
அங்காடித் தெருவின் திரைக்கதையிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட அற்புதமான சிறுகதைகள் பிரிந்து செல்கின்றன. அல்லது பல சிறுகதைகள் சேர்ந்து ஒரே திரைக்கதையாய் பிணையப்பட்டிருக்கிறது. இப்படம் முழுக்க சிதறியிருக்கும் கதாபாத்திரங்களுக்கு விரிவாய் சொல்லப்படாது விட்ட அழுத்தமான பின்புலம் இருக்கிறது. அதை ஒரு காட்சியின் மூலமோ, சிறியதொரு உரையாடலின் மூலமோ மொத்தமாய் பார்வையாளனுக்கு கடத்தி விட முடிவது அதி நேர்த்தியான இயக்கமாகத்தான் இருக்க முடியும்.
1. செளந்திர பாண்டி – ராணியின் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மட்டுமே ஒரு தேர்ந்த சிறுகதையாக கண் முன் விரிகிறது.
தட்டிக் கழிக்க முடியாத குடும்ப பொறுப்புகளும், வறுமையும், வேலையின்மை குறித்த அச்சமும் செளந்திரபாண்டியை இயலாமையின் உச்சத்தினுக்கு நகர்த்திவிட்டிருக்கிறது. தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டால் இருவருக்குமே வேலை போய்விடும், குடும்பம் தெருவிற்கு வந்துவிடும் என்கிற பலவீனம் பலரின் முன் தன் காதலை ஒத்துக் கொள்ள அவனை மறுக்க வைக்கிறது. இரண்டு வருடங்களாய் பின்னால் அலைந்த ஆண் காதலிப்பதாய் உருகிய காதலன் பொதுவில் தன்னை வேசை யென்றும் தன்னை அவன் காதலிக்கவே இல்லையென்றும் சொன்ன அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாது (கனி யின் வார்த்தைகளில் : அவன் ராணிய வேசைன்னு சொன்னான் பார் அப்பவே அவ நெஞ்சு வெடிச்சி செத்து போயிட்டா அப்புறம் கீழ விழுந்தது வெறும் உடல்தான்) ராணி மாடி கண்ணாடி சன்னலை உடைத்துக் கொண்டு தரைக்குப் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். வேலை, காதலி வாழ்க்கை என சகலமும் இழந்து பைத்தியமாகும் செளந்திரபாண்டி ஆண்களுக்கு ஆத்மார்த்தமாகவும். காதலுக்காக உயிர் நீத்த ராணி பெண்களுக்கான ஆதர்சமாகவும் மாறிப்போகிறார்கள். வறுமை என்கிற ஒரே பலவீனத்தை மிக மோசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அதிகார வர்க்கம் ஒரு பெண்ணைக் கொன்றும் இன்னொருவனைப் பைத்தியமாக்கியுமாய் கெக்கலிக்கிறது. பார்வையாளர்களாகிய நாம் உறைந்து போகிறோம்.
2. கனியின் பதிமூன்று வயது தங்கை - அவள் பணிபுரியும் வீடு - சடங்காதல் -தீட்டு என கொல்லையில் நாய்கள் கட்டும் இடத்தில் தங்க வைத்தல் – இந்தாடி அம்பது ரூபா என்பதை உதறிவிட்டுப் போதல் - சடங்கான பெண்ணை கூட்டிக்கொண்டு எங்கே போவதெனத் தெரியாமல் நடுத்தெருவில் கதறுதல் – தீட்டு மனுசங்களுக்குதான் சாமிக்கு இல்ல என மனித நேயமிக்க மனிதர்கள் சிலர் அரவணைத்துக் கொள்ளுதல். இது இன்னொரு நேர்த்தியான சிறுகதை.
3. வளர்ச்சிக் குன்றிய மனிதருக்கு பிறக்கும் குழந்தை அவரைப் போலவே இருக்கிறதென மகிழும் முன்னாள் பாலியல் தொழிலாளித் தாய். இந்தக் கதையை மட்டுமே விவரித்து எழுதினால் சிறந்த சிறுகதையாக வரும் என்பதில் சந்தேகமில்லை
4. வெளியில் பளபளப்பாய் திரியும் பணக்காரப் பெண்ணின் குசுவினால் ஓடி மறையும் ஏழை இளைஞர்கள் பகுதி மிகுந்த எள்ளலோடு பதியப்பட்ட எதிர் கதையாடல்.
5. எட்டு வருடங்களாய் பனிரெண்டு மணி நேரங்கள் நின்றபடியே வேலை பார்த்ததில் இரண்டு கால்களும் முழுதாய் வெரிக்கோசு நோய் தாக்கி அதே ரங்கநாதன் தெருவில் மடியும் நடுத்தர வயதுக்காரர்.
முப்பது வருடங்களாய் மனிதர்களை மட்டும் நம்பி ரங்கநாதன் தெருவில் கடைபோட்ட கண் தெரியாத முதியவர், பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் நகராட்சிக் கக்கூஸை ஆக்ரமித்து செல்வந்தனாகும் நடுத்தர வயதுக்காரர், பழைய சட்டைகளை துவைத்து புதிதாக லேபிள் ஒட்டி பேக்கிங் செய்து பத்து ரூபாய்க்கு விற்கும் இளைஞர், வெளியூரில் அண்ணன் வேலை செய்யும் கடையின் பெயர் போட்ட பையை தயக்கத்தோடு கேட்டு வாங்கி குதூகலிக்கும் சிறுமி என படம் முழுக்க கதாபாத்திரங்களும் கதைகளும் சிதறிக் கிடக்கின்றன.
எல்லாக் கதைகளும் எல்லாக் கதாபாத்திரங்களும் விளிம்பு மனிதர்களின் மீது பாயும் அதிகாரங்களின் வெறியாட்டத்தையும் தின்றுக் கொழுத்த பணக்காரர்களின் குரூர முகத்தினையும் அப்பட்டமாக தோலுறிக்கின்றன. அதே நேரத்தில் மனித நேயத்தையும் சிறியதொரு நம்பிக்கை வெளிச்சத்தையும் பார்வையாளர்களிடத்தில் கடத்தவும் தவறவில்லை.
விபத்து இந்தப் படத்தில் வெகு கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் சாமான்யர்களின் உயிரைத்தான் காவு வாங்குகின்றன. சாமான்யன் ஒரு தனிமனிதனுமல்ல. மரணமோ, உடல் ஊனமோ அது அவனுக்கு மட்டும் நேராது அவனைச் சார்ந்துள்ள குடும்பத்தினுக்கும் நேரும் அவலத்தையும் அங்காடித் தெரு

திரையாக்கத்தைப் பொறுத்த வரை அங்காடித் தெரு வெயிலின் நகலாகத்தான் வந்திருக்கிறது. இரு படங்களும் வெவ்வேறு தளம்தான் என்றாலும். ஒரு பெண்ணின் தற்கொலையோடு முடியும் முதல் பாதி, பால்ய கால முன் கதைக் காட்சியமைப்புகள், மிகுந்த சப்தங்களோடு பெய்யும் மழையில் சண்டை, வலிந்து திணிக்கப்படும் குரூரம், கிளிட்சே அழுகை என பலக் காட்சிகளில் வெயிலின் பாதிப்பு இருந்தது. இம்மாதிரியான பேட்டன் கதை சொல்லல் முறைகளிடம் வசந்த பாலன் போன்றவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. இந்த படத்தின் மிக மோசமான விஷயம் இசை. குதூகலம், கொண்டாட்டம், துயரம், என எந்த உணர்வையுமே இசை தூண்டவில்லை. மாறாய் காட்சிகளின் வீர்யத்தை இசை சற்றே குறைக்கிறது. பின்னணி இசையை சரியாகப் பயன்படுத்தும் இயக்குனராக நம் சூழலில் பாலுமகேந்திராவை சொல்லலாம். அவர் இயக்கத்தில் வந்த பெரும்பாலான படங்களின் பின்னணி இசையென்பது மெளனமும், காற்றும், பறவைகளின் சப்தமும் அல்லது சூழல்களின் ஒலிகளாகத்தான் இருக்கும் அதுவே அக்காட்சிகளின் இயல்பைக் குலைக்காது பார்த்துக்கொள்ள உதவும். இம்மாதிரியான படங்களுக்கு நடனத்துடன் கூடிய பாடல் காட்சிகளெல்லாம் பொருந்தாது உறுத்தலாகி விடுகின்றன. படத்தின் இயக்குனரே எழுதும் உரையாடலுக்கும் எழுத்தாளரின் உரையாடலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை ஜெயமோகன் சரியாய் நிறுவியிருக்கிறார். இரண்டாம் பாதி தொய்வை திரைக்கதையில் சற்று சரி செய்திருக்கலாம். ஆனந்தியாக நின்று போயிருந்த அஞ்சலி கனியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார். படத்தை உயிரோட்டமாக வைத்திருப்பதில் இவரின் பங்கு பிரதானமாகிறது.
சொற்பமான ஆட்கள் மட்டுமே அமர இயலும் துபாய் கலேரியாவின் குட்டித் திரையரங்கில் மிக சொற்பமான ஆட்களுன் இத்திரைப்படத்தைப் பார்த்தேன். இடைவேளையில் கழிவறையில் இருபத்தாறு வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் அழுகையைக் கட்டுப் படுத்த முனைந்து தோற்றுக் கொண்டிருந்தார். சில காட்சிகளில் பின்னிருக்கைப் பெண்களின் விசும்பல்களும் துல்லியமாய் கேட்டன. படம் பார்த்து இரண்டு நாட்களாகியும் ஏதோ ஒரு நிம்மதியின்மையை உணர்வதாக நண்பியொருத்தி புலம்பிக் கொண்டிருந்தாள். இவைதாம் இத்திரைப்படத்தின் வெற்றியாகவிருக்கிறது.