Monday, February 25, 2008

தொலைந்துபோன குழந்தைகளின் / பதின்மர்களின் உலகம்



Pedar aka The Father (1996)

சிறுவர்களை மய்யமாக கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான மஜித் மஜித்தின் இன்னொரு படம் தான் இது.ஈரான் போன்ற நாடுகளிலிருந்து தேர்ந்த திரைப்படங்கள் சாத்தியமாகும்போது எல்லா பாதுகாப்பான வழிகளையும் கொண்டிருக்கும் நம் சூழலின் மீதும், global வரவேற்பு இல்லாததால் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சப்பை கட்டிக் கொண்டிருக்கும் நம்மவரின் கலைத்தாகத்தின் மீதும் படியும் கசப்புகளும் வெறுப்பும் இந்தப் பின்னிரவிலும் காறித் துப்ப வைக்கிறது.அய்ரோப்பியத் திரைப்படங்களைப் பார்க்கும்போது ஒப்பீட்டு புத்தி உள்நுழைவதில்லையென்றாலும் ஈரானிய நாடுகளிலிருந்து தொடர்ச்சியாய் வந்துகொண்டிருக்கும் வீச்சு மிகுந்த கலைப்படைப்புகள் என் மொழியின் / கலையின் மீதான என் நம்பகத் தன்மைகளைப் புறந்தள்ளி குற்ற உணர்வுகளை அழுத்தமாய் பதிவித்துப் போகிறது.

தொலைந்துபோன குழந்தைகளின் உலகம்தான் மஜித் மஜித் வசிக்குமிடமாக இருக்கிறதோ என்னமோ!.சிறார்கள் தொலைத்துவிட்ட உலகத்தை இழந்துபோன, அவர்களுக்கு மட்டுமே உரித்தான இயல்புகளை இன்னொரு சிறுவனின் மனோபாவங்களோடு உள்வாங்கிப் பதிவிக்கிறார். இழந்தவைகளின் மீது எப்போதும் படிந்திருக்கும் குருதியின் வாடை தாங்கமுடியாததாய் இருக்கிறது.Children of heaven னின் கடைசிக் காட்சி ஏற்படுத்திய தாக்கத்தினோடு ஒப்பிடுகையில் Father ன் கடைசிக் காட்சியின் தாக்கம் சற்றுக் குறைவுதான் என்றாலும் இரண்டுமே நிச்சயம் வலிகளைக் கடத்துபவைதான். நீரினடியில் துழாவும் விரல்கள எத்தனை அழகான படிமம்/பார்வை இது!..நீ ..ரி..ன..டி....யி..ல் துழாவும் இரத்தம் தோய்ந்த கால்விரலகள்.....நெடிய பாலை அலைக்கழித்த சோர்வில் அபூர்வமாய் கிடைத்த நீரில் புதைந்திருக்கையில் விரல்களில் சிக்கும் தன் குடும்ப புகைப்படம்......மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கும் நீர்..நெடிய பாலையில் பளிங்கினைப் போல நீர்..நீர்..நீர்...எல்லாம் நீர்..


தந்தை பின்னாலமர்ந்தபடி தன் மகனுக்கு(Mehrollah) பைக் ஓட்டக் கற்றுத் தருவதாய் ஒரு காட்சி..அடுத்த காட்சியில் தந்தையின் உடலை மூடியிருக்கும் துணியில் இரத்தம் தோய்ந்திருக்கிறது.பைக் முறுக்கிக் கிடக்கிறது. இடித்த லாரி நின்றுகொண்டிருக்கிறது.லாரியை ஓட்டி வந்தவன் பிணத்தின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி உரத்த குரலில் அழுகிறான். சிராய்ப்புகளோடு அச்சிறுவன் ஓரமாய் அமர்ந்தபடி தேம்பிக் கொண்டிருக்கிறான்.இவ்வளவுதான் அந்த சிறுவனின் Flash back. இப்போது அவன் ஒரு நகரத்தில் அடிமை வேலைக்கு நிகரான ஒரு வேலையைச் செய்கிறான்.சொற்பமான தன் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறான்.திரும்பும் வழியில் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் தன் நண்பன் மூலமாய் அவனின் அம்மா உள்ளூர் போலிஸ்காரனொருவனை திருமணம் செய்துகொண்டதாய் கேள்விப்பட்டு ஆத்திரமடைகிறான்.அவளைப் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.தன் பழைய வீட்டைத் திருத்தி தனியாய் வசிக்கத் துவங்குகிறான்..அந்தப் போலிஸ்காரனை பழிவாங்கத் துடிக்கிறான்.இரவில் அந்த வீட்டின் செடிகளை துவம்சம் செய்கிறான் சன்னலில் கல்லெறிகிறான். ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவனை வீட்டிற்குத் தூக்கி வந்து கவனித்துக் கொள்கிறாள் அவனின் தாய்.உடல் சரியான இரவொன்றில் தாயைத் தங்கைகளை தன்னிடமிருந்து பிரித்த அக்காவலதிகாரியை அவரின் துப்பாக்கி கொண்டே கொல்ல நினைக்கிறான்.பின் முடியாததால் அவரின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, நண்பனைக் கூட்டிக்கொண்டுத் தான் வேலை செய்யும் நகரத்திற்கு அந்த இரவில் ஓடிப்போகிறான்.

எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் உயிர்..ஆனால் எனக்கு அப்பாக்கியம் இல்லை.. என் மனைவி என்னை விட்டுப் போய்விட்டாள்.. எவருமே இல்லாத என் வாழ்க்கையில் நான்கு குழந்தைகளோடு நீ கிடைத்தது கடவுளின் கருணை.. என மகிழ்ந்து அச்சிறுவனின் தாயை மணந்துகொள்கிறார் ஒரு காவலதிகாரி.தன் தாயை ஏமாற்றி / பயமுறுத்தி திருமணம் செய்து கொண்டதாய் நினைக்கும் அச்சிறுவனுக்கும் அன்பான அக்காவலதிகாரிக்கும் சபிக்கப்பட்ட இயற்கையின் சூழலில் இடையே நிகழும் போராட்டம்தான் இத்திரைப்படம்.Mehrollah வின் நண்பனாக வரும் Latif மிக அழகான கதாபாத்திரம்.

வாழ்வை அதன் இயல்புகளோடு பதிவிப்பதுதான் சிறந்த திரைப்படமாக இருக்க முடியும்.பாலையின் தகிப்புகளை,இயலாமைகளை, அன்பை, நேசிப்பை, வன்முறையை எவ்வித பிரச்சாரத் தன்மைகளுமில்லாது மிக இயல்பாய் பதிவிப்பதும், நீளமான வசனங்களை விடுத்து காட்சிகளின் மூலமாகவே நம்மைக் கட்டிப்போட வைப்பதுமே மஜித் மஜித்தின் அடையாளமாக இருக்கிறது மேலதிகமாய் இவரின் திரைப்படங்கள் ஓரிரண்டு நாளைக்கு நம்மை அதிலிருந்து மீளவிடாமலும் செய்துவிடுகின்றன.

16 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

"என் மொழியின் / கலையின் மீதான என் நம்பகத் தன்மைகளைப் புறந்தள்ளி குற்ற உணர்வுகளை அழுத்தமாய் பதிவித்துப் போகிறது." நான் அதிகம் படங்களை விரும்பி பார்ப்பதில்லை தான். ஆனாலும் தாங்கள் எண்னுவதுபோல் அத்தனை நொய்மை படத்தேவையில்லை என்பது எண்ணம். நம் தமிழ் உலகமும் ருத்ரையா, மகேந்திரன், பாலசந்தர், மாதவன், நாசர், பாலன், அமீர் போன்ற படைப்பாளிகளையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொண்டதுதான்.. என்ன நம் கலைஞர்களின் சூழலில் பாலையும், போரும், அடிமைத்தனமும், அதிகம் இல்லை, நிழலில் நின்று கொண்டு வெயிலைச்செல்ல முடியாதல்லவா.. சொல்ல முயலும் சிலரும் அதையும் வணிகமாக்க முயல்கையில் தான் மேர்சொன்ன நொய்மைகள் நம்மை ஆட்கொள்ளத்துவங்குகிறது. ஆனாலும் எனக்கென்னமோ வெளிச்சம் வெகு தொலவில் இல்லை என்று தான் தோண்றுகிறது.

KARTHIK said...

// எல்லா பாதுகாப்பான வழிகளையும் கொண்டிருக்கும் நம் சூழலின் மீதும், global வரவேற்பு இல்லாததால் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை//

பார்ப்பதற்கு ஆளில்லை அது தான் காரணம்.
ஹேராம் ஒரு அருமையான படம்.ஒரு நல்ல முயற்சியே.
நடந்தது கமல் அவர்கள் கையை சுட்டுக்கொண்டதுதான்.

அஞ்சாதே படம் நல்லாருக்கு.
பாத்துட்டு உங்கள் பாணியில் ஒரு பதிவை போடவும்.
நன்றி.

கோபிநாத் said...

\\Children of heaven\\

அய்ஸ்..இந்த படத்தை எடுத்து வையுங்கள்...எத்ததை முறை கேட்டுக்கிட்டு இருக்கேன்..;)

Anonymous said...

தமிழில் இம்மாதிரி படங்கள் எப்பொழுதாவதுதான் வருகிறது. santosh sivan எடுத்த மல்லியையும், தீவிரவாதியையும் பார்த்ததுண்டா? தமிழில் இம்மாதிரி படங்கள் வருவதில்லை என complainஒ/blameஒ பண்ணாமல் ,ஏண் வருவதில்லை , வருவதற்க்கு என்ன வழிகள் என்ற கோணத்தில் யோசிப்பது, விவாதிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது என் எண்ணம். marooned in iraq பாருங்கள் , abbas kiarostami , majidi majidi எடுத்த படங்களை பார்த்தவர்களுக்கு , இதிலுள்ள comedy ,satire , music ,pace ,landscapes(snow) அனைத்தும் வியக்க வைக்கும். children are watching usஐயும் miss பண்ணாதீர்கள் , அதன் கடைசி காட்சி என்னுள் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது

கே.என்.சிவராமன் said...

அருமையான பதிவு அய்யனார்.

இந்தப் படத்தை பார்க்கும்போதே நல்ல படம் என உணர்ந்தேன். உங்கள் பதிவு அந்தப் படத்தை மீண்டும் பார்க்க வைத்தது.

ஈரானிய படங்களின் சிக்கலே இதுதான். படம் முடிந்த பல இரவுகள் உறங்கவே முடியாது. பகல் முழுக்க அலைகழிப்பு விரட்டிக் கொண்டே இருக்கும். வாழ்க்கையின் புதிர் முடிச்சுகளை அவிழ்க்க மனம் எத்தனிக்கும். குழந்தைகளின் மீதான அன்பு பெருகும். நம்மை வெறுக்கும் சக மனிதனின் உணர்வுகளை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கும். பார்சி மொழியில் அவர்கள் பேசினாலும் நம் மொழியில் நம்மால் அதை புரிந்து முடியும். சினிமாவை கற்றுக் கொள்வதைவிட, வாழ்க்கையை அறிந்து கொள்ளவே ஈரானிய இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள்.

உங்கள் பதிவு தந்த எழுச்சியில் மஜீத் மஜிதியின் 'தி கலர் ஆஃப் பேரடைஸ்' படம் குறித்த பதிவினை எழுதியிருக்கிறேன். ஆக அந்தப் பதிவுக்கு உங்களது இந்த பதிவே காரணம்!

Unknown said...

நல்ல விமர்சனம் அய்யனார். இந்தப் படம் இங்கு ஏதாவது அரங்குகளில் காணக் கிடைக்கிறதா?

Anonymous said...

இந்தப் படம் வலையில் கிடைக்கிறதா?

M.Rishan Shareef said...

அன்பின் அய்யனார்,
உங்கள் பதிவின் மூலம் அப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.
Children of heaven,Colour of paradice இரண்டும் கூட இன்னும் பார்க்கக் கிடைக்கவில்லை.
நீங்கள் இப்படங்களை எங்கு பார்த்தீர்கள்?
இணையத்தில் பார்க்கமுடியுமா நண்பரே?

ரௌத்ரன் said...

கடந்த சில மாதங்களாகத்தான் உலக சினிமா பார்க்கிறேன்...ஈரானிய சினிமா என்று ஒன்றே ஒன்று தான் கிடைத்தது...'children of heaven'..படம் பார்த்து அரண்டு போனேன்...இவ்வளவு எளிமையான ஒரு சினிமா ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தவல்லது என்பதை எண்ணியபொழுது உங்களுக்கு ஏற்பட்ட அதே கோபம் நம் சினிமா குறித்து எனக்கும் ஏற்பட்டதுதான்...மேலும் என் தங்கை மற்றும் என் அம்மா இப்படத்தை காணும் பொழுது அவர்களிடையே நிகழ்ந்த ரசவாதமும் எனது உளுத்து போன எண்ணங்களை கைவிடச் செய்துவிட்டது...நல்ல சினிமா எடுக்க வல்ல இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பம் நம்மிடையே இருக்கிறது என்றாலும் நம்மவர்கள் மிகக்குறுகிய வட்டத்திற்குள்ளாக நின்று கொண்டு சினிமாவை அனுகுபவர்களாகவும் பொறுப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது என் எண்ணம்..

ஈழநாதன்(Eelanathan) said...

Children of heaven பார்த்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள் Turtles can fly பாருங்கள்.நீங்களே தொலைந்து போவீர்கள்

ஈழநாதன்(Eelanathan) said...

சந்தோஷ் சிவன் படங்களைக் குறிப்பிடும் அநாமதேய நண்பருக்கு,வாங்காளப் படங்களோடு கூட வேண்டாம் அருகிலிருக்கும் கேரளவிலிருந்து வெளிவரும் படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாலேயே ரெரரிஷ்ட்டும் மல்லியும் எவ்வளவு சாதாரணமான படங்கள் என்று புரியும்.தமிழில் அவை சிறந்த படங்கள் தாம்

Ayyanar Viswanath said...

கிருத்திகா

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படைப்பாளிகள் நம்முடைய சூழலில் இயங்கும் மற்றவர்களோடு ஏதோ ஒரு சில விதயங்களில் மாறுபடுகிறார்களே தவிர முற்றிலுமாய் இல்லை.சினிமா என்பது நம்மவரைப் பொறுத்தவரை அதிக பணங்கொழிக்கும் இடமாகத்தான் இன்று வரை இருக்கிறது.நாம் பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம்

கார்த்திக்

அடுத்தவர் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்றவைகளை நிராகரிப்பதின் மூலமே நல்ல சினிமா உருவாகும்..அஞ்சாதே இன்னும் இங்கு வரவில்லை வந்தால் கண்டிப்பாய் பார்த்துவிட்டு எழுதுகிறேன்

Ayyanar Viswanath said...

கோபி:வீட்டுப்பக்கம் வா!

அநாமதேய நண்பருக்கு

சந்தோஷ் சிவனை ஒரு நல்ல ஒளிப்பதிவாளராக மட்டுமே என்னால் அங்கீகரிக்க முடிகிறது. அவரது படங்களில் தவறவிடும் பன்முகத் தன்மை எப்போதும் உறுத்தலாகவே இருக்கிறது.சிக்கலான பிரச்சினைகளை தனது களமாக தேர்ந்தெடுக்கும் இவர் அதன் ஆழங்களைத் தொடாது மேம்போக்காகவே அனுகுவது மிகப்பெரிய குறை.என்னளவில் சந்தோஷ் சிவனின் படங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவையே !
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற இயக்குனர்கள் மற்றும் திரைப்படங்கள் மிகவும் அருமையானவை..

சொந்தப் பெயரிலேயே வரலாமே...

Ayyanar Viswanath said...

பைத்தியக்காரன்
உங்களிடம் சொன்னதுபோல் என்னால் I Could Read the sky படத்திற்கு குறிப்புகள் எழுத முடியவில்லை ஒருவேளை இன்னும் இரண்டு முறை பார்த்தால் சாத்தியமாகலாம்..ஈரான் படங்களுக்கான குறிப்புகளை நாமிருவரும் எழுதிக் குவிப்போமா :)

சுல்தான்
இந்தத் திரைப்படம் என்னிடம் இருக்கிறது அடுத்தமுறை சந்திக்க நேர்ந்தால் கண்டிப்பாய் கொண்டு வந்து தருகிறேன்..

Ayyanar Viswanath said...

அனானி மற்றும் ஷெரிப்
வலையில் கிடைப்பதாகத் தெரியவில்லை

ரௌத்ரன்
Children of Heaven எல்லாரிடத்தும் ஏகப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி..

Ayyanar Viswanath said...

ஈழநாதன்
Turtles can fly
இன்னும் பார்க்கவில்லை வலையில்தான் எங்கோ படித்தேன்..தேடிக்கொண்டிருக்கும் படங்களில் அதுவும் ஒன்றே..நீங்கள வலையைப் பூட்டிவிட்டற் போலிருக்கிறது..அவ்வப்போதாவது பதியுங்களேன்...

சந்தோஷ் சிவன் குறித்தான என் பார்வையும் மேலே பதிந்துள்ளேன் துபாய் திரைப்படவிழாவில் இவரது Before the rains பார்த்து நொந்தேன் ஆனால் அற்புதமான ஒளிப்பதிவு

Featured Post

test

 test