Thursday, February 4, 2010

குருவிகளின் பாடலும் மீன்களின் சிதறலும்


மஜித் மஜிதியின் The Song of Sparrows திரைப்படத்தினை முன் வைத்து….

அந்தச் சிறுவர்கள் தத்தமது குடும்பத்தாரின் இடையூறுகளையும் தாண்டி பாழடைந்த ஒரு குளத்தினை சீரமைத்து தங்க மீன்களை வளர்க்க விரும்புகின்றனர். பூச்செடிகளை நகரத்தினுக்கு கொண்டு போகும் நாளொன்றில் அவர்களுக்கு வளர்க்க மீன்கள் கிடைக்கின்றன. அவர்களின் உயரத்தினுக்கு சமமான ஒரு பிளாஸ்டிக் வாளியில் தங்க மீன்களை வாங்கி அப்பூச்செடிகளுக்கு அடியில் மறைத்து வைக்கின்றனர். போகும் வழியெங்கும் அந்த மீன்களை வளர்ப்பது பற்றி, அவை பல்கிப் பெருகப் போவதைப் பற்றி மிகுந்த ஆவலுடன் பேசிக் கொள்கின்றனர். செடிகளை இறக்க வேண்டிய இடம் வந்ததும் சிறுவர்கள் தொட்டிச் செடிகளை வண்டியிலிருந்து இறக்கி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்கின்றனர். அப்போதுதான் அவ்வாளியினுள் ஓட்டை விழுந்திருப்பதை ஒரு சிறுவன் கவனிக்கிறான். ஏராளமான தண்ணீர் ஏற்கனவே வெளியேறிவிட்டிருக்கிறது. கூச்சலிட்டு மற்ற சிறுவர்களை அழைக்கிறான். அனைவரும் வண்டியிலேறி வாளிக்கு மேல் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளை வேக வேகமாய் அப்புறப்படுத்துகின்றனர். மீன்கள் இறந்துவிடுமென பயந்து வாளியினை வெளியிலெடுக்க இடையூராய் இருக்கும் தொட்டிச் செடிகளை வீசி எறிகின்றனர். வண்டியிலிருந்து அவ்வாளியினை தூக்க முடியாமல் தூக்கிக் கீழிறக்குகின்றனர். சற்றுத் தள்ளி வாய்க்கால் ஒன்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது அதை வாளியினுள் நிரப்பி மீன்களை காப்பாற்றி விடலாம் என்கிற உத்வேகங்களோடு அவ்வாளியைத் தூக்கியபடி ஓட முனைகின்றனர். சிறுவர்களின் மென்பிடி நழுவ பிளாஸ்டிக் வாளி உடைந்து மீன்கள் சிமெண்ட் தரையில் சிதறுகின்றன. பதைபதைப்புகளோடு பார்த்துக் கொண்டிருக்கும் நான் அவர்களோடு சேர்ந்து கொண்டு அய்யோ! வென சத்தமாய் அலறுகிறேன். சுவாசம் தடைபட்ட தங்க மீன்கள் உயிர் வாழ வேண்டி சிமெண்ட் தரையில் துடிக்கின்றன. மிகுந்த துக்கங்களோடும், அழுகையோடும் அச் சிறுவர்கள் துடிக்கும் மீன்களை அருகில் ஓடும் நீரில் தள்ளிவிடுகின்றனர். அதிர்ச்சியில் குமைந்து போய் இயலாமையில் வெகு நேரம் மருகிக் கொண்டிருக்கிறேன். மஜித் மஜிதியை வெறுக்கும்/நேசிக்கும் கணம் இதுவாகத்தானிருக்கிறது.


இரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் சமீபத்திய படமான The Song of Sparrows ல் வரும் ஒரு காட்சிதான் மேல் குறிப்பிட்டது. பார்வையாளர்களின் சமநிலையைக் குலைப்பதுதான் இவரின் எல்லாத் திரைப்படங்களின் அடிநாதமாகவும் வெற்றியாகவும் இருக்கிறது. பெரும்பாலும் சிறுவர்கள், பதின்மர்கள் மற்றும் சாமான்யர்களின் வாழ்வுதான் மஜித் மஜிதி பயணிக்கும் திசையாக இருக்கிறது. எளிமையான மனிதர்களிடம் நிரம்பிக் கிடக்கும் அன்பு, மனித நேயம், கருணை இவற்றை முன் நிறுத்தாமல் வெகு இயல்பான குணமாக காட்சிப்படுத்துவது இவரின் தனிச் சிறப்பு. எளியோர்களின் வாழ்வினை தேவைகள் பழிவாங்கும் குரூரம், சிறுவர்களின் அக உலகம், பதின்மர்களின் மனச் சிக்கல்கள் என்பவையெல்லாம் மஜித் மஜிதி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும், நம் முன் வைக்கும் கதைகளாக இருந்து வருகின்றன.

மஜித்தின் திரைப்படங்களில் மீனும் நீரும் முக்கியப் படிமமாக காட்சிப் படுத்தப்படுகிறது. இரானிய சினிமாக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட திரைப்படிமம் மீனாக இருக்கலாம். எளிய மனிதர்களின் இயலாமையை, அவர்கள் வாழ்வின் குரூரங்களால் பழிவாங்கப் படுவதை காட்சிப்படுத்தும் அழகியல் படிமமாக மீன்களை குறிப்பாய் தங்க மீன்களை கையாள்வது இரானிய இயக்குனர்களின் தனித் தன்மையாக இருக்கிறது. சில்ரன் ஆப் ஹெவனின் கடைசிக் காட்சியை இதுவரைக்குமான மஜித்தின் திரையாக்கங்களின் கவித்துவ உச்சம் என்றும் கூட சொல்லி விட முடியும். ஒரு சிறுவனின் இரத்தம் தோய்ந்த கால் விரல்களை மீன்கள் கடிக்கும் காட்சிதான் அது. ஃபாதர் திரைப்படத்தின் இறுதிக் காட்சியிலும் இரத்தம் தோய்ந்த சிறுவனின் கரங்கள் நீரில் அலையும் காட்சியை வைத்திருப்பார். Baron திரைப்படத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாது பார்வைகளில் மட்டுமே நேசத்தினைப் பரிமாறிக் கொள்ளும் அப்பெண் விடைபெறும் காட்சியில் மழை ஒரு பாத்திரமாய் இடம் பெற்றிருக்கும். குழைந்த சேற்று மண்ணில் பதிந்திருக்கும் அவளின் பாதச் சுவட்டில் மழை நீர் நிறையும் காட்சி மிகக் கவனமாய் பதியப்பட்டிருக்கும். நீர் மனிதனின் ஆதாரம் மட்டுமல்ல ஆசுவாசமும் அதுதான் என்பதுதான் இவர் தரும் செய்தியாக இருக்கிறது.

The Song of Sparrows என்கிற இந்தப் படம் தீக்கோழிப் பண்ணை ஒன்றிலிருந்து துவங்குகிறது. பண்ணையில் பணிபுரியும் கரீம் ஒரு நாள் திரும்பி வராத தீக்கோழி ஒன்றினுக்குப் பொறுப்பேற்று வேலையை இழக்கிறார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் வாழ்வாதாரத்தினுக்காக வேறு வேலை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் கரீம் எதிர்பாராத விதமாய் வாடகை ஓட்டுனராகிறார். தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் நகரம் முழுவதும் அலைந்து திரிந்து பயணிகளை / பொருட்களை ஏற்றிச் செல்கிறார். முன்பு பார்த்துக் கொண்டிருந்த வேலையில் கிடைத்த பணத்தை விட அதிகம் சம்பாதிக்கிறார். அவரின் குடும்பம், குழந்தைகள், சுற்றியுள்ள மனிதர்கள், அவருடைய ஓட்டுனர் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள், மேலும் அவருக்கு நிகழும் எதிர்பாராத விபத்து இதைச் சுற்றிப் படம் நகர்ந்து ஒரு சிறிய நம்பிக்கையுடன் நிறைவடைகிறது.


பணத்தின் அத்தியாவசியமும் முக்கியத்துவமும் உழைக்கும் மனிதர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டிருப்பதை படம் நெடுகிலும் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். ஒரு சிறுமி போக்குவரத்து நெரிசல்களுக்கிடையில் சாம்பிராணிப் புகையை வாகனங்களுக்கு விசிறியபடி பணத்தை யாசிக்கிறாள். அவளது சிறு பிராயமும், குரலும் சிக்னலில் காத்திருக்கும் கரீமை நெகிழ்த்த தன் சட்டைப் பையினுள் துழாவி 500 டோமன்களை எடுக்கிறார். ஆனால் அதையே அச்சிறுமிக்குத் தர அவரின் வாழ்வு இடம் தராததால் காத்திருக்கும் பிற வாகனங்களின் கதவுகளைத் தட்டி 500 டோமன்களுக்கு சில்லறை கிடைக்குமா என சோதிக்கிறார். 500 டோமனுக்கு சில்லறை வைத்திருக்குமளவுக்கு ஏழைகள் அங்கு இல்லாததால் பலரிடம் சோதித்தும் 500 டோமனை மாற்ற முடியாமல் போகிறது. மிகுந்த வருத்தங்களோடு அச்சிறுமியைப் பார்த்தபடியே கரீம் சிக்னலைக் கடக்கிறார். அன்பு, கரிசனம், மனித நேயம் போன்ற உணர்வுகளெல்லாம் கூட பணத் தேவையின் பிரம்மாண்டங்களின் முன் நிறமிழந்து போவதை இந்தக் காட்சி மிக அழுத்தமாய் பதிவிக்கிறது.

அன்றாட வாழ்வினுக்கான பணத்தை அன்றைய நாளின் உழைப்பில் மட்டுமே ஈட்ட முடியும் மனிதர்களின் வாழ்வு ஏராளமான திருப்பங்களைக் கொண்டிருக்கும். தொடர்ந்து வரும் நெருக்கடிகள், அம்மனிதனைச் சார்ந்திருக்கும் குடும்பம், தேவைகள் என ஏகப்பட்ட சவால்களுடன் கடினமான உடலுழைப்பையும் கோரும் வேலையும் அம்மனிதனை விழுங்கக் காத்திருக்கும். எல்லாவற்றையும் எதிர் கொள்ள அம்மனிதனுக்கு பெரும் உந்து சக்தியாக இருப்பது வாழ்வின் மீதான விருப்பமும், தன் குடும்பம் என்கிற அமைப்பின் மீதான காதலும் தான். இந்த ஆதார நம்பிக்கைகள்தாம் அன்றாடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் மிகப் பெரிய பலமாகவும் இருக்கிறது.

கரீம் மகளின் காது கேட்கும் கருவி செயலற்றுப் போகிறது. புதிய கருவி வாங்குவதற்கான பணத்தை சேமிப்பதற்குள் அவர் விபத்துக்குள்ளாகிறார். கால்களுக்கு மருந்திடும் மகளை வருடியபடி குணமானதும் புதிய கருவி வாங்கிவிடலாம் என ஆதூரமாய் சொல்கிறார். கேட்காத கருவி இப்போது பேட்டரி மாற்றியதும் இயங்குவதாயும் பாடங்களைக் கேட்க முடிவதாயும் அவளின் மகள் சொல்கையில் மகிழும் கரீம் உண்மையில் அக்கருவி இயங்காதிருப்பதையும் உடனே தெரிந்து கொள்கிறார். இந்தக் காட்சியில் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர்தான் நெகிழ்வாய் இருக்க முடியும்.

வாழ்விலிருந்து திரையையும் திரையிலிருந்து வாழ்வையும் இணைக்கும் பாலமாக மஜித் மஜிதி தொடர்ந்து இயங்குகிறார். அவரின் திரை வாழ்வில் இக்குருவிகளின் பாடல் மிக முக்கியமானது.

Monday, February 1, 2010

த்ராபை / மறுதலிக்கப்பட்ட சொற்குவியல்கள்

குளியலறையின் ஈரச் சுவற்றில்
எலுமிச்சை மர அடிக் கிளையில்
தக்காளிச் செடிக் குவியலின் வேர்களில்
பசும்நெடு புற்களில்
இன்னும் ஈரம் காய்ந்திடா
இடமெங்கிலும்
திசைக்கொன்றாய் பயணித்தபடி
எப்போதும் நிரம்பிடாத
தன் நீர்க்கூடுகளை
நிதானமாய்
சுமந்தலைகின்றன
அதிகாலை நத்தைகள்
உங்களால் எப்படி சாரா இப்படி மிருதுவாய் பேச முடிகிறது? உண்மையில் நீங்கள் அன்பின் வடிவம் சாரா! அன்பானவர்களுக்கு ஒரே மாதிரியான உருவம் வாய்ப்பது எத்தனை ஆச்சர்யம் பாருங்களேன்! பெரிய்ய கண்களும் சற்றுச் சரிந்த முலைகளும் இருக்கும் எல்லா பெண்களும் அன்பானவர்களாய்த்தான் இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. உங்களைப் பார்த்த கணத்திலே தீர்மானித்து விட்டேன் நீங்கள் என்னை அன்பு செய்வீர்களென ஆனால் இத்தனை அதிகமான அன்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை சாரா. என் மீது இத்தனை அன்பாய் இருக்காதீர்கள். என்னால் தாங்கிக் கொள்ள முடியாத சுமையாக உங்களின் அக்கறைகளும் நேசங்களும் என்னை ஆக்ரமிக்கின்றன சாரா. இப்பொழுதுதான் என்றில்லாமல் எப்பொழுதிலும் உங்கள் நினைவாகவே இருக்கிறது சாரா. சென்ற வாரத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தீர்கள் இல்லயா அந்தப் புன்னகை பகல் முழுக்க இரவு முழுக்க என் நினைவுகளில் நிமிடத்திற்கொரு முறை வந்து வந்து போய்க்கொண்டிருந்தது சாரா. இனிமேல் அப்படிப் புன்னகைக்காதீர்கள் சாரா.

நேற்றய அதிகாலைக் கனவில் உங்கள் பூவுடலுடன் கலவிக் கொண்டிருந்தேன் உங்களுக்கு வலிக்குமே என மிக மிக மிருதுவாய் உங்களுடல் கலக்கையில் இந்த அலாரம் அலற ஆரம்பித்தது. என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை சாரா, சனியன் எப்போது கத்துவது என்கிற விவஸ்தை வேண்டாமா? விழிகளைத் திறக்காது கையால் துழாவியெடுத்து அந்தச் சனியனை தூக்கி எறிந்தேன். அது எதன் மீதோ மோதி சிதறிப் போனது. நான் மிக மென்மையானவன் தான் சாரா ஆனால் நம்மிருவருக்குமிடையில் இடைஞ்சல் வருவதை நான் விரும்பவில்லை தடைகள் இடைஞ்சல்கள் சிக்கல்கள் பிரச்சினைகள் என எந்த வகையிலும் உங்கள் நெற்றியை சுருங்க வைக்க விடமாட்டேன் சாரா. இந்த அலாரச் சனியனால் உங்களின் உடல் எவ்வளவு திடுக்கிட்டிருக்கும் அது கனவாகவே இருப்பினும் கூட என்னால் இந்த அதிர்ச்சியிலிருந்து விலக முடியவில்லை. மீண்டும் அக்கனவினுள் என்னால் புக முடியவில்லை. கனவில் நீங்கள் வெற்றுடலுடன் காத்திருப்பீர்களே எனப் பதறி பதறி கனவினுள் புக முயன்று தோற்றேன்.

என் நேற்றைய காலை நரகமாய் இருந்தது சாரா அதனால்தான் வெளியில் எங்கும் போகாமல் அறைக்கதவை இறுக்கமாய் சாத்திக் கொண்டு உள்ளேயே இருந்துவிட்டேன். நேற்றைய பகல் கதவை யாரும் தட்டியிருக்கவில்லை. பால்கனிக்கு ஒரே ஒரு புறா மட்டும் வந்தமர்ந்து போனது. அறை முழுக்க உங்களின் அன்பைத்தான் நிரப்பி வைத்திருந்தேன் சாரா. நேற்றுப் பகல் முழுதும் உங்கள் அன்பில்தான் திளைத்திருந்தேன் உங்களின் நினைவு மிக மகிழ்வாய் இருக்கிறது சாரா. நீங்கள் ஏன் சாரா இத்தனை அழகாய் பிறந்து தொலைத்தீர்கள். ஐ லவ் யூ சாரா உங்களின் பேரன்பில் பேரழகில் நான் நீந்திக் களிக்கிறேன். ஐ லவ் யூ சாரா.

நன்றிப் பெருக்கில் என் இதயம் ததும்பி வழிகிறது சாரா. எனக்கு இங்கு கிடைத்திருப்பவை எல்லாமே மிகுதிதான். உலகத்தின் எல்லா சிறந்தவற்றையும் நான் அனுபவித்து விட்டேன் சாரா. உங்கள் முலைகளின் மீது எனக்கு பைத்தியம் சாரா. கனவில் நினைவில் பிறழ்வில் இயல்பில் மாறாத ஒன்று உங்களின் முலைத் தழுவித் தூங்கிப் போதல் மட்டுமே. இன்றைய பிற்பகலில் உங்கள் முலைத் தழுவிக் கிடந்தது கனவா நிஜமா எனத் தெரியவில்லை. கனவிற்கும் நிஜத்திற்குமான வேறுபாடுகளில் நான் வெளிறிப் போவதில்லை சாரா. கனவு நிஜமாகவும் நிஜம் கனவாகவும் ஏன் இருக்கக் கூடாது. நிகழ் – நிழல், நிழல் - நிகழ் என எந்த வித்தியாசங்களுமில்லை சாரா, நீங்கள் மட்டும்தான் எல்லாவற்றிலும் நிரம்பி வழிகிறீர்கள் அதில் நான் திளைக்கிறேன். உச்ச கட்ட நெகிழ்வில் நான் இளகி நதியாகிறேன் சாரா. உங்களை ஏந்தி பயணிப்பேன்.
0

ஒரு பின் மதிய மேலோட்டப் புணர்வில் உடைந்த அவளுடைய இளஞ்சிவப்பு நிறக் கண்ணாடி வளையல் துண்டெடுத்து மார்பில் அப்போதுதான் முளைவிட ஆரம்பித்திருந்த மயிர்களுக்கு மத்தியில் என் மீது படுத்த வாக்கிலேயே மூன்று இடங்களில் லேசாய் கீறினாள். இரத்தம் துளிர்த்து வியர்வைக் கசகசப்புகளோடு எரிந்தது. சிவப்பு வண்ணம் பூசியிருந்த குளிர்ந்திருந்த சிமெண்ட் தரையில் என் மீது படுத்திருந்தவளை மல்லாத்தி அவள் விளையாட்டில் கிழிபட்டு லேசாய் கசிந்த இரத்தத் துளிகளை ஆட்காட்டி விரல் நுனியில் சேகரித்து ஏற்கனவே தளர்ந்திருந்த அவளது மேல் சட்டையை வலது பக்கமாய் முற்றும் விலக்கி என் பெயரினை எழுதினேன்.

0

எப்போதும் அறை நிறைக்கும் சூரியனை இன்று காணவில்லை. புரண்டு மணி பார்க்கையில் ஒன்பது மணியாகியிருந்தது. எழுந்து திரைச்சீலைகளை அகற்றுகையில் சத்தமில்லாத மழை சன்னலுக்கு வெளியே கோடுகளாய் இறங்கிக் கொண்டிருந்தது. விழித்தெழுந்த காலையில் முதலில் பார்க்கும் மென்மழை மிகுந்த உற்சாகத்தை தருவதாய் இருந்தது. ஒரு பெரிய வீட்டின் மேல் தளமிது. கிழக்கு பக்கம் வாசலும் மேற்கில் அகலமான பால்கனியும் இருப்பதால் குளிர் காலங்களில் சூரிய உதயத்தையும் வெயில் காலங்களில் சூரிய அஸ்தமனத்தையும் தேநீரோடு சாவகாசமாய் அமர்ந்து பார்க்க இந்த வீடு மிகவும் வசதியாய் இருந்தது. சற்றுத் தள்ளிக் கடல் இருப்பதால் இரவில் அலைகளின் சப்தத்தைக் கூட கேட்க இயலும். இதுபோன்ற ஒரு மழை நாளில்தான் வீணா இந்த வீட்டிற்கு வந்தாள். ஒழுங்கற்றவனின் வீடு மட்டும் எப்படி இத்தனை ஒழுங்காய் இருக்கிறது என சிரித்தபடியே கேட்டாள். பால்கனியில் சரிந்திருந்த புங்கை மரக் கிளையிலிருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. வீடு முழுக்க ஈரமும் மெல்லிதான இருளும் ஒலிப்பானில் கசிந்த கொண்டிருந்த மொஸார்டும் அவளை ஏதோ செய்திருக்க வேண்டும். இம்மாதிரி வீட்டில் வசிப்பதற்காக உன் மாதிரி ஜந்துக்களையும் சகித்துக் கொள்ளலாம் என்றாள். ஜந்துக்கள் என்ன செய்யும் என்பதை அவளுக்கு காண்பித்த நாளும் அதுதான்.

தன் நீளக் கூந்தலை பால்கனி மரத்திலிருந்து சொட்டும் மழை நீர் படும்படி விரித்து தரையில் படுத்திருந்தாள். கருப்பு நிறப் பின்னணியில் வெள்ளைப் பூக்கள் சிதறிய காட்டன் புடவை அணிந்து வந்திருந்தாள். அதன் முந்தானையை அகலமாய் தரையில் பரப்பி இடக்காலை சற்று மடித்து வலது காலை முழுதுமாய் நீட்டி அவள் படுத்திருந்தாள். மழை அவள் கூந்தலை நனைத்து என்னுள் இறங்க ஆரம்பித்திருந்தது.

நான் மொஸார்டை நிறுத்தினேன். இசைத்து வெகுநாள் ஆகியிருந்த பியானோவை உயிர்பித்தேன் அவள் படுத்திருந்த இடத்திலிருந்து ஆங்கில எழுத்து T வாக்கில் நான் அமர்ந்து இசைக்கத் துவங்கினேன். பயிற்சிக்காய் வாசித்துப் பழகிய குறிப்புகளை இசைக்கத் துவங்கியதும் அவள் கண்களை மூடிக் கொண்டாள். மழை அதே மென்மையோடு தொடர்ந்து கொண்டிருந்தது. நான் என் வானிலே வை வாசிக்கத் துவங்கியதும் அவள் எழுந்து கொண்டாள் அந்தப் பாடலை நான் வாசித்து முடிக்கும் வரை அசையாது அமர்ந்திருந்தாள். பின்பு எழுந்து வந்து பியானோ மரச்சட்டங்களில் வலது கை முட்டி யூன்றியபடி என் கண்களை ஆழமாய் பார்க்கத் துவங்கினாள்.

0

சொந்த ஊரில் வசிக்க நேர்ந்தால் என்னால் ஒரு வரி கூட எழுத முடியாதெனத்தான் தோன்றுகிறது எழுத வேண்டிய அவசியமும் நேர்வதில்லை. நேரப் போதாமின்மை என்பதை விட எல்லாவற்றையும் எழுத்துக்களாக்கிப் பார்க்கும், தன்னுலகத்தைப் பிரதானப்படுத்தி பொதுவில் வைக்கும் அல்லது எழுத்தின் மூலமாக அக அரிப்பை, விளம்பர நமைச்சலைத் தீர்த்துக் கொள்ளும் மனநிலை சொந்த நில வாழ்வில் இல்லாதிருப்பதும் எழுத்தை உற்பத்திச் செய்யாதிருப்பதிற்கான காரணங்களாக இருக்கலாம். மேலும் எழுத்தை செய்பவர்களுடனான சகவாசமும் இல்லாதிருப்பதால் நமைச்சல்கள் சற்றுக் குறைவுதான். எனக்குத் தெரிந்த எழுத்தாளர் நண்பர்கள் பலர் எழுதுவதை நிறுத்தி விட்டிருக்கிறார்கள், அல்லது பல வருடங்களாய் ஒன்றுமே எழுதுவதில்லை. அவர்களின் இந்த நிலைப்பாட்டின் மீது எனக்கு வாஞ்சை இருக்கிறது. எவரிடமும் நீங்கள் ஏன் எழுதுவதில்லை என்ற கேள்வியை கேட்க விரும்புவதில்லை. மேலும் முன்பொரு காலத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சமீபத்திய எழுத்துக்களையெல்லாம் கவனமாகத் தவிர்த்து விடுகிறேன். என்றைன்றைக்குமானவைகள் சிலரால் மட்டுமே சாத்தியமாகின்றன. அல்லது அப்படி எதுவும் இல்லாதிருக்கவும் கூடும்.

எழுதுவது என்பதிலிருந்து செய்வதினுக்கு நகர்வது மனிதனின் அற்பத் தனங்களில் ஒன்றுதான். இதெல்லாம் எழுதப்பட்டது இதெல்லாம் செய்யப்பட்டது என திட்டவட்டமாய் எதையும் சொல்லிவிடமுடியாதுதான் என்றாலும் அவரவருக்கு போலித்தனமாய் தோன்றும் எழுத்துக்கள் அந்தந்த வாசகனின் துயரமாகத்தான் இருக்கிறது. தான் இயங்கும் தளத்தின் விரிவையும் ஆழத்தையும் உணர்பவனால் மட்டுமே ஓரளவிற்கு நேர்மையானவற்றை நிகழ்த்திக் காட்ட முடியும் பூனையின் கண் கொண்டு இப்பரப்பில் பிதுங்கி வழிபவர்களால் உண்டாவது வாசகனின் வெளியேற்றம் மட்டுமே.

0

நீர் சேகரித்த
நத்தைக் கூடுகள்
கானகத்தில் வழி தவறிய
சிறுவனின் தாகம் தணிக்கலாம்
பாதாளச் சிறையிலடைக்கப்பட்ட
இளவரசியை உயிர்த்திருக்க வைக்கலாம்
நண்பகல் வரை கத்திக்கொண்டிருந்த
தவிட்டு வால் குருவியின் தொண்டையை
இதப்படுத்தலாம்.
தேனுண்ணும் வண்ணத்துப் பூச்சியினுக்கோ
கவிதை எழுதும் எனக்கோ
தாகம் குறித்துச் சொல்ல
எதுவுமில்லை
ஒருவேளை
மென் சிறு புன்னகையை
எப்போதும் தேக்கி வைத்திருக்கும்
அவளின் ஈர உதடுகளுக்குத்
தெரிந்திருக்கலாம்

Friday, January 29, 2010

வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்



நாளை (சனிக்கிழமை - 30.1.2010) மாலையும், நாளை மறுநாள் (ஞாயிறு - 31.1.2010) காலையும்,நடக்க இருந்த வம்சி புத்தக வெளியீடுகள் புக்பாயிண்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கீழ்க்கண்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


சனிக்கிழமை (30.1.2010) மாலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை



ஞாயிறு (31.1.2010) காலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

இக்‌ஷா மையம்
பாந்தியன் சாலை
(மியூசியம் அருகில்)
எக்மோர்

இதனை வாசிக்கும் நண்பர்கள், தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள். எரிந்து போன புத்தகங்களுக்கும் புக் பாயிண்ட் நிர்வாகத்தினுக்கும் ஆழ்ந்த வருத்தங்கள்.

Tuesday, January 26, 2010

ஆயிரத்தில் ஒருவன் - புனைவின் கொண்டாட்டம்


குவாண்டின் டராண்டினோவின் சமீபத்திய படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது புனைவின் அதிகபட்ச சாத்தியங்களில் ஒன்று என நினைத்துக் கொண்டேன். இதே மாதிரி உணர்வைத்தான் ஆயிரத்தின் ஒருவனும் தந்தது. வரலாற்றை தம் வசதிக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வது அல்லது தம் கதைக்குள் வரலாறை உலவவிடுவது போன்றவையெல்லாம் புனைக்கதையாளனின் தந்திரமாய்த்தான் இருக்க முடியும். பார்வையாளன் அல்லது வாசகனுக்கான புதிய அனுபவத்தினை தருவதின் நோக்கம் மட்டுமே இவையென்பதால் fantasy எனப் பெயரிட்டுக் கொண்டு இம்மாதிரி சிலத் திரிபுகளை அனுபவிப்பதில் நமது தமிழ் சினிமாவின் அறம் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாதுதான்.

இயக்குனர் செல்வராகவன் தமிழின் மிக சொற்பமான நம்பிக்கை. கதாநாயகர்களின் படம் என்கிற நெடுங்கால அடையாளத்தை இயக்குனரின் படமாக மாற்றிய மிகச் சில இயக்குனர்களில் ஒருவர். சற்றே மந்தமான நாயகர்கள், புத்திசாலிப் பெண்கள், வெளிப்படைக் காமம், வன்முறையின் பரவசம், விளிம்பு நிலை வாழ்வு, ஆண் மய்ய பிம்பங்களின் தகர்வுகள் இவற்றையெல்லாம் தமிழ் திரையில் சாத்தியமாக்கியவர். கிட்டத் தட்ட இதே கூறுகளைக் கொண்ட இன்னொரு படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இவரது எல்லா படங்களிலும் வரும் வழக்கமான நெருப்பு நடனத்திற்கு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னனான பார்த்திபனும் சம காலத்தைச் சேர்ந்த கார்த்தியும் நடனமாடும்போது நான் புனைவின் உச்ச பட்ச சாத்தியங்களை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொண்டேன்.

வரலாற்றையும் சமகாலத்தையும் இணைக்கும் துணிச்சல் அசாத்தியமானது. இம்மாதிரியான ஒரு துணிச்சல் நம்மவரிடையே இருக்கிறது என்பதில் இலேசான பெருமிதமும் எனக்கு ஏற்பட்டது. சினிமா இரசிகன் என்கிற முறையில் தமிழ் சினிமாவின் அபத்தங்களின் மீதும் நாயக பிம்பங்களின் மீதும் கடுமையான கோபங்களும் எரிச்சலும் ஆழ்மனதில் விரவியிருக்கின்றன. இம்மாதிரியான சில முயற்சிகளே மிகப் பெரும் கொண்டாட்ட மனநிலையைத் தந்து விடுவதற்கான காரணம் பெருகிப்போன அபத்தங்கள்தாம் என்றால் அது மிகையில்லை.

சிறுவர் படக்கதைகளிலும் மாயாஜாலக் கதைகளிலும் மூழ்கிக் கிடந்த என் சிறுபிராயத்து உற்சாகங்களை இப்படத்தின் முதல் பாதியில் மீட்டெடுத்தேன். விட்டலாச்சார்யா காலத்திலிருந்தே நமது சூழலில் ஏழு கண்ணிகள் பாதுகாவலுடன் உயிர் ஒன்று உலவிக் கொண்டிருக்கிறதுதான் என்றாலும் அதைக் கச்சிதமாகவும் பிரம்மாண்டமாகவும் பார்க்க மிகவும் பிடித்திருந்தது. இரு கன்னியருடன் உயிரைப் பணயம் வைத்து ஏழு கண்ணிகளை கடந்த பின்பு தென்படும் சிதிலமான புராதண நகரம் சுவாரசியத்தின் துளியைப் பார்வையாளனுக்குப் பருகத் தருகிறது. ஒட்டகக் கறி மற்றும் மதுவினோடு கச்சிதமான பாடலும் சேர்ந்து கொள்ள மரண பயத்திலிருந்தும் நெடிய பசியிலிருந்தும் மீண்ட மன நிலையை பார்வையாளனும் அடைகிறான். திடீரென கேட்கும் பெரும் சப்தத்தினால் மூவரும் மனம் பிறழ்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் மரணத்தை விளையாட்டாக்குவதும் இதுவரைக்குமான தமிழ் திரையின் முதல் காட்சியின்பக் காட்சிகள். மிகத் தட்டையாக சொல்லப்போனால் இந்த ஒரு காட்சியினுக்காகவே இந்தப் படத்தை மிகத் தாரளமாகக் கொண்டாடலாம்.

மிக அடர்த்தியான இரண்டாம் பகுதி பார்வையாளனை வேறொரு திசையில் பயணிக்க வைக்கிறது. வரலாறையும் நிகழையும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதில் தவிர்க்க முடியாத நடைமுறைச் சிக்கல்கள் இடை இடையே தலை காட்டுகிறதுதாம் என்றாலும். மக்களின் மொழி அரச மொழி இவற்றில் காண்பிக்கப் பட்டிருக்கும் வித்தியாசங்கள், இரும்புக் குண்டு சகிதமாய் அடிமைகளை கொன்று குவிக்கும் மல்லனுடனான யுத்தக் காட்சி, வசீகரமும் அடர்த்தியான நஞ்சும் கொண்ட நாகத்தினை நினைவூட்டும்படியான ரீமாசென்னின் கதாபாத்திரம் மற்றும் எம்மாதிரியான வாழ்வியல் சூழலிலும் அரசர்கள் சுகபோகமாகவே இருந்தனர் என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பதும் அதிமாயா நெருடல்களை குறைக்க உதவியிருக்கின்றன.

செல்வா, யுவன், அரவிந்த் கிருஷ்ணா கூட்டணி உடைந்த பின்னர் வரும் முதல் படமென்பதால் தரம் குறித்தான சந்தேகங்கள் எனக்கிருந்தன. ட்ரெய்லரில் பார்த்திருந்த உன் மேல ஆசதான் பாடலெல்லாம் இம்மாதிரியான படத்தினுக்கு தேவையா என்கிற வருத்தமுமிருந்தது. ஆனால் படம் எந்த வித நெருடல்களையும் ஏற்படுத்தவில்லை மேலதிகமாய் கொண்டாட்ட மனநிலையையும் தந்தது. ஜி.வி. பிரகாஷின் இசையனுபவத்தைப் பொறுத்தவரை இம்மாதிரியான படத்தின் பின்னணி இசையென்பது குருவி தலையில் பனங்காய்தான். இசை படத்தினுக்கு உறுத்தலில்லாமல் இருந்ததே மிகப் பெரிய சாதனைதாம். ராம்ஜியின் ஒளிப்பதிவும் கச்சிதம்.

குவாண்டின் டராண்டினோவின் அனுகுமுறையே செல்வராகவனின் அனுகுமுறையாகவுமிருக்கிறது. அதிகாரத்தின் வரலாற்றை அதற்கு இணையான அல்லது அதைவிட பலம் வாய்ந்த அதிகாரத்தின் பக்கம் நின்று புனைவுகளின் துணைக் கொண்டு சிதைப்பதைத்தான் செலவராகவனும் நிகழ்த்தியிருக்கிறார். எல்லா அதிகாரங்களும் தின்று வளர்வது சாமன்யர்களின் உடல்களாக இருக்கிறதென்பதையும் எல்லா அதிகாரக் குறிகளும் நீள்வது உயிரை மட்டும் கொண்டிருக்கும் நைந்துபோன எம் பெண்டிர்களையும் சிறுமிகளையும் நோக்கித்தாம் என்பதையும் செல்வா காட்சிப்படுத்தத் தவறவில்லை.


செல்வராகவனுக்கு அடுத்தபடியான அபாரம் ரீமாசென். இனிமேல் இதுபோன்றதொரு கதாபாத்திரத்தில் இவரால் நடித்து விட முடியுமா என்பது நம் இந்தியச் சூழலில் சந்தேகமே. பருத்தி வீரன் ‘உதிரி’ கார்த்தி யினுக்கும் ஆ.ஒ ‘சாமான்ய’ கார்த்தி யினுக்கும் வித்தியாசங்கள் அதிகமில்லை. ஒரே ஒரு அழுக்கு நிஜாருடன் திரையில் அறிமுகமாகும் கதாநாயகனும் நமது புர்ச்சி, வீர, அதிரடி, தல, கால், கை, கன்றாவிகள் உலவும் சூழலில் இருக்கிறான் என்பதே ஆறுதலாக இருக்கிறது. பிரபலங்களின் குடும்பப் பின்னணி, முதல் படத்தின் மாபெரும் வெற்றி போன்றவைகள் இருந்தும் கூட ஆ.ஒ மாதிரியான கதாபாத்திரத்தினுக்காக இரண்டு வருடங்கள் செலவழித்த கார்த்தியினுக்குப் பாராட்டுக்கள். மேலதிகமாய் இப்படத்தின் பிரதான பாத்திரம் ரீமா சென்னாக இருந்தபோதும்கூட முழுமையான ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தமைக்கும் ஒரு விசேச பாராட்டு. ஆண்ட்ரியாவின் குரலில் சிறப்பாய் வந்திருந்த மாலை நேரம் பாடல் இடம்பெறாதது குறித்து வருத்தமெதுவுமில்லை. கிங்ஸ் அரைவல் போன்ற யுவனின் சாயல்களைத் தவிர்த்திருக்கலாம்.

ஆங்கிலத்தில் fantasy படங்கள் மாதத்தினுக்கு மூன்று என்கிற கணக்கில் மிகப் பிரம்மாண்டமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆயிரத்தில் ஒருவன் படமாக்கப் பட்டிருந்ததை விட பன்மடங்கு அதிகத் தரத்துடன் பிரம்மிப்புகளை திரையில் பெரும்பாலானோர் பார்த்திருக்கிறோம் என்றாலும் சன்குழுமங்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நிச்சயம் இஃதொரு மாற்றுப் படமே.

Tuesday, January 12, 2010

The Human Race - An Exhibition by Binu Bhaskar

The Human Race


An Exhibition by Binu Bhaskar

January 14th - February 25th 2010

Australian photographer Binu Bhaskar explores the perpetual motion of humans living in cities around the world. The never-ending universal race to get somewhere or achieve something is captured in a series of highly evocative studies that illustrate the restless human psyche.

Venue

The Mojo Gallery

No : 33, Al Serkal Avenue, Al Quoze, Dubai

www.themojogallery.com

Thursday, January 7, 2010

ஜனவரி 04, 1996

இந்த நாளிற்கானது இது என்றெல்லாம் கடந்த பதினான்கு வருடங்களாய் எதையும் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இறப்பின் கடைசி நொடியிலும் நினைவிலிருக்கும் நாளாகத்தான் இது இருக்கிறது. முதல் இரண்டு மூன்று வருடங்களில் குபுக்கெனப் பீறிட்டக் கண்ணீர் கூட நான்காம் வருடத்திலிருந்து சுரப்பதை நிறுத்திக் கொண்டது. வேறு எதையுமே செய்ய முடியாதென்கிற ஆற்றாமையில் இதைப்போலத்தான் பலகாலமாய் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பகாலத்தில் இந்நாளில் கிட்டிய காதலியின் மடி, கையழுத்தம், அரவணைப்பு, ஒரு துளிக் கண்ணீர் போன்றவையெல்லாம் என்றென்றும் நன்றிக்குறியவை. ஒரு போதும் அவளின் திசையறிந்து விடாமலிருக்கும் என் நிலைப்பாடுகளை நீட்டிக்கச் செய்பவை. முத்தங்களை விட அபூர்வமாய் துளிர்க்கும் ஒரு துளிக் கண்ணீரே எப்போதைக்குமான நன்றிக்கடனாய் தங்கிவிடுகிறது.

மெளனங்கள் புதைத்து வைத்திருக்கும் இரகசியங்களின் வெளி மிகவும் அபாயகரமானது. மிகப்பெரும் அதிர்விலும் அபூர்வ நெகிழ்விலும் கூட அவைகள் மெளனங்களை ஒரு போதும் மீற விரும்புவதில்லை. மேலும் அவைகள் அவைகளாகவே இருப்பதினால் மட்டுமே பெரும்பாலான ஒத்திகை வாழ்வுகள் தங்களது ஒப்பணைகளின் மீது மிகப்பெரும் நம்பிக்கையையும் ஆசுவாசத்தையும் வைத்திருக்கின்றன. மின்மினிகளின் சமிக்ஞைகளைப் போன்ற ஏதோ ஒன்றின் மினுக்கிடும் பாதி ஒளியில் எப்போதாவது அவைகள் தத்தமது முகம் பார்த்துக் கொள்ளக் கூடும். அவ்வொளியின் வீச்சில் உண்மையைப் போன்றதொரு வஸ்து செத்து மடிவதை எவராலும் தடுக்க இயலாது.

மரணத்தை அற்பமாக்குவதும் வாழ்வை அற்பமாக்குவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய செயல்தாம். இதன் மூலம் அதையும் அதன் மூலம் இதையும் பரஸ்பரம் அற்பமாக்கிக் கொள்ளலாம். மரணம், வாழ்வு இரண்டையும் அற்பமாக்குவது வெகு சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. எப்போதுமிருக்கும் இழப்புகளாகத் தங்கிவிடுவதென்பது எல்லாராலும் முடிவதில்லை. இல்லாதிருத்தல்கள் சிலரால் மட்டுமே சாத்தியமாகின்றன. அவர்கள் எப்போதைக்குமான தங்களின் இருத்தல்களை எல்லாரிடத்தும் ஊன்றிவிட்டு காலத்தோடு தங்களின் பெளதீக இருப்பை கரைத்துக் கொள்கின்றனர். இஃது இன்னொரு வகையில் பிறருக்கு வலிந்து வாழ்தலாய், கூடுதல் சுமையாய் அமைந்துவிடுகிறதுதான் என்றாலும் வாழ்வென்பது ஒருபோதும் பிறருக்கானது இல்லை அது மிகுந்த சுயநலமானது.

0

இந்த வருடத்திற்கான உனது நாளும் சாம்பல் வண்ணத்தையே கொண்டிருந்தது. சொல்ல முடியாத இறுக்கத்தை எப்படியோ ஒவ்வொரு வருடத் துவக்கமும் கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றன. ஓரளவிற்கு உன் கனவுகள் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றியாகிவிட்டது. நாம் இப்போது வந்து சேர்ந்திருக்கும் உயரங்களின் மிகுதி நீயோ நாங்களோ எதிர்பார்த்திராததுதான். இனிமேல் செய்ய வேண்டியது பெரிதாய் ஒன்றுமில்லை. இதுவரைக்குமான எங்களின் நகர்வுகளின் பின்னால் விசையாக இருந்தது நீதான் என்கிற நம்பிக்கைகள் எப்போதுமிருக்கின்றன. இந்த வருடம் உன் பெயரைச் சூடிய பிஞ்சிடம் பெரியப்பாவைக் கும்பிடச் சொல்லிக் கொண்டிருந்தோம்.

Wednesday, December 30, 2009

வனமழிக்கும் தீயின் ஊற்று - நதியலை

இரவின் நிசப்தமாய் அணைப்பின் கதகதப்பாய் முத்தத்தின் ஈரமாய் அடக்கவியலா கண்ணீரின் ஊற்றாய் அந்தி மேகத்தீற்றலாய் குழைத்து குழைத்து ஊட்டப்படும் உணவின் ருசியாய் பகிரப்பட்டிருக்கின்றன அய்யனாரின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். பிரம்மாண்டமான மாளிகைகள் தராத சுகத்தைச் சின்னஞ்சிறு மரக்குடில் தந்துவிடுவதைப்போன்றது இக் குறுங்கவிதைகள். அந்தந்த நேரத்து நெகிழ்வை, ஆசையை, நினைவை, விரக்தியை, சோகத்தை எவ்வித பூச்சும் வர்ணனைகளுமில்லாமல் அப்படியே வார்த்தைகளை கோர்த்து அளித்திருக்கின்றார். ஏக்கத்தை, தவிப்பை, அன்பை சொல்லும் கவிதைகளை பெரும்பாலும் காதல் கவிதைகள் என்றே முத்திரை பதித்து விடுகின்றோம். இப்பதிவில் உள்ள பெரும்பாலான கவிதைகள் காதல் என்ற சட்டத்திற்குள் அறையப்படாது பொதுவாக நேசத்தை மொழியும் கவிதைகளாகவே பார்க்கத்தோன்றியது.

உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படையாக சொல்ல முடிவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. ஆனால் அப்படி தொடர்ந்து வெளிப்படுத்தப்படுவதாலேயே சில உணர்வுகள் மலிந்து விட்டன. அதிகமாக பயன்படுத்திப் பயன்படுத்தியே அதன் வீர்யத்தை குறைத்துவிட்டோமோவென எண்ணத்தோன்றுமளவுக்கு பல வார்த்தைகளை சக்கையாக்கிவிட்ட நிலையில் இதையெல்லாம் சொல்லத்தான் வேணுமா? என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குகின்றது. இப்படி சொல்லுவதா வேண்டாமா என்ற குழப்பநிலையில் சொல்லாமல் விடுவதின் விளைவுகளை அழகாக ஒப்பிட்டுள்ளார் இவ்வரிகளில்

‘சிலவற்றை சொல்லாமல் விடுவது
மழை மாலையில் முத்தங்களை தவறவிடுவதற்கு ஒப்பானது’
இப்படி உணர்வுகளை வெளிக்காட்டிவிடுவதின் நலன்களை அறிந்திருந்தும் தனது ப்ரியங்களை சொல்லிவிட முடியாமல் தவிக்கும் மனதினுக்கு மயிலிறகால் நீவிவிடுவதையொத்த சுகத்தை, ஆறுதலை இவ்வரிகளில் தேக்கி வைத்திருக்கிறார்.
“சொல்லப்படாதவைகள்
இந்த பயணங்களை
கொஞ்சம் நீட்டிக்கச் செய்யலாம்
-----------
-----------
அச்சிறு கால நீட்டிப்புகளுக்குள்
வாழ்ந்துவிட்டுப்போகட்டும் நமக்கான
'இது'”
மேலும் ‘நமக்கான இதில் மெளனங்களே மிகவும் வசதியானது’ என்கிறார். வசதி கருதி மௌனமாக இருப்பதா அல்லது சொல்லிவிடுவதே நல்லதா என்பவையெல்லாம் அனுபவத்தால் நன்கு அறிந்திருந்தாலும் அன்றாட வாழ்வில் சொல்லவேண்டுவதை சொல்ல முடியாமல்போவதாலும் சொல்ல வேண்டாமென்று நினைப்பவற்றை கொட்டித்தீர்ப்பதாலும் இழக்கும் முத்தங்கள் பெருகிக்கொண்டேயிருப்பதான விபரீதங்கள் தொடரத்தானே செய்கின்றன.

அன்பில் திளைக்கும் மனதினுக்கு மகிழ்ச்சியையோ துக்கத்தையோ அள்ளித்தர ஒரு சிறு நகர்வு போதுமானதாக இருக்கின்றது. நேசம் நிறைந்திருக்கும் உள்ளத்தில் மொத்தமாக குழைவும் நெகிழ்வும் குடிகொண்டுவிடுகின்றது. கிளர்வு புத்துணர்ச்சி படபடப்பு என எல்லாம் கலந்த உணர்வில் தளும்பும் மனதை அதே கோட்டில் உணர முடியாதவர்களுக்கு இத்தகைய அதீத நேசங்கள் சலிப்பானதாகவே இருந்துவிடுவது சாபமென்றாலும் எக்காரணத்திற்காகவும் விரிந்து நீளும் அன்பின் பரப்பை மடங்கி சுருட்டுவது இயலாக் காரியமாகத்தானாகின்றது என்பதை சொல்கின்றன இவ்வரிகள்.
“உனக்கான என் அன்பை
ஆக்டோபஸின் வடிவமொத்து
எல்லாத் திசைகளிலும்
விரித்தாயிற்று
ஒரு புள்ளியில் குவிய
இனிமேல் சாத்தியமில்லை”

ஆனால் ஒப்பற்று ஓங்கி உயரும் நேசங்கள் விளங்கிக்கொள்ளப்படும்போது அந்த மகிழ்ச்சியை சுகமான பாரத்தை தாங்கொனா களிப்பை எதிர்கொள்வது சற்று திக்குமுக்காட வைக்கும் சங்கதிதான் என்பதை சொல்கிறார் இப்படி

“தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை”
ஒருமித்து கலக்கும் இதயங்கள் சாதாரணமாக பேசும் மொழிகள் கூட கவிதையாகிவிடுகின்றன என்பதாக தோன்றியது மீன் தொட்டியில் இருக்கும் அழகான மீனுக்கு அவளின் பெயரை சூட்டியதாகவும் அதை ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன் என்று அழைப்பதாக இருக்கும் கவிதை. நாமும் சென்று ரகசியமாக அம்மீனை கண்டுவரலாமோவென ஆவல் எழுப்பும் கவிதையது.

நுண்ணுணர்வுள்ள எந்த ஒரு இதயத்தையும் தனிமை தீண்டாமல் இருந்ததில்லை. நீங்காமல் உடனிருக்க பலரிருந்தும் தனிமையில் ஏங்கிக்கிடக்க எங்கிருந்தோ காரணமில்லா சோகம் தொத்திக்கொள்ள பலவேளைகளில் எதுதான் வேண்டுமென அறியாமல் மருண்டு அவளின் அருகாமை மட்டுமே நாடும். தன்னை சரியாக புரிந்துக்கொள்ள மாட்டாளாவென இடைவிடாத நிரந்தரமான தவிப்பு தங்கிவிடும். அப்படியான பொழுதுகளில் தன் நேசத்தை, வேட்கையை, ஊசலாட்டத்தை இத்தனை கச்சிதமாகவும் வடித்துவிடமுடியுமோ!

“நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்”
தனிமையிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறிக்கொண்டு திணிக்கப்படும் வாழ்வில் கசங்கும் மனிதர்கள் ஏராளம். அப்படி தனிமை மட்டுமே வாய்க்கப்பெற்ற மனங்களின் மன்றாடல்கள் எத்தனை வேதனை மிகுந்ததாக இருக்கும். தனிமையின் இசையென தன் வலைபக்கத்துக்கு தலைப்பு வைத்திருக்கும் அய்யனார் அத்தனிமையிலிருந்து தப்பிக்க தனக்கான வழியாக சொல்வது…

“வேண்டுவதெல்லாம் வெதுவெதுப்பான
ஒரு மென் தொடுகை
அல்லது
விழிக்கையில் சிரிக்கும்
வெள்ளைப் பின்னனி கொண்ட
மிகப்பெரு இரு கரு நிற விழிகள்...”
வார்த்தைகளால் விளங்கச்செய்ய முடியாத அன்பை, தர முடியாத நம்பிக்கையை, உணரமுடியாத நெருக்கத்தை முத்தத்தின் அழுத்தமோ அணைப்பின் இறுக்கமோ எடுத்துரைத்துவிடுகின்றன. அதேபோல் முத்தங்களை மொழியும் கவிதைகள் முத்தங்களை போன்று கிளர்ச்சியூட்டவும் செய்கின்றன. அப்படியான சில வரிகள்…

“அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது”

“இப்போது உன் உதடுகளிலிருந்து
துவங்குவதே மிகச்சரியானதாயிருக்கக்கூடும்”
எதிர்ப்பார்ப்பதோ ஆசைபடுவதோ தானாக நிறைவேறிடுவது சுகம்தானெனினும் கேட்டு வாங்கி கொள்வதும் சுகமானதாகவே இருக்கின்றது காதலின் கொஞ்சல்களிலும் கெஞ்சல்களிலும். தனக்கான தேவையை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியங்கள் காதலில் இருப்பதில்லையென்றாலும் மறுப்புகளும் சிணுங்கள்களும் விலகல்களும் அதற்கான வித்துக்களாகின்றன. அப்படியான அழகான கெஞ்சலாக இருக்கின்றது ‘முத்தங்களிட்டு மலரச் செய்யேன் முதல் பூவை’ என்னும் வரிகள். ஆனால் அதையே வேறோர் கவிதையில் இப்படியும் பதிவு செய்கின்றார்.

“வனமழிக்கும்
தீயின் ஊற்று
உன் உதடுகளாய் இருக்கலாம்”
நேசிக்கும் உயிர்கள் எல்லாம் தொடர்ந்து ஒன்றாக வாழ நேரிடமுடியாமல் போவதுகூட என்றென்றைக்குமாக அக்காதலை நீடிக்கச்செய்கின்றதோ என்றே தோன்றுகின்றது. சேர்ந்து வாழ முடிந்தவர்கள் கூட தங்கள் காதலை வாழ்க்கைவோட்டத்தில் எங்கேனும் தொலைத்துவிட நேரிடலாம் ஆனால் பிரிந்தவர்களோ காலத்துக்கும் அக்காதலை சுமந்துக்கொண்டு நினைவுகளால் நீருற்றி வளர்த்துவருகின்றனர். காலத்துக்குமான வலிதான் இப்பிரிவு என்றாலும் அவ்வேதனைகளை கவிதைகளில் தவழவிட்டுப்பார்ப்பது சற்று ஆறுதலானதுதான். உருகி உருகி நேசிக்கும் தன்னவளை

“ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்”
என்பதைவிடவும் உயர்வாக கூறிவிடவும் முடியுமோ? பார்ப்பதோ பேசுவதோ அத்தனை எளிதில் நடக்கக்கூடிய காரியமில்லாமலிருந்தாலும் தவித்திருந்து காத்திருந்து பேசி பழகியவளை பிரிய நேரிட்டதை எவ்வித அழுகையோ புலம்பல்களோ இல்லாமல் கச்சிதமாக அந்த ரணத்தை சாதாரணமான வரிகளைக்கொண்டு அசாராதாணமாக சொல்லிவிடும் கவிதையில் அப்பிரிவின் வேதனையோடு வியப்பாகவும் இருந்தது இவ்வரிகளை வாசிக்கும்பொழுது.

“அவள் கடைசியாய் தொலைபேசியபோது
எங்களிருவரிடமும் சொந்தமாய் தொலைபேசி இருந்தது”

மனம் அடையும் முதிர்ச்சியும் மாற்றமும் தான் எத்தனை விசித்திரமானது. துக்கத்தையும் ஆனந்தத்தையும் சுழற்சிமுறையில் சுகிக்கும் வினோதங்களை நம்முள்ளேயே நிகழ்த்திக்காட்டி நம்மை வியக்கவைக்குமல்லவா காலம். பிரிவுத்துயரின் ஆற்றாமையால் வாடும் பிம்பங்களின் ரணங்களை சொல்லாமல் சொன்னவர் இதோ இக்கவிதையில் பிரிவும் ஆனந்தமென்கின்றார்.

"துளை வழி வந்த
உன் குரலின் வெம்மைகளை
எனதறை முழுக்க
நிரப்பித் தூங்கிப்போகிறேன்
நினைவுகளை வாரியணைத்தபடி
நீ தூங்குவதாய் சொல்கிறாய்
எவர் சொன்னது
பிரிவு
வலிகள் மிகுந்ததென?"
பற்றோ அல்லது ஈர்ப்போ எந்த ஒன்றிலும் முழுமையாக ஈடுபடச்செய்கின்றது. இதுதான் இதைநோக்கித்தான் இப்படி முடிவடையுமென்றுதான் என்ற எதோ ஒரு நம்பிக்கையில் தொடர்வது பல காரணங்களால் தடைப்படக்கூடும். அப்படி தானாக தடைப்படும் சந்தர்ப்பங்களில் எப்படியோ மனது சமாதானம் அடைந்துக்கொண்டு மாற்று வழிகளை கண்டடைந்து விடுகின்றது. ஆனால் நாமாக முடிவு செய்ய வேண்டிய தருணங்களில் தொடர்ந்துக்கொண்டிருப்பதை துண்டிப்பதா அல்லது தொடர்வதா என்ற குழப்பங்கள் நீடிக்கின்றன. வெகு தொலைவு நகர்ந்துவிட்ட பின்பு அதை துண்டித்துக்கொள்ள மனம் என்றுமே விழைவதில்லை. அதற்கான காரணங்கள் பலவாக இருந்துவிடுகின்றன அவற்றில் ஒரு காரணத்தை விளக்குவதாக இவ்வரிகள்

“இதுவரை கடந்திடாத தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்”
இதைப்போலவே பறவை என்ற படிமத்தைக்கொண்டு அழகாக வடிக்கப்பட்டுள்ள மற்றுமொரு கவிதை வரிகளில் எதேதோ எண்ணங்களிலும் கனவுகளிலும் கடந்து வந்த நிகழ்வுகளிலும் நம்மை மூழ்கடித்துக்கொண்டிருக்க கையிலிருக்கும் காலம் விலக்கிக்கொண்டிருப்பதாக சொல்கின்றார்.

“உதறி விழி திறக்கையில்
சன்னலருகில் சிறகுதிர்த்ததுப் பறந்திருந்தது
நிகழ் சிட்டுக்குருவி”
மென்மையானவர்கள் எல்லோருக்கும் காதல் அனுபவம் வாய்த்து விடுகின்றதா அல்லது காதலிப்பதால் மென்மையானவர்களாக மாற்றப்பட்டுவிடுகின்றார்களா என்று தோன்றுமளவுக்கு இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் மென்மையானவை. அடைமழைப்போல் பொழியாமல் மெல்லிய சாரலாக வருடுபவை. உள்ளம் பூரித்து பரவசிக்கும் நிலையில் உருகி உதிர்க்கும் வார்த்தைகளாகவே பட்டது இவ்வரிகளை வாசிக்கும் பொழுது

“அவளின் முகமேந்தியபடி சொன்னேன்
பூவீன்ற இப்பறவையும்
இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்
அபூர்வமானவர்களென”
இவ்வளவு மென்மையை தன்னுள் தேக்கிக்கொண்டவரால் மட்டுமே இப்படியும் தீ கக்க முடியும் என்று உணர்த்தியது “கண்களுக்கெதிரில் நுரையின் பின் விரிந்திருக்கிறது எல்லைகளற்ற நீலம்” என்ற வரிகளை கொண்ட சிறப்பான கவிதை. தன் கவிதைகளில் நெகிழ்வை கொண்டுவருவதற்காக மெனக்கெட வைத்த முயற்சிகளை சொல்வதாக அமைந்த கவிதையும் சிறப்பு. அதில் “இப்போதெல்லாம் உங்களால் நெகிழ்வை உணரமுடிகிறதல்லவா என் கவிதைகளில்?” என்ற வரிகளை வாசிக்கும்போது ஆமென்று புன்னகையோடு பூரணமாய் ஒப்புக்கொள்ளமுடிகின்றது.

மென்தொடுகைக்கும் இறுக அணைத்தலுக்கும், நெற்றி முகர்தலுக்கும் இதழ் முத்தத்திற்கும் உள்ள வேறுபாடு போலத்தான் இவரின் இரண்டு கவிதைத் தொகுப்புகளான நானிலும் நுழையும் வெளிச்சமும் தனிமையின் இசையும். இதிலுள்ள கவிதைகள் எல்லாம் நேசத்தை மென்மையாக மிதமாகச்சொல்பவை. எந்த திருகலும் இசங்களும் உள்நுழையவிடாமல் எதார்த்தமாய் நிகழம் உள்ள வெளிப்பாடாக தன் மனவோட்டத்தை பதிவித்திருக்கிறார். அடர்த்தியாக கட்டிய பூமாலைக்களுக்கிடையில் இது போன்று மணம்வீசும் உதிரிப்பூக்களும் தேவையாகத்தானிருக்கின்றன.

‘நானிலும் நுழையும் வெளிச்சம்’ என்ற இக்கவிதை தொகுப்புடன் ‘உரையாடலினி (சிறுகதை)’, ‘தனிமையின் இசை (கவிதைகள்)’, என்ற புத்தகங்களை வெளிகொண்டுவரும் அய்யனார் இலக்கிய பரப்பில் மேலும் பல அடர்த்தியான படைப்புகளை கொண்டுவரவும், விரைவில் தன் முதல் நாவலை எழுதி முடித்து வெளியிடவும் வாழ்த்துக்கள்.

நதியலை
20 நவம்பர் 2009

  ©Template by Dicas Blogger.

TOPO