Saturday, June 2, 2007

விகடனில் தமிழ்நதி

நம் சக வலைப்பதிவாளார் தமிழ் நதி ஆனந்த விகடனினால் அடையாளப்படுத்தபட்டிருக்கிறார்.வெகு ஜன ஊடகத்தில் இயங்குவது அவருக்குப் புதிதில்லை என்றாலும் தமிழ்நாட்டின் முக்கியப் பத்திரிக்கையொன்றில் அவர் கவிதைகள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிற்து.
விகடனில் வந்த அறிமுகமும் மற்றும் கவிதைகளை இங்கே தருகிறேன்.


தமிழ்நதி
தமிழ்நதி- தேர்ந்த ஈழத்துக் கவிஞர். ஈழ மக்கள் தங்கள் வாழ்விடத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் வலிகள்... தீராத தனிமை.. கையறு நிலை பற்றி அவரது கவிதைகள் தனிப்பட்டுப் பேசுகின்றன. அவை புலம்பலாக அமையாதது பெரும் சிறப்பு. இவர் வலைப்பூக்கள் ( BLOGS) வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். 'கலைவாணி' என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.


இருப்பற்று அலையும் துயர்

நேற்றிரவையும் குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது.
பச்சைக் கவச வாகனங்களிலிருந்து நீளும்
முகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள
வெறிச்சிடுகிறது ஊர்.
ஆளற்ற வீட்டில் எத்தனை நாள்
காத்திருக்கும் அந்த நாய்க்குட்டி
சோறு வைத்து அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டு
என்புதோல் போர்த்திக் கிடக்கிறது
திரும்பமாட்டாத எசமானர்கள்
நெடியதும் கொடியதுமான போர் பற்றி
எந்த மொழியில் அதற்கு எடுத்துரைக்க?
நேற்று முன்தினம் பக்கத்துவீடும்
விம்மியழுது விடைபெறப் பார்த்திருந்தோம்
மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுப்போன ஆச்சியின்
தளர்நடை இன்னும் ஒழுங்கையில்
ஒவ்வொரு வீடாய் இருள்கிறது
இந்தச் செங்கல்லுள் என் ரத்தம் ஓடுகிறது
இந்தக் கதவின் வழி
ஒவ்வொரு காலையும் துளிர்த்தது
மல்லிகையே! உன்னை நான்
வாங்கிவரும்போது நீ சிறு தளிர்
இருப்பைச் சிறுபெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை...
வீட்டை... வேம்பை...
அது அள்ளியெறியும் காற்றை...
காலுரசும் என்
பட்டுப் பூனைக்குட்டிகளை.

அற்றைத் திங்கள்

நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப் புன்னகையுமற்று
கடந்துபோகிற மனிதர்கள் வாழும்
அந்நியத் தெருக்களில்
அடையாளமற்றவளாகச் சபிக்கப்பட்டுள்ளேன்
என்னைக் குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை
உனது சிகரங்களிலிருந்தபடி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே..!
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல் பரத்திக்கிடக்கிறது.
தொப்புள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்...
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு.
என் போலவே நாடோடியாய் அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே

14 comments:

Ayyanar Viswanath said...

தமிழ்நதிக்கு வாழ்த்துக்கள்

அற்புதன் said...

வாழ்த்துக்கள் தமிழ் நதி,

திறமையானவர்கள் எங்கோ எப்போதோ அங்கீகரிக்கப்படுவார்கள்.
மேலும் நீங்கள் வளர ,அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களுக்கும் துயரங்களுக்கும் பணிந்து விடாமால் தொடர்ந்து எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

சந்திப்பு said...

தமிழ்நதிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் வெற்றிகள்... உங்களது கவிதை வரிகள் சமூக மாற்றத்திற்கானதாகட்டும்.

துளசி கோபால் said...

மனமார்ந்த வாழ்த்து(க்)கள், தமிழ்நதி.

Ken said...

வாழ்த்துக்கள் கலைவாணி கையில வீணை வைத்து இருக்கீங்களா? உங்களின் எழுத்து நடை மிக அருமை. நதியாகத்தான் தமிழ் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அடர்கானக புலிதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி. அடுத்த படி ஓர் இலக்கிய இதழாய் இருக்க வாழ்த்துக்கள்.

மணியன் said...

தமிழ்நதிக்கு வாழ்த்துக்கள் !அவரது மொழியும் வழியும் அவரை மென்மேலும் எங்கேயோ கொண்டுசெல்ல இருக்கிறது !!

தமிழ்நதி said...

என்ன நண்பர்களே இது! நான் உங்களையெல்லாம் அவ்வப்போது அழவைத்தேனென்பதற்காக உங்கள் அன்பினால் என்னை அழவைக்க இத்தருணத்தைத் தேர்ந்தெடுத்தீர்களா... மனம் நெகிழ்ந்திருக்கிறது. ஆனால் ஒன்று சொல்லவேண்டும்.. என் மீதுள்ள அபிமானத்தால் அய்யனார்,சுகுணா திவாகர்,பங்காளி எல்லோரும் கொண்டாடிப் பதிவு போட்டிருப்பது மகிழ்வெனினும் ஒரு மாதிரியாகவும் இருக்கிறது. 'இதென்ன பெரிய விஷயம்னு இவளைத் தூக்கித் தலையில் வைக்கிறார்கள்'என்று யாராவது நினைத்துக்கொண்டால் என்ன செய்வது... புகழ்ச்சி ஒரு விதமான வெட்கத்தை அளிக்கிறது. இங்கு வந்து எனக்கு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கும் தன் சுட்டுவிரலால் என்னை அடையாளப்படுத்திக்கொண்டேயிருக்கும் அய்யனாருக்கும் நன்றி.

நந்தா said...

//'இதென்ன பெரிய விஷயம்னு இவளைத் தூக்கித் தலையில் வைக்கிறார்கள்'என்று யாராவது நினைத்துக்கொண்டால் என்ன செய்வது... //

நினைச்சா நினைச்சுட்டு போகட்டும். அதுக்காக இந்த சமயத்துல கூட எங்களுடைய உணர்வுகளை காட்டாம இருக்க முடியுமா?

இதுக்கெல்லாம் அசர்ற ஆளுங்களா நாங்க... சரி விடுங்க. சமீப காலமா ஒரு சில சமயத்துல சோர்ந்த மாதிரி பேசியிருந்தீங்களே.. இப்ப புரியுதா உங்களோட பலம்... உங்களை எதிர் பார்த்து இங்க ஒரு கூட்ட மே இருக்குது........

தொடர்ந்து கலக்குங்க.... வாழ்த்துக்கள்.

மலைநாடான் said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி!

இந்த அங்கீகாரம் உங்கள் திறமைக்குக் கிடைக்க வேண்டியதே. உற்சாகமாய்த் தொடருங்கள்.

அய்யனார் பதிவுக்கு நன்றி.

இளங்கோ-டிசே said...

வாழ்த்துக்கள் நதி.

அபிமன்யு said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி!

சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி

அறிஞர். அ said...

தமிழ்நதிக்கு வாழ்த்துக்கள்

Featured Post

test

 test