Saturday, September 27, 2008

ஜே.பி.சாணக்யாவின் கனவுப் புத்தகம்

திருவண்ணாமலையிலிருந்தும் பவா செல்லதுரையை சந்தித்திருக்கவில்லை.அவரின் முற்றம் இலக்கிய கூட்டங்களுக்கு வேடிக்கைப் பார்க்கச் செல்வதோடு சரி.சென்ற வாரத்தில் ஒரு நாள் அவர் நடத்தும் வம்சி புத்தக கடைக்குச் சென்றிருந்தேன்.திருவண்ணாமலையில் அத்தனை
பெரிய கடையை எதிர்பார்த்திருக்கவில்லை.மேலதிகமாய் எளிதில் கிடைக்காத உலக சினிமாக்களையும் தேடிப்பிடித்து வைத்திருக்கிறார்.அவரின் துணைவியாரும் நன்றாய் அறியப்பட்ட எழுத்தாளரே.மலையாள மொழிபெயர்ப்புகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இருவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி வந்தேன்.இணைய எழுத்துக்களின் பரிச்சயம் இல்லாவிடினும் ஜெமோ, சாரு, எஸ்ரா, கீற்று வலைப்பக்கங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அவருக்கும் எனக்குமான நண்பர்கள் பொதுவாக இருந்ததால வெகு நேரம் பேச வசதியாய் இருந்தது.கோபிகிருஷ்ணனை மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவுபடுத்திக் கொண்டார்.இவர்களின் மூன்று வயது மகன் இறந்தபோது இரண்டு தினங்கள் கோபி ஒரே இடத்தில் அசையாது அமர்ந்திருந்ததாக குறிப்பிட்டார்.தமிழினி பதிப்பகம் கோபியின் மொத்த படைப்புகளையும் ஒரே நூலாக கொண்டு வரும் முயற்சிகளில் இருப்பதையும் பகிர்ந்து கொண்டார்.

ஜேபி சாணக்யாவின் கனவுப் புத்தகம்-சிறுகதை தொகுதியும்,அரசியலறிவு அரைவேக்காட்டுத் தனமாய் இருப்பதால் அ.மார்க்சின் புத்தகங்கள் இரண்டும் (அ.மார்க்சை படித்தாலே அகில அரசியல் ஞானமும் கிட்டும் என்கிற முழுவெந்த ஞானமும் எனக்கு சமீபத்தில்தான் கிட்டியது)பவா செல்லதுரை மற்றும் அவரின் துணைவியார் ஷைலஜா எழுதிய புத்தகங்களையும் வாங்கினேன்.old boy திரைப்படமும் ஏழுமலை ஜமா என்கிற குறும்படமும் உடன் வாங்கினேன்.

சாணக்யாவின் கதைகளை இதற்கு முன்பு படித்திருக்கவில்லை.மோகன்தாஸ் ஒரு முறை கேட்டிருந்தது நினைவில் வரவே கனவுப் புத்தகத்தை முதலில் படித்தேன். காலச்சுவடு, தீராநதி, தலித் போன்ற இதழ்களில் வெளிவந்த கதைகள் இவை.கடவுளின் நூலகம்,கோடை வெயில்,பதியம், கண்ணாமூச்சி, கறுப்புக் குதிரைகள், ஆண்களின் படித்துறை, இரண்டாவது ஆப்பிள், அமராவதியின் பூனை, மஞ்சள் நீலம் வெள்ளை,கனவுப்புத்தகம் ஆகிய பத்து சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது.கடவுளின் நூலகம் ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டு விட்ட கதைச்சூழல்தான் என்றாலும் வினோதங்களின் வண்ணங்களை சற்றே குழைத்துக் கொடுக்கப்பட்ட புனைவு 'மாதிரி'தான்.எழுத்து நடையிலும் அத்தனை வசீகரமில்லை.

இரண்டாவது கதையான கோடை வெயிலை படித்து முடித்ததும் புத்தகத்தை தொடர்ந்து படிக்க முடியவில்லை.சொல்லொணா கசப்பும,எரிச்சலும்,
கோபமும் மண்டியது.இப்படி ஒரு மனநிலைக்கு வாசகனைத் தள்ளுவது எழுத்தின் வெற்றியாக கருதப்படலாமெனினும் அடிப்படை நம்பிக்கைகளை தூக்கி எறியச் செய்யும்,சகல புனிதங்களையும் வெகு சுலபமாய் தீக்கிரையாக்கும் இது போன்ற முடிவுகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி மிகவும் வன்மமானது.பிரதான சாலையை ஒட்டிய அரசுத் தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மனிதர்களின் வாழ்வு, கோடை வெய்யிலின் உக்கிரத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. பி.ஏ படித்தும் வேலை கிடைக்காத சேகர், தன் மனைவி வசந்தாவோடு வறுமையில் உழலுகிறான்.ஒரு நாள் வீட்டிற்கு வரும் அவர்களின் போலீஸ்கார உறவினர், சேகருக்கு வேலை ஏற்பாடு செய்வதாக உறுதியளிக்கிறார்.இருவரும் கள்ளருந்திவிட்டு மகிழ்வுடன் வீடு திரும்புகிறார்கள்.சமைப்பதற்காக கறியெடுக்க வெளியில் செல்லும் சேகர் திரும்பி வருகையில் அந்த வீட்டின் அறை உட்புறமாய் தாழிடப்பட்டிருக்கிறது.சன்னல்களும் இறுக சாத்தப்பட் டிருக்கின்றன.குமைந்து போகும் சேகர் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ அலைந்து விட்டுத் திரும்புகிறான்.கணவன் மீது மிகுந்த அன்பு கொண்ட வசந்தா தேவையின் நிபந்தனைக்காக அண்ணன் என விளிக்கும் உறவுக்காரனோடு உறவு கொள்கிறாள்.இயலாமைகளை சுமந்து திரியும் சேகர் மனதில் அவனை கொலை செய்கிறான்.இயல்பில் அழக்கூட முடியாமல் உறைந்து போகிறான்.இக்கதையின் கடைசிப் பக்கம்
ஏற்படுத்திய அழுத்ததிலிருந்து விடுபட வெகுநேரமாயிற்று.

வாசலில் வேண்டுமென்றே தீவிரத்துடன் சைக்கிளைச் சத்தம் அதிர நிறுத்தி ஒயர் கூடையை உருவி எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான.அவர் ஒருக்களித்துப் படுத்துக்கிடந்தார்.அவர் முதுகைப் பிரதானப்படுத்தும் அக்கோணம் அவர் உடலை ஒரு விலங்கு போலக் காட்டியது.அவர் வேண்டுமென்றே முகம் காட்டாமல் கண்மூடிப் படுத்திருப்பது போன்றிருந்தது.உள்ளே சென்றான்.தோட்டத்தில் வசந்தா ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது.அவள் முகத்தைத் தேடிப்பற்றியபடி முன்நகர்ந்தபோது அவள் அவனைப் பார்த்துவிட்டு புளிச்சக்கையை வெளியே வீசினாள்.கறிக்கூடையை அவளின் பக்கமாய் வைத்துவிட்டு சட்டையைக் கழற்றினான்.அவள் முகம் அலம்பியிருந்தாள்.கன்னத்திலும் காதோர மேற்புரங்களிலும் முடிக்கற்றைகள் ஈரப் பளபளப்புடன் ஒட்டிக் கொண்டிருந்தன. மேலுடம்பில் பளிச்சென மாற்றம் தெரிவதைப் பார்த்தான்.ஜாக்கெட் மாற்றியிருந்தாள். வெள்ளை நிறம்.அவள் முகத்தை மிக அருகில் பார்த்தான.அது ஆண்டு அனுபவித்த ஒரு பெரிய மனுஷியின் முகம் போலிருந்தது.அவள் கண்கள் ரத்தச் சிவப்பில் சோர்வுற்றிருந்தன. அவனைப் பார்த்துச் சிரித்தாள.ஓரு குழந்தையைப் போல இந்த க் கறிய அரிஞ்சி குடு என்றாள்.அவன் எங்கோ பார்த்தபடி நகர்ந்தான.பின்பு அவளே தோட்டத்திற்கு சென்று கவிச்சி அரிவாள்மணை எடுத்து வந்து திட்டமான துண்டுகளாக அறியத் தொடங்கினாள்.

அவன் திறந்திருந்த சன்னல் கம்பியைப் பற்றிக்கொண்டு நட்சத்திர வெளியை வெறித்தான்.அவனை யாரோ பலவந்தமாக அடித்துப் போட்டதுபோல் களைப்பாக உணர்ந்தான்.எவற்றையும் எதுவும் செய்து விட முடியாத இயலாமை அழுத்திப் பிடித்தது.எல்லாரும் பதறி பதறிக் கேட்க ஒன்றும் சொல்லாமல் கத்தி அழுதி தீர்க்க வேண்டும் போலிருந்தது.


பதியம் கூலி வேலைக்கு செல்லும் இளம் பெண்ணின் தீவிர காதலை சொல்கிறது.உழைப்பும், இறுமாப்பும், காதலும், விளிம்பு வாழ்க்கையும், இன்னும் நன்றாய் சொல்லப்பட்டிருக்கலாம்.

கண்ணாமூச்சி
யின் சூழல் ஜி.நாகராஜனுடையது.குப்பத்து வாழ்வை சில பக்கங்களின் கண்முன் கொண்டு வரும் எழுத்து.சக்களத்திகளாகும் தாயும் மகளும் மோதிக்கொள்கிறார்கள.கேட்கும்போதே பதறும் வாழ்வுதான் ஆனாலும் மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எழுத்துக்களினூடாய் பார்ப்பதே மிகுந்த வலியுடையதாய் இருக்கிறது.

ஆண்களின் படித்துறை
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை.
இக்கதையில் வரும் அன்னம் பாலியல் தொழிலாளி இல்லை.உழைத்து வாழும் பெண். மிக அழகானவள.அந்த கிராமமே வாயைப் பிளந்து பார்க்குமொரு அழகு.அவளிடம் வருபவர்களிடம் அவள் உறவு வைத்துக்கொள்வாள். அவளை, அவளுடம்பை பார்த்து வியப்பவருக்கு தன்னைக் கொடுப்பாள. பதிலுக்கு பணத்தையோ, தயவையோ எதிர்பார்க்க மாட்டாள்.இக்காதாபாத்திரமும் இன்னும் இத்தொகுப்பில் வரும் சில கதாபாத்திரங்களும் இதற்கு முன்பு அறிமுகமில்லாதது.முற்றிலும் புதிய மனிதர்களை முற்றிலுமொரு புதிய அலைக்கழிப்பை கதைகளுக்குள் பொருத்தியிருக்கும் சாணக்யாவின் எழுத்துக்களை தலித் அல்லது விளிம்பு நிலை எழுத்துக்கள் என வகைப்படுத்த
எனக்கு தயக்கமாய் இருக்கிறது.

சமீபத்தில் சோ தர்மன் இதுவரை தலித் எழுத்துக்கள் என நாம் சொல்லி வந்ததெல்லாம் கதாநாயகி லேசாய் சோரம் போவதாய் எழுதப்பட்டவை மாத்திரமே என்பதாய் ஒரு முத்தை உதிர்த்திருந்தார் இதைப் படித்த எழுச்சியே என்னால் சாணக்யாவின் எழுத்துக்களை தலித் என்கிற அடையாளததோடு பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க விரும்புகிறது.இக்கதைகளில் ஒழுக்கம் தவறுவது என்பது பிரதானமாய் இருக்கிறது (இவை ஒருவகையில் புனிதங்களை கட்டவிழ்க்கின்றன என்றாலும்) ஒழுக்கமென்பது உயர்குடிகளுக்கு மாத்திரமே எனக் கட்டமைக்கப்பட்ட புனிதங்களோடு பொருத்திப் பார்க்கையிலும, சோ தர்மனின் முத்து் நினைவுக்கு வருவதாலும் சாணக்யாவின் எழுத்துக்களை தலித் எழுத்துக்களாக என்னால் அணுக முடியவில்லை. மாறாய் இதுவரை காட்சிப்படுத்திடாத சில அபூர்வ தளங்களை, அலைவுறும் மனிதர்களை சாணக்யா சாதாரண மொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை மறுக்கவியலாது.

அமராவதியின் பூனை சிலம்பாட்ட கலைஞன் ஒருவனின் ஆண்மையையும் அதன் அவமானத்தையும் சொல்லும் கதை.பூனைபடிமங்களாலும், நுட்பங்களாலும், பாலுறவு விவரிப்பின் தெறிப்புகளாலும்
இன்னொரு தளத்திற்கு வாசகனை கொண்டு செல்லும் கதை.இதிலேயும் அமராவதியின் பிறழ்விற்கு அழுத்தமான காரணங்களில்லை.வீரமான, ஊரே போற்றும் ஆண்மகனைத் தாண்டியும் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் காசி அமராவதிக்கும் அவளின் பூனைக்கும் தேவைப்படுவது வினோதமாய் இருக்கிறது.இவை வலிந்து எழுதப்பட்டவையா? அல்லது தான் கண்ட மனிதர்களை புனைவுகளினூடாய் பதிவிக்கும் முயற்சியா? அல்லது கட்டமைக்கப்பட்ட உறவப் புனிதங்களை கலைத்துப் போடும் முயற்சியா? என தெளிவுகளற்றிருப்பினும் இன்னொரு மனிதர்களை, இன்னொரு வாழ்வை தனது கதைகளினூடாய் காட்சிப்படுத்திய ஜே.பி சாணக்யாவை வரவேற்போம்.

15 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அரசியலறிவுக்கு அ. மார்க்ஸ். ஓகே.
ஆண்மய்யத்திமிருக்கு என்ன செய்யப்போகிறீர்கள் :-)

Anonymous said...

ஆண்களின் படித்துறை கதையை உயிர்மையிலோ வேறெதிலோ படித்துவிட்டு, சாணக்யாவின் சிறுகதைத் தொகுப்பை படித்தேன்.

வாழ்வின் நம்பிக்கைகள் மீதான கேள்விகளை எழுப்பும் விதமான எழுத்து அவருடையது. மத்திய, மேல் மத்திய வகுப்பினருக்கு அவரது எழுத்துக்கள் சித்தரிக்கும் வாழ்க்கயும், உறவுகளும், சிக்கல்களும் நம்ப முடியாதவையாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் இருக்கும்.

நீங்கள் சொன்னது போல்

ஆனாலும் மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எழுத்துக்களினூடாய் பார்ப்பதே மிகுந்த வலியுடையதாய் இருக்கிறது.


சோ தர்மனின் தூர்வை நாவல் படித்தீர்களா?

MSK / Saravana said...

சாணக்யாவின் அறிமுகத்திற்கு நன்றி அய்யனார்..
:)

Anonymous said...

தமிழ்நாட்டுக்கு வந்தாச்சா? சொல்லவேயில்லை.ஆமாம். கல்யாணமாயிடுச்சுல்ல... இனி அடிக்கடி வரவேண்டியதாயிருக்கும்.

மானஸாஜென் said...

சிங்கப்பூரில் நவீன இலக்கியப் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் விதமாக 'வாசகர் வட்டம்' என்றொரு அமைப்பு இயங்கி வருகிறது. அதில் மாதம் ஒரு படைப்பினை வாசித்து விட்டு அதன் மீது அவரவர் வாசிப்பு அனுபவங்களை கட்டுரையாக எழுதிப் பகிர்ந்து கொள்வதுடன், அவைகளை விவாதிக்கவும் செய்கிறோம்.

ஜே.பி.சாணக்யா வின் கனவுப்புத்தகம் குறித்த கட்டுரையை இங்கே காணலாம்.

http://vasagarvattam.blogspot.com/2007_03_01_archive.html

மானஸாஜென்.

வளர்மதி said...

//அ.மார்க்சை படித்தாலே அகில அரசியல் ஞானமும் கிட்டும் என்கிற முழுவெந்த ஞானமும் எனக்கு சமீபத்தில்தான் கிட்டியது//

ம்ஹூம் ... ரொம்ப லேட் ... ப்ச்சே ... :(

வளர்மதி said...

//அரசியலறிவுக்கு அ. மார்க்ஸ். ஓகே.
ஆண்மய்யத்திமிருக்கு என்ன செய்யப்போகிறீர்கள் :-)//

சுந்தர் ... ப்ரெஞ்சு பருப்பைத் தான் கேட்க வேண்டும் ... அய்யோ ... 'பருப்பு' என்ற சொல் என்னை அறியாமல் விழுந்துவிட்டது ... நான் ஆணாதிக்கவாதியில்லை ... நான் ஆணாதிக்கவாதியில்லை ...

தமிழன்-கறுப்பி... said...

அறிமுகத்துக்ககு நன்றி தல...

தமிழன்-கறுப்பி... said...

\\
கேட்கும்போதே பதறும் வாழ்வுதான் ஆனாலும் மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எழுத்துக்களினூடாய் பார்ப்பதே மிகுந்த வலியுடையதாய் இருக்கிறது.
\\
ம்ம்ம்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஓ அரசியலறிவுக்கு அ.மார்க்ஸ் படிச்சா போதுமா இதுவரை தெரியாதே...

அப்புறம் புத்தக அறிமுகத்திற்கு நன்றி.. ஆனா விமர்சனத்துல எதுவோ மாறுபட்டு இருக்கு... எதுன்னு தெரியல.. புரிஞ்சா மற்படி எழுதறேன்...

ஆடுமாடு said...

அய்யனார், சாணக்கியாவின், 'ஆண்களின் படித்துறை' அருமையான கதை. படித்து வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் படிக்க வேண்டும்

ஷைலஜாவின் 'சிதம்பர ரகசியம்' வாங்கினீங்களா?

//அரசியலறிவுக்கு அ. மார்க்ஸ். ஓகே.
ஆண்மய்யத்திமிருக்கு என்ன செய்யப்போகிறீர்கள் :-)//

சுந்தர்ஜி நீங்களே சொல்லுங்களேன்.

Ayyanar Viswanath said...

சுந்தர்ஜி
அதுக்குலாம் ஒன்னியும் பண்ண முடியாது :D

உண்மைதான் வேலன்
தூர்வை படித்திருக்கிறேன்..பகிர்வுக்கு நன்றி..


நன்றி:சரவணக்குமார்

ஆமாம் அனானி

Ayyanar Viswanath said...

மானஸாஜென்
சுட்டி தந்தைமைக்கு நன்றி..
வாசகர் வட்டம் அமைப்பு போன்ற ஒன்றை துபாயில் துவங்குவதாகவும் உத்தேசம்..விரைவில் வெளியிடுகிறோம்


வளர்
அரைவேக்காடாச்சே லேட்டாத்தான் புரியும்போல :)
நான் ஆணாதிக்கவாதிதான்.. வாதிதான்.. திதான்.. தான்.ன்ன்ன்ன்... ன் :))

Ayyanar Viswanath said...

நன்றி தமிழன்

எனக்கும் இப்பதான் அந்த ஞானம் பிறந்தது கிருத்திகா :)
ஆமாம் இந்த பகிர்வு சரியா வரல..நிறைய மெனக்கெடாம மேலோட்டமா பதிவு செய்தது..

ஆடுமாடு
ஷைலஜா வின் இரண்டு புத்தகங்களும் வாங்கினேன்..சிதம்பர ரகசியம் கைல இருக்கு...
ஆ.ம.தி அழிக்க வழி இன்னொரு ஆ.ம.தி ஆள்கிட்ட கேக்கிறீங்களே சரியா வருமா :)

பாண்டித்துரை said...

http://vasagarvattam.blogspot.com/2007/03/blog-post_29.html

அய்யனார். மேலே உள்ள முகவரி கனவுபுத்தகம் பற்றிய வாசகர் வட்டக் கூட்டத்தின் விமர்சனப்பகுதி. நான் எனக்கு தெரிந்து படித்த முதல் இலக்கிய புத்தகம் இதுதான். என்னுடைய வாசிப்பின் ஆரம்பம் சாணக்கியாவில் இருந்துதான்.
இது அவருடைய இரண்டாவது தொகுப்பு பிரபஞ்சன் சா.கந்தசாமி கடந்த ஆண்டு சிங்கப்பூர் வந்தபோது முதில் குறிப்பிட்டு சொன்ன சிறுகதை ஆசியர் இவர்தான்.

Featured Post

test

 test