Monday, June 3, 2013

ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் நான்கு

அகத்திய மாமுனி பொதிகை மலைச் சரிவிலிருந்து கடுங்கோபத்துடன் புயலெனத் தரையிறங்கிக் கொண்டிருந்தார். மலைச்சரிவிலிருந்த அடர்த்தியான மரங்கள் அவருடைய மூச்சுக் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் பேயாட்டம் ஆடின. மாமுனி நடந்து போவது பூமியிலா ஆகாசத்திலா எனக் கண்டறிய முடியாது வன மிருகங்கள் திகைத்து நின்றன. கோபம் குறையும்போது மாமுனி தன் இடுப்பில் சொருகியிருந்த ஓலைச்சுவடியை எடுத்துப் படித்து மீண்டும் கோபம் கொண்டார். தலையில் நெட்டுக் குத்தாய் போட்டிருந்த கொண்டையை உருவி காற்றில் அலசினார். உடல் சுருண்டு கிடந்த மலைப்பாம்பொன்று பொத்தென தரையில் விழுந்து நெளிந்து மறைந்தது. மலையை விட்டிறங்கி எங்கு போவது என சற்று நேரம் குழம்பினார். காலத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்ததில் இருநூறு வருடங்கள் கடந்திருப்பதை உணர்ந்து கலங்கினார். பொதிகை மலையையே சல்லடை போட்டு சலித்தும் அவரால் அப் பூவைக் கண்டறிய முடியவில்லை. அகத்தீஸ்வரம் போய் சில வருடங்கள் ஓய்வெடுக்க வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டே கோபத்தைக் குறைத்துக் கொண்டு மெதுவாய் நடக்க ஆரம்பித்தார்.

மாமுனியின் கோபம் கண்டு பயந்த சூரியன் விரைவில் மறைந்து விட , நிலவு வேறு வழியில்லாது தலை காட்டிக் கொண்டிருந்தது. மாமுனி கோபம் குறைந்து சாதாரண மனிதர்களைப் போல சாலையில் நடந்து போய் கொண்டிருந்தார். ஆற்றாமை தாங்காமல் மீண்டும் அந்த ஓலைச் சுவடியை எடுத்து சத்தமாய் வாசித்தார் 

கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ் பூவாம்கண்டு தெளிந்து உண்டு நீங்கி-நிலையில் நிறுத்துபிளவில் பூக்கும் மலரை யறிய வேணுங் கண்யறிந்த கண்ணை சுவைத்த நாவை அறிந்தறிந்துயடைவாய் உண்மத்தம்.

இருநூறு வருடங்களாய் மாமுனி தேடிக் கண்டறிய முடியாமல் போனது, இப்பாடல் சொல்லும் ஓரிதழ் பூதான். இந்தப் பாடலை எழுதியது யார் என்பதையும் மாமுனியால் கண்டு பிடிக்க முடியவில்லை. போகரின் எழுத்து நடை சாயல் இருந்தாலும் கம்பரோ தொல்காப்பியரோ எழுதியிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. கொல்லி மலைக்குப் போய் போகரைக் கண்டு தெளிவடையலாம் என்றாலும் அவர் எள்ளி நகையாடிவிடுவாரோ? என்ற அச்சம் மாமுனிக்கு இருந்தது. ஐந்து சாஸ்திரங்கள், ஐந்திலக்கணக்கங்கள் உட்பட எண்ணற்ற நூல்களை எழுதிய அகத்திய மாமுனி ஒரு கவிதை சொல்லும் பூவைத் தேடி இருநூறு வருடங்கள் அலைந்ததை வெளியில் சொல்லவே தயங்கியும் சின்னதொரு அவமானத்தோடும் வெறுப்போடும் நடந்து கொண்டிருந்தார் .

அகத்தீஸ்வரம் போகும் வழியிலிருக்கும் திருவண்ணாமலையை அவர் வந்தடைந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. களைப்பும் சோர்வும் மாமுனிக்கு கிடையாதென்றாலும் மானிட உருவில் ஏராளமான சித்தர்கள் திருவண்ணாமலையை சுற்றி வருவதை அவர் அறிவார். தானும் மானிட உருவிற்கு மாறி யாரிடமாவது இந்தப் பாடலின் விளக்கத்தைக் கேட்கலாம் என்ற சமயோசித யோசனை அவருக்கு உதித்தது.

சடாரென உருவம் மாற்றி ஒரு சாதாரணத் துறவியின் உருவம் எடுத்தார் மலை சுற்றும் பாதைக்காய் நடக்க ஆரம்பித்தார். காவி உடையும் சடை முடியுமாய் ஏராளமான மனிதர்கள்  சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். கல் மண்டபங்களில், அடர்ந்த மரத்தடிகளில், கும்பல் கும்பலாய் தூங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டே மாமுனி நடந்து கொண்டிருந்தார். யாரைப் பார்த்து பேசுவது என பிடிபடாமல் நடந்து கொண்டிருந்தார்.

திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. மழை வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென கொட்ட ஆரம்பித்ததும் அதுவரை தூங்கிக் கொண்டிருந்த மக்கள் எழுந்து அருகாமையிலிருந்த கூரைகளை நோக்கி ஓடினர். மாமுனி கருமாரியம்மன் கோவிலுக்காய் ஒதுங்கினார்.

ஒரு மின்னல் பளீரென வெட்டியது. அந்த வெளிச்சம் கண்டு மொத்த கூட்டமும் ஒரு நிமிடம் அலறி அடங்கியதுஅந்த வெளிச்சத்தில் மாமுனி ஒருவரைக் கண்டார். அவர் கோவிலுக்கு அருகிலிருந்த குளக்கரைத் திட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். சற்று விநோதமாய் உணர்ந்த மாமுனி மழை பெய்வதைப் பொருட்படுத்தாது கூரை விட்டகன்று அவரை நோக்கிப் போனார்.

மழை கடும் சப்தத்தோடு தாரை தாரையாய் ஊற்றிக் கொண்டிருந்தது. மாமுனி தூங்கிக் கொண்டிருந்தவரின் அருகில் போய் அவரைத் தட்டி எழுப்பினார். கைத் தாங்கலாய் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த மரத்தடி நோக்கி நடந்தார். மழையோடு திடீரென குளிர் காற்றும் சேர்ந்து கொண்டது. மாமுனி நடுங்கியவாறு நின்று கொண்டிருந்த அவரிடம் கேட்டார்

மழை பெய்வதை தாங்கள் உணரவில்லையா?”

என்னாது

மழ மழ

ம்க்கும் கொஞ்சம் ஜாஸ்தியா பூடுச்சி. தெர்ல

மாமுனிக்கு அவரிடம் ஏதோ விசேஷம் இருப்பது போல் தோன்றியது. கொஞ்சமும் தயங்காமல் கேட்டு விட்டார்

ஐயா ஒரு பாடல் சொல்லும் பூ பற்றி எனக்கொரு ஐயம், கேட்கட்டுமா?”

என்னாது?”

பாடல், பூ பற்றிய பாடல்

என்னாங்கடா  உங்களோட ரோதன. இவ்ளோ நேரம் ஒருத்தன் பூவ பாத்தேன் மயிர பாத்தேன்னு உயிர வாங்கிட்டு இப்பதான் போனான் ஒடனே நீ வந்து நிக்குற என்னடா பூவு

ஓரிதழ் பூ ஐயா

ஒண்ணு பண்ணு, நாளைக்கு காலைல என்னோட வா, எப்படியும் அவன் அங்கதான் இருக்கணும். அவங்கிட்ட கேள். அவம் வாத்தி வேற. ஒனக்கு புரியும்படி சொல்வான்.இப்ப உயிர எடுக்காம எட்ட போ” 

என சொல்லியபடியே  மர வேர்களில் தோதான இடைவெளி பார்த்து சுருண்டு படுத்துக் கொண்டார்.


மாமுனி மீண்டும் கருமாரியம்மன் கோவிலுக்கு வந்தார். நாளைக் காலை விடை கிடைத்துவிடும் என்ற சின்னதொரு நம்பிக்கை அவருக்கு வந்தது. மீண்டும் ஒரு மின்னல் வெட்ட மாமுனி கோபமடைந்தார். அண்ணாந்து வானம் பார்த்து பற்களைக் கடித்தார். பட்டென மழை நின்றது. மேகங்கள் அவசர அவசரமாய் கலைந்து போயின. எங்கேயோ போய் பதுங்கிக் கொண்டிருந்த நிலவு திடுமென வானில் தோன்றியது. சுற்றி என்ன நடக்கிறது என்பதையே உணராத மக்கள் மீண்டும் போய் அவரவர் இடங்களில் புதைந்து கொண்டனர்

- மேலும்

No comments:

Featured Post

test

 test