Tuesday, November 10, 2009

ரெய்ன் ரெய்ன் கோ அவே!!

மூன்று நாட்களாய் தொடர்ந்து மழை பெய்வதாய்
மின்னரட்டையில்
சகோதரர்
சொன்னார்
கேட்க மகிழ்வாயிருந்தது
மழையால் கிடைத்த விடுமுறைக்கு
குதூகலித்த மகளுடன்
நனைந்தபடி வீடு திரும்பிய
தாயொருத்தியின் பேச்சில்
ஈரமிருந்தது
தொடர்பிலிருந்த பெண்கவிஞர்கள் அனைவரும்
மழையால் இன்னும்
இளகியிருந்தனர்
அவரவர்களின் சமீபத்திய காதலனோடு
மழையையும் முத்தங்களையும்
பொருத்தி
தலா பத்து கவிதைகளை
எழுதிவிட்டிருக்கிறார்கள்
ஒவ்வொன்றாய்
அரட்டைப் பெட்டியில்
விழ ஆரம்பித்ததும்
பதறி வெளிவந்து
தூங்கிப்போனேன்
அதிகாலையில் தொலைபேசிய இவள்
தொடர்ச்சியான மழைக்கு இன்னும்
இவனது
வெண்பஞ்சுடல் தயாராகவில்லையென
வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்
கவிஞன்
மகனை மழையொன்றும் செய்யாது
என்கிற என் சமாதானங்கள்
அவளுக்குப் போதுமானதாய்
இருக்கவில்லை
படுக்கை விடுத்து
உயரமான திரைச்சீலையகற்றி
கண்ணாடிக் கதவு
வழியே
கட்டிடங்களுக்கு மத்தியில்
சிறிதாய் தென்பட்ட
வானம் என்கிற
வஸ்துவைப் பார்த்து
வாழ்வில் முதன் முறையாய்
அப்பாடலைக் கத்தினேன்
ரெய்ன் ரெய்ன் கோ அவே!!

Thursday, November 5, 2009

பவா வைப் பற்றி சில குறிப்புகள்

From தனிமையின் இசை

மிக நெருக்கடியான பணிச்சூழலில்தான் என் விடுமுறையைத் தீர்மானித்தேன். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இந்தியா வரவேண்டிய சூழல்கள் அமைவதால் விடுப்புகள் குறைவாகவே இருந்தன. இந்த நேசமற்ற சூழலும், இயந்திர முகங்களையும் பார்த்து சலித்து வெறுத்த தனிமை குறைந்த பட்சம் முப்பது நாட்கள் விடுப்பைக் கோரியது. எல்லாம் உதறி செப்டம்பர் மாதத்தின் ஒரு அதிகாலையில் ஓசியில் கிடைத்த ஒயினை மூக்கு முட்டக் குடித்த கிறக்கத்தோடு சென்னை வந்திறங்கினேன். மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறையாய் இந்த அயல்தேசத்திலிருந்து ஊருக்குக் திரும்பிய நாளின் பரவசமெல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை. என்னுடைய எல்லா உணர்வுகளையும், பரவசங்களையும், அறியாமைகளையும் இந்த நகரும் காலம் தின்றுக் கொழுத்துவிட்டுத்தான் செத்து மடிகிறது. காலத்தின் மாறுதல்களின் எந்த நச்சும் தீண்டியிராத மனிதர்களைப் பார்க்கும்போது பொறாமையும் இணக்கமும் ஒருமித்து, ஒரு வித ஸ்நேகம் உள்ளுக்குள் துளிர்விடுகிறது. அப்படி ஒரு மனிதர்தான் பவா.செல்லதுரை.

என் வாழ்வில் அபூர்வமாய் வந்துவிட்டுப் போன தேவதைகள் வாழ்வின் மீதான என் நம்பகத்தன்மைகள் குறித்து பெரிதும் கவலை கொள்வர். நான் மிகுந்த வறட்டுத் தனமாய் இருக்கிறேன், வெறும் அவநம்பிக்கைகளை மட்டுமே சுமந்தலைகிறேன் என்றெல்லாம் அவர்கள் பதறி மாய்ந்து, மாய்ந்து என் நிலைப்பாட்டை மாற்றப் பெரிதும் மெனக்கெடுவர். திமிர்,அலட்சியம், அசட்டை என என் பிரத்யேகமான வெவ்வேறு குணாதிசயங்களின் மூலம் எல்லாவற்றையும் சிதறடித்துவிட்டு அவர்கள் கடந்து போன பின்னர் கழிவிரக்கத்திலாழ்வதுதான் இதுவரைக்குமான என் வாழ்வாய் இருந்து வருகிறது. முதன் முறையாய் வாழ்வென்பது நெகிழ்ச்சியானது, அன்பாலானது, சக மனிதன் ஒருவனை எவ்வித முகாந்திரமுமில்லாது நேசிக்க முடியும் என்பன போன்ற நம்பிக்கைகளை, மனிதர்கள் அத்தனை போலித்தனமானவர்கள் அல்ல என்கிற இணக்கத்தை பவா வின் மூலமாய் கண்டறிய முடிந்தது.

பவா வின் வரவேற்பில் ஒரு குழந்தையின் குதூகலம் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதே குதூகலம் நிரம்பி வழியும். அன்பை, நேசிப்பை சரியான நேரத்தில், சரியான மனிதர்களிடத்தில், மிகச் சரியாய் சொல்ல முடிவது / வெளிப்படுத்த முடிவது என்னைப் பொறுத்தவரை மிக அபூர்வமான குணமாகத்தான் இருக்க முடியும். (என்னால் ஒருபோதும் வெளிப்படுத்த முடிந்ததில்லை) பவா வின் இயல்பே நெருக்கமும் இணக்கமுமான ஒரு குழைவு நிலைதான். ஒருவரை இதனால்தான் பிடிக்க வேண்டும் அல்லது ஒருவருடன் இதனால்தான் பழக வேண்டுமென்கிற துய்ப்பு சூழல் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களையெல்லாம் பவா காற்றில் பறக்கவிட்டார். என்னிடம் சொல்வதற்கு அவரின் இத்தனை வருட வாழ்வு இருந்தது. எனக்குத்தான் அவரிடம் சொல்ல புத்தகங்களையும் அந்நிய வாழ்வையும் தவிர வேறொன்றுமில்லாமல் போனது.

பவாவின் வீட்டில், நிலத்தில், கடையில், பயணிக்கையில், ஏரிக்கரையில், விடுதிப் பூங்காவில், விடுதி அறையில், என நாங்கள் சந்தித்துக் கொண்ட எல்லா இடங்களிலும் விடாது பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய தொடர்ந்த பேச்சில் நான் மெல்ல இளகத் துவங்கினேன். ஒரு கட்டத்தில் தினம் இரண்டு வார்த்தையாவது அவருடன் பேசாவிடின் அந்த நாளே முழுமையாகாத உணர்வும் வரத் துவங்கியது. என் வாழ்வின் மிக இலேசான நாட்களாக, நம்பிக்கையும் அன்புமான நாட்களாக இந்த விடுமுறை தினங்கள் இருந்தமைக்கு பவாதான் காரணமாக இருந்தார்.

பவா வை அவரின் குழந்தமை சிதையாது பார்த்துக் கொள்வதின் மிக முக்கியப் பங்கு தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளரான, மலையாளத்திலிருந்து பல காத்திரமான படைப்புகளை தமிழில் அதன் ஆன்மாவோடு கொண்டுவந்த ஷைலஜா மற்றும் அவரின் குடும்பத்தாரினுடையது. உலகின் எங்கோ ஒரு மூலையில் பிளாக்கில் பினாத்துகிறேன் என்கிற அறிமுகம் கூட எனக்கான அன்பைத் தருவதற்கு இவர்களுக்கு தேவையில்லாத ஒன்றுதான். நான் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே போதுமானதாகவும் வாசிப்பவன் என்பது அதிகப்படியான குணமாகவுமாய் இவர்களுக்கு இருக்கிறது.

ஒரு மின்சாரம் போன மதியத்தில் ஷைலஜா தன் கைகளினால் உருண்டையாக்கித் தந்த சோற்றுக் கட்டிதான் இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த உணவு. வீட்டில் சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தப் பின் மதிய அமைதியில் எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் அன்பைச் சேர்த்துப் பிசைந்த அந்தச் சோற்றுக் கட்டி அமிர்தமாய் இருந்தது. வம்சி மற்றும் மானஸியோடு நாங்களும் ஷைலஜாவின் பிள்ளைகளானோம்.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய உலகம் இதுவரை நான் அறிந்திராத ஒன்றாகத்தான் இருந்தது. பேச்சினூடாய் பகிர்ந்து கொண்ட மனிதர்கள், நிகழ்வுகள், சம்பவங்கள் யாவும் இயல்பு வாழ்வு குறித்தான என் முன் முடிவுகளை தகர்ப்பதாய் இருந்தது. எனக்குப் பிடித்தமான ஆளுமைகளில் தொடங்கி அடுத்த வீட்டு மனிதர் வரைக்குமாய் விரிந்திருந்த பவாவின் நட்புலகில் விரோதிகளோ பிடிக்காதவர்களோ இல்லை.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் அனைவரின் வாழ்வு முறையும் புதிதாக இருந்தது. புகழ்,பணம், பிரபல வெறி என எல்லாவற்றிலிருந்தும் விலகி ஒதுங்கி கலையை வாழ்வாகவும், வாழ்வைக் கலையாகவும் நேசித்து வாழும் மனிதர்களையும் அவர்களின் படைப்புகளையும் நான் காண நேர்ந்தபோது நெகிழ்ந்து போனேன். நான் உழன்று கொண்டிருக்கும் இயங்கிக் கொண்டிருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கும் உலகத்தையும் அதில் கடக்க நேரிடும் சக மனிதர்களையும் அந்தச் சூழலில் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். எத்தனை மோசமான வாழ்வை நானும் என் சக உலகத்தவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்து சிரித்துக் கொண்டேன். இப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்தது திருவண்ணாமலையில் வாழும் ஸ்பெயின் ஓவியர் காயத்ரி காமுசும் அவரது கணவரான ஆனந்தும் தான். இருவரைப் பற்றியும் விரிவாக பிறகொருமுறைப் பதிகிறேன்.

நான் எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்? என்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தும் மனிதர்களிடத்துமிருந்தும் ஏன் விலகி வந்துவிட்டேன்? என்றெல்லாம் எனக்குள் யோசனைகள் மிக ஆரம்பித்தன. வாழ்வை வறட்சியாக அணுக எனக்கு சில தோல்விகளும், பல புத்தகங்களும், சில துரோகங்களும் கற்றுக் கொடுத்திருக்கின்றன. கண்கள் விரியாதுச் சிரிக்க, அழுத்தமில்லாது கைக் குலுக்க இந்த அந்நிய வாழ்வும் சிநேகமற்ற மனிதர்களும் பழகிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்வை நேசிக்க, மனிதர்களை முன்முடிவில்லாமல் அணுக, எதிர்பார்ப்பில்லாத அன்பு சாத்தியம் என்கிற நம்பிக்கைகளையெல்லாம் எவரிடமிருந்தும் இதுவரை நான் பெற்றிருக்கவில்லை. இந்நம்பிக்கைகளை என்னில் துளிர்விட பவாவும் ஷைலஜாவும் அவரின் குடும்பமும் அவரின் நண்பர்களும் காரணமாய் இருந்திருக்கிறார்கள்.

விடைபெறும் நாளின் கடைசி சில மணிநேரங்களுக்கு முன்பு கூட பவா அவரின் கல் வீட்டில் அமர்ந்தபடி அவரின் நெகிழ்ச்சியான சத்தமான குரலில் பாவண்ணனின் கதையொன்றினை சொல்லிக் கொண்டிருந்தார். நானும் என் சகோதரனும் ஷைலஜாவும் அவரது குரல் வழி உலகில் பயணித்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலிருக்கும் சிறு நகரத்தினுக்கு சைக்கிளில் பயணிக்கும் ஆசைகள் மிகுந்த குமாஸ்தா ஒருவன் மிகப் பாடுபட்டு கடனுக்கு காத்திருந்து சைக்கிளொன்றை வாங்குகிறான். பயணத்தில் அவனோடு சிறுவன் ஒருவனும் சேர்ந்து கொள்ள இருவரின் பயணமும் சுகமாய் தொடர்கிறது. குமாஸ்தாவினுக்கு சைக்கிள் மீதிருந்த காதலை விட அச்சிறுவனுக்கு அதிகமான காதலிருப்பதை உணர்ந்து கொள்ளும் குமாஸ்தா சைக்கிளை அச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு பஸ் ஏறுவதாய் கதை முடியும். இந்தக் கதையை எழுதியவரின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கி தன் குரலில் அவ் உலகை படைக்கும் பவாவின் வார்த்தை வண்ணங்களில் முழுவதுமாய் கரைந்து போனோம்.

விமானத்தைப் பிடிக்கச் சென்னைக்கு விரைந்த அவ்விரவில் தொலைபேசியில் பவா வின் குரல் கேட்க என்னால் முடியவில்லை. வாழ்வில் எப்போதாவது அடைக்கும் தொண்டை அப்போது அடைத்துக் கொண்டது. என்னால் எப்போதும் அழமுடிவதில்லை என்பது உண்மைதாம் நண்பர்களே!

Tuesday, November 3, 2009

சிதைந்த நிஜமும் செழித்த நிழலும்

1

ஒழுங்குகள்/ ஒழுங்கீனங்கள் இவ்விரண்டிலும் என்னைப் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து, வருந்தி, கத்தி, புலம்பி நிகழைக் கொன்று கொண்டிருக்கிறேன். எல்லா உச்சத்தையும் எட்டியதாய் இறுமாந்தும், எல்லாவற்றையும் இழந்துபோனதாய் கதறியுமாய் நகர்கின்றன என் நினைவு மேகங்கள். நிறைவடையாது இருப்பதன் பெயர், நிறம், அடையாளம் என எதையும் கண்டறிய முடியவில்லை. ஆனால் அவ் உணர்வின் தன்மை நான் அடிக்கடிக் கனவு காணும் நதியினடியில் துயிலும் தணிவாகத்தான் இருக்கும். மேலும் அதன் இயல்பே உயரமான பாறையின் மீதிருந்து குதித்துச் சிதறிப்போவதற்கு முன்பான விநாடியின் உடல் சில்லிப்பை /துடிப்பை ஒத்ததாய் இருக்கலாம். ஒரு மலை வீற்றிருப்பதுபோல் இம்மாதிரியான நம்பிக்கைகள் என்னுள் பதியனிட்டுக் கொண்டிருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அதன் தடத்தைப் பிடித்துவிடலாம். அதுவரைக்கும் இவ்வுழல்வுதான்.அதுவரைக்கும் இந்த போதைதான்.அதுவரைக்கும் இந்தக் கோபம்தான். அதுவரைக்கும் இந்தப் பைத்தியம்தான் அதுவரைக்கும் இந்த வெந்துச் சாதல்தான். அதுவரைக்கும் இதேக் கதறல்கள்தாம். புலம்பல்கள்தாம். வாந்திதாம். தாம்.. தாம்...தாம்… தாஆஆம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்.

இறுதி எது? உச்சம் எது? நிறைவு எது? எங்கடா இருக்கு எனக்கான வாழ்வு? : ஜோர்பா தி புத்தா : அடிசெருப்பால!

சமீபமாய் நான் நம்பிக் கொண்டிருந்தவையனைத்தும் ஒவ்வொன்றாய் உதிரத் துவங்குகின்றன. இது எனக்கு மட்டும் பிரத்யேகமாய் அவ்வப்போது நிகழும் ஒன்று. அதனாலேயே நம்பிக்கைகளின் கிளைகளை நான் எப்போதும் விரிப்பதில்லை. விரித்திராத கிளைகள் வேர்களுக்குள்தான் அடங்கியிருக்கின்றன. அல்லது நீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கும் வேர்களே விரிக்காத கிளைகளாவும் இருக்கின்றன. இப்பாதுகாப்பான, பத்திரமான, அதி ரகசிய, தகவலை தடம் பிடித்துவிடுபவர்களே எனக்கான பிரச்சினைகளாக உருமாறத் துவங்குகின்றனர். எல்லாவற்றையும் உதறவும் முடியாது /சுமக்கவும் முடியாது, விரும்பி/வெறுத்து, விலகி/நெருங்கி, எதிரெதிர் துருவங்களில் என்னையே பொருத்திக் கொண்டு இவ்விளையாட்டினை ஆடித் தீர்க்கிறேன். என் வாழ்வுச் சதுரங்க கட்டங்களில் நகரும் காய்களுக்கு எவ்வித குதூகலத்தையும் என்னால் தந்துவிட இயலாது. அதே சமயத்தில் எவ்விதத் துயரையும் தந்துவிடாதிருக்க மெனக்கெடுகிறேன். காய்கள் வெறுமனே நகர்ந்து கொண்டிருக்கின்றன அல்லது நகர்த்துபவர்கள் வெறுமனே நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகத்தினையோ வருத்தத்தினையோ தந்துவிடாத ஒன்றை ஏன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்? என்பவர்களுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. இது இப்படித்தான் இருக்கிறது.

எந்த ஒன்றின் எச்சம் நான்? எதன் மிகுதி என்னை நீட்டித்திருக்கிறது? எதன் விருப்பம் என்னை இயங்கவைக்கிறது?: உண்மையின் உன்னத சங்கீதம் : முடியல!

2

மனிதர்கள் எவரும் தேவையில்லையென்கிற மனநிலை எப்போதெல்லாம் எனக்கு ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் எனது கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வேன். நெருக்கமான நண்பர்கள், அறிமுகமானவர்கள், தினம் பேசுவோர், அவ்வப்போது சந்திப்போர் என எல்லாரையும் வெளியே தள்ளி மிகக் குரூரமாய் கதவைச் சாத்திக் கொள்ளும் இந்தத் திமிர்தான் அந்நிய வாழ்வின் மூலமாய் நான் பெற்றுக்கொண்ட செல்வப்பயனாய் இருக்கிறது. எனது தலைமறைவு வாழ்வு இன்னொரு வகையில் மிகுந்த சுவாரஸ்யமானது. அலுவலகத்திலிருந்து எத்தனை சீக்கிரம் வரமுடியுமோ அத்தனை சீக்கிரம் வந்து எனது பொந்திற்குள் அடைந்து கொள்வேன் அறைக்கதவை எந்தக் காரணத்திற்கும் திறந்துவிடத் தேவையில்லாத வாழ்வாய் இருப்பதால் எனக்குப் பிடித்தமான நிழல் உலகத்திற்குள் என்னை மூழ்கடித்துக் கொள்வேன். புத்தகங்களில், திரைப்படங்களில் வாழும் வாழ்க்கைக்கான பின்புலம் மனிதர்கள் மீதிருக்கும் என்னுடைய அவ நம்பிக்கைகளாகத்தான் இருக்கின்றன.

கைவசமிருக்கும் கடைசிப் பணத்தையும் சாம்பலாக்கிவிட்டு நடையைக் கட்டிய In to the Wild கிறிஸ்தான் கடந்த மூன்று வாரங்களாக நினைவிலாடிக் கொண்டிருக்கிறான். இந்த நிலப்பரப்பை ஒற்றைப் பணமில்லாமல் நடந்து /கடந்து பயணிக்கும் வாழ்வு மிக அதிக வளைவுகள் கொண்டதாய் இருக்கக் கூடும். விநோதங்களை, அதிர்ச்சிகளை, பயங்களை, எதிர் கொள்ள வேண்டிவரும். எதிர்பாராமின்மை மட்டும் எப்போதுமிருக்கலாம்.

சுதந்திரத்தின் காற்றை அடர்ந்த வனங்களில் உள்ளிழுக்க முடிவதை, பயம் என்பதின் நிழலைக் கூடத் தொடாத வாழ்வினை, புதிய மனிதர்களை, புதிய வாழ்வை, உயிர்ப்பை கிறிஸ் முழுமையாய் துய்ப்பதைக் காணும்போது ஏற்படும் ஒப்பீடுகள் இதுவரைக்குமான என் இயங்குதலை அபத்தமாக்கின. என்னுடைய நமுத்த இவ்வாழ்வின் மீது திரை கிறிஸ் கனவில் காறியுமிழ்கிறான். கெக்கலித்துச் சிரிக்கிறான். நான் கூனிக்குறுகி அறையின் இருள் மூலைகளில் ஒண்டுகிறேன். அவனது சுதந்திரப் பீறிடல், உற்சாகப் பிளிறல் சுதந்திரத்தை வாய் ஓயாது முணுமுணுக்கும் என் போதாமையின் செவுளில் ஓங்கி அறைகிறது, நான் பலமிழந்து மூர்ச்சையாகிறேன்.

மாறாய் குவாண்டினின் Death Proof பெண்கள் எனக்கு கிறக்கத்தையளிக்கின்றனர். மழை பெய்யும் மது விடுதியில் விடாது குடித்தபடி, சதா பேசியபடி, சிரித்தபடி, உரக்க கெட்ட வார்த்தைகளை சிதறிவிட்டபடி, சக பெண்களை பிட்ச் யாக்கிபடி, லாப் நடனமாடி, காரில் புணர்ந்து, மூக்கு முட்டக் குடித்து, சைக்கோ ஒருவனின் கார் மோதி சிதறிப்போகும் பெண்கள் என் ஒழுங்கீனங்கள் பற்றிய குற்ற உணர்வுகளை மழை நீர்ப்போல் கழுவிச் சென்றுவிடுகின்றனர். பிறிதொரு பெண்கள் அதே சைக்கோவை துப்பாக்கியால் சுட்டு, கதறக் கதற, விரையும் காரினால் பின்பக்கமாய் முட்டி முட்டி, விரட்டி, வழிமறித்து, தடியால் மண்டையிலடித்து, மூஞ்சியில் மாறி மாறிக் குத்துவிட்டு, தரையில் வீழ்த்தி, அவன் முகத்தில் காலை தூக்கி வைத்துக் கெக்கலிக்கும்போது என் அறையிருளை இவ்வின்பம் விரட்டியடிக்கிறது. திருடன் சேமித்தப் பணத்தை திருடனுக்கும் போலிசுக்கும் தண்ணி காட்டி லபக்கும் பெண்ணின் சாதுர்யமும் கால் கால்சட்டையணிந்து, பைப் புகைத்தபடி, சதா டிவி பார்த்தபடி, இன்னொருவனை துரோகிக்க தூண்டி, சமயோசிதமாய் இருக்க வேண்டிய இடத்தில் வாய் ஓயாது பேசி, குண்டடி பட்டுச் செத்துப் போகும் இன்னொரு பெண்ணின் இளமைத் திமிரும் புன்முறுவலை வரவழைக்கின்றன. நல்லவை, உன்னதம், நேர்மை, தெளிவு, உண்மை, வரலாறு, நேர்க்கோடு என எல்லாவற்றையும் தலைகீழாக்கும் சிதைக்கும் குவாண்டின் மறைமுகமாய் அல்லது நேரடியாய் என்னை என் குற்ற உணர்வுகளிலிருந்து தப்ப வைக்கிறான்.

இன்குளோரியஸ் படத்தில் குவாண்டின் நிறுவியிருப்பதெல்லாம் அதிகாரத்தின் வரலாற்றை அதற்கு இணையான அல்லது அதைவிட பலம் வாய்ந்த அதிகாரத்தின் பக்கம் நின்று புனைவுகளின் துணைக் கொண்டு சிதைத்திருப்பதுதான். சமூகம், அறம் , முறம் என்றெல்லாம் யோசிக்காது அதிகத் திமிர்த்தனமாய், அதிக நேர்த்தியாய் ஒருவன் திரிந்தால் அவனை எல்லாருக்கும் பிடித்துத்தான் தொலைகிறது.

வரலாறுகளை விளிம்பின் பார்வையிலிருந்து மறு உருவாக்கம் செய்வதின் தேவைகளை எவர் நிறைவேற்றுவார்/புரிந்துகொள்வார் எனத் தெரியவில்லை. இதை ஓரளவு தேவ் டி யின் சந்தா பாத்திரம் செய்திருக்கிறது. இதுவரைக்கும் சொல்லப்பட்ட தேவதாஸ் கதைகளில் சந்திரமுகி ஊறுகாயாக மட்டும் தொட்டுக் கொள்ளப்பட்ட ஒரு வஸ்து. இதை தேவ் டி நிர்நிர்மாணம் செய்திருக்கிறது. சந்தா என்கிற சந்திரமுகி உருவாவதற்கு இந்த சமூக அமைப்புகள் குரூரத் துணை போவதை சரியாய் பதிவு செய்த படம் இது. பாலியல் தொழிலாளி என்கிற வெற்றுச் சொல் மட்டும் அவர்களுக்கான சரியான அங்கீகாரத்தை வழங்கிவிடும் என அரசியலறிவாளர்கள் நம்புவதை சந்தா பாத்திரம் கிண்டலடிக்கும் இடத்தில் அவமானத்தில் கூனிக் குறுகினேன். கொலுசுகளின் சப்தங்களை மட்டும் கொண்டு முன் நகர்ந்து போகும் என் பிரியத்திற்குறிய சந்தா! என்னால் முடிந்ததெல்லாம் உன்னைச் சுமந்தலையும் இந் நாட்களை நீட்டிப்பது மட்டும்தான்....

Sunday, November 1, 2009

In the mood for love

video

Tuesday, October 20, 2009

இயலாச் சமன்

நிசியில் அதிர்ந்த
கனவின் பின்புலம்
எதுவாகவிருந்ததென
விழித்ததும்
நினைவைத் துழாவினேன்
வழக்கமான பாம்புத் துரத்தல்களாகவோ
நீருக்குள் மூழ்கித் திணறும்
சுவாசத்திற்கான தவிப்பாகவோ
நூற்றுக்கணக்கான
பிம்ப முலைகளில்
முகம் புதைத்துத் தூங்கும்
விருப்ப விழிப்புக் கனவாகவோ
அது இல்லாமலிருந்தது
ஒருவேளை
நெடு நாள் காத்திருப்பினுக்குப் பிறகு
முலை தொட மட்டும்
அனுமதித்தவளின்
மீதிருக்கும்
முடிவிலா ஏக்கத்தின்
தொடர்ச்சியாக
அது இருந்திருக்கலாம்
மீட்கும் பேராசையில்
மூச்சடைத்து
நினைவின் அடியாழம் வரை அலசியும்
நைந்த பாசியைக் கூட பெற முடியவில்லை
நினைவுத் திரும்பாக் கனவுகளும்
கால்களையகற்ற விரும்பாக் காதலிகளும்
சமன் செய்யும் புள்ளியின் பெயர்
என் இயலாமையாக
இருக்கக் கூடும்.


(..வாசுவிற்கு)

* இம்மாத அகநாழிகை இதழில் வெளிவந்தது.

Wednesday, September 16, 2009

குவாண்டின் டராண்டினோ - வசீகர வன்முறையாளன்



குவாண்டின் டராண்டினோ எனக்குப் பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர். மிகக் குரூரமான வன்முறையை வார்த்தையாகவும் காட்சியாகவும் மிக நேர்த்தியான விளையாட்டாய் நிகழ்த்திக் காட்டுவதில் தேர்ந்தவர். வெகுசனம், கலை என்கிற இருவேறு எதிரெதிர் துருவங்களை தங்களது திரைப்படங்களின் மூலம் ஒரே புள்ளியில் குவிக்கச் செய்த இயக்குனர்களாக அகிரா குரசோவா வையும் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கையும் சொல்லலாம். நான் டராண்டினை ஹிட்ச்காக்கின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். கொல்வது கலை என்கிற அணுகுமுறைதான் ஹிட்ச்காக்கினுடையது இவருக்கு கொலை அல்லது வன்முறை என்பது வசீகரமானதொரு விளையாட்டாய் இருக்கிறது.சன்னாசி சொல்வது போல “நான் சொல்லநினைப்பது இப்படி” என்கிற கோணம்தான் டராண்டினோ.

இவரின் சமீபத்திய திரைப்படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் இன்னும் இங்கு வரவில்லை. தலைப்பின் வில்லங்கத்தை நினைவில் கொண்டு இந்நாட்டில் வெளிவராதென நானாகவே நினைத்துக் கொண்டே தரவிரக்கம் செய்தேன். சென்ற வாரத்தில் கமினே திரைப்படம் பார்க்கச் சென்றபோது இன்குளோரியஸ் விரைவில் வருகிற பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது. திரையில் இரத்தத் தெறிப்புகளை காண்பது அலாதி உற்சாகமாக இருக்குமென்பதால் திரையில் வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனத் தரவிறக்கம் செய்ததைக் கிடப்பில் போட்டாயிற்று.

டராண்டின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமாக Pulp Fiction (1994)பல்ப் பிக்சனையும் ரிசர்வாயர் டாக்ஸையும் சொல்லலாம். சில வலைப்பதிவுகளில் பல்ப் பிக்சனைப் புரிவிக்க நண்பர்கள் கட்டம் கட்டி விளக்கியிருந்ததை பார்த்து சிரித்துக் கொண்டேன். ஒரு திரைப்படத்தை பகிரவே இவ்வளவு மெனக்கெடல்கள் தேவைப்படும்போது அதை இயக்கியவன் எந்த அளவு மெனக்கெட்டிருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் பல்ப் பிக்சன் எனக்கு சிரமமான படமாகத் தோன்றவில்லை. அமரோஸ் பெர்ரோஸ், ரன் லோலா ரன், ப்ளைண்ட் சான்ஸ், இர்ரிவர்சிபிள், சங்கிங் எக்ஸ்பிரஸ் போன்ற வித்தியாசமான கதை சொல்லலைக் களமாகக் கொண்ட படங்களை ஒப்பிடும்போது பல்ப் பிக்சன் யுக்தி எளிமையானதே.

நான் லீனியர் கதை சொல்லல் என்பது திரையை விட புத்தகத்தில் எளிதாக இருக்கலாம். பல்ப் பிக்சன் திரைக்கதையை இப்படிப் புரிந்து கொள்ளலாம். ஒரு புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தின் சில பத்திகளை, எடுத்தவுடன் படித்து விட்டு மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்கத் துவங்கி, நடுவில் நான்காவது அத்தியாயத்தை மூன்றாவதாகவும், மூன்றாவதை நான்காவதாகவும் படித்து விட்டு, மீண்டும் கடைசி அத்தியாயத்தை முழுமையாகப் படித்து முடித்தால் அதுதான் பல்ப் பிக்சன் படம். இதில் கவனிக்க வேண்டிய ஒரே விதயம் என்னவெனில் இந்த புத்தகத்தை எங்கிருந்து படித்தாலும் அது வாசிப்பின்பத்தை தர வேண்டும் மற்றபடி ஒரு அத்தியாயத்திற்கும் இன்னொரு அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையில்லை. முதல்,இரண்டு,மூன்று,கடைசி அத்தியாயங்கள் எனச் சொல்வது கூட ஒரு புரிதலுக்காகத்தானே தவிர முதல் கடைசி என்கிற அடிப்படைகள் எதுவும் இல்லா வடிவமாகத்தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.(க்ளைமாக்சில் உயிரோடு இருக்கும் ஜான் ட்ரவோல்டாவை ப்ரூஸ் வில்லிஸ் இரண்டாவது அத்தியாயத்திலேயே கொன்று விடுவார்) இந்த நான் லீனியர் வடிவம் பின் நவீனக் கூறுகளில் ஒன்றாக அணுகப்படுகிறது. பன்முகத் தன்மை, வாசிப்பின்பம் போன்றவைகளையும் இத் திரைப்படம் உள்ளடக்கியிருப்பதால் பல்ப் பிக்சனை சிறந்த பின்நவீனத்துவ படங்களில் ஒன்றாக தைரியமாய் சேர்த்துவிடலாம்.

கசாமுசா திரைக்கதையை மெருகூட்ட ப்ரூஸ் வில்லிஸ்,சாமுவேல் ஜாக்சன், ஜான் ட்ரவால்டோ போன்ற தேர்ந்த நடிகர்கள், பாலியல் வார்த்தைகளை மட்டுமே கொண்டு நிரப்பிய சுவாரஸ்ய உரையாடல்கள், அவ்வப்போது வெடிக்கும் திடீர் துப்பாக்கிகள் , உடலிலிருந்து பீறிட்டடிக்கும் குருதித் தெறிப்புகளென காட்சியின்பத்தின் உச்சமாக ஒவ்வொரு காட்சியுமிருக்கும். இந்தப் படத்தினை உரையாடல்களுக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த சில உரையாடல் தொகுப்புகள் கீழே..
Jules: What does Marcellus Wallace look like?
Brett: What?
Jules: What country you from?
Brett: What?
Jules: What ain't no country I ever heard of! They speak English in What?
Brett: What?
Jules: ENGLISH, MOTHERFUCKER! DO-YOU-SPEAK-IT?
Brett: Yes!
Jules: Then you know what I'm saying!
Brett: Yes!
Jules: Describe what Marcellus Wallace looks like!
Brett: What, I-?
Jules: [pointing his gun] Say what again. SAY WHAT AGAIN. I dare you, I double dare you, motherfucker. Say what one more goddamn time.
Brett: He's b-b-black...
Jules: Go on.
Brett: He's bald...
Jules: Does he look like a bitch?
Brett: What?
[Jules shoots Brett in shoulder]
Jules: DOES HE LOOK LIKE A BITCH?
Brett: No!
Jules: Then why you try to fuck him like a bitch, Brett?
Brett: I didn't.
Jules: Yes you did. Yes you did, Brett. You tried to fuck him. And Marcellus Wallace don't like to be fucked by anybody, except Mrs. Wallace.

இன்னொரு அட்டகாசமான காட்சி
Fabienne: Whose motorcycle is this?
Butch: It's a chopper, baby.
Fabienne: Whose chopper is this?
Butch: It's Zed's.
Fabienne: Who's Zed?
Butch: Zed's dead, baby. Zed's dead.

மொத்த உரையாடல்களையும் படிக்க இங்கே

போதை மருந்து கடத்தல், ஆட்களைக் கடத்துதல், கொலை, கொள்ளை, கொண்டாட்டம் , பழிவாங்கல் போன்றவைகள்தாம் டராண்டினோ இயங்கும் தளமாக இருக்கிறது. நல்ல/ஹீரோயிச மாதிரிகளை எல்லாம் இவர் திரையில் கொண்டுவர மெனக்கெடுவதில்லை. கெடுதலை கெடுதலாகவே நம் முன் கொண்டுவருவதுதான் இவரது தனிச்சிறப்பாக இருக்கிறது.



ரிசர்வாயர் டாக்ஸ்
Reservoir Dogs (1992)சாதாரண கதையொன்றை மிகப் புத்திசாலித்தனமான திரைக்கதையாக எப்படி மாற்றுவது என்பதற்கான சரியான உதாரணம். வழமையான ஒரு கொள்ளைக் கூட்ட பாஸ், கை தேர்ந்த ஆறு திருடர்கள், ஒரு கொள்ளைத் திட்டம், பின்பு அத்திட்டத்தின் சொதப்பல். இவ்வளவுதான் இத்திரைப்படம். ஆனால் பார்வையாளன் காட்சியமைப்பில் திகைத்துப் போகிறான். திரைப்படங்களில் ஊறிய பார்வையாளனும் மேலோட்டமான பார்வையாளனும் தத்தம் பார்வைகளில் திருப்தியடைகிறார்கள். இந்த யுக்தி டராண்டினோவிற்கு எளிதாக வருகிறது. மிஸ்டர் வொயிட்/ப்ளூ/ப்ரவுன்/பிங்க்/ஆரன்ஞ்/ப்ளாண்ட் எனப் பெயரிட்டுக் கொண்ட ஆறு திருடர்கள் வைரத்தைக் கொள்ளையடித்துவிட்டு திட்டமிட்ட இடத்தில் சந்திக்கும் திட்டம் போலிஸின் இடையூறால் சொதப்பலாகிறது. ஒருவர் சுடப்பட்டு இறந்து போகிறார்.இன்னொருவர் மோசமாக காயமடைகிறார். இதில் ஒருவர் போலிஸ் இன்பார்மர் அவர் யார் என்கிற சந்தேகத்தினுக்கு அனைவரும் பலியாகின்றனர்.

போலிஸ் திருடனையும், திருடன் போலிஸையும் ஒருவரையொருவர் மிகக் குரூரமாகத் தாக்கிக் கொள்ள பிரதானமாய் புறக் காரணங்கள் எதுவுமே தேவையில்லை.அவன் திருடனாக/போலிஸாக இருப்பதே போதுமானது. இத்திரைப்படத்தில் சிக்கிக் கொண்ட போலிஸ் ஒருவனைத் துன்புறுத்தும் காட்சிகள் உளவியல் ரீதியிலாக சமூக அடையாளத்தின் சிக்கலைப் பேசுகிறது. சக மனிதன் என்ற பொதுவையெல்லாம் அடையாளங்களுக்காக தூக்கி எறிந்து விட்ட வன்முறையை குரூரமாய் நம் முன் வைக்கிறார் டராண்டினோ.தான் இயக்கும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் டராண்டினோ இதில் மிஸ்டர் ப்ரவுன் ஆக வந்து சுடப்பட்டு இறந்து போவார்.மிஸ்டர் பிங்க் ஆக நடித்திருக்கும் Steve Buscemi மிக அட்டகாசமான நடிகர்.fargo வில் இவரது முக பாவணைகளை பார்த்து பெரிதும் சிலாகித்துக் கொண்டிருந்தேன்.

இவரது மற்றத் திரைப்படங்களான கில் பில் 1 & 2 சின்சிட்டி போன்றவைகளின் அடிநாதமும் வன்முறையும் பழிவாங்கலும்தான். தனது மாஸ்டர் பீஸ் இன்குளோரியஸ்தான் எனச் சொல்லிக் கொள்ளும் டராண்டினோ அந்தப் படத்தின் மீதான என் ஆர்வத்தினை இன்னும் அதிகரித்திருக்கிறார். பல்ப் பிக்சன் தந்த கிளர்ச்சியை இன்குளோரியஸ் தருகிறதா? என்பதைப் பார்த்துவிட்டுப் பகிர்கிறேன்.

Tuesday, September 15, 2009

இந்தி திரைப்பட இசையும் அற்புத ரகுமானும்

என்னுடைய இந்தி மொழியறிவைப் பொறுத்தவரை இன்னமும் ஏ காவ் மே! ஏ கிஸான்! என்ற அளவில்தான் இருக்கிறது. மலையாளத்தை தடம் பிடித்த அளவிற்கு இன்னமும் இந்தியை முழுமையாய் பிடித்து விட முடியவில்லை. பதின்மங்களில் இந்திப் பாடல் கேட்பதில் ஒரு வித பெருமிதம் இருந்தது. என்னுடைய சகோதரன் நல்ல பாடல்களாய் தேடித்தேடி பதிந்து வைக்கும் கேசட்டுகளை கல்லூரிக்கு எடுத்துச் சென்று பிலிம் காட்டுவதில் எனக்கு அப்போது அலாதி மகிழ்ச்சி இருந்தது. இந்தி பாட்டு கேக்குறான்! இங்கிலீஷ் புக் படிக்கிறான்! என்றெல்லாம் பெண்கள் என்னைப் பற்றிச் சொல்வதாய் கற்பனை செய்து கொண்டு மகிழ்வேன். பின்பு மெல்ல பெண் வசீகரங்கள் போய் பாட்டும் புத்தகமும் மட்டும் ஒட்டிக் கொண்டன. தொண்ணூறாம் வருட இறுதிகளில்தான் நான் "தேரே மேரே பீச்சுமே" வைக் கேட்டு உருகினேன். ஒரு வார்த்தை கூட புரியாதெனினும் உயிரைப் பிழியும் சோகம் அந்தப் பாடலில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் "ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்?" படத்தையும் பார்த்தேன். இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி இந்தி மசாலா திரைப்படங்களின் இசை, கதை, காட்சியமைப்புகளை பத்து வருடங்களுக்கும் மேலாக வேறு தளத்தினுக்கு நகர்த்தாமல் வைத்திருந்தது. மெகா பேமிலிகள், எக்கச்செக்க பாட்டுகள், ஒரு காதல், ஒரு கல்யாணம், ஒரு சாவு என்கிற மசாலா பார்முலாக்களுக்கு முன்னோடியாக இருந்த படமிது. மேலும் இதில் வரும் "தீதி தேரா" வை விட "பெஹலா பெஹலா" பாடலும் "ஹம் ஆப்கே" என்கிற டைட்டில் பாடலும்தான் எனக்கு அதிகம் பிடித்தது. ஒரு படத்தின் பிரபலமான பாடலை விட அதிகம் பேசப்படாத பாடலே என்னை எப்போதும் ஈர்க்கிறது.

ஹம் ஆப்கே விற்குப் பிறகு நான் வசித்த நகரங்களில் வெளியான வணிக இந்தித் திரைப்படங்கள எல்லாவற்றையும் பார்க்கத் துவங்கினேன். "தில்வாலே துல்ஹேனியா", "தில்தோ பாகல் ஹை", " ராஜா இந்துஸ்தானி" என தொடர்ந்த இந்த இந்தி பட ஆர்வம் "குச்குச் ஹோதா" விற்கு பிறகு வடிந்து போனது. ஒரு கட்டத்தில் "என்னா படம் எடுக்கிறானுங்க அரைச்ச மாவயே அரைச்சிட்டு ராஸ்கல்ல்ல்ஸ்!!" என இந்தியை முற்றாக புறக்கணித்துவிட்டேன். ஆனாலும் இந்திப் பாடல்கள் கேட்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டாயிரம் வருடத்தின் துவக்கத்தில் "ஏக் லடுகி கோ தேகா சோ ஏசா லகா" தான் விழித்தெழுந்ததும் கேட்கும் பாடலாக இருந்தது. இந்தப் படத்தின் காட்சியமைப்பும் நன்றாக இருக்கும். இப்படிப் பட்டும் படாதவாறு இருந்த என் இந்தி இசை ஆர்வம் ரகுமானின் இந்தி நுழைவினுக்குப் பிறகு ஒரு வடிவத்தினுக்கு வந்தது. ரகுமான் இசையமைக்கும் எல்லா இந்தி பட கேசட்டுகளையும் வாங்கிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். தில் சே, யுவா பாடல்களை இந்தியில் கேட்க இன்னும் பிடித்திருந்தது.

நான்கு மாதத்தினுக்கு முன்பான ஒரு இரவில்தான் தில்லி 6 பாடல்களை கேட்டேன். பத்து பாடல்களையும் முழுதாகக் கேட்டபின்பு இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு புள்ளியில் தொலைந்து போயிருந்தேன். ரகுமானின் இசை கேட்ட உடனே பிடிக்கும் இசை அல்ல. நாட்பட நாட்பட போதை மிகும் திராட்சை மதுவினைப் போன்றது. ஆனால் தில்லி 6 பாடல்கள் ஏற்கனவே நன்கு ஊறிய மதுவாக இருந்தது. கேட்ட உடனே பிடித்த பாடல் மஸாக்களி தான். அதில் திளைக்கும் உற்சாகத்தினையும் பொங்குதல்களையும் முழுமையாய் அனுபவித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். "மெளலா மேரே!" பாடல் பித்த நிலையின் உச்சம். சூபி தியான நிலையின் இன்னொரு வடிவம் இந்தப் பாடலின் ஆன்மாவினை ஒத்திருக்கலாம். கொண்டாட்டமும், மகிழ்வும், குழைவும், உருகுதலும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட பாடல் இது. நான்கு மாதத்தினுக்கும் மேலாய் என்னைக் கட்டிப் போட்ட பாடல் இதுவெனச் சொல்லலாம். 'தில் கீரா கஹி பல் தஃபதன்' என்கிற பாடல் இன்னொரு அற்புதம். கடைசி இரண்டு நிமிடங்கள் அற்புதத்தின் உச்சம். மெதுவாய் ஆரம்பித்து மெல்ல மெல்ல வேகம் கூட்டி நம்மை நிறைக்கும் தந்தி அதிர்வுகள் உடலுக்குள்ளும் பாய்வதை எதைக் கொண்டும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. இந்தப் பாடல் முடிந்த பின்னும் உடல் அதிர்வதை ஒவ்வொரு முறையும் உணரமுடிகிறது. ரகுமானின் மீது மிகப்பெரிய காதலை வரவழைத்த பாடல் "ரெஹ்னா து!" காற்றில் வார்த்தையை லயத்தோடு அடிவயிற்றிலிருந்து துப்பும் வித்தையைத்தான் ரகுமான் அவரது குரலில் நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் பாடலை விட, இசையை விட, ரகுமானின் குரல் எனக்குப் பிடித்திருந்தது. மற்ற ஆறு பாடல்கள் என்னை வசீகரித்ததே தவிர இந்த நான்கு பாடல்களைப் போல பைத்தியம் பிடிக்க வைக்க வில்லை.

இதற்கு முன்பு ஒரே திரைப்படத்தின் பாடல்களை அல்லது ஒரே ஆல்பத்தை தொடர்ச்சியாய் நான்கு மாதங்களுக்கு மேலாய் கேட்டதில்லை. தில்லி 6 பாடல்களை கேட்டிராத நாளே இல்லையெனத்தான் சொல்லவேண்டும். இன்றைய தினம் வரை குறைந்துவிடாத ஈர்ப்புடன் இவ்விசை இருக்கிறது. இதுவரைக்குமான ரகுமானின் இசை வாழ்வில் தில்லி 6 ஒரு அற்புதம். இதை அவராலே தோற்கடிக்க முடிந்தால் அதுவே ரகுமானின் சாதனையாகவிருக்கும். இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வமே எனக்கு இல்லாமலிருந்தது. இந்த இசைக்கு முகங்களையோ, நடன அசைவுகளையோ பொருத்திப் பார்க்க நான் விரும்பவில்லை. டிவிடி வாங்கி வெகு நாள் கழித்து கடந்த வாரம்தான் நண்பர்களோடு பார்த்தேன். இசையை சிதைக்காமல் படமாக்கியிருந்த விதம் மிகுந்த ஆறுதலாய் இருந்தது. "ரெஹ்னா து" இசையும் "மெளலா மேரே" பாடலும் படம் முழுக்க சிதறியிருந்தது மிகுந்த மகிழ்வைத் தந்தது. படத்தில் நிறைய விசயங்களை பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். எதையும் திணிக்காமல் காட்சிகளை அதன் போக்கில் விட்டிருப்பது நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. " தில் கீரா கஹி பல் தஃபதன்" பாடலுக்கான கற்பனையும் ரசிக்கும்படி இருந்தது. மஸாக்களி பாடல் படு கச்சிதமாய் படமாக்கப்பட்டிருந்தது. தில்லி 6 இந்தி(ய) சினிமாக்களில் நல்லதொரு மாற்றமாகத்தான் இருந்தது.

தில்லி 6 தந்த அதே கிறக்கத்தை அன்வர் படப்பாடல்களும் தந்தன. சொல்லப்போனால் அன்வரில் வரும் "மெளலா மேரே மெளலா" பாடலை தில்லி 6 க்கு முன்பிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வகையில் ரகுமானின் பிரம்மாண்டத்தின் முன்பு Mithoon Sharma, Pankaj Awasthi க்களின் இசை காணாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அர்ஸியோனுக்கு சற்றும் குறைந்திடாத பாடல்தான் "துசே நைநோ" நண்பர் வெங்கியின் மூலம்தான் இப்பாடலை நான் தவறவிட்டிருந்தது தெரிய வந்தது. அவருக்கு என் நன்றி. மேலும் இப்படத்தில் வரும் மூன்று நிமிட பாடல் வரிகளில்லாத இசை ஆலாபணைகள் இந்த இரவுகளை அழகாக்கிவிட்டுப் போகின்றன.

இவ்விரண்டு தொகுப்புகள் தந்த உற்சாகம் இந்துஸ்தானி, கஜல் மற்றும் சூஃபி இசையைத் தேட வைத்தது. சென்ற வாரத்தில் சில கஜல் மற்றும் சூஃபி குறுந்தட்டுக்களை வாங்கினேன். Nayyara Noor, Noorjehan, Farida Khanum, Shahita Parveen, Munni Begum, Abida Parveen, Reshma போன்ற கஜல் பாடகர்களின் தொகுப்புகளும் கிடைத்தது. இப்பெயர்களை கஜல் மற்றும் உருதுக் கவிதைகளில் நன்கு பரிச்சயமான ஆசாத்திடம் சொன்னபோது
அவர் புரிந்து கொள்வது சற்றுக் கடினம்தான் என்றார். விரைவில் வரப் போகும் ஓய்வு நாட்களில் இந்த இசைகள் என் அமைதிப் பொழுதுகளை நிரப்பலாம்.

  ©Template by Dicas Blogger.

TOPO