Sunday, December 16, 2007

துபாய் திரைப்பட விழா:திரைப்படங்களுக்கு முன்பு சில புகைப்படங்கள்

நான்காவது சர்வதேசத் திரைப்படவிழா துபாயில் கடந்த 9ம்தேதியிலிருந்து துவங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது.திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களில் ஒன்றான மதினாத் செளக் மிக அழகான,வசதியான இடம். துபாயின் மிக செழிப்பான இடங்களில் ஒன்று.ஏழு நட்சத்திர ஓட்டல் மற்றும் ஜீமைரா ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நடுவில் இருக்கும் இந்த மதினாத் செளக் பாரம்பரிய அராபிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது. முழுதும் மரத்தினாலான பழைய கட்டிடங்களின் சாயலை ஒட்டிய மிக அழகான மால்.திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆசிப்பும் நானும் மாலை சுற்றி வந்தோம் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.காமிரா எதுவும் கொண்டு போகாததால் கைவசமிருந்த மொபைல்களிலே எடுத்தோம்.


















Friday, December 14, 2007

பில்லா - தலைல ராக்ஸ்



நாவல்களைத் திரைப்படமாக்குவதில் தமிழ்சூழலில் இருக்கும் சிக்கலை விட ரீமேக் திரைப்படஙகளுக்கு அதிக சிக்கல்கள்.ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்ப்பதென்பது அலுப்புத் தட்டக்கூடிய ஒன்றே. இதை நேர்த்தியான திரைக்கதையின் மூலமே சரிகட்ட இயலும்.விறுவிறுப்பான காட்சியமைப்புகள், பொருத்தமான நடிகர்கள்,உடை,இடத்தேர்வு போன்றவைகள் ரீமேக திரைப்படங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற திரைப்படங்கள் மூலம் நேர்த்தியான வெகுசன இயக்குநர் என்ற அடையாளத்தைப் பெற்றிருந்த விஷ்ணுவர்த்தன் பில்லாவின் சொதப்பலான திரைக்கதையில் மற்றும் மேற்சொன்ன முக்கியமான விதயங்களில் சறுக்கியிருக்கிறார். திரைக்கதையில் ட்விஸ்ட் என மெனக்கெட்டிருப்பதற்கு பதிலாய் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம்.

மலேசியாவின் தரமான ஓட்டல்கள் மற்றும் வசதியான அடிப்படைக் கட்டமைப்புகள் படத்திற்கான ரிச்னெஸை தானாகவேத் தருகிறது.ஓட்டல்களைத் தேர்வு செய்திருந்ததில் காட்டியிருந்த சிரத்தையை படமாக்கப் பட்ட இடத்திலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் அந்த இரட்டைக்கோபுர கட்டிடம் வருவது மகா எரிச்சல்.தமிழனுக்கு கூலிங்க் க்ளாஸ் மேல் அப்படியென்ன காதலோ? சண்டைக் காட்சிகளில், நள்ளிரவில் என எல்லா நேரங்களிலும் எல்லா கதா பாத்திரங்களும் கூலிங்க் க்ளாசோடு வலம் வருகிறார்கள்.அஜித்தோடு நமீதா, நயன், துணைநடிகர்கள் என எல்லாரும் கூலிங்க் க்ளாஸ் சகிதமாகத்தான் திரிகிறார்கள்.ப்ளாக் சூட், கச்சிதமான உடல் என அட்டகாசமாய் பொருந்தும் அஜித் பாடிலேங்க்வேஜ் வாய்ஸ் மாடுலேஷன் என எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருப்பது பரிதாபம். மனிதருக்கு இன்னும் நேரம் சரியாகவில்லையோ? ஒரு படம் ஓடினால் நான்கு படம் சறுக்குகிறது.

தமிழனின் காம வடிகாலான நமீதாவை நயன் ஓரம் கட்ட முயற்சித்திருக்கிறார்.சிம்புவின் மீதிருக்கும் கோபத்தை அவர் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம்.பில்லா கதாநாயகிக்களுக்கான படம் இல்லையெனினும் ஸ்ரீப்ரியாவின் கவர்ச்சியான முகமும் பெரிய்ய கண்களும் பழைய பில்லாவிற்கு ஒரு கிக்கைத் தந்தது.அந்த கிக் இதில் இல்லை.நயன் இறுக்கமான பனியனோடு கன் னை தூக்கிக் கொண்டு நடந்து போகும்போது இந்த அம்மணிக்கு ஏன்யா இதெல்லாம் என ஆசிப் முனகினார். நயன் அட்டகாசமாய் நடித்திருந்த ராப்பகல் திரைப்படம் கண்முன் வந்து போனதோ என்னமோ.சந்தானம் வந்துபோகும் ஓரிரு இடங்களில் சிரிப்பை வரவைக்கிறார்.சிரிப்பு போலிசாக வரும் பிரபு எல்லாக் காட்சிகளிலும் சிரிப்பை வரவைக்கிறார் (பிரபு டிஎஸ்பி யா? என்ன கொடும சார்!)

மை நேம் ஈஸ் பில்லா பாடலை கொன்றிருப்பதுதான் உச்சகட்ட எரிச்சல்.எஸ்பிபியின் அழுத்தமான குரலும் நடுநடுவில் சிரிப்புகளோடு கம்பீரமாய் பாடப்பட்டிருந்த அப்பாடலை ஏதோ ஒரு மென்மையானப் பாடகர் பாடிக் கேட்பதை விட கொடுமை வேறெதுவும் இருக்கமுடியாது.எஸ்பிபியின் கால்ஷீட் கிடைக்கவில்லையா என்ன? படத்தில் ஈர்க்கும்படியாய் எதுவுமே இல்லையா? என்பதற்கு படம் மிக நீளமாய் இல்லை என்கிற நிறையைத்தான் என்னால் சொல்லமுடிகிறது.படம் முடிந்து வெளியில் வந்தபிறகு படம் பார்த்ததிற்கான எந்த உணர்வும் இல்லை.

ஆரம்பக் காட்சிகளில் ஏஏஏ!! தல ராக்ஸ் என விசிலடித்தும் கைத்தட்டியுமாய் மகிழ்ந்த ஆசிப் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் அசாதாரண மெளனத்திற்கு போய்விட்டார்.ஒரு விடுமுறை நாளின் மாலை வேளையை வீணாக்கியதற்கு பரிகாரமாய் துபாய் திரைப்பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்படும் அடூரின் நாலு பெண்கள் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை ஆசிப் வாங்கித் தந்துவிட்டார்.சந்தோஷ் சிவனின் ஆங்கிலப் படம் ஒன்றுக்கும் போவதாய் திட்டமிட்டிருக்கிறோம்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அஜித்...

Thursday, December 13, 2007

இந்த இரண்டு கவிதைகளுக்குமான தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா?

அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்
இன்றும் ஒரு துயரத்தை சொல்ல வந்தவளை
ஏற்கனவே வெளித் தள்ளி கதவை சாத்தியாயிற்று
மீதமிருக்கும்
இந்த நாய்குட்டிகளின் முனகல்கள் நடுநிசியைக் குலைக்கிறது
பேசாமல் கழுத்தினை திருகிப் போட்டுவிடலாம்
மழையில் ஒண்ட வரும் பூனைக்குட்டியை
காலினால் ஒரு எத்து விடலாம்
யாருமற்ற மோனவெளியிலிருந்தபடி
எவரும் எழுதிடாத ஒரு கவிதையை
இந்த மழை நாளின் இரவிற்குள் எழுதிவிட வேண்டும்..


..............00000000000000000....................

என் வீதிகள் மிக விசாலமானது
மிக மிகத் துப்புரவானது
குருடர்
பிச்சைக்கார சிறார்
வயோதிகன்
சாலையோரத் தொழு நோயாளி
திருடர்
என எவருமில்லை இங்கே..
குளிரூட்டப்பட்ட சிற்றுந்திலமர்ந்தபடி
எங்கிருந்தோ பிடுங்கிவந்து நடப்பட்ட மரங்களையும்
தார்ச்சாலைகளுக்கு நடுவில் பூக்க வைக்கப்பட்டிருக்கும்
பூச்செடிகளையும் இரசித்தபடி
துவங்கும் என் விடியல்கள்
அதே கிரமத்தில் எவ்வித மாறுதலுமில்லாமல்
முடியும் மாலைகள்
நாளைய தேதிக்கான பயங்களோ
பதட்டங்களோ
திட்டமிடல்களோ
முடிக்கப்படவேண்டியவைகளோ
முடியாதவைகளோ எதுவுமில்லை
நாளை நேற்றைய தினத்தை போன்ற
இன்னொரு நாள்தான்

நானொரு பயங்கரமான உலகத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....

Sunday, December 9, 2007

உண்மைகளைப் பேசுதல்,கண்டறிதல் மற்றும் எழுதுதல்

பேசுதல்

ராஜேசு க்கு என் மேல தனிப்பட்ட பிரியம்
எங்க எப்ப எப்படி கூப்டாலும் ஒடனே வர
மச்சான் நாச்சி மாதிரி எவனாலும் முடியாது
எல்லோரோடயும் சட் னு பழக
பாலா மாதிரி எவனும் இல்ல
எதுன்னாலும் சிவா முன்னால வந்து நிப்பான்
செந்தில் மாதிரி குடிக்க எவனுமில்ல
பழநி மாதிரி அக்கறையா இருக்க
ஒருத்தனாலயும் முடியாது
பல்லன் மாதிரி எவனாலையும்
பசங்கள கவனிக்க முடியாது
கிறுக்கன் மாதிரி கிறுக்கன் ஒலகத்தில எவனுமில்ல
பசங்களுக்கு
என் கூட குடிக்கிறா மாதிரி வருமா?

கண்டறிதல்

இன்றைய மாலையை மதுவினால் குளிப்பாட்ட
நாள்முழுக்க குற்ற உணர்வை நிரப்பி வைத்தாயிற்று
நாளைய மாலைக்கு ஒரு ஆப்பிரிக்க திரைப்படம்
அதற்கடுத்த நாள் இருக்கவே இருக்கிறது உம்பர்த்தோ ஈகோ
வார இறுதிக்கு தியாகுவும் கதிரும் கராமா ஓட்டலும்
இருக்கும்வரை ஒன்றும் பிரச்சினையில்லை
கொஞ்சம் துயரத்தை
தனிமையை
காதலை
அழகியலை
சிலாகித்தலை
வெறுப்பை
கூட்டிக்கொண்டால்
கவிதையையோ
புனைவையோ
சினிமா கட்டுரையையோ
எழுதிவிடலாம்
இந்த வாரம் எப்போதும்போல் ஆரவாரம்தான்..

எழுதுதல்

உண்மையை எழுதமுடியுமென்கிற கணத்தில்
நானொரு முற்றுப் புள்ளியை வைத்துவிடுவேன்
(அ)
எழுத்து
உண்மையை கண்டறிதலுக்கான
இன்னொரு வழி

...........................00000000000000.....................

பேசுதல்

ஒன்றினுக்காய் உருகுவது
ஒன்றினுக்காய் இன்னொன்றினை
விட்டுக்கொடுப்பது
சதா அதே நினைப்பாய் இருப்பது
எங்கு சென்றாலும் பின் தொடர்வது
கேர் கேரிங்
வித் லவ்
பிரியங்களுடன்
முத்தங்களுடன்

இதையெல்லாம் விட ஆபாசமான சொற்கள்
வேரெதுவும் இருக்க முடியாது..

பசி கொண்ட உடல்கள்
தேவதைகளின் வடிவமேற்று
ஆளறவமற்ற இடங்களில்
சக உடல்களைத் தின்று தீர்க்கிறது..
முன் வந்து விழும் வெளிச்சத்தில்
பதறியடித்து எழுந்து
விரல்களைப் பற்றியும்
இதழ்களைப் பற்றியுமாய்
எழுதிக் குவிக்கிறது போன்ற பாவனையில்
தலை கவிழ்ந்தமர்கிறது

நீக்கமற எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது
சுயநலத்தின் குரூரம்..
காதலை விட வன்முறையானது
வேறெதுவும் இல்லை..


கண்டறிதல்

இரண்டு பியர்களுக்கு மேல் குடித்துவிட்டால்
பழைய காதலிகளுக்குத் தொலைபேசி
இன்னும் அவள் நினைப்பிலேயே இருப்பதாய்
சத்தியம் செய்யலாம்..
உடன் வந்தவனை
ஐ லவ் யூ மச்சி
என குழறலாய் நேசத்தை சொல்லலாம்

என்ன செய்வது?
குடித்த பின்பெழும் நேசங்களை மட்டும்
சொல்லாமலிருக்க முடியவில்லை...

எழுதுதல்

எழுதப்பட்டவைக்கும் எழுதப்படபோவைக்குமான
வித்தியாசங்கள்
பெரிதாய் எதுவுமில்லையெனினும்
உங்களால் உடனே தடம்பிடித்து விடுமளவிற்காவது
உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன
ஆனால்
எழுதப்படுபவை எல்லாமே உண்மையுமல்ல
எழுதுகிறவன் எல்லாமே பொய்யனுமல்ல
எழுதுபவன் எழுதிக்கொண்டிருக்கிறான்
எழுத்து எழுதுபவனை எழுதிக் கொண்டிருக்கிறது

உலகம் இயக்கத்திலிருக்கிறது....

Saturday, December 8, 2007

நதியைப் போற்றுதலும் தூற்றுதலும்...

நதியின் விரிவுகளை
குளுமைகளை
சலனமில்லா அடி மணற் தணிவுகளை
கரையோர சலசலப்புகளை
எங்கிருந்து வருகிறது
எங்கு முடிகிறது
எனும் புதிர்களுக்கான துவக்கங்களை
ஒருபோதும் எதிர்கொண்டதில்லை
கண்ணுக்கெதிரில் மண் குழம்பலாய்
நுரைப்படலமாய்
இரு கரைகளையும் தொட்டபடி
சுழியிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது
ஆறு...

......... 0 ..............

நதிகள் வற்றாதாமே
அப்படியா?
நதிகள் பிரம்மாண்டமானவையாமே
அப்படியா?
நதியோர கரைகளில்
உயரமான மரங்கள்
மிக அழகாய் பூத்திருக்குமாமே
அப்படியா?
..............
எப்போதும் இருக்கிறது
நதிகளுக்கான ஏக்கம்...

......... 0 ..............

செயற்கை நீரூற்றுக்கள்
மூத்திரம் பெய்வதை
நினைவுபடுத்துகிறது
தேவை ஒரு
நதி

......... 0 ..............

நதிகள் வற்றுவதில்லை
ஆனால் சாக்கடை கலந்த நதியுண்டு
பூக்கள் மிதக்கும் நதி மிகவும் அழகானது
ஆனால் பிணங்களும் இப்போது நதியில்தான்
மிதக்கின்றன..

......... 0 ..............

நதிகளோடு புதிர்களும்
புதிரின் பின்னால் அலைவுகளும்
அலைவின் பின்னால் சோர்வுகளும்
சோர்வின் பின்னால் வெறுமைகளும்
வெறுமைக்குப் பின்
போடா ங்கோத்தா தான்!
......... 0 ..............

Wednesday, December 5, 2007

சிதைவுகளுக்குட்பட்ட மெளனங்களை மொழிபெயர்த்தல்


நீங்கள் ஒரு குழந்தையைக்
கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பனியொத்த உதடுகளை
நிமிண்டுகிறீர்கள்.
இப்போது குளித்து முடித்த
அதன் தேகத்தை தழுவுகிறீர்கள்.
கன்னததில் அழுந்த
முத்தமிடுகிறீர்கள்.
நல்லது இப்போது
நீங்கள் ஒரு கலவியை முடித்துவிட்டீர்கள்.

சுகுணா திவாகர்

நான்காம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில் பக்கத்து வீட்டு செல்வியோடு தாயமோ பல்லாங்குழியோ விளையாடிக்கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. செல்வியின் வீடு நீளமான, குறுகலான அமைப்பைக் கொண்டது.மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களுக்கடியில் இருந்தபடிதான் செல்வியின் தாத்தா அப்படிச் செய்தார்.குறுகுறுப்பையும் அருவெருப்பையும் சாக்லேட் கொண்டு மறக்கடிக்க செய்ய அவர் முனைந்திருந்தார்.சுருட்டு நாற்றமும் ஊத்தை வாயுமாய் அவரின் முகம் என் முகத்தில் என் உதடுகளைத் தேடி துழாவி முத்தம் மாதிரி ஒன்றை இட்ட நொடியில் எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது.அவரின் நடுங்கும் விரல்கள் என் பாவாடையினுள் துழாவியபடியிருந்த சில நிமிடங்களின் முடிவில் அவர் உடல் விநோதமாய் குலுங்கிற்று. திமிறியடித்து அவர் பிடியிலிருந்து ஓடி வந்த நான் பிறகு அந்த வீட்டுப் பக்கம் போகவில்லை.கம்பளிப் பூச்சியின் ஊறல்களைப் போலிருந்தது என்பது பழகிய ஒன்றாய் தெரிந்தாலும் எனக்கு அப்படித்தான் இருந்தது.என் அம்மாவிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை.பள்ளி முடிந்து வீடு வந்ததும் விளையாடப் போவதையும் நிறுத்திவிட்டேன்.வயதான தாத்தாக்களைப் பார்த்தாலே மெல்லிய பயம் ஒன்று எனக்கே தெரியாமல் படரத் துவங்கியது.

ஆரம்பப் பள்ளி முடிந்ததும் பக்கத்து ஊரிலிருந்த மேல் நிலைப் பள்ளிக்குப் போகத் துவங்கினேன்.மெல்ல அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தேன் எனினும் அவ்வப்போது என்னை யாரோ நசுக்குவது போன்ற கனவுகளில் பதறியடித்து விழித்துக் கொண்டிருந்தேன்.எட்டாம் வகுப்பு வரை எந்த சிக்கலும் இல்லாமல்தான் போய்க் கொண்டிருந்தது. ஒருமுறை மழையில் நனைந்து கடுமையான ஜீரம் வந்தது.என் அம்மா வீட்டுக்குப் பக்கத்திலிருந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள்.அந்த டாக்டருக்கு நடுத்தர வயதுதான் இருக்கும்.பரிசோதனை செய்வதாய் சொல்லியபடி ஸ்டெதாஸ்கோப்பினால என் மார்புகளில் அழுத்தினான். பின் மெல்ல இரண்டு பக்கத்திலும் அழுத்துவதும் கைகளால் உடல் முழுக்க அமுக்குவதுமாய் என்னை நெளியச் செய்தான்.உச்சமாய் அவனது விரல்கள் எனது அந்தர இடங்களைத் துழாவியபோது அவமானத்திலும், கூச்சத்திலும், வெறுப்பிலுமாய் குமைந்து போனேன்.அதற்குப் பின் எந்த காய்ச்சலுக்கும் வலிக்கும் நான் டாக்டரிடம் போகவே அஞ்சினேன்.தாத்தாக்களின் சித்திரத்தை விட டாக்டர்களின் சித்திரம் என்னை அதிக வெறுப்பில் தள்ளியது.

ஒன்பதாம் வகுப்பின் பாதியில் என் உடலைப்பற்றிய ரகசியங்கள் எனக்குப் பிடிபடத் துவங்கியது.மாதந்திரப் பிரச்சினைகளை நினைத்தாலே கோபமும் எரிச்சலுமாய் வந்தது.பள்ளி, நட்பு, வீடு, அம்மா என எல்லாவற்றையும் தாண்டின ஏதோ ஒரு வெறுமை எனக்குள் எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது. பத்தாம் வகுப்பில் செந்தில் பழக்கமானான்.எதிர் வீடு என்பதாலும் நன்றாய் படிப்பான் என்பதாலும் நாங்கள் இருவரும் என் வீட்டில் சேர்ந்தே படித்தோம்.என் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போடுவது, லேபிள் ஒட்டி, பெயர் எழுதுவது எல்லாமே செந்தில்தான். இறுதித் தேர்வுகள் நெருங்கின சமயத்தில் இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிக்க வேண்டியிருந்தது. கணக்குப் பரிட்சைக்கு முந்தின நாள் இரவு எதிர்பார்க்காத சமயத்தில் என்னை கீழே தள்ளி முத்தமிட்டான்.அவன் பிடியிலிருந்து விலகி எழுவதற்குள் உயிரே போய்விட்டது.ஏனோ அவனை என்னால் அடிக்க முடியவில்லை.கீழே கிடந்த அவனை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு வெளியே போய்விட்டேன்.

பத்தாம் வகுப்பிற்கு பிறகு எனக்கு படிப்பில் ஆர்வம் போய்விட்டது. வீட்டிலேயே இருந்துவிட்டேன்.அம்மாவிற்கு உதவியாய் எப்போதாவது வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவதோடு என் பதினமங்கள் முடிந்துபோனது.அம்மாவின் தூரத்து உறவினர் முறை வந்த சம்பத்திற்கும் எனக்கும் என் பத்தொன்பதாவது வயதில் திருமணமாகியது.சம்பத் பாண்டிச்சேரியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தான்.எனக்கும் சம்பத்திற்கும் பத்து வருட வித்தியாசம்.சம்பத் முரட்டுத் தனத்தின் மொத்த உருவம்.அந்த இரவில் பைத்தியம் பிடித்த வெறிநாயினைப் போல் என் உடலினைக் குதறினான். அடிப்படையிலேயே எதிர்த்து நிற்கும் திராணி எனக்கில்லாமல் போய்விட்டதால் சம்பத்தோடு வாழ்வதில் எனக்குப் பெரிதாய் சிக்கல்கள் எதுவும் வந்துவிடவில்லை.

கிருத்திகா வந்தவுடன் என் வாழ்க்கையே மாறிப்போய் விட்டது.என் அத்தனை நாள் காத்திருப்புகளும்,தவங்களும் இவளுக்காகத்தானோ? என நினைத்துக் கொண்டேன்.என் கசப்பும் தவிப்புமான குழந்தைமைகளின் கருநிழல் என் குழந்தையின் மீது படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதே என் முழு நேர வேலையாய் இருந்தது.மிகக் கவனமாய் அவளைப் பார்த்துக் கொண்டேன்.எல்லா விஷமக் கண்களையும் அறிந்து வைத்திருந்ததால் அவளுக்கான பசுமையான உலகத்தினுள் அவளை சுதந்திரமாய் செயல்பட வைக்க என்னால் முடிந்தது.கிருத்திகா நன்றாகப் படித்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் மிகக் கவனமுடன் நான் அணுகியதால் அவளுக்கும் எனக்குமான இடைவெளிகளில் அன்பையே நிரப்பி வைத்திருந்தோம். கல்லூரி முடிந்து பட்டத்தோடும் காதலனோடும் வந்த என் மகளை நான் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டேன்.ஒருவருடத்தில் கிருத்திகாவும் அரவிந்தும் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள்.சம்பத் போய் சேர்ந்த பிறகு இந்த தனிமை வாசம் அலுப்பாய் இருக்கிறது.செய்யப்பட எதுவுமே இல்லாத ஒரு முழுநாளை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

என் வீட்டின் முன்பக்கத்து இரும்பு கேட்டுகள் தளர்த்தப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தேன்.பக்கத்து வீட்டு சந்துரு நுழைந்தான். குண்டுக் கன்னமும், குறுகுறு கண்களும், நல்ல நிறமுமாய் அழகான சிறுவன்.அவனை அருகில் கூப்பிட்டு மடியில் அமர்த்தினேன்.கன்னங்களை முத்தமிட்டேன். ஏதோ ஒன்று நிகழ்வதை என்னால் தடுக்க முடியவில்லை. அவன் மூச்சு திணறுவது தெரிந்தும் இறுகக் கட்டிக்கொண்டேன் பாட்டி! பாட்டி!! என்கிர அவன் அலறல்களைப் பொருட்படுத்தாது நிதானமாய் அவன் கால்சட்டையின் பட்டன்களை விடுவித்துக் கொண்டிருந்தேன்.

(சிறுவர் மனநல நிபுணர் சீதாவிற்கு..)

Sunday, December 2, 2007

நினைவுகளிலிருந்து குறிப்பெடுத்தல் அல்லது பூமரங்களைப் பற்றி சில குறிப்புகள்



---------- 1 -----------------
நினைவுகளே இல்லாதிருப்பது என்பதும், எண்ணங்களின் ஓட்டம் எதுவுமில்லாமல் அசையாத குளத்தினை ஒத்த இருப்பு என்பதும், சுலபத்தில் எவருக்கும் கிடைக்காத பொக்கிஷமாகத்தான் இருக்க வேண்டும்.எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் நம்மால் வாழ்வின் எல்லா நிமிடங்களையும் எதிர்கொள்ள முடிவதில்லை.தியானம்,பயம்,போதை போன்ற மூளையழிந்த சந்தர்ப்பங்களில் மட்டும்தான் நம்மால் சிந்தனை மற்றும் எண்ணச் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இயல்பில் இருக்க முடிகிறது.படுத்த உடனேயே தூங்கி விடுவது மிகப்பெரிய வரமாய்த்தான் இருக்கமுடியும். என்னால் எப்போதுமே என் சிந்தனைகளிலிருந்து விடுபடமுடிவதில்லை.ஏதாவது ஒன்று உள்ளே எப்போதும் ஒடியபடியே இருக்கும்.அப்படி சிந்தனைகளே இல்லாத அற்புத தருணங்களும் வாய்த்திருக்கிறது.

ஓஷோ தியான முகாம்களில் இந்த "ப்ளாங்க்" தருணங்களைப் பெற்றிருக்கிறேன்.குறிப்பாய் குச்வாடா தங்கலில் இந்த அற்புத உணர்வு கிட்டியிருக்கிறது.நள்ளிரவைத் தொடும்வரை வியர்க்க விறுவிறுக்க நடனமாடிவிட்டு அங்கிருந்த நீச்சல் குளத்தில் வானம் பார்த்தபடி மிதந்திருந்த இரவுகள் எனக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கின்றன. அதற்கடுத்தபடியாக விபாஸனா தியான நாட்களிலும் சிந்தனைகள் எதுவுமில்லாமல் இயல்பில் இருக்கமுடிந்தது.சென்னையடுத்த திருநீர்மலைக்கு சமீபமான ஒரு புத்தர் ஆசிரமத்தில் பத்து நாள் தங்கலின் போது கிட்டிய ஆசுவாசமும் அமைதியும் வேறெந்த தருணத்திலும் பெற முடியாதது.பெண்ணொருத்தியின் அருகாமையும் முத்தங்களும் ஒருவேளை எண்ணச் சிக்கல்களிலிருந்தும் மனவோட்டத்திலிருந்தும் விடுபடும் தற்காலிக தீர்வுகளாயும் இருக்கக்கூடும்.எதுவெப்படியோ சிந்தனைகளிலில்லாமல் இருப்பதைவிட ஆசுவாசமானது வேரெதுவுமில்லை.

---------- 2 ---------------

என் பள்ளிக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடம் தமிழ், பிடிக்காத பாடம் அறிவியல். பழந்தமிழ் பாடல்களின் மீது பெரு விருப்பம் இருந்தது.என் பள்ளிக்காலத் தமிழாசிரியர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களாய் இருந்தனர்(சம்பந்தம்,குப்புசாமி,அருணாசலம்,ஆறுமுகம்)


அற்ற குளத்தின் அறு/ரு நீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி இருப்பார் உறவு

சிறு வயதில் நெட்டுரு போட்ட பாடல்.இந்தப் பின்னிரவிலும் நினைவுகளின் இடுக்கில் இருந்து பெயர்த்தெடுக்க முடிகிறது.இந்தப் பாடலை யார் எழுதியது? எதில் வருகிறது? என்றெல்லாம் நினைவிலில்லை.ஒரு சில வார்த்தைகளும் மாறியிருக்கலாம்.ஆனாலும் உறவுகள் குறித்து எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.

பள்ளியில் பேச்சு,கவிதை,கட்டுரை என எந்தப் போட்டி வந்தாலும் நிச்சயம் ஏதாவது ஒரு பரிசை எனதாக்கி விட முடிந்தது.மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளிலும் என் பங்களிப்பும் பரிசும் தவறாமல் இருந்து வந்தன.நான் எழுதிய முதல் கவிதையின் தருணம் நன்றாக நினைவிலிருக்கிறது.ஒன்பதாம் வகுப்பில் கவிதைப் போட்டிக்காக கொடுக்கப்பட்டத் தலைப்பு நிலா.ஒரு சாயந்திரத்தில் மாடியில் அமர்ந்தபடி என் முதல் கவிதையை எழுதினேன். அந்தப் பிரதி இன்னும் கைவசமிருக்கிறது.இந்த முறை ஊருக்குப் போனால் அதை ஸ்கேனித்து பதிவிக்கும் எண்ணமும் இருக்கிறது.அந்தக் கவிதை இப்படித் தொடங்கும்

ஏ நிலாவே நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள்
உன் கன்னல் செரியும் பேரொளி
என் முகத்தில் மட்டுமே நிறைந்திருக்கிறது
…….
என் பயமெல்லாம் உன்னை சைட்
அடிக்கும்
விண்மீண்களை நினைத்துதான்

இப்போது இந்த கவிதையை நினைத்தாலும் சிரிப்பும் வெட்கமுமாய் வருகிறது.எல்லா துவக்கங்களும் அபத்தமானதுதான்போல.

பத்தாம் வகுப்பு மாணவர் மன்றத் தேர்வில் தமிழில் மாவட்ட அளவில் முதல் மாணவனாய் வரமுடிந்தது.(95/100)ஆனால் இறுதித் தேர்வில் கோட்டை விட்டேன் (89/100)
நான் மாநில அளவில் தமிழில் முதல் மாணவனாய் வருவேன்
என எதிர்பார்த்திருந்த தமிழாசிரியர் ஆறுமுகம் கடைசியாய் சொன்னது இப்போதும் உறுத்தலாய் இருக்கிறது (என் தலையில மண்ணள்ளிப் போட்டுட்டியேடா!!)
---------- 3 ---------------
மரங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாய் பூ மரங்கள்.கிளைகள் முழுதும் பூத்திருக்கும் சிவப்புக் கொன்றை மரங்கள்,சின்னச் சின்னப் பூக்களாய் இடைவெளி விடாது நெருக்கமாய் பூத்திருக்கும் புங்கை மரங்கள்,மனதை மயக்கும் வாசனைகளோடு நீளமாய் பூத்திருக்கும் மரமல்லி மரங்கள், கசப்பும் மயக்கமுமாய் வாசனைகளைப் பரப்பி தரைமுழுவதும், இலைமுழுவதும் விரிந்திருக்கும் வேப்பம் பூ மரங்களெனப் பூ மரங்கள் என் நேசத்திற்குரியவை.எப்போதோ ஆனந்தவிகடனில் படித்த ஆபுத்திரனின் கவிதை ஒன்று..
மரங்களை விட அழகிய கவிதை வேறெதுவுமில்லை
….
இலைக் கரங்களால்
பிரார்த்திக்கும் விருட்சம்
தன் கோடை கால ஆடையை அணிந்திருக்கும்
….
தலையில் புறாக்கூடு சூடி நிற்கும்
……
கவிதைகள் என்னைப்போன்ற
முட்டாள்களால் எழுதப்படுகின்றன
மரங்கள் கடவுளால் மட்டுமே உருவாகின்றன
தேவதேவன் கவிதைகளிலும் மரங்களை அதிகம் பார்க்கலாம்.எதுவும் நினைவிலில்லாததால் பகிரமுடியவில்லை.

கொன்றை மரங்கள் விடுமுறை முடிந்த ஜீன், ஜீலை மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும் பெரிய கிளைகளில் ஏறி பூக்களைப் பறித்து அதன் தேங்காய் பூவை தின்று கொண்டிருப்போம். காய்களைப் பறித்து கொக்கி சண்டை போடுவது,முன்னமர்ந்திருப்பவனின் தலையை குறிவைத்தடிப்பதென கொன்றை மரங்களோடு கழிந்த நாட்கள் அற்புதமானவை.வீட்டின் முன்புறம் பெரிய புங்கை மரமொன்று இருந்தது. பின் கொல்லையில் மிகப் பெரிதாய் இரண்டு வேப்ப மரங்கள். ஏப்ரல் மாதத்திலேயே வேம்பும், புங்கையும் பூக்கத் தொடங்கிவிடும்.அதிகாலையில் எழுந்து முன்வாசலுக்கோ தோட்டத்திற்கோ வரும்போது ரம்மியமான பூக்களின் வாசனை மெல்லிய கிறக்கத்தைக் கொடுக்கும்.தரையில் படுக்கை விரித்திருக்கும் பூக்களை என் அம்மா எவ்வித சலிப்புமில்லாமல் வாரி தெருவில் கொட்டுவாள்.குப்பைமேடும் பலவகைப் பூக்களோடு மிகுந்த அழகாய்த் தோற்றமளிக்கும்.

மரமல்லிப் பூக்கும் காலம் அலாதியானது மழைக்காலத்தில்தான் அவைப் பூக்கும்.டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரம்முழுக்க வெள்ளையாய், நீளமாய் பூக்க ஆரம்பித்துவிடும். இரவில் பெய்த மழையில் நனைந்தபடி தரை சேர்ந்திருக்கும் பூக்கள் எழுப்பும் வாசம் நம்மை வேறொரு உலகத்திற்கு அள்ளிக்கொண்டு போகும். எல்லாவற்றையும் இழந்துவிட்டிருந்தாலும் மரமல்லி மரங்கள் மட்டும் என்னோடு இப்போதுமிருக்கின்றன நான் வசிக்கும் கராமாவில் இருக்கும் பூங்காவில் நிறைய மரமல்லிப் பூமரங்கள் இருக்கின்றன. எந்த நாட்டிலிருந்தாலும் பூக்களும் மரங்களும் எவ்வித வித்தியாசங்களையும் காண்பிப்பதில்லை.சிந்தனை மிகும் சாயந்திரங்களில் இப்போதெல்லாம் தஞ்சமடையும் இடம் மரமல்லி மரத்தடியாகத்தான் இருக்கிறது.தனிமை மிகுந்து கசப்பும் துயரமுமான மாலைகளில் யாரேனும் பார்க்கிறார்களா?என்பதை உறுதி செய்துகொண்டு இம்மரங்களை இறுகக் கட்டி முத்தமிட்டு வருகிறேன்.

Featured Post

test

 test