Wednesday, February 27, 2013

கடைசி நாளில் மழை... 2


திருச்சூரிலிருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 13 ஆம் கிமீ யில் விலகி உள்நுழைந்த வாகனம் அடர்ந்த இருளில் ஒற்றைப் பாதையில் முண்டூர் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கேரளம் எட்டுமணிக்கெல்லாம் தூங்கிவிடுகிறது. பத்துமணிக்கு சாலையில் ஒன்றும் இல்லை. அந்த சாலை இருப்பதே கூட காலையில்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. பல வளைவுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தோப்பை வந்தடைந்தோம். உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கு நடுவில் இரண்டு வீடுகள். கேரளப் பாரம்பரிய வீடுகளில் ஒன்றான நாலுகட்டில் வீடொன்றும் மண்ணால் மட்டுமே கட்டப்பட்ட கெஸ்ட் அவுஸ் ஒன்றும் எங்களுக்காய் காத்துக் கொண்டிருந்தது. வீட்டிற்கு சொந்தக்காரரான திவாகரன் திருவண்ணாமலையில் ஜெயஸ்ரீ வீட்டில் இருந்தார். அவர் மகன் தன் நண்பர்கள் சகிதமாய் எங்களை வரவேற்றான். அந்த இரவில் பயணக்களைப்பையும் மீறி அடுத்த இரண்டு மணி நேரம் நாங்கள் யாருமே தூங்கவில்லை. அந்த இரண்டு வீடுகளின் நேர்த்தியை அங்குலம் அங்குலமாய் சிலாகித்துக் கொண்டிருந்தோம். , முற்றத்து மாடம், கல்தூண்கள் குறிப்பாய் அந்த மண்வீடு பற்றி திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தோம். மண் வீட்டை எப்படிக் கட்டினோம் எவ்விதம் இவ்வளவு அழகாய் வந்தது என்பதை பத்தாவது முறையாக ஒரே பதிலை சலிக்காமல் ஆர்வமுடன் அப்பதின்மன் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.


காலைச் சூரியன் தான் அந்த தோப்பின், அந்தப் பழைய வீட்டின் முழு அழகையும் எங்களுக்கு உணர்த்தியது. அந்த வீட்டின் மாடியின் மீது நின்று கொண்டு ஜெயஸ்ரீ தந்த தேநீருடன் மரங்களுக்கு இடையில் மேலெழும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பவா அதிகாலையிலேயே வெட்டுக்கல் குறித்த ஆராய்ச்சியில் இறங்கிவிட்டிருந்தார். கேரளத்தின் அழகான வீடுகள் எல்லாமும் வெட்டுக்கல்லில் தான் கட்டப்படுகின்றன. அல்லது வெட்டுக்கல்லால் கட்டப்படும் எல்லா வீடுகளும் தனித்த அழகைக் கொண்டிருக்கின்றன. இக்கற்கள் எங்கே கிடைக்கும் எப்படித் திருவண்ணாமலைக்குக் கொண்டுபோவது என கேட்கப்போன பவா தன் வாசகரோடு திரும்பவந்தார். தேசாபிமானியில் பவா எழுதிய தொடரைப் படித்திருந்த ஒரு முதிர்ந்த வாசகர் பவாவைக் கண்டுகொண்டு அவரோடு பேசிக்கொண்டே வீடுவந்தார். அந்த வீட்டின் சூழலோ என்னவோ எல்லாருமே நிறைவாய் பேசிக்கொண்டிருந்தோம். தூண்களுக்கு சமீபமாய் அமர்ந்துகொண்டு சந்துரு தோழர் கோழிச் சண்டைக் கதைகளை விலாவரியாய் சொல்லிக் கொண்டிருந்தார். அது ஆடுகளம் படத்தை ஒட்டிய நுட்பமான விவரிப்பாய் நீண்டு கொண்டிருந்தது. பவாவின் முதிர் வாசகர் எங்களை அவர் வீட்டிற்கு அழைத்தார். தன் சகோதரனும் மலையாளத்தில் எழுதுபவர்தான் என்றார்.

எல்லோருமாய் கிளம்பி அவர் வீட்டிற்குப் போனோம். மிகச் சாதாரணமான அந்த வீட்டு முகப்பைத் தாண்டி உள்நுழைந்தோம். பிரதான வீட்டின் முற்றத்தில் சாய்வு இருக்கைகளில் இரண்டு பெரியவர்கள் அமர்ந்திருந்தனர். வாரப்பத்திரிக்கைகளும் தினப்பத்திரிக்கைகளும் இருக்கைகளுக்கு முன்பிருந்த சிறு மேசை மீது கிடந்தன. அந்த எழுத்தாளர் எழுந்து எங்களை வரவேற்றார். தன் பெயர் மாடாம்பு குஞ்சுகுட்டன்  என அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அவர் சொன்ன செய்திகள் எல்லாமும் எங்களை வியப்பில் ஆழ்த்தின. மலையாளத்தில் இருபது நாவல்களை எழுதியுள்ளார். கேரள சாகித்ய அகடாமி விருது பெற்றவர். தவிர ஜெயராஜ் இயக்கத்தில் வெளிவந்த கருணம் படத்தின் திரைக்கதையை எழுதியவர். அதற்காக தேசிய விருது பெற்றவர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அருகாமையிலிருந்த வீட்டின் பழமை எங்களை ஈர்த்தது. ஆம் 300 வருடப் பழமையான தரவாடு அது. ஒரு வீடு முன்னூறு வருடங்கள் இருக்கமுடியும் என்பதே திகைப்பாக இருந்தது. அவ்வப்போது அவ்வீட்டைப் பழுது பார்த்துக் கொண்டு அதன் பழமை சிதையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பிரதான வீட்டில்தான் நூலகம் இருந்தது. குறுகலான மண்படிகள் வழியாய் அவ் வீட்டின் முதல் தளத்தை அடைந்தோம். அவரின் மிகப் பழைய விஸ்தாரமான நூலகம் எங்களை வரவேற்றது. ஏராளமான புத்தகங்கள் மிகப் பழைய வாசனையுடன் உயிர்த்திருந்தன. அவர் பயன்படுத்திய பேனாக்கள், இங்க்புட்டிகள், எல்லாமும் காலத்தை அழித்துக் கொண்டு அப்படியே இருந்தன. இந்தப் பயணத்தின் மொத்த உன்னதத்தையும் அந்த நூலகம் எங்களுக்குத் தந்துவிட்டது. பல ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. சமகாலப் படைப்புகளையும் பார்க்க முடிந்தது. எழுத்தாளரின் தந்தை யானை வைத்தியம் அறிந்தவர். அந்தப்பகுதியில் பிரபலமானவர். சுவரில் மாட்டப்பட்டிருந்த அவரின் புகைப்படங்கள் இன்னும் இன்னும் பழமையைக் கண்முன் கொண்டுவந்தன.


ஒரு மிகப் பழைய வீட்டில் மூன்று பெரியவர்கள் முற்றத்து சாய்விருக்கைகளில் அமர்ந்துகொண்டு யாருக்காவது காத்துக் கிடக்கும் காட்சி எனக்குள் ஒரு ஓவியம்போல படிந்துபோனது. வெளியேறவே மனமில்லாமல்தான் அவ்வீட்டை விட்டு வெளியேறி விடை பெற்றோம்.

அதிகாலைக் குளிரை சுமந்துகொண்டு வீடுவந்தேன். போர்வைக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவனை மெல்ல அணைத்தபோது கண்ணைத் திறக்காமல் கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டான். எங்கபா போன? என்றான். கடந்த இரண்டு வருடத்தில் அவனை விட்டுப் பிரிந்திருந்த முதல் மூன்றுநாட்கள். இடையிடையே என்னைக் கேட்டு அழுததாக சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்த ஒரு வாரத்திற்கு பயல்களை விட்டு நகரவில்லை.

புத்தகக் கண்காட்சியை ஒட்டி சென்னைக்குப் போனேன். என்னுடைய பால்ய நண்பர்களில் பெரும்பாலானோர் சென்னையில்தான் வாசம். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் அவர்களின் வீடுகளுக்குப் போகாதது குறித்து குறைபட்டுக் கொள்வார்கள். அதையும் நிவர்த்தி செய்துவிடும்பொருட்டு ஒரு நாளைக்கு ஒரு நண்பன் வீடு எனப் பிரித்துக் கொண்டு தங்கினேன். ஏழு வயதிலிருந்து நாங்கள் நண்பர்கள். இன்று வரை எங்கள் நட்பில் எந்தக் குறையுமில்லை. எங்களை இணைத்திருந்த பால்ய நட்புச் சங்கிலி கண்ணாடியினால் ஆனது. அக்கண்ணாடியில் சதா மது நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஆக எங்கள் இரவுகள் முழுவதும் மதுவால் நிரம்பின.  இதனால் சென்னையில் சந்திக்க விரும்பியிருந்த இணைய நண்பர்கள் ஒருவரையும் தொலைபேசியில் கூட அழைக்க முடியாமல் போனது. ஒரு மதியமும் இன்னொரு மாலையும் புத்தகக் கண்காட்சிக்குப் போக வாய்த்தது. எழுத ஆரம்பித்து அதன் மூலமாய் நட்புத் தொடர்புகள் ஏற்பட்ட புதிதிலிருந்தே புத்தக கண்காட்சியின் மீது ஒரு ஏக்கம் இருந்தது. அங்கு நடக்கும் சந்திப்புகள் குறித்தெல்லாம் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அடுத்த ஆண்டு நாமும் அவசியம் போகவேண்டும் என நினைத்துக் கொள்வதுண்டு. அச்சில் எழுத்து வந்தபோது இந்த ஆர்வம் இன்னும் இரட்டிப்பானது. ஆனால் நேரில் அப்படி எதுவுமே இல்லை. கற்பனை தான் இருப்பதிலேயே மிக உயர்ந்த விஷயம். கற்பனையை விட இன்பம் தரக்கூடிய இன்னொன்று கிடையவே கிடையாது. கண்காட்சிக்குப் போன இரண்டு நாட்களில் நண்பர்களை சந்திக்க முடிந்ததுதான் ஒரே ஆறுதல். சந்தித்த நண்பர்களில் வாசுவைத் தவிர அனைவரையுமே முதன்முறையாய் சந்தித்தேன். மிஷ்கின் அலுவலகத்தில் ஒரு நாள் இரவு போனது.

திருவண்ணாமலை வந்ததும் மீண்டும் அடுத்த நிகழ்விற்கு தயாரானோம். எஸ்கேபி கல்லூரியில் இரண்டு நாட்கள் திரைப்பட விழா

- மேலும்

Monday, February 25, 2013

கடைசி நாளில் மழை பெய்தது - 1

விடுமுறைக்குப் போவதற்கு முன்பு உற்சாகம் தரக் கூடியதாய் இருந்த எண்ணங்களில் முதலாவது மழை. இருக்கப்போகும் நாற்பது நாட்களில் எப்படியும் நான்கைந்து நாட்களாவது மழை இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் கடைசி நாளில் கிளம்புவதற்கு ஆறு மணிநேரங்களுக்கு முன்புதான் மழையை தரிசிக்க முடிந்தது. பயல்களாகிய நாங்கள் பெரியவர்களின் பாதுகாப்பு வேலிகளை உடைத்து மழையில் நனைந்து குதூகலித்தோம். திருவண்ணாமலையிலிருந்த ஒவ்வொரு நாளுமே புதிதாகத்தான் இருந்தது. எதிர்பார்த்திராத பல விஷயங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளுமே ஒரு வியப்பைத் தக்க வைத்திருந்தது. பவா வும் ஷைலஜாக்காவும் ஒரு நாளை அப்படியே சாதாரணமாய் கடந்து போய் விட அனுமதிக்கவே இல்லை. ஏராளமான நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், புதுப்புது மனிதர்கள் என ஒரு நொடி கூட சலிப்போ அலுப்போ இல்லாமல்தான் கடந்தது.

 ஊருக்குப் போய் சேர்ந்த அடுத்த நாள் மதியவாக்கில் வம்சிக்குப் போனேன். என் வருகையை யாரிடமும் தெரிவித்திருக்கவில்லை. பவா வைக் கண்டதும் கட்டியணைத்துக் கொண்டேன். எல்லோரிடமும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது. முருகன் காரில் எல்லோருமாய் கிளம்பி ஒரு நிச்சயதார்த்த விழாவிற்குப் போய் பிரியாணி சாப்பிட்டோம். மலையைப் பின்புறமாக சுற்றிக்கொண்டு சமுத்திர ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் ஆனந்த் காயத்ரி வசிக்கும் நிலத்திற்குப் போனோம். அங்கங்கு சிறுசிறு குடில்கள், மண்ணால் செய்த உருவபொம்மைகள், நிறைய பூச்செடிகள், பழமரங்கள் என இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த வயல்வெளி ஒரு சின்னஞ்சிறு சோலையாக மாறியிருந்தது. ஒரு பெரிய கொட்டகைக்கு அடியில் ஆனந்தும் காயத்ரியும் ஆதித்யாவும் பிற நண்பர்களோடு குழுவாய் சமைத்து, மண்தரையில் அமர்ந்து அந்த எளிய உணவை சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாய் வாழ்ந்துவிடுகிறார்கள். என்னுடைய வழக்கமான வீடு பற்றிய கற்பிதங்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது. ஒரு ஓலைக் கொட்டகைக்குள் அமர்ந்துகொண்டு, இடையறாது வீசிக்கொண்டிருக்கும் காற்றின் தழுவலை அனுமதித்தபடி, கம்பீரமாய் அமர்ந்திருக்கும் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் உன்னதம் என்பதை மீண்டும் எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். என்னுடைய வருங்காலம் பற்றிய கனவு கூட இதுமட்டுமேதான். இதை எவ்வளவு சீக்கிரம் அடைகிறேன் என்பதுதான் என் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால். எனக்காக இங்கே ஒரு துண்டு நிலம் தன் எல்லா அற்புதங்களையும் உள்ளடக்கிக்கொண்டு காத்திருக்கிறது என்பதை மந்திரம்போல் உச்சரித்துக் கொண்டேன்.

 இரண்டு நாட்கள் கழித்து கேரளாவிற்குப் போனோம். ஒரு டெம்போ ட்ராவலரில் பவா மற்றும் ஜெயஸ்ரீ குடும்பத்தாருடன் பயணம். பவாவிற்கு உணவு குறித்த பிரக்ஞை அதிகம். முதல்நாளே அரூர் ஹோட்டலுக்கு போன்செய்து இவ்வளவு பேர் வரப்போகிறோம் எல்லாமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்கிற தகவலைத் தந்துவிட்டிருந்தார். நாங்கள் போய்சேர்ந்த போது எல்லாமும் இருந்தது. ஒரு முழு ஆட்டின் சகல பாகங்களையும் தனித்தனியே விதம்விதமாய் சமைத்துத் தருகிறார்கள். ருசியும் அற்புதம். அந்தக் காலை வேளையில் வயிறு புடைக்க சாப்பிடமுடிந்தது. திருப்பூரை நெருங்க நெருங்க அரங்கசாமி யிடமிருந்து தொடர் அழைப்புகள். மதிய உணவை அவருடனும் அவர் பயல்களுடனும் வைத்துக் கொண்டோம். கேரள எல்லையில் ஒரு சிற்றூரில் பவாவின் வாசக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த மாலைச் சந்திப்பில் கலந்துகொண்டோம். பவா பாவண்ணனின் பயணம் கதையையும் ஜெமோவின் ஊமைச் செந்நாய் கதையையும் சொல்லி முடித்தபோதுதான் எங்களை ஏற்கனவே இரவு சூழ்ந்திருந்ததை உணர்ந்தோம். ராத் தங்கல் அருண் வீட்டில். ஊர் பெயர்களெல்லாம் மறந்துவிட்டேன். வளைந்து நெளிந்து போகும் மங்கை மேகக் கூந்தல் பாதைகள். தெருவிளக்குகள் ஏதுமற்ற அசல் இருள் பயண முடிவில் ஒரு தன்னந்தனி வீட்டை அடைந்தோம். எங்களுக்காக காத்துக் கொண்டிருந்த நட்பின் இணக்கங்கள் நல் உணர்வைத் தந்தன.

  மீண்டும் காலையில் வளைந்து நெளிந்து செல்லும் அதே பாதைகளில் பயணம். வழிநெடுக பசுமையின் ஊழித் தாண்டவத்தைப் பார்த்துக் கொண்டே பயணித்தோம். பவாவின் நண்பர் அருணின் இரப்பர் தோட்டங்களை மலையேறிப் பார்த்தோம். மாலை போர்ட்கொச்சினில் நடைபெற்றுக் கொண்டிருந்த பினாலே வைப் பார்க்கப் போனோம். கண்களை விரிய வைத்த நிகழ்வு அது. உலகின் பல பாகங்களிலிருந்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் இடம்பெற்றிருந்தன மாயாவின் படைப்புகளை கண்டேன். அந்த இடமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. மிகப் பழைய பிரெஞ்சுக் கட்டிடங்கள். தொட்டடுத்து கடல். புகைப்படங்கள், ஓவியங்கள், அசைபடங்கள், டாக்குமெண்டரிகள், நுண்கலைகள் என சகலமும் ஒரே இடத்தில் காணக் கிடைத்தன. வல்சனை சந்தித்துப் பேசினோம். அவர் காட்சிக்கு வைத்திருந்தவற்றைப் பார்த்து வியந்தோம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை என மிகை உணர்ச்சி ததும்ப ஷைலஜாக்காவிடம் சொன்னேன்.

  ஃபோர்ட்கொச்சினின் Ambiance எனக்குப் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட பாண்டிச்சேரியின் வார்ப்பு. இந்த பிரெஞ்சுக்கார கிராதகர்கள் எங்கே போனாலும் தமக்கான தனித்தன்மையோடுதான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனந்தின் சகோதரி ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் எங்களுக்கு உவப்பில்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் என்னால் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ள முடியும். இந்த ஆறுவருட அயல்வாழ்வில் என் தோல் தடித்துவிட்டது. ஆனால் பவா மிகத் தூய்மையான திருவண்ணாமலைவாசி. அவரால் ஒருபோதும் நகர நெருக்கடிக்கு தம்மை ஒப்புக்கொடுத்துவிட முடியாது. நண்பர்களைத் தொடர்புகொண்டு திருச்சூரை அடுத்திருக்கும் ஒரு நண்பர் வீட்டில் தங்க முடிவு செய்தோம். நாங்கள் எடுத்த முடிவின் மகத்துவம் குறித்து அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

 மேலும்

Thursday, January 24, 2013

திரைப்படக் கழக துவக்க விழா- திருவண்ணாமலை











நண்பர்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் நடக்க இருக்கும் நிகழ்விற்கு அழைக்கிறேன்



Wednesday, January 2, 2013

2012




 வேறெப்போதும் உணர்ந்திராத மன அமைதியை இந்த வருடத்தில் பெற்றேன். பெரும்பாலான இரவுகளில் பயல்களுக்கு கதை சொல்லிக்கொண்டே பயல்களுக்கு முன்பாகவே தூங்கிப் போனேன். தேவையில்லாத எண்ணங்கள், அநாவசியக் கற்பனைகள், சதா குழம்பித் திரியும் மனம் என எல்லாவற்றிடமிருந்தும் என்னைத் துண்டித்துக் கொண்டேன். வெளி உலகத் தொடர்புகள், நண்பர்கள், ஊர்சுற்றல், வார இறுதிக் குடி போன்றவையும் என்னைத் துண்டித்தன. மிகக் குறைவாகத்தான் யோசித்தேன். மிகமிகக் குறைவாகத்தான் எழுதினேன். மூன்று குறுநாவல்களின் கரு மனதில் விழுந்திருந்தாலும் அதிலேயே மனம் ஊறிக் கிடக்காததால் எழுத முடியவில்லை. ஒவ்வொரு நாளும் துளிர்க்கும் பசுஞ்செடியைப் போல் இச்சிறு பிள்ளைகள் வளர்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் வேகத்திற்கு, துடிப்பிற்கு, உற்சாகத்திற்கு ஈடுகொடுக்க இன்னும் உயிர்ப்போடு இருக்க வேண்டியிருக்கிறது. Wide Awake, Alertness  போன்ற பதங்கள் எல்லாம் ஞானவாழ்வில் மட்டுமல்ல குமாஸ்தா வாழ்விலும் உண்டு என்பதை இந்தப் பயல்கள் கற்றுத் தருகிறார்கள். ஒரு நாளில் நூறு ஏன்-ம்பா? விற்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் கண்முன் விரியும் காட்சிகள் அனைத்தும் ஏன்? என்கிற கேள்வியோடுதான் முடிகின்றன. சில பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு சும்மா- பா என்கிற பதிலையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்/றோம்.

மனதை தொந்தரவு செய்யும் எந்த செய்திகளையும் மேய்வதில்லை. இந்த வருடத்தில் பார்த்த படங்களை விட பாதியில் நிறுத்தின படங்கள் அதிகம். “நீ இப்ப ஒரு குழந்த மாதிரி ஆகிட்ட தெரியுமா?” என நம்பமுடியாத குரலில் இவள் சொல்வதைக் கேட்டு புன்னகைக்க முடியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தேன் என்பதை நினைக்க வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய? எல்லா உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் முழுமையாய் உணர்ந்துவிட்டே வெளிவர விரும்புகிறேன். தீயைத் தீண்டி அறிய விரும்பும் மனம். பிறருக்கு என்னால் நேர்ந்த துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் நானே என்கிற புள்ளிக்கு திமிர் பிடித்த மனம் மெல்ல நகர்வதை உணரமுடிகிறது. எம்பிஏ  முதல் வகுப்பில் தேறியது. புதுக் கார் வாங்கியதென குமாஸ்தா சாதனைகளும் இவ்வருடத்தில் உண்டு. என்னை வற்புறுத்தி, நச்சரித்து, திட்டு வாங்கிக் கொண்டு, படிக்க வைத்த மனைவிக்கு எம்பிஏ வும், சீட்டை மட்டுமே தேய்ப்பவனுக்கு நிறைய சம்பளம் கொடுக்கும் அரசிற்கு காரும் சமர்ப்பணம்.

இந்த வருடத்தில் நீலகண்டப் பறவையைத் தேடி – நாவலை வாசித்துவிட முடிந்தது. மிக வேகமாக வாசித்து முடித்து விட்டு சில பகுதிகளை மீண்டும் வாசித்தேன். மன எழுச்சி என்கிற பதத்தை படிக்க நேரிடும்போதெல்லாம் ஒரு சின்ன ஏளனப் புன்னகை தோன்றும். ஆனால் நீலகண்டப் பறவை தந்த உணர்வை வார்த்தையில் கடத்த தோற்றுப் போய் அதே மன எழுச்சியையே துணைக்கழைக்கிறேன். ஆம் இந்த நாவல் மிகுந்த மன எழுச்சியைத் தந்தது. முதல் வேலையாக எழுதிக் கொண்டிருந்த குறுநாவலை நிறுத்திவிட்டேன். என்ன மாதிரியான குப்பை இது? என என் எழுத்தின் மீது கோபம் வந்தது. ஒரு பெரும் மரத்தைத் தொட்டுப் பார்த்து இரண்டு வருடங்களாகப் போகின்றன, என்னால் எந்த மாதிரியான எழுத்தைத் தந்துவிட முடியும்? நான் ஏன் எழுத்து என்கிற பெயரில் குப்பையைச் சேர்க்கிறேன்? என அடுக்கடுக்காய் கேள்விகள் முளைத்த ஒரு இரவில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு தூங்கப் போய்விட்டேன். கொஞ்சம் இந்திய க்ளாசிக்குகளை படிக்கலாம் என தூக்கத்தின் நடுவே நினைத்துக் கொண்டேன்.

பயல்களின் அனுமதி இல்லாமல் டிவி பார்க்க முடியாததால் சாகசப் படங்கள், குறிப்பாக அனிமேட்டட் படங்களாக பார்த்துத் தள்ளினோம். ஹேப்பி ஃபீட் வகையறாக்களோடு மியாசகி படங்களையும் கலந்து கட்டி இரு தரப்பும் திருப்தியடைந்து கொண்டோம். பயல்கள் தூங்கிய பின்பு நல்ல பிரிண்ட் கிடைத்த புதுத் தமிழ் படங்களையும் விடாமல் பார்த்தோம். டோனி காட்லிஃப் படங்களைக் குறித்து எழுத ஆரம்பித்து அதையும் இரண்டு பதிவுகளோடு நிறுத்திக் கொண்டேன். ஏனோ தெரியவில்லை தொடரமுடியவில்லை. சமீபமாய் கண்டறிந்த இன்னொரு இயக்குனர் Emir Kusturica. செர்பிய இயக்குனர். இவரின் Time of the Gypsies படம் பல அதிர்வுகளைத் தந்தது. இவரின் மற்ற படங்களையும் பார்த்து விட்டு எழுதவேண்டும். இப்படியாய் ஜிப்சி படங்களைப் பார்த்து, ஜிப்சி இசையைக் கேட்டு, வாழ்வு அனுமதித்தால் ரோமானிய தேசங்களில் சுற்றி அலைந்துவிட்டு, ஜிப்சிக்களைப்பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தையும் இங்கே பதிந்து வைக்கிறேன். 

அகிரா வைக் குறித்தும் ஒரு நூல் எழுத வேண்டும். அல்லது கட்டுரைகளாவது எழுத வேண்டும். ஆனால் உலகின் பெரும்பாலானவர்களால் எழுதி,பேசி, சலிக்கப்பட்டுவிட்டவர் அகிரா. புதிதாக அவரை எந்த கோணத்தில் எழுதி விட முடியும்? என்கிற சலிப்பும் கூடவே எழுகிறதுதான். ஆனால் எழுத்து இரண்டாம் பட்சம் முதலில் சற்று விழிப்பாய் மீண்டும்அகிரா படங்களைப் பார்ப்போமே என ஆரம்பித்து விட்டேன். செவன் சாமுராய், yojimbo, The bad sleeps well ஆகிய மூன்று படங்களை  கடந்த இரண்டு நாளில் பார்த்தேன். செவன் சாமுராயை என்னுடன் பார்த்த மனைவி “கொள்ளைக்காரர்களுக்கு பதிலாய் யானையைப் போட்டால் அப்படியே கும்கி படம். இப்படியா அட்ட காப்பி அடிப்பாங்க? “ என அங்கலாய்த்தபடியே சாமுராய் அல்லாத ஒருவனுக்கும் கிராமத்துப் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் அப்படியே  கும்கியில் சுடப் பட்டிருப்பதையும் சொன்னாள். மேலும் “அடிக்கிறது அட்ட காப்பி ஆனா டிவில வந்து உட்கார்ந்துட்டு, கால்மேல கால் போட்டுட்டு நானே ஜிந்திச்சேன்னு பேட்டி கொடுக்கறத பாத்தாதான் பத்திட்டு வருது” என பொரிந்து தள்ளினாள். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ஒரு பிரபல ப்ளாக்கர் ஆவதற்கான எல்லாத் தன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன எனச் சொன்னேன் “ஏ! பே” எனச் சொல்லிக்கொண்டே எழுந்து போய்விட்டாள்.



Tuesday, November 6, 2012

அத்தியாயம்- ஏழு

என்னை கிட்டத்தட்ட எல்லோருமே பைத்தியம் என்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் என் தலையைத் தொலைவில் பார்த்த உடனேயே நைசாக நழுவி கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் மறைந்து கொள்கிறார்கள் என்பதுதான் ஆற்றாமையாக இருக்கிறது. இதே இவர்கள் ஒரு காலத்தில் என் பேச்சைக் கேட்க கியூவில் நின்றார்கள். அந்தி சாய்வதற்கு முன்னமே ரம் புட்டிகளை இடுப்பில் மறைவாய் சொருகிக்கொண்டு வந்துவிடுவார்கள். மலையடிவாரம், வயல்வெளி, சந்தடியில்லாத ரயில்வே கேட் என தினம் ஒரு இடம். ஆறு மணிக்கு பேச ஆரம்பித்தால் முடிய பத்து பதினோரு மணி ஆகும். நடுநாயகமாய் உட்கார்ந்திருப்பேன். வருபவர்கள் கையிருப்பிற்கேற்ப ஸரக்கை வாங்கி வந்துவிடுவார்கள். கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். அசராமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். முப்பத்தைந்தைக் கடந்தவர்களின் கேள்விகளில் செக்ஸ் அல்லது ஆன்மீகம் தாண்டி வேறெதுவும் இருக்காது. கூட்டுக் கலவி, நிர்வாணம், சுதந்திரம் பற்றியெல்லாம் அசராமல் பேசுவேன். எதையாவது அச்சுபிச்சுவென்று சொல்லிவிட்டாலும் இறுதியில் ஓஷோ இப்படித்தான் சொல்றார் என முடிப்பேன். "இண்டலக்ட்ஸ் ஆர் காம்ளிகேடட் யு "நோ என்பேன். கூட்டம் வாயைப் பிளக்கும். எந்த மாதிரியான கேள்வியையும் ஓஷோ, ரமணர், வாத்சாயனர், கொக்கொகே சாஸ்திரம் என்பதில் போய் முடித்தால்தான் கேட்டவர்களுக்கு நிம்மதி.

 மதங்கள்- குறிப்பாய் இந்து மதம், திராவிடம், பெரியார், தமிழக அரசியலின் இன்னொரு பக்கம், சினிமா கிளுகிளுப்பு,நடிகை நியூஸ்கள் இதெல்லாம் முப்பதைத் தொடுபவர்களின் தளம். நடிகைகளைப் பற்றி பேசும்போது மட்டும் ஒரு செயற்கையான உற்சாகத்தை பேச்சில் வரவழைத்துக் கொள்வேன். அட்டு பீசான நடிகையை பேரழகி என சிலாகிப்பேன். உச்ச நட்சத்திரங்களும் இயக்குனர்களும் அவள் காலில் விழுந்து கிடந்தார்கள் என்பேன். இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார பிசினெஸ்மேன் அவளுக்குத் தங்கத்தில் ப்ரா செய்து கொண்டு போனான் என்பேன். அந்த கணத்திலேயே அந்த நடிகைக்கு ஓரிருவர் திடீர் தீவிர ரசிகர்களாகிவிடுவார்கள். அந்த நடிகை நடித்த மகா த்ராபையான படங்களின் டிவிடி க்களைத் தேடி அலைவார்கள். காவியத்தைப் பார்ப்பதுபோல் அப்படத்தைப் பார்த்துவிட்டு அடுத்தநாள் சிலாகிப்பார்கள். "உங்கள் கண் வழியே அவளைப் பார்த்தேன் அவள் பிரபஞ்சத்தின் பேரழகி" என வாரமலருக்கு கவிதை அனுப்புபவன் அடித்துவிடுவான்.

  புதிதாக குடிக்க ஆரம்பிக்கும் பயல்களுக்கு உரை கொடுப்பதுதாம் இருப்பதிலேயே சுலபம். குடியின் பெருமை பற்றிப் பேசினாலே போதுமானது. விஞ்ஞானப் பூர்வமாய் குடியின் பலன்கள், குடி உடலுக்கு செய்யும் நன்மை, குடிகாரப் பிரபலங்கள், குடித்துவிட்டு அவர்கள் செய்த கூத்து. பெண் குடிகாரர்கள், பெருங்குடிகார நடிகைகள் என தகவல்களாய் அள்ளி விட்டாலே போதும். பயல்களுக்கு போதை பன்மடங்காகி காசை ஸரக்கில் விசிறுவார்கள். பெரிய குடி என்பது சிறுபயல்களோடுதான் சாத்தியப்படும். அவர்களுக்கு நானொரு மகாபுருஷனாகத் தெரிந்த காலமும் உண்டு. இந்தக் கூட்டம் தன்னிச்சையாக அமையும். பொதுவாக மாலை எந்தக் குழு சீக்கிரம் வருகிறதோ அவர்களோடு இணைந்து கொள்வேன். என்னைப் போன்ற கலைஞர்கள், சிந்தனையாளர்கள், வாசிப்பாளர்கள் உழைப்பிற்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும். உழைத்தால் செக்கு மாட்டு வாழ்கைக்கு மூளை பழகிவிடும். என்னால் சுதந்திரமாக சிந்திக்க முடியாது என்பது போன்ற வாசகங்களால் இந்த கூட்டத்தைக் கட்டிப் போட்டும் வைத்திருந்தேன். புதுப்பயல்களில் ஓரிருவர் என் மொத்த செலவையுமே ஏற்றுக் கொண்டனர். உணவு, ஆடைகள், நல்ல இருப்பிடம் என எல்லாமும் கிடைத்தது. பல தடிதடியான புத்தகங்களையும் ஓரிருவர் வாங்கிக் கொண்டு வந்து கர்ம சிரத்தையோடு கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்த நாவல் குறித்த விமர்சனத்தை மறக்காமல் கேட்பார்கள். அதிரடியாக சொல்வேன். அதில் ஒரு பக்கத்திற்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை. எழுதினவனின் மூளை கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டிலேயே செத்துப் போய்விட்டது. கையிருப்பை எல்லாம் போட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்தவன் புளங்காகிதமடைந்து இதல்லவா விமர்சனம் என்று விட்டு முழுத் திருப்தியாகப் போவான்.

  எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயது கும்பலில் ஒருவனால் வந்த வினை. ஒருநாள் அவன் நீங்கள் ஏன் நாவல் எழுதக் கூடாது எனக் கேட்டுவிட்டான். திக் கென்றானாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல். நான் சிந்தனையாளன் மட்டுமேதான். அதை நாவல் எனும் செயலாக்கி அதன் மூலம் கிடைக்கும் பலனை அனுபவிக்க தயாராக இல்லை என்றேன். ஒருவருக்கும் அப்பதில் உவப்பில்லாமல் போய்விட்டது. நாவல் எழுதுங்கள் என்பதை அந்தக் குழுவே சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஒரு கட்டத்தில் அவர்களின் நச்சரிப்புத் தாளாமல் மெல்ல முப்பத்தைந்து வயது கும்பலை கைகழுவிவிட்டு முப்பது கும்பலிலும் இருபது கும்பலிலும் மட்டும் தலைகாட்டிக் கொண்டிருந்தேன். எப்படியோ இந்த நாவல் பேச்சு மற்றவர்களுக்கும் பரவி நாவல் எழுதுங்கள் நாவல் எழுதுங்கள் என பார்க்கும் இடத்தில் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.இவர்களின் தொல்லை தாங்க முடியாது போன ஒரு கட்டத்தில் நாவல் எழுதுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்.

  எதை எழுதலாம் என்பது குறித்த சிந்தனைதான் இருப்பதிலேயே நெருக்கடியானது. எப்படி உட்கார்ந்து யோசித்தாலும் ஒரு மண்ணும் மூளையில் உதிக்கவில்லை. சில நாட்கள் எழுத்து குறித்த சிந்தையில் இருப்பதாகச் சொல்லி குடிக்க கூப்பிட்டவர்களை கழற்றிவிட்டேன். ஆனாலும் பக்கிகள் "நாவல் என்னாச்சு சார்?" என்பதைக் கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தனர். நாளையடைவில் நாவல் என்னாச்சு சார் என்ற கேள்வியின் மூலமாய் என்னை கேலிசெய்கிறார்களோ என்ற சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது. இந்த நாவல் என்னாச்சு என்பதை ஒரு வித நமுட்டுச் சிரிப்போடு எல்லாக் குழுவினரும் கேட்கப் பழக ஆரம்பித்த பிறகு அவமானம் தாங்காமல் சரி வருவதை எழுதுவோம் என உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். ஒரு பத்தி எழுதுவதற்குள் மூச்சு வாங்குகிறது. ஒரு பத்தியிலும் ஏராளமான எழுத்துப் பிழைகள். சின்ன ர வா? பெரிய ற வா சின்ன ன வா பெரிய ணா வா என்பது குறித்த சந்தேகமே நள்ளிரவு வரை ஓடும்.

  சரி இனி நாவலை வாயால் எழுதுவோம் என பழைய ஃபார்முக்கு வந்தேன். மாலை குடிசந்திப்புகளில் உற்சாகமாய் கலந்துகொண்டேன் உலகத்தின் எந்த மூலையிலும் எழுதப்படாத நாவலை எழுதப்போவதாக சொன்னதும் ஆர்வமானார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த எவராலும் எழுதப்படாத நாவல் தான் ஓடிக் கொண்டிருந்தது. அப்படி என்ன நாவல் என்றதற்கும் தயாராய்தான் இருந்தேன். "ஒரே நாவல் ஆனால் பல அடுக்குகள். ஒரு அடுக்கு க்ரைம். ஒரு அடுக்கு இலக்கியம். இன்னொரு அடுக்கு இதை இரண்டையும் எழுதும் நான். அதாவது எழுத்தாளர்களை எழுதும் எழுத்தாளன். எப்படி இருக்கு?" என ஆர்ப்பாட்டமாய் சிரித்தேன்.

  முப்பத்தைந்துகளிடம் "இந்த நாவல் ஒரு அடல்ட்ரி. அதாவது க்ரைம் நாவல் எழுதுபவனின் அடல்ட்ரி. ப்ளஸ் இலக்கிய எழுத்தாளினியின் அடல்ட்ரி ப்ளஸ் க்ரைம் நாவலுக்குள் வரும் ஏராளமான அடல்ட்ரி ப்ளஸ் இலக்கிய நாவலில் வரும் அடல்ட்ரி .. அடல்ட்ரி அடல்ட்ரி அடல்ட்ரி "எனச் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினேன்.

  முப்பதுகளிடம். "இந்த நாவல் ஒரு புதிர். அதாவது maze அதாவது லாப்ரிந்த். அதாவது ஒரு நாவலுக்குள் ஏராளமான புதிரடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலேயும் ஒவ்வொரு பரவசம். புதிர்தன்மை பரவசம் என்லைட்மெண்ட். யா என்லைட்டண்டு" என்றேன்.

  இருபதுகளிடம் "இந்த நாவல் ஒரு கொண்டாட்டம் பரவசம், குடி, பெண், காமம், மேலும் குடி காமம் உடல் அவ்ளோதான் உடலுக்கு பேதம் கிடையாது. ஆணும் ஆணுமான உடல் பெண்ணும் பெண்ணுமான உடல் அல்லது க்ராஸ்ஃப்ங்க்சனல் உடல்" என்றேன்

  ஒரு மாதம் பிழைப்பு ஓடியது. அடுத்த மாதமே ஆரம்பித்துவிட்டார்கள். "எத்தன பக்கம் சார் எழுதி இருக்கீங்க. படிச்சு பாக்கலாமா?"

  "அப்படிலாம் எடுத்த உடனேயே எழுதுற முடியாதுப்பா. ஐரோப்பால ஒரு நாவல பத்து வருஷமா எழுதுவாங்க. ஏன் ஆயுள் முழுக்க ஒரே ஒரு நாவல் எழுதினவங்கலாம் இருக்காங்க. இது என் கனவு நாவல். மெதுவாத்தான் எழுதனும். தவிர அதுக்கான மனநிலை வேணாமா"? கேள்வி கேட்ட கூட்டம் சரியெனப் போய்விடும். இப்படியாக ஒரு மாதம் ஓடியது.

  அதற்கு அடுத்தது நேர்ந்தவைகளை பிறகு சொல்லும் மனநிலை இருந்தால் சொல்லுகிறேன். ஆனால் முதல் பத்தியில் சொல்லியிருப்பதுபோல இவர்கள் என்னைப் பார்த்தாலே ஓடிக் குதித்து தப்பி தலைமறைவாகிவிடுகிறார்கள் அவ்வளவுதான் சொல்ல வந்தது.

  மேலும்

Monday, November 5, 2012

அத்தியாயம் ஆறு

பரந்த நீர்வெளியின் ஒரு கரையிலிருந்து நீரின் முடிவாய் வீற்றிருக்கும் பசும் மலையைப் பார்க்கும் சந்தோஷம் வேறெதிலும் கிடைத்துவிடாதுதான். விழிப்பு வந்ததும் மனம் உடலை இழுத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டது. நேற்று மாலை இருள் கவிழ ஆரம்பித்திருந்த நேரத்தில் இப்பகுதியைக் கடந்தோம். பார்த்த உடனேயே பிடித்துப் போன இடம். நாளைய விடியலை இங்கிருந்துதான் துவங்க வேண்டுமென நேற்று காரில் போகும்போதே நினைத்துக் கொண்டேன். அதிகாலையில் விழித்துக் கொள்ளும் பழக்கமெனக்கு. கடந்த இருபது வருடங்களாக ஆறு மணிக்கு மேல் ஒரு நாளும் தூங்கியதாய் நினைவில்லை. பதின்மத்தின் துவக்கங்களில் மிகப் பிடித்தமான வேலையே தூங்குவதுதான். அம்மா கும்பகர்ணி எனத்தான் கூப்பிடுவார்கள். கும்பகர்ணி பெயரை ஒருமுறை வாய்விட்டு சொல்லிப்பார்த்தேன். சிரிப்பு வந்தது. என் வாழ்வின் மிகப்பிரமாதமான காலகட்டமது. பள்ளிப் படிப்பு முடித்ததும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது. மனம் அவ்விஷயங்களை நினைக்க விரும்பாமல் உதறிக் கொண்டு மலையையும் நீர்வெளியையும் பார் என்றது.

துர்கா இந்த மலைநகரத்தைத் தான் தேர்வு செய்தாள். அவள் தேர்வுகளின் மீது எனக்கு மறுபரிசீலனையே இருந்தது கிடையாது. கடந்த ஒரு வருடமாய் அவளுடைய தேர்வுகளின்படிதான் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. துர்கா என்னுடைய சலிப்பான நிகழையே கிட்டத்தட்ட மாற்றியமைத்தாள். துர்கா... மிதமான குளிர் விரவிய அதிகாலையில் கிசுகிசுப்பாய் அவள் பெயரை உச்சரித்து சிரித்துக் கொண்டேன். அதிகாலை மேகங்கள் சோம்பலாய் நகராமல் நின்றுகொண்டிருந்தன. சலனமே இல்லாத நீர்பரப்பு. பிப்ரவரி மாதத்தின் இளந்தென்றல் காலை. அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். கரையோர உயர் மரங்கள் கிளைகள் முழுக்கப் பூக்களைச் சூடியிருந்தன. என்ன பெயர் என்றெல்லாம் தெரியவில்லை. மஞ்சள் நிறச் சிறுசிறு பூக்கள் காற்றிற்கு தூறலாய் நீரின் மீது விழுந்துகொண்டிருந்தன. துர்காவைக் கேட்டால் இந்த மரங்களின் முழு வரலாறையும் துல்லியமாக சொல்வாள். எப்போது பூக்கும் எப்படிக் காய்க்கும் என்பதையெல்லாம் அவள் சின்னஞ்சிறு கண்கள் விரிய சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்க மனம் பிரியத்தில் கசியும்.

அப்பாவிற்கு மலை நகரங்கள் பிடித்தமானவை. அவர் தம்முடைய இளம் பிராயத்தை பணத்திற்காய் பாலைவன நாடுகளில் தொலைத்திருந்தார். என்னுடைய ஐந்தாம் வகுப்பு வரை வருடத்திற்கொருமுறை நிறைய சாக்லேட்டுகளோடு வரும் இளம் அப்பாவின் பிம்பம் நன்றாய் நினைவிருக்கிறது. பாட்டி இறந்த பிறகு எங்களோடே நிரந்தரமாக வந்துவிட்டார். அப்பா மிக நிதானமானவர். வார்த்தைகளை அவ்வளவு கவனமாக, கச்சிதமாகப் பேசுவார். அம்மாவிடம் கூட அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. ட்யூஷன் போகும் காலைகளில் ஸ்கூட்டரில் கூட்டிப் போய் விடும் அப்பா. வீட்டில் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் அப்பா. கணக்கு சொல்லித் தரும் அப்பா. ரஜினி படம் கூட்டிப் போகும் அப்பா. கோடை விடுமுறையில் உல்லாசப் பயணம் கூட்டிப் போகும் அப்பா என எல்லாமும் அப்பாதான். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றதும் பொறியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க படிவம் வாங்கப் போன அப்பா சடலமாகத்தான் திரும்பவந்தார். சாலை விபத்து. ஸ்கூட்டரிலிருந்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் போய்விட்டது. இறந்த அப்பாவின் உடலைப் பார்க்கவேயில்லை. பயமாக இருந்தது. இந்த நொடி கூட வயிறு பிசைகிறது. அந்த கணத்தின் தாக்கம் இம்மி அளவு கூட குறையவில்லை. ஒருவேளை அப்பா இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்குமோ?

தலையை உலுக்கிக் கொண்டேன். சதா பிரச்சினைகளில் மூழ்கித் திளைத்து தன்னை வருத்தி இன்பம் காணும் இம்மனநிலையை விட்டொழிக்கவே முடியவில்லை. எழுந்து நடக்க ஆரம்பித்தேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டேன். பச்சை வாசம். விநோதமான பூக்களின் மணம். மூளை சுறுசுறுப்பானது. இருள் முழுவதுமாய் விலகி பச்சை நிறம் பிரகாசிக்க ஆரம்பித்தது. எங்கெங்கிலும் பச்சை. பசுமை. மரங்கள். பறவைகள் விழித்துக் கொண்டுவிட்டன. ஏராளமான கிளிகள் தென்பட்டன. பெரிய மரங்களின் பொந்துகளிலிருந்து ஓரிரு கிளிகள் எட்டிப்பார்த்தன. திரும்பிப்பார்த்தேன். ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதைப் போலிருந்தது. துர்கா விழித்துக் கொண்டு தேடுவாளே எனத் தோன்றியதும் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் தங்கி இருக்கும் விடுதியிலிருந்து இந்த இடம் பத்து நிமிட நடைதான். மீண்டும் உட்காராமல் விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தேன்.

எதிரில் துர்கா வந்து கொண்டிருந்தாள். த்ரீபைஃபோர்த் டாப்ஸ் சகிதமாக வந்து கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். துர்கா நல்ல கருப்பு. நல்ல உயரம். அவள் தோள் உயரம்தான் இருப்பேன். குட்டை யாக முடிவெட்டிக் கொள்வாள். அடர்த்தியான சுருள் முடி. கொஞ்சம் விட்டு வெட்டிக்கோயேன் என்றாள் ப்ச் என மறுத்துவிடுவாள். பார்த்த உடன் உற்சாகமாக கையசைத்தாள். சிரிப்பு வந்தது. வந்ததும் தோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டாள்.

”வெதர் செம ப்ளசண்ட் இல்ல ”

 ”ம்ம்”

”மைண்ட் ஃப்ரீ ஆகிடுச்சா”

”முழுசான்னு சொல்லிட முடியாது. ஆனா நல்லாருக்கு. தேங்க்யூ”

”ம்ம் சரி சாப்டுட்டு ஒரு குட்டி ரவுண்ட் அடிக்கலாம். பதினோரு மணிக்கு வெயில் அடிக்க ஆரம்பிச்சிடும். ஆக்சுவலா இது ஏழைகளின் ஊட்டிதான் ஸோ எப்பவும் குளிர் இருக்காது “

”அட அப்படி ஒரு பேர் இருக்கா”

”சிலர் சொல்வாங்க. தினத்தந்தில கூட அப்படித்தான் எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்”

விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தோம். துர்கா தோளில் கை போட்டுக் கொண்டேதான் வந்தாள். என் உயரம் அவளுக்கு கை போட்டுக் கொண்டு நடக்கத் தோதாய் இருக்கும். சரிவுக்கு இடப்புறம் ஏலகிரி என கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட மஞ்சள் போர்ட் ஐப் பார்த்தேன். ஒரு மஞ்சள் நிறப் பறவை போர்டின் மேல் சாவகாசமாய் அமர்ந்திருந்தது

”ஏய் அங்கபோரு போர்ட் க்கு மேச்சா ஒரு பறவை.”

”அதுதான் மாங்குயில்”

”அட மாங்குயில் ந்கிறது பறவ பேரா? நான் சினிமாப் பாட்டுன்னு இல்ல நினைச்சேன்”

”ஆமா இது மாம்பழக் கலர்ல இருக்கில்லயா அதான் அந்த பேர் தவிர சார் மாமரத்தை சுத்தியேதான் கிடப்பார்”

”அப்ப பூங்குயில்னும் ஒண்ணு இருக்கா”

”ஓ இருக்கே”

”கூவின பூங்குயில் குருகுகள் இயம்பின னு திருப்பள்ளி எழுச்சிலாம் பாடியிருக்காங்களே”

”எனக்கு ராமராஜன் பாட்டு மட்டும்தான் தெரியும் ”

சிரித்தாள்.

இந்தக் கருப்புப் பெண்கள் சிரிக்கும்போதுதான் எத்தனை வசீகரம். என் தோளைத் தாண்டி நீண்டிருந்த அவளின் விரல்களைப் பிடித்துக் கொண்டேன்.

- அத்தியாயம் ஒன்று வீணாவின் தலைப்பிடப்படாத புதிய நாவல்

”பிரமாதமான துவக்கம் வீணா. மனசு அப்படியே அந்த மலைப்பிரதேசத்துக்கு போய்டுச்சி”

கட்டிலின் ஹெட்போர்டில் தலையணை வைத்துச் சாய்ந்தபடி வீணாவின் கையெழுத்துப் பிரதியை வாசித்துக் கொண்டிருந்தேன். அவள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

”மொத்தம் ஐந்து அத்தியாயம் தாண்டா எழுத முடிஞ்சது”

”முடிச்சிட்டேன்னு சொன்ன?”

”இல்ல முடிக்க முடியல. இந்த ரெண்டு பெண்களும் என்ன ரொம்பவுமே தொந்தரவு பன்றாங்க”

”ம்ம் நாவல் எப்படிப் போகும்னு யூகிக்க முடியுது. நீ என்ன லெஸ்பியன் ஃபார்ம் குள்ள போகப் போறியா?”

”தெரியலடா ”

”வேணாம். இதுல நல்ல சென்ஸ் இருக்கு. புரட்சி, உடல்தத்துவம், புண்ணாக்குன்னு சுத்த விட்டுடாதே. பொயட்டிக்கா கொண்டுபோய் மெலோட்ராமடிக்கா முடிச்சிடு”

சிரித்தாள். ”நீ இப்படி சொல்வேன்னு தெரியும்”

”ரைட்டு விடு. ரெண்டுபேருக்கும் நடக்கும் கலவிய பத்து பக்கத்துக்கு ததும்ப ததும்ப எழுதி வை. கோடார்ட், பெலினி, பியானோடீச்சர் எல்லாத்தையும் சைட்ல பாத்துக்க. இருக்கவே இருக்கு டிண்டோ ப்ராஸ் மொத்த படத்தையும் பாத்து உடலதிகாரத்தை களையும் வழிமுறைகளை விளக்கி சுதந்திரத்தின் உச்சத்த துர்கா காளியின் வடிவமாகி தொட்டாள் னு அடிச்சிவிடு. நவீன இலக்கிய வாசகர்கள் சிலிர்த்துட்டு படிப்பாங்க”

”வேற எப்படி எழுத சொல்ற? துர்காவும் ஷங்கியும் வாழ்நாள் முழுக்க தோழிகளாக, அன்பு நிறைந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்னு முடிச்சிடவா? ”

”கூட ஒரு காதல சேத்துக்க. ஒரு ஆண் உள்ளாற பூந்து துர்காவ கல்யாணம் ற பேர்ல ஏமாத்திடுறான். அவன் கூட வாழமுடியாம துர்கா மறுபடியும் ஷங்கி கிட்ட வந்து சேர்ந்துடுறா. சுபம்”

 ”கண்மணி மாத இதழ்ல பப்ளிஷ் பண்ணிடலாமா? காறித் துப்பிடுவேன். ஓடிப்போய்டு.”

”அடங்குடி. நீ என்ன பெர்ஸா எழுதி கிழிச்சிட போற? ஒண்ணு இந்த பேட்டர்ன் இல்லனா பிரெஞ்ச் பாதிப்பு பேட்டர்ன். வேற என்ன சொல்லிட முடியும் இந்த தளத்த வச்சிட்டு”

”அய்யனார், லிசன் நீ ஒரு சாகித்ய அகடாமி வின்னர் கிட்ட பேசிட்டு இருக்க. தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான அடையாளம் நானு. மைண்ட்ல வச்சிக்க”

”கண்ணு உனக்கு விருதுகொடுத்தப்ப யார் நடுவரா இருந்தாங்கன்னு எனக்கு தெரியும்”

”அசிங்கமா பேசாத உன்கூட படுத்திட்டா எல்லார்கூடவும் படுத்துருவேன்னு நினைக்கிறியா?”

”சே அப்படி சொல்லல. ஆனா சாகித்ய அகடாமி விருதுலாம் பெரிய அங்கீகாரம்னு நீ நினைச்சின்னா உன்ன விட முட்டாள் யாரும் கிடையாது. ஒண்ணுமே வேணாம் உனக்கு முன்னாடி யார்யார்லாம் இந்த விருத வாங்கி இருக்காங்கன்னு நீயே கேட்டுப் பாத்துக்க”

சிரித்துவிட்டாள் ”யெஸ். ஐ அட்மிட்”

”அவ்ளோதான் வீணா. இந்த நவீன இலக்கியம் நவீனத்துக்குப் பிறகான இலக்கியம் எல்லாமே பம்மாத்து. ”

”அப்போ பல்ப் எழுத்துதான் நிஜம்னு சொல்லவர்ரியா?”

”இல்ல பல்ப் எழுத்தலாம் எழுத்து ஸ்கேல்ல வச்சிப் பாக்க கூட தகுதி இல்லாதது”

”அப்புறம் ஏன் மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதுற?”

 ”எனக்கு வேற எதுவும் தெரியாதே. இது தொழில் வீணா. சமூகம், புரட்சி, இலக்கியம், மேன்மை னு எந்த ஸோ கால்டு ஏமாத்து வேலையும் இல்லாத தொழில். ஐ எண்டர்டைன் பீபிள் தட்ஸ் ஆல். அதுக்கு மேல ஒண்ணும் கிடையாது”

”ஸப்பா போதும்டா தலவலிக்குது. நீ உன் ரூம்க்கு போ. நான் தூங்க போறேன்”

”பாவி மெட்ராஸ்ல இருந்து மழைல அடிச்சி புடிச்சி நீ கூப்டேங்கிறதுக்காக வந்திருக்கேன். கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம ரொம்ப அசால்டா கெளம்புன்ற?”

”ஓ அப்படியா சரிங்க சார் கிளம்புங்க சார் நாளைக்கு காலைல பாப்பம் சார்”

கட்டிலிருந்து எழுந்து போய் வீணாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

“எப்படி இருக்க பொண்ணே”

”நல்லாருக்கேன் டா”

”சாரி கசாமுசான்னு பேசி உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டனா”

 ”நோ மேன். நீ உன் பார்வைய சொல்ற இதுல என்ன தப்பு?”

”சரி ஸரக்கு என்ன வச்சிருக்க”

”நோ சரக்கு, நான் எழுதனும். நீ கெளம்பு”

 ”இன்னிக்கு மட்டும். ப்ளீஸ் ப்ளீஸ்”

 ”பாவி மூட கெடுக்காத”

”நோ ஐ கெடுக்கபோவபையிங்க் யூ ஒன்லி”

”கருமம் போய் ட்ரஸ்ஸ மாத்திட்டு வா. ரெடி பண்ணி வைக்கிறேன்”

”தேங்க்யூ டார்லிங்”

”ஆனா மவனே குடிச்சிட்டு நான் தான் ஒலகத்தின் தலைசிறந்த எழுத்தாளினி. என்னோட ஒரு வரிய படிச்சிட்டு நாள் முழுக்க தேம்பி தேம்பி அழுதேன்னு லாம் அடிச்சி விட கூடாது. இப்ப எப்படி என்ன காய்ச்சி எடுத்தியோ அப்படியேதான் விடியுற வர பேசிட்டு இருக்கனும். ஓகேவா”

”ஓகே மா டன்”

- மேலும்

Featured Post

test

 test