூங்க முடியல. ஏதோ ஒரு மயக்கம் உங்க மேல இருந்தது போல. அது அன்னிக்கு தீர்ந்தா மாதிரி இருந்தது… நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு யோசிச்சப்ப பயமா இருந்தது… என் மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சிருச்சி… என் வீட்டுக்காரர் எனக்காகதான் ஒரு கொல பண்ணிட்டு போலிசுக்கு மாட்டாம தலமறைவா சுத்திட்டிருக்கார். நான் என்னடான்னா இன்னொருத்தரோட எந்த குத்த உணர்வுமே இல்லாம ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கேன்னு ஏதோதோ தோண ஆரம்பிச்சிருச்சி… சரியா விடியற்காலைல இந்த மனுசன் கண்ணு முன்னால நிக்குறார்… -

விஜி தானே விலகி போனாள். நான் "பழியை" கிட்ட தட்ட நூறாவது முறை வாசிக்கிறேன். சின்ன உறுத்தல்.

  போதி ராஜா – ஃபேஸ்புக்கில்


அன்புள்ள போதி ராஜா,

எல்லாப் படைப்புகளுக்குமே ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நினைக்கிறேன். தேர்ந்த/ ஆத்மார்த்தமான வாசிப்பின் மூலம் எளிதில் அதை நெருங்கிவிட முடியும் என்பது என் நம்பிக்கை. உங்கள் வாசிப்பும் சுட்டி இருக்கும் விஷயமும் எனக்கு மீண்டும் கதையின் ஆன்மா குறித்தான நம்பிக்கையை வலுப்பெற வைக்கிறது. பழியின் மையமென நான் நினைப்பது இப் பகுதியைத்தான். அடல்டரி யில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு கிடையாது. ஒரு பெண் இரு துணைகளோடு வெளிப்படையாக வாழும் சூழல் இங்கு கிடையாது. விஜி கதாபாத்திரம் அப்படி ஒரு சூழலின் தேவையை முன் வைக்கிறது.

தானாக விலகிப் போகும் விஜி எப்படி அய்யனார் மீது பழி போட முடியும்? என்பது உங்கள் கேள்வி. விஜியை நாகராஜூடன் பார்த்தவுடனேயே இவனுக்கு விலகிப் போகும் எண்ணம் வந்துவிடுகிறது. நான் போறேன் என முதலில் முடிவெடுப்பது அய்யனார்தான். தவிர மிடில் க்ளாஸ் பின்னணியில் இருந்து வரும் விஜியிடம் இருவருடன் வாழ்வதற்கான மன தைரியத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது. நாகராஜின் சதியில், காலம் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பின்பு மிகவும் இறுக்கமான/ பக்குவமான விஜி தன் நிலைக்கான காரணங்களாக நாகராஜையும் அய்யனாரையும் பார்க்கிறாள். அவர்களின் மீது வன்மம் கொள்கிறாள். அதிகாரம் கைக்கு வந்தவுடன் முத]லடியாக நாகராஜை அடிமையாக்குகிறாள். எதிர்பாரா விதமாக அய்யனாரை சந்திக்கும்போது அவனையும் கடுமையாக வசைகிறாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவனுக்காய் மடிந்தும் போகிறாள். என் நண்பர் ஒருவர் அரசியல் பிரக்ஞையோடு இந்நாவலை ஆண் மையப் பிரதி என விமர்சித்தார். ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டேன். ஆனால் இதில் பெண்ணிற்கான அக்கறையும் இருக்கிறது என்பதை சற்று நெருங்கி வாசித்தால் அறிந்து கொள்ள முடியும். வரலாறாய் தொடரும் பெண்ணின் துயரங்களுக்கான மீறலை, புதிய திறப்பை பழியில் பதிவு செய்திருப்பதாகவே நினைக்கிறேன். 

உங்களின் தொடர் வாசிப்பிற்கும் அன்பிற்கும் நன்றி


2 comments:

SIVAN said...

அன்புள்ள அய்யனாருக்கு,

உங்களின் பதில், நிறைவை தந்தது.இவ்வளவு நாளாய், "பழி" நாகராஜ் மீது அய்யனார் தீர்த்தது என்றே நினைத்தேன். இப்பொழுது, விஜி அய்யனார் மீது சுமத்திய பழி, நாகராஜ் மீது தீர்த்த பழி என்று மேலும் சில பரிமாணங்களை உணர முடிகிறது.

உங்களின் ஓரிதழ் பூவுக்காக காத்திருக்கிறேன்.

ப்ரியங்களுடன்,

போத்தி ராஜா.

SIVAN said...

அன்புள்ள அய்யனாருக்கு,

உங்களின் பதில், நிறைவை தந்தது.இவ்வளவு நாளாய், "பழி" நாகராஜ் மீது அய்யனார் தீர்த்தது என்றே நினைத்தேன். இப்பொழுது, விஜி அய்யனார் மீது சுமத்திய பழி, நாகராஜ் மீது தீர்த்த பழி என்று மேலும் சில பரிமாணங்களை உணர முடிகிறது.

உங்களின் ஓரிதழ் பூவுக்காக காத்திருக்கிறேன்.

ப்ரியங்களுடன்,

போத்தி ராஜா.

Featured Post

test

 test