Monday, December 15, 2014

ப்ராமின் டாமினேஷன்


மலையாள மற்றும் வங்காளப் படைப்புகளின் அறிமுகத்தோடு ஒப்பிடுகையில் கன்னட இலக்கியமும் சினிமாவும் எனக்கு அத்தனை பரிச்சயம் கிடையாது. பைரப்பா, அனந்தமூர்த்தி, கிரீஷ்காசரவள்ளி, கிரீஷ்கர்னாட் மற்றும் விவேக் ஷன்பேக், போன்ற சொற்ப ஆளுமைகளின் படைப்புகளை அறிந்திருந்ததோடு சரி. சமீபத்தில் வாசித்த சிக்கவீர ராஜேந்திரன் நாவல் கன்னட இலக்கியத்தின் மீது பெரும் விருப்பம் ஏற்படக் காரணமாயிருந்தது. மனதளவில் என்னைக் கன்னடனாக உணரத் தொடங்கும் அளவிற்கு படைப்புகளின் வழியாய் அந்நிலங்களில் காலபேதமின்றி உலவிக்கொண்டிருக்கிறேன். கர்நாடகத்தின் நிலக்காட்சியும் மக்களும் பண்பாடும் என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன. பைரப்பா எழுதிய ஒரு குடும்பம் சிதைகிறது நாவலையும் இன்று காலை வாசித்து முடித்தேன். இந்திய சுதந்திரத்திற்கு முன்னரான கிராம வாழ்வை குறிப்பாக தும்கூர் பகுதி மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நாவல் வழியாய் மிகக் கச்சிதமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. பெண்ணடிமைத்தனம், அறியாமை, கல்வியறிவின்மை, வறுமை, ப்ளேக் போன்ற கொள்ளை நோய்கள், பஞ்சம், என மக்கள் மிகக் கடுமையான காலகட்டத்தை எதிர்கொள்ள நேரிட்ட கதையை ஒரு பிராமணக் குடும்பத்தை மையமாக வைத்து பைரப்பா மிக அசலாகச் சித்தரித்திருக்கிறார்.

சமூக வலைத் தளங்களை பிராமண நோய் பீடித்திருப்பதாலோ அல்லது தற்செயலாகவோ ”கன்னட இலக்கியத்தில் ப்ராமின் டாமினேஷன் அதிகம்” என்றொரு தகவலை தோழி வழியாய் அறிய நேர்ந்தது. அவசரமாய் விக்கியில் தேடிப் பார்த்தால் பைரப்பா பிராமணர்தான். எங்குதான் ப்ராமின் டாமினேஷன் இல்லை என சமாதானமாகிக் கொண்டேன். கல்வி அவர்களிடம் இருந்ததால், முதலில் கல்வி கற்றவர்கள் அவர்கள்தாம் என்பதால் அறிவுச் சூழலில் அவர்களின் இருப்பு மிகுந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் இருக்கும் சொற்ப ஆளுமைகளில் சொற்பமே சொற்ப ஆட்களைத் தவிர்த்து அனைவருமே பிராமணர்கள்தாம். ஏன் இந்திய அளவில் கூட எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவுப்புல ஆளுமைகளில் தொண்ணூறு சதவிகிதம் உயர்சாதியினர்தாம். இதில் புதிய ஆட்கள் உள்ளே வருவது, புதுச் சிந்தனைகள் உள்ளே வருவது போன்றவை மிக மெதுவாகத்தான் நிகழும். அனேகமாய் இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆகலாம். அந்த ஐம்பது ஆண்டுகளை நூறு ஆண்டுகளாக நீட்டிக்கச் செய்ய பத்ரிக்களும் ஜெயமோகன்களும் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பார்கள் என்றாலும் உயர் சாதியினரின் ஆயுளும் மற்ற சாதியினரின் ஆயுட் காலமும் ஒன்றாகவே இருப்பதால் மாற்றங்கள் அடுத்த நூற்றாண்டிலாவது நிகழ்ந்து விடும் என நாம் மூச்சு விட்டுக் கொள்ளலாம்.

தமிழில் குறிப்பாக பிராமணர் படைப்புகளை எடுத்துக் கொண்டால் அவற்றை  யதார்த்தம், அழகியல் எனும் இரு பெரு பிரிவுகளிலும், காமம், அகச்சிக்கல், உள்ளொளி தரிசனம், பொருந்தாக்காமம், நிறைவேறாக் காமம், இப்படி சில பல உள் வகைமைக்குள்ளும் பொருத்தி விட முடியும். இதைத் தாண்டி அவர்களின் சுயசாதி விமர்சனம் படைப்புகளில் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. கன்னடத்திலும் மலையாளத்திலும் இந்தப் போக்கு இல்லை. பெரும்பாலான உயர்சாதியினர் படைப்புகளில் சுயசாதி விமர்சனம் அடிப்படையான ஒன்றாக இருந்தது. ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களாக பைரப்பா சித்தரித்திருப்பார். நாவலின் முதல் அத்தியாயமே ஒரு பிராமணக் குடும்பத்தின் அதிகாலை, தாய் மற்றும் மகன்களின் ஏராளமான வசைச் சொற்களோடுதான் விடிகிறது. மகன்கள் தாயை ”மொட்டை முண்டை”, ”கழுத முண்டை” என வசைவதும் பதிலுக்குத் தாய் மகன்களை ”தேவடியாப் பிள்ளைகளா” என வசைவதுமாய் நாவல் ஆரம்பிக்கும். பிராமணக் குடும்பத்தின் கதை என்றாலும் கூட மிக நேரடியான மக்கள் மொழி அதாவது மிக அசலான கிராம மொழியில்தான் மொத்த நாவலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் பிராமணர் அல்லத ஜெயகாந்தன் போன்றோர் கூட தங்களின் பெரும்பாலான படைப்புகளை பிராமண மொழியில்தான் எழுதினர். நம் சூழலைப் பொருத்த வரை பிராமண மோகம் என்பது எந்த விதத்திலும் பாதிக்கப்படாது தலைமுறை தலைமுறையாய் நம்மிடையே கடத்தப்பட்டிருக்கிறது. அறிவு, கலை எனும் பாவணையில் விமர்சனமே இல்லாத அழகியல் படைப்புகள்தாம் நம் மூளைகளில் மேன்மையானவையாய் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. இதை ஒரு கும்பல் மிகத் தெளிவாகவே இன்றும் செய்து வருகிறது. அவர்களின் பெயர்கள்தாம் மாறியிருக்கின்றனவே தவிர மனநிலை என்னவோ ஒன்றுதாம்.

தமிழ் மனசாட்சியின் குரல் என தன்னை வர்ணித்துக் கொள்ளும் ஜெயமோகனுக்கு பார்ப்பான் என வசைவதும் பறையன் என வசைவதும் ஒன்றல்ல என்கிற அடிப்படை கூட  எப்படி புரியாமல் போனது என்பதுதான் திகைப்பாக இருக்கிறது. சமூக அவலம் அல்லது சமூக அறம் குறித்த விஷயங்களை ஜெயமோகன் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தே பெறுவதால் சுய சாதி விமர்னம் கொண்ட, முற்போக்குப் பேசும் பிராமணர்கள் யாராவது அவரின் பக்கத்து வீட்டிற்கு குடி போய் பிராமணர்களின் சமகால நிலையைப் புரிய வைக்க வேண்டுகிறேன். துரதிர்ஷ்டவசமாக ஆதரவு அணியிலும் எதிர் அணியிலும் ஒரே சாதியினரைக் கொண்ட சூழலாக நமது தமிழ்சூழல் இருக்கிறது. ஜெ குறிப்பிடும் இடைசாதி வெறியர்களின் குரல் கருத்துத் தளத்திற்கு இன்னும் எட்டவில்லை அல்லது அவர்களின் குரல் முற்போக்கு பிராமணர் குரல் அளவிற்குத் தெளிவாக இல்லை. தலித்களின் குரலைக் கேட்கவோ காதுகளே இல்லை.


No comments:

Featured Post

test

 test