Saturday, March 24, 2007

மேதமைகளைப் பின் தொடரும் இருண்மை




சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவல் இப்படித் தொடங்கும்,”மேதாவித்தனத்திற்கும் அற்ப ஆயுளுக்கும் வெகு நெருங்கிய தொடர்பு போல”என்று.அற்ப ஆயுள் மட்டுமல்ல அதீத கலை ஆளுமை உள்ள அபூர்வ படைப்பாளிகளின் மொத்த வாழ்வின் மீதும் பெரும் கரு நிழல் ஒன்று தனது இரக்கமற்ற கிளைகளை விரித்துப் படர்ந்துருப்பது என்னமோ நிஜம்.

பாரதியிலிருந்து ப.சிங்காரம் வரை பெரும்பாலான மேதைகள் வாழ்வின் துயரத்தின் பிடிகளுக்கு இரையானவர்கள்தாம்.அதீத தேடுதல்களும் தியானத்தன்மைக்கு நிகரான படைப்புகளையும் படைக்க முடிந்த இவர்களின் வாழ்வு அற்ப ஆயுள்,நோய்,வறுமை,அரசியல் பழிவாங்கல்கள்,பெருந்தனிமை என இருத்தலின் அத்தனை இருண்மைகளயும் உள்வாங்கிய ஒன்றாகவே இருக்கிறது.

பாரதியை தொடர்ந்து வந்த ஜி.என்.நாகராஜன்,பிரமிள்,ஆத்மாநாம்,ப.சிங்காரம் என தமிழ் ஆளுமைகள் மட்டுமின்றி,தஸ்தாயெவ்ஸ்கி,ஆல்பெர் காம்யு,சில்வியா ப்ளாத் என உலகின் பெரும்பாலான கலை ஆளுமைகளின் வாழ்வு முழுவதும் ஒரு சாபமென சொல்லிவத்தார்போல் துயரத்தின் வலிகளையே சுமந்து அலைந்திருக்கிறது.ஆனால் இவர்களின் படைப்புகளை
எந்த விதத்திலும் சொந்த வாழ்வின் அவலங்கள் தீண்டியிருக்கவில்லை சொல்லப்போனால் இன்னும் மெருகும் அழகும் கூடியிருந்தது.

வண்ணதாசன் (கல்யாண்ஜி) ஒரு பதிவில் "வாழ்வின் எந்த ஒரு கதவிடுக்கிலும் என் வேட்டியின் நுனி கூட சிக்கிக்கொள்ளவில்லை" என சொல்லியிருப்பார் இது போல வாழ்வு அமைவது வெகு அபூர்வம்.பாப்லோ நெருடா போல வாழ்வை ஒரு கொண்டாட்டமென கழித்த படைப்பாளிகள் வெகு சிலரே.

கலைத்தன்மையின் உச்சத்தை எட்டிவிடவேண்டும் என்கிற இவர்களின் விழைவு சாதாரண வாழ்வின் இன்பங்களை புறந்தள்ளியிருக்கலாம். அல்லது படைத்தலின் உலகத்தில் அற்ப வாழ்விற்க்கு இடம் இல்லையோ?

வரலாற்றின் பக்கங்களில் புதைந்து போயிருக்கும் இவர்களின் அரிய படைப்புகளை வெளிக்கொணருவதும்,வரவேற்பு மேசைக்குள் சுருங்கி விட்ட உலகத்தின் பார்வைக்கு இப்படைப்புகளை கொண்டு செல்வதும் 'தேடல்' சனியனை சுமந்து திரியும் நம் போன்றவர்களின் கடமை யாகிறது.

அறிவியல் கொடுத்துள்ள அற்புதங்களை மிகச்சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது மட்டுமே இம்மேதமைகளுக்கு நாம் செய்யும் மிகச் சரியான அஞ்சலி.

அத்துடன் சம கால மேதமைகளை முன்நிறுத்துவதும் அவர்களின் படைப்புகளை உலகறியச் செய்வதும் மட்டுமே பின் வரும் நாட்களில் நமக்கு ஏற்பட நேரிடும் குற்ற உணர்ச்சிகளின் விடுதலையாக அமையக்கூடும்.

4 comments:

மிதக்கும்வெளி said...

நீங்கள் காலச்சுவடு அய்யனாரா?

Ayyanar Viswanath said...

திவாகர்

மன்னிக்கவும்..நான் காலச்சுவடு வாசகன் தான் ..

அவர் பெ.அய்யனார் என்று நினைக்கிறேன்

காட்டாறு said...

//வாழ்வை ஒரு கொண்டாட்டமென கழித்த படைப்பாளிகள் வெகு சிலரே.//

அய்யனாரே, நீங்கள் சொல்வதை முழுவதுமாக நான் ஒத்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் சொன்ன மாதிரி //வரலாற்றின் பக்கங்களில் புதைந்து போயிருக்கும் இவர்களின் அரிய படைப்புகளை வெளிக்கொணருவதும்// வெளிக்கொணருவேமானால், படைப்பாளிகள் வாழ்வை கொண்டட்டமென களி(ழி)த்தது வெளி வரும்.

காயத்ரி சித்தார்த் said...

//கலைத்தன்மையின் உச்சத்தை எட்டிவிடவேண்டும் என்கிற இவர்களின் விழைவு சாதாரண வாழ்வின் இன்பங்களை புறந்தள்ளியிருக்கலாம். அல்லது படைத்தலின் உலகத்தில் அற்ப வாழ்விற்க்கு இடம் இல்லையோ?
//

அற்புதம்.. பாரதியைப் பற்றி பேசும்போதெல்லாம் எனக்கும் என் அம்மாவிற்கும் அடிக்கடி வாக்குவாதம் வருவதுண்டு. "மாபெரும் படைப்பாளிகள் பலருக்கும் வாழத்தெரிந்திருக்கவில்லை" என்று அம்மாவும் "உண்மையில் அவர்கள் வாழ்ந்தது தான் வாழ்க்கை.. நமக்குத்தான் புரியவில்லை" என்று நானும் விவாதித்திருக்கிறோம். இந்த வரிகள் நிரம்ப பிடித்திருக்கின்றன அய்யனார்! (தலைப்பு உங்களுக்கும் கூட பொருந்தும் போலிருக்கிறதே?) :)

Featured Post

test

 test