Tuesday, January 3, 2023

மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள்




மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள் எனும் சிறிய நூலை வாசித்தேன். காந்தியின் கடைசி இரண்டு நிமிடங்களைப் பற்றிய ஒரு புனைவு (இரண்டரை விநாடி ஒரு நிமிடம்). வால்டெர் ஏரிஷ் ஷேபர் எனும் ஜெர்மன் எழுத்தாளரால் 1949 இல் ரேடியோ நாடகமாக எழுதப்பட்டது. தமிழில் ஜி.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார். நான் வாசித்த பிரதியில் ந.முத்துசாமியின் முன்னுரையும் இருந்தது. நெஞ்சைத் துளைக்கும் தோட்டா எனும் தலைப்பில் எழுதியிருந்தார். இந்த நாடகத்தை தமிழில் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறை குழுவினர் நாடகமாக அரங்கேற்றியிருக்கிறார்கள். அந்த அனுபவத்தையும் முன்னுரையில் பகிர்ந்திருந்தார்.
குரல்கள் மட்டும் பேசிக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்ட ரேடியோ நாடகம் இது. காந்தியின் உடலைத் துளைத்த தோட்டா ஒரு குரலாகவும், பூமியும், காற்றும், நதியும் மற்ற குரல்களாகவும் வெளிப்படுகின்றன. காந்தியை நித்தியத்திற்கு அழைத்துச் செல்லும் காந்தியின் சாயல் கொண்ட குரலும் உண்டு. அதற்கும் காந்திக்குமான உரையாடல்கள் மிகுந்த உணர்ச்சிகரமாக எழுதப்பட்டுள்ளன. வாசிக்க வாசிக்க மனம் ததும்புகிறது. அந்தக் குரல், தோட்டா துளைத்த காந்தியின் உயிரை பேரொளிக்கு அழைத்துச் செல்கிறது. அது அழைத்துச் செல்லுமிடம் சொர்க்கம்.
காந்தியை விட சிறந்த தூதுவன் இக்காலத்தில் இல்லை என்பதால் அது அவரை அங்கே அழைத்துச் செல்வதாகச் சொல்கிறது. முதலில் அந்த இடத்தை காந்தி மறுக்கிறார். தான் அங்கு செல்ல தகுதியானவன் இல்லை என குரலிடம் மன்றாடுகிறார். ஆனால் அது சாத்தியமில்லை எனத் தெரிந்த பிறகு அதனிடம் பிரார்த்தனை வடிவில் ஒன்றைக் கோருகிறார். துன்பங்களில் உழலும் எண்ணற்ற மனிதர்களின் ஆன்மா, பிரச்சினைகளில் சிக்குண்டு தவிக்கும் இந்தியாவின் ஆன்மா மற்றும் தன்னைக் கொன்ற கொலையாளியின் ஆன்மா உட்பட சகலத்தையும் ஆசிர்வதித்து தடை ஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொள் என வேண்டுவதோடு நாடகம் முடிகிறது.
மிக ஆழமான கேள்விகளை நமக்குள் எழுப்பும் நூல் இது.

No comments:

Featured Post

test

 test