Friday, October 29, 2010

அத்தியாயம் 2.ஆ. சந்தன விஜி

-------------------------------------------------------------------------------------


படியிறங்கி கீழே வரும்போது பிரமாதமான காலைப் புணர்ச்சி ஒன்றைத் தவறவிட்டதாக நினைத்துக் கொண்டேன். லேசாய் முயற்சித்திருந்தாலும் விஜி ஒத்துக் கொண்டிருப்பாள். நல்லதொரு தருணத்தை தவறவிட்டதற்காக சலித்துக் கொண்டேன். சற்று தூரம் நடந்து, பிரதான சாலை வந்ததும் அப்படி நினைத்தது எத்தனை மோசமான எண்ணம் என்பதும் உறைத்தது. கடவுளும் சாத்தானும் நடனமிடும் வெளி என்ற அய்யனாரின் கவிதை வரி நினைவில் வந்தது. லேசாய் புன்னகைத்துக் கொண்டேன். கிட்டத் தட்ட அப்படித்தான் இருக்கிறேன். கடவுளும் சாத்தானுமாய். நல்லதும் கெட்டதுமாய். மேலும் ஒரு மனிதன் அப்படித்தான் இருக்க முடியும் எனவும் தேற்றிக் கொண்டேன். கடற்கரைக்குப் பிரியும் சாலை முக்கில் நின்று சிகரெட் புகைத்தேன். பத்து மணி வெய்யில் கண்களைக் கூசச் செய்தது. இந்த ஊர் வெய்யில் சற்று உக்கிரமாய் சுட்டாலும் அதன் வெண்மையும் பளீர்தனமும் கம்பீரமாய் இருந்தது. விஜயலட்சுமியை நினைக்கையில் உள்ளுக்குள் நிம்மதியும் ஆசுவாசமும் படர்ந்தது. அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்கிற எண்ணமும் வந்து போனது. இந்த உணர்வு மிகப் புதிதாக இருந்தது. பொதுத் தொலைபேசியிலிருந்து ட்ராவல்ஸைத் தொடர்பு கொண்டு கார் வேண்டுமென்றேன். அவனிடம் பைக்கை எடுத்திருப்பதால் என் வாகன ஓட்டுநர் உரிமத்தைக் கொடுத்திருந்தேன். மேலதிகமாய் எதுவும் கேட்காமல் பத்தாவது நிமிடத்தில் காரைக் கொண்டுவந்து விட்டுப் போனான்.


விஜயலட்சுமி சந்தன நிற ஷிபான் புடவைக்கு மாறி இருந்தாள். கையில் ஒயர் கூடையுடன் நடந்து வந்து கொண்டிருப்பதை காரின் பக்கவாட்டுக் கண்ணாடி வழியாய் பார்த்தேன். கண்ணாடியில் அவளின் முழு பிம்பம் விழுந்தது. சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தாள். சந்தனமும் குங்குமமுமாய் அவள் மாறியிருப்பதாகத் தோன்றியது. கண்ணாடியில் பிம்பம் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஒரு சில நொடிகளில் அவளின் கருணை பொங்கும் பெரிய முலைகள் கண்ணாடியை நிறைத்தன. காரைக் கடந்ததும் நான் லேசாக ஹார்ன் அடித்தேன். திரும்பிப் பார்த்து ஆச்சரியப் புன்னகையொன்றை உதித்தாள். தலையசைப்பில் உள்ள வா என்றேன். கதவு திறந்து முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“கார் இருக்கா உங்ககிட்ட.. எங்க நிறுத்தி வச்சிருந்தீங்க?” என்றவளிடம் வாடகைக் கார் என்றேன்.

“ஓ! எதுக்கு கார்லாம், பைக் லயே போய் இருக்கலாமே” என்றாள். “உனக்கு தெரிஞ்சவங்க யாரும் பாத்துடக் கூடாதுன்னுதான். உன் கழுத்தில தாலி வேற இருக்கே” என்றேன்.

“அதுலாம் ஒண்ணும் பிரச்சின இல்ல… யார் பாத்தா என்ன.. நான் அடுத்தவங்கள பத்தி ரொம்ப யோசிக்கிறதில்ல…இந்த தாலி கதைய இப்ப சொல்லனுமா? என்றதற்கு

அவசியமில்லை எனப் புன்னகைத்தேன்.

கடற்கரைக்கு செல்லும் சாலையிலிருந்த மிஷன் ஆஸ்பத்திரியில் இறங்கிக் கொண்டாள். நான் வண்டியை ஓரமாய் நிறுத்தினேன். அம்மாவ பாக்க வர்ரீங்களா? என்றதற்கு நாளைக்கு வர்ரேன் இப்ப வண்டிய இங்க விட முடியாதே என்றேன்.

“சரி அஞ்சே நிமிஷம் வந்திடுரேன்” என்றபடியே விடுவிடுவென உள்ளே போனாள். அவளின் பின்புற ப வடிவ ஜாக்கெட் முதுகில் சூரியக் கதிர்கள் ஆசையுடன் பாய்ந்ததைக் கண்டேன். அவள் இறங்கிப்போன பின்புதாம் கார் முழுக்க மல்லிகை வாசம் நிரம்பியிருப்பதை உணர்ந்தேன். மூச்சை ஆழமாய் இழுத்தேன். பெண் எத்தனை அற்புதம்! வாசம், உணர்வு, உடல், நினைவு என எல்லாவற்றையும் முழுதாய் நிறைக்கப் பெண்ணால் மட்டும்தான் முடிகிறது. நான்கே நிமிடத்தில் திரும்பி வந்தாள். அவசரமாய் ஏறி உட்கார்ந்து கொண்டாள். முன்பை விட இப்போதவள் குதூகலமானாள்.

“போங்க போங்க வேகமா போங்க இங்கிருந்து ஓஓஓடிடலாம்” என குதூகலித்தபோது குட்டிச் சிறுமியின் மன நிலைக்குத் திரும்பியிருந்தாள். எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அச்சிறுமியைத் தட்டி எழுப்பும் யுக்தியை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஆண் மிகத் திறமையாக அச்சிறுமியைக் கண்டுபிடிக்கிறான். அவர்கள் மறந்து போன குதூகல சிறுமியை நினைவூட்டி விடுவதன் மூலம், தன் ஆக்கிரமிப்புகளை பெண்ணிடம் மிக வலிமையாய் மீண்டும் நிறுவிவிடுகிறான். நட்பு, ஸ்நேகம், தோழமை, காதல், மனைவி, திருமணம் என ஏதேதோ பெயர்களில், உறவுமுறைகளில் மென்மையாகவும், கடுமையாகவும் ,தோழமையாகவும், ஆக்ரமிப்பாகவும் ஆண் பெண் என்கிற மகா சக்தியை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் தன் பாதுகாப்பற்ற உலகம் சாஸ்வதத் தன்மைக்கு நகர்ந்துவிடுவதாய் கற்பனை செய்து கொள்கிறான்.

“உங்க கிட்ட ஒண்ணு சொல்லவா நான் கார்ல போறது இதான் முதல் டைம்” என்றாள்
“நானும்தான்” என்றேன்
“அப்ப எப்படி ஓட்டுறீங்க?”
“தெரில அதுவா ஓடுது”
“பொய்யி “
“இல்ல இந்த ஊர்ல இதான் முதல் முற “
“உங்க ஊர் எது?”
“திருநெல்வேலி. அம்பாசமுத்திரம்”
“கல்யாணமாகிடுச்சா?”
“இல்ல “
“அப்பா அம்மாலாம்?”
“யாரும் இல்ல”
“அண்ணன்.. அக்கா.. தங்கச்சி..தம்பி இப்படி யாரும்?”
“யாருமில்ல நான் ஒருத்தன் தான்”
“அய்யோ… என்ன வேல பாக்குறீங்க?
“அது ஒரு வேல.. எப்பவாச்சிம் வரும்.. ஆனா நிறைய பணம் கிடைக்கும்”
“அப்படி என்ன வேல?”
“எல்லா மாதிரியும் வரும். சில டைம் கொலலாம் கூட பண்ணனும்”
“யார் நீங்க?… கொல பன்றீங்க.. என்றபடியே விடாமல் சிரித்தாள்.
எப்படி சிரிக்காம பொய் சொல்ரீங்க இப்படி?”
“ஏய் நிஜம்தான்.. நான் ஒரு கொலகாரன்” என்றேன். அவள் நம்பவில்லை.
“உண்ம சொல்லுங்க என்ன வேல?”
“ஆந்த்ரோபோலஜிஸ்ட் “
“அப்படின்னா?”
“சும்மா ஊர் ஊரா போறது.. மக்கள பாக்கிரது.. பேட்டி எடுக்கிறது. கட்டுரை எழுதுறது. யுனிவர்சிட்டிக்கு அனுப்புறது. அவ்ளோதான்.”
“புரியல. எழுத்தாளரா?”
“ம்ம் அப்படியும் வச்சிக்கலாம்”
“என்னலாம் பேட்டி எடுக்க மாட்டீங்களா?”
“அதுக்குதான கூட்டிப் போறேன்” என சிரித்தேன்.
“அப்போ உங்க வேல விசயமாத்தான் கூட்டுப் போறிங்களா? என் மேல இருக்க பிரியத்தால இல்லயா?”
“சும்மா சொன்னேன். இன்னிக்கு காலைல எனக்கு சாப்பாடு கொடுத்த இல்ல. அந்த மாதிரி எனக்கு யாரும் பண்ணதில்ல. சின்ன வயசுல அம்மாகிட்ட சாப்டது, அதுக்கு பிறகு நீதான்.”

சட்டென அவள் கண்கள் குளமாகின.

“உங்கள பாத்த ஒடனே நெனச்சேன். ஏதாச்சும் பெரிய பிரச்சின இருக்கும்னு. யாருமே இல்லாம இருக்கிறது எவ்ளோ கஷ்டம் இல்ல. நான் உங்கள பாத்துக்கட்டுமா?”
“அதுலாம் கஷ்டம் விஜி”

“நெஜமா சொல்ரேன். நான் உங்கள நல்லா பாத்துக்கரேன். யாருமே இல்லாம தனியா இந்த உலகத்தில வாழுறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கு தெரியும். அப்பா படிக்கும்போதே இறந்துட்டார். மிச்சம் மீதி இருந்த சொத்தலாம் வித்துதான் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க. ஆனா அந்த பாவியோட நான் ஒரு மாசம் கூட வாழல. இல்லாத சித்ரவத பண்ணான். நான் போடான்னு தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன். இந்த தாலி ஒரு பாதுகாப்புக்குதான தவிர வேர எதுக்கும் இல்ல” எனச் சொல்லியபடி அழத் துவங்கினாள். நான் காரை ஓரமாய் நிறுத்தினேன். குனிந்து முகத்தை மூடிக் கொண்டு அழுதவளின் முதுகில் தட்டி தலையை வருடினேன்.

அவள் எழுந்து கணகளைத் துடைத்துக் கொண்டாள். சன்னல் வழியே வெளியே பார்த்து மிரண்டாள். “காலாப்பட்டுக்கா வந்திருக்கோம்?

“ஆமா. ஏன் பயப்படுற?”
“இதான் அந்த ஆள் ஊர்”
“நாம ஊருக்குள்ள போகப் போறதில்ல. வெளிலதான் பீச் லேண்ட் னு ஒரு ரிசார்ட் இருக்கு அங்க போய் சாப்டலாம்”
“ம்ம்” என்றாள் மிரட்சியாக.
காரை ரிசார்டுக்கு திருப்பியபோதுதான் அவள் முகத்தைப் பார்த்தேன். கண்களில் பீதி படர்ந்திருந்தது.
“விஜி நாம வேர எங்காச்சும் போலாம்”
“ஏன் பரவால்ல இங்கயே போவோம்”
“உன் முகம் சரியில்லயே”
“இல்ல, அதுலாம் ஒண்ணும் இல்ல.. அழுதேன் இல்லயா அதுனால அப்படி இருக்கும்.. போன உடனே முகம் கழுவினா சரியா போகிடும்” என முகத்தை எனக்கு நெருக்கமாய் கொண்டு வந்து புன்னகைத்தாள்.

இங்கு போன மாதம் ஒரு முறை வந்தேன். மூங்கிலாலான சிறு சிறு குடில்கள் தென்னை மர அடர்வுத் தோப்புக்கு மத்தியில் கட்டப்பட்டிருக்கும். நேர வாடகைக்கு குடிலை எடுத்துக் கொள்ளலாம். சற்றுத் தள்ளி நடந்தால் கடல். பாண்டியில் சீற்றமாய் இருக்கும் கடலலைகள் காலாப்பட்டில் சற்றுத் தணிந்திருப்பது போலத் தோன்றும். ஒவ்வொரு குடிலுக்கும் போதுமான அளவிற்கு இடைவெளிகள் இருப்பதால் தொந்தரவில்லாதிருக்கலாம். குடில் மஞ்சம்பில் கூரை வேய்ந்திருந்தது. பக்கத் தடுப்புகள் ஒரே அளவான பச்சை மூங்கில் கழிகளால் நெருக்கமாக பின்னப்பட்டிருந்தது. உட்கார்ந்து உணவருந்த கண்ணாடி பதிக்கப்பட்ட மூங்கில் மேசை ஒன்றும் மூங்கில் நாற்காலிகள் நான்கும் போடப்பட்டிருந்தன. பனை ஓலை தட்டி ஒன்றைக் கொண்டு அந்தப் பெரிய குடிலை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். மிக ரசனையாக கட்டப்பட்ட இந்த குடில் குடித்துவிட்டு சல்லாபிப்பதற்காகவே பார்த்துப் பார்த்து கட்டப்பட்டிருக்கிறது.

ரொம்ப நல்லாருக்கில்ல இந்த இடம் என்றபடி குடிலுக்குள் நுழைந்தோம். உள்ள முகம் கழுவ இடம் இருக்குமா என்றபடி தட்டியை விலக்கி உள்ளே போனாள். நான் பின் தொடர்ந்தேன். முன்னே சென்றவள் இந்தத் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தவளைப் போல சடாரென பின் பக்கமாய் திரும்பி என்னைக் கட்டிக் கொண்டு தேம்பினாள். இறுக்கமாய் அணைத்துக் கொண்டேன். மஞ்சள் நிறப் பூவரசம் பூவினைப் போல அந்த மெல்லிய இருளில் அவள் சுடர்விட்டுக் கொண்டிருந்தாள். பூச்சுக்கள் தீண்டியிராத அவளின் மென் சிவந்த உதடுகளைக் கவ்விக் கொண்டேன். உயரமான பாறையின் மீதிருந்து சலனமற்ற நதியின் மேற்பரப்பைக் கிழித்தபடி நீருக்கடியில் பயணம் புகுவதைப் போலிருந்தது. அவளின் உதடுகளின் வழியாக மெல்ல அவளினுள் பயணித்தேன். நீரின் குளுமையும் தழலின் வெம்மையையும் உடல் முழுக்க சேமித்து வைத்திருந்தாள். பித்தம் உச்சினுக்கேறி அவளை இரு கைகளினால் ஏந்தி அருகில் தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் கிடத்தினேன். விஜி விஜி என அரற்றினேன். அந்த நேரத்தில் என் பைத்தியத்தனம் முற்றியிருந்ததை என்னால் பார்த்துக் கொள்ள முடிந்தது.

விஜி என்னை வாரியெடுத்துக் கொண்டாள். “எனக்குள்ள போ! போ! வென்றும் “என் கிட்ட வந்துடு வந்துடு” என்றுமாய் பிதற்ற ஆரம்பித்தாள். எனக்காக அவளும் அவளுக்காக நானும் இத்தனை வருடங்களாய் காத்துக் கொண்டிருந்ததை உணர ஆரம்பித்தோம். அவளின் சந்தன நிறப் புடவை விலகி அதி சந்தன முலைகள் வெளிவரத் திமிறிக் கொண்டிருந்தன. நான் அவள் மீது ஒரு கரும் போர்வையினைப் போல படர்ந்தேன். எனக்குள் அவள் முழுவதுமாய் ஒடுங்கிக் கொண்டாள். அவளணிந்திருந்த ஜாக்கெட்டின் பொத்தான்களை விலக்கியதும் வெளிச்சம் அறையினுள் நிரம்பத் துவங்கியது. அவளுடலின் மீதிருந்த ஆடைகளை விலக்க விலக்க அறையின் பிரகாசம் கூடியது. மூங்கிலின் பச்சை வாசம் குடிலில் நிரந்தரமாய் குடிகொண்டிருந்தது. அவ்வப்போது கேட்கும் கடலிசைத் தாலாட்டில் தென்னை மரக் கீற்றுகளும் சேர்ந்து கொண்டன. பச்சை வாசத்தோடு அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த மல்லிகைப் பூக்கள் படுக்கையில் நசுங்கித் தத்தம் கடைசிப் பூவுயிர் வாசத்தை அறைக்குத் தந்திருந்தன. பூவில் குளித்திருந்த விஜியின் மென் வியர்வை, நாங்களிருவரும் உடல் நதியில் அமிழ்ந்து மெல்லத் தொலைந்து போய் கொண்டிருப்பதை சன்னமாய் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.


எத்தனையோ உடல்களைத் தாண்டி வந்தவன்தான் என்றாலும் இவள் எனக்கே எனக்கானவள். இதுநாள் வரைக்குமாய் அர்த்தமில்லாது அலைந்த என் இருப்பின் ஜீவன் இவள்தான். நான் உணர்ச்சிப் பெருக்கில் குழைந்தேன். அவளின் நாபியினைத் திறந்து கொண்டு உள்ளே போய் படுத்துக் கொள்ளும் ஆசைகள் மிகுந்தன.சிவப்பு நிறப் பாவாடையை மேலேற்றி அவள் யோனியினுள் முகம் புதைத்தேன். உணர்வெழுச்சி தாங்கவியலாது விஜி கிறங்கி முனகினாள். அதி வெண்மையும் செம்மஞ்சளும் கலந்து குழைத்த அவளின் தொடைகளை என் தோள்களில் சுமந்தபடி யோனி வழி உள் நுழைந்தேன். என் வாழ்வின் அதி உன்னத முயக்கம் இதுவாகத்தானிருந்தது. கிட்டதட்ட சாவின் விளிம்பை இருவரும் தொட்டு மீண்டோம்.

Thursday, October 28, 2010

அத்தியாயம் 2அ. விஜி என்றான விஜயலட்சுமி

சிறுவர்களின் ‘ஹோ’ என்ற கூச்சல்தான் என்னை எழுப்பியது. இன்று விடுமுறை தினம். சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து கும்பலாய் வந்து பெரும்பாலான ‘பார்’களை மொய்த்திருப்பார்கள். சனி ஞாயிறுகளில் எங்கேயுமே போக முடிவதில்லை. எழவே சலிப்பாகவிருந்தது. இந்த விஜயலட்சுமி வேறு துரத்தியடிக்கிறாள். அவளின் திரண்ட வாளிப்பான உடலை நினைத்துக் கொண்டேன். அடுத்த நான்கு மாதத்தை சுவாரசியமாக நகர்த்த நிச்சயம் உதவியாய் இருப்பாள்தான். ஆனாலும் லேசாய் பயமாய் இருந்தது. ஆபத்து எந்த வடிவில் வந்தாலும் எதிர் கொள்ளும் துணிச்சலுக்கு தயார் செய்யப்பட்டிருந்தாலும், பெண் எப்போதுமெனக்கு அச்சத்தைத்தான் தருகிறாள். ஒரு பெண்ணின் ஆழமான பார்வையைக் கூட என்னால் எப்போதுமே தாங்கிக் கொள்ள முடிந்ததில்லை. பெண்களுடன் தங்க நேரந்த இரவுகளில் பெரும்பாலும் பாதியில் ஓடிவந்துவிடுவேன். உச்சத்தினுக்குப் பிறகு பெண் ஒரு வஸ்துதான். எந்த ஆர்வமுமில்லாத உடல்தான். பெண்ணுடலை முழுதாய் பார்க்ககூட என்னால் எப்போதும் முடிந்ததில்லை.

ஒரு முறை கோவா தாஜ் ஓட்டலுக்கு பணி நிமித்தமாகச் சென்றிருந்தேன். கொழுத்த பண முதலை ஒருவனை எவருக்கும் தெரியாமல் தீர்த்துக் கட்ட வேண்டும். இம்மாதிரி விஷயங்கள் மிகச் சுலபமானவை. கொழுத்தப் பணக்காரர்கள் பெரும்பாலும் மந்த புத்தி கொண்டவர்கள்தாம். மேலும் அவன் அதே ஓட்டலில் ஒரு வாரம் தங்கியிருந்தான். ஒரு வார கால அவகாசம் எனக்குப் போதுமானதாக இருந்தது. மரணம் இயற்கையாய் நிகழ்ந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது கட்டாயமாக இருந்ததால் அவனுடைய உணவில் தினம் சில மில்லி மென் விஷத்தைக் கலந்து விடுவதுதான் திட்டம். ஏற்கனவே நான் பணிபுரியும் நிறுவனம் சரியான விஷத்தை வாங்கித் தந்திருந்தது. உணவைக் கொண்டுச் செல்லும் பணியாளர்களில் ஒருவனும் வாங்கப்பட்டிருந்தான். என் வேலை எல்லாமும் சரியாக நடக்கிறதா என்பதைக் கண்கானிப்பதும், திட்டம் பாழாகிவிட்டால் வேறு வழியை விரைந்து பயன்படுத்துவதும்தான். எல்லாமும் சரியாக நடந்து கொண்டிருந்தது. அங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில் இரஷ்யப் பெண்ணொருத்தி அறிமுகமானாள்.

ஒரு நாள் மதிய வாக்கில் நீச்சல் குளத்தின் அருகே போடப்பட்டிருந்த சாய்வு இருக்கையில் படுத்தபடி, அட்டை தெரியும்படி, படித்துக் கொண்டிருந்த ஆங்கில தஸ்தாயெவ்ஸ்கியைப் பார்த்து வந்து அறிமுகப் படுத்திக் கொண்டாள். பேச்சின் சுவாரசியம் முற்றி அவளின் அறைக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தோம். அப்ஸல்யூட் வோட்காவில் துவங்கி, அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கி வரை எங்களிருவருக்குமான அலைவரிசை ஒன்றாகத்தான் இருந்தது. ஒரு அரசியல்வாதிக்கு கம்பெனி கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறாள். கடைசி நேரத்தில் அரசியல்வாதி ஓய்வெடுக்க வரும் தேதி தள்ளிப்போனதால் அவன் வரும்வரை ஓட்டலில் காத்திருப்பதாகச் சொன்னாள். புத்தகங்கள், கதாபாத்திரங்கள், திரைப்படங்களோடு போதையும் சேர்ந்து கொள்ளவே இருவரின் புத்திசாலி நடிப்புகளை தூக்கி தூர எறிந்து விட்டு முத்தங்களிலிருந்து துவங்கினோம். எதற்காக இதுவரை நடித்துக் கொண்டிருந்தோமோ அதன் மூல நாடகத்தினை ஒப்பேற்ற ஆரம்பித்தோம்.


இந்தியப் பெண்களைத் தவிர்த்து வேறு தேசத்துப் பெண்களின் உடல்களும், அணுகுமுறைகளும் எனக்குப் பழக்கமில்லாததால் அவளின் ஆர்வமும், ஈடுபாடும், முனகல்களும் மிகப் பெரும் கிளர்ச்சியாக இருந்தன. அவள் என் உதடுகளைச் சப்பியபடி நாவினை என் வாயினுள் விட்டுத் துழாவிக் கொண்டிருந்தாள். ஒரு கையை இடுப்பில் சேர்த்து அணைத்தபடியும் மறு கையினால் குறியைத் தடவிக் கொடுத்தபடிமாய் இருந்தாள். இருவரின் உடலும் நுழைப்புக்காய் தயாரானபோது ஏற்கனவே அரை நிர்வாணமாயிருந்த அவள் தன் உள்ளாடைகளை கழற்றி எறிந்து முழு நிர்வாணமானாள். வெள்ளை வெளேரென வழுவழு உடலைப் பார்க்க லேசாய் அதிர்ச்சியாய் இருந்தது. அவள் மந்தகாசப் புன்னகையுடன் என் குறியைத் தடவிக் கொண்டே வேகமாய் உடைகளைக் கழற்ற ஆரம்பித்தாள். கூச்சத்தில் நெளிந்தேன். என்னை வலுக்கட்டாயமாய் துகிலுரிந்தாள். ‘கட்டிலில் உடைகளோடு நாங்கள் படுப்பதில்லை’ என சாதாரணமாகச் சொன்னாள். அவளது கச்சித உடலின் மிகப்பெரும் வசீகரம், குடித்திருந்த போதையுடன் சேர்ந்து கொண்டது. ஆதிக் கிளர்வுகள் பொங்க வன்மமாய் அவளுடன் கலவி கொண்டேன். முன்புறம் முடிந்ததும், புட்டம் தூக்கி பின்புறம் நுழைக்கச் சொன்னாள். இல்லை கெஞ்சினாள். நான் ஏற்கனவே களைப்படைந்திருந்தேன். அவசரத்தில் உறையை வேறு மறந்தது தொலைத்திருக்கிறேன். நோய் குறித்த பயம் ஏற்கனவே முள்ளாய் தைக்க ஆரம்பித்திருந்தது. போதும் என்றபடி ஆடைகளை அணியத் துவங்கினேன். அவள் கோபமுற்றாள். கட்டிலின் குறுக்கில் கால்களை அகல விரித்துப் படுத்தபடி பிளந்திருந்த யோனியினுள் வலக்கையின் நான்கு விரலை திணித்துக் கொண்டு முன் பின் இயக்கியபடியே “இந்த விசயத்தில் இந்தியர்கள் சோதாப் பயலுகள்” எனக் கடுமையாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள். என்னை அவமானம் பிடுங்கித் தின்றது. கால்களில் பூட்ஸ்களைப் பொருத்திக் கொண்டிருந்தபோது “அவ்வளவுதானா உன் வீரம் மை டியர் இந்தியன் இண்டலக்சுவல்?” எனக் கத்தினாள். ஒன்றும் பேசாது கதவை அறைந்து சாத்திவிட்டு என் அறைக்குள் வந்து ஒடுங்கிக் கொண்டேன். அவமானம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓட அவளின் அறையில் நிகழ்ந்த சம்பவங்களை மீண்டும் நினைவில் கொண்டு வந்தேன்.

பாதி பிதுங்கிய முலைகளும், பாவாடை ஏறின தொடைகளும்தான் இதுநாள் வரை எனக்குக் கிளர்ச்சியாக இருந்திருக்கிறது. முழு உடலைக் காணும் போது ஏன் அதிர்ந்து போகிறேன்? காமம் ஏன் மூளையிலிருந்து முழுவதுமாக உடலின் இயக்கத்தினுக்கு கடத்தப்படவில்லை? தமிழ் சினிமாக்கள், வெகு சனப் பத்திரிக்கைகள், மலையாள பிட்டுகள், இணையம் முழுக்க விரவியிருக்கும் காமத் தளங்கள் போன்றவைகளெல்லாம் இத்தகைய என் மனச் சிக்கலுக்கு ஒரு காரணியாய் இருந்திருக்கலாம். அத்தோடு எல்லாவற்றையும் பாதி திறந்து, பாதி மூடி வைக்கும் தமிழ் சூழலும், வாழ்க்கை முறையும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். மிகுந்த ஆயாசமாக உணர்ந்தேன். இவளே கடைசிப் பெண்ணாக இருக்கட்டும் என முடிவெடுத்ததும் லேசாய் மனம் இளகினாற் போலிருந்தது. கீழிறங்கி தள்ளாட்டத்துடன் பாருக்குப் போய் எழ முடியாத அளவிற்கு குடித்துவிட்டு அங்கிருந்த மேசையிலேயே தூங்கிப் போனேன்.

அந்த இரஷ்யப் பெண்ணிற்குப் பிறகு விஜயலட்சுமிதான் என்னை அசைத்துப் பார்த்திருக்கிறாள். இடைப்பட்ட இந்த ஒரு வருடத்தில் எந்தப் பெண்ணையுமே நான் சந்திக்கவில்லை அல்லது சந்திக்க மெனக்கெடவில்லை. ஒரு பெண்ணுடன் பேசிப்பழகித்தொட்டுமுத்தமிட்டு ஒரு வருடம் ஆகிறது என்பதே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. நான் விஜயலட்சுமியை நெருங்க உடல் ரீதியாய் இந்த ஒரு காரணமே போதுமானதாக இருந்திருக்கக் கூடும். மேலும் அந்த இரவில் அவளை இன்னொருத்தனுடன் பார்த்திருந்ததால் அநாவசிய செண்டிமெண்டுகளுக்கு இடமிருக்காது என்ற நிம்மதியான எண்ணமும் வந்து போனது. தொடர்ந்து இரண்டு மாதங்களாய் பகற் பொழுதுகளை பாரில் கழிப்பது சலிப்பாய் இருந்தது. இன்றிலிருந்து வேறு மாதிரி இருந்து பார்ப்போம் என முடிவெடுத்தேன். கிட்டத்தட்ட எல்லா சனிக்கிழமை காலைகளிலும் இப்படி முடிவெடுத்து திங்கட்கிழமை மாற்றிக்கொள்வதும் வழக்கமாகிவிட்டது.

குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தேன். கதவை வேண்டுமென்றே அறைந்து சாத்தினேன். அடுத்த நொடி பக்கத்துப் போர்ஷன் திறந்தது. விஜயலட்சுமி ஈரம் காயாத கூந்தலில் ஒரு டவலைச் சுற்றியபடி வெளியில் வந்தாள். நீல நிறக் காட்டன் புடவையும் அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். ஜாக்கெட்டில் அங்கங்கு ஈரம் திட்டுத் திட்டாய் தெரிந்தது. இறுக்கமான அவளின் ப்ரா, முலைகளை இன்னும் இறுக்கி அசாதாரண அழகைத் தந்தது. இவள் பேரழகிதான் என நினைத்துக் கொண்டேன். விஜயலட்சுமி புன்னகைத்தபடி பேசத் துவங்கினாள்.

“நீங்க இவ்ளோ நாள் பக்கத்தில இருந்தும் ஒரு காபி சாப்ட கூட கூப்டல.. உங்கள பாக்கிரதே அதிசயமாதான் இருக்கும்.. நானும் பகல்ல வேலைக்கு போய்டறனா.. பேசிக்கவே முடியாம போய்டுச்சி.. வீட்டுக்கு வாங்களேன்” என்றாள்.
“நான் இன்னொரு தரம் வர்ரேன். உங்க அம்மாவிற்கு உடல் நிலை சரியானதும்” என்றேன்.

உதடுகளும் கண்களும் ஒரு சேர “பரவால்ல வாங்க என்றாள்.

அவள் வீட்டினுள் நுழைந்தேன். என் பொந்தை நகலெடுத்த அதே மாதிரியான எலிப் பொந்துதான். வரவேற்பு பொந்தில் அழுக்கான சோபா இருந்தது. அமரச் சொன்னாள். பச்சை வண்ணம் அடித்து உதிர்ந்துபோன இரும்பு மேசையின் மீது டிவி வைக்கப் பட்டிருந்தது. படுக்கையறைக்கு ஒரு பச்சை நிற திரைச்சீலை, டிவிக்கு பின்னாலிருந்த சன்னலுக்கும் அதே நிற திரைச்சீலை. சோபாவில் அமர்பவர்கள் தரிசிக்கும் படி கருப்பு வெள்ளை போட்டோ ஒன்று எதிர் சுவற்றில் மாட்டப் பட்டிருந்தது. “என் அப்பா” எனப் புன்னகைத்தாள். காலையிலேயே அந்தப் புகைப்படத்திற்கு மல்லிகை மாலை சாத்தப்பட்டு, சட்டகத்தின் ஓரத்தில் ஒற்றை ஊதுபத்தி சொருகப்பட்டிருந்து. இரும்பு மேசையின் மேல் அரை முழம் மல்லிகை மீதமிருந்தது. சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி மணம், மல்லிகைப் பூவின் காலை நேர அடர்த்தியான வாசம், தலையில் ஈரத் துண்டு சுற்றிய, பெரிய கண்களைக் கொண்ட பேரழகியின் புன்னகைப் பேச்சு, இவையெல்லாமும் இதற்கு முன் அனுபவித்திராத ஒரு விசித்திரக் கிளர்ச்சியைத் தந்தது. அவள் என் கண்களை நேராய் பார்த்துப் பேசிக் கொண்டிருப்பதும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவள் இன்னொருவனுடன் புரண்டதை நான் பார்த்துவிட்டேன் என்கிற அச்சம் சிறிதளவும் அவள் கண்களில் இல்லை. ஒருவேளை அன்று இரவு மாடிக்கு வந்தது வேறு யாராவதாய் இருக்கலாம் என நம்புகிறாளா எனவும் புரியவில்லை. அழகான பெண்களிடம் இயல்பாகவே ஒரு தன்னம்பிக்கை இருக்கிறது. அது இவளிடம் அபாரமாய் இருந்தது.

காபியைத் தந்தபடியே “டிபன் சாப்டீங்களா?” என்றாள்.இல்லை இனிமேல்தான் என்றதற்கு
“அப்ப இங்கயே சாப்டுங்க.. காபி இப்ப வேணாம்..சாப்டுட்டு குடிங்க..” என்றபடியே என் கையிலிருந்த காபி டம்ளரை பிடுங்காத குறையாய் வாங்கிக் கொண்டாள். சமையலறைக்குப் போய் எவர்சில்வர் தட்டில் நான்கு இட்லிகளை வைத்து ஓரமாய் தேங்காய் சட்னி வைத்து கையில் கொடுத்தாள். சற்று இறுக்கமாகவே அதை சாப்பிட்டு முடித்தேன். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். “தட்லயே கை கழுவிக்கிங்க” என்றபடி தட்டைப் பிடித்துக் கொண்டாள். இன்னும் அதிக கூச்சத்துடன் அதிலேயே கை கழுவிக் கொண்டேன். இதெல்லாம் எனக்கு பழக்கமில்லாதது. என் அம்மாவோடு வாழ்ந்த சொற்ப வருடங்கள் நினைவில் வந்தன. அவளுக்குப் பிறகு வேறெந்த பெண்ணும் எனக்கு உணவு பரிமாறியதாய் நினைவில்லை. சில உணவு விடுதிகளில், மது விடுதிகளில் பெண்கள் பரிமாறியிருந்தாலும். இதுவும் அதுவும் வெவ்வேறு.

சாப்பிட்டு முடித்த பின் சற்று ஆசுவாசமாய் உணர்ந்தேன். காபிக் குடித்தபடியே ஆஸ்பிடல் சென்று வந்தாயா எனக் கேட்டேன். போய் அம்மாவிற்கு காலை ஆகாரம் கொடுத்து விட்டு வந்துதான் குளித்ததாகச் சொன்னாள். அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“நான் கிளம்புரேன் இட்லி நல்லாருந்தது”
“இன்னிக்கு ஒரு நாள் குடிக்கப் போகாம இருக்க முடியுமா”?
“நான் குடிக்கதான் போறேன்னு யார் சொன்னா?”
“நீங்கதான்”
புன்னகைத்துக் கொண்டேன்.
“அதுவும் இல்லாம நீங்க திரும்பி வரும்போது லேசான ஒரு தள்ளாட்டம் இருக்கும்… அதுல தெரிஞ்சிடும்... இந்த ஊர்லயே பொறந்து வளர்ந்ததாலயோ என்னவோ.. அதிக குடிகாரங்கள பாத்தாச்சு.. என் அப்பா, தம்பி எல்லாரும் குடிக்கிறவங்கதான்.. அப்படி அதுல என்ன இருக்குன்னு தெரில.. நான் உங்கள ஒண்ணு கேட்கட்டுமா?”
“ம்ம் கேளுங்க”
“எதுக்காக குடிக்கிறீங்க?”
“மத்தவங்க எதுக்காக குடிக்கிறாங்கன்னு தெரியாது. ஆனா எனக்கு பொழுது போகல அதுனால குடிக்கிறேன்.”
விஜயலட்சுமி சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தது நன்றாக இருந்தது. இடது கையை வாய் மீது வைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள்
“நெஜமாவா சொல்றீங்க யாராவது பொழுது போகலன்னு குடிப்பாங்களா?”
“நெஜம்தான்”
“அப்ப நான் ஒரு ஐடியா சொல்ரேன்.. உங்களுக்கு எப்பலாம் போரடிக்குதோ சொல்லுங்க.. அப்ப நான் வந்து பேசிட்டிருக்கேன்... சரியா… என்னோட பேச பிடிச்சிருக்கா?... இல்ல நானும் போரடிக்கிறானா?...
நான் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தேன்.
“நீங்க பாக்க ரொம்ப சாப்டா இருக்கிங்க... அதிராம பேசுறீங்க... கூச்ச சுபாவம் வேர... இவ்ளோ நல்லவரா இருந்துட்டு ஏன் குடிக்கிறீங்க? வெளில சொல்ல முடியாத பிரச்சின ஏதோ உங்களுக்கு இருக்கு…. ஏதாச்சும் லவ் பெய்லியரா?...”
“அப்படிலாம் எதுவும் இல்ல விஜயலட்சுமி நான் சும்மாதான் குடிக்கிறேன். வேர ஏதாவது வேல இருந்தா அதப் பாக்க போய்டுவேன். இப்ப எதுவும் இல்ல அதனாலதான்…”

“நீங்க விஜின்னும் கூப்டலாம்… விஜயலட்சுமின்னு சிரமப்பட வேணாம்… சரி அப்ப நான் ஒரு வேல சொல்லவா?”
“ம்”
“இங்க பக்கத்துல தவள குப்பம்னு ஒரு கிராமம் இருக்கு.. அங்க ஆதரவற்ற குழந்தைங்க, வயசானவங்களுக்கு ஒரு ஆசிரமம் இருக்கு... நான் அங்கதான் வேல பாக்குரேன்… அங்க வாங்க, குழந்தைகளை பாத்திட்டிருந்தா நல்லா பொழுது போவும்..” என்றாள்.
“எனக்கு அதிலலாம் ஆர்வமில்ல விஜயலட்சுமி”
“அப்ப என்ன செஞ்சா உங்களுக்கு போரடிக்காது?”
“கடலுக்கு எதிர உட்கார்ந்துட்டு குடிச்சா போரடிக்காது” என்றேன்
அவளுக்கு முகம் லேசாய் சிவந்தது. முகத்தை சற்றுக் கடுமையாய் வைத்துக் கொண்டு
“சரி அப்ப போங்க” என்றாள்
நான் சிரித்துக் கொண்டேன். “நீ இப்ப என்ன பன்ர?”
அவள் முகம் முழுக்க பிரகாசமாய் “என்ன கேட்டீங்க?”
“நீ இப்ப என்ன பன்ர?”
“ஹப்பா! இது எவ்ளோ நல்லாருக்கு. சும்மாதான் இருக்கேன்.”
“இந்த ஊர்ல எங்க போகனும்னு ஆசைப்பட்டு போகாம இருக்க?”
“ம்ம்ம். தெர்லயே. அப்படிலாம் நான் எதுவும் ஆசப்படுரது இல்லயே”
“சரி இந்த ஊர்ல நல்ல இடம் எதுன்னு நினைக்கிற?”
“பீச். இல்லனா ஈடன் கார்டன்”
“அங்கலாம் வேணாம்…கிளம்பி கீழ வா!... லஞ்ச் இன்னிக்கு என்னோட சாப்டுர…”
“எங்க போறோம்?” றோமில் இளகின அவளின் குரல், கிளர்ச்சியின் உச்சம்.
“சொல்ரேன் வா”
“நான் அம்மாவுக்கு சாப்பாடு எடுத்துக்கரேன்.. அப்படியே கொடுத்திட்டு போய்டலாம்… ட்ரெஸ் மாத்திக்கவா?.. இல்ல இது ஓகேவா?.. என்றாள்
நான் சிரித்தபடியே
“இது நல்லாருக்கு. நீ எதிலயும் நல்லாதான் இருப்ப” என்றேன்.

அவள் வெட்கியபோது இதுநாள் வரைக்குமான என் வாழ்வில் அவளை விட ஒரு அழகான பெண்ணை சந்தித்திராத உண்மை எனக்குப் புலப்பட்டது.
ஓவியம் : Vladimir Weisberg
- மேலும்

Tuesday, October 26, 2010

அத்தியாயம் 2.விஜயலட்சுமி

சில நெருக்கடிகளால் பாண்டிச்சேரியில் ஆறு மாத காலம் தலைமறைவாய் இருக்க வேண்டியிருந்தது.காரணத்தைப் பிறகு சொல்கிறேன். தலைமறைவென்றால் பெரிய பதட்டமான மறைவு ஒன்றும் இல்லை. என் கைத் தொலைபேசி பிடுங்கப்பட்டிருந்தது. நெருக்கமான நண்பர்களிலிருந்து தெரிந்த மனிதர்கள் வரை எவரையும் தொடர்பு கொள்ளக் கூடாது என்கிற நிபந்தனைகள் இருந்தன. அத்தோடு பாண்டிச்சேரியைத் தவிர்த்து வேறு எந்த நகரத்திற்கும் பயணிக்கக் கூடாதெனவும் தடை விதிக்கப் பட்டிருந்தேன்.

இங்கு வருவது இதுவே முதன் முறை. பேருந்து நிலையத்திற்கு சமீபமான ஒரு சிறிய விடுதியில் அறை எடுத்துக் கொண்டுத் தங்கினேன். இரு சக்கர வாகனமொன்றினை(யமஹா rx100)மாத வாடகைக்கு எடுத்துக் கொண்டு நகரம் முழுக்க என் இருப்பிடத்தைத் தேர்வு செய்ய அலைந்தேன். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வசிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததால் முதலியார் பேட்டையைத் தெரிவு செய்தேன். முதலியார் பேட்டையைச் சுற்றி வந்ததில் விடுதலை நகர் ஹவுசிங் போர்டு எனக்கு வசதியாக இருக்குமெனத் தோன்றியது. ஒரு பழைய வண்ணம் உதிர்ந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சிறிய போர்ஷனை வாடகைக்கு எடுத்துக் கொண்டேன்.

அங்கங்கே காரை உதிர்ந்த சிமெண்ட் தரை. வண்ணமிழந்து வெளிறிபோன சுவர்கள். ஒரே ஒரு சோபா மட்டுமே போட இயலும் ப வடிவ மிகச்சிறிய வரவேற்பறை. ப வின் இரண்டாவது செங்குத்து கோட்டிலிருந்து பிளந்து சென்றால் குறுகலான படுக்கையறை. வரவேற்பரை முடியும் அடுத்த முனையில் வராண்டா மாதிரியான தோற்றத்திலிருப்பதுதான் சமையலறை. சமயலறையின் முடிவில் தகரக் கதவு கொண்ட கழிவறை அதனுள் ஓரமான காலி இடம்தான் குளிப்பறை. இந்த ஹவுசிங் போர்ட் வீடுகளை வடிவமைத்தவன் கையில் கிடைத்தால் முகரையைப் பெயர்த்து விட வேண்டும் என மனதில் கறுவிக் கொண்டேன். வீடுகளின் மீது பெரிய காதல் எதுவும் இல்லையென்றாலும் இந்த அளவிற்கு கோபம் பொங்க காரணம் நான் படித்திருந்த சிவில் எஞ்சினியரிங் டிப்ளமோதான். வாழ்வு ஒழுங்காயிருந்திருந்தால் நல்ல வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்திருப்பேன்.

இருப்பினும் இந்த எலி பொந்தை என் வசதிக்கேற்றார் போல் மாற்றிக் கொண்டேன். சமயலறையைக் குளியலறையாகப் பயன்படுத்திக் கொண்டேன். முறையே படுக்கையறைச் சுவர்களுக்கு சிவப்பு வண்ணம், வரவேற்பறைக்கு மஞ்சள் வண்ணம், குளியலறையாக மாற்றின சமையலறைக்கும், கழிவறைக்கும் நீல வண்ணம் வாங்கி வந்துப் பூசினேன். தகரக் கதவைப் பெயர்த்து வெளியில் எறிந்தேன். இப்போது இது கொஞ்சம் சுமாரான வசிப்பிடமாகியது. கணினிக்கு ஒரு குறுகிய மேசை, படுக்கையறையில் ஒரு மெத்தை விரிப்பு. உடைகளை, பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு சிறிய மர அலமாரி. உணவு தண்ணீர் போன்றவைகளை வைக்க ஒரு சிறிய குளிர் பெட்டி அவ்வளவுதான். எலிப்பொந்து உல்லாசபுரியானது.

இந்த நாட்களில் செய்ய ஒன்றுமே இல்லாமல் இருந்தது. பகலைக் கொல்ல பெரும்பாடு பட வேண்டியிருந்தது. குடிதான் நேரத்தைக் கொல்ல எனக்கிருந்த ஒரே ஆசுவாசம். பகலில் குடிக்க உகந்த நகரம் பாண்டிச்சேரிதான். பெரும்பாலும் தனலட்சுமி பாரின் உள்ளறை அல்லது எப்போதாவது மிக உற்சாகமான மன நிலை வேண்டி கடற்கரைக்குச் சமீபமாகவிருக்கும் அஜந்தா பாரின் கூரை நிழலடர்ந்த மாடி இவ்விரண்டும்தான் என் பகற் புகலிடங்களாக இருந்தன. விடுமுறை நாட்களை கவனமாய் தவிர்த்து விடுவேன். ஏனோ குடிக்கும்போது நானும் இயற்கையும், நானும் நானும் மட்டுமே லயித்திருக்க விருப்பம். சிதறல்களாய் மனிதர்களை அருகில் காணும்போது குடித்த திருப்தி வருவதில்லை. எப்படி ஒவ்வொரு வாரமும் இந்த நகரம் குடிகாரர்களால் நிறைகிறது என வியப்பாய் யோசித்ததுண்டு.

வசிப்பிடத்தில் பக்கத்துப் போர்ஷன்காரர்களை பார்த்துப் புன்னகைப்பதைத் தவிர்த்துக் கொண்டேன். குறிப்பிட்ட ஒரே நேரத்தில் வெளியில் போவதையும் வருவதையும் மிகக் கவனமாக தவிர்த்ததால் எப்போது போகிறேன்? எப்போது திரும்புகிறேன்? என்ற தகவல்களை பொழுது போகாத பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நான் வெகுநாள் தராமலிருந்தேன். எல்லாம் ஒரு மாதம்தான். அடுத்தவர்களின் இரகசியமறிவதைப் பகல் நேரப் பொழுது போக்காக வைத்திருக்கும் நடுத்தர வயது பெண்களுக்கு சில நாட்கள் சவாலாக இருந்துவிட்டு ‘ஏதோ எழுத்தாளனாம் கதை எழுதுறானாம்’ என்கிற ‘சப்’ சுவாரசியத்தை பக்கத்து போர்ஷன் விஜயலட்சுமி மூலமாய் வரவழைத்து விட்டேன். பகலில் பார்களுக்கு போய்விட்டு இரவில் வெகு நேரம் விழித்திருக்கிறான். என்கிற மேலதிக தகவல் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் விஜயலட்சுமிக்கு அத்தகவல்கள் போதவில்லை என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

இங்கு வந்த புதிதில் போதை மிகுந்த ஒரு மதியப் பொழுதில்தான் விஜயலட்சுமியை முதலில் பார்த்தேன். முதல் மாடிக்கும் இரண்டாவது மாடிக்குமான படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிரில் வந்தாள். மஞ்சள் பூசிக் குளித்திருந்த, லேசாய் பருக்கள் காய்ந்திருந்த வட்ட முகம். சந்தன நிறம். சற்றே பெரிய நெற்றிப் பொட்டு. வகிட்டில் குங்குமக் கீறல். அவசரமாய் கழுத்தை நோக்குகையில் மஞ்சளில் குளித்திருந்த தாலிக் கயிறு. கிடைத்த குறுகிய நேரத்தில் அவ்வளவுதான் பார்க்க முடிந்தது. ஒருவரை ஒருவர் கடந்த பின்னர் முதுகின் பின்னால் அவள் குரல் கேட்டது

“புதுசா வந்திருக்கிங்களா?”
“ம்ம் ஆமா”
“பேமிலி இன்னும் வரலயா?”
“பேமிலிலாம் இல்ல”
“ஓ! ஏதாவது உதவின்னா கேளுங்க நாங்க உங்க பக்கத்து வீடுதான்”
“கண்டிப்பா. ரொம்ப நன்றி”

உள்ளே வந்து கதவடைத்த போது அவள் குரல் காதுகளின் வழியிறங்கி உள்ளே அதிர்ந்தது. போதை என முணுமுணுத்தபடி தூங்கிப் போனேன்.

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் நள்ளிரவில் விழித்துக் கொண்டேன். நேரம் பனிரெண்டைக் கடந்திருந்தது. புழுக்கமும் இறுக்கமும் அதிகமாக இருக்கவே சிகரெட்டை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போகும் படிக்கட்டுகளில் ஏறினேன். நல்ல விஸ்தாரமான மாடியிது. எதிரில் ஒரு பூங்கா முழுக்க மரங்களிருப்பதால் நல்ல காற்றும் வீசிக் கொண்டிருக்கும். சிகரெட்டைப் பற்ற வைக்க தீக்குச்சியை உரசும்போதுதான் கவனித்தேன். இரண்டு உருவங்கள் கட்டித் தழுவியபடி வெற்றுத் தரையில் உருண்டு கொண்டிருந்தன. என் அரவத்தில் பதறியடித்து எழுந்து, ஆணுருவம் பக்கத்து கட்டிடத்தினுக்கு தாவிக் குதித்து, படிக்கட்டுகளில் அவசரமாய் இறங்கி ஓடியது. பெண்ணுருவம் அசையாது படுத்திருந்தது. மெல்லிதாய் ஒரு புன்னகையுடன் நான் கீழிறங்கி வந்துவிட்டேன். ஒரு ஆர்வக் கோளாறில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டுப் புகைத்தேன். நான்கு நிமிடம் கழித்து நைட்டியுடன் விஜயலட்சுமி மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் தலை குனிந்தபடி மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு நொடி அவளை இமைக்காமல் பார்த்தேன். அவமானம் அப்பியிருந்த அவளின் முகமும், மிகுந்த காமத்தைத் தேக்கியபடி தளும்பின அவளின் கனத்த முலைகளும் உயிரைப் பிழிய அவசர அவசரமாய் கதவைச் சாத்தினேன்.

அந்த இரவு எனக்குத் தூங்க சிரமமாய் இருந்தது. வலுக்கட்டாயமாய் விஜயலட்சுமியை நினைவிலிருந்து துரத்தினேன். நைட்டியில் அவளுடல் பார்த்த இரண்டுநிமிடம் மிகுந்த தொந்தரவினை ஏற்படுத்தியது. இரவில் எல்லாப் பெண்களுமே பேரழகிகளாகிவிடுகிறார்கள். அதுவும் இந்த இரவு ஆடை அணிந்த பெண்களைப் பார்க்கும்போது காமம் ஒரு காட்டாற்றினைப் போல சீற்றம் கொள்கிறது. நான் தலையை உலுக்கிக் கொண்டேன். இந்தப் பெண் அபாயத்தைத் தன் கண்களில் தேக்கி வைத்திருக்கிறாள். முதலில் இருப்பிடத்தை மாற்ற வேண்டும் அல்லது ஏற்கனவே விசாரித்துத் தெரிந்து கொண்ட லாஸ்பேட் விலாசத்தினுக்கு ஒரு முறை சென்று வரவேண்டும். அதிக விருப்பமில்லை என்றாலும் கூட பெண்களின் மீதான கவனக் குவிப்பை குறைக்க உதவும் என நினைத்தபடியே தூங்கிப் போனேன்.

நான்கு நாட்கள் கழித்து காலை எட்டு மணி வாக்கில் என் கதவு வேகமாய் தட்டப்பட்டது. எழுந்து கதவைத் திறந்தேன். விஜயலட்சுமி நின்று கொண்டிருந்தாள். அவளின் பெரிய கண்கள் குளமாயிருந்தன. அன்று இரவு அணிந்திருந்த அதே நைட்டி.

“நேத்து நைட்ல இருந்து அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்ல.. தம்பியும் ஊர்ல இல்ல… விடிகாலைல கீழ்வீட்டக்காவும் நானும் அம்மாவ ஆஸ்பிடல்ல சேர்த்துட்டோம்.. அவசரமா ஒரு நாலாயிரம் தேவபடுது இருக்குமா?.. தம்பி வந்ததும் ஒடனே கொடுத்திர்ரேன்” என்றாள். நான் உள்ளே சென்று எடுத்து வந்து கொடுத்தேன்.

“இப்ப எப்படி இருக்காங்க?” என்றேன்.
“பரவால்ல. எந்திரிச்சி உட்கார்ந்துட்டாங்க” என்றபடி கண்களை துடைத்துக் கொண்டாள்.
“அழாதீங்க எதுவும் ஆகாது” என்றதற்கு இன்னும் அழுதாள்.
“உதவிக்கு யாருமே இல்ல விடிகாலைல உங்க கதவ தட்டலாமா வேணாமான்னு யோசனையா இருந்தது….கீழ் வீட்டக்கா கதவ தட்டி அவங்கள எழுப்பி ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்”
“இனிமே ஏதாவது உதவின்னா கூப்டுங்க” என்றேன்.

தலைகுனிந்தபடி பேசிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து என் கண்களை ஆழமாய் பார்த்தாள். நான் சற்று விதிர்த்துப் போய் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். அவள் ‘வரேன்’ எனச் சொல்லி விலகினாள். அப்படிச் சொல்லியபோது அவள் மெல்லிதாய் புன்னகைத்த மாதிரி இருந்தது. நான் மீண்டும் போய் தூங்கி விட்டேன்.

குழப்பமாய் சில சிதறல்கள் தூக்கத்தின் இடையிடையே வந்து போயின. விஜயலட்சுமி இரத்தம் தோயந்த கத்தியொன்றினை வலது கையில் பற்றியபடி என்னைத் துரத்துகிறாள். நான் பயந்தும், பாய்ந்தும் ஓடிக் கொண்டிருக்கிறேன். நீளமான இருள் சந்து முடிவேயில்லாது நீண்டுகொண்டிருக்கிறது. வளைவோ, வெளிச்சமோ வருமென்கிற நம்பிக்கைகளோடு உயிர் பயம் கவ்வ அந்தச் சந்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன். நெருங்கி விடும் தூரத்தில் விஜயலட்சுமி துரத்திக் கொண்டிருக்கிறாள். இடையிடையே ஆங்காரமாய் கர்ஜிக்கிறாள். அந்த குரல் நேரடியாய் இதயத்தின் மீது மோதி என் பதட்டத்தை அதிகமாக்குகிறது.

இதோ.. இதோ.. நெருங்கிவிடும் தொலைவில் ஒளி. மிகப்பெரிய பிரகாசம் இல்லையெனினும் வெளிச்சத்தின் கீற்று அல்லது வெளிச்சத்தின் நிழல் கண்ணில் பட்டது. சந்தின் முடிவினை நெருங்கிவிட்டோம். இனி தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்தோடே ஓட்டத்தின் வேகத்தை இன்னும் கூட்டினேன். ஒளியை நெருங்கிக் கொண்டிருந்தபோது அது திடீரென இருண்டது. காணாமல் போனது. யாரோ சரக் கென ஜிப்பை இழுத்த சப்தம் கேட்டது. நின்று மூச்சிரைத்தேன். பின்னால் விஜயலட்சுமியின் குரலோ ஓடிவரும் சப்தமோ கேட்கவில்லை. வெகுநேரம் மூச்சிரைத்த பின்பு உடல் நிதானமானது. கண்கள் இருளுக்கு பழகின. திரும்பிப் போயிருப்பாள் அல்லது வழியில் எங்காவது விழுந்து விட்டிருக்கலாம் என நினைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். நன்றாக மூச்சை உள்ளிழுத்து விட்டுக்கொண்டு நடக்கத் துவங்கினேன். மூன்றடி நடந்ததும் ஒரு உருவத்தின் மீது மோதி நின்றேன். ஏதோ ஒரு பெண்ணுடல் நின்று கொண்டிருந்தது. அது கண்களைத் திறந்தபோது அந்த இருளில் வெண்ணிற வெளிச்சப் புள்ளிகளாக அவை மினுங்கின. அந்த வெளிச்சத்தில்தான் நின்று கொண்டிருப்பது விஜயலட்சுமி என தெரிய வந்தது. அவசரமாய் கைகளைப் பார்த்தேன் கத்தியைக் காணவில்லை. அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். வா! என அருகில் அழைத்தாள்.

என்ன நிறம் என எளிதில் கண்டுபிடித்துவிட முடியாத அதே நைட்டியினை அணிந்திருந்தாள். கசங்கலான அந்த நைட்டியின் தோள்பகுதியில் மண் அப்பியிருந்தது. வா! என்றாள் ஆழமாக. நான் பயந்துப் பின் வாங்கினேன். அவள் மெல்லத் தன் நைட்டியின் ஜிப்பினைக் கீழே இழுத்தாள். மிகப்பெரும் ஒளிவெள்ளம் அந்த நீளமான இருள் சந்தில் பாய்ந்தது. என் கண்கள் வெளிச்சத்தைத் தாங்க இயலாது பார்வையை இழந்து விடுமோ? என அஞ்சத் துவங்கின. உள்ளாடை அணிந்திராத அவளின் முலைகள் இரு பெரும் சூரியன்களாகின. தக தக வென மின்னியபடி அவை உமிழ்ந்த வெளிச்சத்தின் வெப்பம் தாங்காது நான் கண்களை மூடிக் கொண்டேன். அவ் வெளிச்சத்திலிருந்து தப்பி ஓட எண்ணி,முனைந்து, துவண்டு கீழே விழுந்து மூர்ச்சையானேன்.

ஓவியம் : Rembrandt

- மேலும்

Monday, October 25, 2010

அத்தியாயம் 1. பழி

அந்த நேரத்தில் கைக்கு எதுவும் தட்டுப்படவில்லை. ஏதேனும் ஒரு கூரிய கல், இரும்புத் துண்டு, வேலி பெயர்ந்த இரும்பு முடிச்சு, இப்படி ஏதாவது ஒன்று கிடைத்தால் கூட போதும். தரையில் ஆங்கில ’சி’ வடிவில் வளைந்தபடி முனகிக் கிடப்பவனின் ஆசன வாயில் சொருகி விட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம். அவன் விழுந்து கிடக்கும் இடத்திலிருந்து அரை வட்டமாய் பத்தடி தூரம் வரை அலசினேன். கவிழ்ந்திருந்த இருளில் கைக்கு எதுவும் தட்டுப்படவில்லை. இளைத்துப் போயிருந்த நிலவின் ஒளி மிகச் சன்னமாய் இருந்தது. நெடுந்தொலைவினுக்கு வயலாக இருக்கக் கூடும். சமீபத்தில்தான் நெற்கதிர்கள் அறுக்கப்பட்டிருக்க வேண்டும். நடக்கையில் நெற்கதிர் வேர்கள் பூட்ஸ் காலில் நசுங்கி சப்தம் எழுப்பின. பச்சை நெல்லின் வாடையும் கோடை இரவின் வெக்கையும் மூச்சு முட்ட வைத்தன. எண்பது கிலோவிற்குச் சமீபமான உடலை இழுத்துக் கொண்டு வந்ததில் வியர்வையில் தெப்பலாய் நனைந்து போயிருந்தேன். இடையில் அங்கங்கே நின்று அவன் கால்களை மாற்றி மாற்றிப் பிடித்து இழுத்து வந்தேன். இரயில் தண்டவாளத்திலிருந்து இவ்விடம் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம். இழுத்து வரும்போது சப்தம் போடாதிருக்க அவன் வாயைப் பிளந்து பெரிய ஜல்லிக் கல் ஒன்றினை பற் தாடைகளுக்கு நடுவில் முட்டுக் கொடுத்திருந்தேன். அவன் அணிந்திருந்த பெல்ட்டை உருவி இரண்டு கைகளையும் முறுக்கி வளைத்துப் பின் புறமாய் கட்டியிருந்தேன். அப்படியும் ஓரிரு முறை தலையைத் தூக்கி,கால்களை உதறித் திமறி எழ முயற்சி செய்தான். பூட்ஸ் காலினால் வாயிலும் மூக்கிலும் உதைத்து இழுத்து வரவேண்டியதாய் போயிற்று. வயல் பூச்சிகளின் சப்தமும்,மின்மினிப் பூச்சிகளின் பறத்தலும் அந்த இரவினை முழுமையாய் நிறைத்துக் கொண்டிருந்தன. காற்றின் அசைவற்ற இருள்வெளி மிக வன்மமாய் தகித்துக் கொண்டிருந்தது.




மூச்சிரைக்கவே சற்று நேரம் அமர்ந்தேன். தாகமாயிருந்தது. இங்கு நிச்சயம் ஏதாவது கிணறு இருக்க வேண்டும். உத்தேசமாய் இருளில் சிறிது தூரம் நடந்தேன். நீர்கால்வாய் காலைத் தட்டியது. கால்வாயினுள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எதிர்திசையாய் இல்லாமல் இறைக்கும் தொட்டியிலேயே கால்வாய் முடிந்தது. மென் ஒளியில் கருமை நீர் அசைவற்று இருந்தது. உள்ளங்கைகளைக் குவித்து அள்ளிக் குடித்தேன். நேரம் பின்னிரவை நெருங்கி விட்டிருக்கலாம். பரபரப்பாய் உணர்ந்தேன். ”தாயோலி செத்து தொலைய மாட்டேங்கிறானே!” சப்தமாய் முனகியபடி காறித் துப்பினேன். ஏதாவது ஒரு நடுத்தரக் கருங்கல் கிடைத்தால் கூட போதும் இரண்டு அல்லது மூன்று முறை அக்கல்லினைப் பயன்படுத்தியாவது முனகிக் கிடப்பவனின் தலையைச் சிதைத்து விடலாம். நீர்கால்வாயினுக்குச் சமீபமாய் துணிதுவைக்க அல்லது சோப்பு போட பயன்படுத்தும் கல் ஏதாவது கிடக்கிறதா எனத் துழாவிப் பார்த்தேன். இல்லை. நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. பின்னிரவு இரண்டு மணியைக் கடந்திருக்கலாம். லேசாய் பதட்டமானது.

நேற்று இரவு அரக்கோணம் இரயில் நிலையத்தில் இவனைப் பார்த்தேன். லேசான போதையில் தள்ளாடியபடி என்னைக் கடந்து பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தான். சட் டென இவன் பிம்பம் எல்லா நினைவுக் குப்பைகளையும் கிளறிப் போட்டது. எப்படியோ இவன் தப்பிப் போய்விட்டான். ஏன் இவனை இத்தனை நாள் மறந்திருந்தேன் எனத் தெரியவில்லை. எந்த ஒரு கணத்தில் இவன் மீதான இரக்கம் சுரந்தது என்றும் யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை நிகழ்ந்தவைகளின் அதீதமான அழுத்தங்கள் இவனை மறந்து போக செய்து விட்டிருக்க வேண்டும். இவன் இந்த ஊரில் என்ன செய்கிறான்? எனவும் யோசனையாய் இருந்தது. ஆள் முன்பை விட சற்றுப் பூசியிருந்தான். தாயோலி உல்லாசமாக இருக்கிறான் போலும். பார்த்த மறு நிமிடமே அவனைக் கொல்லும் உந்துதல் ஏற்பட்டது. துப்பாக்கி, கத்தி என எந்த வஸ்துக்களையும் உபயோகிக்காது வெறும் கைகளினால் இவனைக் கொல்லும் ஆசை மெல்ல மேலெழுந்தது. அவனின் தள்ளாட்டமும் இதற்கு உறுதுணையாய் இருக்கும். நல்லவேளையாய் நான் குடிக்கவில்லை. பின் தொடர்ந்தேன்.

செண்ட்ரல் செல்லும் இரவு பதினோரு மணி பாஸெஞ்சர் ரயிலில் ஏறினான். இருக்கைகள் காலியாக இருந்தும் கதவுக்குச் சமீபமாய் நின்றபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். நான் உள்ளே போய் அவன் கண்ணில் படாதவாறு அமர்ந்து கொண்டேன். சொற்பமான ஆட்களுடன் இரயில் பெட்டி தூங்கிக் கொண்டிருந்தது. திருவள்ளூர் ரயில் நிலையம் தாண்டியதும் எழுந்து கொண்டேன். புட்லூர் தாண்டக் காத்திருந்தேன். புட்லூர் தாண்டியதும் இவன் வாகாய் கதவுப் பக்கத்தில் நின்றபடி அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான். மெல்ல அருகில் போய் லேசாய் தள்ளி விட்டேன். சாய்ந்த மரம் போல விழுந்தான். நான் சற்றுத் தள்ளி எகிறி குதித்தேன். சற்றும் எதிர்பார்த்திராததால் இவன் தலை தரையில் மோதியிருக்க வேண்டும். இரத்தம் முகத்தில் கோடுகளாய் வழியத் துவங்கியிருந்தது. சிதறியிருந்த ஜல்லிக் கற்கள் முகத்தைக் கிழித்திருந்தன. அதிர்ச்சியில் துடித்தபடி குழறலாய் முனகியவனை இழுத்துக் கொண்டு வந்து இந்த வயலில் கிடத்தினேன்.

நாங்கள் கீழே குதித்ததை எவரேனும் பார்த்திருந்தால் ரயிலை இந்நேரம் நிறுத்தி போலிசுக்குத் தகவல் கொடுத்திருக்கலாம். மீதமிருக்கும் சொற்பமான நேரத்தில் இவனைக் கொன்றேயாக வேண்டும். பதட்டத்தை உணரத் துவங்கினேன். எப்படி அடித்தாலும் இந்தச் சனியன் செத்துத் தொலையவில்லை. களைத்துப் போய்தான் ஆயுதத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். இனி ஆயுதத்தைத் தேடிப் பயனில்லை. விரைந்து திரும்பி வந்தேன். கால்களைக் குறுக்கிக் கொண்டு மிகக் கோணலாய் அவனின் உடல் கிடந்தது. உயிர் இருந்து கொண்டிருப்பதை மிகச் சன்னமான முனகல் தெரிவித்தது. இப்படியே கிடந்தால் நான்கு அல்லது ஐந்து மணிநேரத்தில் அவன் இறந்துவிடலாம். இடையில் யாராவது பார்த்து விட்டார்களெனில் பிரச்சினைதாம். இல்லை இவன் பிழைத்து விடக் கூடாது. தலையயை உலுக்கிக் கொண்டேன். பின் பூட்ஸ் அணிந்திருந்த என் இடது காலினால் குறுகி மடிந்திருந்த அவன் கால்களை விரித்தேன். தடிமனான பூட்ஸினை விரைப்பாக்கியபடி வலக்காலை பின்னிக்கிழுத்து பலத்தைத் திரட்டி மிகச் சரியாய் அவனின் விரிந்த இரண்டு கால்களுக்கு மத்தியில் உதைத்தேன். ’ஹக்’ என்றொரு கேவல் வந்தடங்கியது. மீண்டும், மீண்டும், மீண்டும், உதைத்ததில் அவன் உடல் சற்றுத் தூக்கிப் போட்டு பின் அடங்கியது. பிறகும் அவன் ஆணுறுப்பின் மீது ஒரே காலில் ஏறி நின்றேன். சிகரெட்டை அழுத்தி நசுக்குவது போல அவன் ஆண்குறியை நசுக்கினேன். பின் வலது கால் பூட்டினைக் கழற்றிவிட்டு பெரு விரலை அவன் மூக்கருகில் வைத்தேன் சுவாசத்தினை உணர முடியவில்லை. அடி வயிற்றியிலிருந்து காறித் துப்பினேன். பேண்ட் ஜிப்பினை அவிழ்த்து சரியாய் அவன் வாய்க்குள் போகும்படி ஒன்றுக்கிருந்தேன். மீண்டும் ஒரு முறைக் காறித் துப்பிவிட்டு. வந்த வழியை உத்தேசமாய் கணக்கிட்டு நடக்கத் துவங்கினேன்.

இவன் உடலை மறைக்கவெல்லாம் விரும்பவில்லை. இதுவரை செய்த எந்த ஒன்றையும் நான் மறைக்க விரும்பியதில்லை. சூழல்களுக்கு தேவையான கவனம் மட்டும்தான் எனக்கு அவசியமே தவிர, வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்புகள் அல்ல. பாதுகாப்பின்மைகளின் அலாதியான இன்பத்தைத் துய்த்தவர்களுக்கு நாளை என்றொரு நாள் எப்போதுமிருப்பதில்லை. பாதுகாப்பற்ற ஒவ்வொரு நொடியும் பரவசமானது. பயத்தைப் போல, விபத்தைப் போல, கலவியின் உச்ச நொடியினைப் போல மனதை முழுக்க விழிப்பு நிலைக்குக் கடத்துவது. நான் விழிப்பின் முதல் படியில் வாழ்பவன். பரவசங்கள் மட்டுமே உண்மையான வாழ்வாய் இருக்க முடியும் என நம்புபவன். வியர்வையில் உடல் நனைந்திருந்தது. நிலவின் வெளிச்சம் சற்றுப் பிரகாசமானது. நான் மிகுந்த விடுதலையை வெகு நாட்கள் கழித்து உணர்ந்தேன். கொல்வதைப் போல பரவசத்தை தரும் இன்னொன்று கலவியாகத்தான் இருக்க முடியும். முதன்முறையாய் என் சொந்தக் கைகளினால் ஒரு மனிதனைக் கொன்றதும் முதற்கலவி கொண்ட பெண்ணின் உடல் நினைவில் வந்து போனது. கலவியும் கொலையும் ஒன்றுதான் எனத் தோன்றியது.

ஓவியம் : வான்கோ

-மேலும்

Monday, September 27, 2010

ஓஎன்வி இரசிகரின் மத்தி மீன் குழம்பு ரெசிபி

சமீபமாய் நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போயிருந்தேன். அவர் ஒரு மலையாளி. என்னுடன் வந்தவர்கள் என்னை ‘புள்ளி எழுத்துக்காரானானு’ என அவருக்கு அறிமுகப்படுத்த அவரிடம் ஒரு சிறிய பரபரப்புத் தொற்றிக் கொண்டது. என்னுடைய எழுத்துப் பின்புலங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார், அவரையும் ஒரு கலாகாரன் என்றே நண்பர்கள் அறிமுகப்படுத்தினர். நண்பர், ஓஎன்வி குருப்பின் மிகப்பெரும் இரசிகர். ஓஎன்வியின் புகைப்படமும் சில புத்தகங்களும் அவர் வீட்டில் பார்க்க முடிந்தது. அவர் ஜீவிதத்தில் ஓஎன்வியைத் தவிர வேறு யாரையும் படித்ததில்லை, படிக்க விரும்பியதுமில்லையாம். "ஓஎன்வியின் பாடல்களுக்கு காங்கிரஸ் மலையாளிகளும் அடிமை, நான் ஒரு உதாரணம்!" என்கிற கூடுதல் தகவலையும் பகிர்ந்தார். பின்பு படுக்கையறைக்குச் சென்று திடீரென தரையில் படுத்தார். கட்டிலுக்கடியில் ஊர்ந்து, சிறிய அரை வட்டம் ஒன்றை அடித்து அப்ஸல்யூட் வோட்கா பாட்டிலோடு வெளியில் வந்தார். மிகச் சுறுசுறுப்பாக கண்ணாடிக் குவளைகளையும்,பனித்துண்டங்களையும் ஐந்தே நிமிடங்களில் தயாரித்த வெள்ளரிக்காய் சாலட்லையும் கொண்டு வந்து மேசையில் பரப்பினார். முதல் ரவுண்டிற்குப் பிறகு அதே அவசரத்துடன் உள்ளறைக்குச் சென்று சட்டையணிந்தார். "பத்து மினிட்டு" எனச் சொல்லியபடியே கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்விட்டார். உடன் வந்த நண்பர்கள் புதிர் முக பாவனை ஏதும் இல்லாமல் சாதாரணமாய் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் தம்மடிக்கப் போயிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். மிகச் சரியாய் ஒன்பதரை மினிட்டில் உள்ளே மீன்களோடு வந்தார்.

அவரின் வீடு ஸ்பானிய பாணியில் கட்டப்பட்டது. இண்டர்நேஷனல் சிட்டியில் ஸ்பானிஷ் ப்ளாக்கில் வசிக்கிறார். வீட்டின் கூடத்தோடு ஒட்டியபடி சமையலறை இருக்கும். கிட்டத்தட்ட நம் செட்டிநாட்டு வீடுகளின் உள் முற்றம் போன்ற ஒரு செவ்வக வடிவ திட்டுதான் சமையலறை. எங்களுடன் பேசியபடியே இருபது நிமிடத்தில் சுவையான காரமான மத்தி மீன் குழம்பையும் பத்தே நிமிடத்தில் கப்பாவையும் தயாரித்து மூன்றாவது இரவுண்டில் பரிமாறினார். அபரிதமான ருசியுடனிருந்தது அந்த உணவு. பொதுவாகவே மலையாளிகளின் உணவின் மீது எனக்கு பெரிதாய் விருப்பம் கிடையாது. ஒரு வித அசிரத்தையுடன் தான் சாப்பிடத் துவங்கினேன். நல்ல காரத்துடனான மீன் குழம்பின் சுவை அறைக் குளுமையையும் மீறி வியர்க்க வைத்தது. நண்பரின் மீன் குழம்பு ரெசிபி மிகவும் சுலபமானது. ஒரு சொட்டு எண்ணெய் கூட பயன்படுத்தாமல் இந்த ருசியான குழம்பைத் தயாரித்தார்.

இந்த மல்லு மீன் குழம்பிற்கு தேவையான பொருட்கள் (பெயர் நானாய் வைத்ததுதான் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை)

மத்தி மீன் (நெய் மத்தி கிடைத்தால் மிக நன்று) : ஆறு அல்லது எட்டு முழுத் துண்டுகள்
சிறிய வெங்காயம் பொடியாய் நறுக்கியது : அரை கப்
பூண்டு பொடியாய் நறுக்கியது : கால் கப்
மிளகாய் தூள் – தனியா கலக்காதது : இரண்டு மேசைக் கரண்டி
தனியா தூள் – மிளகாய் கலக்காதது : ஒரு மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் – நடுவில் கீறித் துண்டாக்கவும் – ஆறு துண்டுகள்
இஞ்சி – பொடியாய் நறுக்கியது : கால் கப்
கொடும்புளி - எலுமிச்சையளவு
வெந்தய பொடி – சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

வாயகன்ற மண் சட்டியை (மண் சட்டி இல்லையென்றால் மீன் குழம்பு வைக்கும் திட்டத்தைக் கைவிடவும்) அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகாய் மற்றும் தனியா தூளை இட்டு லேசாய் வாட்டிக் கொள்ள வேண்டும். பின்பு நீரூற்றி நன்கு கலக்கவும். இப்போது கறிவேப்பிலை,பூண்டு,வெங்காயம்,மிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சட்டியிலிருக்கும் கரைசலில் போடவும். லேசாய் கொதி வந்த பின்பு கொடும்புளியைத் தூவிவிடவும். பின்பு மீன் துண்டங்களை ஒவ்வொன்றாய் கரைசலில் அமிழ்த்தவும். ஒரு போதும் கரண்டியைப் பயன்படுத்திக் கலக்க கூடாது. சட்டியை ஜாக்கிரதையாய் தூக்கி கலக்கலாம். ஒரு மூடியைப் போட்டு மூடிவிட்டு தீயைக் குறைத்துவிடவும். பத்தே நிமிடத்தில் ருசியான குழம்பு தயார். ஒரு வித அனுபூதி நிலையில் அவர் இந்த ரெசிபியை என்னிடம் பகிர்ந்தார். நான் நான்கு ரவுண்ட் அனுபூதியோடு இதையும் சிரத்தையாய் கேட்டுத் தெரிந்து கொண்டபடி விடைபெற்றேன்.

சனிக்கிழமை ஓஎன்விக்கு ஞான பீட விருது கிடைத்ததை அறிந்ததும் நண்பரின் நினைவு வந்தது. தொலைபேசி வாழ்த்தினேன். ‘நிங்கள் என்னை விளிக்கும் அம்பதாவது ஆளாம்’ என்ற ஆச்சரிய தகவலையும் பகிர்ந்தார். ஓஎன்விக்கு கூட இத்தனை தொலைபேசி அழைப்புகள் போயிருக்காது என்றேன். மனிதர் ஐம்பதாவது முறையும் அதே நெகிழ்வோடு ஓஎன்வியை நினைவு கூர்ந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஓஎன்வியை துபாயில் நேரில் சந்தித்தும் பரவசமடைந்திருக்கிறார். ஓஎன்வி எழுதிய சினிமா பாடல்கள் குறுந்தகடைக் கேட்டேன். வெள்ளியன்று வந்தால் அவரின் பாடல்களைக் கேட்டபடியே குடிக்கலாம் என அழைப்பு விடுத்தார். வருவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.

நேற்று ஜெமோவின் ஓஎன்வி வசை கட்டுரையைப் படித்தவுடன் நண்பருக்குத் தொலைபேச வேண்டும் போலிருந்தது. ஆனால் அபரிதமான அந்த மீன் குழம்பின் ருசிதான் என்னை அம் முட்டாள்தனமான எண்ணத்திலிருந்து காப்பாற்றியதோ என்னவோ. ஏனெனில் ஓஎன்வியை யாராவது அவர் முன் கிண்டலடித்தால் மனிதர் மிருகமாகிக் கிண்டலடித்தவரை கடுமையாய் தாக்கும் நிலைக்குச் சென்றுவிடுவாராம். ஒரு குடி நிகழ்வில் அவர் நண்பர்களில் யாரோ ஒருவர் அச்சுதானந்தனை முன் வைத்து எழுந்த கிண்டலை ஓஎன்வியில் முடித்துச் சிரிக்க ஆரம்பிக்ககூட இல்லையாம் பளார் என்ற சப்தத்தை அனைவருமே கேட்டிருக்கிறார்கள். சிவப்பான விழிகளோடு மூச்சு வாங்க "பட்டி மோனே" என புஸ்ஸிக் கொண்டிருந்தாராம் நண்பர். அவருடைய இன்னொரு நண்பர் இந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்தார். நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். ஜெமோ கட்டுரையை அப்படியே சொல்லி இருந்தால் என் நிலை என்ன ஆகி இருக்கும். நல்ல வேளை தப்பித்தேன்.

மாலை பேரங்காடியில் நெய் மத்தி மீன்களைப் பார்த்தேன். அப்போதுதான் வந்து இறங்கி இருக்க வேண்டும். அதன் மலர்ச்சியே என்னை வாங்கத் தூண்டுவதாய் இருந்தது. மீன்களை வாங்கிக் கொண்டு வந்தேன். நண்பரின் ரெசிபியை நினைவுபடுத்திப் பார்த்தேன். தமிழ் மரபில் ஊறிய சமையல் மனம் வெங்காயத்தையோ பூண்டையோ வதக்காமல் குழம்பு வைக்க அஞ்சியது. எனவே அதே பொருட்களைக் கொண்டு கீழ் வரும் முறையில் செய்து பார்த்தேன். இந்த முறையும் மிக ருசியாகவே இருந்தது. நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம்.

மல்லோ-டமில் மத்தி மீன் குழம்பு.

தேவையான பொருட்கள்: மேலுள்ளதுதான். தாளிக்க எண்ணைய் மட்டும் இம்முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை :

வாயகன்ற மண் சட்டியை (மண் சட்டி இல்லையென்றால் இம்முறையிலேயும் மீன் குழம்பு வைக்கும் திட்டத்தைக் கைவிடவும்) அடுப்பில் வைத்துச் சூடாக்கித் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். வெந்தயம் (வெந்தயப் பொடிக்குப் பதிலாய் வெந்தயமே நாம் பயன்படுத்தலாம்) கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவற்றை வரிசைக் கிரமமாய் போட்டு வதக்கவும். மேற் குறிப்பிட்ட மிளகாய் மற்றும் தனியா தூளைக் கொட்டிக் கிளறி நீரூற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் புளிக் கரைசலை ஊற்ற வேண்டும் ( புளியை அப்படியே இட வேண்டாம்) மீன்களை ஒவ்வொன்றாய் மெதுவாய் குழம்பில் இறக்கவும். மென் தீயில் வைத்துக் கொதிக்க விடவும். இதன் சுவையும் அபரிதமாய்த்தான் இருந்தது. ஆனால் லேசான ருசி வேறுபாட்டை உணர முடிந்ததுதாம் என்றாலும் குழப்பம் ஒன்றும் இல்லை.

இப்போது மல்லு மீன் குழம்பிற்கும் மல்லோ-டமில் மீன் குழம்பிற்குமான செய்முறை வித்தியாசங்கள் மற்றும் ருசி அளவின் விகித உயர்ச்சிகள், தாழ்வுகள் குறித்துப் பதிவு செய்ய வேண்டும். அதை இன்னொரு முறை செய்கிறேன். நீங்கள் இரண்டு முறைகளையும் முயற்சித்துப் பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள். பூமியிலிருந்துதான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Wednesday, September 15, 2010

மன்றாடல்


எனக்கான எதுவொன்றின் ஆசுவாசக் கரங்கள் எப்போதும் அணைத்துக் கொள்ளும் தவிப்புகளோடு விரிந்திருக்கின்றனவோ அவற்றின் தாள் பணியும் அல்லது அவற்றைக் கண்டுணர்ந்து முழுமையாய் அடைக்கலமாகும் பெருமுயற்சிகளே இந்தச் சிறு(மை) வாழ்வுப் பிரயத்தனங்களின் பின்புலமாகவிருக்கிறது என்பதுதான் என் இத்தனை தலை கீழ் பாடுகளின் ஒற்றை வரி விளக்கமாகவிருக்கிறது.

என் ப்ரியத்திற்குரிய ப்ரியமே உன் வடிவம் யாது? உன் பருண்மை என்ன? உன்னொளி என் இருண்மைகளை விரட்டுமா? நீ இப்பிரபஞ்சத்தில்தான் உலவுகிறாயா? உடல் முழுக்க காயங்களைக் கொண்டிருக்கிறேன். எப்போதுமே எதைக் கொண்டும் நிரப்பிடாத இடைவெளியை நானாகவே தருவித்துக் கொண்டிருக்கிறேன். நீ என் மீட்பராய் இருப்பாய். என்னை இரட்சிப்பாய். திசையறியா ஆட்டுக் குட்டிகளின் தாய்மை நீயாமே? என்னைக் காத்தருள். என்னை மீட்டெடு. என் பாவங்களை நீக்கு. தூய வெண்ணிறப் போர்வை கொண்டு என்னை மூடு. உன் சுகந்தத்தில் கண் மூடி நெடு நாள் உறங்க வேண்டும். என்னருகே உறங்கும் என் மகனின் பாதுகாப்புணர்வு எனக்கும் கிட்டட்டும். என் அறிவுக் குப்பைகளென்று நானாய் நம்பிக் கொண்டிருப்பவற்றை நீக்கு. என் போலித்தன்ங்களை களை. என்னை நிர்மூலமாக்கு. என்னை அழி. என்னை ஒரு பள்ளத்தாக்கிலிருந்து தலைக் குப்புறத் தள்ளிவிடு. என்னை இல்லாமலாக்கு என் இறையே. என் காதலே. என் மதுவே.

தூயச் செந்நிற மது நானாவேன். தூய வெண்ணிற மதுவும் நானாவேன். அதிதூய போதையாய் இரு. இருள் கிழிக்கும் ஒளி நானாவேன். ஒளி மூடும் இருள் போர்வையும் நானாவேன். நீ என் ஆதவனாய் சந்திர பிம்பமாய் எப்போதுமிரு. விருட்சம் நான். கிளை நான். இலை நான். சருகு நான். நீ என் வேராய் இரு. நீ என் நீராய் இரு. நீ என் விழுதாய் இரு. என் இறையே, என் காதலே, என் மதுவே, எனக்கான எல்லாமாய் நீ இரு.

இந்தப் பாலையில் அலைகழிகிறேன். தங்க மணல் வசீகரிக்கிறது. ஒளியில் ஜ்வலிக்கும் மணலில் நடக்க நடக்க கால்கள் புதைகின்றன. மூச்சு முட்டுகின்றது. மீள நீண்ட கைப் பிடிகள் யாவும் வழுக்கல்கள். யோசனைகளோடு நீண்ட விரல்கள் யாவிலும் விந்தின் கொடு நாற்றம். இல்லை இல்லை இல்லை என்னை மீட்கும் கரங்கள் இவைகளில்லை. என்னை வெளியேற்றும் விரல்களும் இவைகள் இல்லை. அஃதொரு தூய்மையின் முடிவிலா தாய்மைக் கரங்கள். விரிந்த இரு கரங்கள். நீண்ட விரல்களில்லை. ஒருபோதுமில்லை.

அஃதொரு நதியின் கரங்களை ஒத்திருக்கும். எல்லையிலா விரிவைக் கொண்ட நதியின் கரங்களவை. என் கனவில் வந்ததே. பதறி விழித்தும் விழாமலும் அழுதேனே. அக்கரங்களை நானறிந்தில்லையெனினும் கண்டு கொள்வேன். முன்பொரு பொழுதில் அக்கரங்களின் விரிவு தொடைகளின் மடியாய் விரிந்திருந்தது. என்னை முழுவதுமாய் பொதிந்து கொண்டது. அப்போதுதான் நானழுதேன். முதன்முறையாய். கடைசி முறையாயும். அத்தொடை மடிகளின் கதகதப்பை நானறிவேன். அதன் சாயல்களை நீ கொண்டிருந்தால் கூட போதும். என் இறையே என் மதுவே. நீ இப்பூமியிலா உலவுகிறாய்?

மேகக் கூட்டங்களின் பொதி நீயாமே. வானின் நீலமும் நீயாகவே இருக்க முடியும். கடலும் வானும் சங்கமிக்கும் நீலப் பின் புற ஒளியும் நீதானே? இந்தப் பனிக்கட்டி கரையும் செந்நிறத் திரவம் தரும் கரைசலும், வான் கடல் நீலமும் ஒன்றா? அப்படியெனில் நான் வானைக் குடிக்கிறேன். அப்படி அப்படியெனில் நான் கடலைக் குடிக்கிறேன். நீரில் ஒளிரும் கத்தி மீனாய் பாய்கிறேன். ஆழம் பயம் தருகின்றது. நீல ஆழம் போகப்போக இருளின் ஆழம். நீ ஆழமாய் இரு. ஆனால் நீலமாய் இரு. கருப்பு இருளின் ஆழம் அச்சமூட்டுகின்றது. ஆழம் இருள்தான் எனினும் நீ நீலமாயிரு. எனக்கே எனக்காய் நீல ஆழ இருளாயிரு. என் ப்ரிய ப்ரிய ஆழமே, இருளே, நீலமே.

அறியாதவனாய் கேட்கிறேன் எங்கிருக்கிறாய் நீ? சாவின் வடிவத்திலா இயங்குகிறாய்? மரணம்தான் எப்போதைக்குமான ஆசுவாசமா? எல்லாவற்றையும் குடித்துத் தின்றுச் செரித்துக் கொண்டாடும் வாழ்வல்லவா உனது! உன்னிடம் வந்தவர்களை என்ன செய்வாய்? எப்போதைக்குமான அன்பை அறியத் தருவாயா? ஏய் சாவே, நீ என்னை என்ன செய்வாய்? ஒருவேளை நீ தான் என் இறையா? என் மதுவா? என் காதலா? நீதான் சகலமுமா? என்னை அணைத்துக் கொள்ளேன். உன்னில் பொதிந்து கொள்ளேன். என்னை மூழ்கடியேன், என்னில் திளையேன் அல்லது உன்னில் திளைக்கவிடேன். என் இறையே மதுவே காதலே சாவே.

Monday, August 16, 2010

வ.வெ.தொ.அ.வெ.கு - 9 : அந்தி



வணக்கம் பாஸ். உங்கள இதே இடத்துல பாத்திருக்கேன். நீங்க என்ன கவனிச்சிருக்கீங்களான்னு தெரியல. இங்க எப்பவாச்சிம்தான் வருவேன். என் மூஞ்ச பார்த்த உடனே தெரிஞ்சிருக்கும். இந்தியன். உங்கள கண்டுபுடிக்க கொஞ்சம் சிரமப் பட வேண்டியிருக்கு. துருக்கி தான நீங்க? கணிப்பு தவறாவும் இருக்கலாம். எகிப்தியர்களையும் பாலஸ்தீனியர்களையும் சுலபமா கண்டுபிடிச்சிட முடியுது. இஸ்ரேலியர்களுக்கும் துருக்கியர்களுக்கும்தான் பார்த்த உடனே வித்தியாசம் தெரியல. எதா இருந்தா என்ன பாஸ்?. நீங்க ஒரு சக மனிதர். அவ்ளோதான். எல்லாராலயும் எல்லார் கூடவும் பேசமுடியும்தானே?. எல்லா மனுச பயலுங்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் நிறைய இருக்குதானே?.

இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த கார்னீஷை துண்டிக்கப்பட்ட குட்டிக் கடல்னு சொல்லலாமா? இந்த கரையோர சிமெண்ட் திட்டுல உட்கார்ந்தபடி தொலைவில தெரியும் முழுக் கடலுக்குள்ள மெல்ல இறங்கும் சூரியனைப் பாக்க நல்லாருக்கு இல்லயா? சாயந்திர நேரத்துல வெள்ளை நிறக் கடற் பறவைகள் குறுக்கும் நெடுக்குமா பறக்குறது இன்னும் நல்லாருக்கு இல்லயா?. மேல நீங்க உக்கார்ந்திருக்க பெஞ்சில இருந்து இந்த சூரிய அஸ்தமனத்த நல்லா பாக்க முடியும். நீங்க ஒரு நல்ல ரசனையாளரா இருக்கனும். சரியான இடத்த தேர்வு பண்ணியிருக்கிங்க. ஒரு நாள் நான் இங்க வந்திருந்தப்ப இன்னிக்கு மாதிரியே உங்க இடம் காலியா இருந்தது. உட்கார நினைச்சி அப்புறம் வேணாம்னு என் வழக்கமான இடத்துக்கே வந்துட்டேன். எல்லாருக்குமான இடம்னு ஒண்ணு இருக்கிறத நான் நம்புரேன் பாஸ். எனக்கு என் இடம் போதுமானதா இருக்கு. உங்க இடம் கொஞ்சம் வசதிதான்னாலும் அடுத்த முறை எனக்கு முன்னாடி வந்து நீங்க உட்கார்ந்திட்டீங்கன்னா இப்ப இருக்க இந்த சிமெண்ட் திட்டு என்ன ஏளனமா பாக்கும். இடத்த விடுங்க பாஸ். நான் உங்க கிட்ட என்ன பத்தி கொஞ்சம் பேசனுமே. பேசவா?

இப்பலாம் நான் சரியில்லைன்னு நெனைக்கிறேன். கொஞ்ச வருசம் முன்னால மத்தவங்க யாரும் சரியில்லைன்னு நெனைச்சிட்டிருந்தேன். இப்ப அந்த எண்ணம் மறைஞ்சி போய் நான்தான் சரியில்லைங்கிற நிலைக்கு தாவிடுச்சி. இதுதான் உண்மைன்னும் இப்ப நம்புறேன். புரியும்படி சொல்லனும்னா கொஞ்ச வருஷம் முன்னாடி என்கிட்ட பழகுற மனிதர்கள் எல்லாருமே பயன்படுத்துதல் நிமித்தமாதான் பேசுறாங்களான்னு எப்பவும் துப்பறிஞ்சிட்டே இருப்பேன். யார் மேலயுமே நம்பிக்க வந்ததில்ல. எல்லாருமே திருட்டுப் பசங்க. சுயநலவாதிங்க. எவனுமே ஒரிஜினலா வாழல. எல்லாருமே போலிங்க. டுபாக்கூருங்க. சந்தர்ப்பவாதிங்க. அப்படிங்கிற எண்ணங்கள் இருந்தது. இப்ப அப்படியே தலைகீழா மாறிப்போச்சு. நான்தான் யார்கிட்டயுமே உண்மையா பழகுறதில்லையோன்னு சந்தேகம் வருது. ஏதாவது தேவை இருந்தா பேசுரேன். அதே போல மத்தவங்களுக்கும் ஏதாவது தேவைன்னா என்கிட்ட பேசுறாங்க. யார்கிட்டயாச்சிம் ரொம்ப அன்பா பழகுற மாதிரி தோற்றம் வந்தா கூட உள்ள சிரிச்சிக்கிறேன். ’டேய் என்னமா நடிக்கிறடா!’ன்னு கிண்டல் பண்ணிக்கிறேன். இந்த உணர்வு சில டைம் பயமா, சில டைம் எரிச்சலா, சில டைம் வசதியா இருக்கு. இந்த மன நிலைல இப்பலாம் என்னால யார் மேலயும் பழிபோடமுடியல. அவநம்பிக்கை,துரோகம்ங்கிற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தியே ரொம்ப நாளாச்சி. இதுவும் ஒரு வகைல நல்லாதான் இருக்கு. இந்த பேச்சு எரிச்சலா இருக்கு இல்ல. வேற பேசுவோமா?

நீங்க எவ்ளோ வருஷமா இந்த சூரிய அஸ்தமனம் பார்க்கிற வழக்கத்த வச்சிருக்கீங்க?. நான் இங்க வந்து நாலு வருஷம் ஆச்சின்னாலும் ரொம்ப சமீபமாதான் சாயந்திர நேரத்துல இங்க வரேன். பத்து வருஷம் முன்னால தினம் சூரிய அஸ்தமனத்தை பார்க்கிறத வழக்கமா வச்சிருந்தேன். அப்போ எனக்கு எந்த வேலையும் கிடையாது. கடசி வருஷ தேர்வுகள் எழுதியிருந்தேன். உடனே வேலக்கு போகனும்னு நமைச்சல் எதுவும் இல்ல. ஓசூர்னு ஒரு சின்ன டவுன்ல வசிச்சேன். செலவுக்கு தேவையான பணத்தை அண்ணன் கொடுப்பார். ஒரு நீல நிற சைக்கிள் வச்சிருந்தேன். நிறைய புத்தகங்கள் இருக்கிற நூலகம் ஒண்ணு ஏரிக்கரைய ஒட்டி இருக்கும். மதிய தூக்கம் முடிஞ்சதும் சைக்கிள எடுத்திட்டு நூலகத்துக்கு வருவேன். வழில ஒரு தம் அடிப்பேன். அப்பலாம் ஒரு சிகரெட்டையே பிடிக்க முடியாது லேசா மயக்கம் வரும். ஓசூர் கொஞ்சம் குளிரா இருக்கும். எப்பவும் நல்ல காத்து அடிக்கும்.

இருக்கிறதுலயே பக்கம் அதிகமான புக்கதான் எடுப்பேன். அப்பதான் நிறைய நேரம் போகும். எடுத்திட்டு கொஞ்ச தூரம் போனா ஏரி ஒண்ணு வரும். குண்டும் குழியுமான உயரமான சிறிய தார்ச்சாலை அது. ஒரு பக்கம் ஏரி. இன்னொரு பக்கம் ஒரு குளமும் அதை ஒட்டி ஒரு அம்மன் கோயிலும் இருக்கும். சைக்கிள படுத்த வாக்கில சரிவுல வச்சிட்டு, ஏரி மண் சரிவுல இறங்கி உட்கார்ந்துப்பேன். இந்த ஊர் மாதிரியில்லாம அங்க சாயந்திர வானம் ஏகப்பட்ட வண்ணங்களோட பாக்க ரம்மியமா இருக்கும். சட் சட் னு வண்ணம் மாறிட்டே இருக்கும். இந்த நிறம்தான் அந்தி நிறம் னு சொல்லிடவே முடியாது. சாயந்திர சூரியன் செந்நிறமா? பொன் நிறமா? தெரியல பாஸ். ஆனா பார்த்துட்டிருக்க நான் ரொம்ப தணிவடைஞ்சதா நெனச்சிப்பேன்.

இந்த தணிவுங்கிற வார்த்தை எவ்ளோ நல்லாருக்கு இல்ல. தணிவு. தகித்திருந்த நிலம் தணிவு கொள்கிறது. தணிந்த மாலையில் திரும்பிய சிறுவன். இதெல்லாம் என்னோட பொயட்டிக் இமேஜஸ். இப்படிச் சொல்ல எனக்கே சிரிப்பாதான் இருக்கு. உங்களுக்கு எங்க சூழல் பரிச்சயம் இல்லங்கிற தைரியத்துல அடிச்சி விடலாம்தான். ஆனா எனக்கு இப்ப உங்ககிட்ட உண்மை மட்டுமே பேச தோணுது. நீங்க பருப்பொருளா இங்க இல்லாம இருக்கிறதும் கூட அதுக்கான ஒரு காரணமா இருக்கலாம்.

நண்பன் பினுவோட புகைப்பட கண்காட்சி துவக்க விழாவுல துருக்கிய சேர்ந்த ஒரு பெண்ணை சந்திச்சேன். அவங்க ஒரு ஓவியர். அவங்க கிட்ட நான் தமிழின் பிரபல எழுத்தாளர்னு பினு அறிமுகப் படுத்தி வச்சான். சமீபமா மூணு புக்க ஒரே டைம்ல ரிலீஸ் பண்ணி இருக்கார்னு அவன் சொன்னதும் எனக்கு சிரிப்பு பொங்கிடுச்சி. கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன். ஏன்னா அந்த பொண்ணு அவ்ளோ அழகு. சும்மாவிட முடியுமா? அவன் கொடுத்த பில்ட் அப்பை அப்படியே மெயிண்டெய்ன் பண்ணிக்க வேண்டியதா போய்டுச்சி. அந்த விழா நல்லாருந்தது. ஷாம்பெய்ன் அவ்ளோ போதையா இருக்கும்னு அன்னிக்குதான் தெரிஞ்சது. கண்ணாடிக் குவளை காலியாக காலியாக பணியாளர்கள் நிரப்பிட்டே இருந்தாங்க. பேசுறதுக்கு நிறைய நண்பர்கள் வந்துட்டே இருந்தாங்க. அந்த துருக்கி ஓவியர் கிட்ட ஓரான் பாமுக்க வச்சி ஓட்டிடலாம்னு நினைச்சா அவங்க காறி துப்பாத குறை. நம்ம ஊர் ஜெமோ போல துருக்கிக்கு பாமுக்காம். யாருக்கு தெரியும்?. நான் மை நேம் ஈஸ் ரெட் மட்டும்தான் படிச்சிருக்கேன். இஸ்தான்புல் வாங்கி போட்டதோட சரி. மை நேம் ஈஸ் ரெட்டும் பெரிசா என்ன ஈர்க்கல. இந்த அமெரிக்கா காரனுங்களுக்கு இஸ்லாமை நக்கலடிச்சா போதும் உடனே கையில வச்சிருக்க இலக்கிய அவார்டையெல்லாம் தூக்கி கொடுத்திருவானுங்க. மானங்கெட்டவனுங்க. சரி அவனுங்கள விடுங்க. நாம ஓவியர பத்தி பேசுவோம்.

வெளியில இருக்கவங்களுக்கு தெரியாத துருக்கியின் நிலக் காட்சிகள்,வாழ்வு முறை, கலாச்சாரம் இந்த அடிப்படைல பாமுக்கை ஏத்துக்கிடலாம்னு நான் சொன்னதையும் அவங்க நிராகரிச்சிட்டாங்க. ஒரு நகரத்தை முழுசா தெரிஞ்சிக்க ஆசைன்னா நகுப் மக்ஃபோசை படிங்க. கெய்ரோவோட முழு வரலாறும், கலாச்சாரமும், அழகியலும் மிகை இல்லாம மூணு நாவல்களில பதிவு பண்ணியிருக்கார்னு சொல்லி அவரோட கெய்ரோ ட்ரையாலஜி பரிந்துரைச்சாங்க. அதுல பேலஸ் ஆப் டிசையர அடுத்த நாளே தேடிப் பிடிச்சி வாங்கினேன். அத இன்னும் படிக்கல. அவங்க ரெண்டு நாளிலயே பிரான்ஸ் போயிட்டாங்க. துபாய்லாம் ஒரு நாடான்னு துப்பிட்டு வேற போனாங்க. இனிமே பேலஸ் ஆப் டிசையர படிச்சி ஒரு பிரயோசனமும் இல்லன்னு அத அப்படியே கிடப்பில போட்டாச்சி.

அன்னிக்கு ஜூலியாவோடதான் அதிகம் பேசினேன்னு நெனைக்கிறேன். ஜூலியாவும் ஓவியர்தான். ஸ்பானிஷ். மேட்ரிட்ல வீடு. ஸ்பானிஷ் மேட்ரிட்னுலாம் சொல்லவே நல்லாருக்கு இல்ல. ஜூலியா ஒரு சினிமா பைத்தியம். சினிமா பத்தி வாய் ஓயாம பேச முடியும்ங்கிறதால ஜூலியா கிட்ட இருந்து நிறைய வாவ் கள அன்னிக்கு பெற முடிஞ்சது. அல்மதேவாரோட டை ஹார்டு பேன் வேற. ஜூலியாகிட்ட திறமை காட்ட ரொம்ப சுலபமா இருந்தது. நல்ல போதைல இருக்கும்போது சீனாவை சேர்ந்த க்லே ஆர்டிஸ்ட் ஒருத்தங்க அறிமுகமானாங்க. அவங்க ஒரு பொயட்டும் கூட. லாவோத்சு, சுவாங்க்தஸு, தாவோன்னு அடிச்சி விட முடிஞ்சது. இவங்க மட்டும் அடுத்த நாள் போன் பண்ணி காட்டு நீர் பறவைகள் கவிதை சொன்னாங்க. எனக்கு எரிச்சலா வந்தது. மையமா ஒரு சிரிப்பு சிரிச்சி போன வச்சேன். விழா முடிஞ்சி திரும்பி வரும்போது, நல்ல போதைல பினு சிரிச்சபடியே சொன்னான் “யூ ஆர் அ காட் டேம் கன்னிங் ஃபக்கர்” யெஸ் ஐ ஆம்னு சிரிச்சேன்.

இதான் பாஸ் நான். பயங்கர கன்னிங். சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டுர ஆள். ஆனா பாக்க பூனை மாதிரி இருப்பேன். இதோட இல்லாம பொலிட்டிகலி பயங்கர கரெக்டான ஆள் வேற. எல்லாமே சரியா இருக்கனும்னு நெனைப்பேன். கலாச்சார காவல்களுக்கு எதிரான ஆளா காட்டிக்கிற நான் ஏன் சரி / தவறு பிம்பங்களில விழுறேன்னும் தெரியல. யாராவது விபச்சாரி, கற்பழிப்பு இந்த மாதிரி வார்த்தைகளலாம் பயன்படுத்தினா உடனே பொங்கி சண்டைக்குப் போயிடுவேன். வர்க்க அரசியல், விளிம்பின் அரசியல், அதிகாரப் பரவலாக்கம் இதுலாம் என்னோட பொலிட்டிக்கல் ஸ்டேண்டு. சைக்கிள் ஸ்டேண்டு ஆட்டோ ஸ்டேண்டு மாதிரி. சிரிப்பு சிரிப்பா வருது பாஸ்! தேவ்-டி படத்துல ஒரு காட்சி வரும்.சந்தா சொல்வா சில புரட்சி கேஸ்ங்க இருக்கு அவங்கலாம் பாலியல் தொழிலாளிங்கிற வார்த்தையதான் பயன்படுத்துவாங்க. எவ்ளோ பெரிய உபகாரம்!னு சொல்லி சிரிப்பா. அந்த மாதிரிதான் என்னோட ஒட்டு மொத்த அரசியல் நிலைப்பாடுகளையும் பார்த்து சில டைம் சிரிச்சிக்க வேண்டியதா இருக்கு.

பிரச்சினைகளை விடுங்க. எனக்கு இப்ப வேண்டியது தீர்வுதான். இப்படியிருந்த / இப்படியிருக்க நான் மாறனும். என்னோட இயல்பு, குணம் எதிலயும் முரண் இருக்க கூடாது. எப்படி சிந்திக்கிறனோ அப்படியே இயல்பும் இருக்கனும். சிந்தனை, பேச்சு, எழுத்து, வாழ்வு எல்லாமே ஒரே கோட்ல இருக்கனும். அதுக்கு என்ன பண்னனும் பாஸ்?

எனக்கு பிடித்தமான எல்லா குணங்களும் இருக்க ஒரு முழுமையான மனிதர நான் இதுவரை சந்திக்கவே இல்ல. ஏதோ ஒரு சின்ன நெருடல் அல்லது முழுக்கவே நெருடல் இருக்க மனிதர்களதான் கடந்து வந்திட்டிருக்கேன். என்னோட கனவு மனிதன் பத்தின சித்திரம் ரொம்ப நாளா எனக்குள்ள இருக்கு. உதாரணத்துக்கு சொல்லபோனா எழுத்தாளர் கோபி கிருஷ்ணன், அப்புறம் அகிரா வோட சில கதாபாத்திரங்கள் இந்த மாதிரி ஒரு பெரிய பட்டியலே இருக்கு. நான் இருக்க விரும்புற, மாற விரும்புற குணங்கள ஒவ்வொண்ணா உங்களுக்கு சொல்ரேன் ஆனா இப்ப இல்ல. வேற எப்பவாச்சிம். ரொம்ப பேசிட்டேன். எரிச்சலா இருக்கு. கிளம்புறேன் பாஸ்.

Featured Post

test

 test