Saturday, March 31, 2007

அபி – அரூப வெளியின் கவிஞன்

அபி கவிதைகள் - அபி
வெகு ஜன ஊடகத்தில் பரவலாய் இயங்காத அபி தமிழின் ஒரு முக்கியமான அடையாளம். அபி யைப் புரிந்துகொள்ள பரந்த வாசிப்பனுபவமும் அக ரீதியிலான தேடல்களைக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது. வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையுள்ள வெளி என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் அகம் சார்ந்த தெளிவும் உள் விழிப்பும் இல்லாத வாசகனுக்கு அபி ஒரு புதிர்தான்.

‘அந்தர நடை’ ‘என்ற ஒன்று’ ‘மெளனத்தின் நாவுகள்’ தொகுப்பிலிருந்து சில கவிதைகள் அத்துடன் 3 கட்டுரைகளும் சேர்ந்து இந்த தொகுப்பு வெளிவந்திருக்கிறது. முன்னுரை பிரம்மராஜன் எழுதியிருக்கிறார்.அதுவே சிறப்பான ஒரு கட்டுரையாகவும் கவிதை பற்றிய தெளிவான அனுகுமுறையை முன் வைப்பதாகவும் அமைந்துள்ளது.

கோஷங்களாகவும் வார்த்தைப் பந்தல்களாகவும் துனுக்குகளாகவும் உருவானவை கவிதைகளாக ஆக மறுத்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன் அடையாளத்தை இழந்து போகிறது.அபி மெளனத்தைப் பேசுகிறார். தனிமையின் தியானமாகவே அமைந்திருக்கிறது அவரின் பெரும்பாலான கவிதைகள்.இவரின் கவியுலகப் பார்வை அகம் சார்ந்தும் மிக நுட்பமானதாயும் நெகிழ்வு தன்மையையும் கொண்டிருக்கிறது. அதே சமயம் வெகுநுட்பமான அதிர்வை இவரது கவிதைகள் ஏற்படுத்தத் தவறவில்லை.

காட்சிப் படிமங்களை விரும்பாத அபி இங்கும் அங்குமாய் சில காட்சிப் படிமங்களை பயன்படுத்துகிறார்.

"வெயிலுறிஞ்சி வெளுத்த தெரு
வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய் திறந்து
குழந்தையை
சப்பி நின்றது..
கண்களை மூடிக் கொண்டேன்
மூடிய இமைகளுல்
முலைக்காம்பின் உறுத்தல்"
…..

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடாய் அபி யின் கவிதைகள் அரூப வெளியில் பயணிக்கின்றன.முரணெதிகளின் உக்கிரம் அதிகமாக விரிந்து ஒரு எல்லையில் அவை முரணற்ற தன்மையை தானாகவே இழக்கிறது.அபியின் அகத் தேடலின் வசீகரம் கீழ்கானும் கவிதைகளில் உணர முடிகிறது. இவை ஞானத்தன்மைக்கு வெகு அருகிலிருப்பதும் புலனாகும்.


“எல்லாம் தெரிவதும்
ஏதும் அறியாததும்
ஒன்றேதானென்று
தெருவிலொரு பேச்சு…”

“கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயென்றால்
நீ வாழ்கிறாய்”

அபியின் கவிதைகள் அதிகம் பேசுவதில்லை.”என் கவிதைகளுக்குப் பேச்சை யாரும் கற்பிக்கவில்லை.நான் உட்பட”எனும் அபி இவரது கவிதையை பின் வருமாறு முன்நிறுத்துகிறார்.”என் கவிதை உணர்வுகளின் ரூப நிலையிலிருந்து அரூப நிலைகளை நோக்கி விழைகிறது.அனுபவ நிலைகளிலிருந்து அனுபவங்களற்ற நிலையை நோக்கிப் போக முயலுகிறது” முப்பது ஆண்டுகளாக கவிதை தளத்தில் இயங்கும் அபியின் கவிதைகள் எண்ணிக்கை அளவில் குறைவுதான் எனினும் அவற்றின் தாக்கங்கள் பல மடங்காகி கணக்க வைக்கிறது.

மாலை என்ற தலைப்பில் 30 கவிதைகளை தொகுத்துள்ளார்.ஒளியும் இருளும் கலக்கும் அற்புதப் பொழுதை வெவ்வேறு மனோபாவங்களில் அனுகி இருப்பது பிரம்மிப்பைத் தருகிறது.

மாலை-தணிவு

“காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து

இதோ இதோ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள்,முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்து கொண்டன
……………….

நிகழும்போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு”

இத் தொகுப்பில் என்னை நிலைகுலைய வைத்த சில பார்வைகள்

“இந்த தருணங்களின் விளிம்பிலிருந்து
எட்டிப்பார்க்கையில்
செய்தி ஒன்றும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு”

“இப்படித்தான் என்று
நிதானமாகப்
பிறந்து கொண்டிருப்பேன்
எனது மலைவேரின்
ஒரு சிறு நுனியிலிருந்து”

'அபி ' என்கிற கவிஞரின் இயற்பெயர் ஹபீபுல்லா. சொந்த ஊர் போடிநாயக்கனூர். மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி மே மாதம் 2000- இல் ஓய்வு பெற்றார். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, 'டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.தமிழில் பிரமிளுக்கு அடுத்தபடியாக படிமக் கவிதைகளை கையாண்டதில் அபி மற்றும் தேவதேவனின் பங்கு மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி உள்ளது.கவிதைகளின் அடுத்தகட்ட இடம்பெயர்தலின் சாத்தியக்கூறுகள் தன் நம்பகத்தன்மையை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட நிலையில் காதல் வயப்படல் மட்டுமே கவிதை எழுதுவதற்கான ஒரே தகுதி என்ற மனோபாவத்திலிருந்து நாம் வெளிவர வேண்டியதின் அவசியத்தையும் இங்கே பதிவிக்கிறேன்.

கலைஞன் பதிப்பகம் இந்நூலை வெளிட்டுள்ளது முதல் பதிப்பு வெளிவந்த வருடம் 2003.

ஒப்பீடு
சமரசம் இதழ் ஜனவரி 2000 ல் வெளிவந்த அபியின் நேர்காணல்
மெளனமும் ஓசையின் உபாசனையும் – பிரம்மராஜன் கட்டுரை

21 comments:

MyFriend said...

அபி அபி ஓடிவா..
அபி அப்பா ஓடிவாங்க

(ஓ! அவரை பத்தி இல்லையா?? :-P)

சரி, இதோ படிச்சுட்டு வர்ரேன். ;-)

MyFriend said...

//.”என் கவிதைகளுக்குப் பேச்சை யாரும் கற்பிக்கவில்லை.நான் உட்பட”//

அருமையான வரிகள். ;-)

//“இந்த தருணங்களின் விளிம்பிலிருந்து
எட்டிப்பார்க்கையில்
செய்தி ஒன்றும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு”//

என்னையும் நிலைகுழைய வைத்த வரிகள்தான் இது. :-)

தமிழ்நதி said...

"அபி மெளனத்தைப் பேசுகிறார். தனிமையின் தியானமாகவே அமைந்திருக்கிறது அவரின் பெரும்பாலான கவிதைகள்."

முதல்முறை வாசித்தபோது உணர்ந்ததைக் காட்டிலும் இப்போது இந்த வார்த்தைகளின் பொருளைக் கூடுதலாகவே உணரமுடிகிறது.

Ayyanar Viswanath said...

நதி இந்த ஓடைப்பக்கம் வந்ததிற்க்கு நன்றி..அவ்வப்போது வந்தால்

'ஒரு ஓடை நதியாகலாம்'

:)

நன்றி தமிழ்

Ayyanar Viswanath said...

thanks my friend

காட்டாறு said...

தேடலின் வெளிப்பாடன்றோ அபியின் ஒவ்வொரு வரிகளும் (பாடல்களும்).

கோடிட்டு காண்பித்தமைக்கு நன்றி.

Ayyanar Viswanath said...

காட்டாறு பாலைவனம் பக்கம் வந்ததிற்க்கு நன்றி ..:)

Unknown said...

dear ayyanar
today i read your blog(sorry for late reading)
wow
it is excellant
the words and your talent to express the things are excellant

really you are moved by beauty
that's a lovely gift in life
as jk said To understand something, one must give not only one’s mind but one’s heart to it.

i am really very proud of you to know that you are having a eye to see the movements of life like the growing tree, the bird on the wing, the flowing river the endless action of life which has no begining and no end if you have the eye to see those moments you are in bliss,you are living

congratulations

with love
ramesh V

Anonymous said...

"அபி மெளனத்தைப் பேசுகிறார். தனிமையின் தியானமாகவே அமைந்திருக்கிறது அவரின் பெரும்பாலான கவிதைகள்."

ஒன்றிற்கு நேர்மாறான இன்னொன்றினால் வர்ணிப்பது மிகப் பழைய எழுத்து முறை. மௌனத்தைப் பேசுகிறார் என்பதும் அப்படித்தானே? தனிமையை போற்றும் ரொமாண்டிசிசத்தை பழைய ஆட்கள் விடுவதேயில்லை. சுயத்தின் வெளிப்பாடு, அகத் தேடல், அரூப வெளி போன்றெல்லாம் எழுதிவிட்டால் தரமான எழுத்தாகிவிடுமா? அபி கவிதைகளில் வார்த்தைகளின் அலங்கார ஓசையை தாங்க முடியவில்லை!

Ayyanar Viswanath said...

பிறன்

உங்களின் பெயரே அலங்கார சத்தத்தை கொண்டிருக்கிறது :)

நம் தமிழ் கவிதை எட்டமுடிந்த தூரங்களை கணக்கிடும்போது அபி அதில் தவிர்க்க முடியாதவராகிறார்.என் சிற்றறிவுக்கு எட்டியவரை அகத்தை பற்றிய தேடலே நம்முடைய வாழ்வின் குறிக்கோளாக அல்லது நம் இருப்பை உணர்வதே வாழ்வின் விழைவு என்றாகி விடுகிறது.

தரமான எழுத்துக்கென்று எந்த அளவுகோலும் இல்லை ..எழுத்தென்பது மிகவும் தனிப்பட்ட ஒன்று..எழுத்தென்பது நதியில் ஓடும் நீர்...உள்ளங்கையில் எவ்வளவு அள்ள முடியுமோ அது அவரவர் கையின் அளவு..

மஞ்சூர் ராசா said...

//கவிதைகளின் அடுத்தகட்ட இடம்பெயர்தலின் சாத்தியக்கூறுகள் தன் நம்பகத்தன்மையை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட நிலையில் காதல் வயப்படல் மட்டுமே கவிதை எழுதுவதற்கான ஒரே தகுதி என்ற மனோபாவத்திலிருந்து நாம் வெளிவர வேண்டியதின் அவசியத்தையும் இங்கே பதிவிக்கிறேன்.//

நிதர்சனமான வரிகள்.

நல்லதொரு பதிவு. அபியைப்பற்றி மேலும் அறிய தந்ததற்கும் நன்றி.

Anonymous said...

ரூப
அரூப
அனுபவ
பிரம்மிப்பை
உத்தி
அவசியத்தையும்

- இதெல்லாம் தமிழா? சொல்லவே இல்ல.

Anonymous said...

ஜன
முக்கியமான
வார்த்தை
உக்கிரம்

-இவையும் தான்

Anonymous said...

அய்யா, தங்கள் ஒவ்வொரு சொல்லும் சிபாரிசு பண்ணும் கவிதைகளும் சிவாஜி கணேசன் வசனம் கணக்காய் மனதில் பதிகின்றன என்றால் அது மிகையாகாது!

Ayyanar Viswanath said...

பிறன்
எப்படியோ மனசில பதிஞ்சா எனக்கு சந்தோஷம்தான் :)

அது என்னங்க பேர் பிறன்? ரொம்ப நல்லாருக்கு புதுசாவும் இருக்கு நீங்க பெரிய அறிவு ஜீவி யா இருப்பிங்க போல.. நேரமிருந்தா ஜி டாக் வாங்க பேசலாம்

Ayyanar Viswanath said...

அனானி உங்க விலாசம் கொடுத்திங்கன்னா தமிழ் கத்துக்க வந்திருவேன்..கத்துக்கொடுப்பிங்க இல்ல ..:)

Anonymous said...

//அய்யனார் said...
அனானி உங்க விலாசம் கொடுத்திங்கன்னா தமிழ் கத்துக்க வந்திருவேன்..கத்துக்கொடுப்பிங்க இல்ல ..:)
//

தமிழை விலாசம் தேடி கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. :(

பாரதி தம்பி said...

//காதல் வயப்படல் மட்டுமே கவிதை எழுதுவதற்கான ஒரே தகுதி என்ற மனோபாவத்திலிருந்து நாம் வெளிவர வேண்டியதின் அவசியத்தையும் இங்கே பதிவிக்கிறேன்.//

ரிப்பீட்டே....

Ayyanar Viswanath said...

நன்றிங்க ஆழியூரான் :)

காயத்ரி சித்தார்த் said...

//“கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயென்றால்
நீ வாழ்கிறாய்”//

செமயா இருக்குங்க.. புக் வாங்கனும் சீக்கிரம். வழிகாட்டியதற்கு நன்றி!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அபியின் அந்தர நடை, என்ற ஒன்று, மவுனத்தின் நாவுகள் மூன்று தொகுப்பையும் படித்திருக்கிறேன். படிமங்களை அடுக்கியிருப்பார் கவிதை என்ற பெயரில். (இதற்கு முன்பாகவே பிரமிள் இதைச் செய்துவிட்டதினால் அபியிடம் மலைப்பு ஏற்படவில்லை). பல சமயம் அப்துல் ரகுமான் நினைவிற்கு வருவார்.

'உள் விழிப்பு' போன்ற சொற்றொடர்களை தமிழிலிருந்து நீக்கி விட்டால் என்ன.?

Featured Post

test

 test