Wednesday, December 26, 2007

பிரசவக் குறிப்புகள் அல்லது தாய்மை பற்றிய சிலாகிப்புகள்





கிழிக்கப்பட்ட வயிறு ஒட்டப்பட்டதோ, வெறும் மயக்கம்தானா? வேறேதும் நிகழ்ந்துவிட்டதா எனத் துணையான நண்பன் துடித்துக்கொண்டிருந்ததோ, செவிலிகள் எல்லாம் சேர்ந்து அள்ளிக்கொண்டுவந்து அறையில் போட்டதோ, விடாத குளிரில் வெடவெடத்த உடம்பை அவர்கள் என் உள்ளங்கால் தேய்த்து உஷ்ணப்படுத்தியதோ எதுவும் அறியாத உணர்வற்ற நிலையில் கட்டிலில் கிடந்திருக்கிறேன். எல்லாம் சரியே என சோதித்த மருத்துவர், வலிவந்த நொடிமுதல் என் இன்னொரு தாயாக உடனிருந்த களைப்பில் "காலையில் பார்க்கிறேன். அவள் சரியாக இருக்கிறாள்" எனச் சொல்லி நகர்ந்து நள்ளிரவுதாண்டிய இருளில் மருத்துவமனை வாசல்வரை போயிருப்பார். உடல் அசையாத மயக்கத்திலும் என் உதடுகள் அசைத்துக் கேட்கிறேன் "where is Bonnie?"
"அவர் ஓய்வுகொள்ளப் போயிருக்கிறார், காலை மறுபடியும் உன்னைப் பார்ப்பார், உறங்கு" என்று உடனிருந்தவர்களின் குரல்கள் காதுகளை எட்டவில்லை. தொடர்ந்து அதே பல்லவியை அழுத்தமாகவும் பாடத் தொடங்குகையில் பயந்துபோன செவிலிகள் ஓடிப்போய்ப் பிடித்தே வந்துவிட்டார்கள் தன் வாகனம் கிளப்பிக்கொண்டிருந்த மருத்துவரை. "Yes dear I am here" அது Bonnie யின் குரலாக வந்ததும் மூளைக்கு எட்டுகிறது. "Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான்.

செலவநாயகியின் ஒரு கிறுக்கியாக வாழும் ஆசையிலிருந்து...


பனி படர்ந்த முன்னிரவுகளில் ஆளரவம் அடங்கிய வீதிகளில் சற்றே முன்புறம் சரிந்த வயிறுமாய் தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட ஸ்கார்ப் மற்றும் முழுக்கை ஸ்வெட்டர் அணிந்த மனைவியை நடைக்கு கூட்டிப்போகும் ஆண்களைப் பார்க்கும் போது ஒரு மலர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இன்றைய வாழ்வில் பதினோரு மணி வாக்கில் பூங்காவிற்கு செல்ல நேரிடுகையில் இது போன்ற ஒரு சோடியையாவது பார்க்க நேர்கிறது.ஓசூரில் டைட்டன் குடியிருப்பில் வாழ்ந்த சமயங்களில் பெரும்பாலான இரவுகளில் இதுபோன்ற தம்பதியினரின் அந்நியோன்யத்தை, கிசுகிசுப்பை,குழைவை எதிர்கொள்ள நேர்ந்ததுண்டு.வறண்ட இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு உண்மையான நேசத்திற்கான நம்பிக்கைகளை மீள்பதிவித்துக்கொள்வேன்.

பிரசவிப்பது என்பது உயிர்களுக்கான இயல்பு இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? என்பது போன்ற வறட்டுத்தனமான அணுகுமுறைகளோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை.தாய்மை என்ற ஒரே தனித்தன்மைக்காக மட்டும் ஒரு பெண் எத்தனை அபத்தமானவளாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம் எனத்தான் தோன்றுகிறது. பிரசவங்களை எதிர்கொள்ளும் நேரங்களில் ஏற்படும் பயம் மிக அடியாழத்திலிருந்து எழுவதை அதன் வெளிப்பாட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும். என் பால்யங்களில் கன்றிலிருந்து வளர்க்கப்பட்ட பசுமாடு அதன் கன்றை ஈன்றெடுத்த தருணம்தான் என்னுடைய முதல் பயம், முதல் படபடப்பு, முதல் ஆச்சர்யமுமாய் இருந்தது.ஈன்ற சில நிமிடங்களில் அதன் துள்ளல்களில் கிடைத்த பரவசம் மிக மங்கலாய் நினைவிலிருக்கும் அற்புத நிகழ்வு.

கன்றினுக்குப் பிறகு என் சகோதரியின் பிரசவம்தான் என்னை பயப்படவும் நெகிழவும் வைத்தது.ஒரு நண்பகலில் அரசுமருத்துவமனை வாசலில் இதற்கும் அதற்குமாய் நடந்தபடி புதிதாய் பழக்கமாயிருந்த சிகெரெட்டினை மட்டும் துணைக்கழத்தபடி மனதிற்குள் இல்லாத கடவுள்களையெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தேன்.எனக்குள்ளிருந்த பெண் தன்மைகள் எட்டிப்பார்த்த தருணங்களில் அதுவும் ஒன்று.அவளுக்கு திருமணமான பின்னரும் அபத்தமாய் எதையாவது உளறிக்கொட்டுவது போல் எனக்குப் பட்டால் சத்தமாய் குரலெழுப்பியோ அல்லது மிக மோசமாய் கடிந்துகொண்டோ என் அறிவுஜீவித்தனத்தை நிரூபித்துக்கொள்வேன். ஒன்றிரண்டு முறை அறைந்தும் இருக்கிறேன்.அவளின் பிரசவத்திற்கு பின்பு எத்தனை முட்டாள்தனமாய் அவள் நடந்துகொண்டாலும் அறைய கைகள் எழுவதே இல்லை பின்பு அது கடிந்து பேசுவதையும் நிறுத்திவிட வழிவகுத்தது.பிரசவ தருணங்களில் சாலையில் சிகெரெட் புகைத்துக்கொண்டிருந்த எனக்கே இத்தனை மாற்றங்கள் வந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. கணவர்கள் பிரசவ தருணங்களில் பிரசவ அறைக்குள் மனைவியுடன் இருப்பது மிகவும் தேவையான அவசியமான ஒன்று.பெண்ணை உடல்ரீதியிலான புரிதல்களோடு அணுகுவதன் மூலமே எப்போதுமே மாற்ற இயலாத நம் அடிப்படைத் தன்மைகளை சிறிதளவேணும் குறைக்க இயலும்.

80 திலிருந்து 90 வரைக்குமான தமிழ் திரைப்படங்கள் பெண்களைக் குறிவைத்தே எடுக்கப்பட்டது. தொலைக்காட்சி பெண்களை வீடுகளில் விழுங்குவதற்கு முன்பு வரை பகல் காட்சி முழுக்க திரையரங்குகள் பெண்களைத்தான் நிரப்பி வைத்திருந்தது.அப்போதைய வியாபாரிகள் பெண்களை ஈர்க்க புகுத்திய யுக்திகளில் பிரசவமும் அலைக்கழிப்பும் முதன்மையானது.உணர்ச்சி பொங்கும் தாலி வசனங்கள், இறுதிக் காட்சி தீ மிதிப்பு வகையறாக்களைக் காட்டிலும் இந்த யுக்தி அதிகக் கண்ணீரை வர வைத்தது. கதாநாயகனின் தங்கை, அக்கா, மனைவி களுக்கு பெரும்பாலும் பெரும் மழை கொட்டும் நள்ளிரவுகளில்தான் பிரசவ வலியெடுக்கும் சொல்லிவைத்தார்போல வில்லன்கள் நிறைமாத கார்ப்பிணியை தரையிலிழுத்துப்போவர் பாதி வழியிலேயே குழந்தை பிறக்கும் அந்த பெண் கால்கள் இடையில் இரத்தம் சிந்தி இறந்து போவாள்.பெரும்பாலான திரைப்படங்கள் இவ்வாறுதான் எடுக்கப்பட்டன.இவைகள் பிரசவம் குறித்த பயங்களை ஏற்படுத்தியிருந்தது. பார்வையாளனான எனக்கே இத்தனை பயங்களெனில் பிரசவிக்கும் பெண்ணுக்கு எத்தகைய மன உளைச்சலை இத் திரைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதை யோசிக்கும்போது இவ்வியாபாரிகளின் குரூர முகம் கண்முன் வந்து பெரும் வெறுப்பை உண்டாக்குகிறது.

நண்பனின் தொணதொணப்புகளுக்கு செவி சாய்த்து ஒரு ஆயுள்காப்பிட்டுக்காக வேண்டி மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருந்தேன்.அந்த மருத்துவமனை கிருஷ்ணகிரியின் மய்யத்தில் இருந்தது.கிருஷ்ணகிரி மிகவும் பின் தங்கிய ஏழை மக்களால் நிறைந்தது நான் சென்றிருந்த காலை வேளை ஏகப்பட்ட நோயாளிகளால் நிறைக்கப்பட்டு நிற்க இடமின்றி ஒண்டிக்கொண்டிருந்தேன்.முந்தய தினத்தில் இரவுப் பணி முடிந்து வந்திருந்ததால் சோர்வு அப்பட்டமாய் கண்ணில் மிதந்தது.தேகத்தில் எலும்பைத் தவிர கொஞ்சம் சதைகளையும் கொண்டிருந்த பெண்ணொருத்தி தன் பருத்த வயிற்றுடன் மாடிப்படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.கையில் குளுகோஸ் பாட்டிலோடு அப்பெண்ணைத் தாங்கியபடி ஒரு செவிலியும் குறுகலான படிக்கட்டுளில் இறங்கி வந்துகொண்டிருந்தாள் இந்த நிலையில் இப்பெண்ணை இம்மாதிரி கொண்டு வருகிறார்களே எனப் பதைத்து பார்த்துக்கொண்டிருந்தபோதே அப்பெண் சறுக்கி விழுந்தாள். சின்னதாய் ஒரு கூச்சல் அப்பெண்ணின் பனிக்குடம் உடைந்ததை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சியில் படபடப்பாய் வந்தது நின்றுகொண்டிருந்த நான் மயங்கி விழுந்தேன்.அந்த பெண்ணை ஒரு மருத்துவர் கூட்டமும் என்னை சில மருத்துவர்களும் சூழ்ந்து கொண்டனர் கண் விழித்துப் பார்த்தபோது என்னை ஒரு பெஞ்சில் கிடத்தியிருந்தனர் வெட்கமும் அவமானமும் ஒரு சேர பிடுங்கித் தின்றது.சுற்றி இருந்த வலிய நெஞ்சினர் கொல் லென சிரித்தனர்.அந்த மருத்துவர் இந்த மாதிரி இருக்கியே எனக் கடிந்து கொண்டார்.அதற்குப் பின் மருத்துவமனைக்கு செல்வதையே நான் பெரும்பாலும் தவிர்த்து வந்தேன்.

இந்த பயங்களுக்கு யார் காரணம் எனத் தெரியவில்லை.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மை சிதைத்துக்கொண்டிருக்கிறது வணிக ரீதியிலான வெகுசன ரசனைகள்.

Tuesday, December 25, 2007

பெண்களின் நகரம்- கட்டற்ற சுதந்திரத்தின் களி நடனம்


Città delle donne, La (1980) aka The City of Women

"It's the viewpoint of a man who has always looked at woman as a total mystery, not only as the object of his fantasies, but as mother, wife, lady in the drawing room, whore in the bedroom, Dante's Beatrice, his own personal muse, brothel entice--and more. He projects onto her all of his own fantasies."

- felini
ஆறு மாதங்களுக்கு முன்பு என்னால் இத் திரைப்படத்தை 30 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாய் பார்க்கமுடியவில்லை.(அப்பட்டமான ஆணியவாதியான என்னால் முப்பது நிமிடங்கள் பார்க்க முடிந்ததே அதிசயம்தான்)எந்த ஒரு ஆணாலும் இப்படத்தை எவ்வித அதிர்வுகளும் இல்லாது பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இருபத்தேழு வருடங்களுக்கு முன்னால் இத்திரைப்படம் அபூர்வ புனைவுத் தன்மையோடு எடுக்கப்பட்டிருப்பது பெரும்
ஆச்சர்யத்தைத் தந்தது ஃபெலினியின் மற்றத் திரைப்படங்களான Nights of Caribea, La strada போன்றவற்றில் காணமுடியாத புதிய பரிமாணம் மேலும்
பரவசத்தைக் கூட்டியது.

ஒரு ரயில் பயணத்திலிருந்து துவங்குகிறது படம் Snàporaz தனது இருக்கைக்கு எதிரில் மிகக் கவச்சியான ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவளது கிளர்வில் மயங்கி பின் தொடர்ந்து கழிவறையில் முத்தமிடுகிறான்.ஏற்கனவே இரண்டு ஆண்களால் என்னைத் திருப்தி படுத்த முடியவில்லை உன்னால் முடியுமா? எனக்கேட்டு அவனை மேலும் கிளர்த்துகிறாள். அவன் கலவிக்கு தயாராகும் சமயத்தில் ரயில் நிற்கிறது. அவள் அவனை விலக்கிவிட்டு இறங்கிப்போகிறாள்.அவளிடமிருந்து விடுபடமுடியாது அதே இறக்கத்திலிறங்கி அவளைத் தொடர்ந்து போகிறான் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த காட்டினை நோக்கிச்செல்கிறாள் விடாது பின் தொடர்ந்து முத்தமிடும் அவனை போக்குக் காட்டி மறைந்து விடுகிறாள்.சிறு அலைவிற்குப் பிறகு ஒரு ஓட்டலை காண்கிரான் அதில் உள்நுழைபவன் ஆச்சர்யத்தில் உறைந்து போகிறான் அந்த ஓட்டல் முழுக்க ஏகப்பட்ட பெண்கள்.முற்றிலும் பெண்களாலான ஒரு உலகம்.

கும்பல் கும்பலாய் எங்கு பார்த்தாலும் பெண்கள் ஓரிடத்தில் கூட்டமாய் குடித்து சிரித்து மகிழ்கிறார்கள்.இன்னொரு கும்பல் ஆண் குறிகளை
கேலிச்சித்திரங்களாக வரைந்து அவற்றைத் திரையிட்டு கிண்டலடித்து மகிழ்கிறார்கள். இன்னொரு பெண் ஆவேசமாய் பேசுகிறாள்.ஆண்கள் தங்களை அடிமையாக்கிய துயரங்களை கோபம் கொப்பளிக்க உரக்க கத்துகிறாள் .காமத்திற்கு ஆணை நம்பியிருக்கத் தேவையில்ல சுய புணர்வும் ஓரினப் புணர்வும் மட்டுமே பெண் விடுதலைக்கான ஒரே வழி என சத்தமாய் பிரசங்கிக்கிறார்கள்.இல்லத்தரசிகள் எவ்வாறு குடும்பம் என்ற கட்டமைப்பில் சிதைக்கப்படுகிறார்கள் குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள், ஆணின் காமம், உணவு, என எல்லாவற்றையும் ஒரு குடும்பப் பெண் எப்படி சமாளிக்கிறாள் என்பதை கேலி நாடகங்களாக நடத்திக் காண்பிக்கிறார்கள்.ஆறு ஆண்களை மணந்த பெண்ணொருத்தியை அழைத்து வந்து அவளின் பிரசங்கத்தைக் கேட்கிறார்கள். கைத் தட்டி மகிழ்கிறார்கள். ஆறு ஆண்களையும் மேடையிலேற்றி மகிழ்ந்து போகிறார்கள்.

இதையெல்லாம் திகிலோடு பார்த்துக்கொண்டிருக்கிற நம் ஹீரோ வை அலேக் காக கடத்தி பனிச்சறுக்கு மைதானத்தின் நடுவில் விட்டு குறுக்கும் நெடுக்குமாய் மிக விரைவாய் சறுக்கி விளையாடி பயமுறுத்துகிறார்கள். பயந்து போய் கத்துபவனை பின்னாலிருந்து மிக வேகமாய் தள்ளி விடுகிறாள் ஒருத்தி, படிக்கட்டுகளில் தடுமாறி கீழ்தளத்திற்கு சென்றடையும் அவனை வயதான பெண்ணொருத்தி காப்பாற்றுவதாய் கூட்டிக்கொண்டு போய் வயலின் நடுவில் வைத்து கலவிக்கு பலவந்தப் படுத்துகிறாள் அலறியடிக்கும் அவனை அப்பெண்ணின் தாயார் வந்து
காப்பாற்றுகிறாள். ஒரு சிறுமியிடம் ஒப்படைத்து அருகிலிருக்கும் ரயில் நிலையத்தில் சேர்த்துவிடும்படி பணிக்கிறாள்.

பாதி வழியிலேயே மித மிஞ்சிய போதையில் இளம் பெண்களின் கூட்டம் இரண்டு கார்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது ஒருவழியாய் காரில் ஏறும் அவனை மிக வேகமாய் செலுத்தி பயமுறுத்துகிறார்கள் கீழிரங்கி ஓடுபவனை தொடர்ந்தும் விரட்டியுமாய் மகிழ்கிறார்கள். ஒரு புதரில் மறையும் அவனை
காப்பாற்றுகிறான் இன்னொரு ஆண்.(Dr. Xavier Katzone) கையில் துப்பாக்கி கொண்டு அந்த பெண்களை விரட்டியடிக்கிறான் எதற்கும் பயப்பட வேண்டாம் எனச் சொல்லி தன் வீட்டில் தங்க வைக்கிறான்.

Dr. Xavier Katzone ன் பிறந்த நாள் விழாவில் அத்தனை பெண்களும் கலந்துகொள்கிறார்கள். மதுவினால் நிறைகிறது கூடம்.அந்த
கேளிக்கைகளுக்கு நடுவில் Snàporaz ன் மனைவியும் இருக்கிறாள்.அவளைப் பார்த்து அதிர்ச்சியடைபவன் அவளை திரும்பிப்போக பணிக்கிறான் அவனது
அதிகாரங்களை அடக்குமுறைகளை மிகுந்த ஆவேசத்துடன் எதிர்க்கிறாள் அவனைப் பழி வாங்கப் போவதாய் சொல்லியபடி குடிக்க ஆரம்பிக்கிறாள்.இரண்டு பெண்கள் அவனை திருப்தி படுத்த வருகிறார்கள். நடனமாடுகிறார்கள் கலவிக்கு முயற்சித்து தோற்று நீளமான சறுக்குப் பாதையில் சறுக்க ஆரம்பிக்கிறான் வளைந்து நெளிந்து செல்லும் அதில் மிக வேகமாய் சறுக்கியபடி எங்கிருந்தோ கீழே விழுகிறான்.வழி முழுக்க பெண்கள் அவனை பயமுறுத்துகிறார்கள்.வெறும் பெண்கள் மட்டுமே நிறைந்த பெரிய விளையாட்டுத் திடலில் இவனை ராட்சத பலூனொன்றில் கட்டி மேலே அனுப்புகிறார்கள் சிறிது தூரம் சென்றதும் அப்பலூனை குறிபார்த்து சுடுகிறாலொருத்தி தவறி ஒரு தளத்தில் விழுபவனை அந்த வயதான பெண் வரவேற்கிறாள்.

இப்போது ரயில் மீண்டும் வருகிறது snaporaz ஆரம்பக் காட்சியில் அமர்ந்திருப்பது போன்று அமர்ந்திருக்கிறான் எதிரில் அவனது மனைவி அமர்ந்திருக்கிறாள்.நடந்ததெல்லாம் கனவு என மகிழ ஆரம்பிக்கும்போது அந்த கேபினில் நுழையும் மூன்று பெண்கள் அவன் கனவில் வந்தவர்களாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறான்.அப்பெண்கள் கள்ளமாய் சிரித்துக்கொள்வதோடு படம் முடிகிறது.

ஏகப்பட்ட அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்திய இத்திரைப்படத்தை சர்ரியலிச சினிமாவில் வகைப்படுத்துகிரார்கள்.இங்க்மர் பெர்க்மெனும் ஃபெலினியும் இணைந்து இத்திரைப்படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார்கள்.ஆனால் எங்கெடுப்பது என்ற சிக்கல் பிரதானமாய் இருந்திருக்கிறது.ஃபெலினி இத்தாலியிலும் பெர்க்மென் ஸ்வீடனிலும் எடுக்கவேண்டும் என பிடிவாதமாய் இருந்ததால் சில வருடங்களுக்குப் பிறகு ஃபெலினி தனியாகவே இத்தாலியில் எடுத்தார்.பெண்ணின் யுகாந்திர அடக்குமுறைகளை மிக ஆக்ரோஷத்துடன் உடைக்க முனைந்த முயற்சி எனத்தான் எனக்குத் தோன்றியது.ஆனால் எதிர் பெண்ணியவாதம் எனவும் ஃபெலினி விமர்சிக்கப்பட்டார்.பெண்கள் இத்திரைப்படத்தை தனியாய் பார்த்து எல்லாரையும் பழிவாங்கிய திருப்தியடைந்துகொள்ளலாம்.பலவீனமான இதயம் உள்ள ஆண்கள் இத்திரைப்படத்தை தவிர்ப்பதே நல்லது.

கேள்விகள் பெருகித் தீர்வுகள் கிடைத்த மாலையில் எழுதப்பட்ட சில சிதறல்கள்

உன் அலட்சியங்களை எதிலாவது வைத்துப் பூட்டிவிடலாமா?
உன் சிந்தனைகளை என்ன செய்வது?
உன் கிண்டல்களை
எள்ளல்களை
புரிதல்களை
எல்லாம் தெரிந்து வைத்திருப்பதை
ஒற்றைச் சொல்லில் முழுசாய் நிராகரிப்பதை
என்ன செய்வது?
என்ன செய்வது?
என்ன?
என்ன?
குழம்பிப்போய்
தெளிந்து
பின் குழம்பி
உன்னை வசமாக்க
புலம்ப
காத்திருக்க
தவிக்க
உன்னுலகத்தைச் சிறைப்படுத்த
குறுகலாக்க
பைத்தியமாக்க
காதலைப் பிரயோகிக்கலாமென்றிருக்கிறேன்
என்னுடைய முலைகள் கவர்ச்சியானது
மேலும் எனக்கு அழகான உதடுகளும் உண்டு
நீ என்ன பெரிய மசிராடா?

............................******.........................................

யாரிடம் நிரூபிக்கலாம்?
எவரை பயமுறுத்தலாம்?
எவர் தலையில் ஏறி உட்காரலாம்?
யாரை நசுக்கலாம்?
குத்திக் கிழிக்க மென்மையான சில உடல்கள் எதிர்படுமா?
முளைக்கத் தொடங்கிய கொம்பின் நமைச்சல்கள்
மிகவும் அருவெருப்பானது

...............................******.........................................

எப்படியாவது என்னை அடையாளங் கண்டு கொள்கிறாய்
அல்லது
உனக்கு முன்னர்
நானும் என்னை அடையாளங் கண்டு கொள்கிறேன்
இது இதற்காகத்தான்
இது இதனால்தான்
பல்லிளிப்பின் பின்னாலிருப்பது எல்லாமும்
ஆடை விலக்கிப் பார்க்கும் குறி /யோனி நமைச்சலின்
நாகரீக வடிவமன்றி
வேறெதுவும் இல்லை

...............................******.........................................

ரகசியங்களைத் தெரியும்படி புதைத்துவைப்பதின்
பின்னாலிருக்கும் குறுகுறுப்புகள்
தெரியாமலில்லை
மறுத்தலின்
ஒளிதலின்
புரியாமலிருப்பது போன்ற பாவனைகளின்
அரசியலெல்லாம்
கண்டுபிடித்தலின்
தேடுவதின்
கிறங்குவதின்
மீதிருக்கும் வேட்கைகள்தான் என்பது
எனக்கும் தெரியும்
இருப்பினும் புரியாமலிருப்பது போன்ற நாடகத்தினை
இருவரும் சேர்ந்தே நடத்துவோம்
குறைந்தபட்சம்
கலவிக்கு முன்னாலான
சில காட்சி இன்பங்கள்
பாழாய்ப் போன உடலுக்கு
மிகவும் இன்றியமையாதது

............................******.........................................

கருப்புக்குழந்தையொன்று
உன்னை முத்தமிடுவதை
தொலைபேசியில் கேட்டேன்
இன்றென் மாலையை யாரோ
ஆசிர்வதித்திருக்கக்கூடும்

............................******.........................................

Sunday, December 23, 2007

பூமியிலிருக்கும் குட்டி நட்சத்திரங்கள்



இந்த இருள் எத்தனை பயத்தை தருகிறது என்பதை
நான் ஒருபோதும் உன்னிடம் சொன்னதில்லை அம்மா!
நான் உன் மீது எத்தனை கவனமாயிருக்கிறேன் என்பதையும்
ஒருபோதும் சொன்னதில்லை அம்மா!
ஆனால் உனக்கு தெரியும் இல்லையா அம்மா?
உனக்கு எல்லாமே தெரியுமே என் அம்மா!

என்னை இந்த கூட்டத்தில் தனியே விட்டுப் போகாதே
வீட்டுக்குத் திரும்பும் என் வழியை மறந்துவிடுவேன்
நினைத்துக்கூட பார்க்க இயலாத
தொலைதூரங்களுக்கு என்னை அனுப்பாதே
நான் அந்த அளவு மோசமா அம்மா?
நான் அந்த அளவு மோசமா என் அம்மா?
(....Tujhe sab hai pata,meri maa )

குழந்தைகளின் உலகம்தான் எத்தனை அற்புதமானது! அவர்களின் விழிகளில் தென்படும் அத்தனைக் காட்சிகளுமே ஆச்சர்யங்கள்தாம். பிரபஞ்சத்தை முழுக்க உள்வாங்கியபடி இருத்தலியத்தின் பிரதான வடிவமாய் திகழ்வது குழந்தையாகத்தான் இருக்கமுடியும்.அறிவு,புத்திசாலித்தனம் போன்ற மாபெரும் அரக்கர்கள் வசமாகும்வரை குழந்தமைகளின் உலகம் கடவுள்தன்மைக்கு மிக நெருக்கமானது.

இஷானுக்கு எதிலும் பயமில்லை.எல்லாமும் ஆச்சர்யங்கள்தாம்.பனித் துண்டங்களை செய்பவனின் நேர்த்தி, தண்ணீரை அண்ணாந்து குடிப்பவனின் திறமை,ரெயில்வே கிராதிகளில் ஓ வென இரைச்சலோடு விளையாடும் குழந்தைகள் இவைகளை விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருப்பான். பாடங்கள்,மதிப்பெண்கள் மற்றும் பிறரால் ஒழுங்கு என சொல்லித் தருபவைகளைப் பற்றி எந்தக் கவலையுமில்லை. அவனது உலகத்தை மீன் குஞ்சுகளாலும், நாய்களாலும், பறவைகளாலும், வண்ணத்துப் பூச்சிகளாலும், வண்ணங்களாலும் நிரப்பி வைத்திருக்கிறான். இஷான் தன் கவனத்தை செலுத்திப் படிக்க முனைந்தாலும் எழுத்துக்கள் நடனமிடத் துவங்குகின்றன. அதன் நடன அசைவுகளில் அவனால் சரியாக எழுத்துக்களைத் தடம் காண முடியாமல் போய்விடுகிறது.மேலும் அவனால் ஒரே சமயத்தில் மூன்று நான்கு கட்டளைகளை செயல்படுத்த முடியாது. தமிழ் புத்தகத்தில் நாற்பதாவது பக்கத்தில் நான்காவது பத்தியில் மூனறாவது வரியைப் படி என்றால் தவித்துப்போவான்.தன்னை நோக்கி விரைந்து வரும் பந்தினைக்கூட அனுமானித்துக் கையில் பிடிக்க முடியாது. (இதற்கு dyslexia என்று பெயர்)


அவனது பிரச்சினைகளை அடையாளம் காண முடியாத பெற்றோரும் ஆசிரியர்களும் அவனை முட்டாள் என்றும் பிடிவாதக்காரனென்றும் பழிக்கிறார்கள்.இந்த மிக வேகமான உலகத்தில் இத்தகைய குணங்களோடு ஒரு மனிதனால் எப்படி உயிர் வாழ முடியுமென பயப்படுகிறார்கள்.முடிவில் பலவந்தமாய் அவனை ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்க்கிறார்கள்.ஒன்பது வயதில் ஒரு சிறுவன் தனித்து விடப்படுவது மிகக்குரூரமானது. எதிர்காலம், படிப்பு, என்னும் பெயர்களில் குழந்தைகளை விடுதிகளில் அடைப்பதை விட மிகப்பெரிய வன்செயல் எதுவும் இருக்க முடியாது.


சிறுவர்களை மய்யமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் extreme close-up shot கள் நேரடியாக மனதைத் தைக்க வல்லது. இந்தப் படத்தில் பெரும்பான்மைக் காட்சிகள் மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது இஷானாக நடித்திருக்கும் சிறுவன் தன்னுடைய முக பாவணைகளின் மூலம் அவனது உலகத்திற்கு நம்மைக் கொண்டு போய் விடுகிறான்.அந்த முன்பற்களும், அழுக்கான ஆடைகளும், ஆச்சர்யமான பார்வைகளும், எதற்கும் பயப்படாத அந்த பாவனைகளும், மிகச் சிறப்பாய் வந்துள்ளது.தாயை விட்டுப் பிரிந்தபின் ஏற்படும் பயத்தையும், நெருக்கமற்ற சூழல் ஏற்படுத்தும் கசப்பையும் மிக அழகாய் வெளிப்படுத்தியுள்ளான்.


இடைவேளையில் வரும் அமீர்கான் அந்தச் சிறுவனை அவனது உலகிலிருந்து மீட்டெடுக்க பெரும் சிரத்தை எடுக்கிறார்.அவனுக்குள்ளிருக்கும் அழகான ஓவியனை அடையாளம் கண்டுபிடித்து அதை எல்லாருக்கும் உணரவைக்கிறார்.கற்பித்தல்களில் புதியமுறைகள், தாமஸ் ஆல்வா எடிசனிலிருந்து அபிஷேக் பச்சன் வரை இந்த dyslexia நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்தாம் என்பன போன்ற மேற்கோள்கள் அவனை அவனது உலகிலிருந்து பெயர்த்தெடுக்க உதவுகிறது. அவனுக்காக தன் அத்தனை ஆற்றல்களையும் செலவிடுவதன் மூலமாக அவனின் துயரமான நம்பிக்கையற்ற உலகிலிலிருந்து வெளிக்கொண்டு வருகிறார்.


மிகக் குறைந்த கதாபாத்திரங்கள், கச்சிதமான நடிப்பு, உறுத்தலில்லாத இசை, அழகான ஒளிப்பதிவென படம் மிக நேர்த்தியாய் வந்திருக்கிறது.மிக மோசமான ஆசிரியர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் அமீர்கான் வந்ததும் தடாலடியாய் மாறிவிடுவது சற்று செயற்கையாய் இருந்தாலும் ஒரு வித நெகிழ்வுத் தன்மைக்கு பார்வையாளர்களை கொண்டு சென்றுவிடுவதால் லாஜிக்குகளை யோசிக்க முடியவில்லை.கடைசி பதினைந்து நிமிடங்களில் உள்ளிருந்து மிகக் கனமாய் ஏதோ ஒன்று பெருகி தொண்டையை அடைத்துக் கொள்கிறது.அதற்கு பெயர்தான் நல்ல சினிமாவாக இருக்க முடியும்.


அமீர்கானுக்கு இறுக்கமான ஒரு Hug.....

Tuesday, December 18, 2007

வலைப்பதிவு விருதுகள் - வடிகட்டின அபத்தம்

மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல கம்பீரம் வீசுகிறது...
சுகிர்தராணி
சங்கமம் என்றொரு புதிய பக்கம் சிறந்த வலைப்பூக்களைத் தேர்வு செய்ய வந்திருக்கிறது 17 பேர் அடங்கிய நடுவர் குழுவின் பெயர்களையும் வெளியிட்டிருக்கிறது.போட்டிகளை அதிகமாக்குதல், பிளவுகளைக் கொண்டுவருதல், வியாபாரமாக்குதல் போன்ற அதிகார மய்யங்களின் துவக்கங்கள் இவ்விதமான பாகுபாடுகளின் அடிப்படையிலிருந்துதான் துவங்குகிறது. மோகன்தாஸ் கேட்பது போன்று சிறந்தது தாழ்ந்தது என்பதை சொல்ல இவர்கள் யார்?எதை நிரூபிக்க அல்லது யாரிடம் பெயர் வாங்க இங்கே எழுதுகிறோம்?ஆயிரம் பதிவர்களில் ஐந்து பதிவர்கள்தான் சிறந்தவர் என்பதை நிரூபிப்பதன் மூலமாக இவர்கள் அடையப்போவது என்ன?முதலில் வலைப்பூ என்பதென்ன?என்றெல்லாம் கோபமான சிந்தனைகள் எழ இந்த அறிவிப்புகள் தூண்டுதலாய் இருக்கிறது.

வலைப்பூ என்பது நமக்கு ஒரு வடிகால் நம் சிந்தனைகளை எழுத்துக்களாக்கிப் பார்க்குமொரு இடம். இதில் என் சிந்தனை சிறந்ததென்றோ அடுத்தவர் சிந்தனை தாழ்ந்தது என்றோ எதுவுமில்லை.புதியவர்களை ஊக்குவிப்பது என்ற பெயரில் கிளம்பி வந்திருக்கும் இந்த பூதம் 5 ஐ திருப்தி படுத்திவிட்டு 995ஐ நோகடிக்கும் ஒரு முயற்சியே.வலைப்பூ போட்டிகளுக்கு அப்பாற்பட்டது. இது போன்ற முயற்சிகள் எழுதிக்கொண்டிருப்பவர்களை ஊக்குவிக்கும் என எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?

நம் சூழலில் விருதுகள் என்பது இதுவரை ஒற்றைப்பரிமாணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளது. எது சிறந்தது என்பதை தீர்மானிக்கும் தகுதி நம் சூழலில் எவருக்கும் இல்லை அல்லது அப்படித் தகுதியுள்ளோர் எவரும் முன்வருவதில்லை. இலக்கியம், கலை, சினிமா, அரசியல் என எவ்வித வடிவமாயிருந்தாலும் அதில் சிறந்தவர் என நாம் எப்போது ஒத்துக்கொள்ளுகிறோமென்றால் சம்பந்தபட்டவர் இறந்தபிறகுதான்.இதற்கான அடிப்படைக் காரணம் தேர்வுக் குழு என குழுமும் ஒருசிலரின் குறுகிய பார்வையே.இந்த ஒரு சில மாகாத்மாக்கள் கூடி அவரவர் அறிவுக்கு ஏற்றார்போல சிலதை அடையாளப்படுத்திவிடுவதே நம் வழக்கமாய் இருந்துவருகிறது.இதற்கான உதாரணங்களை நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காதென்றே நினைக்கிறேன்.(வைரமுத்துவிலிருந்து பேரரசு வரைக்குமாய் இதுவரை தரப்பட்ட விருதுகளில் எங்கிருக்கிறது செறிவு?)

சங்கமம் என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் நுட்பங்களை புரிந்துகொள்ளமுடியாமல் இல்லை.பிரதிகளின் ஊடாய் இழையோடியிருக்கும் அரசியலின் தடம் பற்ற துணிபவன் இன்றைய வாசகன். எனவே சங்கமத்திற்கு பின்னாலிருக்கும் திரட்டியினுக்கான தன்முனைப்புகளை இனம் காண்பது எளிதே. தமிழ்வெளி போன்றோ மாற்று போன்றோ தமிழில் திரட்டிகள் பெருகுவது வரவேற்கத்தக்க ஒன்றே புதிய திரட்டி என்கிற நேரடி அறிமுகத்தோடு வருவதற்கு பதிலாய் இதுபோன்ற வலைப்பதிவு விளையாட்டுக்களில் ஈடுபடுவது தேவையற்றது.

பரிந்துரைகள் மூலமாக தேர்வு செய்யப்போகிறோம் என்றோ.. புதுவித திட்டங்களை அறிமுகப்படுத்தி பதிவர்களிடமிருந்து பதிவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்றோ உங்களின் விளக்கங்கள் இருக்குமானால் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவர்களை காயப்படுத்தும் ஒரு முயற்சியே.
என்னளவில் இந்த ஆண்டின் சிறந்த வலைப்பூ என்னுடையது. என்னைப்போன்றே இந்த வருடம் எழுத வந்திருக்கும் மற்றவர்களுக்கும் அவரவர் வலைப்பூ சிறந்தது.இதில் நீங்கள் வந்து சொல்ல எதுவுமேயில்லை.ஊக்குவிக்க விரும்பினால் போட்டிகளை நடத்துங்கள் பரிசுகளை கொடுங்கள் விருப்பமுள்ளவர் கலந்துகொண்டு வெற்றிபெறட்டும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளட்டும்.வெகுசன அரசியல் சாக்கடைகள் எதுவும் கலந்திடாது வலைப்பூக்கள் அதனதன் சுதந்திரத்தில் சந்தோஷமாய் இயங்குகிறது உங்களின் சொந்த நலனுக்காக/அடையாளத்துக்காக இதில் வேட்டு வைக்காதீர்கள் நண்பர்களே...

கடைசிக் குறிப்பாய் என் வலைப்பூவினை யாரும் பரிந்துரைக்க வேண்டாம் என நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

Monday, December 17, 2007

துபாய் திரைப்பட விழா - நானும் பத்மப்ரியாவும் ஆசிப்பும் அடூரும்


என்னளவில் இந்தத் திரைப்படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.ஒரு புதிய முயற்சி மற்றும் நேர்த்தியான சினிமா என்கிற அடிப்படையில் படத்தை அணுகலாம்.ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணன் என்கிற பெயர் ஏற்படுத்தியிருக்கும் hype ற்கான தனித்தன்மைகள் எதுவும் இத்திரைப்படத்தில் இல்லை.அடூரிடம் பார்வையாளர் அரங்கிலிருந்து கேட்கப் பட்ட முதல் கேள்வி.. இது ஆண்களுக்கெதிரான இன்னொரு பெண்ணிய படமா? என்பதுதான் அடூர் இதை மறுத்தார் இது பெண்ணியம் பேசும் படமில்லை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலான மக்களின் வாழ்வு வெவ்வேறு சிறுகதைகளாக பதிவிக்கப் பட்டிருக்கிறதே தவிர இது ஆண்களுக்கெதிரான படமில்லை என்றார்.
சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன ஏன் மீண்டும் மீண்டும் பெண்ணையே சுற்றி வருகிறது சினிமா? என்கிற கேள்விக்கு தனக்கு தெரிந்த நன்கு பழக்கமான ஒன்றை பதிவிக்கவே தான் விரும்புவதாகவும் மற்ற பிரச்சினைகளைப் பேச வேறு இயக்குநகள் இருக்கிறார்கள் எனவும் எனக்கு உண்மைகளைத் திரைப்படமாக்க மிகவும் பிடித்திருக்கிறது எனவும் பதில் சொன்னார்.இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள்.. இருப்பினும் இன்னும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடக்கிறதே..இந்த நிலை எப்போது மாறும் என நினைக்கிறீர்கள்? எனும் இன்னொரு கேள்விக்கு இந்த கதைகள் 1935க்கும் 1945க்கும் இடையிலானது அப்போது கல்வித்தரம் மேம்பட்டிருக்கவில்லை.இப்போது நகரம் சார்ந்த பெண்களின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன எனினும் இந்த கிரமப்புறம் சார்ந்த பெண்களின் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை அந்த நிலை மாறலாம ஆனால் அந்த மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்றார்.அத்தோடு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரள மாநிலம் பெண்களுக்கு மேம்பட்டதாய்த்தான் இருக்கிறது பெரும்பாலான பெற்றோர்கள் ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை இருவருக்கும் சம கல்வியைத்தான் தருகிறார்கள் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என்றெல்லாம் கேரள சிறப்புகளை சொன்னார்.




தன் திரைப்படம் வெளியிடப்பட்ட திரைப்பட விழாக்கள் அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக சிலாகித்துக் கொண்டார்.அத்துடன் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க நடிகை,நடிகர்கள் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டுவார்கள் இத்தனைக்கும் நான் எத்தனை சம்பளம் என்றெல்லாம் கேட்பதில்லை சொல்லப்போனால் சொற்பமான சம்பளம்தான் ஆனால் எப்படியும் தந்துவிடுவேன் என்றார்.
சிலரின் சிலாகிப்புகளுக்குப் பிறகு வெளியில் வந்த அவரை நானும் ஆசிப்பும் ஓரம்கட்டினோம்.நான் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டிருந்த குறியீடுகளைப் பற்றி (symbolic images) கேட்டேன். இத்திரைப்படத்தில் குறியீடுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றார்.கடைசிக் குறும்படத்தில் நந்திதாவினுடைய தாயின் மரணத்தின்போது ஒரு காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிக்கப்படுமே அதென்ன? என்றேன் அதற்கு அவர் தென்னை மரம் மனிதர்களோடு மிகவும் நெருக்கமானது குடும்பத்தில் மூத்தவர் இறக்கும்போது காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிப்பது வழக்கம் என்றார் (இதைத்தானே குறியீடு என்றேன் ..என்னவோ)The spinster குறும்படம் முடியும்போது உலை கொதிப்பது போன்ற சப்தம் வரும் இது நந்திதாவின் மனதை பதிவிக்கிறதா என்றதிற்கும் இல்லை என மறுத்துவிட்டார்.அந்த சமயத்தில் அந்த இசை இருந்தது இசையை திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதோடு என்னால் ஒத்துப்போக முடிந்தது.




பத்மப்ரியாவை ஆசிப் முற்றுகை இட்டார். சேரனின் தவமாய் தவமிருந்து பேச்சைத் துவங்க வசதியாய் இருந்தது. படம் மிக லெந்தியாச்சே என்றும் விருதுக்காக தனியாய் எடுக்கப்பட்டதிலும் நாந்தான் நடித்தேன் என்றுமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.குட்டியான கருப்புநிற ஆடையில் பத்மப்ரியா அழகாய்த்தான் இருந்தார். நடிக்கத் தெரியவில்லை.. ஆம்பளை மாதிரி இருக்கு... என்றெல்லாம் கமெண்டின அந்த இயக்குநரை ரெண்டு மிதி மிதிக்கலாம் என மனசில் கறுவிக்கொண்ட்டேன்.shall i take a picture with u priya? என்றதற்கு சந்தோஷமாய் இசைந்து என்னுடனும் ஆசிப்புடனும் படமெடுத்துக்கொண்டார். அடுத்தபடமான சந்தோஷ் சிவனின் Before the Rain க்காக ஆயத்தமானோம்.சொற்ப நேரமே இருந்ததால் ஸ்டார்பக்ஸில் லஞ்சை முடித்துக்கொண்டு இருக்கைகளுக்கு திரும்பினோம்.

Sunday, December 16, 2007

துபாய் திரைப்பட விழா - நாலு பெண்கள்

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பத்மப்பிரியா,கீது மோகந்தாஸ்,மஞ்சு பிள்ளை,நந்திதா தாஸ் மற்றும் காவ்யா மாதவன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் தகழி சிவசங்கரன் பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.நான்கு தனித்தனி குறும்படங்களான இவற்றை ஒரு படமாக வெளியிட்டிருப்பது மிகவும் சிறப்பு.நான் லீனியர் அல்லது பன்முக பரிமாணம் போன்ற நோக்கிலும் இத்திரைப்படத்தை அணுகலாம்.திரையீடலுக்கு அடூரும் பத்மப்ரியாவும் வந்திருந்தது எதிர்பாராத மகிழ்ச்சி.திரைப்படம் துவங்குவதற்கு முன் சிறு அறிமுகம் ஒன்றைத் தந்த அடூர் படத்திற்கு பின்பு விரிவாகப் பேசலாம் என்றார்.1935 லிருந்து 1945 வரைக்குமான காலகட்டத்தில் கேரளாவின் கிராமத்து வாழ்வியலைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பேசும் படமாக இது இருக்கும் என்ற அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டார்.
முதல் சிறுகதை The Prostitute சாலையோர வேசியாக நடித்திருப்பது பத்மப்ரியா படபடக்கும் விழிகளும் அழுக்கான ஆடைகளுமாய் முழுமையான கதாபாத்திரமாக மாற்றப்பட்டிருந்தார்.வேசி என தலைப்பிடபட்டிருந்தாலும் இந்த திரைப்படம் பேசுவது விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை.சாலையோரங்களில் வசிக்கும் மனிதர்கள் சமூகத்தின் எவ்வித அடையாளமுமில்லாமல் போவதை, சமூக ஒழுங்குகள் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் இம்மனிதர்களுக்கு எவ்வித அலைக்கழிப்பைத் தருகிறது என்பதை மிக இயல்பாய் பதிவித்திருக்கிறார்.நீள வசனங்கள் இல்லாதது பிரச்சார நெடியை குறைக்கிறது அதே சமயம் அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லாதது படத்திற்கு ஒரு வித நாடகத் தன்மையைத் தந்துவிடுகிறது.குறைவான வசனங்கள், மேல் சட்டையில்லாத ஆண்கள், மிக மெதுவான காட்சியமைப்புகள் என அடூரின் 'ட்ரேட் மார்க்' திரைப்படமாக இருந்தாலும் மிக முக்கியமான விதயம் ஒன்றை பதிவு செய்திருப்பதால் இந்தக் குறும்படம் எனக்குப் பிடித்திருந்தது.பத்மப்ரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இன்னொரு சாலையோர மனிதனிடம் தன் பழைய விதயங்களை நோண்டக்கூடாது என்கிற எச்சரிக்கையோடு சேர்ந்து வாழ்கிறாள்.அவன் மூட்டை சுமக்கும் வேலைக்கும் இவள் கல் சுமக்கும் வேலைக்குமாய் போகிறார்கள்.இரவில் சாலையோரங்களில் படுத்து உறங்குகிறார்கள்.ஒரு நாள் போலிசார் தூங்கிக் கொண்டிருந்த இவர்களை பொது இடத்தில் விபச்சாரம் செய்ததாக சொல்லி கைது செய்கிறார்கள்.நீதிபதியிடம் தாங்கள் கணவன் மனைவி என்பதை மட்டும்தான் அவர்களால் திரும்பத் திரும்பச் சொல்லமுடிகிறது.எவ்வித நிரூபணங்களும் அவர்களிடம் இல்லை. அவள் வேசி என்பதற்கு நிறைய சாட்சிகள் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் தண்டனை கிடைப்பதோடு படம் முடிகிறது.இருவருக்குமே அவரவர் தந்தையின் பெயர் தெரியவில்லை. இருவருக்குமே தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இருவருக்குமே வசிப்பதற்கு வீடெதுவும் இல்லை.ஆதலால் அவர்கள் குற்றவாளிகள்.

இரண்டாவது சிறுகதை The Virgin கீது மோகன் தாஸ் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.சாப்பாட்டு ராமனுக்கு வாழ்க்கைப்படும் இளம் பெண் ஒருத்தியின் துயரங்களையும் சுற்றுப் புற மனிதர்கள் ஒரு பெண்ணின் மீது அவதூறுகளைப் பரப்புவதால் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சொல்லியிருக்கிறார்கள்.எவ்வளவு சாப்பாடு போட்டாலும் தின்கிற ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படும் கீது கச்சிதமாய் நடித்திருக்கிறார்.எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒருவன் திருமணமான முதல் நாளிலேயே அவளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்குப் போய்விடுகிறான்.இரண்டவது சினிமாவிற்கு போய்விட்டு தாமதமாக வந்து குளிக்கப்போகிறான் உட்கார்ந்தபடியே அவளின் முதலிரவு முடிந்து போய்விடுகிறது.மிக அசூசையாய் தின்பதும் மிக இறுக்கமான முகத்தோடும் திரும்பிப்படுத்து தூங்குவதுமாய் இருப்பவனோடு ஒரு நாளை கழித்த பின்பு வெளியில் சொல்ல முடியாத வேதனைகளோடு தாய் வீட்டிற்கு விருந்துக்கு வருகிறாள்.அவள் கணவன் நான்கு நாட்கள் நன்றாய் வயிறு புடைக்கத் தின்கிறான் தூங்குகிறான் ஒரு நாள் பின்பு வந்து அழைத்துப் போவதாய் கிளம்பிப் போய்விடுகிறான்.அவன் திரும்பி வருவதே இல்லை.அதற்குள் சுற்றுப் புற மனிதர்கள் இவள் தப்பானவள் அதனால்தான் அவன் வந்து அழைத்துப் போகவில்லை என அவதூறு பரப்புகிறார்கள்.அவன் அவளை விவாகரத்து செய்யப் போவதாய் ஒருவன் கீது வின் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான்.கீது அதற்கு அவசியமே இல்லை ஏனெனில் எனக்கு கல்யாணமே ஆகவில்லை என சொல்வதோடு இத்திரைப்படம் முடிகிறது.இதில் சொல்லப்பட்ட்வைகளை விட சொல்லப்படாதவைகளே அதிகம்.சொல்லப்படாதவைகள் மிக அதிகமாய் இருந்ததினால் இந்தக் கதை ஒட்டாமலே போய்விடுகிறது.

மூன்றாவது கதை The Housewife ஆறுமுறை கருத்தரித்து இரண்டு குழந்தைகள் பெற்று அவை சில மாதங்களிலேயே இறந்து போன துக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மஞ்சு பிள்ளையின் பக்கத்து வீட்டு மனிதராக முகேஷ் தமிழ்நாட்டில் வசிக்கும் அவர் அவ்வப்போது தன் தாயை வந்து பார்த்து விட்டுப் போவார்.அந்த கிராம மனிதர்களை மறந்துவிடாமல் எல்லாரிடமும் மிக அன்பாக பழகுவதாகவும் ஏழைகளுக்கு உதவும் தயாள மனம் படைத்தவர் என்றுமாய் சொல்லி சிலாகிக்கிறார்கள் மஞ்சு பிள்ளையு ம் அவள் வேலைக்காரியும்.இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே முகேஷ் அவளைப் பார்க்க வருகிரான்.இருவரும் பழங்கதைகளை பேசி மகிழ்கிறார்கள் அவளின் நிலையறிந்த முகேஷ் அவளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறான்.அவள்மீது எதுவும் குறையில்லை எனவும் அவள் கணவன் மீதுதான் குறையிருக்கலாம் என்று சொல்லியுமாய் அவளை மாற்ற முயற்சிக்கிறான்.குழந்தையில்லாததால் குதிரைக்காரனை பயன்படுத்திக்கொண்ட ராணியின் கதையை பூடகமாக சொல்கிறான் மறுநாள் மதியம் வருவதாய் சொல்லிவிட்டு செல்கிறான்.வழக்கத்திற்கு மாறாய் அன்று சீக்கிரம் வீடு திரும்பும் அவள் கணவன் முரளி அவளோடு உறவு கொள்கிறான்.அடுத்த நாள் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வரும் முகேஷை திருப்பி அனுப்பி விடுகிறாள் தனக்கு குழந்தைகளே இல்லாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் நேர்மையாக வாழ விரும்புவதாய் சொல்கிறாள்.இந்தக் குறும்படம் மிகக் க்ச்சிதமாய் இருந்தது தேவையற்றவைகள் எதுவுமில்லாது ஒரு குடும்பப் பெண்ணின் அலைவுகளை மிக நுட்பமாய் பதிவு செய்திருப்பது சிறப்பு.


நான்காவது கதை The Spinster நந்திதாசை பெண்பார்க்க வருபவன் அவளின் தங்கையான காவ்யா மாதவனை மணந்து கொள்கிறான்.எத்தனை முயற்சித்தும் நந்திதாவிற்கு திருமணம் கைகூடாமலே போய்விடுகிறது அவளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாய் சொல்லும் அவளின் சகோதரனும் வெகுநாட்கள் காத்திருக்க முடியாமல் திருமணம் செய்து கொள்கிறான்.ஒரே ஆதரவான தாயும் இறந்துபோகவே அவளின் தங்கையான காவ்யா மாதவனோடு வசிக்கப் போகிறாள்.காவ்யாவின் இரண்டு குழந்தைகளும் நந்திதாவின் மீது அன்பாயிருந்தாலும் காவ்யாவிற்கு பிடிக்காமல் போகவே அங்கிருந்து திரும்பி பழைய வீட்டிலெயே தனியாக வசிக்க ஆரம்பிக்கிறாள்.ஒரு நாள் ஏதோ ஒரு அசைவில் வழியில் சந்திக்கும் ஒருவனை இரவு வரச்சொல்லி அவன் வந்து கதவைத் தட்டும்போது மறுத்துவிட்டு அவனை திருப்பி அனுப்பிவிடுகிறாள்.கடைசி வரை திருமணமாகாத ஒரு பெண்ணின் துயரங்களை பேசும் படம் இது நந்தாதாசுக்கு நடிக்க சொல்லித் தர வேண்டுமா. மிக அழகான மிகைப்படுத்தாத நடிப்பு.

திரைப்படம் முடிந்த பின்பான உரையாடல்கள் மற்றும் அடூரின் பகிர்வுகள் அடுத்த பதிவில்

Featured Post

test

 test