Wednesday, August 16, 2017

பல்ப் : 1.உன் நாவலை நீ எழுது

பல்ப். இதுதான்  தலைப்பு. இச்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் குறுநாவல். ஏன் எப்போதும் குறுநாவல் என்றால், உலகளாவிய சமகால எழுத்து மற்றும் கலைச்சூழலை பின்நவீனச்சூழல் எனக் கருதுகிறேன். இச்சூழல் எல்லா அதிகாரங்களுக்கும் எதிரானது. எனவே அதிகாரத்தை முன் நிறுத்தும் எந்த ஒன்றும்  சமகாலத்தைச் சேர்ந்தவை இல்லை. ஆபத்தானவையும் கூட. நம் சூழலை, பண்பாட்டு வெளியை பெருங்கதையாடல்கள் எனச் சொல்லப்படுகின்ற பெரும் மதங்கள்தாம் ஆள்கின்றன. இங்கே விளிம்பிற்கோ அல்லது சிறுதெய்வங்களுக்கோ  இடமே இல்லை. இலக்கியத்தில்  நாவல்கள் என்பவையும் இத்தகைய அதிகாரத்தின் கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவற்றை உடைப்பதே சமகால எழுத்தின் முக்கியப் பணி. ஆகவே நான் சிறுகதையாடல்கள் எனக் கருதப்படுகின்ற குறுநாவல்களை எழுதுகிறேன். பிரான்சில் இவ்வடிவத்தை நாவெலா என்கிறார்கள். நாவெலா வே இனி வரும் சமூகத்தின் இலக்கிய முகமாக இருக்கும். அங்கு யாரும் இப்போது நாவல்கள் எனச் சொல்லப்படுகின்ற மிகப் பழைய பிரதியை எழுதுவதில்லை. பிரான்சிற்கு அடுத்தபடியாக தமிழில் இவ்வடிவத்திற்கு முக்கியப்பங்கு என்னால் ஆற்றப்பட்டுக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர்.  ஒருவேளை நீங்கள் புது வாசகராக இருந்தால் ஒரு தகவலுக்காக இதைச் சொல்கிறேன். இந்த விளக்கம் வீண் ஜம்பத் தொணியில் எழுதப்பட்டிருப்பதாய் உங்களுக்குத் தோன்றினாலும் பரவாயில்லை. சில உண்மைகளை பட்டவர்த்தனமாய் சொல்லிவிடுவது என் இயல்பு மேலும் உண்மை எந்தத் தொணியிலும் எழுதப்படலாம் என்பது என் நிலைப்பாடு. பின் நவீனம் எது உண்மை என்பது குறித்தும் பல கேள்விகளை, அய்யங்களை எழுப்புகிறது. அதைத் தொடர்ந்து போனால் இந்த நாவல் கோட்பாட்டாளர்கள் தமிழில் எழுத முயன்ற நாவல்களைப் போலப் பரிதாபமாக இருக்கும். நானொரு புனைவெழுத்தாளன். எனவே இந்த விளக்கத்தை இங்கே நிறுத்திவிட்டு கதையைத் தொடர்கிறேன்.

ஓரிதழ்ப்பூவைப் போல அல்லாமல் பல்ப் குறு நாவலை ஒரே மூச்சில் எழுதிவிடுவதுதான் திட்டம். ஒரே நேரத்தில் எழுத்தாளனாகவும் குமாஸ்தாவாகவும் இருந்து தொலைய வேண்டியிருக்கும் சாப யதார்த்த வாழ்வைப் புறந்தள்ளிவிட்டுத்தான்  இந்த அசாதாரண திட்டத்தில் இறங்கினேன். மகத்தான உழைப்பைச் செலுத்தி எழுதிக் கொண்டிருக்கும்போது  தடாரென நின்று போனது. இதில் ஒரு இலக்கியப் பெண் எழுத்தாளர் வருகிறார். அவர் இந்த கதைக்குள் ஒரு நாவலை எழுதுகிறார் ( அவருக்கு அரசியல் பிரக்ஞை இல்லை. என்னைப் போல் குறுநாவல் எழுதாமல் இன்னமும் நாவல்தான் எழுதுகிறார்) அந்தப் பெண் எழுத்தாளரின் நாவலை என்னால் எழுத முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. பெண் எழுத்தாளர் எழுதும் நாவலை ஆணாகிய நான் எப்படி எழுத முடியும்? எழுதி எழுதிப் பார்த்தும் பெண் மொழி சித்திக்கவேயில்லை. பெண் எழுத்தாளர் என்ன எழுதவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதாவது அந்த நாவல் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் எழுதும் மொழிதான் சரிப்படவில்லை. இதற்குள் இன்னொரு ஆண் எழுத்தாளரும்  வருகிறார். அவர் ஒரு பல்ப் எழுத்தாளர். அவர் எழுதுவது pulp என்றாலும் கூட அவர் எழுதும் கதைகளை எல்லாம் நானே எழுதிவிட்டேன். நானொரு தூய இலக்கிய எழுத்தாளனான இருந்தாலும் சற்று  சிரமப்பட்டு அவற்றை எழுதிவிடமுடிந்தது. ஆனால் இலக்கிய வகைமையிலே எழுதும் இலக்கிய எழுத்தாளரான பெண் எழுதுவதை என்னால் எழுத முடியவில்லை. என் பிரச்சினையை உங்களுக்கு புரியும்படி சொன்னேனா? புரியவில்லையெனில் தயவுசெய்து சொல்லாததையும் புரிந்துகொள்ளுங்கள். இது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதை இன்னொருவர் புரிந்துகொள்ளாதவரை எனக்கு மாபெரும் சிக்கல்தாம். 

எவ்வளவு முயன்றும் சுத்தமாய் எழுதவே வராமல் போன ஒரு பகலில் என் நெடுநாள் ஸ்நேகிதியைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். கண்கள் விரிய வரவேற்றவள் வரவேற்பரையில் அமரச் சொன்னாள். அவள் வீட்டுப் படுக்கையறை தவிர்த்து நான் எங்குமே அமர்ந்தது கிடையாது. ஒரு கட்டத்தில் அவள் என்னைப் படுக்கையறைக்குள் அனுமதிப்பதை நிறுத்தியவுடன் அவள் வீட்டிற்கு செல்வதையும், அவளைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன். அமராமல் நின்று கொண்டே என் பிரச்சினையைச் சொன்னேன். சற்றுக் குழம்பினாள். யோசித்தாள். பின்பு சொன்னாள்.

 "உன் நாவலை நீ எழுது!" 

அவளுக்கு சிறுபத்திரிக்கை வாசிப்பு உண்டு. இரண்டு மூன்று நல்ல கதைகளையும் எழுதியிருக்கிறாள். அவையெல்லாமும் அவ்வார்த்தைகளுக்குப் பின்னிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

"மொக்க போடாதே கதைய நான் சொல்றேன் நீ எழுத மட்டும் செய்"  

மாட்டேன் என்றாள். 

"நீ எழுத மறுப்பதற்கு நல்லதா ஒரே ஒரு காரணம் சொல், நான் போய்டுறேன்" 

“உனக்கும் எனக்கும் ஏதோ இருப்பதாக ஏற்கனவே இங்கு கிசுகிசு ஓடிக் கொண்டிருக்கிறது. போதாததிற்கு ஒரே நாவலை சேர்ந்து எழுதினால் போச்சு. வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்தது போலாகும்” என்றாள். 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

“அட! உன்னையும் என்னையும் வைத்து கிசுகிசுக்க வெல்லாம் செய்கிறார்களா? குஜாலாக இருக்கிறதே. இதற்காகவே அவசியம் இந்நாவலை நாம் இருவரும் சேர்ந்து தான் எழுத வேண்டும்” என மகிழ்ச்சியில் கத்தினேன். 

அவள் முறைத்துக் கொண்டே சொன்னாள். 

“உன்னை யாரும் வேசையன் என வசைய மாட்டார்கள்.  ஆனால் என்னை வேசி என்பார்களே” 

நான் சற்று யோசித்தேன். அவள் சொல்வதும் சரியெனப் பட்டது. யாருமே சீந்தாத மொழியில் எழுத்தாளராக இருப்பதன் துயரங்களின் தொடர்ச்சிதாம் இவையெல்லாமும் என்பதும் புரிந்தது. திரும்ப வந்துவிட்டேன். வரும் வழியில் எங்களைப் பற்றி யாரெல்லாம் கிசுகிசுத்திருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். என் எதிரிகள் ஒவ்வொருவராய் நினைவில் வந்தார்கள். நிச்சயம் எல்லோரும் வயிறெறிந்திருப்பார்கள். சந்தோஷமாக இருந்தது. என் எதிரிகள் ஒவ்வொருவரின் முகத்தையும் பதம் பார்க்க விருப்பம்தான் என்றாலும் திருப்பி அடித்துவிடுவார்களே என்ற பயம்தான் அதை தடுத்து வைத்திருக்கிறது. மாறாய் இம்மாதிரி வகையில் அவர்களை எரிச்சலூட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது. 

அதற்கடுத்த நாள் என்னுடைய இன்னொரு ஸ்நேகிதியைத் தேடி பக்கத்து நகருக்குப் போனேன். நாங்கள் எப்போதுமே பொதுவிடத்தில்தான் சந்தித்துக் கொள்வோம். என்னுடைய ஒரே வாசக நண்பி. எங்களுக்குள் தூய்மையான நட்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்துமா? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் இதுவரைக்குமே அவள் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவில்லை. எனக்கு சந்தர்ப்பத்தைத் துய்த்துத்தான் வழக்கம். உருவாக்கத் துப்பு கிடையாது. நன்றாக எழுதுவாள். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறாள். (வாசகி என்றாய்? என அப்பாவித்தனமாகக் கேட்காதீர்கள். குறைந்தது ஐந்து கவிதைத் தொகுப்பு வரை வெளியிட்டவர்கள்தாம் தமிழில் வாசகர்கள்) அவளிடம் இந்நாவல் பிரச்சினையைச் சொன்னேன். நாவலின் களம் என்ன? எனக் கேட்டாள்.

 "லெஸ்பியன்" என்றேன். 

ஒரு டீ கடையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தோம். அவள் எதுவும் பேசாமல் எழுந்துபோய் டீ போடுபவரிடம். 

"அண்ணே அந்த க்ளாசில சுட்தண்ணி புடிங்க" என்றாள். 

அவரும் கொதிக்க கொதிக்க சுடுநீரை க்ளாசில் பிடித்துக் கொடுத்தார். என்னிடம் வந்தவள். 

"மூஞ்சிலயே ஊத்திருவேன் ஓடிடு" என்றாள். எனக்கு திக் கென்றாகிவிட்டது. இவள் எப்போது எழுத்தாளரானாள்? இன்று வரை வாசகி என்றல்லவா நம்பிக் கொண்டிருந்தேன். எதையும் பேசாமல் திரும்ப வந்துவிட்டேன். 

ஒருவேளை நாவலின் களத்தை அவளிடம் சொல்லியிருக்க கூடாதோ? கேடுகெட்ட இந்த தமிழ்மொழியில், தமிழ்சூழலில், இப்படி ஒரு நாவலை நான் அவசியம் எழுதத்தான் வேண்டுமா என யோசிக்க யோசிக்க ஆத்திரமாய் வந்தது. சிலர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களிடம் இன்பாக்ஸில் கேட்டுப் பார்க்கலாமா? என்கிற யோசனை எழுந்தது. ஆனால் எதையோ கேட்கப் போய் எசகுபிசகாக எதையாவது புரிந்துகொண்டு குச்சியை கையிலேயே பிடித்துக் கொண்டு ஆன்லைனில் நிற்கும் போலிஸ்காரர்களிடம் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டால்? அய்யோ நினைக்கவே திகிலாக இருந்தது. அந்த நினைப்பை அப்போதே கைகழுவினேன். 

எதுவுமே பிடிக்காமல் விட்டேத்தியாய் சில நாட்கள் சுற்றிக் கொண்டு திரிந்தேன். என் பழைய நண்பன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். கூடவே என்னுடைய மிகப் பழைய நண்பனான ஜானியை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்திருந்தான். 

“நண்பா இந்தா, உனக்கு என் பரிசு” என ஆதூரமாய் கட்டித் தழுவித் தந்தான். மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டேன். 

“இப்போது என்ன செய்கிறாய்? எனக் கேட்டான். ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாய் சொன்னேன். 

”என்ன தலைப்பு?”

“ Pulp”  

”குண்டு பல்பா? அத வச்சி இன்னாபா கத”  என்றவனிடம்  

”இல்ல நண்பா இது எல்இடி பல்ப் பத்தின கத” என அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னேன். .

அவன் வழக்கம்போல் புதிராய் என்னைப் பார்த்துவிட்டு எழுந்து போய்விட்டான். 

அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். ஒரு லிட்டர் சிவப்பு லேபிள் புட்டி. எடுத்து வெளியில் வைத்தேன். வழக்கமாய் உள்ளே ஜானி அமர்ந்திருப்பான். ஆனால் இன்றோ புட்டிக்குள் சிவப்பு நிறத்தில் ஒரு பெண் அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். 

ஆச்சரியமாய் இருந்தது 

“அட இதற்குள் நீ எப்படி வந்தாய்?” எனக் கேட்டேன். 

“தெரியல. ஆனா உன்  நாவலில் வரும் பெண் மொழியை எழுதப்போறது நான் தான்” என்றாள். 

வாழ்வு ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என ஆனந்தக் கூக்குரலிட்டபடியே அவளை ஆரத் தழுவிக் கொண்டேன். 


- மேலும்

No comments:

Featured Post

test

 test